[ எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ]

 

 

ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்

ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்

வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்

வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

 

மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட

மனிதனின் செயல்களே காரணம் ஆயின

புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்

மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

 

தானமும் செய்தான் தவமும் செய்தான்

ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்

யானது என்னும் ஆணவக் குப்பை

போனது போலத் தெரியவே இல்லை !

 

குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்

தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்

எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்

எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

 

விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்

வேதனை சோதனை நாளுமே குவியும்

மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்

வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

 

வீட்டிலே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்

வேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்

நாற்றமது எடுக்கின்ற நரகமதாய் ஆகி

நம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் !

 

குப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு

குப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்

தப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்

தலைமீது வைப்பதனை  நிறுத்திடுதல் நன்றே !

 

மனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்

மனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ

தினமே குப்பைகளை சேராது காத்தால்

மனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *