Tag: செ.இரா. செல்வகுமார்

  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வாரத்தின் வல்லமையாளர் அருமையான நற்பணிகள் ஆற்றிவரும் ஓர் இளம் பெண். மிகவும் பயனுடைய கணினி மொழிகள், கணினி நிரல்நுட்பங்கள் பற்றிய ஏழு (7) மிக அருமையான, மின்னூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் திருவாட்டி நித்தியா துரைசாமி (“நித்யா துரைசாமி”) அவர்கள்

    இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்நூல்கள் அனைத்தையும் இலவசமாக அனைவரும் தரவிறக்கிப் பயன்கொள்ளும்படியாகக் “கிரியேட்டிவ் காமன்சு” (Creative Commons) என்னும் உரிமத்தின் கீழ் வழங்கியிருக்கின்றார். இந்நூல்களை யாரும் திருத்தியோ விரிவாக்கியோ சுருக்கியோ மீண்டும் இதே உரிமத்தின் கீழ் அதன் விதிகளுக்குட்பட வெளியிடலாம். பிறருடன் பகிரலாம். வணிகநோக்கில் ஆசிரியர் பெயருடனும் இதே உரிமத்தின் கீழ் வெளியிடலாம். நித்தியா அவர்களின் நூல்கள் கணியம் வெளியீடுகளாக அவருடைய கணவர் வல்லமையாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள் நடத்தும் “Free Tamil EBooks” (இலவசத் தமிழ் மின்னூல்கள்) அமைப்பின் வழி வெளியிட்டுள்ளார்கள்.

    திருவாட்டி நித்தியா அவர்கள் எழுதிய நூல்களைக் கீழே பட்டியலில் காணலாம்.


    மேலுள்ள நூல்களைக் கணியம் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (http://www.kaniyam.com/)

    திருவாட்டி நித்தியா சென்னையில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் உள்ள சிரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிப் பயன்பாடுகளில் இளங்களைப் பட்டம் (B.C.A) பெற்றார். காகினிசண்டு (Cognizant) நிறுவனத்தில், தரவுக்கிடங்கு செய்தேர்வுத் துறையில் (Datawarehouse Testing) பணிபுரிகிறார். அண்மையில் சிலகாலம் இங்கிலாந்தில் மாஞ்செசுட்டர் (Manchester) நகரத்தில் பணியாற்றிவிட்டு இப்பொழுது தாம்பரத்தில் இருந்து பணியாற்றுகின்றார்.

    இவருக்கு எப்படி இந்த நூலாக்கப்பணிகளுக்கு உந்துதல் ஏற்பட்டது என்று கேட்டபொழுது அவர் கூறியது:

    “எனது உந்துதலுக்கு காரணம் – நான் என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக எடுக்கும் பல முயற்சிகளில் ஒரு முயற்சியாக முதன் முதலில் ஒரேஒரு கணினி சார்பான நூலை தமிழில் எழுதினேன். அதற்கு மாபெரும் வரவேற்ப்பு கிடைத்தது. பலரும் “உங்களது நூல் பயனுள்ளதாக இருக்கிறது; தமிழில் படிக்கும் போதுதான் எங்களுக்கு முழுதாகப் புரிகிறது” என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர்களே நான் தொடர்ந்து பல நூல்களை எழுதுவதற்கு காரணமானவர்கள்.”

    பாரதியாரின் கனவாகிய “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்பனவற்றை நிறைவேற்றுவதில் தன்னுடைய பங்களிப்பு இருப்பதை மகிழ்வுடன் கூறுகின்றார்.


    கணினிநுட்பம் பற்றி இதுகாறும் 7 மின்னூல்கள் எழுதிய நூலாசிரியர் நித்தியா துரைசாமி . படம் அவருடைய முகநூலிலிருந்து

    இவர் தன்னுடைய முதல் நூலாகிய

    எளிய தமிழில் MySQL என்னும் நூலை எழுதியதைப் பாராட்டி செல்வா-குமரி அறக்கட்டளை சார்பாக இவருக்கு உருபாய் 5000 பரிசு வழங்கப்பெற்றது. சென்னையில் செப்டம்பர் 30, 2013 இல் நடந்த தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் இவருடைய மற்ற நூலுக்கும் உருபாய் 6500 பரிசு வழங்கப்பெற்று பாராட்டப்பெற்றார்.


    கணினிநுட்பம் பற்றிய மின்னூல்கள் எழுதிய நூலாசிரியர் நித்தியா துரைசாமி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவில் பரிசு பெறுகிறார் . படம் அவருடைய முகநூலிலிருந்து

    திருவாட்டி நித்தியா அவர்களின் எதிர்காலத்திட்டங்கள் குறிக்கோள்கள் பற்றிக் கேட்டபோது, கீழ்க்காணுமாறு கூறினார், “எதிர்காலக் குறிக்கோள் – தமிழில் புத்தகங்களை புதுப்புது தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சிறந்த பேச்சாளராக ஆகவேண்டுமென்ற ஆசையும் உண்டு. எந்தஒரு கால கட்டத்திலும் நான் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல், அதில் பெரிய மேலாளர் பதவியை அடைய வேண்டும் என்றும் ஆசை. சமீப காலமாக நடனத்தில் ஈடுபாடு வந்துள்ளது. எனவே சிறப்பாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது”. இப்படியாகப் பல நல்ல குறிக்கோள்களுடன் அருமையாக உழைத்து வருகின்றார்.

    குறுகிய 3 ஆண்டுகளில் 7 அருமையான கணினிநுட்ப நூல்களை இவர் எழுதியதைப் பாராட்டி திருவாட்டி நித்தியா துரைசாமி (“‘நித்யா துரைசாமி”) அவர்களுக்கு ஆகத்து மாதம் 29 ஆம் நாளுக்கான இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கணவர் த. சீனிவாசன் அவர்களும் வல்லமையாளர் ஆகையால் இளம் வல்லமையாளர் குடும்பமாகவே ஆகிவிட்டனர். இவர்களுக்கு வியன் என ஒரு மகன் இருக்கின்றார்.

    .

    [சில வரிகள் சேர்த்துப் புதுப்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 7, 2017]

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே

    . அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் தாயார் தந்தையார் ஆகிய இருவருமே புகழ்பெற்ற கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள். பு. கோபிச்சந்து என்னும் புகழ்பெற்ற இறகுப்பந்தாட்ட வல்லுநர் மேற்பார்வையிலும் பயிற்றுவிப்பிலும் இவர் இறகுப்பந்தாட்டத்தில் மிகுசிறப்பான தேர்ச்சிபெற்றார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு அகவை 20 இருக்கும்பொழுதே இந்தியாவின் நான்காவது உயர் விருதாகிய பதுமசிறீ (தாமரைத்திரு) வழங்கப்பட்டது. இவரே இவ்விருதைப் பெற்றவர்களில் அகவை குறைந்தவர்.

    இரியோ ஒலிம்பிக்கில் சிந்து அவர்கள் எசுப்பானியாவைச் சேர்ந்த கரோலினா மரின் மார்ட்டின் (Carolina Marín) என்பாருடன் விளையாண்ட தங்கப்பதக்கப் போட்டியில் வெற்றியடையாததால் வெள்ளிப்பதக்கம் பெற்றார். கரோலினா மரின் 19–21, 21–12, 21–15 என்னும் பெறுமதிப்பீட்டில் சிந்துவை வெற்றிகொண்டார்.


    இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வெங்கட சிந்து.


    இறகுப்பந்தாட்ட வீராங்கானை புசர்ல செங்கட சிந்து நசோமி ஒக்குஃகாரா (Nozomi Okuhara) அவர்களை 21-19, 21-10 என்னும் பெறு மதிப்பீட்டில் வென்றபொழுது. .

    சிந்து அவர்கள் மிகப்பல பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றியாளாராக ஒளிவீசியிருக்கின்றார். கீழ்க்காணும் 6 வெற்றிகள் குறிப்பிடத்தக்கன


    இறகுப்பந்தாட்ட வீராங்கனை புசர்ல வேங்கட சிந்துவின் பன்னாட்டு வெற்றிகள் (தரவு விக்கிப்பீடியா) .

