Tag: ஆண்டாள்

  • திருப்பாவை – 12 | கனைத்து இளம்

    திருப்பாவை 12

    கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலை வழியே நின்று பால்சோர
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
    பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றிச்
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
    அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | ஸ்வேதா குரலில்

    11ஆவது பாடலில் ஆயர்கள், கறவைக் கணங்களிடம் தாங்களே பால்கறக்கிறார்கள். 12ஆவது பாடலில், கற்றெருமை கன்றை நினைத்து, நின்று பால்சொரிந்து, தான் நின்ற இடத்தையே நனைத்துச் சேறாக்குகிறது. நின்று பால்சோர என்றால், மாடு நிற்கிறது எனப் பொருள் இல்லை. மழை நின்று பெய்கிறது என்றால், நீடித்துப் பெய்கிறது எனப் பொருள் கொள்வோமே அப்படி இந்த எருமை நின்று பால்சொரிகிறது. கன்றை நினைத்த உடனே தாய்க்கு இப்படிப் பால் பெருகும். அப்படிப் பக்தர்களுக்காக அருள் சொரிகின்ற மனத்துக்கு இனியானைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | சேகர் முத்துராமன் குரலில்

    குளிர்ந்தேலோர் எம்பாவாய் என உள்ளம் குளிர்தலைப் பற்றி முன்னர் பார்த்தோம். மார்கழிக் குளிரையும் ஆண்டாள் பாடியுள்ளார். தலையில் பனி வீழ, நின் வாசற்கடை பற்றி நிற்கின்றோம். ஈதென்ன பேருறக்கம்? இப்போதாவது எழுந்திரு எனத் தோழியைக் கோதை எழுப்புகிறார். உள்ளம் குளிரச்செய்யும் திருப்பாவையின் 12ஆவது பாடலைச் சேகர் முத்துராமனின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா

    85 வயதில் திருப்பாவை பாடும் ஜெயலட்சுமி செல்லப்பா

    வயது ஓர் எண்ணிக்கை மட்டுமே. எந்த வயதிலும் நம் திறமைகளை, ஆற்றல்களை உற்சாகமாக வெளிப்படுத்த முடியும். சென்னையில் வசிக்கும் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா, 85 வயதிலும் அருமையாகப் பாடுகிறார். இதோ, திருப்பாவையிலிருந்து நான்கு பாடல்களை நமக்காகப் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

     படப் பதிவு – சுதா மாதவன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை

    திருப்பாவை 11

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | ஸ்வேதா குரலில்

    ஆளன் – ஆட்டி என அழைப்பது தமிழ் மரபு. ஆளன் என்பவன் ஆளுகின்றவன். ஆட்டி என்பவள் ஆளுகின்றவள். வல்லாளன், பேராளன், சீராளன் என்றெல்லாம் ஆண்களை அழைப்பார்கள், சீமாட்டி, பெருமாட்டி, திருவாட்டி எனப் பலவாறாகப் பெண்களை அழைப்பார்கள். இந்த வரிசையில்தான் பெண்டாட்டியும் தோன்றியது. ஆட்சிமை உடைய பெண், ஆளும் பெண் என்பது பொருள். இக்காலத்தில் இது, குடும்பத்தை ஆளும் பெண் என்ற பொருளில் மனைவிமார்களுக்கு வழங்குகிறது. இந்தப் பாடலில் ஆண்டாள் தன் தோழியைச் செல்வப் பெண்டாட்டி எனச் செல்லமாக அழைக்கிறார். தமிழ்க் குலத்தின் பொற்கொடி ஆண்டாளின் அமுதத் தமிழில் திருப்பாவையின் 11ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 11 | கற்றுக் கறவை | சேகர் முத்துராமன் குரலில்

    தேவ கணங்கள், பூத கணங்கள், மிருக கணங்கள், பட்சி கணங்கள் எனப் பலவற்றை நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்தக் கணம் என்பதற்குக் கூட்டம் என்று பொருள். நொடியைக் குறிக்கும் கணம் என்பது, க்ஷணம் என்பதன் தமிழ் வடிவமாகும், திருப்பாவையின் 11ஆவது பாடலில் கற்றுக் கறவைக் கணங்கள் எனப் பசுக்கூட்டங்களை ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்தக் கணத்தில் இதைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம்

    திருப்பாவை – 10

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
    நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
    தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலார் எம்பாவாய்.

