தமிழர் திருநாள்
முனைவர் க.ஆனந்தி
சுழன்றும் ஏர்ப்பின்னது
உலகம் என்றான்
வள்ளுவன்!
ஏர் கையால் பிடித்து
அகம் புறம் அறிந்து
வேண்டாதவைகளைக்
கலைந்து – அதனையே
உரமாக்கி நல்ல
விதைகளை விதைத்து
வியர்வையை நீராக்கி
மும்மாரி பொழிந்ததில்
மூன்று போகம்
பயிர் செய்தவன்
என் சங்கத் தமிழன்!
வயலில் விளைந்த
வெள்ளாமை
வீட்டுக்கு வருகையில்
மண்பானை வனைந்து
அதன் கழுத்தில்
மஞ்சள் இஞ்சி புனைந்து
மண்மணம் கமழ
அடுப்பமைத்து
மாக்கோலம் அதிலிட்டு
மங்கையவள்
மகிழ்ந்திட்டாள்!
பசும்பாலும் பச்சரிசியும்
பானையில் கலந்திருக்க
பொங்கி வரும்
அழகைக் கண்டு
புதுவெல்லம் ஏலம்
உடனிட்டாள்!
கன்னலும் கதலியும்
பக்கத்தில் இருக்க
கதிரவனுக்கு பொங்கலிட்டாள்!
மகிழ்ச்சி பொங்கியது
மக்கள் மனதும்
பொங்கியது!
காளையர்கள்
காளைகளைத் தழுவினர்!
தாவணியில் தவழ்ந்த
என் தமிழச்சியை
மணம்முடிக்க…
என் தலைமுறைக் காணாத
ஒன்றை தமிழன்
திருவிழாவாக நடத்தினான்!
இன்று….
உழைப்பை மட்டுமே
அறிந்தவனுக்கு
உழுது பயிரிட
நிலம் இல்லை…
மாதம் மும்மாரி
பெய்த மழை
மனிதனின் மாற்றத்தால்
பருவம் தவறியது!
நிலமின்றி தவித்தவன்
இப்போது
நீரும் இன்றி தவிக்கிறான்!…
ஏறு தழுவி மணம் முடித்தவன்
இன்று ஏறு தழுவுதலுக்கே
மனு போட்டுக்
கொண்டிருக்கிறான்!
காவிரி நீரெடுத்து
கழனியெல்லாம் வெதவெதச்சு
காத்திருந்த கையேர் உழவனுக்கு
வானம் பொய்த்தது
வைகையும் பொய்த்தது
கனத்த இதயத்தோடு இருந்தவன்
இருமுழம் கயிற்றுக்கு உறவானான்.
தமிழர் திருநாள்
விடுமுறை கழிக்க அல்ல…
தன் மானத்தை
இளம் நெஞ்சில் விதைக்க…
விவசாயம் நம்
வாழ்வாதாரம் என்று
சொல்லிக் கொடுக்க…
விவசாயி நம்
மன்னர்கள்
என்றுரைக்க…
அறிவியலை கடைந்தெடுக்கும்
தமிழனே
உழவனுக்காய்
ஒரு சிந்தனை
உதிக்க வில்லையா?
விவசாயத்திற்கு
ஓர் புரட்சி
வாராதா?…
இந்த நூற்றாண்டில்
என் தந்தை ஓர் விவசாயி
என்பதை விட
நான் ஓர் விவசாயி
என்பதில்
பெருமைக் கொள்ளச்
செய்வோம்!
மீண்டும் மலரும்
தமிழர் திருநாள்
கன்னலும் கதலியும்
உடனிருக்க
பொங்கலிடுவாள்
இல்லாள்…..!