    மக்கள்தொகையில் 1.293 பில்லியன் பேர்கள் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்த போதிலும் உலகளாவிய ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வதில்லை. 1900 ஆண்டுமுதல் இந்தியா உலக ஒலிம்பிக்குப் போட்டிகளில் கலந்துகொள்கின்றது. 1928-1956 ஆகிய காலப்பகுதியில் இந்தியா வளைதடியாட்டப் போட்டியில் ஆறுமுறை தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றது. அதன்பின் 1964 இலும் 1980 இலுமாக மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. 2012 ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றதே மிக அதிகமாகப் பெற்ற பதக்கங்கள் ஆகும். இலண்டன் ஒலிம்பிக்குப் போட்டிகளில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 55 ஆவது இடத்தில் நின்றது. இது தவிர சீனாவில் பெய்சிங்கில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றதுபோக மற்ற ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒன்றிரண்டு பதக்கங்களே வென்றுள்ளது. அவற்றிலும் வெண்கலப்பதக்கங்களே அதிகம். 116 ஆண்டுகளில் கலந்துகொண்ட ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 28 பதக்கங்களே பெற்றுள்ளது (தங்கம் 9, வெள்ளி 7, வெண்கலம் 12). 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள இரியோ-தி-செனரோ நகரில் நடந்த ஒலிம்பிக்குப் போட்டிகளில் இந்தியாவின் பு.வே. சிந்து பெற்ற வெள்ளிப்பதக்கமும், மற்போரில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்சி மாலிக்கு என்னும் வீராங்கனை வென்ற வெண்கலப்பதக்கமும் சேர்ந்து மொத்தம் இரண்டே பதக்கங்கள் பெற்று உலக நாடுகளின் வரிசையில் 67 ஆவதாக நிற்கின்றது. இரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாவிட்டாலும், சீர்நடமியப் பயிற்சியில் (gymnastics) தீபா கர்மாக்கர் என்னும் பெண் நான்காவது இடத்தைப் பெற்றதையும் குறிப்பிடவேண்டும். புரொதுனோவா தாண்டல் (Produnova vault) என்னும் கடுமையான குதித்துத்தாண்டலை உலகில் மிகச்சிலரே செய்துள்ளனர். 2016 ஒலிம்பிக்கில் இதனை வெற்றியுடன் செய்துகாட்டியும் நான்காவது இடத்தையே தீபா கர்மாக்கர் பெற்றார். பு.வே. சிந்து, சாக்சி மாலிக்கு, தீபா கர்மாக்கர் ஆகிய மூன்று இளம் பெண்மணிகளும் இந்தியாவுக்குப் பெருமைசேர்த்த ஒலிம்பிக்குத் திறமையாளிகள்.

    2016 இரியோ ஒலிம்பிக்குப் போட்டியில் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பு.வே. சிந்து அவர்களைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் உருசியத் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubyansky) அவர்கள்.

    . இவருடைய 75 ஆவது அகவை ஏப்பிரல் 27 அன்று நிறைவுபெற்றதை ஒட்டி உலக அறிஞர்கள் இவரைப் பெருமைப்படுத்தும்முகமாக, பற்பல ஆய்வுக்கட்டுரைகள் நிறைந்த, தமிழ் தந்த பரிசு என்னும் தலைப்பில் 558 பக்க பாராட்டுமலர் (Festschrift) ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதில் தமிழில் கட்டுரைகள் ஏதுமில்லை எனினும், பெரும்பாலானவை தமிழைப்பற்றி ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் உலக அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு (George Hart), முனைவர் ஏவா வில்டன் (Eva Wilden), முனைவர் இழான் இலூக்கு செவியார் (Jean-Luc Chevellard) போன்ற பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.


    பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களைப் பெருமைப்படுத்தும்முகமாக உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய 558 பக்கப் பாராட்டுமலர் (Festschrift)படம்: இழான் இலூக்கு செவியார் (Jean-Luc Chevillard), சி-தமிழ் (CTamil) குழுமத்தில் அறிவிப்பு, மே 17, 2016)

    உலகிலேயே ஆகப்பெரிய நாடு உருசியா (Rassia). இந்த நாட்டில் தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிப் பதிப்புகளுக்கும் நெடிய வரலாறு உண்டு. குறைந்தது 50-60 ஆண்டுகள் வரலாறு உண்டு. முனைவர் மிகெயில் செர்கெயெவிச்சு ஆண்டிரனோவ் (Michail Sergeyevich Andronov Михаил Сергеевич Андронов) அவர்கள் 1960-களில் தமிழ் ஆய்வுக்கும் திராவிடமொழிகள் ஆய்வுக்கும் புகழ்பெற்றார். பலநூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவரைத்தொடர்ந்து உருசியாவில் தமிழ்மொழியில் நல்ல புலமை பெற்றவர்களில் மாசுக்கோவைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி குறிப்பிடத்தக்கவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப்பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார் [1]. ஏறத்தாழ 110 ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார் [2] இவர் எழுதியவற்றில் சில நூல்களையும் நெடிய ஆய்வுக்குறுநூல்களையும் (Monographs) குறிப்பிடல் பொருந்தும்:
    ஆய்வுக்குறுநூல்கள்:

  • Dubyansky, AM, Bychihina LV Tamil literature. – Moscow, 1987.
  • Dubyansky, AM ritual and mythological origins drevnetamilskoy lyrics. – M., 1989.
  • The AM Dubianski Ritual and Mythological the Sources of the The Early Tamil Poetry. – Groningen, 2000.
  • ஆய்வுக்கட்டுரைகள்:

  • Dubyansky, AM Tamil Nadu: Skanda-Murugan // Tree of Hinduism. / Ed. ed. J. AP Glushkov . – M., 1999. – P. 313-336.
  • Dubyansky, AM Drevnetamilsky eulogy and genre form attrupadey // In the seven languages ​​of Hindustan. Memory AS Sukhocheva. / Ed. ed. A. A. Suvorov . – M., 2002. – P. 27-43.
  • AM Dubianski Kanci: Theme is a poetical and a Plant // Pandanus 2000. the Natural Symbolism in Indian Literature. – Prague, 2000. – pp. 41-60.
  • AM Dubianski of The uvijai of the Themes and nocci in Tamil classical My Poetry // Pandanus’ 02. of Nature in the Art and Indian literatures. – Prague, 2002. – pp. 15-34.
  • Dubyansky, AM On the subject of so-called impermanence in Tamil poetry (kanchi-tiney) // Alaica: Collection of scientific works of Russian Orientalists, prepared for the 70th anniversary of Professor, Doctor of Historical Sciences LB Alaeva. / Ed. Ed. D. E. Nepomnin . – M., 2004. – P. 140-150.
  • AM Dubianski A theme is of a military Expedition in Cilappatikaram // India in Warsaw. A Volume to commemorate the 50-th Anniversary of the Post-War History of Indological Studies at Warsaw University (2003/2004). Ed. D. Stasik. – Warszawa, 2006. – pp. 227-235.
  • Dubyansky, AM Krishna poem Andal “Tiruppavey» // Smaranam. Memory Oktyabrina Feodorovna Volkova. / Comp. VG Lysenko . – M., 2006. – P. 101-121.
  • AM Dubianski of The Palai – landscape in Tamil poetry // Pandanus’ 07. of Nature in Literature, the Art, Myth and Ritual. – V. 1. Prague, 2007. – pp . 79-92.

  • பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கியும் எழுத்தாளர் செயகாந்தனும்.- சென்னையில். படம் கே. பிச்சுமணி, இந்து ஆங்கில நாளிதழ், சூன் 22, 2010 (Photo K. Pichumani, The Hindu, June 22, 2010) [1]

    பேராசிரியர் துபியன்சுக்கி ஏப்பிரல் 27, 1941 ஆம் ஆண்டு மாசுக்கோவில் பிறந்தார். இவர் மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கின்றார். இவர் நெதர்லாந்திலும் ஆய்வு செய்திருக்கின்றார். இவர் சரளமாகத் தமிழ்பேசவல்லவர். இவர் இளம் உருசிய தமிழறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கிவருகின்றார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது(Exemplar Academic Awards) 2013 இல் வழங்கப்பெற்றது [3]. அப்பொழுது, இவர் எழுதிய நூல்களில் ஆங்கிலத்திலும் கிடைக்கும் கீழ்க்காணும் நூல்களைச் சுட்டியிருந்தனர்.

  • Ritual and Mythological Background of Ancient Tamil Lyrics (1989)
  • Tamil Literature: an Outline (in cooperation with L. Bychikhinam 1987)
  • Songs on Palm-Leaves. An Anthology of Ancient Tamil Lyrics (1979)
  • Ritual and Mythological Sources of the Early Tamil Poetry (2000)
  • தமிழ்வழங்கும் நிலங்களைத் தாண்டி, தமிழ்பால் ஆர்வம்கொண்டு, தமிழறிஞராக எழுந்து உருசிய நாட்டிலிருந்து தமிழுக்கு அரும்பணியாற்றும் 75 அகவை நிரம்பிய பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இந்து ஆங்கில நாளிதழ, சூன் 22, 2010 (The Hindu, June 22, 2010, http://www.thehindu.com/news/cities/chennai/tamil-has-gravity-of-expression-not-found-in-any-language/article477828.ece )
    [2] உருசிய மொழி விக்கிப்பீடியா (https://ru.wikipedia.org/wiki/Дубянский,_Александр_Михайлович அல்லது http://bit.ly/1TxA9e4 )
    [3] http://sasaonline.net/awards/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்க்கணிமை உலகில் தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் (A.G. Ramakrishnan) அவர்கள்.