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | சேகர் முத்துராமன் குரலில்

    பாடியவர்: சேகர் முத்துராமன்
    விளக்கம்: பிரபா ஸ்ரீதர்

    மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்ன சொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும் நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும் காப்பதில்லை.
    .
    இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து துயில்கிறாள். நோன்பு நோற்றுப் பணி செய்திருப்பேன் என்றாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது.
    .
    நோன்பு நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால் அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு பதில் பேசவில்லை. வாயிற்கதவைத் திறக்கவில்லை.
    .
    அளவிட முடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து கதவைத் தாள்திறவாய்!
    .
    கும்பகர்ணனை விஞ்சும் நம்முடைய தூக்கத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும்.

     

    திருப்பாவை – 10 | நோற்றுச் சுவர்க்கம் | ஸ்வேதா குரலில்

    திருப்பாவை, பல்சுவைப் பெட்டகம். ஒரு பாடலில் ஆண்டாள் சீறி எழுவார். மறு பாடலில் உருகிக் கரைவார். இன்னொரு பாடலில் செல்லமாய்க் கோபித்துக்கொள்வார். அடுத்த பாடலில் வாயாடி போல் பேசுவார். அவரது இந்தப் பத்தாவது பாடலில், நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. நோன்பு நோற்று சுவர்க்கம் செல்வேன் என்றெல்லாம் சொன்னாய். வாயிற்கதவைக் கூடத் திறக்கமாட்டேன் என்கிறாயே. கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம்தான் விட்டுச் சென்றானோ? அம்மாடி, கதவைத் திற என் ராசாத்தி என்கிறார்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 9 | தூமணி மாடத்து

    திருப்பாவை – 9

    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | ஸ்வேதா குரலில்

    1300 ஆண்டுகளுக்கு முந்தைய காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார், ஆண்டாள். தூய மணிமாடத்தில் சுற்றும் விளக்கு எரிகிறது. நறுமணத் தூபம் கமழ்கிறது. துயிலணை (படுக்கை) மேல் தோழி கண்வளர்கிறாள்.

    தூங்குதல் என்பதைக் கண்வளர்தல் என்பது தமிழ் மரபு. குழந்தைக்குத் தாலாட்டு பாடும்போது கண்வளராய், கண்வளராய் எனப் பாடுவர். இதற்குக் காரணம், கண்மூடுதல் என்பது அமங்கலமானது. கண்வளர்தல் என்கிறபோது அதுவே மங்கலச் சொல்லாகிவிடுகிறது. இந்த மரபைப் பின்பற்றி, ஆண்டாளும் கண்வளர் என்கிறார்.

    ஆனால், மாமான் மகள் இன்னும் எழவில்லை என்றதும், சரவெடியாய் வெடிக்கிறார். மாமீ, நீங்களாவது எழுப்பக் கூடாதா? அவள் என்ன ஊமையா? செவிடா? மந்தமானவளா? பெருந்துயில் துயிலுமாறு யாரும் மந்திரித்துவிட்டார்களா? என்றெல்லாம் பொங்குகிறார். வைகுந்தனின் நாமங்களை வாயாரச் சொல்ல அழைக்கிறார்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 9 | தூமணி மாடத்து | சேகர் முத்துராமன் குரலில்

    திருப்பாவையின் 9ஆம் பாடல், சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று

    திருப்பாவை – 8

    கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில்

    எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக. கீழ்வானம் வெளுக்கின்றது. தேவாதி தேவனைச் சேவிப்பவர்க்கு ஆவாவென்று அருள் சிறக்கும். இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில், திருப்பாவையின் எட்டாவது பாடல், கீழ்வானம் வெள்ளென்று. கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 8 | கீழ்வானம் வெள்ளென்று | சேகர் முத்துராமன் குரலில்

