திருப்பாவை – 12 | கனைத்து இளம்
திருப்பாவை 12
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 12 | கனைத்து இளம் | ஸ்வேதா குரலில்
11ஆவது பாடலில் ஆயர்கள், கறவைக் கணங்களிடம் தாங்களே பால்கறக்கிறார்கள். 12ஆவது பாடலில், கற்றெருமை கன்றை நினைத்து, நின்று பால்சொரிந்து, தான் நின்ற இடத்தையே நனைத்துச் சேறாக்குகிறது. நின்று பால்சோர என்றால், மாடு நிற்கிறது எனப் பொருள் இல்லை. மழை நின்று பெய்கிறது என்றால், நீடித்துப் பெய்கிறது எனப் பொருள் கொள்வோமே அப்படி இந்த எருமை நின்று பால்சொரிகிறது. கன்றை நினைத்த உடனே தாய்க்கு இப்படிப் பால் பெருகும். அப்படிப் பக்தர்களுக்காக அருள் சொரிகின்ற மனத்துக்கு இனியானைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
திருப்பாவை – 12 | கனைத்து இளம் | சேகர் முத்துராமன் குரலில்
குளிர்ந்தேலோர் எம்பாவாய் என உள்ளம் குளிர்தலைப் பற்றி முன்னர் பார்த்தோம். மார்கழிக் குளிரையும் ஆண்டாள் பாடியுள்ளார். தலையில் பனி வீழ, நின் வாசற்கடை பற்றி நிற்கின்றோம். ஈதென்ன பேருறக்கம்? இப்போதாவது எழுந்திரு எனத் தோழியைக் கோதை எழுப்புகிறார். உள்ளம் குளிரச்செய்யும் திருப்பாவையின் 12ஆவது பாடலைச் சேகர் முத்துராமனின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)