    பேராசிரியர் இராமகிருட்டிணன் உத்தமம் (INFITT) என்னும் உலகத் தகவல் தொழினுட்ப மன்றம், 2016 இல் நடத்தவிருக்கும் 15-ஆவது தமிழிணையக் கருத்தரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். இது திண்டுக்கல்லில் காந்திகிராமத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கின்றது [4]. தமிழ்க்கணிமைக்கு சிறப்பான ஆக்கங்கள் செய்துள்ள இவர் இக்கருத்தரங்கிற்குத் தலைவராக இருப்பதைப்பாராட்டியும் இதையொட்டி தமிழர்கள் இவரைப்பற்றி அறிந்துகொள்ளும்பொருட்டும் இவர் இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தமிழில் வரிவடிவில் எழுதியுள்ள ஓர் எழுத்துரையைத் தமிழில் ஒலிவடிவப் பேச்சுரையாக கணினிவழி மாற்றும் செயலியை இவர் மிகச்சிறப்பான முறையில் செய்திருக்கின்றார். இதனை செய்துபார்க்கக் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்:

    எழுத்துரையை ஒலிவடிவப் பேச்சுரையாக மாற்றி.

    இதே போல கன்னட எழுத்துரையையும் ஒலியுரையாக மாற்றம் செய்யும் இந்தச் செயலி. பேராசிரியர் இராமகிருட்டிணனின் ஆய்வானது கண்பார்வை இல்லாதவர்களோ கண்பார்வை மங்கியவர்களோ ஓர் எழுத்துரையைக் காதால் எளிதாகக் கேட்டுணரும் வகையில் இருப்பது மிகவும் பயனுடையதாகும். இதே போல ஒருவர் கையால் தமிழிலோ கன்னடத்திலோ எழுதிய உரையைக் கணினி எழுத்துருக்களாக மாற்றவும் ஒரு செயலி செய்திருக்கின்றார். இதனை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளதும் குறிப்பிடத்தங்குந்தது [2].

    பேராசிரியர் இராமகிருட்டிணன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தை (BE) 1980 இல் பெற்றார். மின்னணுவியல் தொடர்பாடலியல் (communications) துறையில் அவருடைய பட்டம் இருந்தது. இவர் பல்கலைக்கழகத்தின் தேர்வில் வரிசைப்படி எட்டாவது மாணவராகத் தேர்ச்சிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சென்னையில் உள்ள இந்திய தொழினுட்பக் கழகத்தில் (IIT Madras) முதுநிலை தொழினுட்பப் பட்டத்தை (M.Tech) 1982-இலும், அதே நிறுவனத்தில் பொறியியலில் முனைவர்ப்பட்டத்தை (Ph.D) 1989 இலும் பெற்றார். தற்பொழுது இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science) பேராசிரியராகவும் மின்னியல் துறையின் தலைவராகவும் இருக்கின்றார்.

    மொழியியல்சார் கணிமைகள் போக, இவர் மருத்துவத்துறையில் படவுருவ அலசல்கள் செய்வதிலும் சிறப்பான ஆய்வுகள் செய்திருக்கின்றார். குறிப்பாக காந்த ஒத்ததிர்வு படவுரு (Magnetic Resonance Imaging) உருவாக்கும் நுட்பத்தில் புதிய வளர்ச்சிகளுக்கு வழி வகுத்துள்ளார். விரைவாகவும் துல்லியமாகவும் காந்த ஒத்ததிர்வுப்படங்களை உருவாக்க இவை உதவுகின்றன. மருத்துவத்துறையில் இவர் செய்துள்ள ஆய்வுகளைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம்:

    மருத்துவத்துறையில் செய்துள்ள ஆய்வுகள் [3]


    பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன், இந்திய அறிவியற்கழகம் (Indian Institute of Science) பெங்களூர் [1]

    பேராசிரியர் இராமகிருட்டிணன் அவர்களின் பொறுப்பில் நடக்கும் மைல் (MILE- Medical Intelligence and Language engineering Lab) (மருத்துவ நுண்ணறிதிறனுக்கும் மொழிசார் பொறியியலுக்குமான ஆய்வகம்) என்னும் ஆய்வகத்தின் வழி இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [5]. பேராசிரியர் இராமகிருட்டிணன் பல விருதுகளையும் பெருமைகளையும் வென்றவர். 1992 இல் பெற்ற சர் ஆண்டுரு வாட்டு கே யங்கு ஆய்வாளர் விருதையும் (Sir Andrew Watt Kay Young Researcher’s Award), 1985 இல் இந்திய உயிரியமருத்துவத்துறையில் சிறந்த ஆய்வுக்கட்டுரைக்காகப் பெற்ற தங்கம் வாசுதேவன் விருது போன்றவையும், இந்திய உயிரிய மருத்துவப்பொறியியல் குமுகத்தின் (Biomedical Engineering Society) தலைவராக 2002 முதல் 2008 வரை இருந்ததையும் குறிப்பிடவேண்டும். இந்தியாவின் பொறியியலாளர் கழகத்தின் சிறப்பாளராகவும் (Fellow, Institution of Engineers (India)),
    இந்தியாவின் மின்னணுவியல் தொலைதொடர்பியல் பொறியாளர் கழகத்தின் சிறப்பாளராகவும் (Fellow, Institution of Electronics and Telecommunication Engineers, India.) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    பிறபல குறிப்பிடத்தகுந்த பெருமைகளைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம் [6].

    தமிழ்க்கணிமை உலகில் பற்பல நல்ல பயனுடைய ஆய்வாக்காங்கள் செய்த, சிறந்த ஆளுமை கொண்ட பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] படம்: பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டிணன் அவர்களின் அலுவலக வலைத்தளம். படத்தை எடுத்தவர் ஏ.வாணி (2007). http://mile.ee.iisc.ernet.in/AGR/index.htm
    [2] http://mile.ee.iisc.ernet.in/mile/OnlineHandWriting_Recognition.html#OHR
    [3] http://mile.ee.iisc.ernet.in/mile/publications/MedicalImageProcessing.html
    [4] http://home.infitt.org/event/15th-tamil-internet-conference/
    [5] http://mile.ee.iisc.ernet.in/mile/
    [6] http://mile.ee.iisc.ernet.in/AGR/profile.htm

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், ஒப்பரிய தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்கள்.

    இவர் உலகத்தொல்காப்பியமன்றத்தின் தொடர்சொற்பொழிவு வரிசையின் 5-ஆவது சொற்பொழிவைப் புதுச்சேரியில் மே மாதம் 4 ஆம் நாள் நல்க இருக்கின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆம் ஆண்டின் பிறந்தநாள் ஏப்பிரல் 29 ஆம் நாள் ஆகையால் அவர் நினைவாகவும் அங்கே வாழும் சொல்லாய்வாளரை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

    திரு அருளி அவர்கள் மொழிஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணர் அவர்களின் வழி தமிழில் மிகச்சிறப்பாக வேர்ச்சொல் ஆய்வு செய்பவர். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டவியல் துறைகளில் பட்டம் பெற்றவர். ஆனால் இவருடைய ஒப்பரிய சொல்லாய்வே இவரின் புகழுக்கு அடிப்படை. இவருடைய ஏறத்தாழ 30 நூல்களும், 250 உக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளும் இவருடைய ஆழ் புலமையைப் பறைசாற்றுவன. இவர் ஆக்கிய 1216 பக்க அருங்கலைச்சொல் அகரமுதலியும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) (2002), நான்கு தொகுதிகளாக வெளிவந்த இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதியும் குறிப்பிடத்தக்கன. இதே போல தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் திரு. அருளி அவர் ஆற்றிய மொழியியல் உரைகளின் 5 தொகுதிகளும் மிகுசிறப்பானவை. இவற்றில் இவர் செய்திருக்கும் வேர்ச்சொல் ஆய்வு மறுக்கொணாத நிறுவல் சிறப்பு மிக்கது. 2007 ஆம் ஆண்டு மரம்-செடி-கொடி-வேர் என்னும் தலைப்பில் வெளியிட்ட இரு தொகுதிகளும் தமிழுக்குப் புதிய வரவு. உலக அறிஞர்கள் பலர் இவருடைய ஆய்வையும் அறிவையும் மிகவும் போற்றியுள்ளனர், ஆனால் பரவலாலா இவை அறியப்படாமல் இருக்கின்றன. ‘Colporul: A History of Tamil Dictionaries‘ [2] என்னும் விரிவான 928 பக்க நூலை எழுதிய, இங்கிலாந்தைச் சேர்ந்த, கிரிகோரி சேம்சு (Gregory James) என்பார் இவரைப் போற்றி மடல்கள் வரைந்துள்ளார்[3].


    திரு. ப. அருளி அவர்கள் ”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary – Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்”[1].

    1950 ஆம் ஆண்டு பிறந்த திரு அருளி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் தேன்மொழி அவர்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவர். இவர்களுக்கு அறிவன், தெள்ளியன் என இரு மகன்கள் உள்ளனர்.


    வேர்ச்சொல் ஆய்வில் பாவாணர்வழி ஆய்வு செய்வதில் தலையாய அறிஞர் இவர் எனில் மிகையாகாது. வேர்ச்சொல்லாய்வில் இவர் உலக அளவில் வெகுவாகப் போற்றப்படவேண்டியவர். தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] ப. அருளி, தமிழ் விக்கிப்பீடியா [ https://ta.wikipedia.org/s/pe4 ], பார்த்த நாள் மே 1, 2016.
    [2] Gregory James, ‘colporul: A History of Tamil Dictionaries‘, Cre-A publication [http://www.crea.in/publicationsdetails.php?id=3&customer=inr&page=4&category= ]
    [3] செ.இரா. செல்வக்குமார், முனைவர் இராமகிருட்டிணன், பாவலர் இராச தியாகராசன், பேரா. தமிழ்ப்பரிதி மாரி ஆகியோர் திரு ப. அருளி அவர்களை 2014 இல் புதுச்சேரியில் சந்தித்தபொழுது நேரில் பார்த்துப் படித்தறிந்தது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர், இரண்டு கைகளும் இரண்டு கால்களும் செயற்படாமல் இருந்தும் அருஞ்செயல் புரிந்து பல்லோருக்கும் பேருதவி ஆற்றிவரும் இளம் பெண் பிரீத்தி சீனிவாசன் .

    செல்வி பிரீத்தி சீனிவாசன் துடிப்புமிக்க அறிவான ஒரே மகள் தன் பெற்றோருக்கு. இவருடைய தந்தை ந. சீனிவாசன் கிண்டி பொறியியற் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று சீமென்சு (Siemens) நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். சென்னையிலும், இடாய்ச்சுலாந்திலும் (செருமனி), அமெரிக்காவிலும் பணிபுரிந்துள்ளார். தாய் விச’யா அவர்கள் ஓவியக்கலையிலும் சமையற்கலையிலும், இனிதே இல்லறம் நடத்தும் கலையிலும் வல்லவர். செல்வி பிரீத்தியும் செல்லமாக வளர்ந்துவந்தார். படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதும், ஓவியம் வரைவதும், நீச்சலடிப்பதும், கிரிக்கெட்டு விளையாடுவதும் என்று பல்துறையில் நற்திறன் பெற்றிருந்தார். நீச்சலில் இந்திய நாட்டளவிலான நீச்சல் வீரரராக உயர்ந்தார், தமிழநாட்டு மாநில அணியின் இளைஞர் அணியின் கிரிக்கெட்டு தலைவராகவும் (கேப்டன்) இருந்தார். ஆனால் ஒருநொடியில் தன் இனிய இன்பவாழ்க்கை தலைகீழாக மாறியது.

    சக்கர இருக்கையில் இருக்கும் பிரீத்தியுடன் அவருடைய தாயார் விச’யா சீனிவாசன்.

    ஒருநாள் புதுச்சேரியில் காலில் கடல்நீர் வந்து பாயுமாறு கடற்கரையில் நண்பர்களுடன் நின்றிருந்தார். நீர் பின்வாங்கிப்போகும்பொழுது காலுக்கடியில் இருந்த மணல் அரித்துக்கொண்டுபோக கால்தடுக்கிக் கீழே விழுந்தார். கல்லோ, பாறையோ எதிலும் அடிபடவும் இல்லை. ஒருதுளி இரத்தமும் வெளிப்படவில்லை. ஆனாலும் வியப்பூட்டும் விதமாக கழுத்தருகே எப்படியோ தண்டுவடத்தில் தாக்கம் ஏற்பட்டு கழுத்துக்குக்கீழே உடலியக்கத்தின் செயலிழந்துபோனார். கீழே விழுந்தவரால் எழமுடியவில்லை. இதனை அவர்கூற்றாகவே கூறுவதை இந்த நிகழ்படத்தில் கேட்கலாம். அருகில் இருந்த நண்பர்கள், பிரீத்தியை வெளிக்கொணர்ந்தனர். அப்பொழுது அவருக்கு அகவை 18!! எந்த ஒருவருக்கும் அவர்தம் பெற்றோருக்கும் நம்பவே முடியாத பேரிடியாய் இருந்திருக்கும். பிரீத்தியும், பிரீத்தியின் பெற்றோர்களும், அடுத்தடுத்து என்னென்ன செய்யவேண்டும் என கூர்ந்து சிந்தித்து விடாது முயன்றனர். பிரீத்தியின் அருமைமிகு தந்தை திரு. சீனிவாசனுக்கும் இதயநோய் ஏற்பட்டது. மிகவும் எதிர்பாராமால் ஒருநாள் அவரும் இயற்கை எய்திவிட்டார். வெளியுலகில் அனைத்தையும் செய்து வந்தவர் இவருடைய தந்தையாரே. திடீரென்று அவரும் மறைந்தது பேரதிர்ச்சி.

    பிரீத்தியின் தண்டுவடம் சிதைவுற்றாலும், மிகுந்த உள உறுதியுடனும், சீரிய சிந்தனையின்வழியும் அவர் ஆற்றும் செயல்களே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தன்னைப்போன்ற உடல்நிலையுள்ள பல ஏழைமக்களுக்குப் பெரிய அளவிலே உதவிவருகின்றார். நம்பிக்கை இழந்து தவிக்கும் பலருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை ஊட்டிவருகின்றார். சோல்ஃபிரீ (Soulfree) என்னும் தொண்டுநிறுவனம் ஒன்றைத் தொடங்கி தண்டுவடம் அடிபடுவதால் ஏற்படும் உடற்குறையால் தவிக்கும் பலருக்குச் சக்கர இருக்கைகள் நல்குவது போன்ற உதவிகள் செய்துவருகின்றார் [2]. தண்டுவடம் அடிபடாமல் காப்பது பற்றியும், அடிபடும் தீவாய்ப்புகள் பற்றியும், உள்ளத்தில் உறுதியுடன் இருக்கவேண்டுவது பற்றியும் கல்விநிறுவனங்கள் முதல் பல நிறுவனங்களுக்குச் சென்று ஊக்கவுரை ஆற்றுகின்றார். சக்கர இருக்கையில் இருந்தாலும், கல்விகற்கவும் பல இடங்களுக்குப் போய்வர இருக்கும் இடையூறுகளைக் களைவது பற்றியும் விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார். சிதைந்த தண்டுவடம் சிதையாத நம்பிக்கை என்னும் தலைப்பில் இவரைப்பற்றி டாக்டர் விகடனில் ஒரு கட்டுரை பிப்பிரவரி 16, 2015 இல் வெளிவந்தது.

    பிரீத்தியைப் பற்றி டாக்டர் விகடனில் வெளிவந்த கட்டுரை

    பிரீத்தி ஊக்கவுரை நிகழ்த்துதல்

    பீரீத்தி சீனிவாசன் அவர்கள், தன்னுடைய இன்னொரு நேர்காணலில் அவருடைய அருமையான, பெருநம்பிக்கைதரும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலை இங்கே காணலாம்.

    பிரீத்தியின் தொண்டுக்காகப் பல நிறுவனங்கள் அவருக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திருக்கின்றன. ஃபெமினா பெண்சக்தி விருதுகள் (Femina Penn Shakti awards), இந்திய இரத்தச் சிலுவைச் சங்கம் (Indian Red Cross) போன்ற பல நிறுவனங்கள் பரிசளித்து ஊக்கமளித்துள்ளன. இவர் ஊக்கவுரை நிகழ்த்தச்சென்ற இடங்களில் மாணவர்களும் இளைஞர்களும் மிக ஆழமாக உள்ளுணர்ந்து நெகிழ்ந்திருக்கின்றார்கள். பேச்சாலும் செயலாலும் அரியவிதத்தில் பலருடைய வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றார். கைகால்கள் இயங்காவிடினும், குரல் இருப்பதால், குரலால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும், பெரிய நம்பிக்கையை அளிக்கமுடியும் என உணர்ந்து குரல் வல்லமை (Throat Fort) என்னும் அமைப்பின் வழி விழிப்புணர்வு ஊட்டிவருகின்றார் [3].

