Tag: எம். ஜெயராம சர்மா

  • தேர்தல்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    பாலாறும் தேனாறும்
    பாய்ந்தோடும் ஊரெல்லாம்
    பலருக்கும் இலவசங்கள்
    பக்குவமாய் கிடைத்துவிடும்
    வேலையற்ற அனைவருக்கும்
    விரைவில் வேலைகொடுத்திடுவோம்
    வாக்களித்துத் தேர்தலிலே
    வாகைசூட வைத்திடுங்கள்!

    ஆட்சிதனில் அமர்ந்தவுடன்
    அனைவரையும் அணைத்திடுவோம்
    அக்கிரமங்கள் அனைத்தையுமே
    அடியோடு அழித்திடுவோம்
    போக்குக்காட்டிப் பொய்யுரைக்கும்
    பொறுப்பற்ற தலைமைகளைத்
    தேர்தல்தனில் வென்றபின்னர்
    திசைதெறிக்க ஓடவைப்போம்!

    காவல்துறை நீதித்துறை
    கசடனைத்தும் களைந்தெறிவோம்
    கற்பழிப்பு வழிப்பறிக்கு
    காட்டமாட்டோம் கருணையினை
    போதைவகைப் பாவனையைப்
    பொங்கிநின்று பொசுக்கிடுவோம்
    காதலுடன் வாக்களித்துத்
    தேர்தல்வெல்லச் செய்திடுங்கள்!

    இப்படிப் பலவற்றை
    ஏறும்மேடை பலவற்றில்
    செப்பமாய் உரைத்தபடி
    சிறப்பாக வணங்கிநிற்பார்
    வாக்குப்பெற்று தேர்தல்வென்று
    வசதியுடன் வந்தபின்னர்
    வாக்களித்த மக்களெலாம்
    மண்டியிட்டு வணங்கிநிற்பார்!

     

     

    Share
  • ஆன்மீகப் பொக்கிஷம் !

     
    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 
    ஆடைதனைக் குறைத்தார்
    ஆணவத்தைக் களைந்தெறிந்தார்
    நாடிநின்றார் நம்ரமணர்
    நல்வழியைக் காண்பதற்கு
    ஓடிவந்தார் அண்ணாமலை
    ஒடுக்கிநின்றார் மனமதனை
    வாடிவிடா அவரிருந்தார்
    வழங்கிநின்றார் அருளையெலாம் !

    தன்னையே அறிவதற்குத்
    தவமிருந்தார் ரமணரிஷி
    தனிமைதனை இனிமையாய்
    தவமுனிவர் ஏற்றுநின்றார்
    பொய்மையாம் உடலுக்குள்
    மெய்மையைத் தேடிநின்றார்
    மெய்மையை உணர்ந்தவவர்
    மேதினியில் ரிஷியானார் !

    அத்வைத தத்துவத்தை
    அனைவருக்கும் காட்டிநின்றார்
    ஆடம்பரம் அனைத்தும்
    அவர்க்கு வெறுப்பாச்சு
    ஆசைதனைக் குறைத்த
    ஆன்மீகப் பொக்கிஷமாய்
    அகிலமே போற்றும்வண்ணம்
    ஆகிவிட்டார் ரமணரிஷி !

    சொத்துக்கள் சேர்க்கவில்லை
    சுகதுக்கம் நோக்கவில்லை
    சத்தான உணவேதும்
    தானவரும் உண்ணவில்லை
    மாடிமனை ஆடம்பரம்
    மனமதிலும் இருக்கவில்லை
    மாசில்லா வழிதேடி
    மாமுனிவர் தவமிருந்தார் !

    Share
  • புகழ்ந்து கவி பாடுவோம்! 

     எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    கண்மூடிக் காதல்கொள்ளும்
    -காதலினை விட்டிடுவோம்
    மண்ணிலுள்ளார் மனங்கவரும்
    -காதலினைச் செய்திடுவோம்
    பெண்மனமும் ஆண்மனமும்
    -பேதமின்றிக் கலக்கும்படி
    மண்மீது காதலினை
    -மலர்ந்துவிடச் செய்திடுவோம்!