    குதூகலம் என நாம் இன்று பயன்படுத்தும் சொல்லை, 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், கோதுகலம் எனப் பயன்படுத்துகிறார். இவற்றுக்கு மூலம், வடமொழியில் உள்ள  –कौतूहल–கௌ1தூஹல–  என்ற சொல்லாகும். இதற்கு உள்ளக் களிப்பு என்று பொருள். கோதுகம் என்றும் இதற்கு இன்னொரு வடிவம் உண்டு. அதன் மூலம்  — कौतुक–கௌ1து11— என்ற சொல்லாகும். இதற்கும் உள்ளக் களிப்பு என்றே பொருள். திருப்பாவையின் எட்டாவது பாடலில் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் என ஆண்டாள் துயிலெழுப்புகிறார். சேகர் முத்துராமனின் குரலில் கீழ்வானம் வெள்ளென்று என்ற பாடலைக் கோதுகலத்துடன், உள்ளக் களிப்புடன் கேட்போம், வாருங்கள்.

     

    ஓவியத்திற்கு நன்றி – ஷ்யாம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

    கீசுகீசு எனும் ஆனைச்சாத்தன்

    கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை நான் பல முறைகள் பதிவு செய்துள்ளேன். ஆனைச்சாத்தனின் குரலை இங்கே கேளுங்கள்.

    ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தனின் கீசுகீசு எனும் குரல் இங்கே

    ஆண்டாள் ரசித்த ஆனைச்சாத்தன் பறவைக்காகவே தனி இழை தொடங்கியுள்ளேன். இதில் 18 பதிவுகள் உள்ளன. பார்த்து மகிழுங்கள்.

    படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும்

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | ஸ்வேதா குரலில்

    அரவம் என்ற சொல், ஆண்டாளுக்குப் பிடித்துப் போயிற்று போலும். திருப்பாவையில் இரண்டு பாடல்களில் நான்கு முறை, இந்தச் சொல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரே பாட்டில் இரு முறைகள். அதுவும் அடுத்தடுத்த பாடல்களில் வருகின்றது. 6ஆவது பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம், அரியென்ற பேரரவம் என்கிறார். 7ஆவது பாடலில், ஆனைச்சாத்தனின் பேச்சரவம், தயிரரவம் என்கிறார். நான்கு இடங்களிலும் இதற்கு ஓசை என்றே பொருள். இந்தச் சொல், பாடலுக்குத் தனித்த அழகையும் மிடுக்கையும் தருகின்றது. திருப்பாவையின் 7ஆவது பாடல் கீசுகீசு என்றெங்கும், இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில். கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 7 | கீசுகீசு என்றெங்கும் | சேகர் முத்துராமன் குரலில்

    நாயகப் பெண்பிள்ளாய்! எனத் தோழியரை ஆண்டாள் அழைத்தாலும் அந்த விளி, அவருக்கே அழகாகப் பொருந்துகிறது. இந்தப் பாடலில் தேசமுடையாய் என ஆண்டாள் சொல்வது, இந்தக் காலப் பொருளில் இல்லை. தேசு என்ற சொல்லுக்கு ஒளி, அழகு எனப் பொருள்கள் உண்டு. ஒளி பொருந்திய பெண்ணே என்ற பொருளிலேயே தேசமுடையாய் என அழைக்கிறார். கீசுகீசு என்றெங்கும் என்ற 7ஆவது பாடலை இப்போது சேகர் முத்துராமன் அவர்களின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
    தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசுஆகும் செப்பேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு | லட்சுமிப்பிரியா குரலில்

    ஆயர் குலத்தினில் தோன்றிய எனச் சொல்லாமல், தோன்றும் அணிவிளக்கை என ஆண்டாள் ஏன் சொன்னார்? கண்ணன் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பான் என்பதன்றோ, இதன் உட்பொருள். தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் செய்பிழை யாவும் தீயினில் தூசாகும் என அறுதியிட்டுக் கூறுகிறார் ஆண்டாள். திருப்பாவையின் ஐந்தாவது பாடல் ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில்

