Tag: நிர்மலா ராகவன்

  • பழகத் தெரிய வேணும் – 40

    பழகத் தெரிய வேணும் – 40

    நிர்மலா ராகவன்

    மனிதனானவன் வைரமாகலாம்

    இருக்கும் நிலையிலேயே இருந்தால், அது மகிழ்வை அளிக்கிறதோ, இல்லையோ, அதனால் ஒருவித பத்திரமான உணர்வு உண்டாகிவிடுகிறது. வேறு பல சௌகரியங்களையும் விட்டுக்கொடுத்தாகவேண்டும். அதனாலேயே, `எதற்காக மாறுவது?’ என்று பலரும் பொறுத்துப்போகிறார்கள்.

    கதை

    ஒரு முறை கப்பலில் போகும்போது அந்தத் தமிழரைச் சந்தித்தேன்.

    தன் பெற்றோரால் மனைவி ரொம்பக் கஷ்டப்படுகிறாள், எப்போதும் பயந்தே நடக்க வேண்டியிருக்கிறது, ஆனால் தனியே பிரிந்து போகவும் பயம் என்றெல்லாம் நான் கேட்காமலேயே தெரிவித்தார்.

    `இப்படிப் பண்ணியிருக்கலாமே’ என்று காலம் கடந்து வருந்துவது என்ன பயனைத் தரும்?

    சில வருடங்கள் கழித்து நான் அவரை மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். நான் முகமன் கூறியபோது, “நீங்கள் என்னை யாரோ என்று நினைத்துப் பேசுகிறீர்கள். நான் உங்களைப் பார்த்ததே இல்லையே!” என்றார்!

    தான் செய்த எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் கண்டனம் என்ற நிலையில் அவரது மனைவியின் உற்சாகம் வடிந்துபோக, தன் இயலாத்தனத்தை அவர்மேல் ஆத்திரம், சந்தேகம் என்று மாற்றியிருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

    மாறினால் மேலும் பல துன்பங்களை அனுபவிக்க நேருமோ என்ற பயத்தால் பொறுக்க முடியாத நிலையைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.

    வளர்ச்சியால் துன்பம்தான்

    எவ்வித மாற்றமானாலும், அது எளிதாகக் கிடைப்பதில்லை. பதின்ம வயதில் உடல் வளரும்போது பொறுக்க முடியாத நோவெடுக்கும், இல்லையா? நம் மனநிலையை மாற்றிக்கொள்வதும் அப்படித்தான்.

    மேற்படிப்பு அல்லது உத்தியோக நிமித்தம் அயல்நாடு செல்பவர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. அப்போது மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

    `நீங்க ரொம்ப மாறிட்டீங்க!’ என்று ஆச்சரியத்துடனோ, வருத்தத்துடனோ கூறுபவர் ஒன்று புரிந்துகொள்வதில்லை.

    வாழ்க்கையின் சுழலில் பல புதிய அனுபவங்கள் ஏற்படக்கூடும். அப்போது பிறரைப்பற்றி கொண்டிருந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு, வித்தியாசமானவர்களையும் ஏற்றால்தான் முன்னேறமுடியும்.

    `ஐயே! இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்களே!’ என்று நினைத்தால், நம்மிலிருந்து மாறுபட்ட பிறரை நண்பர்களாக ஏற்க முடியாது.

    மனிதனும் வைரமும்

    “பட்டை தீட்டினால்தான் வைரம் ஜொலிக்கிறது. மனிதனும் பல இடர்களைக் கடந்தால்தான் வெற்றி பெற முடியும்” (சீனப் பழமொழி).

    முதுகலைப் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா போன பலருள் ஒருத்தி லீலா.

    தாய்நாட்டில் கிடைத்த சௌகரியங்களும் மதிப்பும் பிற இடங்களிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை விளைவித்தது. அங்குள்ள மொழி உச்சரிப்பு, உணவு, கலாசாரம் எல்லாமே புதிதாக இருக்க, கலவரம் உண்டாகியது.

    வெளிநாட்டுக்குப்போய் திரும்புகிறவர்கள் தாங்கள் பேசும் விதத்தையும் ஆடைகளையும் மாற்றிக்கொள்வதை வளர்ச்சி என்று காட்டிக்கொள்வதைப்போல் அவளால் இருக்க முடியவில்லை. அத்தகைய மாற்றம் அர்த்தமற்றது என்று தோன்றிப்போயிற்று.

    திரும்பிப்போவதும் நடக்காத காரியம். உபகாரச்சம்பளம் பெற்று, எத்தனை பேருடைய பொறாமைக்கு ஆளாகி, வந்திருக்கிறாள்!

    `நேரமில்லை என்று சொல்லாதே. தூக்கத்தைக் குறை,’ என்று பல்கலைக்கழக வழிகாட்டி கூற, இரண்டு மணி நேரமாகக் குறைந்தது உறங்கும் நேரம்.

    `எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்?’ என்ற வருத்தம் அடிக்கடி எழ, `சுயபச்சாதாபம் கூடாது!’ என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள் லீலா.

    அதன்பின், இசை, உபயோகமான விஷயங்களைக்கொண்ட புத்தகங்களைப் படிப்பது என்று தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

    அவளைப்போல், பழகிப்போன எண்ணங்களையும், செயல்களையும் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்பவரே வாழ்வில் வெற்றி பெற முடியும்.

    தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் துணிச்சல் வெகு சிலருக்குத்தான் அமைந்திருக்கிறது. அத்துணிச்சல் இல்லாதவர்களே பிறரிடம் ஆத்திரப்படுகிறார்கள்.

    அசையாது நிற்க அஞ்சு

    `நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று யாராவது சொன்னால் அவர்கள் கடவுள் இல்லை. புதிதாக எதையும் முயன்றிருக்கமாட்டார்கள். அவ்வாறு ஒரே இடத்தில் அசையாது நிற்கத்தான் அஞ்சவேண்டும்.

    போகும் வழியில், நம் மனதைக் காயப்படுத்தவென்றே சிலர் இருப்பார்கள். சிறிது காலம் வலிக்கும். எல்லாரையும், எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்க முடியாது என்று தெளிந்து, அவர்களைக் கடக்க வேண்டியதுதான்.

    சில சமயம், நாம் செய்தது நன்றாக இல்லை என்று ஒப்புக்கொள்வதற்கு மனோதிடம் வேண்டும். முன்னேற வேறு வழி?

    ஒரு கதை எழுதி அனுப்பிவிட்டு, அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையே என்று மனம் தளர்வதால் என்ன பயன்?

    என் கதை ஒன்று வெளிவந்ததும், அப்பத்திரிகை ஆசிரியரை ஒருவர் கேட்டிருந்தார்: “நீங்கள் பிரபலமானவர்களின் கதைகளைத்தான் பிரசுரிப்பீர்களா?”

    அதற்கான பதில்: “பிரபலமானவர்களும் ஒரு காலத்தில் ஆரம்ப எழுத்தாளர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களுடைய தளராத உழைப்பால் முன்னேறி இருக்கிறார்கள்”.

    `நான் பல வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்றாற்போல் ஒருவர் சிறந்த எழுத்தாளர் என்று ஆகிவிடுமா?

    முன்னேறிக்கொண்டே இருக்க அவர் என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கிறார் என்பது முக்கியம்.

    ஒரு காரியத்தைத் தொடங்கவே பயம். அல்லது, செய்துகொண்டிருக்கும்போதே, `இதை நல்லவிதமாகச் செய்து முடிப்பேனா!’ என்ற அவநம்பிக்கை. இதெல்லாம் பலவீனமானவர்களின் குணம்.

    எது பலம்?

    பலம் என்பது தேக பலம் அல்லது உரத்த குரல் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களே பிறரை வதைக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பயந்தவர்கள். பிறர் அவர்களுக்குப் பயப்படாது எதிர்த்து நின்றால், `பலசாலிகள்’ பயந்துவிடுவார்கள்.

    கதை

    “எனக்குத் தைரியமே கிடையாது. என் தாயால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன். நான் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பாள்!” என்று புலம்புவாள் மார்கரெட். நன்கு படித்து, உத்தியோகத்தில் அமர்ந்துவிட்ட பின்பும், கடந்தகாலத்திலேயே நிலைத்துவிட்டவள் இவள்.

    என்றோ நடந்ததையே எண்ணி, பிறர்மேல் கொண்ட ஆத்திரம் அடங்காமலேயே இருந்தால் அது அவர்களைப் பாதிப்பதில்லை, நம்மைத்தான் வருத்தும் என்பது மார்கரெட்டுக்குப் புரியவில்லை.

    அதன்பின், `தாயைப்போல் அதிகாரமாக நடப்பவர்கள்’ என்று அவள் கருதிய யாரையும் அவளால் ஏற்க முடியவில்லை. வலுச்சண்டை பிடிப்பாள்.

    கடந்தது கடந்ததாகவே இருக்கட்டுமே!

    எப்போதோ கிடைத்த வெற்றியால் பெருமிதமும், தோல்வியடையும்போது அயர்ச்சியும் அடைந்து, கடந்ததைப்பற்றியே எந்நேரமும் நினைப்பவர்கள் பலர்.

    மாறாக, `உபயோகமாக இன்னும் என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பவர்களே அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்த ஒரு வாழ்விலும் இடர்களோ, துயரமோ இல்லாது இருக்காது. அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுகிறார்களா, இல்லை, மீண்டு எழுகிறார்களா என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி- தோல்வி அடங்கியிருக்கிறது.

    கீழேயே கிடக்காது மீண்டும் எழும்போது, முன்பு இருந்ததைவிடச் சற்று மேலே சென்றிருப்போம்!

    Share
  • கதை பிறந்த கதை – 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

    கதை பிறந்த கதை – 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமது எழுத்துலக அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்கின்றார். கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது? கதைகளில் உண்மையும் கற்பனையும் எவ்வாறு கலக்கின்றன? எந்த விகிதத்தில் கலக்கின்றன? எவ்வளவு காலம் கழித்து ஒரு சம்பவம் கதையாகிறது? உள்ளிட்ட பலவற்றைச் சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார்.

    கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் தாயின் மீது விதவிதமான ஆண்கள் பலரும் கட்டைக் குரலில் பேசியபடி வந்து, படுத்து அமுக்குகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கும் உடலெங்கும் வலிக்கிறது. வலி தாங்காமல் அது புரண்டு படுக்கிறது. தாயும் குழந்தையைத் திட்டுகிறாள். அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் என்னவாக ஆகிறது? வித்தியாசமான கருவில் அமைந்த தனது கதைகள் குறித்து நிர்மலா ராகவன் விவரிக்கிறார்.

    மேலும், யோக முத்திரைகள் சிலவற்றை நமக்காகப் பிடித்துக் காட்டியுள்ளார். மயக்கமா? குழப்பமா? மனதிலே நடுக்கமா? இந்த யோக முத்திரையைப் பிடித்தால் போதும். உங்கள் குழப்பம் தீர்ந்து, தெளிவு கிடைக்கும். இது என்ன முத்திரை என்று கற்க, இந்த நேர்காணலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 39

    பழகத் தெரிய வேணும் – 39

    நிர்மலா ராகவன்

    ஓயாமல் உதவுவது உதவியா, உபத்திரவமா?