    அரும்பாகி   மொட்டாகி
    -மலராகும் காதலினை
    விரும்பாதர் இவ்வுலகில்
    -இல்லையென்றே இயம்பிடலாம்
    நரம்பெல்லாம் முறுக்கேற்றும்
    -நற்காதல் என்றென்றும்
    நம்வாழ்வின் அடித்தளமாய்
    -நமையியக்கும் சக்தியன்றோ!

    காதலிப்பார் வாழ்வெல்லாம்
    -காணுவது பேரின்பம்
    காதலனும் காதலியும்
    -கனவினிலும் காதலிப்பார்
    சோதியெனக் காதலங்கே
    -சுடர்விட்டு  நிற்குமங்கே
    சொர்க்கமதைக் காதலர்கள்
    -சொந்தமாய் ஆக்கிடுவார்!

    காலமெலாம் காதலுடன்
    -கைகோத்துப் பாருங்கள்
    காணுகின்ற அத்தனையும்
    -கற்கண்டாய் ஆகிவிடும்
    ஓடியோடி உழைத்தாலும்
    -உள்ளமதில் காதலின்றேல்
    உங்கள்வாழ்வு உலகினிலே
    -உவப்புதனை ஈந்திடுமா!

    காதலர்கள் தினமதிலே
    -காதலினைப் போற்றிடுவோம்!
    காலமெலாம் காதலது
    -வாழ்கவென வாழ்த்திடுவோம்
    சாதிமத பேதமின்றி
    -காதலர்கள் தினமதனைப்
    பூதலத்தில் பொலிகவென்று
    -புகழ்ந்து கவிபாடிடுவோம்!

                

    Share
  • உலகம் போற்ற வாழ்கிறார் !

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

     
    கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்தமொன்று நடத்திய
    உத்தமராம் காந்திமகான்
    உயர்வுபெற்று நிற்கிறார்
    சத்தியத்தை மனதிலேற்றி
    சாதனைகள் செய்திட்ட
    உத்தமராம் காந்திமகான்
    உலகம்போற்ற வாழ்கிறார் !

    உணவைமாற்றி உடையைமாற்றி
    உள்ளமதை உறுதியாய்
    தெளிவையூட்டி சிறப்பைக்காட்டி
    சிந்தனையை ஊட்டினார்
    அழிவில்லாத வழியைக்காட்டி
    அன்புகருணை பேசியே
    அகிலவுலகும் போற்றும்வண்ணம்
    அண்ணல்காந்தி வாழ்கிறார் !

    உண்ணாநோன்பை உலகம்வியக்க
    உத்தமரும் காட்டினார்
    மண்ணின்மாண்பை வியந்துநின்று
    மகான்காந்தி போற்றினார்
    தன்னைபெற்ற தாயைக்காந்தி
    தலைவணங்கி நின்றிட்டார்
    தரணிபோற்றும் மனிதராக
    காந்தியின்று வாழ்கிறார் !

    அடக்குமுறை வெள்ளையரை
    அஹிம்சையாலே வென்றிட்டார்
    அன்புகொண்டு காந்திமகான்
    அனைவரையும் அணைத்திட்டார்
    அரக்ககுணம் காந்திமுன்பு
    அழிந்தொழுந்து போனதால்
    அண்ணல்காந்தி உலகமெங்கும்
    அன்புருவாய் வாழ்கிறார் !

    சாந்தி சமாதானம்காண
    காந்திமகான் உழைத்திட்டார்
    சக்தியெலாம் ஒன்றுசேர்த்து
    சரித்திரமே படைத்திட்டார்
    நீதியினைத் தெய்வமாக்கி
    நெஞ்சமதில் நிறைத்திட்டார்
    நீங்காமல் உலகமெங்கும்
    நின்றுகாந்தி வாழ்கிறார் !

    Share
  • ஆவலுடன் செயற்படுவோம் !

     
    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    இலக்கியமும் இலக்கணமும்
    இங்கிதமாய் அமைந்தமொழி
    வழக்கொழிந்து போகாமல்
    வாழுகின்ற தெங்கள்மொழி
    நிலத்திலுள்ள மாந்தரெல்லாம்
    நிம்மதியாய் வாழுதற்கு
    நீதியொடு வாழ்வியலை
    நீக்கமறச் சொன்னமொழி !