    தண்டுவடத்தில் ஏற்படும் பழுதால், உலகெங்கும் பலர் மிகவும் துன்புறுகின்றார்கள். அமெரிக்காவில்மட்டும் 250,000 பேர் முதல் 400,000 பேர்வரை இவ்வுடல் குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர்[4]. ஆண்டுதோறும் 7,800 முதல் 12,500 பேர் வரை இக்கொடுமைக்கு ஆளாகின்றனர். இக்குறைபாட்டுக்கு ஆளாவோருக்கு துணையாக இருக்க அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகும் செலவும் ஓராளுக்கு ஏறத்தாழ $1.35 மில்லியல் அமெரிக்கவெள்ளி (இந்திய உருபாய் 8-9 கோடிக்கு மேல்) ஆகும் [4]. இந்தியாவில் இக்குறைபாடுகள் உள்ளவர்களை மதித்து அவர்களிடம் இருக்கும் திறமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு நல்வாழ்வு அமைத்துத்தரவும் வாழ்க்கையை நடத்தவும் வாய்ப்புகளும் வசதிகளும் செய்துதருவது ஒரு குமுகத்தின் நற்பொறுப்பு. இதனை உணர்ந்து உதவிகள் செய்ய செல்வி பிரீத்தி முனைந்து வருவது மிகவும் பாராட்டத்தகக்து. அவர்களின் முயற்சி பெருவெற்றி அடைய வாழ்த்துகின்றோம்.

    செல்வி பிரீத்தி தன் தாய் தந்தையருடன்.

    வாழ்வில் அரியதொரு எதிர்நீச்சல் போட்டுவரும் செல்வி பிரீத்தியை வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] https://www.youtube.com/watch?v=x4Q1jTkeekg
    [2] http://soulfree.org/
    [3] https://www.facebook.com/ThroatFort
    [4] http://www.makoa.org/nscia/fact02.html , http://www.sci-info-pages.com/facts.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் புகழ்படைத்துவரும் இளம் பொருளாதாரப் பேராசிரியர்.

    முப்பால் எனப்படும் திருக்குறளில் நடுவாக இருப்பது பொருள். தமிழில் பொருள் என்னும் சொல் வியப்புறும் பல ஆழமான பொருள்களைக் கொண்டது. ஒரு சொல்லின் பொருள், வாழ்க்கையின் குறிக்கோள் அல்லது உயர்பயன் என்னும் பொருள், கருத்துவடிவமும் பருவடிவமும் கொண்ட அனைத்துமான பொருள், திருவள்ளுவர் சொல்வாரே பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என, அப்படியான பொருள், கடைசியில் இவையனைத்தையும் மீறி கடவுளுக்கே பொருள் என்று ஒரு பெயரும் உண்டு. ”காசேதான் கடவுளடா” என நினைத்துவிட வேண்டாம். சமய இலக்கியங்களிலே வரும் வரிசையாகிய இருள், மருள், தெருள், அருள், பொருள் என்பதில் வரும் கடைசிச்சொல் கடவுளைக் குறிக்கும். ஆனால் மக்களின் இவ்வுலக வாழ்க்கைக்கு அடிமுதன்மையான பொருளாகிய பணம், செல்வம் என்பதை அடிப்படையாகக் கொண்ட துறையே பொருளியல் அல்லது பொருளாதாரம் என்பது.

    ஏப்பிரல் 11, 2016 ஆம் நாள் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (Stanford University) வெளியிட்ட செய்தியில் [2], பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளைப்பற்றியும் அமெரிக்காவில் வாழும் மக்களின் வாழிடத்துக்கும், அவர்களின் ஆயுளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புபற்றியும் அவர் வெளிட்ட ஆய்வுக்கட்டுரையைச்சுட்டி [3] புதிய கண்டுபிடிப்பு எனப் பாராட்டியிருக்கின்றார்கள். தற்போதுள்ள நிலையில், அமெரிக்காவைப் பொருத்த அளவிலே (இவ்வாய்வு பிறநாடுகளுக்கும் பொருந்தும் வாய்ப்புள்ளது) சராசரியாக ஒருவருடைய வாணாளை (வாழ்நாளை)த் தீர்மானிப்பது, அவர் எங்கு வாழ்கின்றார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதைப் பொருத்தது. பொருளாதார நிலையில் கடைசி 5% இருக்கும் ஒருவர் நியூயார்க்கில் வாழ்ந்தால் அவர் அதே கீழ்நிலை வருமானம் உள்ள, கே’ரி இண்டியானாவில் (Gary, Indiana) வாழும் இன்னொருவரைவிட 5 ஆண்டுகள் அதிகமாக உயிர்வாழ்வார். இவ்வேறுபாடு மிக அதிகமாகக் கருதப்படுகின்றது.

    பொருளாதார நிலையில் கடைசிநிலையில் இருப்பவர்கள் அமெரிக்காவில் எவ்விடத்தில் வாழ்கின்றார்கள் என்பதைப்பொருத்து வாணாள் (வாழ்நாள்) அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதைக் காட்டும் படம் [4]

    பேராசிரியர் இராசு செட்டி அவர்களின் பொருளாதாரக் கண்டுபிடிப்புகள் அமெரிக்காவுக்குக் கொள்கை வகுக்கப் பயன்படுமென அறிஞர்கள் கருதுகின்றார்கள். அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா அவர்கள் தன்னுடைய நாட்டுநிலவரத்தைப்பற்றி நிகழ்த்தும் பேருரையில் “State of the Union Address” பேராசிரியர் இராசு செட்டியின் கொள்கைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

    இராசு செட்டி அவர்கள் அமெரிக்காவுக்கு 9 வயதில் தன் பெற்றோர்களுடன் சிறுவனாக வந்தார். தனக்கு அகவை 23 நிறையும்பொழுது உலகப்புகழ்பெற்ற ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) பொருளாதாரத் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றார். கி.பி. 1636 ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் 380 ஆண்டு வரலாற்றிலேயே மிக இளவயதில் நிலைபெற்றப் பேராசிரியர்களுள் (tenured professor) ஒருவராக இவர் தன் 29 ஆவது அகவையில் உயர்ந்தார்.

    பேராசிரியர் இராசு செட்டி (Professor Raj Chetty) [1]

    இவர் தற்பொழுது இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பேராசிரியாக இருக்கின்றார். 2012 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மெக்கார்தர் நிறுவனத்தின் சிறப்பாளர் (MacArthur Fellow) ஆனார். இவருடைய ஆய்வுக்காக கட்டுப்பாடுகளற்ற விதமாக $500,000 அமெரிக்க வெள்ளி வழங்கியது [5]. 2013 ஆம் ஆண்டு சான் பே’ட்சு கிளார்க்குப் பதக்கம் (John Bates Clark Medal) இவருக்கு வழங்கப்பட்டது. இதனைக் குட்டி நோபல்பரிசு (Baby Nobel) என்பார்கள். இப்பதக்கத்தை வென்ற பலர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். நியூயார்க்கு தைம்சு நாளிதழ், இப்பதக்கம் பெற்றதைப்பற்றிக் கீழ்க்காணுமாறு குறித்தது [6]:

    “The medal is given by the American Economic Association for achievement by an economist under the age of 40. At 33, Mr. Chetty is one of the youngest winners of the prize. (Paul Samuelson, who went on to win a Nobel, received the award when he was 31 or 32.) Past recipients also include the former Treasury secretary Lawrence Summers, Milton Friedman, and Robert Solow.”

    வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கம் (FeTNA) 2014 இல் தமிழ் அமெரிக்க முன்னோடிகள் (Tamil American Pioneer Award, TAP award) விருதை அளித்துப் பெருமைப்படுத்தியது. அதனைப் பெற்றுக்கொண்டு, தன் வாழ்க்கையைப்பற்றியும் தன் ஆய்வைப்பற்றியும் உரைநிகழ்த்தினார் [7].