    `உலகில் தீயன என்பதே கிடையாது,’ என்று வளர்க்கப்பட்டதால் அரசிளங்குமரனான சித்தார்த்தர் பிணியையும். மரணத்தையும் கண்டபோது, குடும்ப வாழ்வையே வெறுத்துப்போனார் என்று தெளிவுபடுத்துகிறது கௌதம புத்தரின் சரிதம்.

    பல பெற்றோர் ஏன் குழந்தைகளை அப்படி வளர்க்கிறார்கள்?

    அவர்களைப் பொறுத்தவரை, அது அன்பைக் காட்டும் வழி.

    `என்னுடையகுழந்தை!’ என்று உரிமை கொண்டாடும் மனப்பான்மை இன்னொரு காரணம்.

    `யாரும் புத்தி சொல்லாமல், நான் நிறைய தப்பு செய்துட்டேன். நீயும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது,’ என்பார்கள், கரிசனத்துடன்.

    அப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியோ, பயனோ அடைகிறார்களா என்பது வேறு விஷயம்.

    ஓயாமல் உதவுவது உதவியா?

    கதை

    திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெண் காஞ்சனா.

    அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, அருமை பெருமையாக வளர்த்த மகள் இரவில் நெடுநேரம் வீட்டுப்பாடம் செய்து, உடலைக் கெடுத்துக்கொள்கிறாளே என்ற ஆதங்கம் அவள் பெற்றோருக்கு.

    “காஞ்சனாவோட அப்பா பள்ளிக்கூடத்துக்குப் போய், `எங்க குழந்தைக்கு அதிகமா வீட்டுப்பாடம் கொடுக்காதீங்க!’ என்று சொல்லிட்டு வந்தார்,” என்று அவளுடைய தாய் என்னிடம் கூறியபோது, அப்பெண்ணின்மேல் பரிதாபம்தான் எழுந்தது.

    உடன் படிக்கும் மாணவிகள் கேலி செய்ய மாட்டார்களா?

    தெரிந்தோ, தெரியாமலோ, சில பெற்றோரே குழந்தைகள் பிறருடன் பழகத் தெரியாமலிருக்க இவ்வாறு வழிவகுத்து விடுகின்றனர்.

    குழந்தை விழுந்துவிடுமே!

    நடக்கப் பழகும் குழந்தை விழாமல் இருக்காது. விழத்தான் செய்யும். இயற்கையே அதற்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கிறது, மூளையில்.

    தளர்நடை போடும் குழந்தையின் பின்னாலேயே பதட்டத்துடன் நடக்காது, கண்டும் காணாததுபோல் இருந்தால், அவனும் அதைப் பெரிதுபண்ண மாட்டான். `விழுந்தால் எழுந்திருக்க வேண்டும்!’ என்று புரிந்துகொள்வான்.

    கதை

    டெய்ஸி எங்கு போனாலும் அவளைக் கண்காணிக்க ஒரு காவலரை அமர்த்தியிருந்தார் அவளுடைய தந்தை.

    அவருக்கு உத்தியோக ரீதியில் எதிரிகள் அதிகம். அவர்களால் மகளுக்குக் கெடுதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயத்தின் விளைவு அது.

    தன்னையொத்த தோழிகள் அனுபவித்த சுதந்திரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று நொந்துபோனாள் அப்பெண். தந்தைமீது தாளாத கோபம் வந்தது. ஆனால், உண்மை நிலவரமும் புரிந்திருந்ததால், அவரை எதிர்க்க முடியவில்லை.

    அவளுடைய நல்ல காலமோ, கெட்ட காலமோ, தந்தை உத்தியோக நிமித்தம் குடும்பத்துடன் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. படித்துகொண்டிருந்த இருபது வயது மகள் தனியாக விடப்பட்டாள்.

    இம்மாதிரி வளர்ந்த இளம்பெண்களுக்கு நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசம் புரியாது.

    உலகம் புரியாது வளர்க்கப்பட்டவர்களுடன் நண்பரைப்போல் பழகி, பணத்தையோ, வேறு எதையெல்லாமோ பிடுங்க எத்தனைபேர் காத்திருப்பர்!

    பொறுப்பான பெற்றோர் என்ன செய்திருக்க வேண்டும்?

    அந்தந்த வயதுக்குத் தேவையான அறிவுரையைக் கூறி, அப்படியே தவறிழைத்தாலும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம்.

    வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்

    ஸிதி (SITI) என்ற பெண் என்னிடம் சொன்னது இது. பாட்டியிடம் வளர்ந்தவள் அவள்.

    வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்ற அவளுடைய தாய் தவறான முறையில் பணம் சம்பாதிப்பதை அறிந்த பாட்டி, பேத்தியும் அப்படிக் கெட்டுவிடக்கூடாது என்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டாள்.

    பள்ளிக்கூடம் சென்று திரும்பியவுடன் ஸிதி அவளுடைய அறையில் வைத்துப் பூட்டப்பட்டாள்.

    “பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அதனால், என்னுடன் படித்த பையனை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்வேன்,” என்றாள், களங்கமில்லாது.

    “அப்போது பாட்டி உன்னை வெளியில் விடுவார்களா?” என்று கேட்டேன்.

    “இல்லை. அவன் என் குளியலறையிலிருந்த ஓட்டைப் பிரித்துக் கீழே இறங்குவான்!”

    “என்ன செய்வீர்கள்?”

    “சும்மா பேசிக்கொண்டிருப்போம். அவ்வளவுதான்!”

    பேச்சுச் சப்தம் பாட்டிக்குக் கேட்டிருக்காதா!

    `வயதான காலத்தில் இந்தப் பெண்ணை என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை,” என்று காவல்துறையினரிடம் முறையிட்டிருக்கிறாள்.

    அவ்வளவுதான். வீட்டைவிட்டு `ஓடிப்போன’ இளம்பெண்களுக்காக இயங்கும் இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டாள் ஸிதி. அங்கு பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இருந்தார்கள்.

    நான் மேலும் துருவியபோது, நண்பனுடன் உடலுறவெல்லாம் கிடையாது என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    `பெரிதாக எந்த தவறும் செய்யாது, சிறைபோல் ஓரிடத்தில் அடைபட்டுக்கிடக்கிறாள், பாவம்!’ என்ற வருத்தமும் எழுந்தது. இவள் எங்கே ஓடிப்போனாள்!

    பிற பெண்கள் அவளைப்போல் இருக்கவில்லை. கண்டிப்பாரின்றி, அல்லது தாளமுடியாத கண்டிப்பால், அவர்கள் தம் `சுதந்திர’ப்போக்கைப் பெருமையுடன் விவரிக்க, இவளும் தவறான பாதையில் நடக்கக்கூடும்.

    எல்லா ஆண்களுக்கும் ஒரே ஒரு எண்ணம்தான்

    `எல்லா ஆண்களும் கெட்டவர்கள். அவர்கள் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் எப்போதும். யாரையும் நம்பாதே!’ என்று போதித்து வளர்க்கப்படும் பெண்ணுக்கு எந்த வயதிலும் பயம்தான்.

    இதைப்பற்றி அறிய, நான் நம்பகமான என் நண்பரிடம் கேட்டேன்.

    ‘Most men. Not all!” என்றார். (அனேக ஆண்கள் அப்படித்தான். எல்லாரும் கிடையாது).

    பையன்களுக்கும் இதுபோன்ற போதனைகள் உண்டு.

    கதை

    பதினெட்டு வயதில்,  முதன்முதலாகப் பெண்களுடன் சேர்ந்து கல்வி பயிலும் அனுபவம் அந்தப் பையன்களுக்குப் புதிது.

    “எங்களுக்குப் பதினாறு வயதானபோது, பள்ளி ஆசிரியைகள் எங்களை என்னமோ `காமாந்தகாரர்கள்’ என்பதுபோல் பயத்துடன் பார்த்தார்கள். எங்களுக்கு ஒரே ஆத்திரம்,” என்று என் மகளுடன் படித்த மாணவர்கள் கூறினார்கள்.

    `பெண்களுடன் எப்படிப் பழகுவது?’ என்று குழம்பியிருந்த அவர்களுக்கு உறவினர் பையன்களுடன் பழகியிருந்த தோழிகள் தைரியம் அளித்தனர்.

    அவ்வப்போது, அவர்களைப்பற்றி அறிந்திருந்த நான், “தீபாவளிக்கு உன் நண்பர்களை அழை,” என்று நான் மகளிடம் கூற, “அவர்களெல்லாம் பெண்கள் வீட்டுக்கு வரமாட்டார்களே!” என்றாள், சிரித்தபடி.

    “அம்மா அழைக்கச் சொன்னாள் என்று சொல்,” என்று சொல்லிக்கொடுத்தேன்.

    நான் பேயா?

    நாலைந்து பையன்கள் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் ஒரே நடுக்கம். வரவேற்றுவிட்டு, வேகமாக உள்ளே போய்விட்டேன்.

    ஒரு பையன், “நான் ஒரு பொண்ணோட வீட்டிலே இருக்கேன்னு தெரிஞ்சா, எங்க பாட்டி உயிரை விட்டுடுவாங்க.” என்று சொன்னது காதில் கேட்டது.

    “ஒங்கம்மாவுக்கு நாங்க வர்றது தெரியுமா?” என்றது இன்னொரு குரல்.

    அவர்கள் சென்றபின், “வீட்டுக்கு யார் வந்தாலும், உட்கார்ந்து பேசுவியே?” என்று மகள் சந்தேகம் கேட்டாள்.

    “அந்த பையன்களின் முகத்தைப் பார்த்தாயா? என்னைப் பார்த்ததும், பேயைக் கண்டதுபோல் நடுங்கிவிட்டார்கள்!” என்று சிரித்தேன்.

    `பாதுகாப்பு’ என்ற பெயரில் அநாவசியமான பயங்களைப் புகுத்தி வளர்ப்பதும் தவறுதான்.

    எப்போது நின்று பேசலாம், எப்போது ஓடவேண்டும் என்று அந்தந்த வயதில் சொல்லிக்கொடுக்காவிட்டால், மிரட்சிதான் எழும்.

    பெரியவர்களாக ஆனதும், பெண்களைக் கேலி செய்து, தம் பலத்தை, அதிகாரமாக நிலைநாட்டிக்கொள்கிறவர்கள் முன்பு தாம் அடைந்த பயத்தைப் பிறர்பால் செலுத்த முனைகிறவர்களோ?

    Share
  • என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல் – பகுதி 2

    என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல் – பகுதி 2

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்துள்ளது. மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ள குஷ்வந்த் சிங் ரசித்த ஜோக்ஸ் பல உண்டு. அதில் சர்தார்ஜி ஜோக் ஒன்றும் உண்டு.

    ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார். சர்தார்ஜி உடனே அவளது காரை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். இதைக் கேட்ட அவரது நண்பரான இன்னொரு சர்தார்ஜி, நீ செய்தது சரிதான். அவளது உடைகள் உனக்குச் சரியாக இருக்காதே என்றாராம். கெட்டிக்கார சர்தார்ஜிகள்.

    நேற்று இரவு முழுவதும் உங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன் எனக் குஷ்வந்த் சிங், நிர்மலாவிடம் சொன்னது ஏன்? குஷ்வந்த் சிங்கின் Indecent habit எது? நிர்மலாவைப் பற்றிக் குஷ்வந்த் சிங் என்ன எழுதினார்? தில்லியில் குஷ்வந்த் சிங்கின் வீட்டுக்கு நிர்மலா சென்றபோது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைபால் அங்கே இருந்தார். அவர் நிர்மலாவிடம் கேட்ட கேள்வி என்ன? இவற்றுக்கான விடைகளை அறிய, இந்த நேர்காணலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 38

    பழகத் தெரிய வேணும் – 38

    நிர்மலா ராகவன்

    அன்பைக் காட்டும் வழி: சுதந்திரம் அளிப்பது

    குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனுக்கு இரு முரணான குணங்கள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.

    உண்பது, தன் துணியை தானே மடித்து வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களைத் தாங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எதையாவது கண்டு பயந்தாலோ, கீழே விழுந்துவிட்டாலோ, ஓடி வந்து தாயைக் கட்டிக்கொள்வார்கள்.

    சிறுவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா வயதிலும் சுதந்திரமும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும்.

    `என் உரிமை!’ என்று முழக்கமிடும் பதின்ம வயதினர் `சுதந்திரம்’ என்று எண்ணுவது தான்தோன்றித்தனமாக நடப்பது.

    அவர்களுக்குச் சகல வசதிகளும் அளித்து, செலவழிக்கப் பணமும் கொடுக்க வேண்டிய பெற்றோர், `இது எப்படி சுதந்திரம் ஆகும்?’ என்று அலுத்துக்கொள்வதில் நியாயம் இருக்கிறது.

    ஒருவர் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்வதுதான் சுதந்திரம். அது பிறர் அளிப்பதல்ல; சுய முயற்சியால் பெறுவது.

    சில குடும்பங்களில், வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அங்கு இளையவர்களுக்கு பேச்சு சுதந்திரம் கிடையாது. வேறு விதமாக யோசிப்பதே குற்றம் என்பதுபோல் வளர்க்கப்படுவார்கள்.

    பெண்களுக்கோ! கேட்கவே வேண்டாம்.

    கதை

    கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள் காவேரி. திருமணமாகி, இரு குழந்தைகளுக்குப் பின் மேற்படிப்பைத் தொடர்ந்து, பட்டங்களும் பெற்றாள்.

    ஆரம்பப் பள்ளி ஒன்றில் அவளை அழைத்தார்கள், தலைமைப் பதவியை ஏற்க.

    மாமியாரோ, `நீ வேலைக்குப் போய்விட்டால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்னால் முடியாது,’ என்று திட்டவட்டமாகக் கூறினாள்.

    பெரியவர்களை எதிர்த்துப் பழக்கமில்லாத காவேரி அடிபணிந்தாள்.

    பல ஆண்டுகள் கழிந்தபின், தனக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்காமல் போய்விட்ட வருத்தம் எழுந்தது. `குழந்தைகளையாவது நல்ல விதமாக வளர்க்க முடிந்ததே!’ என்ற சிறு ஆறுதல் கொண்டாள்.

    அவள் துணிந்திருந்தால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண்ணை அமர்த்தி இருக்கலாம். இல்லையேல், தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.

    நம் திறமைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், பலருக்கும் தானே சிந்திப்பதைவிட, பிறரைத் தொடர்வது எளிது.

    அப்படி அவள் தனிக்குடித்தனம் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

    `பெரியவர்களை விட்டுவிட்டு, உனக்கு அப்படி என்னடி வாழ்க்கை?’ என்று ஆசாரமான அவள் குடும்பத்தாரே பழித்திருப்பார்கள்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று சுயமாகச் சிந்திக்கவே பயந்தால், வாழ்வில் மகிழ்ச்சியோ, பிடிப்போ இல்லாமல் போய்விடுமே!

    தான் விரும்பியதைப் பிறருக்காக விட்டுக் கொடுத்து, தன் திறமையை முழுவதாக வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமும் கையாலாகாத உணர்வும் மேலிட வாழ்கிறவர்கள் எத்தனை பேர்!

    (நாடு தழுவிய நிலையிலும் இதேதான். நம் கருத்து பிடிக்காவிட்டாலும், `பிழைத்துப் போ!’ என்று நம்மைத் தண்டிக்காது விட்டால், அதுவே சுதந்திரம் என்று மகிழ வேண்டியதுதான்).

    காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களையோ, எண்ணங்களையோ ஏற்றுக்கொள்ளாது, தன்னம்பிக்கையுடன் நடக்க முயலும் எவருக்கும் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவேண்டும். அதற்கான துணிச்சல் அவசியம்.

    கதை

    அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

    அப்போது விரிவுரையாளராக இருந்த மிஸ் சுந்தரவல்லி, “உங்களிடம் படித்த மாணவிகளில் சிறப்பானவள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?” என்று என் பள்ளித் தமிழ் ஆசிரியை திருமதி கோமளாம்பாளிடம் விசாரித்திருக்கிறாள். (அது தனியார் பள்ளியான கமலாபாய் பெண்கள் பள்ளி. பெங்களூரில்).

    “பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் நிர்மலா போன்ற ஒரு மாணவி கிடைப்பாள்!” என்ற பதில் கிடைத்ததாம்.

    மிஸ் சுந்தரவல்லியே இதை என்னிடம் கூறி, “பரீட்சைகளில் நீ அப்படி ஒன்றும் சிறப்பாக எழுதுவதில்லையே! ஏம்மா? தலைவலியா?” என்று போலிப் பரிவுடன் ஒவ்வொரு முறையும் விசாரித்தபோது, எனக்குப் பதிலளிக்கத் தெரியவில்லை.

    பல வருடங்களுக்குப் பின் புரிந்தது, அவ்விரு ஆசிரியைகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு.

    பள்ளிக்கூடத்தில் எனக்குள் இயற்கையாகவே அமைந்திருந்த எண்ணச் சுதந்திரம் தடை செய்யப்படவில்லை. மாறாக, அது வளரும் விதத்தில் ஊக்கம் அளிக்கப்பட்டது.

    `நான் சொல்லியது மட்டுமல்லாது, பரீட்சைத்தாளில் சுயமாகக் கருத்து சொல்வதற்கு இவளுக்கு என்ன திமிர் இருக்கவேண்டும்!’ என்று ஆத்திரப்பட்டிருப்பாள் மிஸ் சுந்தரவல்லி.

    (பட்டப் பரீட்சையில் நானும், இன்னொரு பெண்ணும் மட்டுமே தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தோம்).

    கல்வி கற்பதன் நோக்கமே ஒருவர் எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருவதுதான்.

    இது புரியாது, சுயமாகச் சிந்திப்பவர்களை மரியாதை கெட்டவர்கள், கர்வம் கொண்டவர்கள் என்பதுபோல் தண்டித்தால், அது என்ன கல்வி?

    பெண் எழுத்தாளர்களும் சுதந்திரமும்

    ஆண்கள் எப்படி எழுதினாலும் ஏற்கலாம். ஆனால், தமிழ்ப் பெண்களின் எழுத்து ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

    (ஆங்கிலத்தில் எழுதும் பெண்களுக்குப் பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு. அவர்களது உள்ளுணர்வை விவரித்தால் அது தவறாகக் கருதப்படுவதில்லை).

    கற்பனை விரியும்போது, அதைத் தணிக்கை செய்யாது, அப்படியே எழுத்தில் வடிக்கும்போதுதான் நிறைவு ஏற்படுகிறது.

    `இது சரியா?’

    `இப்படி எழுதினால், என் பெயர் கெடுமோ?’

    இவ்வாறு கலக்கத்துடன் யோசித்து, ஒவ்வொரு வரியையும் திருத்திக்கொண்டே இருந்தால், நாம் எழுதுவதில் முழு மனத்துடன் ஆழ்ந்துபோக முடியுமா? கதையில்தான் என்ன சுவை இருக்கும்?

    கதைகளில், பெண்கள் முறை தவறி நடக்கிறார்கள் என்பதுபோல் எழுதினால், அந்த எழுத்தாளினியின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவார்கள்.

    படைத்தவரின் கைவண்ணத்தைவிட்டு, ஒரு கலைஞரையே வேண்டாத விமரிசனத்திற்கு உள்ளாக்குவது பொறாமையால்தான் என்று தெளிந்தால் போதும். துணிச்சல் அதிகரிக்கும்.

    அத்தகையவர்களுக்குப் பயந்து, பிறர் மதிக்கவேண்டும் என்றே ஒவ்வொரு செயலையும் புரிவது, அல்லது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசுவது என்று பழகிக்கொண்டால், முன்னேறுவது எப்படி?

    என்னைச் சில பெண்கள் கேட்டிருக்கிறார்கள், “ஆண்களின் சில போக்கைக் கேலி செய்து நீங்கள் (ஆங்கிலத்தில்) எழுதுகிறீர்களே! உங்கள் கணவர் கோபிப்பதில்லையா?” என்று.

    எரிச்சலுடன், “நான் – எழுத்தாளர்! எனக்குத் தோன்றுவதை, எனக்குச் சரியென்று படும் விதத்தில் எழுதுகிறேன்,” என்று பதிலளிப்பேன்.

    அன்பும், காதலும்

    வளர்ந்த பிள்ளைகளோ, தம்பதியரோ, ஒருவர் தான் சொல்கிறபடியே நடக்கவேண்டும் என்று அவரைக் கெட்டியாகப் பிடித்திராது அவர் போக்கில் விட்டால், அப்படி அளிக்கும் சுதந்திரத்தையே அன்பு என்பேன்.

    `ஐ லவ் யூ’ என்று வாய்வார்த்தையாகச் சொல்பவர்கள் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்?

    Share
  • என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியாவுக்கு வந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை நிர்மலா ராகவன் ஒரு நேர்காணலுக்காகச் சந்தித்தார். ஆனால், அதற்கு முன்னதாகக் குஷ்வந்த் சிங், நிர்மலா ராகவனை ஒரு மணிநேரம் நேர்காணல் செய்தார். இந்தியர்களுக்குத் தங்கள் தாய்மொழியை விட, ஆங்கிலமே நன்றாக வரும் எனக் குஷ்வந்த் சிங் மேடையில் சொல்ல, நிர்மலா ராகவனும் மேடைக்குச் சென்று, நானும் இந்தியாவிலிருந்து வந்தவள்தான். எனக்கு ஆங்கிலத்தை விட, தமிழே நன்றாக வரும் எனக் கூறினார். மறு பிறவி இல்லை என்று குஷ்வந்த் சிங் சொல்ல,  அப்படியானால் ஒருவர் ஏழையாகவும் இன்னொருவர் பணக்காரராகவும் பிறப்பது எப்படி? கர்ம வினைதானே அதற்குக் காரணம்? எனக் கேட்டுள்ளார்.

    எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உடனான தம் உரையாடல்கள், அவருடன் மேற்கொண்ட பயணம், குஷ்வந்த் சிங் பகிர்ந்துகொண்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்கள் ஆகியவற்றை நிர்மலா ராகவன், இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 37

    பழகத் தெரிய வேணும் – 37

    நிர்மலா ராகவன்

    தானே தன்னை அறிய

    “ஓயாம என்ன விஷமம்?” என்று குழந்தைகளை அதட்டியோ, அடித்தோ செய்கிறவர்கள் குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

    பெரியவர்களுக்குத் தவறு என்றுபடுவது எது என்று குழந்தைகளுக்குப் புரியாது. இன்னும் அதிகமாகச் `சோதித்து’க்கொண்டே இருப்பார்கள்.

    சில நடிக நடிகையர் திரைப்படங்களில் தம் இயற்கையிலிருந்து மாறுபட்டு நடிக்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள், இத்திறமை எப்படி சாத்தியமாகிறது என்று.

    `பிறரது சரீரத்திற்குள் புகுந்துகொள்வதால்,’ என்று பதில் வரும். நம்மை இன்னொருவராகப் பாவித்தால், அவரது எண்ண ஓட்டம் புரியும். அதாவது, அவருடைய கண்ணால் நாம் பார்க்கவேண்டும், அவருடைய காதால் கேட்கவேண்டும்.

    தலைவர்களும், பிறரது துன்பத்தைத் துடைக்க விரும்புகிறவர்களும், எழுத்தாளர்களும் கற்க வேண்டிய தன்மை இது.

    நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகள் மட்டுமின்றி, அனுபவங்கள், கண்ணோட்டம் எல்லாமே தெளிவாகும். அப்போதுதான் பிறரைப் பழிக்கத்தோன்றாது.

    (எச்சரிக்கை: நீண்ட மாதங்கள் தொடர்ந்து இப்படி நடந்தால், அவர்களாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. சுயநிலைக்குத் திரும்ப சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

    தொழுநோயைப்பற்றி நிறைய ஆராய்ச்சியுடன் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தபோது, நான் அவர்களுடைய உணர்ச்சிகளை என்னுடையதாக ஆக்கிக்கொள்ள, உடல்நிலை சீர்கெட்டு, மூச்சே விட முடியாது போய்விட்டது. நள்ளிரவில் மருத்துவரிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது).

    கதை

    பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய என் மாணவன், “இன்று அப்பாவிடம் பிரம்படி வாங்கப்போகிறேன்,” என்று நடுங்கியவாறு கூறினான்.

    வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் இருந்த அவனது சகா, “திருப்பி அடித்துவிட்டுப் போயேன்!” என்றான் அலட்சியமாக.

    இந்த உரையாடலைச் செவிமடுத்தபடி இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    வெகு நேரம் யோசித்தபின் ஒன்று புரிந்தது. காரணமில்லாது அவனை அடிக்கடி அடித்து நொறுக்கும் அப்பா. மனம் வெறுத்து, அவரை எப்படித் தடுப்பது என்று அப்படி யோசித்திருக்கலாம்.

    வேறொரு சமயம், அவனை அழைத்துக் கேட்டபோது, வாரம் முழுவதும் அவன் எப்படி இருக்கிறான் என்றுகூட பாராது, சனிக்கிழமையன்று, காரணமேயின்றி பிரம்பும் கையுமாக அவனை வீட்டுக்குள் துரத்தித் துரத்தி அடிக்க வருவார் என்று ஒப்புக்கொண்டான்.

    “தான் குடும்பத் தலைவன். அதனால், பெரிய அதிகாரம் என்று காட்டிக்கொள்வதாக அப்பாவுக்கு எண்ணம்!” என்று அவன் வெறுப்புடன் கூறியபோது, என் அதிர்ச்சி அதிகரித்தது.

    பையனுக்கு அப்பாவைப் புரிந்த அளவுக்கு அவரால் மகனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    அப்பா என்றால் அடக்குவதுதானா, அன்பு செலுத்த வேண்டாமா என்று அவன் யோசித்திருக்கிறான்.

    `நல்ல வேளை, நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே!’ என்ற நிம்மதியும், `அவன் நிலையில் நான் இருந்தால், இதைவிட மோசமாக இருந்திருப்பேனோ, என்னவோ!’ என்ற நினைப்பும் ஒருங்கே எழுந்தன.

    ஒருவரது நலனைப்பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், `நீ என்ன, இவ்வளவு கேவலமாக நடக்கிறாயே!’ என்ற எண்ணம் உதிக்காது.

    பிறரது துன்பங்களை நம்முடையதுபோல் பாவித்து, அவர்களை அப்படியே ஏற்றால்தானே நம்முடன் நெருங்குவார்கள்?

    அதன்பின், தம்மைப்பற்றி, வலிய வந்து சொல்லிக்கொள்வார்கள், நாம் கேளாமலேயே.

    சிலர் அவலமான தம் கதையைப் பிறரிடம் சொல்லிக்கொள்ள விரும்பி மெல்ல ஆரம்பிப்பார்கள்.

    `எனக்கே எத்தனையோ கஷ்டங்கள்! உங்களுடையதை வேறு கேட்கணுமா?’ என்பதுபோல் மற்றவர் அசிரத்தை காட்டினால், வாயை இறுக மூடிக்கொள்வார்கள்.

    கதை

    “நீங்க இன்னிக்குப் பேசப்போறதா கேள்விப்பட்டேன். ஒங்களைப் பாக்கத்தான் வந்தேன்,” என்று ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    அப்போது சிற்றுண்டி நேரம். சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம்.

    மிகுந்த தயக்கத்துடன், இளமையில் தாம் `எப்படி எப்படியோ’ இருந்ததாகவும் அதனால் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

    “ஆண்கள் தமக்கு வரும் மனைவி யோக்கியமானவளாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுபோல்தானே பெண்களும் விரும்புவார்கள்? அதனால், `கெட்டுப்போன’ ஒரு பெண்ணையே மணக்க உறுதி பூண்டிருக்கிறேன்!” என்று கூறினார்.

    “அப்படி ஒரு பெண்ணை எப்படித் தேடுவது?” என்று அயர்ந்தவருக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும்.

    அவர் புண்ணியத்தால் எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.

    பல வருடங்களுக்குப்பின், அவரை ஒரு பெண்ணுடன் பார்த்தேன்.

    “கல்யாணம் ஆயிடுத்தா?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

    “இல்லே. ஆனா, ஆயிடுச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கேன்,” என்ற பதில் வர, நான் புன்னகைத்தேன்.

    நாம் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. அதுபோல்தானே மற்றவருக்கும் இருக்கும் என்று யோசித்தால் தானே சகிப்புத்தன்மை வளரும்.

    தம்மைவிட வித்தியாசமானவர்களைச் சிலரால் ஏற்க முடியாது.

    “இந்தியாவில் சாதி வித்தியாசம் நிறைய பார்ப்பார்களாமே, உண்மையா?” என் சக ஆசிரியைகள் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு கேட்டார்கள்.

    “எந்த நாட்டில் இந்தமாதிரியான குணம் கிடையாது? சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்று சவால் விட்டேன்.

    என் பதில் அவர்களை யோசிக்கவைத்தது.

    மலேசியா போன்ற நாடுகளில் இன வேறுபாடு, பிற நாடுகளில் மொழி, மதம் அல்லது நிறத்தால் உயர்வு-தாழ்வு என்கிற நிலை.

    மொத்தத்தில், மனிதனுக்கு அன்பு செலுத்துவதைவிட வெறுப்பது எளிதாக இருக்கிறது.

    கதை

    என் சக ஆசிரியை மலர் ஓயாது சீனர்களை `மஞ்சத்தோல்’ என்று பழிப்பாள். எல்லா மாணவர்களுக்கும் அவளைக் கண்டால் வெறுப்பு.

    “எங்கள் வகுப்பு மாணவர்கள் மலர் டீச்சரைப் படாதபாடு படுத்துவார்கள்!” என்று ஒரு மாணவி என்னிடம் கூறிச் சிரித்தபோது, நான் அலட்சியமாக, “அவள் racist! (இனவெறி பிடித்தவள்)” என்று தெரிவித்தேன். (அதே மாணவர்கள் என்னிடம் மிக மரியாதையாக நடந்துகொள்வார்கள்).

    மலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள். ஆனால், இந்தியனில்லை. நெற்றியில் குங்குமத்துடன் விபூதி, தன்னை பக்தி நிறைந்தவள் என்று காட்டிக்கொள்வதுபோல். எல்லாரும் தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று (இயலாத) ஒரு கருத்தைக் கொண்டவள்.

    மலரை `பக்திமான்’ என்று மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். ஏனெனில், “எவருக்குப் பிறர் அனுபவிக்கும் துன்பங்கள் புரிகிறதோ, அவரே ஆன்மிகவாதி!” என்ற கருத்து கொண்டவர் ஆயிற்றே!

    துணுக்கு

    பூவுலகில் தன் காலம் முடிந்தவுடன், நற்குணவானான ஒரு மனிதன் சொர்க்கத்திற்குப் போனான். அது காலியாக இருந்தது. வேறு பக்கத்திலிருப்பவர்கள் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருந்தார்கள். அங்கோ ஒரே கும்பல்.

    “என்னையும் அங்கே அனுப்பிவிடுங்கள்,” என்று இவன் கோரிக்கை விட, “நீ இருக்க வேண்டிய இடம் அதுவல்ல. அது நரகம். அங்கிருப்பவர்கள் எப்போதும் ஆத்திரம் கொண்டு, பிறரது துயரத்தால் மகிழ்ச்சியும் லாபமும் அடைந்தவர்கள்,” என்ற பதில் கிடைத்தது.

    ஆத்திரத்திற்கு எதிர்ப்பதம் என்ன தெரியுமா?

    அமைதி என்கிறீர்களா?

    இல்லை. அடுத்தவரைப் புரிந்துகொள்வது. அவரை நம் இதயத்தால் தொடுவது.

    பிறருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தோமானால், எவரையும் ஏற்க முடியும்.

    தன்னைத்தானே புரிந்துகொள்ள ஒருவருக்கு இதைவிடச் சிறந்த வழி கிடையாது.

    Share
  • கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

    கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்விதம்  கிடைத்தது என எடுத்துரைக்கிறார்.

    ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் – இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள், நெற்றிப் பொட்டு இட்டுக்கொண்டு வந்ததற்காகத் தமிழ்ப் பெண்களின் கன்னத்தில் அறைந்த கன்னியாஸ்திரீகள், திருமணம் ஆன ஒரே நாளில் நடந்த விவாகரத்து உள்ளிட்ட பலவற்றையும் விவரித்துள்ளார். அவருடைய கதை பிறந்த கதையை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 36

    பழகத் தெரிய வேணும் – 36

    நிர்மலா ராகவன்

    அச்சம் என்பது மடமைதான்

    ‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது.