    அகத்திணையும் புறத்திணையும்
    அமைகின்ற வகையினிலே
    ஆழமாய் கருத்துக்களை
    அனைவருக்கும் சொன்னமொழி
    நிலத்தியல்பை வாழ்க்கையொடு
    இணைத்திடவே இலக்கியத்தை
    நெஞ்சமெலாம் பதியவைக்க
    நிறையவே தந்தமொழி !

    பக்தியினை இலக்கியமாய்
    பாரினிலே தந்தமொழி
    பலநாட்டார் வியந்துநிற்க
    குறள்தந்த பசுமைமொழி
    திருவாசகத் தேனை
    உருகிற்குத் தந்தமொழி
    திசையெல்லாம் புகழ்பரப்பி
    நிற்குதிப்போ பெருமையுடன் !

    ஆண்டவனின் அருள்பெற்ற
    அன்னைத் தமிழ்மொழியை
    அரியணையில் ஏற்றிவைத்து
    ஆட்சிமொழி ஆக்கவேண்டும்
    அழகுதமிழ் உலகெங்கும்
    அனைவரிடம் சேர்வதற்கு
    ஆர்வமுடன் இணைந்தொன்றாய்
    ஆவலுடன் செயற்படுவோம் !

    Share
  •  உளம்மகிழப் பொங்கிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    மனங்கவரும் மார்கழியில்
    மகத்தான நாட்கள்வரும்
    இந்துக்கள் கிறீத்தவர்கள்
    எல்லோரும் பங்குகொள்வர்    jayarama
    வைஷ்ணவமும் சைவமும்
    வாழ்த்திநிற்கும் திருவெம்பா
    மார்கழியின் முக்கியமாய்
    மனமாசை அகற்றிநிற்கும்!

    ஒளிவிழா எனும்பெயரால்
    உத்தமராம் யேசுபிரான்
    வழிநிற்போர் அனைவருமே
    வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
    பீடுடைய மாதமாய்
    மார்கழியும் அமைந்துதுநின்று
    பெருமகிழ்ச்சி வருவதற்குத்
    தைதனக்கு வழிகொடுக்கும்!

    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்கின்ற நம்பிக்கை
    தளர்வுநிலை அகன்றுவிடத்
    தானுரமாய் அமைந்திருக்கு
    பொங்கலென்னும் மங்கலத்தை
    பொறுப்புடனே தருகின்ற
    எங்கள்தையை எல்லோரும்
    இன்பமுடன் வரவேற்போம்!

    புலம்பெயர்ந்த நாட்டினிலும்
    பொங்கலுக்குப் பஞ்சமில்லை
    நிலம்பெயர்ந்து வந்தாலும்
    நீங்கவில்லை பண்பாடு
    நலந்திகழ வேண்டுமென்று
    யாவருமே நினைத்தபடி
    உளம்மகிழப் பொங்கலிட்டு
    உவகையுடன் இருந்திடுவோம்!

    வாசலிலே தோரணங்கள்
    வடிவாகக் கட்டிடுவோம்
    வண்ணப் பொடிகொண்டு
    கோலங்கள் போட்டிடுவோம்
    எண்ணமெலாம் இறைநினைவாய்
    எல்லோரும் இருந்திடுவோம்
    எங்கள்வாழ்வு விடிவுபெற
    இணைந்து நின்றுபொங்கிடுவோம்!

    ஆரோக்கியம் ஆனந்தம்
    அனைவருக்கும் வரவெண்ணி
    ஆண்டவனை மனமிருத்தி
    ஆவலுடன் பொங்கிடுவோம்
    வேண்டுகின்ற அத்தனையும்
    விரைவாகக் கிடைத்துவிட
    நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
    நன்றாகப் பொங்கிடுவோம்!

     

     

                     

    Share
  • புத்தாண்டே நீ வருக !

     

    எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

    banner_countdown

    புத்தாண்டே நீவருக
    புதுத்தெம்பை நீதருக
    எத்திக்கும் நடக்கின்ற
    இடர்களைய நீவருக
    சொத்துக்காய் சுகத்துக்காய்
    சூழ்ச்சிகளைச் செய்வாரின்
    புத்தியினை மாற்றிவிட
    புத்தாண்டே நீவருக !