    ஆகத்து 4, 1979 இல் பிறந்து பெரும்புகழ் ஈட்டியிருக்கும் இளம் பேராசிரியர் இராசு செட்டி (Raj Chetty) அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] படம்- விக்கிப்பீடியா (https://commons.wikimedia.org/wiki/File:Chetty_2012_hi-res-download_2.jpg)
    [2] http://news.stanford.edu/news/2016/april/poverty-chetty-siepr-041116.html
    [3] http://jama.jamanetwork.com/article.aspx?articleid=2513561
    [4] http://www.citylab.com/housing/2016/04/when-youre-poor-where-you-live-determines-how-long-youll-live/477687/
    [5] https://www.macfound.org/search/?q=raj+chetty
    [6] http://economix.blogs.nytimes.com/2013/04/12/raj-chetty-wins-the-john-bates-clark-medal/
    [7] https://www.youtube.com/watch?v=bJvC0Rwwai4 (இராசு செட்டி பேசுவது மணித்துளி 11:52 இல் இருந்து தொடர்கின்றது. அதற்கு முன்பு அவரை அறிமுகப்படுத்துவதை கேட்கலாம்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக்கிழமையின் வல்லமையாளர் புற்றுநோய்க்குப் புதிய மருந்தைக் கண்டுபிடித்துப் பதக்கம் பெற்றவர்

     a2

    முனைவர் வினோது கண்ணப்பன்

    மருத்துவத்தில் நாளும் புதுமைகள் நடக்கின்றன. நோய்களில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் ஒன்று புற்றுநோய். புற்றுநோயில் பற்பல வகைகள் உள்ளன.  நோயைக் கட்டுப்படுத்தவும் தீர்க்கவும் பற்பல ஆய்வுகள் நடக்கின்றன. அவற்றுள் ஒன்று புதிய கோணத்தில் ஆய்வுசெய்து இங்கிலாந்து ஆய்வாளர்களையும் உலக ஆய்வாளர்களையும்  வெகுவாக ஈர்த்திருக்கின்றது. இதனைச் செய்தவர் வினோது கண்ணப்பன் என்னும் கோயம்புத்தூரைச்சேர்ந்த இளைஞர்.  இவர் இச்செயலைத் தன் ஆய்வணியினருடன் சேர்ந்து செய்திருக்கின்றார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின்  நாடாளுமன்ற அறிவியல் குழு வெள்ளிப்பதக்கம் தந்து பெருமைப்படுத்தியிருக்கின்றது (‘’ Silver Medal from the United Kingdom Parliamentary and Scientific Committee for research work’’)[1].

     a2

    தைம்சு ஆஃபு இந்தியா நாளிதழில் (Times of India) முனைவர் வினோது கண்ணப்பன் பற்றிய செய்தி

    வினோது கண்ணப்பன் கோயம்புத்தூரில் உள்ள பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் படித்த மாணவர். இங்கிலாந்தின் நடுமேற்கே உள்ள மேற்கு மிட்லாண்டு வட்டத்தில் (West Midlands county) உள்ள உவுல்வராம்பிட்டன்  பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) சூன் 2015 இல்  இவர் முனைவர்ப்பட்டம் பெற்றுள்ளார்.

    நீடித்த கள்குடிப்பழக்கத்துக்கு வயப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீள 1920-களில் கண்டுபிடித்த ஒரு மருந்து தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்)  என்னும் வேதிப்பொருள்.  இது ஆன்றாபியூசு அல்லது ஆன்ட்டாபியூசு (Antabus, Antabuse) என்னும் வணிகப்பெயரில் விற்கப்படுகின்றது.   கள்ளை அருந்திய  பிறகு அதிலுள்ள சாராயம் (ஆல்கஃகால் ) அசிட்டால்டிகைடு (acetaldehyde)  என்னும் வேதிப்பொருளாக நம் உடலில் மாறுகின்றது.  இதனால் குடிப்பவர்களுக்கு  மறுநாள் தலைவலி போன்ற ஒவ்வாமையுணர்வுகள்  (‘’hangover’’) எழுகின்றன.  ஆனாலும் இவ்வுணர்வுகள் நீங்கி இயல்புநிலைக்கு வர நம் உடலில்  இயற்கையாகவே சுரக்கும் ஒரு நொதி அல்லது நொதியம் (enzyme) உதவுகின்றது.  இந்த  நொதி  தலைவலி முதலியனவற்றை ஊட்டும் அசிட்டால்டிகைடு என்னும் பொருளைச் சிதைக்கின்றது. இந்த நொதியத்தின் பெயர் அசிட்டாலடிகைடு டி-ஐதரோசெனேசு (Acetaldehyde dehydrogenase) என்பதாகும்.  இந்த நொதியை உருவாக்க நம் உடலில் உள்ள ALDH1A1, ALDH2, என்னும் மரபணுச்சரங்களும் (மரபீனிகளும்) அண்மையில் கண்டுபிடித்த  ALDH1B1 என்னும் மரபீனியும்  இயங்குகின்றன (தொழிற்படுகின்றன). 1920-களில் கண்டுபிடித்த தைசல்ஃபிரம் என்னும் வேதிப்பொருள் என்ன செய்கின்றது என்றால் இந்த நொதி நம் உடலில் உருவாவதைத் தடுக்கின்றது.  எனவே தைசல்ஃபிரம் என்னும் மருந்தின் விளைவால் கள்குடித்த சில மணித்துளிகளிலேயே  தலைவலி போன்ற ஒவ்வாமை உணர்வுகள் வந்துவிடும்.  இந்த உணர்வுளை ஊட்டும் அசிட்டால்டிகைடு உடல் இரத்தத்தில்  இயல்புக்கு மாறாக 5-10 மடங்கு அதிகமாக இருக்கும்.   இதனால் குடிப்பது ஒவ்வாமை உணர்வை ஊட்டி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுகின்றது. தைசல்ஃபிரம்,  இந்த நொதி உருவாவதைத் தடுப்பது போலவே புற்றுநோய் உண்டாக்கும் புற்றுக் குருத்தணுக்கள் (cancer stem cells)  உருவாவதையும் தடுக்கவோ அவ்வுயிரணுக்களை அழிக்கவோ பயன்படுத்தமுடியுமா என செய்முறையில் செய்துபார்த்திருக்கின்றார்கள்.

     a2

    ஒரு கிளைக்கு 2  கந்தக அணு என இருகிளைகளாக நான்கு கந்தகவணுக்களோடு அமைந்திருக்கும் தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்) (C10H20N2S4) என்னும் மூலக்கூறு அல்லது மூலகம்.[3]

     a2

    தைசல்ஃபிரம் (Disulfiram, டை’சல்ஃபிரம்) என்னும் மூலகத்தின் பந்துக்குச்சி அணுப்படம். மஞ்சள் நிறத்தில் உள்ளவை கந்தக அணுக்கள். நீலம்-நைதரசன், கறுப்பு-கரிமம், வெள்ளை-ஐதரசன். படம் [4]

    பொதுவாக புற்றுநோயைக் கட்டுப்படுத்த, உடலிலுள்ள புற்றுநோயுடைய உயிரணுக்களைக்கொல்ல (cancer cells) கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை உட்செலுத்தும் கீமோதெரப்பி (chemotherapy) என்னும் மருத்துவம் வழக்கில் உள்ளது. இந்த வேதிமருத்துவத்தின்வழி புற்றுநோய்க் குருத்தணுக்களையும் பெரும்பாலும் கொல்லமுடியும் எனினும் விடுபட்டுப்போகும் சிலவற்றால் மீண்டும் புற்றுநோய் தொடரக்கூடும் வாய்ப்பு உண்டு.  இதற்குமாறாக தைசல்ஃபிரம் மருந்தைப் பயன்படுத்தி குருத்தணுக்கள் உருவாவதையே தடுக்கலாம்.  இப்படிச்செய்யக்கூடும் என்றாலும் இம்மருந்து குருதியில் 2 மணித்துளிகள் மட்டுமே மாறாமல் இருக்கின்றது. இதனை நானோ-தொழினுட்பத்தின்வழி குருதியில் 8 மணிநேரம் வரை இருக்குமாறு புதிய முறையில் கண்டுபிடித்துச் செய்திருக்கின்றார் வினோது கண்ணப்பன்.

     மருத்துவத்துறையில் செய்துகாட்டலுக்கு அடிப்படையான விலங்கினச்சோதனையில் இவ்வகையான தீர்வில்  வெற்றிகண்டு, இப்பொழுது மாந்தர்களுக்குச் செய்முறைச் சோதனையில் உள்ளது.