    ஒரு தீபத்திலிருந்து ஏராளமான தீபங்களை ஏற்றுவது போல், ஆண்டாளின் பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அந்த ஜோதியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். வண்ண ஒளியை எண்ணங்களில் ஏற்றுகிறார்கள். இதோ செல்வி ஸ்வேதா, ஆண்டாளின் கைவிளக்கை ஏந்திப் பாடுகிறார். ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…’

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    ஓவியத்திற்கு நன்றி: SIRI DRAWS

    Share
  • திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை - 4
    
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா | லட்சுமிப்பிரியா குரலில்

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, அருட்செல்வி ஆண்டாளின் அமுதத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இதோ, செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில். கேட்டு மகிழுங்கள்.

    திருப்பாவை -4 | ஆழி மழைக்கண்ணா | ஸ்வேதா குரலில்

    மழையின் அறிவியல், மணிவண்ணனின் அழகியல், பக்தியின் செவ்வியல், கவித்துவம் மின்னும் பாட்டியல் ஆகிய இவை அனைத்தையும் ஒரே பாட்டில் எட்டுகின்ற ஒப்பற்ற தமிழ்ச்செல்வி, ஓங்குபுகழ் திருச்செல்வி ஆண்டாளின் வண்ணத் தமிழில், திருப்பாவையின் நான்காவது பாடல், ஆழி மழைக்கண்ணா. இந்தப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (சுஜாதா தேசிகனின் திருப்பாவை விளக்க நூலின் அட்டைப் படத்தில் உள்ள ஆண்டாள் ஓவியத்தை இங்கே பயன்படுத்தியுள்ளோம். இதற்கு அனுமதி அளித்த சுஜாதா தேசிகன் அவர்களுக்கு நம் நன்றி.)

    Image courtesy: https://freetamilebooks.com/wp-content/uploads/2014/02/Untitled.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த | லட்சுமிப்பிரியா குரலில்

    மதுரகவிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, திருப்பாவை. இது, சொல்லினிமையும் பொருளிமையும் ஒருங்கே அமைந்தது. வாய்விட்டுப் பாடுவதற்கு ஏற்றது. இசையுடன் இணைந்து பரிமளிப்பது. ஓங்கி உலகளந்த எனத் தொடங்கும் மூன்றாவது பாடலில், ஓங்கி என்று எடுக்கும்போதே திருமாலின் பேருருவம் நம் மனக்கண்முன் தோன்றிவிடும். வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்ற வரி, எண்ணி எண்ணி மகிழத்தக்கது. தமிழ்க் குலம் பெற்ற நீங்காத செல்வம் அன்னை ஆண்டாளின் மூன்றாவது பாடலைச் செல்வி லட்சுமிப்பிரியாவின் குரலில் கேளுங்கள்.

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த | ஸ்வேதா குரலில்

    எம்பாவாய், எம்பாவாய் என்று நம்பாவையரை நாவினிக்க அழைத்து, பாவை நோன்பிருந்து, உத்தமன் பேர்பாடி உய்யுங்கள் என வழிகாட்டுகிறார், ஆண்டாள். ஓங்கி உலகளந்த என்ற மூன்றாவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | லட்சுமிப்பிரியா குரலில் 

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் வையத்து வாழ்வீர்காள்! எனத் தொடங்கும் இரண்டாவது பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா. கேட்டு மகிழுங்கள். நீங்களும் இணைந்து பாடுங்கள்.

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள் | ஸ்வேதா குரலில்

    கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள், அரங்கனை ஆண்டாள் எனப் போற்றும் வண்ணம் அன்னை பிராட்டி அருளிச் செய்த திருப்பாவையின் இரண்டாவது பாடல், வையத்து வாழ்வீர்காள்! செல்வி ஸ்வேதா பாடிய இந்தப் பாடலை வையத்து வாழும் யாவரும் கேட்டு மகிழுங்கள். இணைந்து பாடுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share