    அரசியலில் குழப்பங்கள்
    அத்தனையும் அறவேண்டும்
    ஆன்மீகம் மக்களது
    அகமதனில் அமரவேண்டும்
    குறைபேசும் குணமெல்லாம்
    குழியதனுள் விழவேண்டும்
    குவலயத்தில் அமைதிவர
    குதித்துவா புத்தாண்டே !

    மழைவளம் பெருகவேண்டும்
    மாநிலமும் செழிக்கவேண்டும்
    அழுகின்றார் வாழ்க்கையெலாம்
    ஆனந்தம் நிலைக்கவேண்டும்
    வழுவின்றி நீதித்துறை
    வழங்கவேண்டும் நற்சேவை
    பழுதகற்ற வந்திடுவாய்
    பாரினிலே புத்தாண்டே !

    மூத்தோரை மதிக்கின்ற
    முழுமனது வரவேண்டும்
    ஆத்திரத்தால் அழிவுசெய்யும்
    அரக்ககுணம் அகலவேண்டும்
    சாத்திரத்தை சடங்குகளை
    சரியாகப் புரியவேண்டும்
    சன்மார்க்கம் தனையுணர்த்த
    வந்திடுவாய் புத்தாண்டே !

    ஆத்தீகம் பேசுவார்
    ஆண்டவனைப் போற்றட்டும்
    நாத்தீகம் பேசுவார்
    நல்லவற்றை நினைக்கட்டும்
    இல்லறமே நல்லறமாய்
    இலங்கட்டும் இவ்வுலகில்
    நல்லதொரு புத்தாண்டாய்
    நலம்பயக்க வந்திடுக !

    Share
  • உதவிடுமா !

    எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    பிறந்திடும் போது இறப்பினைப் பற்றி

    நினைந்திடும் மனிதர் உலகினி லுண்டா

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தானே

    பெரும் போராட்டம் நடக்குது இங்கே

    சொத்துக்கள் சேர்ப்பதும் சொகுசெலாம் காண்பதும்

    நித்தியம் என்று நினைக்கிறார் மனிதர்

    எத்தனை இடர்கள் வருமென நினையா

    இருப்பதைப் பெருக்க நினைக்கிறார் நாளும் !

     

    வாழும்வரை வாழுங்கள் வகைவகையாய் சுவையுங்கள்

    நாளைபற்றி நினைக்காமல் நன்றாக மகிழுங்கள்

    ஊணுறக்கம் தனைமறந்து உழையுங்கள் உழையுங்கள்

    உங்களுக்குப் பின்னாலே உங்கள்சொத்து யாருக்கு

    உயிருடம்பில் இருக்கும்வரை உங்கள்சொத்து உங்களுக்கே

    உயிர்பிரிந்து போனபின்னால் உங்கள்சொத்து என்னவாகும்

    பிள்ளைகளும் பேரர்களும் பிய்த்தெடுத்து நிற்பார்கள்

    அவர்களுக்குள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிடும் !

     

    மனைவி பிரிந்துவிட்டால் வாழ்க்கையே கசந்துவிடும்

    மகிழ்ச்சி அமைதியெல்லாம் மங்கியே இருந்துவிடும்

    சேர்த்துவைத்த சொத்தெல்லாம் பார்த்துநிற்கும் ஓரக்கண்ணால்

    சிந்தனையோ எமைவிட்டு சிதறியே சென்றுநிற்கும்

    ஆறுதலைக் கூறிநிற்க வந்திடுவர் சிலமக்கள்

    ஆஸ்த்திதனை மனமெண்ணி வந்தணைவார் சிலமக்கள்

    தேறுதலும் ஆறுதலும் உயிருள்ள உடம்பினுக்கே

    உயிர்பிரிந்து போனபின்னர் உங்கள்சொத்து யாருக்கோ !

     

    இல்லறத்தில் இருந்திடுங்கள் இன்பமாய் வாழ்ந்திடுங்கள்

    பிள்ளைச்செல்வம் பெற்றிடுங்கள் பேணி வளர்த்திடுங்கள்

    நல்லகல்வி கொடுத்திடுங்கள் நற்றுணையாய் இருந்திடுங்கள்

    நாளுமவர் உயர்ச்சிக்காய் நாழுமே உழையுங்கள்

    ஆளாக்கி விட்டபின்னர் அன்புடனே இருந்திடுங்கள்

    அவர்களுக்கு வேண்டியதை ஆசையுடன் கொடுத்திடுங்கள்

    அவர்கள்தான் கதியென்று அடிமனதில் பதியாது

    அன்றாடம் வாழ்வுதனை அகமகிழ வாழுங்கள் !

