“தூண்டிற் புழுவினைப்போல்
சுடர் விளைக்கினைப் போல்”
பெண் மனத்தின் துடிப்பை அறியத்
தூண்டில் முள்ளில்
கழுவில் ஏறி எழுதியிருப்பானோ
பாரதி?!
அந்தக்காற்றின்
பேய்க்கூந்தல் ஆட்டத்தில்
அந்தச் சுடர்ப்பிஞ்சு உருவில்
கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருப்பானோ
பாரதி?!
காதலுக்குள் கண்ணம்மாவையும்
கண்ணம்மாவுக்குள் காதலையும்
ஒரு மெல்லிய மயிற்பீலி வருடும்
காற்றின்
ஆயிரமாயிரம்
ரோஜா இதழ் அடுக்கில்
ஊடுருவிக்கொண்டானோ
பாரதி?!
ஏதோ ஒரு ஓலைப்பந்தலின்
பெரிய கீற்று ஒன்றும்
சிறிய கீற்று ஒன்றும்
காற்றில் ஆட
அந்த ஊற்றில் நுழைந்து
வள்ளி முருகன் கல்யாணம்
கண்டு களித்து
வசன கவிதை புனைந்தானே
பாரதி!
அவன் எழுத்துக்கள் அத்தனையும்
உயிர்.
அவன் எழுத்துக்கள் அத்தனையும்
மெய்.
பாரதி எனும் உயிர்மெய் இன்பத்தமிழ்
பார்த்தசாரதி கோவில் யானையுடனா
முற்றுப்புள்ளி பெற்றது?
அந்த ஆவேசத்தமிழை
ஒரு கோவிலோடு முடிச்சுப்போடும்
ஆத்திகத்தமிழ் இல்லை
அவன் தமிழ்.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்று அவன் எறிந்த கேள்வியில்
நம் ஆகஸ்டு பதினைந்துகள்
இன்னும் கொழுந்து விட்டுக்கொண்டுதான்
இருக்கின்றன!
ஓ! மனிதா!
இந்த “மந்தைத்தனத்திலிருந்து”
மனிதனாய்
உன் விலங்கொடித்துச்
சிறகடிப்பது எந்நாளோ?
என்ற ஏக்கமும்
அந்தத் தூண்டிற்புழுவிலும்
சுடர் விளக்கிலும்
இழையாடுகிறது.
வெறும்
முண்டாசு உருவம் அல்ல அவன்!
கொடுமைகளை
முட்டித்தள்ளும் உணர்வு அவன்!
நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சி. பட்டப்படிப்பில் முதன்மையாகத் தேறி (கூட்டுறவு/பொருளாதாரம்) மாண்புமிகு வி.வி.கிரி அவர்களால் தங்கப்பதக்கம் விருது பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்ததும் ‘நான் டெஸ்ட் கேடகரி’ (NON -TEST CATEGORY) எல்.ஐ.சி யில் தேர்வு ஆகி பணியில் (1966) சேர்ந்து பணி முடித்து1999 ல் விருப்பு ஓய்வும் பெற்று விட்டேன் பணியின் போது தனிப்பட்ட முறையில்1975ல் எம்.ஏ.பொருளாதாரம முதல் வகுப்பில் தேறினேன்.(வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்ஆந்திரபிரதேசம்) எனக்கு கணிதம் இயற்பியல் போன்ற நூல்களைப்படிப்பது பெரிதும் பிடிக்கும்.கவிதைகள் எழுதுவது மட்டுமே என் இலக்கியத்தேடல் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையியல் பற்றிய நூல்களில் மிக்க ஆர்வம் கொண்டவன். முதன் முதல் செம்மலர் இதழில் செங்கீரன் என்ற பெயரில் (1969) கவிதைகள் எழுதத்தொடங்கினேன்.அதில் நிறைய எழுதியுள்ளேன்.ஜுனியர் விகடனில் முதன் முதலாக தேசிய கீதம் என்ற தலைப்பில் எனது கவிதை வெளியாயிற்று.அது முதல் கல்கி குங்குமம் முத்தாரம் தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். பெரும்பாலும் செங்கீரன் ருத்ரா என்ற பெயர்களிலேயே கவிதைகள் எழுதியுள்ளேன்.2000 ஆண்டிலிருந்து திண்ணை அம்பலம் வார்ப்புகள் ஆறாம்திணை போன்ற இணைய இதழ்களில் (ருத்ரா என்ற பெயரில்) எழுதிவருகிறேன்.சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் மனைவியும் பி எஸ்.என்.எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.கணிதம் டோபாலஜி இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் எட்வர்டு விட்டனின் எம் தியரி மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவிய சிறப்பு பொது சார்பியல் கோட்பாடுகள் போன்றவை மிகவும் விருப்பமான தளங்கள்.இதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.