( எம் . ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

 

கனவினிலும் பெரியோரைக் காணவேண்டும்

நினைவினிலும் பெரியோரை நிறுத்தவேண்டும்

உணர்வெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்

உள்ளமதில் கள்ளமதை ஒழிக்கவேண்டும்

தனிமையிலே இன்பமதைக் காணவேண்டும்

தறிகெட்டு ஓடுவதை நிறுத்தவேண்டும்

புவிமீது உள்ளார்கள் இவற்றைச்செய்யின்

புனிதமுடை வாழ்வெமக்குக் கிடைக்குமன்றோ !

 

சமையமதைத்  துணையாக கொள்ளவேண்டும்

சன்மார்க்க வழியினிலே நடக்கவேண்டும்

சினமென்னும்  நெருப்பதனை அணைக்கவேண்டும்

தீங்குசெய்யும்  மக்கள்தமை  ஒதுக்கவேண்டும்

ஆண்டவனை தினமும்மனம் நாடவேண்டும்

ஆசையெனும் தீயினைநாம் அகற்றவேண்டும்

வேண்டிடுவார்க் குதவிதனைச் செய்தல்வேண்டும்

விருப்புடனே யாவரையும் பார்த்தல்நன்றே !

 

 

மற்றவரைக் குறைசொல்லல் தவிர்த்தல்வேண்டும்

வம்புபேசி நிற்பதையும் நிறுத்தல்வேண்டும்

எப்பவுமே எதிர்வாதம் குறைத்தல்வேண்டும்

ஏளனமாய் நோக்குவதை விலக்கல்வேண்டும்

தப்புச்செய்வார் மனந்திருந்த நடத்தல்வேண்டும்

தாராளம் எம்மனத்தில் இருத்தல்வேண்டும்

முப்பொழுதும் முகமலர்ச்சி கொள்ளல்வேண்டும்

முழுமையுடன் வாழ்வதற்கு முயல்தல்நன்றே !

 

மூத்தோரின் வார்த்தையினை மதித்தல்வேண்டும்

மூர்க்கருடன் பழகுவதைத் தவிர்த்தல்வேண்டும்

சாத்தானாய்  வருவோரை ஒதுக்கல்வேண்டும்

சாந்தியினை மனமெங்கும் நிறைத்தல்வேண்டும்

வார்த்தையினை அளந்தளந்து பேசல்வேண்டும்

வருவாயை மனமிருத்தி வாழ்தல்வேண்டும்

ஆர்ப்பரிக்கும் குணமதனை அகற்றிநின்றால்

அழகான வாழ்வெமக்கு அமையுமன்றோ !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *