( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 

 

பட்டாடை உடுத்திடுவோம்

பட்சணமும் உண்டிடுவோம்

மத்தாப்புக் கொழுத்திடுவோம்

மனமகிழ இருந்திடுவோம்

தப்புக்கள் தனைமறப்போம்

தாழ்பணிவோம் மூத்தோரை

எப்பவுமே இறைநினைப்பை

இதயமதில் இருத்திடுவோம் !

 

ஆடம்பரம் அனைத்தையுமே

அனைவருமே ஒதுக்கிடுவோம்

ஆதரவு இல்லார்க்கு

அருந்துணையாய் அமைந்திடுவோம்

தீதுடைய செயல்களைநாம்

தீண்டாமல் இருந்திடுவோம்

தீபாவளி எமக்கு

சிறப்பாக அமையுமன்றோ !

 

பட்டாசும் மத்தாப்பும்

பலபேரின் உழைப்பாகும்

பட்டாசும் மத்தாப்பும்

பலவிழப்பை தந்துவிடும்

இட்டமுடன் வெடிக்காமல்

எச்சரிக்கை மனங்கொண்டால்

எல்லோர்க்கும் தீபாவளி

இங்கிதமாய் இருக்குமன்றோ !

 

 

வியாபாரம் தனையெண்ணி

விதம்விதமாய் பட்சணங்கள்

வண்ணவண்ண நிறமூட்டி

வாவெனவே அழைத்துநிற்கும்

அவையுள்ளே பொதிந்திருக்கும்

ஆரோக்கியம் தனைக்கெடுக்கும்

அத்தனையும் தீபாவளி

அகமகிழ்வைக் குலைக்குமன்றோ !

 

வேகமாய் வாகனங்கள்

ஓட்டுவதைத் தவிர்த்திடுவோம்

வேகமது கூடிவிடின்

விபரீதம் ஆகிவிடும்

தீபாவளித் தினத்தில்

தேடிவரும் ஆபத்தாய்

திசைதெறிக்க ஓடிவரும்

வாகனத்தைத் தவிர்த்திடுவோம் !

 

மதுவரக்கன் தனையெவரும்

மனமதிலே  நினையாமல்

புதுவசந்தம் வீசுதற்கு

புத்துணர்வு பெற்றிடுவோம்

தீபாவளி நாளில்

திருப்பங்கள் பலவந்தால்

தித்திப்பு யாவருக்கும்

சொத்தாக இருக்குமன்றோ !

 

நல்லவற்றைச் சிந்தித்தால்

நாளுமே தீபாவளி

நல்லவழி நாம்நடப்பின்

நாட்டுக்கே தீபாவளி

அல்லவைகள் அகற்றிவிடின்

அனைவருக்கும் தீபாவளி

அமைதியுடன் இறைபணிந்தால்

அமைந்திடும் நல்தீபாவளி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.