எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

குழலினிது யாழினிது என்பர்  ஆனால்

குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது

மழலைகள் நிறைந்திடும் போது அங்கு

மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

 

கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்

குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை

கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்

குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !

 

ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு

ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து

நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது

நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !

 

கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்

குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்

கோபங்கள் ஓடியே போகும் அவர்

குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !

 

வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்

தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்

புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு

அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *