Tag: எம்.ஜெயராமசர்மா

  • மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கியமானது என்பதை நாங்கள் அனைவரும் மனத்தில் இருத்துவது மிகவும் அவசிய மானதே.

    புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாறலாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடு, கலாசாரம், இவற்றினை உணர்த்துபவையே எங்களின் விழாக்களும் கொண்டாட்டங்களும். பண்பாட்டினை நிலைநிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் “தைப்பொங்கல்” எனலாம். 

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? இவையெல்லாம் புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற எங்கள் பிள்ளைகளுக்குச் சரிவரத் தெரியாது. நாங்களும் அதைப்பற்றி விளக்கிச் சொல்லுவதும் கிடையாது. பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும்.

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளபடுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதை எங்கள் பிள்ளைகளின் மனதில் இருத்துவதும் முக்கியமான பொறுப்பாகும். இவையாவும் தைப்பொங்கலுடன் இணைகின்றன என்பதுதான் இங்கு சுட்டப்பட வேண்டிய அவசியமான அம்சம் எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தைச் செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா என்பதை நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

    நகரத்தில், புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படும் விவசாயமோ, அதன் முறைகளோ, அங்கு விலங்குகள் விவசாயத்துக்கு உதவும் விதமோ, விவசாயத்துக்குப் பயன் படுத்தப்படும் ஏர் போன்ற கருவிகளோ தெரிவதற்கு உரிய வாய்ப்பு இல்லைதான். அவர்களுக்கு அவற்றினைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கும் பொழுதுதான் தைப்பொங்கலின் போது செய்யப்படும் மரபார்ந்த விஷயங்களை அவர்களின் மனத்தில் பதியச் செய்யக் கூடியதாக இருக்கும்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து, குடும்பத்தில் உள்ளவர்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாதது.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவை தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை என்பதை எங்களின் பிள்ளைகளை உணரச் செய்யவேண்டும்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக்கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்கலகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணிப் பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்துப் பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம், பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனத்தைத் தூய்மை ஆக்கி, புத்தாடை உடுத்து, புதுப்பொங்கலைச் சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை, ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப் பொங்கல், போகித் திருநாள், காணும் பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ,  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி, தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    உழைப்பினை மையமாக்கி, தொழிலினை மையமாக்கி, அந்தஸ்தினை மையமாக்கி அன்னிய நாட்டினில் வாழும் எங்கள் தமிழர்களின் தைப்பொங்கல் சற்று சறுக்கிய தைப்பொங்கலாகவே அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சொந்த ஊரினில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும்  குடியேறிய அன்னிய நாட்டில் தைப்பொங்கல்  கொண்டாடுவதற்கும் வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதில் தமிழர்கள் பின்னிற்கவில்லை என நினைக்கையில் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறிஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச் சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய் தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!

    நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !

    Share
  • பலவடிவில் கூட்டம் !

    பலவடிவில் கூட்டம் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியுதொரு கூட்டம்
    பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்

    வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்
    வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்

    தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்
    தள்ளாடும் முதுமைதனைத் தவிர்க்குமொரு கூட்டம்

    நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்
    நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கு கூட்டம் !

    கடவுளில்லை என்றுரைத்துக் கட்சிகூட்டும் கூட்டம்
    கடமை செய்வார் கழுத்தறுக்கக் காத்திருக்கும் கூட்டம்

    தனியுடமை என்றுரைத்துத் தான்பிடுங்கும் கூட்டம்
    சகலமுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்

    தத்துவத்தைச் சமயத்தைச் சாடிநிற்கும் கூட்டம்
    சன்மார்க்க நெறிமுறையைத் தகர்த்துநிற்கும் கூட்டம்

    உத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்
    உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் !

    Share
  • சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

    சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    கந்தனை நினைத்தால் நெஞ்சில்
    கவலைகள் பறந்தே போகும்
    வந்திடும் வினைகள் யாவும்
    வழியிலே மறைந்தே போகும்
    அந்தமில் இன்பம் வந்து
    ஆனந்தம் தந்தே நிற்கும்
    கந்தவேள் பாதம் தன்னை
    கட்டியே அணைத்து நிற்போம் !

