மனித சித்திரங்களை கார்ட்டூன்கள் ஆக்கினார். கதைகளும் நாவல்களும் இவர் கோடுகளிலும் சுழிகளிலும் வந்து முற்றுப்பெற்றன. எத்தனை முகங்கள்? அவை காட்டும் அகங்கள் அத்தனையும் இந்த பென்சில் பிரம்மா படைத்தது. எழுத்துக்களை அவர்கள் தந்தார்கள் துடிப்புகளை இவர் தூரிகை தந்தது. தேவன் லெட்சுமி தி.ஜானகிராமன் ஜெக சிற்பியன் ஜெயகாந்தன் இவையெல்லாம் புகழ்பெற்ற பேனாக்கள். பத்திரிகை பக்கங்களில் இவர் கோடுகளில் அவை பரிணாமம் கொண்டன பிரமிக்க வைத்த படைப்புகளாய். அவர் கார்ட்டூன்களில் நாப்பதுகள் அம்பதுகள் அறுபதுகள் என்று வருடங்களின் அரசியல் வர்ணங்களும் சரித்திர காரணங்களும் அங்குலம் அங்குலமாய் அசை போட்டுக்காட்டின. அவர் பென்சில் கீற்றுகளிலும் சமுதாய நாற்றுகள் காற்று வீசின. ஆனந்த விகடனின் முத்திரைகளில் ஜெயகாந்தன் இருந்தாலும் அவற்றின் முகத்திரைகளில் கோபுலுவே கொலுவிருந்தார். இருவருக்கும் இப்போது விழுந்தது திரை மட்டுமே. எழுத்தும் கோடும் வெறும் உடல் அல்ல பொசுங்குவதற்கு.
நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சி. பட்டப்படிப்பில் முதன்மையாகத் தேறி (கூட்டுறவு/பொருளாதாரம்) மாண்புமிகு வி.வி.கிரி அவர்களால் தங்கப்பதக்கம் விருது பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்ததும் ‘நான் டெஸ்ட் கேடகரி’ (NON -TEST CATEGORY) எல்.ஐ.சி யில் தேர்வு ஆகி பணியில் (1966) சேர்ந்து பணி முடித்து1999 ல் விருப்பு ஓய்வும் பெற்று விட்டேன் பணியின் போது தனிப்பட்ட முறையில்1975ல் எம்.ஏ.பொருளாதாரம முதல் வகுப்பில் தேறினேன்.(வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்ஆந்திரபிரதேசம்) எனக்கு கணிதம் இயற்பியல் போன்ற நூல்களைப்படிப்பது பெரிதும் பிடிக்கும்.கவிதைகள் எழுதுவது மட்டுமே என் இலக்கியத்தேடல் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையியல் பற்றிய நூல்களில் மிக்க ஆர்வம் கொண்டவன். முதன் முதல் செம்மலர் இதழில் செங்கீரன் என்ற பெயரில் (1969) கவிதைகள் எழுதத்தொடங்கினேன்.அதில் நிறைய எழுதியுள்ளேன்.ஜுனியர் விகடனில் முதன் முதலாக தேசிய கீதம் என்ற தலைப்பில் எனது கவிதை வெளியாயிற்று.அது முதல் கல்கி குங்குமம் முத்தாரம் தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். பெரும்பாலும் செங்கீரன் ருத்ரா என்ற பெயர்களிலேயே கவிதைகள் எழுதியுள்ளேன்.2000 ஆண்டிலிருந்து திண்ணை அம்பலம் வார்ப்புகள் ஆறாம்திணை போன்ற இணைய இதழ்களில் (ருத்ரா என்ற பெயரில்) எழுதிவருகிறேன்.சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் மனைவியும் பி எஸ்.என்.எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.கணிதம் டோபாலஜி இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் எட்வர்டு விட்டனின் எம் தியரி மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவிய சிறப்பு பொது சார்பியல் கோட்பாடுகள் போன்றவை மிகவும் விருப்பமான தளங்கள்.இதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.