    ஏன் இல்லாமல்?

    பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது.

    “அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி).

    எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை.

    அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

    எதற்குப் பயப்படலாம்?

    பயமே கூடாது என்றும் சொல்லிவிட முடியாது. `தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி.

    சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம்.

    உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், `வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, `உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை.

    இவர்களது இந்த `துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம்.

    ‘என்னமோ தொற்று நோயாம். பரவுகிறதாம். அதற்காக வீட்டிலேயே அடைந்து கிடக்க யாரால் முடியும்!’ என்ற அலுப்புடன் 286 பேர், இரவு விடுதிகளுக்குப் போய் உல்லாசமாக இருக்க முடிவு செய்தார்கள். சுயநலமாக நடந்ததால், தண்டனை.  அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால், அரசாங்கத்திற்கு லாபம்.

    குழந்தை மாதிரி

    ‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மை மாறாது இருக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள்.

    வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சி, அவர்கள் சொன்னபடி நடக்கலாம்.

    ஆனால், எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்?

    கதை

    எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள்.

    தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு.

    “இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள்.

    அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். ‘எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள்.

    எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக் கொடுத்தார்கள்.

    ஒருத்தி மட்டும் `நோ’ என்று பெரிதாக எழுதினாள்.

    எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?)

    “நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது.

    “ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டுகிறது அச்சம்,” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, `உன்னைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப் போனாளாம்.

    நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

    எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத் தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள்.

    சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. நம் கனவுகளை நனவாக்க நாம் மாறுவதைப் பொறுத்தே அது அமைகிறது. வீண் பயம், கனவுகளைத் தகர்த்துவிடும்.

    கதை

    அரசாங்கத்தின் ஓராண்டுக் கால மேற்பயிற்சி அது – விடுமுறைக் காலங்களுடன்.

    முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான போனஸ் பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

    அதன்படி நடந்து, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன்.

    ‘வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார்.

    நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி, நான் எல்லாம் முறையாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன்.

    உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி.

    பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார்.

    “உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார்.

    நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன்.

    “இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    “இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?”

    அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார்.

    ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார்.

    அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன்.

    அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது. நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்!

    என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக் கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, `தைரியம் என்ற குணம் ஏன் இவ்வளவு அரிதாகிவிட்டது?’ என்ற அலுப்புதான் ஏற்பட்டது.

    நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப் போகையில், “ஐயோ! எங்களுக்காகச் சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (உங்கள் சண்டைகளை நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன்.

    எதற்கெடுத்தாலும் சண்டை போடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையா?

    சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கக்கூடும். விரோதிகளும் பெருகுவர்.

    அதனால் என்ன? உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்குமே!

    Share
  • நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, கூடு விட்டுக் கூடு பாய்வது… என விரியும் தமது அனுபவங்களை இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார்.

    படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே பார்க்காத மாணவர், F.U.C.K. என்று ஆய்வுக்கூடத்தில் எழுதிய மாணவர், தெருவில் நின்று தங்கள் உடலை 50 காசுக்கு விற்ற மாணவியர், இந்த வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக என் அனுதாபங்கள் என்று சொன்ன மாணவர் எனப் பலரை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவரை வகுப்பில் மானிட்டராய் நியமித்தது, பட்டன் போடாத / ஜிப் போடாத மாணவர்களுக்கு ஊக்கு வாங்கிக் கொடுத்தது, ஒரு வகுப்பை ஒரே மாதத்தில் ஆங்கிலம் பேச வைத்தது, சீன மாணவியருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது… எனப் பல அனுபவங்கள் இதில் உண்டு.

    இந்த சுவாரசியமான நேர்காணலைப் பார்த்து மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 35

    பழகத் தெரிய வேணும் – 35

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி எங்கே?

    `சிலபேருக்குதான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறவர்கள் பலர்.
    வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.

    பிறரால்தான் மகிழ்ச்சியா?

    `உனக்கு எப்போது குழப்பமோ, வருத்தமோ ஏற்படும்?’ என்று என் சக ஆசிரியை ஃபாத்திமாவிடம் கேட்டேன்.

    “தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துவிட்டு, சிரிக்காமல் போனால் வருத்தமாக இருக்கும்,” என்றாள்.

    நம்மைக் கடந்து செல்பவர்கள் ஆழ்ந்த சிந்தனையிலோ, ஏதாவது குழப்பத்திலோ இருக்கலாம். இது புரியாது, அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற வருத்தம் எழுவது எதற்கு?

    நம் மகிழ்ச்சிக்குப் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் எழும்.

    செல்வத்தால் மகிழ்ச்சி?

    பெரும் செல்வந்தர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், சிலருக்கு அது ஒரு பொழுதுபோக்கு, வெறும் விளையாட்டு என்றே தோன்றுகிறது. பிறரை வெல்லவேண்டும் என்ற ஓயாத துடிப்பு வேறு.

    எத்தனை கோடிச் செல்வம் இருந்தாலும் பேராசை அடங்குவதில்லையே, பொருளீட்டுவதால் மகிழ்ச்சி எப்படிக் கிட்டும்?

    இலக்கு

    வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமானால் ஓர் இலக்கு அவசியம். அது பெரிதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. `நாளை என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொண்டு, உபயோகமான காரியம் எதையாவது யோசித்துவைத்தாலே போதும்.

    நமக்குப் பிடித்த காரியத்தைச் செய்யாது, பிறருக்காக விட்டுக்கொடுத்தால், நம் மகிழ்ச்சி பறிபோய்விடும்.

    பெண் எழுத்தாளர்களின் சங்கடம்

    பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு, `எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு,’ என்பதுபோல் எழுதினால், ஆண்களின் கண்டனத்துக்கு ஆளாகிறார்கள்.

    “நீங்க எழுதறமாதிரி, ஆண்களைக் குறை சொல்லலாமோ, கூடாதோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்,” என்று ஒரு பெண்மணி தயங்கியபடி என்னிடம் தெரிவித்தாள்.

    “தப்பு செய்யறதிலே ஆண் என்ன, பெண் என்ன? நான் ரெண்டு பேரைப்பத்தியும் எழுதறேனே!” என்றேன்.

    உண்மையாக நடந்த ஆண்களின் உரையாடல் (ஆங்கிலத்தில்):

    “நிர்மலா ராகவன்னு ஒரு காரக்டர். உங்களுக்குத் தெரியுமா?”

    “கேள்விப்பட்டதேயில்லை!” பதில் கூறியது என் கணவர்.

    “அவங்க எழுத்தைப் படிக்கும்போது கோபம் வருது. ஆனா, அதிலே உண்மை இருக்கு. அதனாலதான் எரிச்சலா இருக்கு”.

    இப்படியெல்லாம் விமரிசனத்துக்கு ஆளாகப் பயந்தே பல பெண்கள் தம் ஒவ்வொரு எழுத்தையும் தாமே தணிக்கை செய்துகொள்கிறார்கள். நிறைவு எப்படிக் கிட்டும்?

    “நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்காதே. எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்று புரிந்துகொள்,” என்று எழுத்தின்மூலம் என்னைக் கண்டித்தாள் விரிவுரையாளர், கொடீஜா (KODIJAH), ஒரு மேற்பயிற்சியின்போது.

    கற்பனைத்திறன் வளர, நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். `ஏன்?’ `எப்படி?’ என்ற கேள்விகளைக் கேட்டாகவேண்டும். அவளுக்கு அது தெரியவில்லை.

    அத்துடன், பிறர் எப்படி நடக்கவேண்டும் என்று குறை கூறிக்கொண்டிருப்பது வீண். நமக்கு நேரம் அதிகமில்லையே! நம் வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தால் போதாதா?

    கதை

    என் ஒரே மகனைச் சிறுவயதிலேயே பறிகொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். ஈராண்டுகள் கழிந்தபின்னரும் துக்கம் குறையவில்லை.

    எப்போதும்போல் ஏதாவது புதினத்தைப் படிக்கலாம் என்றால், அதில் `மரணம்’ என்று ஒரு வார்த்தை கண்ணில் பட்டால் போதும், கண்ணில் நீர் வழியும்.

    துக்கம் தொண்டையை அடைக்க, பாடவும் முடியவில்லை. வெறி பிடித்தவள்போல், காலால் தரையில் அழுந்தத் தட்ட, ஓரளவு சமாதானம் ஆகியது.

    என் பெற்றோரைப் பார்க்க மலேசியாவிலிருந்து இந்தியா சென்றபோது, முதலிலேயே நிச்சயித்துக்கொண்டேன், மீண்டும் நாட்டியம் பயிலவேண்டும் என்று.

    சிறு வயதிலேயே மூன்று ஆண்டுகள் முறையாகக் கற்றிருந்தாலும், வெளியில் ஆட என் தந்தை அனுமதிக்கவில்லை. (அந்தக் காலத்தில், ஆடத் தெரிந்தவர்களை சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். குடும்ப கௌரவம் என்ன ஆவது?).

    சாயந்திர வேளைகளில், என் பெற்றோர் காய்கறி வாங்க வெளியில் போவது வழக்கம். அப்போது, திருட்டுத்தனமாக ஆடி மகிழ்வேன்.

    மூச்சிறைக்க வந்து, நான் கதவைத் திறக்கும்போது, அம்மா சந்தேகத்துடன் பார்ப்பாள். “ஆடிண்டு இருந்தியா?”

    சிறு குழந்தைபோல், “இல்லியே!” என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். ஆனாலும், என் முகமலர்ச்சி காட்டிக்கொடுத்துவிடும்.

    பள்ளியில் ஆண்டுவிழாவில் ஆட என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்பாவுக்குத் தெரியாமல் ஒத்திகைக்குப் போனால், பிரச்னை வராது என்று நினைத்தோம்.

    விழா முடிந்து, வீடு திரும்பியபோது, “இன்னிக்கு என்ன, லிப் ஸ்டிக்?” என்று அப்பா கேட்டபோது, “சொல்லமாட்டேன், போ!” என்று சிரித்தேன். அப்பாவும் சிரித்தார். அவருக்கும் தெரிந்திருக்கிறது!

    ஆனால், 41 வயதில், `மீண்டும் ஆடக் கற்கப்போகிறேன்,’ என்று நான் அறிவித்தபோது, யாரும் தடை சொல்லவில்லை.

    பிடித்த காரியத்தில் மீண்டும் ஈடுபட்டதால், இழந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் திரும்பின.

    மணவாழ்க்கையால் கட்டுப்பாடு

    திருமணமானபின் கணவனும் புக்ககத்தினரும் எப்படி நடத்துவார்களோ, மகளின் மகிழ்ச்சி பறிபோய்விடுமோ என்று அஞ்சியே பல பெற்றோர் பெண்களைச் செல்லமாக வளர்ப்பார்கள்.