    தன்னுடைய முனைவர்ப்பட்ட ஆய்வில் இவர் தைசல்ஃபிரம் என்னும் வேதிப்பொருள் எவ்வாறு  கி’ளியோபிளாசிட்டோமா மல்ட்டிஃபோரம் (கி’ளி-பி-ம) (Glioblastoma Multiforme, ”GBM””) எனப்படும் மூளைப்புற்றுநோயில் செயற்படுகின்றது என ஆய்வு செய்திருக்கின்றார் [2].  இந்த ஆய்வில் தைசல்ஃபரம் மருந்தோடு செம்பும் (Cu) கலந்துதந்து கி’ளி-பி-ம (”GBM”) –வின் வேதியெதிர்ப்பை (chemoresistance) மாற்றிக்காட்டியிருக்கின்றார். இந்தச் செப்புக்கலப்புடைய தைசல்ஃபரம்,  கி’ளி-பி-ம புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மையுடயது என நிறுவினர் [2]. (”In this study, we used Disulfiram (DS), an anti-alcoholism drug, in combination with copper (Cu) to target the hypoxia-NF-B axis and inhibit ALDH activity to reverse chemoresistance in GBM CSCs. We showed that DS/Cu is cytotoxic to GBM cells and completely eradicated the resistant CSC population at low nanomolar levels in vitro. We also demonstrated that DS/Cu effectively inhibited GBM in vivo using newly formulated PLGA-DS nanoparticles.”[2])

    இப்புதிய ஆய்வுக்காகத்தான் இவருக்கு வெள்ளிப்பதக்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அறிவியல் குழுவே தந்துள்ளது. இப்பரிசுக்குத் தேர்வாகும்முன்  இவர் பிரித்தானிய நாடாளுமன்ற  மக்களவையில் (House of Commons) தன் ஆய்வைப்பற்றி விளக்கவுரையை அறிஞர்கள் முன் ஆற்றினார்.

    கடைசியாக இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இவருடைய 410 பக்க முனைவர்ப்பட்ட ஆய்வு ஆழுரையில் 3-ஆவது பக்கத்தில் அவருடைய படைப்பைத் தன் தாய்தந்தையருக்குக் காணிக்கையாக்கியிருக்கின்றார். அதில் இரண்டு திருக்குறள்களைத் தமிழிலேயே எழுதியும் இருக்கின்றார்.  இது நடந்திருப்பது இங்கிலாந்தில் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதனைப் படத்தில் பார்க்கவும் .

     a2

    முனைவர் வினோது கண்ணப்பன் அவர்களின் முனைவர்ப்பட்ட ஆய்வு ஆழுரையின் 3-ஆவது பக்கத்தில் இரண்டு திருக்குறளைச் சுட்டி தன் தாய்தந்தையருக்குக் காணிக்கைசெய்த பக்கத்தின் படி.

    முனைவர் வினோது கண்ணப்பன் அவர்களின் அறிவியல் வெற்றியைப் பாராட்டி மேன்மேலும் சிறக்கவேண்டும் என்று வல்லமை வாழ்த்துகின்றது.

    [1] தைம்சு ஆஃபு இந்தியா செய்தி (Times of India), ‘’Coimbatore youth wins accolades in U.K for work on anti-cancer drug’’
    [2] Vinodh Kannappan,  ‘’ Investigation of the anticancer activity and molecular mechanisms of Disulfiram in Glioblastoma Multiforme’’  Ph.D Thesis, June 2015, University of Wolverhampton
    [3] ஆங்கில விக்கிப்பீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Disulfiram#/media/File:Disulfiram2.svg
    [4] ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் https://en.wikipedia.org/wiki/Disulfiram#/media/File:Disulfiram_3D_ball.png படம் ஆக்குநர்: பயனர் Jyntoவ்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ. இரா.செல்வக்குமார்

     a2

    நோபல்பரிசாளர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் பேராசிரியர் க.பாசுக்கரன்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஓர் அறிவியலாளர்.

    மிக எளிய குடும்பத்தில் பிறந்து உலகப்புகழ் எட்டியிருக்கும் இவருடைய வியத்தகு வாழ்க்கை நமக்கெல்லாம்  மிகுந்த உள்ளூக்கம் தரக்கூடியது. .

    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம்  என ஓர் ஊர் உள்ளது. அதன் அருகே கரிசற்குளம் (கரிசல்குளம்) என்று ஒரு சிற்றூர். அங்கேதான் வாழ்ந்துவந்தனர் இவருடைய குடும்பத்தினர்.   ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டதால் இவருடைய தந்தையார்  திரு. கணபதி அவர்கள் குடும்பத்தோடு மதுரையில் குடியேறினார்.  கணபதி அவர்கள் 2-ஆம் வகுப்புவரைதான்  படித்திருக்கின்றார்.  இந்தவார வல்லமையாளரான  பேராசிரியரும் முனைவருமான  க. பாசுக்கரன்  (க’. பா’ஸ்க’’ரன்) அவர்களுடன்  உடன்பிறந்தவர்கள் 7 பேர்.   மொத்தம் 10 பேர் கொண்ட  இவருடைய குடும்பத்தினர்  வெறும் 2-அறை கொண்ட  சிறிய வீட்டில் வசித்தனர். எளிய பொருளாதார வசதி படைத்த இவர் குடும்பத்தில் 8-ஆவது வரை ஒருவர் படித்தால் உடனே வேலைக்குப்போவதே வழக்கம்.  பாசுக்கரன் அவர்கள் 5-ஆவது வகுப்பு படிக்கும்வரை வீட்டில் மின்விளக்கு கிடையாது. மதுரையில் புனிதமேரி பள்ளியில் படித்த இவர் மண்ணெண்ணெய் விளக்கிலும் தெருவிளக்கிலுமே படித்தார்.  ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த மதிப்பெண் பெற்று எப்படியோ தேறி வந்தார்.  கணக்குப்போடுவதும்  ஆங்கிலத்திலும் தமிழிலும் பிழையில்லாமல் எழுதுவதும் கடினமாக உணர்ந்தார்.  ஆனாலும் ஆசிரியர்  பாடம் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு வந்தார்.  பள்ளிப்படிப்பு வரை தமிழ்வழியில் பயின்ற இவர் பி.யூ.சி என்னும் (இன்றைய படிப்பில் பிளசு-2 –வின் இறுதியாண்டு)  படிப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலவழி படித்தார். முதலில் கடினமாகவே இருந்தது.  பி.யூ.சி-யில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று  மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் இளநிலையில் (B.Sc) சேர்ந்தார்.  ஒருமுறை இவர் 70% மதிப்பெண் பெற்றதைப் பார்த்து, ‘’நீ இன்னமும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்’’ என்று இவருடைய துறைத்தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்கள் இவரிடம் கூறினார். அதைக் கேட்டதுமுதல் இவர் பாடத்தில் உற்றுகவனிக்கத் தொடங்கி மிகுந்த அக்கறை எடுத்தார்.  அதன் பயனாய் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றார்.

    பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்
    பேராசிரியர் வாட்டர்லூ, கனடாவில்

    அதன்பின் ஏறுமுகம்தான்.  அடுத்து அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை   பட்டம் பெற்றார்.  பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science,) சேர்ந்து திண்மநிலை இயற்பியலில் (Solid State Physics) முனைவர்ப்பட்டம் பெற்றார்.  இவர் குடும்பத்தில் பட்டப்படிப்பே படிக்காதவர் நடுவில் இவர் புகழ்மிகு உயர்கல்விக்கழகத்தில்  முனைவர்ப்பட்டம் பெற்றிருக்கின்றார். நோபல் பரிசு பெற்ற அப்துசு சலாம் (Abdus Salam) அவர்கள் இத்தாலி நாட்டின் வடகிழக்கேயுள்ள திரீசித்தே ( Trieste) என்னும் நகரில் 1964 ஆம் ஆண்டு  நிறுவிய அனைத்துலக கொள்கைய  இயற்பியல் நடுவத்தில்  (International Centre for Theoretical Physics (ICTP)) குளிர்கால பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்குகொள்ள இவருக்கு அரிய வாய்ப்பு கிட்டியது.  இந்த நிறுவனம் ஐ.சி.டி.பி (ICTP) எனப்பரவலாக அறியப்படுகின்றது.  பிறகு அங்கேயே (ஐ.சி.டி.பி –யில்) வேலையும் கிடைத்தது. இதுவொரு திருப்புமுனை!! அங்கே வந்தார் அமெரிக்காவில் உள்ள பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) பேராசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர்   பிலிப்பு வாரன் ஆண்டர்சன் (Philip Warren Anderson) என்பார். இவர் மீகடத்தித்துறை (superconductor) ஆய்வில் மிகுபுகழ் எட்டியவர்.  அவருடன் நடந்த அறிவியல் கருத்துறவாட்டத்தின் பயனாய் அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்திலேயே வருகைதரு பேராசிரியராகச் செல்ல வாய்ப்பு கிட்டியது.  இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்டுநாகர் விருதை (Shanti Swarup Bhatnagar Prize) இவர் 1990 இல் வென்றிருக்கின்றார். அதற்கும் முன்பாக  நோபலியர் அப்துசு சலாம் அவர்களின் ஐ.சி.டி.பி நிறுவனத்தின் முதல் விருதாகிய ஐ.சி.டி.பி பரிசை 1983 இல் வென்றார்.  இப்பரிசு 40 வயதுக்கும் குறைவான  வளரும் நாட்டு அறிவியலாளர் ஒருவருக்கு வழங்கப்பெறும் விருது.  இவர் நோபல் பரிசு பெற்ற ஆண்டர்சன் அவர்களுடன் இணைந்து ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத்  (electron) தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றினிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட  ( developed the resonating valence bond theory)  தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் பாசுக்கரன் அவர்கள் உலகளவில் முன்னணி ஆய்வாளர் இத்துறையில் இவர் நோபலியர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் சேர்ந்து கருத்தியக் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றார்.  இக்கருத்துகள் உயர்வெப்ப மீகடத்தித்துறையில் (high temperature superconductor) மிகவும் முக்கியமானவை. இவருடைய படைப்புகளுக்காக இவருக்கு நோபல்பரிசு கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். இவர் கனடாவில் வாட்டர்லூ நகரில் உள்ள புகழ்மிக்க பெரிமீட்டர் கழகம்  (Perimeter Institute) என்னும் கொள்கைய இயற்பியல் (Theoretical Physics) ஆய்வுக்கழகத்தில் வருகைதரு அறிவியலாளராக வந்துபோய்க்கொண்டு இருக்கின்றார்.  இதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, சப்பான், பிரேசில், பிரித்தானியா, இடாய்ச்சுலாந்து (செருமனி)  போன்ற பலநாடுகளுக்குச் சென்று அறிவியல் ஆய்வுரைகள் வழங்கிவருகின்றார்.   இந்திய அக்காதெமி ஆஃபு சயன்சு, இந்திய நேசனல் சயன்சு அக்காதெமி  போன்ற அமைப்புகள்  இவரை சிறப்பாளராக (Fellow) அறிவித்துப் பெருமைப்படுத்தியுள்ளன. இவர் சென்னையில் இந்திய அறிவியற்கணிதக் கழகத்தில் (The Institure of Mathematical Science) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கின்றார். இவர் தமிழ்மொழிக்கும் அரிய தொண்டு ஆற்றிவருகின்றார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகக்து. முழுமை அறிவியல் உதயம் என்னும் இதழில்  ஐன்சுட்டீனின் பொதுச்சார்பியல் கொள்கையின்  (Einstein’s General Theory of Relativity) 100-ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி விரிவான  பெருங்கட்டுரைத் தொடர் ஒன்றைத் தமிழில் அண்மையில் எழுதியுள்ளார்.  இத்தொடரின் கடைசி கட்டுரை எழுதியவுடன்  தற்செயலாய் இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பொருளீர்ப்பு அலைகளை  (Gravitational waves) பிப்பிரவரி 11, 2016 அன்று  LIGO என்னும் ஆய்வுநிறுவனத்தார் செய்முறையில் கண்டுநிறுவினார்கள்.

    arivial

    தெருவிளக்கில் படித்து  உலக அளவில் அறிவியலாளராக உயர்ந்த, நோபல் பரிசாளருடன் இணைந்து கட்டுரை எழுதிய, பெருமைமிகு விருதுகள்  பலபெற்ற பேராசிரியர் க. பாசுக்கரன் அவர்களை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து மகிழ்கின்றோம். அவருக்கு நம் பாராட்டுகள்.

    நூற்துணையும் குறிப்புகளும்:
    [1] புதிய தலைமுறை இதழ் (23, ஆகத்து 2010)

    [2] தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை க. பாசுக்கரன் (https://ta.wikipedia.org/s/2yzm)

    [3] ஆங்கில விக்கிப்பீடியா [https://en.wikipedia.org/wiki/Ganapathy_Baskaran

    [4] முழுமை அறிவியல் உதயம் இதழ்.

    [5] செ.இரா.செல்வக்குமாரிடம் நேரில் தெரிவித்த செய்திகள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செ.இரா. செல்வக்குமார்

    இந்த வார வல்லமையாளர் கம்சாயினி குணரத்தினம்

    29-02-2016

    Kamsa

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்பெறுபவர் அகவை 27 நிரம்பிய செல்வி கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam) என்னும் தமிழ்ப்பெண்.  இவர் ஐரோப்பாவிலுள்ள நோர்வே நாட்டின் தலைநகரான ஓசுலோ (Oslo) நகரின் துணை நகரமுதல்வர் (Deputy Mayor) பதவியை  அடைத்திருக்கின்றார்.  உலகிலேயே மனிதவளத்தில் முதலிடத்தில் இருக்கும் நோர்வே நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிக அதிக மக்கள் தொகையும் கொண்ட இந்நகரத்தின் துணை நகரமுதல்வர்  என்பது மிகவும் பெருமைவாய்ந்த பொறுப்பு மிகுந்த பதவி.

    நோர்வே நாட்டின் உழைப்பாளர் கட்சியின் (Labour Party) உறுப்பினரான இவர் முதன்முதலாக  2007 ஆம் ஆண்டில் தன் 19 -ஆவது வயதில் ஓசுலோ மாநகரதின் குழுவில் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதன் பின்னர் பல பொறுப்புகளுக்குப் பின் ஓசுலோவின் நகரத் துணைமுதல்வர் பதவியை எட்டினார்.

    ஓசுலோவுக்கு வடமேற்கே உள்ள தைரி ஏரியில் உள்ள அதோயா (Utøya) தீவில்  ஆண்டுதோறும் உழைப்பாளர் கட்சியின் இளைஞர்களுக்கான  முகாம் ஒன்று நடைபெறும்.  2011 ஆம் ஆண்டு நடந்த இந்த முகாமில்  கம்சாயினி குணரத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். அவ்வாண்டு ஏறத்தாழ 600 இளைஞர்கள் அதில் கலந்துகொண்டனர்.  இந்த முகாமில்  சற்றும் எதிர்பாராமல் ஆந்தேசு பிரெவீக்கு (Anders Breivik ) என்பார் புகுந்து  துப்பாக்கியால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டு மாபெரும் படுகொலை செய்தார். 69 பேர் உயிரிழந்தனர், 110 பேர் படுகாயம் அடைந்தனர்.  பலர் பாறைகளுக்கு இடுக்கில் மறைந்துகொண்டும், ஏரியில் குதித்தும் உயிர்பிழைக்க முயன்றனர். ஏரியில் குதித்து நீந்தித்தப்பிக்க முயன்றவர்களைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டிருந்தபொழுதும், கம்சாயினி குணரத்தினம் துணிவாக விடாமுயற்சியுடன் நீந்தி 500 மீட்டர் தொலைவைக் கடந்து கரையேறி தப்பித்தார். அப்பொழுது அவருக்கு வயது 23. வீரத்துடனும் நல்வாய்ப்பாகவும் இவர் உயிர்தப்பியது வியப்பூட்டுவது.

    கம்சி (Kamzy ) என்னும் பெயரால் தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தனக்கு அகவை 3 இருக்கும்பொழுதே நோர்வே நாட்டுக்குத் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தார். முதலில் நோர்வே நாட்டில் வடக்கே மீன்பிடித்துறையில் இவரின் பெற்றோர்கள் பணியில் இருந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து இவருடைய தம்பியோடு இவருடைய பெற்றோர்,  தம் குழந்தைகள் தமிழ் படிக்க வசதியாக இருக்குமென நினைத்து ஓசுலோ நகரத்திற்குக் குடிபெயர்ந்தனர்.  ஓசுலோவின் தமிழ் இளைஞர் நிறுவன  (Tamil Youth Organisation) விழாவொன்றுக்கு வந்திருந்த ஓசுலோ நகர முதல்வர் இரேமந்து யோகான்சன் (Raymond Johansen) அவர்களைச் சந்திக்க  ஒரு வாய்ப்பு கிட்டியது.  அப்பொழுது யோகான்சன் அவர்கள் இவரை பெரிதும் ஊக்கப்படுத்தினார்.  அதன் பின்னர் கம்சி ஓசுலோ பல்கலைக்கழகத்தில் குமுக அமைப்பியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார்.  அரசியலில் பங்குபற்றி நற்பணிகள் செய்து, நற்பெயர் ஈட்டி ஐரோப்பாவின் தலைகநகரமொன்றின் நகரத் துணைமுதல்வர் பதவியை இப்பொழுது எட்டியுள்ளார்.

    kam

    கம்சாயினி குணரத்தினம் அவர்களுக்கு வல்லமை குழுவின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தன் பதவியில் சிறப்பு எய்தவும்  மேலும் பல உயர்ச்சிகள் எட்டவும்  வாழ்த்துகின்றோம்.

    [1] https://www.facebook.com/khamshajiny/?fref=ts
    {2] https://en.wikipedia.org/wiki/Khamshajiny_Gunaratnam ; https://ta.wikipedia.org/s/4t3j
    {3] http://www.theguardian.com/women-in-leadership/2015/dec/22/my-ambition-is-to-be-a-voice-for-those-who-dont-or-cant-speak-their-mind

    [இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share