     

    எதிர்பார்ப்பு எப்பவுமே ஏமாற்றம் தந்துவிடும்

    இருக்கின்ற வாழ்வுதனை பொறுப்புடனே வாழுங்கள்

    கிடைக்கின்ற வாய்ப்புகளை முடக்கிவிட நினைக்காதீர்

    மடத்தனமாய் மகிழ்ச்சியினை மழுங்கடிக்க முயலாதீர்

    கொடுத்துநிற்கத் தயங்காதீர் குதூகலத்தைத் தொலையாதீர்

    எடுத்துவைத்துச் சேமித்து இல்லையென வாழாதீர்

    பிடித்தமுடன் வாழுங்கள் பேராசை விட்டிடுங்கள்

    அடுத்தவர்கள் வியந்துநிற்க ஆனந்தமாய் வாழுங்கள் !

     

    இருக்கும் வரையினிலே இன்பமாய் வாழுங்கள்

    கொடுக்கும் பொருளையெல்லாம் கொடுத்துமே மகிழுங்கள்

    சேர்த்துவைக்கும் எண்ணமதைச் சிந்தனையில் கொள்ளாதீர்

    ஆர்க்குமே பாராமாய் இருந்துவிட நினையாதீர்

    வாழுகின்ற வாழ்நாளில் வண்ணமுற வாழுங்கள்

    செய்கின்ற அத்தனையும் சீராகச் செய்யுங்கள்

    உங்கள்வாழ்வு உங்களிடம் என்பதையே உணருங்கள்

    உயிர்பிரிந்தால் வாழ்வெமக்கு உதவிடுமா சிந்தியுங்கள் !

    Share
  • வசந்தமாய் மாறும் !

           [ எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ]

     

     

    ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்

    ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்

    வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்

    வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

     

    மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட

    மனிதனின் செயல்களே காரணம் ஆயின

    புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்

    மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

     

    தானமும் செய்தான் தவமும் செய்தான்

    ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்

    யானது என்னும் ஆணவக் குப்பை

    போனது போலத் தெரியவே இல்லை !

     

    குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்

    தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்

    எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்

    எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

     

    விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்

    வேதனை சோதனை நாளுமே குவியும்

    மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்

    வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

     

    வீட்டிலே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்

    வேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்

    நாற்றமது எடுக்கின்ற நரகமதாய் ஆகி

    நம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் !

     

    குப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு

    குப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்

    தப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்

    தலைமீது வைப்பதனை  நிறுத்திடுதல் நன்றே !

     

    மனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்

    மனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ

    தினமே குப்பைகளை சேராது காத்தால்

    மனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் !

     

    Share
  • வாராமல் காத்திடுவோம் !

          ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    நீரிழிவு எனும்வார்த்தை பாரினையே கலக்கிறது

    யாருக்கு வருமென்று யாருக்கும் தெரியாது

    எல்லோரும் நீரிழிவை எதிரியாய்ப் பார்க்கின்றார்

    வல்லவரும் நல்லவரும் நீரிழிவால் வாடுகிறார் !

     

    நல்லகாலம் இருப்பார்க்கு நீரிழிவு வருவதில்லை

    அல்லல்தரும் நோயெனவே அனைவருமே எண்ணுகிறார்

    அறுசுவையுள் பலவற்றை அணுகிடவே முடியாமல்

    அடக்கிவைக்கும் நோயாக நீரிழிவு வந்திருக்கு !

     

    நீரிழிவு இப்போது யாரையுமே விடுவதில்லை

    ஏழை பணக்காரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை

    குழந்தைமுதல் கிழவர்வரை கொடுக்கிறது தொல்லையினை

    நலமிழந்து வாடிநிற்க நீரிழிவு செய்கிறது !

     

    உணவைக் குறையுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்

    நலன்கெடுக்கும் வகையினிலே நடக்காது இருந்திடுங்கள்

    பசித்தவுடன் உண்ணுங்கள் புசித்தவுடன் உறங்காதீர்

    எதற்குமே பதட்டமதை இயன்றவரை தடுத்திடுவீர் !