    கதை

    என்னுடன் கல்லூரியில் படித்த ரோகிணியின் திருமணத்திற்குப் போயிருந்தேன்.

    “ரோகிணியின் சிநேகிதி,” என்று அவள் தாய் மாமியாரிடம் அறிமுகப்படுத்தினாள்.

    அந்த அம்மாளோ, உதட்டைச் சுழித்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    வீடு திரும்பியதும், “ஏம்மா அப்படிப் பண்ணினா?” என்று என் தாயிடம் கேட்டேன்.

    மருமகள் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும், `சிநேகிதி’ என்று யாராவது அவளுடன் சேர்ந்துவிட்டால், அவள் பலம் பெற்றுவிடுவாளோ என்ற பயமாம்!

    அப்படிப்பட்ட சூழ்நிலையில், ரோகிணி பிறர் சொற்படிதான் நடக்கவேண்டியிருக்கும்.

    ஆக்ககரமான எண்ணங்கள் புத்துணர்ச்சி ஊட்டவல்லவை. ஆனால், அவைகளை நனவாக்க தகுந்த சூழ்நிலையும் அவசியம் அல்லவா?

    புத்திசாலியான ரோகிணியின் கண்களில் ஒளி மங்கிப்போக, `வாழ்க்கை ஏதோ நடக்கிறது,’ என்று சலித்தபடி இனி நாட்களை ஓட்ட வேண்டியிருக்குமோ என்ற பரிதாபம் எழுந்தது.

    பிறருடைய அறிவுரையை எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் தனியாக மூளை எதற்கு?

    நன்மை பிறருக்கு, மகிழ்ச்சி நமக்கு

    நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற்காக நம்மால் இயன்றதைச் செய்ய முயல்வோம். அதனால் நம் மகிழ்ச்சி இன்னும் கூடுகிறது.

    இறந்தபின், எனது உடலின் ஆறு பாகங்களைத் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்ததும், `இவை பிறருக்குச் சேர வேண்டியவை,’ என்ற பிரக்ஞை எழுந்தது. `இந்த உடலைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்,’ என்ற உறுதியும் ஏற்பட்டது.

    வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். துயரத்திலிருந்தும் கற்கலாமே!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 34

    பழகத் தெரிய வேணும் – 34

    நிர்மலா ராகவன்

    அடக்கம் — ஆணவம்

    ஆறு வயதான சிறுமியிடம், `உன் அக்காளிடம் பாடம் கற்றுக்கொள்,’ என்று சொன்னால், `அவ ரொம்பத்தான் காட்டிப்பா,’ என்ற சிணுங்கல் வரும்.

    ஓரிரு வயதே பெரியவளான அக்காளுக்குப் பெருமை, தனக்கு தங்கையைவிட அதிகம் தெரிந்திருக்கிறதே என்று. அவளை மட்டம்தட்டிப் பேசத் தோன்றும்.

    பெரியவர்கள் இப்படி நடந்தால், `அகம்பாவம்’ என்று முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்.

    தம்மீது நம்பிக்கை இல்லாததாலேயே அப்படி நடக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    `என்னைப்போல் யார்!’ என்று மார்பை உயர்த்திக்கொண்டு ஒருவன் நடந்தால், தன்னை யாராவது வீழ்த்திவிடுவார்களோ என்ற அச்சம் அவனுக்குள் இருக்கிறது என்று அனுமானிக்கலாம்.

    ஏதாவது துறையில் அவன் தன் திறமையைக்கொண்டு சாதித்திருக்கலாம்.

    அதற்கென்ன! அந்த சாதனையை வீழ்த்த வேறொருவர் வரமாட்டாரா, என்ன!

    `நான் சொல்வதுதான் சரி!’ என்று ஒருவன் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தால், பலர் அவன் பின்னால் நடப்பார்கள். எல்லாம், அவனைச் சார்ந்திருந்தால் ஏதாவது காரியம் நடக்குமே என்றுதான்! அவனுடைய கர்வமும் ஓங்குகிறது.

    இந்த கர்வத்திற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. மனிதனின் பிறவிக் குணம். அவ்வளவுதான்.

    “முட்டாள்தனத்திற்கு அடுத்து அபாயகரமானது ஆணவம்” என்கிறார் ஐன்ஸ்டீன்.

    தான்தான் உயர்ந்திருக்கிறோம் என்ற அகந்தை கொண்டவனுக்கு, `இன்னும் எப்படி முன்னேறலாம்?’ என்ற யோசனை கிடையாது. அதுவரை கிடைத்ததே போதும் என்று மெத்தனமாக இருப்பான்.

    கதை

    எப்போதும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் நடப்பான் லிங்கம். வெளிநாட்டிலிருந்து கலைக்குழுவினரை வரவழைப்பது அவன் தொழில்.

    அதிகப் படிப்போ, பணமோ அவனிடம் கிடையாது. எப்படியோ ஒரு பெரிய நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு, அவர்களுக்காகப் பெரிதும் உழைப்பதுபோல் `காட்டிக்’கொண்டான். எப்போதும் அங்கேயே உட்கார்ந்திருப்பான்.

    அங்குள்ள பிரமுகர்களுடன் – காலில் விழாத குறையாக — பழகி, எந்த விழாவாக இருந்தாலும் அதை நடத்திக்காட்டும் பொறுப்பை ஏற்றான்.

    கலைக்குழுவினரை மட்டமான இடங்களில் தங்கவைப்பது, பெரிய விருந்திற்குச் சுமாரான உணவை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் தில்லுமுல்லு செய்தால் சம்பாதிக்க முடியாதா, என்ன!

    `நான் இல்லாவிட்டால் இவர்கள் இப்படி நடத்திக்காட்டி இருக்க முடியுமா?’ என்ற பெருமிதம் ஏற்பட்டது.

    ஒரு நிகழ்ச்சியில், “என்ன தம்பி!” என்று அதிகாரி ஒருவர் குசலம் விசாரித்தது இரண்டு வரிசை பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கே கேட்டது. அவன் ஏன் பதிலளிக்கவில்லை என்று ஆச்சரியமாகப் பார்த்தேன். அலட்சியமாக இருந்தான்.

    சிறிது பொறுத்து, அப்போதுதான் அவரைக் கவனித்ததுபோல், “அட! ஹலோ, டத்தோ! ஹௌ ஆர் யூ?” என்றான், ஆரவாரமாக. (டத்தோ என்பது மலேசியாவில் மாமன்னரோ, மாநில சுல்தான்களில் ஒருவரோ அளிக்கும் பட்டம்).

    உயர்ந்த இடத்தில் பழகியதால் தானும் உயர்ந்தவன்தான் என்று நம்பிய முட்டாள் அவன்.

    “ஆணவம் விவேகத்தைக் குறைத்துவிடும்” (அரபு நாட்டுப் பழமொழி)

    அதிகாரியைக் கவனிக்காது விட்டது ஆணவம் — `நானும் நீங்களும் ஒரே தரத்தில்தான் இருக்கிறோம்,’ என்பதுபோல். இல்லாத தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொள்ளும் உபாயம் அது.

    அவனுடைய போக்கு அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஊட்ட, விரைவில் வீழ்ந்தான்.

    இத்தகையவர்கள் தெரிந்தவர்களுடன் மட்டுமே பழகுவார்கள். ஏனெனில், அவர்கள்தாமே ஏற்பார்கள்! அதிகம் தெரியாதவர்களுடன் விறைப்பாக நடப்பார்கள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களையும் ஆணவம் விட்டு வைப்பதில்லை.

    இவர்கள் தாம் செய்யும் தவற்றுக்குக்கூட `ஒழுக்கம்’ என்ற சாயத்தைப் பூசுவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ!

    கதை

    இரவு நேரம்.

    தலைமை அதிகாரியின் வீட்டில் ஒரு பார்ட்டி.

    தன் கையில் ஒரு கோப்பை மதுவுடன், அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் வந்து, “குடி!” என்று அவர் மிரட்டினார். `என்ன! நீ இன்னும் குடிக்க ஆரம்பிக்கலியா?’ என்ற கேலி வேறு, அவ்வப்போது.

    விருந்தினரில், `குடிப்பது நல்லொழுக்கம் இல்லை’ என்று நம்பியவர்கள் சிலர் இருந்தார்கள். இருந்தாலும், ஒழுக்கத்தைவிட மேலதிகாரியின் நல்லெண்ணமே பெரிது என்று பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

    மறுத்தால், அவர் செய்வது தவறு என்பதுபோல் ஆகிவிடாதா!

    ஒரு வேளை, இப்படி அதிகாரமாக, ஆணவத்துடன் நடப்பதால்தான் பெரிய மனிதராக ஆனாரோ என்று, அவரைப் பின்பற்றுகிறவர்களும் உண்டு.

    கதை

    அமீர் எங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அடக்கமான சிறுவன். படிப்பும் சுமாராக இருந்தது.

    அவனது பணிவால் கவரப்பட்டு, அவனை prefect (சட்டாம்பிள்ளை) ஆக்கினார் கட்டொழுங்கு ஆசிரியர்.

    பள்ளியில் எந்த மாணவன் தவறு செய்தாலும், அதைத் தட்டிக்கேட்கும் உரிமை அவனுக்குக் கிடைத்தபோது, அந்த ஆசிரியருக்கு அடுத்தபடி தான்தான் என்று நிச்சயித்துக்கொண்டான்.

    பிற ஆசிரியர்களை மதிப்பது அறவே நின்றுபோயிற்று. எதிர்த்துப் பேச ஆரம்பித்தான்.

    “உனக்கு ஏதோ பதவி கிடைத்துவிட்டதால், நீ ஆசிரியர்களைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டதாக எண்ணமா?” என்று நான் திட்ட, “சரியாகச் சொன்னீர்கள், டீச்சர்!” என்று மாணவிகள் ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் அவனுடைய புதிய போக்கால் எரிச்சல்.

    சில வாரங்களிலேயே பொறுக்கமுடியாது போக, என் சக ஆசிரியரிடம் புகார் செய்தேன்.

    “இவனுக்கெல்லாம்போய் பெரிய பதவி கொடுத்திருக்கிறீர்களே! அதைப் பிடுங்கினால்தான் இவன் வழிக்கு வருவான். படிப்பிலும் அக்கறை போய்விட்டது,” என்று எடுத்துச்சொன்னேன்.

    அவருக்கு அவமானமாகப் போய்விட்டது.

    அடுத்த முறை அமீர் என் வகுப்புக்கு வந்தபோது, பயந்தவனாகக் காணப்பட்டான். பதவி போய்விட்டால், தன் மதிப்பு குறைந்துவிடுமே என்ற பயம்.

    சில காலம் இந்த மாற்றம் நிலைக்கும்.

    இன்னொரு கதை

    மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் காலை, மத்தியானம் என்று இரு அமர்வுகள் உண்டு. காலையில் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள்.

    வயதில் சற்றுக் குறைந்தவர்களுக்கு மத்தியானப்பள்ளி.

    அதில் போதிக்கும் ஓர் சீன ஆசிரியை என்னிடம் வலிய வந்து, குழைந்து குழைந்து பேசுவாள். எனக்கோ அவள் பெயர்கூடத்தெரியாது.

    `இவள் ஏன் நம்மிடம் இவ்வளவு இழைகிறாள்?’ என்று என் யோசனை போயிற்று.

    நான் பெரிய வகுப்புகளில் போதித்த மூத்த ஆசிரியை. அவள் என்னைவிட வயதில் மூத்தவளாக இருந்தாலும், பட்டதாரி இல்லை. அதனால் வந்த அடக்கம்.

    பள்ளி அரசாங்கப் பரீட்சை ஒன்றில் அவளுடைய மகள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தாளாம். மகள் பெற்ற வெற்றியால் தானும் உயர்ந்துவிட்டதாக அவள் நினைத்திருக்க வேண்டும்.

    அதன்பின், `நான் உன்னைவிட உயர்த்தி!’ என்று மார்தட்டிக்கொள்வதுபோல் என்னிடம் மரியாதைக்குறைவாகப் பேசினாள்.

    இவளைப்போன்ற பலருக்கு, மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்திருக்க வேண்டும்.

    உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் இணைந்து பழகினால் தாமும் உயர்ந்துவிட்டதாகப் பிறர் எண்ணுவார்களே என்ற நப்பாசை.

    அல்லது, பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டு, தாழ்வாக இருக்கிறோமோ என்ற மனக்கலக்கம்.

    அவ்வப்போது அசடு வழி

    `நான் இருக்கிறபடி இருந்துவிட்டுப்போகிறேன். பிறருடன் என்னை ஒப்பிட்டுக் கொண்டிருப்பானேன்!’ என்ற விவேகம் இருந்தால்தான் நிம்மதி கிடைக்கும்.

    எந்த சூழ்நிலையிலும், `பிறர் நம்மைப்பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ!’ என்ற பயத்துடன் நடக்க வேண்டியதில்லை.

    அவ்வப்போது அசட்டுத்தனமாக நடந்தால், நமக்கே நாம் உற்சாகமூட்டிக்கொள்ள முடியும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 33

    பழகத் தெரிய வேணும் – 33

    நிர்மலா ராகவன்

    முடியும் என்ற நம்பிக்கை வேண்டாமா?

    ஒவ்வொரு பள்ளியிலும் என்னிடம் ஏதாவது கோரிக்கை விடுக்க தமிழ்ப்பெண்களை அனுப்பிவிட்டு, நான் என்ன பதிலளிக்கப்போகிறேன் என்று சீன மாணவிகள் ஆவலுடன் கவனிப்பார்கள்.

    அந்த வருடமும், பள்ளி இறுதியாண்டிற்கு நான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தபோது, இருவர் என் மேசைக்கு அருகில் வந்தார்கள்.

    “டீச்சர்! இறுதிப் பரீட்சைக்கு எதுவரை படிக்கவேண்டும்?” என்று தெரியாதவள்போல் பத்மா கேட்டாள். அவளுக்குத் துணையாக இன்னொருத்தி.

    ‘ஏற்கெனவே தெரிவித்திருந்தேனே! இது என்ன கேள்வி!’ என்ற தொனியில், அலட்சியமாகக் கூறினேன்: “இரு வருடப் பாடங்களையும்தான்!”

    அவள் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, “ரொம்ப கஷ்டம், டீச்சர்,” என்றாள்.

    ‘ஓகோ! பேரம் பேச உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார்களா?’

    “You want it easy, go to standard one! (உனக்கு எளிதாக வேண்டுமானால், முதல் வகுப்பிற்குப் போ!”) என்றேன், சூடாக.

    அவள் அதிர, “நான் மொதல்லேயே சொல்லலே?” என்று மற்றவள் முணுமுணுத்தபடி போனாள்.

    அரசாங்க முழுப்பரீட்சைக்கு மூன்றே மாதங்கள்தான் இருந்தன. அதற்கு முதலிலேயே தயார்ப்படுத்த எண்ணினேன். அது அவர்களுக்குப் புரியவில்லை.

    ‘பெரியதாக ஒன்றை ஆரம்பித்து, எப்படி முடிக்கப்போகிறோம்!’ என்ற மலைப்பு எவருக்கும் எழுவதுதான்.

    பிரச்னைகளிலிருந்து ஓடி ஒளிந்தாற்போல் அவை மறைந்துவிடுமா?

    ‘கடினம்!’ என்று பயந்து விலகுபவர்கள் சாதிக்க முடியாது. எல்லாவித தடங்கல்களையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள்.

    கதை

    எனக்கு அப்போது பதின்ம வயது. நிறைய எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, பத்திரிகைகளில் எந்த சிறு போட்டி அறிவித்திருந்தாலும், “நானும் பதில் எழுதட்டுமா?” என்று ஓயாது கேட்பேன்.

    “இவள் ஒருத்தி, சரியான போர்!” என்று என் ஆசைக்கு தடை விதிக்கப்பட்டது. (நான் பாட்டி வீட்டில் சில காலம் தங்கியிருந்தபோது, சித்தி சொன்னது).

    உருப்படியான எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. எதையுமே பல முறை செய்துபார்த்தால்தான் வெற்றி கிடைக்கிறது.

    முயற்சி செய்யாவிட்டால் வெற்றி எப்படிக் கிடைக்கும்?

    என்னிடம் ஒரு நல்ல குணம்: யார் சொல்வதையும் கேட்க மாட்டேன். (சிரிக்காதீர்கள்). எனக்குச் சரியென்று பட்டதை செய்தே தீருவேன். `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கை (அல்லது அசட்டுத் தைரியம்) எனக்கு இருந்தது. பிறரது ஆமோதிப்பு எதற்கு?

    ஒரு காரியம் நமக்குப் பிடித்ததாக இருந்தால், அரைகுறையாக விட்டுவிடத் தோன்றாது. அப்போது கண்டிப்பாகத் தவறுகளும் நிகழும்.

    ‘எதற்கு இந்த வீண்வேலை! என்ற கசப்போ, எடுத்த காரியத்தில் அசிரத்தையோ ஏற்படாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    சில வருடங்களிலேயே, தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பத்திரிகையில் என் முதல் கதை வெளியாகியது.

    “உருப்படியா ஏதாவது செய்யேன்! சரியான வேண்டாத வேலை! இதுவா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?” என்று பலமுறை கெஞ்சியிருந்த அம்மா அகமகிழ்ந்துபோனாள்.

    “எனக்கு அப்போதே தெரியும். உனக்கிருந்த ஆர்வத்துக்கு..!” என்ற பாராட்டு கிடைத்தது பலரிடமிருந்து.

    பணமா பிரதானம்?

    பணம்தான் பிரதானம் என்று ஒவ்வொரு காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு, `ஏன் நாம் மகிழ்ச்சியாகவே இல்லை?” என்ற வருத்தம் வருகிறது.

    விடுமுறை நாட்களிலாவது தமக்குப் பிடித்த காரியங்களை தனியாகவோ, குடும்பத்துடனோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டோ, செய்யலாமே! கலை, விளையாட்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் சுற்றுவது என்று எத்தனை இருக்கின்றன!

    ஈடுபாட்டுடன் பொழுதைக் கழித்தால் இன்னொரு சலிப்பான வார நாட்களை  எதிர்கொள்ளும் உற்சாகம் பெருகும்.

    ஆனால், ஒவ்வொரு விடுமுறை நாளையும் ஒரேமாதிரி செலவிட்டால், அதுவும் விரைவில் அலுப்பு தட்டிவிடும்.

    அலுப்பு சலிப்பெல்லாம் செய்யும் காரியங்களில் மட்டுமல்ல. உறவுகளிலும் இதே பிரச்னைதான்.

    உறவுகளில் சலிப்பு

    “எங்களுடையது காதல் திருமணம்தான். இரண்டு வருடங்கள் பெருமகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப்பின் — உவ்வே!” என்று என்னிடம் தெரிவித்தாள் ஒரு ஆங்கிலப் பெண்.

    அவளுடைய தோழிகளிடம் கணவர் மரியாதையாகப் பழகினார். நல்லவர் என்றுதான் எனக்குப் பட்டது.

    இருந்தாலும், நெருங்கியே இருந்தால் சலிப்புதான் ஏற்படும்.

    இப்போது ஐந்து வருடங்கள் கணவருடன் ஒன்றாகவே கழித்த சாதனா சொல்வதைக் கேளுங்கள்:

    “நாங்களிருவரும் சேர்ந்து இருந்தபோது, உற்சாகம் வடிந்ததுபோல் இருந்தது,” என்று ஆரம்பித்தவள், “ஆனால் சண்டை எதுவும் கிடையாது,” என்று சேர்த்துக்கொண்டாள்.

    காதலித்து மணந்தவர்கள். அவளை நன்றாகவே புரிந்துகொண்டிருந்த கணவர் விட்டுக்கொடுத்துவிடுவார். அதனால் சண்டைக்கே இடமில்லை.

    “இப்போது வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். மாதம் ஒருமுறைதான் சந்தித்துக்கொள்ள முடிகிறது. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மேலும் பகிர்ந்துகொண்டாள் சாதனா.

    (‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று நான் அவளைக் கேட்கவேயில்லை).

    கதை

    `நான் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்!’ என்று உறுதியாக இருந்தான் தம்பிராஜா. அப்படியே செய்தும் காட்டினான்.

    ஓரிரு ஆண்டுகள் இனிமையாகக் கடந்தன. அதற்குப்பின், அலுவலகம், மனைவி, குழந்தைகள் என்று இயந்திர கதியில் வாழ்க்கையைக் கடக்க, அலுப்புத் தட்டியது.

    ‘மனதுக்கு உற்சாகம் அளிக்கும்’ என்று நண்பர்கள் ஆசைகாட்ட, சூதாட்டத்தில் இறங்கினான்.

    எந்த மனைவி பொறுப்பாள்?

    அவள் சண்டை பிடிக்க, இவன் இன்னும் விலகிப்போனான்.

    ‘எனக்கும் என் கணவருக்கும் சண்டை, பூசலே வந்தது கிடையாது,’ என்று ஒரு பெண் சொன்னால், அதை நம்புவதற்கில்லை. அல்லது, அவர்கள் உறவு உப்பு சப்பின்றி இருக்கும்.

    நிச்சயிக்கப்பட்ட கல்யாணமோ, காதல் மணமோ, அதன் வாழ்க்கை ஈராண்டுகள்தான்.

    அதன் பின்னரும் அந்த உறவு குலையாமலிருக்க முயற்சிகள் செய்தால்தான் முடியும். மனைவி அலுத்துவிட்டாளென்று இன்னொரு பெண்ணைத் தேடிப்போகிறவனுக்கு அந்த இன்னொருத்தியும் விரைவில் அலுத்துவிட மாட்டாளா?

    எல்லா உறவுகளிலும் இம்மாதிரி சண்டை சச்சரவு உண்டு. காரணங்கள்தான் மாறுபடும்.

    “விரிந்த உறவை ஒட்டுவதைப்பற்றி உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறீர்களா?

    நானும் என் கணவரும் போடாத சண்டையா!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 32

    பழகத் தெரிய வேணும் – 32

    நிர்மலா ராகவன்

    என் செல்லமே!

    “குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கலாமா, மாமி?” ஓர் இளம் தாய் என் அம்மாவைக் கேட்டாள்.

    பதில்: “படிப்பிலே மட்டும் கூடாது”.

    எது எதற்கோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சரியான முறையில் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    ஒரு குழந்தையைப்போல் இன்னொன்றை நடத்தமுடியாது. இது இன்னொரு குழப்பம்.

    அன்பைக் கொட்டி வளர்க்கப்படும் குழந்தை நல்லவனாக வளர்வான் என்றால், எத்தனை அன்பு என்ற கேள்வி எழுகிறது.

    சில குடும்பங்களில் மூத்த குழந்தை செல்லமாக வளரும். ஒரு தலைமுறைக்கு முன்புதான் வீட்டில் குழந்தை தவழ்ந்திருக்கும். அதனால், இது வரவேற்கத்தக்க அனுபவமாகிவிடுகிறது.

    “என் மூத்த பிள்ளைக்குப் பத்து விரல்களிலும் தங்க மோதிரம் போட்டு அருமையாக வளர்த்தேம்மா. இப்படிக் கெட்டுவிட்டானே!” என்று ஒரு முதியவர் என்னிடம் சொல்லிப் புலம்பினார்.

    “அதனால்தான்!” என்றேன், அசுவாரசியமாக.

    சிறு வயதிலிருந்தே அந்தப் பையன் என்ன செய்தாலும் யாரும் கண்டிக்கவில்லை. அத்துடன், அவன் கேட்டபோதெல்லாம் பணம் கிடைத்தது. அதனால், மனம் போனபடி வளர்ந்து, பதின்ம வயது முடிவதற்குள் எல்லாவித தீய பழக்கங்களும் வந்தடைந்தன.

    ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று சொல்லிவைத்திருப்பது அமுதத்திற்கு மட்டுமல்ல.

    ஆனால், குழந்தைகளே அப்படிக் கவனிக்கப்பட்டால்தான் பிறருக்குத் தன்மேல் அன்பு என்று தவறாக நினைப்பார்கள். கண்டிக்கும் உறவினர்கள் வேண்டாதவர்கள் ஆகிவிடுவார்கள்.

    அவர்களுக்குத்தான் அறியாமை என்றால், பெரியவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?

    கதை

    சிறு வயதில் காரமாக ஏதாவது சாப்பிடுகையில், குடிக்க நீர் வேண்டுமென்று அலறுவேன்.

    ஓரிரு முறை அம்மா கொண்டுவந்து கொடுத்தாள். அதன்பின், “முதலிலேயே எடுத்து வைச்சுக்கறதுக்கென்ன?” என்றுவிட்டாள்.

    எங்கள் குடும்ப வழக்கப்படி, பாதி சாப்பிடும்போது கண்டிப்பாக எழுந்திருக்கக் கூடாது. ஒவ்வொருமுறையும் எனக்கும் முன்னேற்பாடாக குடிநீர் எடுத்து வைத்துக்கொள்ளவும் தோன்றாது.

    இப்படியே பலமுறை ஆனபிறகு, நான் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்.

    அம்மா காட்டியது ஆக்ககரமான கட்டொழுங்கு. மறைமுகமாக, `எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிக்கொண்டு இருக்காதே!’ என்று போதித்திருக்கிறாள்.

    வேறு சிலர் தாம் வளர்க்கும் குழந்தைகள் எந்த ஒன்றிற்கும் தம்மை எதிர்பார்ப்பது பெருமைக்குரிய விஷயம் என்று நினைக்கிறார்கள், அது எங்கு கொண்டுவிடும் என்று உணராது.

    கதை

    “ஒரு வயசிலிருந்தே பாபு  எங்கிட்டதான் இருக்கான். அவன் அம்மா இங்கே வந்திருந்தபோது, அவகூட போகமாட்டேன்னு என்னைக் கெட்டியாப் பிடிச்சுண்டான்,” என்று பெருமை பேசுவாள் பாட்டி.

    அந்த வயதுக் குழந்தைக்கு அவ்வளவெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

    பாபுவின் தாய் அகாலமாக இறந்தது பாட்டிக்கு சௌகரியமாகப் போயிற்று. தனக்குத் தோன்றியபடி வளர்த்தாள். அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.

    என்ன தவறு செய்தாலும், `குழந்தைதானே!’ என்ற மன்னிப்பு கிடைத்துவிடும். அதுவே அசட்டுத்துணிச்சலுக்கு வழிகோலியது.

    அரை மணிக்கு ஒருமுறை கேட்டு, காப்பி குடித்தான். ஆனால், சுறுசுறுப்பு கிடையாது. அவனுடன் சோம்பலும் வளர்ந்தது. சற்றே பெரியவனாக ஆனதும், அவனால் செய்யக்கூடிய எளிய வேலைகளைக்கூட பாட்டிதான் செய்யவேண்டும்.

    “கெஞ்சறான். பாவமா இருக்கு!” என்பாள் பாட்டி.

    தான் பார்ப்பவர்கள் எல்லாரும் தன்னை அப்படி நடத்தமாட்டார்கள் என்று புரிந்தபோது, பாபுவிற்குத் தன்னிரக்கம் மிகுந்தது.

    ‘ஏனோ என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுவான்.

    ‘செல்லமான வளர்ப்பு’ என்ற பெயரில் தன்னைப் பிறரது ஏளனத்திற்கு ஆளாகும்படிச் செய்த பாட்டியின்மேல் வெறுப்புதான் எழுந்தது.

    தான் எங்கு தவறிழைத்தோம் என்று அந்த பாட்டிக்குப் புரியவில்லை. `எவ்வளவு அருமையா வளர்த்தேன்!’ என்று புலம்பினாள்.

    பாபுவைப்போல் வளர்க்கப்படும் குழந்தைகளால் சிறிய மனப்பளுவைக்கூடத் தாங்கமுடியாமல் போய்விடும். எப்போதும் யாரையாவது சார்ந்து இருந்தால்தான் தைரியமாக உணர்வார்கள். இதனாலேயே நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

    எவருக்கும் சில சமயங்களில் பிறரை நாட வேண்டியிருக்கும். அதற்காக, எப்போதும் பிறரை நாடுவது ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    கதை

    ஆயிஷா எங்கள் பக்கத்து வீட்டுப்பெண். ஆறு அண்ணன்மார்களுக்குப்பிறகு பிறந்த குழந்தை. தன்னைக் கொஞ்சிய தந்தையிடம் அவளும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்.

    மூத்தவர்கள் உள்பட, குடும்பத்தில் அனைவரும் அவளைத் தாங்கினார்கள். மகாராணிபோலவே நடந்துகொண்டாள். ஒரு அண்ணனை மரியாதையின்றி பேசுவதையும், அவன் பொறுத்துப்போவதையும் பார்த்திருக்கிறேன்.

    பிடிவாதம், சோம்பல் என்று பல வேண்டாத குணங்கள் வந்தபோதும், யாருக்கும் அவளை தரக்குறைவாக நினைக்கத் தோன்றவில்லை.

    ஆண்களிடம் எப்படிக் குழைந்து நடப்பது என்று புரிந்திருந்ததால் அப்பாவி ஒருவனை மயக்குவது ஆயிஷாவுக்குக்  கடினமாக இருக்கவில்லை.

    ‘பாவம்!’ என்று நாங்கள் அவனுக்காகப் பரிதாபப்பட்டோம்!

    ‘நான் உனக்காக எதுவும் செய்யமாட்டேன். எப்போதும் நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்,’ என்று தம்பதியரில் ஒருவர் மட்டும் அதிகாரமாக நடந்தால், தாம்பத்தியம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்?

    கதை

    இடம்: பள்ளிக்கூட ஆசிரியர்களின் அறை.

    வம்புக்கான நேரம். (பெண்கள் பொது அறிவு பெறுதல், ஒருவருடன் ஒருவர் பழகக் கற்பது என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)

    பிரசவமானதும் பத்தியச் சாப்பாடு, உடல் நோவு, ஓய்வே இல்லாமல் சிசுவைக் கவனிக்க வேண்டியிருப்பது என்று நாங்கள் எதிர்மறையாகவே அடுக்கியபோது, மிஸஸ் சிங் மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்தாள்:

    “பிள்ளை பெற்றபிறகு எல்லாரும் என்னை மிகுந்த கரிசனத்துடன் நடத்துவார்கள். எனக்குப் பிடித்த விஷயம் அது!” என்று அவள் கூற, உடன் இருந்தவர்கள் எல்லாரும் சிரித்தோம்.

    சிறு வயதிலேயே தாயை இழந்தவள் அவள். தந்தை மறுமணம் செய்துகொண்டு, அவளை ஏதோ காப்பகத்தில் விட்டுவிட்டார். மாதாமாதம் பணம் கட்டுவதோடு அவருடைய பொறுப்பு முடிந்தது என்று எண்ணியிருந்திருப்பார்.

    அவள் வளர்ந்தபோது, அத்தியாவசியத் தேவைகள் கிடைத்தன. ஆனால், அன்புடன் கவனிக்க ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்திருக்கிறது.

    கரிசனமான கணவன்

    அன்பான கணவன் — அவ்வப்போது

    மனைவியின் உடல்நலம் கெட்டிருக்கும்போது அவள்மீது பரிவு காட்டி, `ஐயோ! உனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் கதி!’ என்று கணவன் கலங்குவது அவளுக்குப் பெருமையை அளிக்கலாம்.

    ஆனால், பிற சமயங்களில் அதிகாரமாக, இல்லை, அலட்சியமாக நடத்தும் அவன் அப்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால், அவள் நிரந்தர நோயாளியாகிவிடும் அபாயமும் உண்டு.

    பணமே பலம்

    ‘குழந்தைக்காகச் செலவிட நேரம் கிடைக்கவில்லை,’ என்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கொள்ள பணத்தால் ஈடு செய்கிறார்கள் பல பெற்றோர்.

    இதனால் குழந்தை புரிந்துகொள்வது: என்ன தவறு செய்தாலும் பணத்தால் ஈடுகட்டிவிடலாம்.

    தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதோ அவனுக்காகச் செலவழிப்பதோ அன்பில்லை. அது நம் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வழி.

    அன்புடன் கண்டிப்பும் சேர்ந்திருந்தால்தான் ஒரு குழந்தை சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இல்லாது, பிறர் மதிக்க வளரும்.

    ‘என் குழந்தை ஒரு நாள் பெரியவனாக ஆவான். அப்போது, அவனுக்கு இந்தக் குணங்கள் வேண்டியிருக்கும்’ என்று சற்றே யோசித்தால், நல்ல பழக்கங்களை விதைக்கமுடியுமே!

    அப்படி வளர்த்தவர்களை அவன் என்றும் மறக்கமாட்டான். நன்றியுடன் நினைவுகூர்வான்.

    Share