Tag: கவிஞர் ருத்ரா

  • பாரதியின் துடிப்பு!

    –ருத்ரா இ. பரமசிவன்

    “தூண்டிற் புழுவினைப்போல்
    சுடர் விளைக்கினைப் போல்”
    பெண் மனத்தின் துடிப்பை அறிய‌த்
    தூண்டில் முள்ளில்
    கழுவில் ஏறி எழுதியிருப்பானோ
    பாரதி?!

    அந்தக்காற்றின்                                                  flame
    பேய்க்கூந்தல் ஆட்டத்தில்
    அந்தச் சுடர்ப்பிஞ்சு உருவில்
    கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருப்பானோ
    பாரதி?!

    காதலுக்குள் கண்ணம்மாவையும்
    கண்ணம்மாவுக்குள் காதலையும்
    ஒரு மெல்லிய மயிற்பீலி வருடும்
    காற்றின்
    ஆயிரமாயிரம்
    ரோஜா இதழ் அடுக்கில்
    ஊடுருவிக்கொண்டானோ
    பாரதி?!

    ஏதோ ஒரு ஓலைப்பந்தலின்
    பெரிய கீற்று ஒன்றும்
    சிறிய கீற்று ஒன்றும்
    காற்றில் ஆட
    அந்த ஊற்றில் நுழைந்து
    வள்ளி முருகன் கல்யாணம்
    கண்டு களித்து
    வசன கவிதை புனைந்தானே
    பாரதி!

    அவன் எழுத்துக்கள் அத்தனையும்
    உயிர்.
    அவன் எழுத்துக்கள் அத்தனையும்
    மெய்.
    பாரதி எனும் உயிர்மெய் இன்பத்தமிழ்
    பார்த்தசாரதி கோவில் யானையுடனா
    முற்றுப்புள்ளி பெற்றது?

    அந்த ஆவேசத்தமிழை
    ஒரு கோவிலோடு முடிச்சுப்போடும்
    ஆத்திகத்தமிழ் இல்லை
    அவன் தமிழ்.

    என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
    என்று அவன் எறிந்த கேள்வியில்
    நம் ஆகஸ்டு பதினைந்துகள்
    இன்னும் கொழுந்து விட்டுக்கொண்டுதான்
    இருக்கின்றன!

    ஓ! மனிதா!
    இந்த “மந்தைத்தனத்திலிருந்து”
    மனிதனாய்
    உன் விலங்கொடித்துச்
    சிறகடிப்பது எந்நாளோ?
    என்ற ஏக்கமும்
    அந்தத் தூண்டிற்புழுவிலும்
    சுடர் விளக்கிலும்
    இழையாடுகிறது.

    வெறும்
    முண்டாசு உருவம் அல்ல அவன்!
    கொடுமைகளை
    முட்டித்தள்ளும் உணர்வு அவன்!

     

     

    Share
  • நெருப்பு மா மழை (1)

    ருத்ரா இ.பரமசிவன்

    ரமண மகரிஷி

    images

    குத்துப்பாறையும் புல்லும் மொய்த்த‌
    குன்றம் தன்னில் பள்ளி கொண்ட‌
    கோவணப் பெருமாள் கோலோச்சிய திரு
    அண்ணாமலை யென்னும் மலையுண்டு.
    ஆயிரம் இமயமும் அதிலே அமிழும்..அந்த‌
    அழகிய அமைதியின் புன்சிரிப்பில்
    மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே
    பிரம்ம சூத்திர பாஷ்யங்கள் ஆகும்.
    பேசாத மொழியில் மொழி ஏதுமில்லை.
    தமிழைத்துப்பிய வடமொழி என்றும்
    வடமொழி மற்றொரு தமிழ்மொழிஎன்றும்
    பட்டி மன்றப் பாய்ச்சல்கள் இல்லை.
    பேசாதிரு!பேசாதிரு!பேசாதிரு!
    பேசியதெல்லாம் விந்துக்கள் ஆகி
    விந்துக்கள் எல்லாம் காடுகள் ஆகி
    காடுகள் தோறும் விலங்குகள் தான்.
    வேள்வி வளர்த்து நம் தீயை எல்லாம்
    யாருக்கு கொடுக்க இயலும் அறிவாய்.
    தீயே தீக்கு தின்னக்கொடுக்க..இந்த‌
    சாம்பலுக்கு ஏது உரிமையடா?
    மறைத்து மறைத்துச் சொன்னாலும்
    காதுக்குள்ளே சொல்லூற்றி
    நாலு விதமாய் சொன்னாலும்
    அஞ்ஞானத்தின் வர்ணம் தான் அது
    அதர்மத்தின் கொடுங்காடுகள் தான்.
    மனிதன் நிழலை மனிதன் உரித்து
    மணிச்சுடர் ஆடை உடுத்துவதே
    மகா மகா திரு நிர்வாணம்.
    நிர்வாணமாய் நிற்பவருக்கு
    ஆண் குறியென்ன? பெண் குறியென்ன?
    ஆட்டங்கள் போதும்!பாட்டுகள் போதும்!
    ஆகாசத்தைக் காய்ச்சிடுவீர் அதன்
    அமுதச் சாற்றை அருந்திடுவீர்

    Share
  • ஓலைத்துடிப்புகள் ( 10 )

    ஓலைத்துடிப்புகள் (9) ஆம் பாடலுக்கான பொழிப்புரை
    ===============================================

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
    நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
    பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
    அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
    தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
    மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!

    தலைவன் பால் காதல் உற்ற போதும் அது காதல் தான் என்று உணர்ந்து கொள்ள இயலாத ஒரு பால்வடியும் பிள்ளைத்தனம் மாறாத “மடப்பம்” உடையவள் தலைவி.மரப்பாச்சி வைத்து “அம்மா பிள்ளை”விளையாடும் தன்மையவள்.”பைஞ்சாய்” எனும் ஆற்றோர நுண்ணிய கோரையில் செய்யப்பட்ட பொம்மையை தன் பிள்ளையாக நினைத்து விளையாடுகிறாள்.உடல் அளவில் கூட இன்னும் முதிராதவள் தான்.சுரைக்கொடியின் காய் இன்னும் வளர்ச்சி நிலையில் நீள்தல் உறாது சிறிய பசுமையான காய் போல தோற்றம் தரும் முலையினை தாய்ப்பாசம் மிக்க முலையாய் அந்த பொம்மையின் வாய் அருகே காட்டி “பொய்ப்பால்” ஊட்டும் விளையாட்டில் ஆழ்ந்து விட்டாள்.இருப்பினும் அதனில் நாணம் கொண்டு மெல்லிய சிரிப்பை உதிர்க்கிறாள்.தன்மை படர்க்கை முன்னிலை என்னும் இலக்கணம் எல்லாம் அந்த பொம்மைப் பிள்ளையிடம் ஒன்றாய் நிரவி விட்டது.தன்னை தாயாய்(தன்மை) ஆக்கி பொம்மையை குழந்தையாய்க்கொண்டு (படர்க்கை) அதன் தந்தை நீ தான் என்று உன்னை நோக்கி ஓங்கிய குரலில்(தலைவனை நோக்கி) அழைப்பதே அவளது விளையாட்டு. (தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்)

    வீடுகளில் அம்மா பால் ஊட்டும் போது பொய்யாய் அழைப்பது உண்டு.”அப்பா சீக்கிரம் வாங்க!உங்க பையன் பால் குடிக்க மாட்டேனென்கிறான்”என்று செல்லமாய் அழைப்பது உண்டு அல்லவா! அது போன்றது தான் இந்த பொய்ப்பால் ஊட்டல். தோழிக்கு ஆற்றமை தாங்க வில்லை.”என்ன மடச்சி இவள்?” விரைவாய் வந்து இவளை காப்பாற்று என்கிறாள் தலைவனை நோக்கி. (“மடவள் என் இவள்?வந்திசின் ஓம்புமன்.”)

    முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
    ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
    பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
    பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    உறைநோய் உற்று நின்னை நோக்கும்
    நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.

    கிழடாய்ப்போன முதுகு கூன் விழுந்த நாரை ஒன்று தங்குமிடம் (இறை) தேடி திரிய கரையின் ஞாழற்பூவின் கிளை வளைந்து காற்றுக்கு ஏற்றபடி ஆட நெய்தல் பூக்கள் நெருக்கமாய் பூத்து ஆடி ஆடி அசைய (பதைப்ப..அசைய ;ததைந்த…நெருங்கிய) அந்த அழகிய உப்பங்கழியில் குளிர்பொருந்திய கரையோர பாசிபடர்ந்த நீரலைகளுடன (பைந்திரை) விளங்கும் கடற்கரைப்பட்டினத்து தலைவனே!உடலே உடலோடு போர் செய்தாற்போன்ற காதல் நோயின் வலியால் முறுக்கிய நிலையில் செம்பிழம்பாய் நெருப்பு பற்றிக்கொண்டது போல் அந்த உடம்பில் தங்கி அவளை துயர்ப்படுத்தும்.அதனால் அவள் உன்னை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.நரம்புகளால் நன்கு முறுக்கப்பட்ட யாழின் இன்னிசை ஒத்த சொல்லை உடைய உன் தலைவி ஏதேதோ குழறுகிறாள்! இது தகுமோ?

    ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
    ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
    சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
    மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
    துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.

    ஒளிபொருந்திய மினுமினுப்பான மணலில் படுத்துக்கிடப்பதைப்போன்ற கரிய கொம்பின் எருமையை ஒத்த பளுமிகுந்த படகு அங்கே கரையில் ஒதுங்கிக்கிடக்கும்.அதன் மீது சிறகுகளால் மொய்க்கும் நாரைக் கூட்டங்கள் நிறைந்த துறையை சேர்ந்த தலைவனே!மடமை பொருந்திய இந்த சிறு பெண்ணின் பெரிய காதல் நோயை துடைக்கும் வழியை காண்பாயாக!உன் பார்வைகள் அவள் மீது தூவினாலே போதும்.அந்த பூமழையை நீயும் பார்த்து களிப்பாயாக!

    வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
    கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
    இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
    உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
    உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

    விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.எனவே மரப்பாச்சியாய் இருந்தவளுக்குள் பாய்ச்சிய மின்னலாய் ஆனதே இவள் காதல்.கண்ணின் முளைபோல் கருவிழிக்குள் நுழையும் ஒளிக்கதிர் (எல்கதிர்) வியப்புச்சிறகுகள் விரியும் வண்ணம் அவள் உள்மனத்தில் எண்ணங்கள் தேக்கி நிற்கின்றாள்.இருள் எல்லா வெளிச்சத்தையும் தின்றுவிடுதல் போல் ஒரு அடர் இருள் தோன்றி (உன்னைப் பிரிந்த துயரம்)அவளை அலைக்கழிக்கிறது.அலைகளால் அரித்து அரித்து உண்ணப்படும் அந்த நீர்க்கரையில் மண்ணே மறைந்து
    போய்விடும் நிலையும் வந்து விடும் போல் இருக்கிறது.செறிவுற்ற மூங்கில் கட்டமைப்பின் தோள் அழகு மிக்கவனே இவளை இவள் துன்பத்திலிருந்து விடுவிப்பாயாக.

    ஓலைத்துடிப்புகள் ( 10 )

    கவிஞர் ருத்ரா

    அம்மூவனார் எழுதிய “நெய்தல் செய்யுட்”கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

    “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
    காணிய சென்ற மடநடை நாரை”..

    என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் “செத்த” என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் “செத்தவன் கையில் வெத்தலை பாக்கு “இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த “செத்த நிலையை” தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் “தங்கப்பதக்கம்” திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

    “செத்தென” என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

    ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் “மடநடை”அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் “மடம்” அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் “போல” என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் “போல” என்று வழங்கப்படுவதில் “சங்கத்தமிழின் சொல்லியல் முறை” ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படியென்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் “செத்தையாருக்குள் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் “உறங்குவது போலும் சாக்காடு” என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி “நடைப்பிணங்களாய்”(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே “செத்த” “போல” என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென”என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.

    இப்போதும் இதன் பொழிப்புரையை இந்த இதழிலேயே தர இயலவில்லை.செமஸ்டர் அர்ரியர்ஸ் போல வரும் இக்குவியலை வரும் இதழில் சமப்படுத்திவிடுவேன் என நம்புகிறேன்.சிரமத்தை பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென..”

    பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
    உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
    தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
    நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
    விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
    வெண்ணிப்பறந்தலை ததையநூறி
    குருதி பொத்திய அகல் அறை மன்று
    ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
    மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
    முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
    மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
    கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
    அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
    வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
    மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
    வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
    அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
    வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
    காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
    கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
    எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
    பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
    அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
    படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

    =================================================================

    Share
  • ஓலைத்துடிப்புகள் (9)

    கவிஞர் ருத்ரா

    ====================================================

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    =========================================================

    oolaisuvadi

    தமிழ் மொழியின் நுண்சொற்பாடு ஒரு ஒப்பற்ற மொழியியல் வெளிச்சம் காட்டும் தன்மையது ஆகும்.உடல் என்றால் உடம்பு என்று தான் நாம் அறிவோம்.அந்த சொல் ஒரு ஆழமான தத்துவம் அல்லது மெய்யுணர்வு தரும் சொல்லாக அல்லவா இருக்கிறது.உடலின் இயல்பே உள்ளே இருக்கும் உள்ளம் என்பதனோடு எப்போதும் பொருது கொண்டே இருக்கும் இயல்பினது ஆகும்.இதுவே எல்லா மனித மற்றும் சமுதாய நோய்களுக்கு காரணம்.சங்கத்தமிழ் வரலாற்றில் இப்படியொரு ஆழமான ஆராய்ச்சிக்கு வித்திடும் சொல் (“உடல்”) என்பதை நான் மேலே கண்ட (ஐங்குறு நூறு..பாடல் 66)செய்யுள் புகுந்த போது தான் திக்குமுக்காடிப்போனேன். (உள்ளே இருப்பதால் தான் அது உள்ளம் எனப்படுகிறது என்பது மற்றொரு “வியப்பு தரும் சொல்” அது) அதனால் தான் திருமூலர் போன்ற சான்றோர்கள் “உடம்பையே” கோவில் ஆக்கினார்கள் போலும்.இந்த “உடலை” வைத்து என் சங்கநடைப்பாடலை இங்கு நான் எழுதியுள்ளேன்.ஓரம்போகியார் எனும் அந்த சங்கப்புலவர் உண்மையிலேயே இலக்கியம் எனும் இமயம் ஏறி நின்று ஒளி காட்டியவர் என்றே நாம் கொள்ள வேண்டும்.கீழ்வரும் செய்யுள் ஒரு சான்று.

    “உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;
    யார் அவள், மகிழ்ந!தானே…தேரொடு,நின்
    தளர்நடைப்புதல்வனை யுள்ளி,நின்
    வளைமனை வருதலும் வௌவி யோளே?”

    (ஐங்குறு நூறு பாடல் 66)

    “கோபம் கொள்ள மாட்டேன்.சண்டையிடமாட்டேன்.(உடலுதல் எனும் சொல் தெறிக்கும் அந்த “முரணும் உணர்வு” தலைவியின் வாயிலிருந்து எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்) பொய்யாது உரையுங்கள்.யார் அவள்? தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் “குறு குறு” நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே! யார் அவள்?” தலைவியின் நெஞ்சம் உலைக்களம் ஆகிறது.அப்படியும் அவனை”மகிழ்ந” என்று அழைப்பதில் ஒரு குத்தல் நிறைந்த உணர்வு இருப்பினும் அவனைக்கண்டதும் அவள் மகிழ்கிறாளே அந்த மின்னல் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தானே “ஆண்” பெண் மீது இத்தகைய கொடும் ஆதிக்கத்தை செலுத்துகிறான் என்பதனையும் காட்ட மேலே வரிகளில் “சூடு” போடுகிறார் புலவர். நம் முதுகு மட்டும் புண்ணாகவில்லை.நம் உள்ளுணர்வே (ஆத்மா)அந்த சூடு தாங்காமல் பற்றி எரிகிறது. என் பாடலின் பொழிப்புரையை அடுத்த இதழில் எழுதுகிறேன்.இதை அன்புடன் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    ===================================================

    பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
    நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
    பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
    அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
    தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
    மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!
    முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
    ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
    பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
    பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    உறைநோய் உற்று நின்னை நோக்கும்
    நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.
    ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
    ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
    சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
    மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
    துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.
    வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
    கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
    இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
    உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
    உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

    தொடரும்

    Share
  • ஓலைத்துடிப்புகள் (8) – வெண்பூப் பகரும்

    கவிஞர் ருத்ரா

    “வெண்பூப் பகரும்”

    oolaisuvadi

    இச்சொற்றொடர் ஓரம்போகியார் எனும் சங்கத்தமிழ்ப் புலவர் ஐங்குறுநூறு பாடல் எண் 13 ல் எழுதியது.வெள்ளைக்குஞ்சம் போல் காற்றில் அழகாய் ஆடும் அந்த “பொங்குளை அலரி” பூக்கள் பற்றி பாடுகிறார்.மருதத்திணைப்பாடல் அது.அதை பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பொங்கும்.மேலும் அப்பூக்கள் தலைவியோடும் தலைவனோடும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றும்.அல்லது இவர்கள் அப்பூக்களோடு பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றும். அப்படி ஒரு நுண்மையான உணர்வை அச்சொற்களில் ஓரம்போகியார் காட்டுகிறார். அந்த பூக்கள் ஒரு நுண்செய்தியை தலைவிக்கு எப்படி உணர்த்துகிறது தெரியுமா? அவன் வரும் குதிரையின் தலைப்பூ அத்தகைய குஞ்சம் போல் ஆட்டி ஆட்டி சொல்வதைப்போல் இந்த ஆற்றங்கரையின் “வெண்பூக்களும்” அவளுக்கு அவன் வருவதைச் சொல்கின்றனவாம்.என்ன ஆழமான அழகான கற்பனை!

    “பரியுடை நன்மான் பொங்குளை அன்ன‌
    அடைகரை வேழம் வெண்பூப் பகரும்..”

    அந்த கரும்புப்பூக்கள் ஒரு இனிய காட்சியை அல்லவா நமக்கு சொல்கின்றன.”வெண்பூப் பகரும்” என்ற சொற்றொடர்களையே தலைப்பாக்கி இச்செய்யுளை செய்துள்ளேன்.

    கல்+இடை=கல்லிடை.குறிஞ்சி மருவி குறிச்சி ஆனது.பொதிகை மலையிடை அமைந்த ஒரு குறிஞ்சி ஊர் தான் எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சி.அங்கே தாமிரபரணி எனும் ஆறு சங்கத்தமிழின் பெயரான “பொருனை” என்ற பெயரில் அமைதியான அழகுடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்று எழிலில் மனம் கரைந்து சுழித்து நுரை பூத்து நாணல்கள் பச்சைத்தூரிகைகள் போல் படர்ந்திருக்க அந்த தலைக்குஞ்ச பூக்கள் தூரிகைகளாய் நீல வானத்திரையின் பின் புலத்தில் சங்கத்தமிழ் காட்சிகளை தீட்டிக்காட்டியதே இந்த சொல்லோவியம்.
    ஐங்குறுநூற்றுப்பாடல் எண் 23 ல் ஓரம்போகியார்

    தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வனொடு
    பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்”

    என்ற வரிகளில் இன்னும் நம் நெஞ்சம் பிழிகிற காட்சியை காட்டுகிறார்.

    புள்ளிகள் நிறைந்த அந்த நண்டு எனும் தாய் சாகும்படி அதன் குஞ்சுகள் பிறக்கும்.ஆனால் முதலை ஈன்றதனால் பசியுடன் கூடிய ஈன்ற வலியைப்போக்க தன் குட்டிகளையே தின்னும்.இந்த இரு வேறு துன்பியல் காட்சிகளும் தலைவன் தனக்கு ஏற்படுத்தும் பிரிவுத்துன்பத்தை நன்கு புலப்படுத்துவதாக தலைவியின் துன்பம் மிக்க உரையாக‌ ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.இக்காட்சியும் என் செய்யுளில் பதிந்து உறைந்து வருகின்றன.

    நாங்கள் சிறுவயது நண்பர்களாய் “கல்லிடைக்குறிச்சியின்” தாமிரவருணிக் கீழாற்றில் நுரை சிதற பாறைகளிடையே பரவி ஓடும் நீரில் குடைந்து குளித்து மகிழும்போது “முதலையின்” அமைப்பு போல் இருக்கும் ஒரு குத்துப்பாறையில் நாங்கள் விளையாடும் அந்த “பிள்ளைப்பருவ” படலங்களின் தூரிகையாகவே இந்த வரிகள் காட்சிகள் தீட்டுகின்றன.

    அந்த புள்ளி நண்டுகள் முதலைப்பாறைகள் “சிறிய அந்த வெண்பூக்கள்” எல்லாம் இனிமை குழைத்து பளிங்கு உருக்கி பால் நுரை பொருது இழையும் பொருநை எனும் எங்கள் தாமிரபரணியே இந்த “வெண்பூப் பகரும்”சங்கநடைக்கவிதையாய் சல சலத்து ஓடுகிறது.

    =====================================================================================================

    “வெண்பூப் பகரும்”

    பொருநை யாற்று பொறியறை தோறும்
    பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
    கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
    அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
    ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
    கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
    அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.
    தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
    சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்
    ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
    பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
    பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
    பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
    பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
    புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
    புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.
    அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
    சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
    அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
    இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
    “தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்”
    புதையுறு வேழக் கழியின் மருங்கில்
    புன்குரல் “பகன்றனை”வாராது மறைந்து.
    ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
    ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
    தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
    பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
    பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
    வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
    என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

    ======================================================

    பொழிப்புரை
    =======================================

    பொருநை யாற்று பொறியறை தோறும்
    பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
    கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
    அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
    ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
    கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
    அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.

    பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரைக் காட்சி இது.புள்ளிகள் படர்ந்த பாறைகள் தோறும் மோதி மோதி இனிமையாய் தண்ணீர் பாயும்.அந்த துள்ளல் நிறைந்த நீரில் தலைவி கால் நனைத்து மகிழ்கிறாள்.அந்த நுண்ணிய பொழுதுகளின் இடைவெளிக்குள்ளும் அவனைப்பற்றிய கனவே அவளுக்கு.அவன் வரும் வழி தன் மனக்கண்ணில் ஆறுபோல் பெருக அதன் ஓங்கிய அலைகள் ஒளிசிந்தும் பால் நிலவை எதிரொளி செய்கின்றன.(ஓங்கு திரை வாங்கும்).அந்த நிலவை கடல் கண்டு பொங்கி எழுவதைப் போல் ஆர்ப்பரிக்கும் தலைவனின் குதிரைத் தலையில் சூடிய அலரிப்பூ (வேழப்பூ எனும் ஒரு வித பேய்க்கரும்புப் பூ)ஆடி அசைவது (தலைவியை நோக்கி) ஒரு ஒலியை ஏற்படுத்தும்.

    தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
    சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்
    ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
    பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
    பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
    பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
    பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
    புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
    புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.

    அங்கு உலவும் வண்டு தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அங்கு உலவும் வண்டு ஒன்றை அவள் காண்கிறாள். தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அந்த வண்டு உறிஞ்சிய தேனில் அமிழ்ந்ததால் சிறைப்பட்டு போனதால் தான் அஞ்சிறைத்தும்பியாய் ஆனாயோ ஓ வண்டே என்கிறாள் தலைவி.சிறகை அது குறித்த போதும் தான் ஒரு சிறைப்பட்ட நிலையில் இருந்ததால் அப்படி அழைக்கிறாள்.அதன் உள்ளிருந்து தலைவனின் குரல் கேட்கிறது.உண்மையில் அவன் தான் சிறைப்பட்டிருக்கிறான் போலும்.அவன் குரல் அவளுக்கு களிப்பின் கடல் நிறைந்து வழிந்தாற்போல் இருக்கிறது.அவன் சொன்னதும் கேட்டது.அவன் சொல்லாததும் அவளுக்கு கேட்டது.அது அவள் உள்ளத்தில் துன்பம் ஏற்படுத்தி அவளை பறித்துக்கொண்டது.மீண்டும் அவன் குரல் பகன்றது அவளுக்கு “பகன்றை” மலர் போல் மெல்லிய உணர்வுகளை எழுப்புகிறது. இருப்பினும் அத்தகைய மலர் போல் அல்லாமலும் துன்பம் செய்கிறது.துன்பம் தரும் குரல் என்னவாக இருக்கும்? “நான் இப்போது உடனே வருவதற்கில்லை” என்ற இன்னொரு குரலும் தலைவனிடமிருந்து அவள் கேட்டாள் போலிருக்கிறது. அந்த ஆற்றங்கரையின் குருகுகள் மிக்க உணர்ச்சிமிக்க ஒலிளை எழுப்பும்.அதைப்போல மெலிதாய் முறுக்கேறிய பூவின் மொட்டு இதழ்கள் திறக்கும். அதைப்போன்றே நலிவுற்ற என் கண்கள் பெருக்கும் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் இறங்கி சூடு ஏறி என்னுயிரையே உலுக்கிவிடும்.

    அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
    சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
    அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
    இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
    “தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்”
    புதையுறு வேழக் கழியின் மருங்கில்
    புன்குரல் “பகன்றனை”வாராது மறைந்து.

    அவன் எந்தக்குரலும் எங்கிருந்தும் எழுப்பவில்லை.இருப்பினும் அந்த வேழப்பூக்கள் அவளுக்கு ஒலியை கதிர்ப்பது போல் உணர்கிறாள்.அந்த மெய் விதிர்ப்பில் ஒருபக்கம் அவன் குரல் இனிக்கிறது.இன்னொரு பக்கம் தீய செய்தியை தாங்கி வருகிறது.படுக்கையில் தூக்கம் வரவில்லை.அடர்ந்த முள் காட்டில் கிடந்தவளாய் துன்புறுகிறாள்.இரவே நெருப்பு பற்றிக் கொண்டாற்போல் துடிக்கிறாள்.இப்போதும் தலைவனின் அந்த ஆற்றங்கரை தான் நினைவுக்கு வருகிறது.அவன் காதல் இனிதாய் பிறக்கும்.ஆனால் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் தன்மையும் அதற்கு இருக்கிறது போலும்.அவன் இருக்கும் அந்த துறையில் புள்ளிகள் நிறைந்த ஒருவகை நண்டு உள்ளது.அது ஈனும் குஞ்சுகள் அதனையே கொன்று தான் பிறக்கும்.(“தாய்சா(க)ப்பிறக்கும் புள்ளிக்கள்வன்)அவன் காதலும் அப்படியே தான்.அது பிறக்கும் நானே கொல்லப்படும் விந்தை வேதனை அல்லவா?அந்த வேழப்பூந் தட்டைகள் மண்டிய அந்த சேற்று நிலமும் நீரும் நிறைந்த கரையிலிருந்து அவன் குரல் கேட்கிறது.”நீ என்ன சொல்கிறாய்? எதையோ சொல்லிவிட்டு வாராது மறைந்து கொண்டாயே!”என்று தலைவி புலம்புகிறாள்.

    ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
    ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
    தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
    பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
    பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
    வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
    என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

    அடுத்ததாய் முதலை ஒன்றின் உருவம் அவளுக்கு தோன்றுகிறது.அதுவும் அந்த ஆற்றில் தான் இருக்கிறது.அதற்கு இரண்டு விழிப்படலங்கள் உண்டு.நீலிக்கண்ணீருக்கு ஒன்று.சாதாரணமாய் இன்னொன்று.அகன்ற கண்களில் தோன்றும்.(ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு…) பெரிய பற்களையுடைய முதலையோ தான் முட்டையிட்டு ஈன்ற குஞ்சுகளையே தின்னும். முதலைகள் பாய்ந்து வரும் ஆறும் அவன் ஊரில் தான் இருக்கிறது. நண்டு முதலை ஆகிய இரு விலங்குகளைப்போன்று அல்லவா அவன்
    இக்கொடிய‌ காதல் நோய் மூலம் என் உயிர் தின்னுகின்றான். குளிர்ச்சி பொருந்திய கனவு மிதக்கும் என் மையுண்ட கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.அதோ அந்த கரையில் ஆடும் அந்த சிறிய வெண்பூக்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன? குழைவோடு வெண்சாமரம் போல் வீசுகின்ற அந்த மலர்க்குஞ்சங்கள என் துன்பத்தை தான் குழைய குழைய சொல்லிக் கொண்டிருக்கின்றன.

    ============================================================================================================================

    தொடரும்

    Share
  • ஓலைத்துடிப்புகள் (7)

    கவிஞர் ருத்ரா

    “தி இந்து தமிழ்” நாளிதழில் (22/5/2015) நம் தமிழின் தொன்மையைக் குறிக்கும் செய்தி அடங்கிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது.திரு.ஒய்.ஆண்டனி செல்வராஜ் என்பவர் அரிய தகவல்களுடன் புகைப்படத்தோடு அக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.

    பழனி அருகில் கோடைக்கானல் மலைப்பகுதியில் “கோம்பைக்காடு” எனும் இடத்தில் சுமார் 4000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை நம் தொல் இயல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.பாறை ஓவிய ஆராய்ச்சியாளர்கள் திரு.நாராயணமூர்த்தி முனைவர் கன்னிமுத்து,வாஞ்சிநாதன் ஆகியோர் அப்பாறை ஓவியத்தின் நுட்பத்தை நன்கு விளக்கியுள்ளனர்.தொல் தமிழர்களின் வேட்டையாடும் மற்றும் போர் புரியும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக

    “ஐந்து விரல் விரித்த நிலையில்”

    ஒரு கையின் ஓவியமும் அருகில் ஒரு நீண்ட கோடும் அருகில் சூலம் போன்ற கருவியும் வரையப்பட்டிருப்பதாக (சிவப்பு நிறத்தில்) விவரித்திருக்கிறார்கள்.இது கி.மு 2000 ஆண்டுக்கு முன் உள்ள‌ தொன்மைக்காட்சி ஆகும்.இன்னும் கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன் மொஹஞ்ச தாரோ ஹரப்பா முத்திரைகளில் ஆழ்நிலை தவ நிலையில் உள்ள உருவம் பற்றிய குறிப்பு தமிழ் ஒலிப்பில் இருப்பதாக புதிர் அவிழ்ப்பு (டி சைஃபரிங்)செய்யப்பட்டிருக்கிறது.இயற்கையோடு சிவணிய(பொருந்திய)தமிழனே சிவண் ஆகி சிவன் ஆகி இருப்பானோ என்று நான் (என் சொந்த கருத்து)எண்ணுகிறேன்.அப்படியொரு தலவனே சிவன் ஆகியிருப்பான்.சிவண் என்ற சொல்லே திரிந்து சிரவண் ஆகி தாடி முடி சடையுடன் முனிவன் ஆகியிருக்கலாம். (புலி வேட்டையாடி புலித்தோலை அரைக்கசைத்து பாம்புகளை பழக்கி ஆபரணமாய் சூடிய சிவன்)

    அதன் தொடர்ச்சியானபண்டைய தமிழ‌னின் தொல்லிய சிந்தனை வடிவங்கள் பிற்றை நாட்களில் சித்த வடிவங்கள் ஆகின. இங்கு நான் பெரிதும் கவரப்பெற்றது அந்த ஓவியங்கள் நம் தொல் தமிழ் இனத்தவரான பளிஞர்களால்(பளியர் அல்லது பழையர்) உருவாக்கப்பட்டிருக்கின்றன‌ என ஆய்வாளார்கள் கருதும் செய்தியே ஆகும்.

    அத்தகைய பழைஞர் அல்லது பளிஞர் தலைவன் தன் காதலிக்கு “இரவுக்குறியாக”இந்த பாறை ஓவியத்தையே அடையாளமாகக்காட்டி களவு (காதல்)செய்ததாக விரித்த கற்பனையையே இங்கு “புழைபடு பெருங்கல்” என்ற தலைப்பில் சங்கநடைக்கவிதையாய் ஆக்கியிருக்கிறேன்.

    மேலே குறிப்பிட்ட கட்டுரையாளர் அவர்களுக்கும் “தி இந்து தமிழ்” ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

    புழைபடுப் பெருங்கல்
    ================================================

    oolaisuvadi

    எல்லே கனைகுரல் எரி சொரிந்தாங்கு
    சூர்தரு கோட்டின் முப்பால் ஓவு
    முகடு தோய் மன்ற முளி மள்ளல் நூரி
    பழைய சான்ற பழைஞ காண்தி.
    என் ஐம்பால் தோகை அணிகொள வருடி
    அருள வந்து ஓம்பல் ஆற்றுதி.
    கடுவிரல் ஐவிரல் அறை அறைந்தன்ன‌
    நின்ற ஒண்குறி அளையுனள் ஆகி
    வள்ளிய நிலனும் வன்கல் மன்றும்
    வருத்தியும் உன் வெள்ளி தோன்றுபு
    காணிய எதிர்க்கும் மெய் அழி விதிர்க்கும்.
    பாறைக்கோட்டின் பனிநிறை குறியில்
    நிலவும் கண்சாஅய் மடிகொளத்தோயும்
    வானின் மங்கைக்கும் இடுகுறி இட்டு
    யாங்கண் ஒளித்தனை?வருதி விழிமுன்.
    புழைபடுப் பெருங்கல் பொள்ளும் உருவும்
    தழைபடு நுண்ணிறத் திண்மைக்கவினும்
    நுவலாநின்ற ஊழ்ப்பாடு ஊரே அறியும்.
    என்னில் குழைத்த என் உயிர் வண்ணம்
    நின்னை யூடி என்பு மீமிசை இன்னும் உள்ளில்
    கூரிடும் குருதிச்சோறும் கூர்த்த கூறிடும்.
    எற்றுக்கு பின் விசும்பு நீவு அணங்கு ஈண்டு
    குறி ஓவு தழீஇ கொடுங்காட்சி மல்கும்?

    ==================================================

    பொழிப்புரை

    எல்லே கனைகுரல் எரி சொரிந்தாங்கு
    சூர்தரு கோட்டின் முப்பால் ஓவு
    முகடு தோய் மன்ற முளி மள்ளல் நூரி
    பழைய சான்ற பழைஞ காண்தி.

    குறிஞ்சிகாட்டில் இரவுக்குறி எனும் சந்திப்பு அடையாளத்தில் நின்று கொண்டு தவித்துக்கொண்டிருக்கும் தலைவியின் கூற்று இது.

    காலைக்கதிரவனின் ஒளியில் அக்கதிர்களின் வெப்பம் மிகுந்த தீயே மழை பொழிவது போலவும் விளங்கும் அந்த மலைக்காட்டிலே அச்சம் தரும் கோடு போன்ற ஓவியம் மூன்று கவடுகளாய் (சூலம்) தெரியும்படி பாறைமேடுகள் நிறைந்த மலியின் தலவனே.உன் வலிமை இழைந்து பறைசாற்றி பகைவர்களை சிதறி ஓடச்செய்யும்.அத்தகைய பழமை சான்ற வேட்டைவீரத்தின் பழைஞர் தலைவனே என்னைக்காண விரைவாயாக‌

    என் ஐம்பால் தோகை அணிகொள வருடி
    அருள வந்து ஓம்பல் ஆற்றுதி.
    கடுவிரல் ஐவிரல் அறை அறைந்தன்ன‌
    நின்ற ஒண்குறி அளையுனள் ஆகி
    வள்ளிய நிலனும் வன்கல் மன்றும்
    வருத்தியும் உன் வெள்ளி தோன்றுபு.
    காணிய எதிர்க்கும் மெய் அழி விதிர்க்கும்.

    ஐவகையாய் அழகுபெற என் கூந்தல் வகிடு பிரித்து கிடக்கும் நிலையில் அன்புடன் வந்து அவற்றைக்கோதி காதலுடன் ஆறுதல் காத்து அருள்வாயாக.அதோ அந்த பாறையில் ஐந்து விரல்களைக் கொண்டு பளீரென அறைந்தாற்போல் தோன்றும் அந்த ஓவியத்தைக்குறியாக கொண்டு இங்கு நின்று அலைவுற்றுக்கொண்டிருக்கிறேன்.வள்ளிக்கிழங்கு நிலத்தில் வேரோடி நெருடல் செய்யும்.கடுமை மிக்க கற்களின் மலை மேடுகள் என்முன்னே எதிர்ப்படும்.இத்துயரங்களின் இடையே விடிவெள்ளி போல் தோன்றி நீ வருவாயாக.உன்னைக்கண்டு களிக்கும்வரை என் உடலின் அழகு நலன் சிதைவுற்று மெய் நடுங்குவதைகாண்.