    சூரர்கள் போல எம்மை
    சூழ்ந்திடும் பகைமை எல்லாம்
    வேலவன் பெயரைக் கேட்டால்
    விரைவிலே ஒழிந்து போகும்
    வாழ்விலே வசந்தம் வீச
    வள்ளி மணாளன் தன்னை
    நாளெலாம் தொழுது நிற்போம்
    நம்வாழ்வு உய்யும் அன்றோ!

    சேவலாய் மயிலும் ஆக்கி
    சிந்தையை திருத்த வைத்த
    வேலவன் முகத்தைக் கண்டால்
    விரைவிலே திருத்தம் காண்போம்
    காலனும் நாட மாட்டான்
    கடுநோயும் அணுக மாட்டா
    சீலமாம் கந்தன் பாதம்
    சிக்கெனப் பிடிப்போம் வாரீர்!

    Share
  • சூறையாடி விட்டார்கள் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும்
    இதயத்தின் குமுறல்

    ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
    நாடெல்லாம் நன்மைபெற நல்ல்லுளங்கள் விரும்பியதால்
    ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே
    வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

    எத்தனைபேர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்,
    எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே!
    நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை
    எத்தனையோ சந்ததிகட் கிருக்கின்ற பொக்கிஷமாம்

    நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
    நூல்நிலையம் அருகிருந்தால் கண்டிடலாம் அறிவையெலாம்
    பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
    நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

    யாழ்ப்பாண நூலகம்தான் யாருக்கும் மறக்காது!
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
    சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தவிடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றவிடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்

    கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தை
    கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொழுத்தியே விட்டார்கள்
    தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
    ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே

    நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறை பணிந்தாலும்
    தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா
    எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா
    அரக்ககுணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா!

    Share
  • அனைவருமே ஆசை கொள்வோம்!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
    பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
    இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
    ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்!

    மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
    மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
    உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
    உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார்!

    நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார்
    பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
    ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
    அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்!

    எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும்
    எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
    ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
    அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம்!

    Share
  • காதல் எனும் கனியமுது !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    இளமையிலும் காதல் வரும்
    முதுமையிலும் காதல் வரும்
    எக்காதல் இனிமை என்று
    எல்லோரும் எண்ணி நிற்பர்
    இளமையிலே வரும் காதல்
    முதுமையிலும் தொடர்ந்துவரின்
    இனிமைநிறை காதலென
    எல்லோரும் மனதில் வைப்போம்

    காதலுக்குக் கண்ணும் இல்லை
    காதலுக்குப் பேதம் இல்லை
    காதல் என்னும் உணர்வுதனைக்
    கடவுள் தந்தார் பரிசெனவே!
    காதலிலே மோதல் வரும்
    காதலிலே பிரிவும் வரும்
    என்றாலும் காதல் எனில்
    எல்லோரும் விரும்பி நிற்பார்!

    காதல் என்று சொன்னவுடன்
    கவலை எல்லாம் ஓடிவிடும்
    கனவுபல தோன்றி வந்து
    கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
    கற்பனையில் உலா வந்து
    களிப்புடனே நாம் இருப்போம்
    காதல் என்னும் உணர்வில்லார்
    கல்லினுக்கே சமம் ஆவார்

    காவியத்தில் காதல் வரும்
    ஓவியத்தில் காதல் வரும்
    கல்வியிலும் காதல் வரும்
    காசினிலும் காதல் வரும்
    அக்காதல் கொள்ள மனம்
    ஆசை பட்டு நின்றாலும்
    அழகு மங்கை தரும்காதல்
    அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ

    மனித குலம் முழுவதற்கும்
    மகிழ்வு எனும் மருந்தாக
    வரமாகக் காதல் அது
    வந்து அமைந்து இருக்கிறது
    புவிமீது நாம் வாழப்
    பொலிவு தரும் அமிர்தமென
    காதல் எனும் கனியமுதைக்
    கடவுள் எமக்களித்துள்ளார்!

    Share
  • நன்றாகப் பொங்கிடுவோம்

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    மனங்கவரும் மார்கழியில்
    மகத்தான நாட்கள்வரும்
    இந்துக்கள் கிறீத்தவர்கள்
    எல்லோரும் பங்குகொள்வர்
    வைஷ்ணவமும் சைவமும்
    வாழ்த்திநிற்கும் திருவெம்பா
    மார்கழியின் முக்கியமாய்
    மனமாசை அகற்றிநிற்கும் !

    ஒளிவிழா எனும்பெயரால்
    உத்தமராம் யேசுபிரான்
    வழிநிற்போர் அனைவருமே
    வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
    பீடுடைய மாதமாய்
    மார்கழியும் அமைந்துதுநின்று
    பெருமகிழ்சி வருவதற்கு
    தைதனக்கு வழிகொடுக்கும் !

    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்கின்ற நம்பிக்கை
    தளர்வுநிலை அகன்றுவிட
    தானுரமாய் அமைந்திருக்கு
    பொங்கலென்னும் மங்கலத்தை
    பொறுப்புடனே தருகின்ற
    எங்கள்தையை எல்லோரும்
    இன்பமுடன் வரவேற்போம் !

    புலம்பெயர்ந்த நாட்டினிலும்
    பொங்கலுக்குப் பஞ்சமில்லை
    நிலம்பெயர்ந்து வந்தாலும்
    நீங்கவில்லை பண்பாடு
    நலந்திகழ வேண்டுமென்று
    யாவருமே நினைத்தபடி
    உளம்மகிழப் பொங்கலிட்டு
    உவகையுடன் இருந்திடுவோம் !

    வாசலிலே தோரணங்கள்
    வடிவாகக் கட்டிடுவோம்
    வண்ணப் பொடிகொண்டு
    கோலங்கள் போட்டிடுவோம்
    எண்ணமெலாம் இறைநினைவாய்
    எல்லோரும் இருந்திடுவோம்
    எங்கள்வாழ்வு விடிவுபெற
    இணைந்து நின்றுபொங்கிடுவோம் !

    நிலமெங்கும் சமாதானம்
    நிலைக்கவென்று பொங்கிடுவோம்
    வளம்கொளிக்க வேண்டுமென்று
    வாழ்த்திநின்று பொங்கிடுவோம்
    இளம்மனசில் இறையெண்ணம்
    எழுகவென்று பொங்கிடுவோம்
    எல்லோர்க்கும் நல்வாழ்வு
    இருக்கவென்று பொங்கிடுவோம்

    குறையெல்லாம் அகன்றுவிட
    கூடிநின்று பொங்கிடுவோம்
    மறைவாகப் பேசிவிடும்
    மனமகலப் பொங்கிடுவோம்
    திறமுடனே தமிழரெலாம்
    தலைநிமிரப் பொங்கிடுவோம்
    சீர்சிறப்பு வரவேண்டி
    சிரித்தபடி பொங்கிடுவோம்

    ஆரோக்கியம் ஆனந்தம்
    அனைவருக்கும் வரவெண்ணி
    ஆண்டவனை மனமிருத்தி
    ஆவலுடன் பொங்கிடுவோம்
    வேண்டுகின்ற அத்தனையும்
    விரைவாகக் கிடைத்துவிட
    நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
    நன்றாகப் பொங்கிடுவோம் !

    Share
  • திருத்திடு கந்தப் பெருமானே !

     

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    மனம் உருகும் அடியார்கள்
    தினமும் உனைக் காண
    மரகத மயிலேறும் பெருமானே
    அரு உருவமாய் இருந்து
    திரு உருவமாய் வந்த
    அழகு வடிவேலப் பெருமானே
    கருவிலே வளரும் பிள்ளை
    உனது நினைவிலே வளர கருணையே தருவாய் கந்தபெருமானே
    தெரு எலாம் திரியும்
    சிறு மதி படைத்தோரை
    திருத்திடு கந்தப் பெருமானே !

    Share
  • இன்னருளைச் சொரிந்துவிடு

     

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    பழனி மலை மீதமர்ந்தாய்
    பாவம் தனைப் போக்கிவிடு
    உளம் இரங்கி கேட்கின்றோம்
    உன் முகத்தைக் காட்டிவிடு
    தனம் எமக்குத் தந்தாலும்
    தயாளம் அதில் சேர்த்துவிடு
    உதவி விடும் உயர்குணத்தை
    உளம் இருக்க அருள்புரிவாய்

    கெட்ட எண்ணம் வாராமல்
    சஷ்டி தனைப் பிடிக்கின்றோம்
    குட்டி எங்கள் தலைமீது
    குமரா அருள் சொரிந்துவிடு
    நிட்டூரம் செய்து நிற்கும்
    துட்டர் எலாம் திருந்துதற்கு
    இஷ்டமுடன் உமை மைந்தா
    இன்னருளைச் சொரிந்து விடு

     

    Share
  • எல்லோரும் பணிந்து நிற்போம் !

     

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்…. அவுஸ்திரேலியா

    கருணைகூர் முகங்கள் கொண்ட
    கந்தனை நினைக்கும் இந்த
    பெருமையாம் விரதம் தன்னை
    உரிமையாய் எண்ணி நிற்கும்
    அடியவர் ஒன்று கூடி
    அன்னத்தை ஒறுத்து நிற்பர்
    அவருளம் புகுந்து கந்தன்
    அருளொளி காட்டி நிற்பான் !

    கந்தனை நினைக்கும் இந்த
    சஷ்டியாம் விரதம் தன்னை
    சிந்தையில் இருத்தி வைத்து
    சீலமாய் இருக்கும் மாந்தர்
    வந்திடும் வினைகள் எல்லாம்
    மறைந்துமே போகச் செய்ய
    எந்தையாம் கந்தன் அப்பன்
    என்றுமே உதவி நிற்பான் !

    ஆணவம் என்னும் மாயை
    சூரனாய் தோன்றி நிற்க
    அரன் மைந்தன் கந்தனையன்
    ஆற்றலால் உய்வு பெற்றான்
    அழிக்கின்ற பாங்கில் கந்தன்
    ஆணவம் போக்கி ஆங்கே
    அறிவினை உணர்த்தி நின்று
    அருளினை அளித்தே நின்றான் !

    கந்தனை நினைத்து நாங்கள்
    சஷ்டியை பிடித்து நின்றால்
    நிந்தனை கொடுத்து நிற்கும்
    நிட்டூரம் ஒழிந்து போகும்
    கொண்டிடும் எண்ணம் எல்லாம்
    குறைவின்றி நடந்தே தீரும்
    எந்தையாம் கந்தன் பாதம்
    எல்லோரும் பணிந்தே நிற்போம் !

    Share
  • இனிய வாழ்த்துகள்!


    அன்புடன்
    ஜெயராமசர்மா தம்பதியர்

    Share
  • காதலுடன் கைதொழுவோம்!

    image1.JPG

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    அன்னையும் தந்தையும் ஆற்றிய பெருந்தவத்தால்
    அகிலத்தில் நம்பிறப்பு அற்புதமாய் ஆகியது
    அரவணைத்துப் பாலூட்டி அன்புதனை காட்டியவர்
    அறிவுடனே வாழ்வதற்கு ஆசானைக் காட்டினரே
    ஆசானின் அரவணைப்பால் அசடெம்மை விட்டகன்று
    ஆண்டவனின் நினைப்புடனே அருங்கல்வி அமைந்ததுவே
    ஆண்டவனை நினைக்கும்படி அக்கல்வி அளித்துநின்ற
    ஆசானை வாழ்நாளில் அகமதிலே இருத்திவைப்போம்

    எல்லோர்க்கும் ஆசானே ஏணியாய் இருந்திடுவார்
    வல்லவராய் நல்லவராய் வளர்ப்பதும் ஆசானே
    பொல்லாத குணமதனை போக்குவதும் ஆசானே
    நல்லபல சேதிகளை நல்குவதும் ஆசானே
    நல்லாசன் வாய்த்துவிடல் நாம்செய்யும் பாக்கியமே
    நம்வாழ்வின் பெருங்கொடையே நல்லாசன் கிடைப்பதுவே
    ஆதலினால் ஆசானை அடிபரவி நின்றிடுவோம்
    அவராசி கிடைப்பதுவே அனைவருக்கும் பெருங்கொடையே

    அர்த்தமுடன் வாழ்வதற்கு ஆசானின் துணைவேண்டும்
    ஆணவத்தை அகற்றுதற்கு ஆசானின் துணைவேண்டும்
    அறம்பற்றி அறிவதற்கும் ஆசானின் துணைவேண்டும்
    அகம்பற்றி அறிவதற்கும் அவரின்துணை அவசியமே
    நிலமீது நாமிருந்து நிமிர்ந்தென்றும் வாழ்வதற்கும்
    நிலையான நீதியினை நெஞ்சமதில் நிறுத்துதற்கும்
    அறிவான ஆசானே அருந்துணையாய் அமைந்திடுவார்
    ஆதலால் ஆசானை காதலுடன் கைதொழுவோம் !

     

    Share
  • பொலிவாக அமையும் அன்றோ !