     

    இனிப்புக் குறைவென்று எழுதிவைத்த உணவுகளை

    இயன்றவரை தவிர்த்துவிடல் எல்லோர்க்கும் உகந்ததுவே

    காய்கறிகள் உண்டிடுங்கள் கனிகள்தேர்ந் தெடுத்திடுங்கள்

    வாழ்வினிலே நிறைவாக வாழ்வதற்கு வழிபிறக்கும் !

     

    காசில்லாப் பயிற்சி கனக்காகவே இருக்கிறது

    யாருமே அப்பயிற்சி தனைக்கண்டு கொள்வதில்லை

    கிடைக்கின்ற நேரமதில் நடைப்பயிற்சி செய்துவிடின்

    உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகி வருமன்றோ !

     

    நீரிழிவு வியாதிபற்றி நினையாமல் இருக்கையிலே

    எப்படியோ வந்தெங்கள் இன்பமதைப் போக்கிவிடும்

    விழிப்புணர்வு எனுமுணர்வு எமைவிட்டு அகலுவதும்

    வில்லங்கம் வருவதற்கு காரணமாய் இருக்குதன்றோ !

     

    வெள்ளம் வருமுன்னே அணைகட்டிக் காப்பதுபோல்

    தெள்ளத் தெழிவாக விழிப்புணர்வைப் பெறவேண்டும்

    வந்தபின்பு எல்லோரும் நொந்துநிற்கும் நிலைமாறி

    வாராமல் காப்பதற்கு வழிவகைகள் தேவையன்றோ !

    Share
  • முறையாமோ!

            ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை

    வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ

    விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்

    வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !

     

    பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை

    மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை

    ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா

    ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !

     

    காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும்

    காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை

    காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க

    நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !

     

    அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை

    அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது

    நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது

    வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினம் !

     

    சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்

    வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்

    காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து

    காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !

     

    வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்

    விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்

    காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே

    நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவீரா !

     

    மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்

    வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ

    காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின்

    நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா !

     

    குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்

    நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம்

    மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா

    மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ !

     

     

    Share
  • மழலை மொழி !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    குழலினிது யாழினிது என்பர்  ஆனால்

    குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது

    மழலைகள் நிறைந்திடும் போது அங்கு

    மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

     

    கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்

    குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை

    கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்

    குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !

     

    ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு

    ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து

    நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது

    நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !

     

    கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்

    குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்

    கோபங்கள் ஓடியே போகும் அவர்

    குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !

     

    வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்

    தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்

    புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு

    அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !

    Share
  • நல் தீபாவளி !

      ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

     

    பட்டாடை உடுத்திடுவோம்

    பட்சணமும் உண்டிடுவோம்

    மத்தாப்புக் கொழுத்திடுவோம்

    மனமகிழ இருந்திடுவோம்

    தப்புக்கள் தனைமறப்போம்

    தாழ்பணிவோம் மூத்தோரை

    எப்பவுமே இறைநினைப்பை

    இதயமதில் இருத்திடுவோம் !

     

    ஆடம்பரம் அனைத்தையுமே

    அனைவருமே ஒதுக்கிடுவோம்

    ஆதரவு இல்லார்க்கு

    அருந்துணையாய் அமைந்திடுவோம்

    தீதுடைய செயல்களைநாம்

    தீண்டாமல் இருந்திடுவோம்

    தீபாவளி எமக்கு

    சிறப்பாக அமையுமன்றோ !

     

    பட்டாசும் மத்தாப்பும்

    பலபேரின் உழைப்பாகும்

    பட்டாசும் மத்தாப்பும்

    பலவிழப்பை தந்துவிடும்

    இட்டமுடன் வெடிக்காமல்

    எச்சரிக்கை மனங்கொண்டால்

    எல்லோர்க்கும் தீபாவளி

    இங்கிதமாய் இருக்குமன்றோ !