    பாறைக்கோட்டின் பனிநிறை குறியில்
    நிலவும் கண்சாஅய் மடிகொளத்தோயும்
    வானின் மங்கைக்கும் இடுகுறி இட்டு
    யாங்கண் ஒளித்தனை?வருதி விழிமுன்.

    பாறை ஓவியத்தின் கோடுகள் வெம்மை நிறைந்து தகித்தாலும் நம் காதல் சந்திப்புக்குறி காட்டுவதால் குளிர்ந்து அகம் களிக்கச் செய்கிறது.இதில் நிலவுகூட வந்து கண் உறங்கி உறவாடும் போல் இருக்கிறது.அதனால் இந்த வானம் என்ற அந்த பரந்த மங்கைக்கும் இந்த இரவுக்குறி காட்டினாயா என்ன? இவையெல்லாம் செய்து விட்டு நீ எங்கு ஒளிந்திருக்கிறாய்.உடனே என் கண் முன் வந்துவிடு.

    புழைபடுப் பெருங்கல் பொள்ளும் உருவும்
    தழைபடு நுண்ணிறத் திண்மைக்கவினும்
    நுவலாநின்ற ஊழ்ப்பாடு ஊரே அறியும்.

    பிளவு பட்ட மலையிடுக்குகளில் அகன்ற பாறையில் செதுக்கிய அல்லது கீறல் செய்த ஓவிய வடிவங்கள் நுட்பமான செய்திகள் அடங்கிய சில இலை தழைகளின் வண்ணங்கள் குழைத்து செய்யப்பட்டவை.அதனால் அவை காலத்தால் அழியாத உறுதியான‌ எழில்நலம் கொண்டவை.அவை பறை சாற்றும் தொன்மைச்சான்றுகள் பற்றி இந்த ஊரால் எப்போதும் அறியப்படும் தன்மையுடையன.

    என்னில் குழைத்த என் உயிர் வண்ணம்
    நின்னை யூடி என்பு மீமிசை இன்னும் உள்ளில்
    கூரிடும் குருதிச்சோறும் கூர்த்த கூறிடும்.
    எற்றுக்கு பின் விசும்பு நீவு அணங்கு ஈண்டு
    குறி ஓவு தழீஇ கொடுங்காட்சி மல்கும்?

    நீ என்னைக்குழைத்து என் உயிர்வண்ணம் பூசிய‌ ஓவியமாகத்தான் இதனைக்காண்கிறேன்.உன்னை ஊடுருவி எலும்புக்குள்ளும் உறைந்து அதற்கும் மேலாய் உன் உள்ளமும் புகுந்து பிளந்து இரத்தத்தின் சத்துக்குள்ளும் நிலைகொண்டு நங்கூரம் இட்டு உன் எண்ணக்கூறுகளில் விரவி நிற்பேன்.அப்படி இருக்க வானம் முழுதும் வட்டமிடும் இந்த பேய்த்தழுவல்கள் எப்படி இந்த குறியில் வந்து படர்ந்து நின்று கொடிய காட்சிகளை மருட்காட்சிகளாய் என் முன் காட்டி நிற்கும்? அவை ஒழிந்து மறையட்டும்.

    ================================================================================

    Share
  • ஓலைத்துடிப்புகள் (6)

    கவிஞர் ருத்ரா

    சென்ற இதழில் ஓலைத்துடிப்புகள் (5)ன் பாடலுக்கு உரிய பொழிப்புரையுடன் இங்கு தொடங்குகிறேன்.

    oolaisuvadi

    பொழிப்புரை
    =========================

    கடவுள் வழங்கு கையறு கங்குல்

    வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
    வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
    தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
    ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
    பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.

    அந்த அடர்ந்த காட்டில் வேங்கைமரம் தழுவிய இடத்தில் புலி போன்ற வீரம் செறிந்த மார்பனான என் தலைவன் அன்றொரு நாளில்
    அவன் சொல்லிய இரவுக்குறி சந்திப்பின் போது என்னைத்தழுவி குளிர்ச்சி பொருந்தியதாய் சிறைப்படுத்தினான்.அந்த நடுக்கத்தில்
    என் ஊனை உருக்கி எலும்பை முறுக்கும் நீண்ட மலைப்பாம்பாய் என் உயிரையே (அவன் உயிரால்) சுற்றிகொண்டது போல்
    ஒரு காதல் நோய் ஏற்படுத்திவிட்டான்.

    செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
    செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
    ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
    துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
    கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
    புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
    அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.

    கடற்கரையை ஒட்டிய செருந்தி எனும் மரம் தாழ்ந்து தன் கிளைகளை நீட்ட அதில் பூத்த பூக்கள் சிலிர்த்தன போல (ஒரு வித நாணத்தில்)
    மெய்விதிர்ப்புற விழிகள் எனும் இதழ்களை மூடிக்கொள்ளும்.அவன் அங்கு என்னை பார்த்த ஒரு பார்வை இருக்கிறதே அது தூண்டில் போல்
    என்னை இரையாக்கிக்கொள்ளும்.அதனால் நான் துடித்து துடித்து துயரம் கொள்ள அந்த நீண்ட இரவே என்னை கொன்றுவிடும்.மறுநாள்
    காலை மலையிடையே எழுந்த கதிரவன் தன் ஒளிக்கதிரால் (கல் கனை) எங்கும் காறி உமிழ்ந்தாற்போல சிறுமதி படைத்த ஊர்மக்கள்
    நெருக்கி நின்று தெருக்களில் கூடி பழிச்சொல் பேசி பரப்பி என்னை அறுப்பது போன்ற வலியை என் மீது கூட்டும்.

    கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
    நையக்கொண்டு துவல்பட வீழும்.
    தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
    அன்ன அலரின் புண் படுத்தாங்கு
    அவியும் வாழும் புல்லென செத்து.
    “கடவள் வழங்கு கையறு கங்குல்”
    ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க‌
    பிணியா நின்று பிறள்தல் போலும்
    என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.

    கரும்பு ஆலையின் வாய்பட்டு பிழி பட்டு சக்கையாகி துவண்டு சிதறி வீழ்ந்து துன்புறுவேன். முள் நிறைந்த “தில்லை”மரம் ஏறுபவர்கள் முள்ளினால் துன்பம் உறுவது போல் இந்த பழிச்சொற்கள் என்னை புண்படுத்த நான் கீழ்மைநிலை அடைந்தாற்போல் (புன்மை செத்து) இறந்தேன் மீண்டும் உயிர்த்தேன்.இந்த இரட்டைநிலையை நான் எதனுடன் ஒப்பிடுவது? அந்த நெடிய நள்ளிரவின் வானம் வெறுமையாய் தோன்றும் இந்த‌ துன்பத்தின் ஒரு இயலாத்தன்மைதான் கடவுளா? அல்லது அந்த உருவமற்ற இருட்பிழம்பு தான் கடவுளா?(கடவுள் வழங்கு கையறு கங்குல்)என்று நான் மயக்கமும் கலக்கமும் அடைகிறேன்.என் உடம்போடு கலந்து எனைத் துயர் செய்யும் அவன் உயிர் அப்படி ஒரு உருவமற்ற கையறுநிலையை எனக்கு ஊட்டுகிறது.இது எப்படி இருக்கிறது என்றால் கடவுள் பற்றி ஓதும் சான்றோர்களின் சிந்தனைக்குள் அவர்களின் சொற்களுக்குள் அடிக்கடி ஒலிக்கப்பட்ட போதும் (சொல்லில் ஊழ்க்க) கட்டுப்படாமல் பிறள்ந்து வழுக்கிக்கொண்டு ஓடிவிடும் கடவுளைப்போன்றதே ஆகும்.

    திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
    வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
    அலரி மூசும் அழல் வெங்காட்டின்
    அலைபடு புள்ளென‌ அழியும் என்கவினே.
    எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
    தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
    குவவு மணற் குடுமி கோவை தோறும்
    குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன‌
    எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.

    வெட்ட வெளிபோன்ற வானம் என் உடம்பில் படர்ந்த தேமல் போல் ஆங்காங்கே ஒளியும் நிழலும் புள்ளிகளாய் பரவி கறை பட்டது போல் பழிச்சொல் எனும் அலரி (அலரி என்பது கரும்பின் சிறு சிறு வெண் பூ போன்றது.அது சிதறினால் காற்றில் தூசு போல் பரவும்) மொய்க்கும்.அப்போது தீப்பற்றிய காட்டில் பறவைகள் அங்கும் மிங்கும் சிதறி ஓடுவது போல் என் மேனியழகு பாழ்படும்.அந்த அலர் எனும் பழிச்சொல் ஒலி கேட்டு பூந்தாது உண்ணும் தும்பிகள் கூட வெறித்து ஓடும்.குவியல் குவியலாகி (குவவு) கிடக்கும் மணற் குப்பங்கள் (குடுமி) ஏற்படுத்திய மேடுகளின் குவியல்கள் தோறும் நாரைகள் தின்று மிஞ்சிய ஆமை ஓடுகள் பரந்து கிடப்பதைப்போல துயரம் செய்யும் இந்த அலரிகள் கூச்சல்கள் எழுப்பும் ஒரு தீ போன்ற வெம்மையை அங்கே பரவ விட்டுக்கொண்டிருக்கும்.