     

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

    மகிழ் வோடு வாழுதற்கு
    வழிகள் பல இருக்கிறது
    அவை மனதில் எடுக்காமல்
    அல்லல் பட்டு நிற்கின்றோம்
    கோபம் எனும் குணமதனை
    குறைத்து நாம் வாழ்ந்தாலே
    குவலயத்தில் எம் வாழ்வு
    குதுகலமாய் அமையும் அன்றோ !

    கோபமது வந்து விடின்
    குறை சொல்லத் தொடங்கிடுவோம்
    கோபமது மேல் எழுந்தால்
    கொலை கூடச் செய்திடுவோம்
    கோபம் எனும் நெருப்பாலே
    குடும்பம் கூட பொசுங்கிவிடும்
    ஆதலினால் கோபம் அதை
    அனைவருமே ஒதுக்கி வைப்போம் !

    கோபம் அது வந்துவிடின்
    குணம் யாவும் மாறிவிடும்
    குழந்தை என்றும் பாராமல்
    குரூரம் அங்கே அரங்கேறும்
    பவமதை செய்க என்று
    கோபமது தூண்டி நிற்கும்
    ஆதலால் கோபம் அதை
    அண்டாமல் செய்து நிற்போம் !

    கோபமெனும் குணம் பெருகின்
    குறைகள் பல உருவாகும்
    சாபம் இட்டு மற்றவரை
    சஞ்சலத்தில் ஆழ்த்தி நிற்போம்
    பாவம் செய்யத் தூண்டுகின்ற
    கோபம் அதை ஒழித்துவிடின்
    பூதலத்தில் எம் வாழ்வு
    பொலிவாக அமையும் அன்றோ !

    Share
  • காத்துநிற்போம் !

     

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    வெள்ளம் ஒருபக்கம் விபத்துகள் ஒருபக்கம்
    தெள்ளுதமிழ் நல்லறிஞர் பிரிவுத்துயர் ஒருபக்கம்
    நல்லநட்பு என்றுசொல்லி நம்பவைத்த நாடுகளும்
    நரிகளாய் மாறிநின்று நாசம்செய்யும் ஒருபக்கம்
    உள்ளூரில் அரசியலார் ஊழல்கொள்ளை ஒருபக்கம்
    உயர்கல்வி உடையாரின் உன்மத்தம் ஒருபக்கம்
    நல்லபல இருக்கின்ற நற்பாரத நாட்டினிலே
    தொல்லை எலாம் தொலைந்து நிற்க
    சுதந்திர நாள் வேண்டி நிற்போம் !

    பாரதத்தாய் மடிமீது பலதலைவர் இருந்தார்கள்
    பாரதத்தாய் துயர்துடைக்க பாடுபட்டார் பலவகையில்
    பாரதத்தாய் கண்ணீரை பார்ப்பதற்கு விரும்பவில்லை
    பாரதத்தாய் முகமலர்ச்சி பார்ப்பதற்கே விரும்பிநின்றார்
    பாரதத்தாய் துயர்படவே பலரிப்போ இருக்கின்றார்
    பாரதத்தாய் பக்குவத்தை பார்த்துவிட மறுக்கின்றார்
    பாரதத்தாய் பெருமைதனை பார்முழுக்க பார்ப்பதற்கு
    பாரதத்தின் மக்களெலாம் காத்துநிற்போம் சுதந்திரத்தை !

    மகான்களின் ஆசிபெற்று மகத்துவத்தைக் கண்டநாடு
    மாபெருந் தத்துவங்கள் வாழ்வுக்கு தந்தநாடு
    இலக்கியங்கள் இலக்கணங்கள் இங்கிதங்கள் சொன்னநாடு
    இமயம்முதல் குமரிவரை எல்லையினை கொண்டநாடு
    சிற்பமொடு ஓவியமும் சிறந்தபல கோவில்களும்
    எத்திசையில் பார்த்தாலும் எங்குமே நிறைந்தநாடு
    இத்தனையும் நிறைந்துநிற்கும் ஏற்றமிகு பாரதத்தின்
    எழிலான சுதந்திரத்தை எல்லோரும் போற்றிநிற்போம் !