     

     

    வியாபாரம் தனையெண்ணி

    விதம்விதமாய் பட்சணங்கள்

    வண்ணவண்ண நிறமூட்டி

    வாவெனவே அழைத்துநிற்கும்

    அவையுள்ளே பொதிந்திருக்கும்

    ஆரோக்கியம் தனைக்கெடுக்கும்

    அத்தனையும் தீபாவளி

    அகமகிழ்வைக் குலைக்குமன்றோ !

     

    வேகமாய் வாகனங்கள்

    ஓட்டுவதைத் தவிர்த்திடுவோம்

    வேகமது கூடிவிடின்

    விபரீதம் ஆகிவிடும்

    தீபாவளித் தினத்தில்

    தேடிவரும் ஆபத்தாய்

    திசைதெறிக்க ஓடிவரும்

    வாகனத்தைத் தவிர்த்திடுவோம் !

     

    மதுவரக்கன் தனையெவரும்

    மனமதிலே  நினையாமல்

    புதுவசந்தம் வீசுதற்கு

    புத்துணர்வு பெற்றிடுவோம்

    தீபாவளி நாளில்

    திருப்பங்கள் பலவந்தால்

    தித்திப்பு யாவருக்கும்

    சொத்தாக இருக்குமன்றோ !

     

    நல்லவற்றைச் சிந்தித்தால்

    நாளுமே தீபாவளி

    நல்லவழி நாம்நடப்பின்

    நாட்டுக்கே தீபாவளி

    அல்லவைகள் அகற்றிவிடின்

    அனைவருக்கும் தீபாவளி

    அமைதியுடன் இறைபணிந்தால்

    அமைந்திடும் நல்தீபாவளி !

    Share
  • அழகான வாழ்வு !

     

          ( எம் . ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    கனவினிலும் பெரியோரைக் காணவேண்டும்

    நினைவினிலும் பெரியோரை நிறுத்தவேண்டும்

    உணர்வெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்

    உள்ளமதில் கள்ளமதை ஒழிக்கவேண்டும்

    தனிமையிலே இன்பமதைக் காணவேண்டும்

    தறிகெட்டு ஓடுவதை நிறுத்தவேண்டும்

    புவிமீது உள்ளார்கள் இவற்றைச்செய்யின்

    புனிதமுடை வாழ்வெமக்குக் கிடைக்குமன்றோ !

     

    சமையமதைத்  துணையாக கொள்ளவேண்டும்

    சன்மார்க்க வழியினிலே நடக்கவேண்டும்

    சினமென்னும்  நெருப்பதனை அணைக்கவேண்டும்

    தீங்குசெய்யும்  மக்கள்தமை  ஒதுக்கவேண்டும்

    ஆண்டவனை தினமும்மனம் நாடவேண்டும்

    ஆசையெனும் தீயினைநாம் அகற்றவேண்டும்

    வேண்டிடுவார்க் குதவிதனைச் செய்தல்வேண்டும்

    விருப்புடனே யாவரையும் பார்த்தல்நன்றே !

     

     

    மற்றவரைக் குறைசொல்லல் தவிர்த்தல்வேண்டும்

    வம்புபேசி நிற்பதையும் நிறுத்தல்வேண்டும்

    எப்பவுமே எதிர்வாதம் குறைத்தல்வேண்டும்

    ஏளனமாய் நோக்குவதை விலக்கல்வேண்டும்

    தப்புச்செய்வார் மனந்திருந்த நடத்தல்வேண்டும்

    தாராளம் எம்மனத்தில் இருத்தல்வேண்டும்

    முப்பொழுதும் முகமலர்ச்சி கொள்ளல்வேண்டும்

    முழுமையுடன் வாழ்வதற்கு முயல்தல்நன்றே !

     

    மூத்தோரின் வார்த்தையினை மதித்தல்வேண்டும்

    மூர்க்கருடன் பழகுவதைத் தவிர்த்தல்வேண்டும்

    சாத்தானாய்  வருவோரை ஒதுக்கல்வேண்டும்

    சாந்தியினை மனமெங்கும் நிறைத்தல்வேண்டும்

    வார்த்தையினை அளந்தளந்து பேசல்வேண்டும்

    வருவாயை மனமிருத்தி வாழ்தல்வேண்டும்

    ஆர்ப்பரிக்கும் குணமதனை அகற்றிநின்றால்

    அழகான வாழ்வெமக்கு அமையுமன்றோ !

     

     

     

     

    Share