    ===========================================================================================

    “பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
    துறைபடி அம்பி அகமணை ஈனும்”
    ……

    ஐங்குறு நூற்றின் 168 ஆம் பாடல் இது.அம்மூவனார் பாடிய கற்பனை வளம் செறிந்த ஒப்பற்ற வரிகள் இவை..இதில் வரும் கடற்கரை காட்சியில் அடுக்கு அடுக்காய் சித்திரங்கள் விரிவது போல் காட்சியை நான் கண்டு களிக்கலாம்.வெள்ளைக்காக்காய் பார்த்தேன் என்றால் நம்மை மேலும் கீழும் பார்க்கும் இன்றைய தமிழர்கள் அப்படித்தான் பார்த்திருப்பார்களோ அம்மூவனாரை? ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள சீ கல் எனும் “அந்த சிறுவெண் காக்கைகளை” கூர்ந்து கவனித்திருப்பார் போலும்.யார் கண்டது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள சிவப்புத் தமிழர்களே செவ்விந்தியர்களாக இருந்திருக்கலாம்.அந்த சிறுவெண் காக்கை கூடு கட்டும் இடம் “துறைபடி அம்பி அகமணை” ஆகும்.கரையில் பழசாகிப்போன படகுகளை (அம்பி) அப்படியே விட்டு விடுவார்கள்.அதுவே துறை படி அம்பி ஆகும்.அதில் உள்ள குறுக்குக்கட்டைகள் அமர்வதற்கு உள்ளவை.அது தான் “மணை” எனப்படுகிறது.இன்றும் “மணை” என்றால் சாப்பிட மட்டும் அல்லாமல் காய்கறி அரியும் போதும்(அரிவாள் மணை) அமர்வதும் அதுவே தான்.இது மட்டுமா? வாழ்க்கையில் மங்கலம் தொடங்கும் மணமேடையில் கூட “மணையில்”தான் பெண்ணும் மாப்பிள்ளையும் மணையில் அமர்ந்து தான் தொடங்குகிறார்கள்.அந்த “அம்பி”மணையில் அவ்வளவு நுட்பம் இருக்கிறது.”ஈனும்” என்பதும் கூட சிறுவெண் காக்கைகள் அங்கே தங்கள் இல்லம் தொடங்க கூடு கட்டி குஞ்சுகள் ஈனுவதை குறிக்கும்.பறவைக்கூடு தானே அதற்கு “அருமணை” (அரியதாக அங்கே கட்டப்படும் கூடு என்ற பொருளில்) அம்மூவனார் எழுதியிருக்கலாமே.மனித வாழ்க்கையையே அந்த சிறு வெண் காக்கைக்கு ஏற்றி (வீடு…. உள்ளம் என்று பொருள் பட) “அக மணை” என்றல்லவா எழுத்தாணியைக்கொண்டு கீறியிருக்கிறார்.இங்கு மேலோட்டமாய் உள்ளடங்கி இருக்கும் மணை என்று உரை செய்தாலும் “அக நானூற்றின்” காதல் மணம் அந்த மணையில் அவற்றிக்கு கூடு கட்ட உந்து விசை ஆகி இருக்கிறது என்று “உள்ளுரையும்” அதில் உளது.படகுகள் இரு முனையும் கூராக இருப்பதால் அவற்றிற்கு அம்பு என்ற சொல் வழங்குவது நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.கூராக கிழித்துச் செல்லக்கூடியவை “அம்பி” என சொல்லப்படுகிறது.அம்பு இங்கு “நீருக்கும்” ஆகி வரும் ஆகுபெயர் எனலாம்.தண்ணீர் என்ற சொல்லுக்கு அம்பு என்ற சொல் நமக்கு அப்பு (இடைப்போலி) என்றும் வழங்கப்பட்டிருக்கலாம்.வடமொழியில் அப்பு என்று ஆகியிருப்பதன் உட்குறிப்பில் தமிழின் தொன்மை நன்கு வெளிப்படுகிறது.

    தமிழ்ச்சொல்லின் இந்த “அம்பியின்” அம்பு என்னில் தைத்தையே இங்கு சங்கநடைக்கவிதை ஆக்கியிருக்கிறேன்.

    துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌

    தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
    கொடுவரி முதலை குடை தண் துறைய‌
    குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
    உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
    பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
    அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
    அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்
    வேங்கை வரித்த திண்கால் ஓமை
    அசைவுறு காலை முரண்தர முரலும்
    அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
    அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.
    அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌
    துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌
    ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு
    மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.
    புலம்பல் காலொடு புள் ஓர்த்து நின்று
    என்று வருங்கொல்? இடமெது?தடமெது?
    குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது
    குழைஇழையாடும் மழைக்கண் தோழி.

    பொழிப்புரை

    தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
    கொடுவரி முதலை குடை தண் துறைய‌
    குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
    உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
    பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

    தான் ஈன்ற குட்டிகளை தானே தின்னும் இயல்புடையது முதலை. மேல் தோல் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைப் போன்றும் வரிகளைக் கொண்டதுமான மேல் தோலை உடைய முதலை மூழ்கி மூழ்கி குளிக்கும் ஆற்றுத்துறையை உடையவனாகிய தலைவனே.ஒரு நாள் அவன் வருவான் என செய்திக்குறி அனுப்பியும் இந்த நீண்ட நெடும் இரவில் வராமல் இருந்துவிட்டான்.தூக்கம் தொலைத்து நான் மாய்ந்து விட்டேன்.என் உடலை உயிர் தின்னுவது போலவும் உயிரை உடல் தின்னுவது போலவும் எனக்கு நோய் தந்து என்னை ஆட்கொண்டு எங்கு சென்றாய்? தலைவனை நோக்கி தலைவி கேட்பது போன்ற கூற்று இது.

    அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
    அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கம்
    வேங்கை வரித்த திண்கால் ஓமை
    அசைவுறு காலை முரண்தர முரலும்
    அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
    அலமரல் செய்யும் அயற்சினை சேரும்.

    கடற்கரையில் உள்ள ஒரு காட்சி அங்கே விரிகிறது.அளத்தல்(முகவை) பாத்திரமான மரக்கால் எனும் அம்பணம் ஒன்றை கவிழ்த்துப்போட்டது போன்ற ஆமையின் முதுகுப்புறத்தில் அடிக்கடி விட்டு விட்டு குரல் எழுப்பும் நாரை (குருகு) ஒன்று நிற்கிறது.அது சிலம்பின் பரல் ஒலி போல் ஓசை எழுப்புகிறது.அந்த ஒழுங்கான ஓசை திடீரென்று முரண்பட்டு ஒலிக்கிறது.ஏனெனில் வேங்கை மரத்து பட்டை வரிகளைப்போன்ற அமைப்புடைய ஆமையின் உறுதியான கால்கள் நகர்வுற்ற பொழுது நாரை அவ்வாறு கூச்சல் இட்டது.ஆமை முதுகில் ஒரு நில அதிர்வு போல நிகழ்ந்த அந்த அச்சத்தில் சிறகை பட பட என்று அடித்துக்கொண்டு நாரை கலக்கம் அடைந்து அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் தஞ்சம் அடைகிறது.தலைவன் வராமல் விட்டது அவளுக்கு உள் மனத்தில் அப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டதை உட்குறிப்பாய் இக்காட்சி உணர்த்துகிறது.நரைக்கு தஞ்சம் கிடைத்தது போல் தலைவன் மீண்டும் அவளிடம் வந்து விடுவானா? அடுத்துவரும் வரிகள் அதை விவரிக்கின்றன.

    அள்ளல் அடைசேர் இருங்கழிப் பால‌
    துறைபடி அம்பி பாயல் மறந்தன்ன‌
    ஞாழற்பூவின் பொன்பொறி சுணங்கு
    மெய்யது பொள்ளி பொய்யது பூக்கும்.
    புலம்பல் காலொடு புள் ஓர்த்து நிற்கும்.
    என்று வருங்கொல்? இடமெது?தடமெது?
    குறி நெடுங்கணக்கின் தொல் கேள் இஃது
    குழைஇழையாடும் மழைக்கண் தோழி.

    சேறு அடைந்த உப்பங்கழியின் பக்கம் சார்ந்த (இருங்கழிப் பால)அந்த‌ கரையில் நெடுநாளாய் கிடப்பில் கிடக்கும்(பழைய) படகு (அம்பி) தனக்கே உரிய நீரில் செல்லும் பாய்ச்சலை மறந்து கிடந்தாற்போல‌ தலைவி துயரம் தோய்ந்து கிடக்கிறாள்.அதனால் அதை தோழியிடம் இவ்விதம் கூறுகிறாள்.பொன் போன்ற மஞ்சள் நிற (கடற்கரையின்)ஞாழற் பூவின் படர்ந்த புள்ளிகள் போன்ற தேமல் (இப்பசலை நோயில்)உடம்பு முழுதும் சிற்பம் செதுக்கியது போல் (மெய்யது பொள்ளி…பொள்ளி என்றால் செதுக்கி என்று பொருள்) பொய்மைப்பூக்கள் படர்ந்தாற்போல் தோன்றும்.அதனால் நான் காற்றின் ஒலியில் ஒரு புலம்பல் கேட்டு துன்புறுவேன்.வானத்தை வெறித்து பறவைகள் பறப்பதை கூர்மையோடு உற்றுநோக்கி என்னை ஆற்றிக்கொள்ளப் பார்ப்பேன். இருப்பினும் தோழி!அவன் மீண்டும் என்று வருவான்? எந்த இடத்துக்கு எந்த வழியில் வருவான்?என உன்னை அந்த இரவு சந்திப்பு அடையாளத்தின் நெடியதோர் கணிப்பைப்பற்றி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பேன் (தொண தொண வென்று).செவிகளில் ஆடும் அழகான குழையணிந்தவளே! குளிர்பார்வையால் என்னை களிப்பூட்டுவளே!.இப்படி கேள்வி கேட்பது தானே தலைவிகள் எனும் இந்த இரக்கத்துக்குரிய காதலிகளின் பண்டைய வழக்கமான கேள்வி (தொல் கேள்)கேட்கும் தன்மைகள்.

    ================================================================================================

    Share
  • ஓலைத்துடிப்புகள் (5)

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    “கடவுள் வழங்கு கையறு கங்குல்”

    மேலே கண்ட சொற்றொடர் கொண்டிருக்கும் பொருள் அகலமானது ஆழமானது. இயற்கையில் உள்ள மறைபொருள் அவ்வப்போது அந்தந்தக் காட்சிகளில் உணர்த்தும் இயல்புகள் மனித சிந்தனையில் கடந்து உள் செல்லும்; நிற்கும். கடவுள் என்ற சொல் தெய்வம் என்று பொருள் படுவதைவிட இத்தகைய நுண்மை நோக்கிய இயற்கை உணர்வுகள் வெளிப்படுவதை சங்கச் செய்யுட்களில் நிறையவே காணலாம்.

    இருப்பினும் “ஓதல் அந்தணர் வேதம் பாட”என்ற வரிகளோடு பொறுத்திப்பார்க்கும்போது சங்கத் தமிழ்ப்புலவர்களின் மெய்யறிவும் இறை உள்ளுணர்வும் எத்துணை நுண்மாண் நுழைபுலம் கொண்டிருக்கிறது என்று புலப்படும்.

    பிறமம் அதாவது முதல் பிறப்பும் அந்த முதல் அண்டப் பொருளும் என்ன? என்ற கேள்விகளில் தான் வேதாந்தம் இன்னும்
    இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலாமலும் அல்லது வைக்காமலேயே அதைத் தேடிக்கொண்டிரு என்ற உட்குறிப்பில் அப்படியே சிந்தித்துக்கொண்டிரு என்றும் இருப்பதாக நாம் கொள்ளலாம். எனவே ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாய் தூங்கிக்கிடக்கும் அந்த இரவு தான் கடவுள் நிலை என்பதும் தத்துவ வல்லுனர்கள் கூறும் அந்த “வெறுமை” நிலை தான் கடவுள் தன்மையைக்காட்டும் நிலை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம். கையறு நிலை என்பது மிக மிக ஆழமான அருமையான சொல்.கடவுள் திட உருவமாய் நம் முன் தோன்றி அருளும் வலிமையில்லாத ஒரு “நிழல் இருள்” தோற்றமே நம் ஆழ்துயில் நிலையில் இருப்பது. இதில் பலப்பல வண்ணங்கள் காட்டும் தோற்ற மயக்கமே (ஹாலுசினேஷன்) கடவுள் எனும் கருத்தோட்டமாக இருக்கிறது. இதை வெளிப்படுத்திய ஓதல் ஆந்தையார் என்ற புலவரும் “ஓதல்” தொழில் செய்பவராக இருக்கலாம். (ஆதனின் தந்தையார் அல்லது ஆதனை தந்தையாகக் கொண்டிருப்பவர் என்றும் நாம் கொள்ளலாம்) ஓதல் புரியும் ஆதனின் தந்தையே இப்புலவர் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஓதல் ஓதம்… இதுவே வேதம் ஆகியிருக்குமோ?

    தமிழ் நாட்டின் தற்போதைய ஓதுவார்கள் அந்த “ஓதல் ஆந்தையாரின்” சுவடு பற்றியவர்களாக இருக்கலாம்.

    சரி.போகட்டும்.இப்போது “தலைவி” தலைவனோடு களவு (காதல்) இழைந்ததில் ஊர்ப்பழியாகி அந்த சுடுசொற்கள் (அலர்) அவளை மிகவும் துயர் உறச்செய்து பொறுக்க முடியாத நிலையில் நள்ளிரவில் வானத்தை உற்று நோக்குகிறாள்.வானம் ஒளியை அடையாது அல்லது மறைக்கப்பட்டு வலிமையற்ற(கையறு நிலையில்) ஒரு இருள் பிண்டமாக ஒரு “உருவெளி மயக்கப் பிழம்பாக”ப் பார்க்கிறாள். இதை கடவுள் என்பது ஒரு வழக்கம் என்கிறாற்போல் இச்சொல் வழங்கப்படுகிறது.இந்தப் பின்னணியில் நம் சங்கதமிழ்ச்சுவடிகளில் அதிர்ந்து கிடக்கும் ஒரு வகைத் துடிப்புகளையே இப்போது இயற்றியிருக்கிறேன்.

    பாடல் இதோ. பொழிப்புரை தொடரும். 

    கடவுள் வழங்கு கையறு கங்குல் 

    வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
    வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
    தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
    ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
    பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.
    செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
    செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
    ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
    துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
    கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
    புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
    அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.
    கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
    நையக்கொண்டு துவல்பட வீழும்.
    தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
    அன்ன அலரின் புண் படுத்தாங்கு
    அவியும் வாழும் புல்லென செத்து.
    “கடவள் வழங்கு கையறு கங்குல்”
    ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க‌
    பிணியா நின்று பிறள்தல் போலும்
    என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.
    திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
    வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
    அலரி மூசும் அழல் வெங்காட்டின்
    அலைபடு புள்ளென‌ அழியும் என்கவினே.
    எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
    தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
    குவவு மணற் குடுமி கோவை தோறும்
    குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன‌
    எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.

    ================================================

    Share
  • அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்!

    -கவிஞர் ருத்ரா

    அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்
    என் நரம்பில் தெறித்த பூவாணமாய்ப்
    பூத்தையல் போட்ட புது வானமாய்!
    அப்படி என்ன சொல்லி விட்டேன்?              rudra1poovanam
    நான் உன்னைக் காதலிக்கிறேன்
    நீ என்னைக் காதலிக்கிறாயா? என்று

    அது என்ன பண்டமாற்றா?
    நீ கேட்டாய்!
    ஏதாவது ஒரு வாக்கியத்தைத்தான்
    நான் சொல்லியிருக்க வேண்டும்!
    நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
    நிறுத்தியிருந்தால்
    அதற்கும் நீ சிரித்திருப்பாய்
    ஆனால் அதற்கப்புறம்
    உன் தூக்கம்
    சூடான தோசைக்கல்லில் உடைத்த‌
    ஹாப் பாயிலாய்
    சிதைந்து
    மஞ்சளும் வெள்ளையுமாய்
    ரங்கோலி ஆகியிருக்கும்!

    உன் எம் எம் ஃபோம் கூடச்‌
    சுநாமியாய்
    எங்கோ உன்னைச் சுருட்டி வீசியிருக்கும்
    மறுநாள் என்னைப் பார்க்கும் ஆவலில்
    கல்லூரி வகுப்புக்குள்
    என்னை எதிர்பார்த்து ஆவலுடன்
    விழித்தூண்டில் வீசிக்கொண்டு
    கண்ணுக்குத் தெரியாத அந்த “தக்கையில்”
    கண்பூத்து நின்றிருப்பாய்!

    நான் வந்தவுடன் என்னைப் பார்த்தவுடன்
    அதே அலட்சியம்…
    வேறு ஒரு விட்டம் நோக்கி
    வெறும் பார்வை
    அப்போதும் இதே சிரிப்பு…

    நான் கண்டுபிடித்து விட்டேன்
    அந்தக் கதிர்வீச்சின் கண்ணாடி இழைக்கீற்றுகளில்
    ஊமையாய்
    ரகசியமாய்
    ஒரு கண்ணீர்த்துளி
    முத்துக்கோத்துக்கொண்டிருப்பதை
    அது போதும்!

    அதற்கே நான்
    லுங்கி இல்லாமலேயே
    லுங்கி இருப்பதாய்
    உயர்த்திக்காட்டிக் காட்டி ஆடிக்கொண்டிருப்பேன்
    நீ வெடுக்கென்று திரும்பினாலும்
    அங்கு ஒரு “க்ளுக்” சிரிப்பு
    எனக்கு பன்னீர் தெளித்துக்கொண்டிருக்கும் என்று!

     

    Share
  • அலை

    -கவிஞர் ருத்ரா

    அலையா? கடலா?
    எது நீ சொல்?
    முட்டாளே!
    ஒன்று தானே இன்னொன்று!
    ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை           rudra
    ஹா!ஹா!ஹா!
    யாரை ஏமாற்றுகிறாய்?

    நீ
    காதலா? பெண்ணா? சொல்!
    இரண்டும்தான்
    அடிப்பாவி!
    என்ன ஏமாற்று வேலை?
    பெண்களையெல்லாம் தேடினேன்…பார்த்தேன்
    அங்கே காதல் இல்லை!

    காதலையெல்லாம் தேடினேன்…தேடினேன்
    அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது
    அடி முட்டாளே!
    எங்காவது ஒரு இதயம் துடிக்க‌க்
    கேட்டிருக்கிறாயா?
    அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?
    அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்
    ஆயிரம் ஆயிரம்
    ரோஜா இதழ் அடுக்குகளாய்
    உணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா?
    அது வரை
    நீ கல்தான்!
    அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்
    கல்தான்!

    உன் அருகே
    ஒரு பச்சைப்புல்
    உன்னைப்பார்த்துக் கேலியாய்ச்
    சிரிப்பதைப் புரிந்துகொள்ளும்
    ஒரு மெல்லிய மின்னல்
    என்று உன்னைத்தாக்குகிறதோ
    அன்று
    நீயே…காதலின்
    கடல்!
    நீயே..காதலின்
    அலை!

     

    Share
  • மனங்கனிந்த வாழ்த்துகள்

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்த “வல்லமை”க்கு வாழ்த்துக்கள்.

     

    இந்த “ஆறு” பெருகி
    எழுத்துக்களின்
    காவிரிக்கும்
    பூவிரிக்கும்
    தமிழின் மணம் விரிக்கும்.
    “சொல் பொருது”இரங்கும்
    மல்லல் பேர் யாறாய்
    நம் மனம் உள் பொருந்தி
    மகிழ்ச்சி நிறைக்கும்.
    இயக்கும் ஆசிரியர் குழுவுக்கும் படைப்பாளி நண்பர்கள் யாவருக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன் ருத்ரா

     

    Share
  • பொறுத்திருந்து பார்ப்போம்

    -கவிஞர் ருத்ரா

    நிழலைத் தேடி நடக்கிறேன்
    நேற்றுச் சொற்பொழிவில்தான் சொன்னார்கள்
    எனக்குள்ளே
    மாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று!

    கடவுள் தேடிக் கைகூப்பினேன்
    முதுகுக்குப்பின்னே
    எல்லாவேதங்களையும் மூட்டைகட்டி வைத்திருப்பதாய்
    ஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்

    காதலில் விழுந்தேன்
    அவள் சிதறிய புன்முறுவலே போதுமானது
    மின்னல் விழுதூன்ற‌
    தலையணை முகட்டினிலே
    தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்

    வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கேட்டேன்
    அகராதி புரட்டப்போனவர்கள்
    கல்லறைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

    என்னைச்சுற்றி
    என்னையும் சேர்த்துத்தான்
    அநியாயங்களும் அக்கிரமங்களும்
    மலிந்து போயினவே
    என்ன செய்ய‌?
    என்று அவர்களைக்கேட்டேன்

    கையில் நிறைய
    வில் அம்புகளையும்
    மழுவாயுதங்களையும்
    கோடரிகளையும் கலப்பைகளையும்
    சங்கு சக்கரங்களையும்
    மயிற்பீலி கிரீடங்களையும்
    கொடுத்தார்கள்
    நீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று
    ’சரி’ என்று கிளம்பினேன்
    நில்!
    இதையும் எடுத்துக்கொள்!

    என்ன இது?
    அரிதாரம் என்றார்கள்!
    இதோ
    அதை அங்கே தூவுகிறேன்
    நம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்
    பொறுத்திருந்து பார்ப்போம்!

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் (4)

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi
    கண்டிகும் அல்லமோ கொண்க‍ நின் கேளே?
    தெண்டிரை பாவை வௌவ‌
    உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

    கற்பனை நயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர் அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய “தெண்டிரை பாவை” எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது. அதில் கிடைக்கும்”தெள்ளிய மண்ணில்” பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டவே இந்த சங்கநடைக் கவிதையை யாத்து உள்ளேன்.

    (தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி
    சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)

    இலஞ்சி பழனத்தவள்

    இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
    முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
    கடாஅய்ச் செல்லும் இருப்பணைத் தோள!
    அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
    வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
    அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
    தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
    தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
    மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
    அளியள் காண்குவை.விரைதி விரைதி.
    குவளையுள் குவளை பல்மழை தூஉய்
    மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
    ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
    முதிர் தகையன்று அறிதி அறிதி.
    பால் இழி தாமரை காமர் புரையா
    ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
    பாவை கையில் மற்றொரு பாவை
    படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
    பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

    ===============================================

    பொழிப்புரை

    ===============================================

    இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
    முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
    கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
    அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
    வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
    அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!

    உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின் கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை மிகுந்த காட்டுவழியில் கடந்து செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து வேதனை உறுகிறது.

    தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
    தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
    மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
    அளியள் காண்குவை.விரைதி விரைதி.
    திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
    நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

    கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவே விரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம் திரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.

    குவளையுள் குவளை பல்மழை தூஉய்
    மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
    ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
    முதிர் தகையன்று அறிதி அறிதி.
    பால் இழி தாமரை காமர் புரையா
    ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
    பாவை கையில் மற்றொரு பாவை
    படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
    பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

    அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.
    இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள். அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப்போனாலும் இவள் பொம்மை அல்ல. அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப் பெண் அல்ல‌.

    தொடருவோம்…

    Share
  • ஓலைத்துடிப்புகள் – (3)

    ருத்ரா

    oolaisuvadi

    சங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன் பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோடையை.அதில் “கல்” “உயிர்” என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது.இவற்றிற்கு”ஒலி” என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த “வேர்” வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.

    அவன் அவிழ் ஒரு சொல்

    இடி உமிழ்பு இரும்பிழி வானம்
    இயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்
    நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
    கான்றல் பூ காந்தள் விரி இணர்
    காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
    ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
    நோதல்மன் என்செயும் முயங்கு இழைத்தோழி.

    =====================================================

    பொழிப்புரை
    =====================================================

    குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
    நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
    நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
    பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
    பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
    நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
    அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
    நரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்
    நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
    அற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.

    குட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து “பொதிகை”என அழைக்கப்படும்.அந்த மலையின் அருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.

    கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
    கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
    அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு தூஉய்
    எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
    புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
    புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
    ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
    மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.

    கல்லிலிருந்து ஒலிக்கும். உயிரிலிருந்தும் ஒலிக்கும். என்ன அந்த நுண்ணொலி?

    அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது. விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும் நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை வருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று விழும். ஒவ்வோரு பருவத்தேயும் பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும் விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே.அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.

    இடி உமிழ்பு இரும்பிழி வானம்
    இயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்
    நாள் ஈரும் வாளது கூர்முள்
    என்றுகொல் மலர்தலை சீர்க்கும்?
    நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
    கான்றல் பூ காந்தள் விரி இணர்
    காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
    ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
    நோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.

    இடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல் அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும்? அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும் பூவின் கொத்துகளாய் இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.

    Share
  • கோபுலு

    ருத்ரா

    26mplead2_jpg_370166g
    மனித சித்திரங்களை
    கார்ட்டூன்கள் ஆக்கினார்.
    கதைகளும் நாவல்களும்
    இவர் கோடுகளிலும் சுழிகளிலும் வந்து
    முற்றுப்பெற்றன.
    எத்தனை முகங்கள்?
    அவை காட்டும் அகங்கள்
    அத்தனையும்
    இந்த பென்சில் பிரம்மா
    படைத்தது.
    எழுத்துக்களை அவர்கள் தந்தார்கள்
    துடிப்புகளை
    இவர் தூரிகை தந்தது.
    தேவன்
    லெட்சுமி
    தி.ஜானகிராமன்
    ஜெக சிற்பியன்
    ஜெயகாந்தன்
    இவையெல்லாம்
    புகழ்பெற்ற பேனாக்கள்.
    பத்திரிகை பக்கங்களில்
    இவர் கோடுகளில்
    அவை பரிணாம‌ம் கொண்டன‌
    பிரமிக்க வைத்த படைப்புகளாய்.
    அவர் கார்ட்டூன்களில்
    நாப்பதுகள் அம்பதுகள் அறுபதுகள்
    என்று
    வருடங்களின்
    அரசியல் வர்ணங்களும்
    சரித்திர காரணங்களும்
    அங்குலம் அங்குலமாய்
    அசை போட்டுக்காட்டின.
    அவர் பென்சில் கீற்றுகளிலும்
    சமுதாய நாற்றுகள் காற்று வீசின.
    ஆனந்த விகடனின் முத்திரைகளில்
    ஜெயகாந்தன் இருந்தாலும்
    அவற்றின் முகத்திரைகளில்
    கோபுலுவே கொலுவிருந்தார்.
    இருவருக்கும்
    இப்போது விழுந்தது திரை மட்டுமே.
    எழுத்தும் கோடும்
    வெறும் உடல் அல்ல‌
    பொசுங்குவதற்கு.

    =================================================

    Share