    Share
  • அவுஸ்திரேலியாவில் தமிழரது வாழ்க்கை முறை

    ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
    முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
    M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS

    அவுஸ்திரேலியா பல்லின கலாசாரம் கொண்ட நாடாக விளங்குகிறது .இங்கு வந்த தமிழர்கள் தமக்குரிய வாழ்க்கை முறையினத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் வாழ்கிறார்கள்.இவர்களுக்குள் பெரும்பாலும் மொழியும், சமயமும், பாலமாக இருப்பதனையே முக்கியமான தொடர்பென்று கருதலாம்.

    இலங்கையில் இருந்து வந்த தமிழர்களிலே பல பிரிவுகளும் காணப்படுகிறது.ஆதாவது உயர் கல்வித்தகைமைகளுடன் ஆரம்பத்தில் வந்தவர்கள், பின்பு இங்கு வந்து படித்து தகைமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், பின்னர் நாட்டின் பிரச்சினைகள் காரணமாக இடம் பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வந்து சேர்ந்தவர்கள், மற்றும் முகவர்கள் ஊடாக எப்படியோ இந்த நாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்கள்.

    ஆனால் இந்தியத் தமிழர்கள் மத்தியிலோ சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் மத்தியிலோ இந்த நிலையினைக் காணமுடியாது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் படிப்பதற்கும், கல்வித் தகைமைகளுடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுமே வந்திருப்பபதைக் காணமுடிகிறது.

    சங்கங்கங்கள் வைப்பது, கோவில்கள் கட்டுவது, அரசியல் செய்வது என்று பார்த்தால் அது பெரும்பாலுமே இலங்கைத் தமிழர்களாகவே காணப்படுவர்.இலங்கைத் தமிழர்கள் பலர் இந்த நட்டில் குடியுரிமை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பல இழப்புகளின் மத்தியில் வந்ததாலும் உறவினர்கள் பலர் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்து விட்டதாலும் இலங்கைக்குப் போவது பல தமிழர்களுக்கு அவசியமானதாகப்படவே இல்லை. ஆனால் இந்தியத் தமிழர்கள் நிலை அப்படி அல்ல. அவர்களில் பலர் வசிப்பிட உரிமையுடன் இருக்கவே விரும்பி இந்த நாட்டின் குடியுரிமையில் ஆசையில்லாத வர்களாகவே விளங்குகிறார்கள்.

    இலங்கைத் தமிழர்களில் முன்னர் வந்தவர்வர்கள் தாங்கள் வெள்ளைக்காரர் என்ற பாவனையில் முற்றும் முழுதாகவே ஆங்கிலக் கலாசாரத்தினையே தமது வாழ்வாக்கிக் கொண்டு வாழ்கின்றவர்களாகவே இன்றுவரை விளங்குகின்றார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு பெரும்பாலும் வெள்ளைக்காரரின் தொடர்பினையே விரும்பியவர்களாய் அவர்களின் பக்கமே தம்மைப் பார்க்கும்படி ஆக்கிக்கொண்டு வாழுகின்றார்கள்.

    இன்னுமொரு சாரார் இங்கு வந்து உயர்கல்வியைக் கற்று அதனால் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.வைத்தியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் எனலாம்.

    அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் கூடுதலாக வாழும் மாநில மாக விளங்குவது நியூசவுத் வேல்ஸ் ஆகும்.அதுவும் தலைநகரான சிட்னியில் நிறையத் தமிழர்கள் வாழுகிறார்கள். வசதியுடனும் ஒரளவு அடிப்படையான வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.அதற்கு அடுத்ததாக விக்ரோறிய மாநிலமான மெல்பேணை எடுத்துக் கொள்ளலாம்.சிட்னிக்கு அடுத்து தமிழர்கள் கூடுதலாக மெல்பேணில்த்தான் வாழுகிறார்கள்.

    ஆண்களும் பெண்களும் வேலைசெய்யுமொரு நிலை இங்கு அவசியமாகிறது. பிள்ளைகள் இருந்துவிட்டால் படிப்புக்கு அதிக பணமும் , வீட்டுவாடகைக்கு அதிக பணமும் தேவைப்படுவதால் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கிருக்கிறது.இதனால் இரவும் பகலும் எந்த வேலை ஆனாலும் குடும்பமே உழைக்க வேண்டிய ஒரு கட்டாயம் இங்கு அவசியம் ஆகிவிட்டது.

    தொடர்ந்து வேலைசெய்வதனால் மன ஆறுதலுக்கு ஏதாவது கொண்டாட்டங்களும் அவசியம் தேவைப்படுகிறது. அவற்றை சனி ஞாயிறு தினங்களிலேயே அனேகம் பேர் வைக்கின்றார்கள். பிள்ளைக்ளுக்குப் பாடசாலை விடுமுறை யானதாலும் தங்களுக்கு ஓய்வு கிடைப்பதாலும் இந்த நாட்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

    இங்குவாழும் இலங்கைத் தமிழர்களிடையே அவர்கள் வாழ்ந்த மண்ணின் நினைவுகள் இன்னும் போகவில்லை.அதே வேளை அந்த மண்ணுக்கே உரித்தான போட்டி மனப்பாங்குகளும், பொறாமைக் குணங்களும், குறைகள் சொல்லுவதும், ஒருவரை ஒருவர் தூற்றித்திரியும், மனப்பாங்குகளும் கூட மாறவில்லை என்றே சொல்லக் கூடியதாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலுக்குள் மற்றைய இடத்துத் தமிழர்கள் சேர்ந்துவிடுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதே.தாங்கள் வாழ்ந்த மண்ணில் எப்படியான வகுப்புப் பிரிவுகள் காணப்பட்டதோ அவைகள் இங்கு வந்த பின்னரும் மாறுவது என்பது மிகவும் சிரமான தாகவே இருக்கிறது. கூட்டங்களில் என்னதான் சமத்துவம் பற்றி வீராவேசமாகப் பேசினாலும் திருமணம் என்று வரும்பொழுது பேச்சுகள் யாவுமே வெறும் பேச்சுகள் ஆகவே போயிருக்கும். என்னதான் படித்து உயர் பதவியில் இருந்தாலும் இலங்கையின் பார்ம்பரியப் பழக்க வழக்கங்கள் பதுங்கிய படியேதான் இருப்பதை இங்கு காணமுடிகிறது.

    வெள்ளைக்கார நாட்டுக்கு வந்துவிட்ட படியால் வெள்ளைக் காரர்களாகவே இருக்கப் போகிறோம் என்று எண்ணி அதற்கு ஏற்ப தங்கள் குடும்பத்தையே மாற்றுகின்ற தமிழர்கள் ஒருபுறம். தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் தங்கள் நட்டுக்கா போகப் போகிறார்கள் ? இந்த நாடுதானே அவர்களுக்குச் சொந்தம் என்று பிள்ளைகளை முழுக்க முழுக்க ஆங்கில மயமாக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன வேலையாவது செய்து நல்ல வீடு, நல்ல கார், நல்ல வசதியான வாழ்க்கையினை வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணுகின்ற வர்கள் ஒருபுறம். இவர்களுக்கு மத்தியில் பண்பாடு, கலாசாரம், மொழி, சமயம், சமூகம், தனது சொந்த நாட்டின் துன்பம் பற்றிய நினைப்பு, அதற்காக எப்படி நிவாரணங்களைப் பெற்று வழங்கலாம், என்று அதற்காகவே பல செயற்பாடுகளை அல்லும் பகலும் செய்து கொண்டிருக்கும் மனோ பாவம் மிக்க குடும்பங்கள் ஒரு புறம் என்று இங்குள்ள தமிழர்கள் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது.

    இவற்றைப்பற்றி எல்லாம் இங்குள்ள பிள்ளைகளுக்கு எதுவுமே விளங்குவதே இல்லை.ஏனென்றால் அவர்கள் அனைவருமே ஆங்கிலச் சூழலில் ஆங்கிலப் பிள்ளைகளுடன் ஆங்கில மொழியிலேயே படிக்கிறார்கள்.வயது வந்தவர்கள் தங்களுக்குள் முரண்பட்டு பிரிவுண்டு பிளவுடன் நடப்பதை அவர்கள் அறியும் நிலையில் இல்லை. அவர்களின் எண்ணங்கள் யாவுமே இந்த அன்னிய கலாசரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

    வருங்கால தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்வழி கலாசாரம் பண்பாடுகளுடன் வருவார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருகிறது எனலாம்.இதனால் இங்குள்ள பெரியவர்கள்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றி உணர்த்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் தங்களின் சுயத்தை இழந்து விடாமல் கிடைத்த இந்த அருமையான நாட்டையும் அதன் வாய்ப்புகளையும் உரியமுறையில் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து வாழ இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒருமித்து நினைக்கும் நாள் மிகவும் உன்னதமான உயர்வுடைய நாளாக இருக்கும்.

    Attachments area

    Share