Tag: புதுக்கோட்டை பத்மநாபன்

  • திருவள்ளுவர் யார்? – 8

    திருவள்ளுவர் யார்? – 8

    புதுக்கோட்டை பத்மநாபன்

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்

    என்பது இந்த அதிகாரத்தின் கடைசிக் குறட்பா.

    பகவானின் திருவடியை அடைந்தவர்களே பிறவிப் பெருங்கடலை நீந்தி, பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “विष्णोर्यत्परमं पदं” (ரிக்-1-22-6) என்று திருமாலின் உலகையே மோக்ஷலோகம் என்று ரிக்வேதம் முழங்குகிறது. “विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः।सोऽध्वनःपारमाप्नोति तद्विष्णोःपरमं पदम्॥” (எவனொருவன் புத்தியை ஸாரதியாகவும் மனதைக் கடிவாளமாகவும் கொண்டு இந்திரியங்கள் என்ற குதிரைகள் பூட்டப்பட்ட இந்த உடல் என்னும் தேரைச் செலுத்துகிறானோ அவன் இந்த ஸம்ஸாரக் கடற்பயணத்தின் அக்கரையிலிருக்கும் விஷ்ணுவின் அந்தப் பரமபதத்தை அடைகிறான்) என்று கடோபநிஷத்தும் (கட-1-3-9) விஷ்ணுவின் பரமபதமே ஸம்ஸாரக் கடலைக் கடந்தவர்கள் சென்றடையும் இடம் என்று சொல்கிறது.

    “ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते॥तेषामहं समुद्धर्ता मृत्युसंसार सागरात्।भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम्॥” (பார்த்தா! எவர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்து, என்னை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மற்றொன்றை மனதில் நினைக்காத யோகத்தினால் என்னைத் தியானித்து உபாஸனை செய்கிறார்களோ, அவர்களை ஜனன மரணங்களாகிய ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்த்துவிடுவேன். கீதை-12-6,7) என்று கீதையில் பகவானும் சொல்கிறான்.

    (“மாஅயோயே மாஅயோயே மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மாஅயோயே” (பரிபாடல்-3), “நாறிணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” (பரிபாடல்-15) என்ற சங்க இலக்கிய வரிகள் திருமாலின் மாசில்லாத திருவடியே பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அளிக்கும் என்றும் திருமால் ஒருவனே வீடுபேற்றை அளிக்கமுடியும் என்றும் கம்பீரமாக முழங்குகின்றன. ஆகவே பரம வைதிகரும் சங்கத் தமிழருமான திருவள்ளுவர் இக்குறட்பாவில் இறைவன் என்ற சொல்லால் திருமாலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது.

    இங்கு நாம் எடுத்துக் காட்டிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கருத்துகள் நிறைந்து இருப்பதை நாம் காண முடியும். நற்றாள் தொழாஅர், மாணடி சேர்ந்தார், அடி சேர்ந்தார்க்கு, தாள் சேர்ந்தார்க்கு, தாளை வணங்காத் தலை, அடி சேராதார் என்ற சொற்றொடர்களால் பகவானது திருவடியைப் பற்றியே பேசுகிறார் திருவள்ளுவர்.

    பகவானது திருவடியில் சரணாகதி செய்வது என்பது, ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவானின் மற்ற அங்கங்களைவிட அவனது திருவடிக்கே பெருமை அதிகம். இக்கருத்தையே “நின்னின் சிறந்த நின் தாள் இணையவை” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகின்றது. மேலும் பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ ஆகமத்தின் தத்துவமே இந்த பத்துக் குறட்பாக்களிலும் காணப்படுகிறது.

    பாஞ்சராத்ரம் மிகத் தொன்மையான ஆகமம் என்பதைக் கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று ஆவணங்கள் இவற்றின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் பாஞ்சராத்ரத்தின் கூறுகள் காணப்படுவதால் அதன் தொன்மையைத் தெளிவாக அறிய முடிகிறது. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று ஐந்து நிலைகள் பகவானுக்கு இருப்பதாகப் பாஞ்சராத்ரம் கூறுகிறது. இந்த ஐந்து நிலைகளையும் இந்தப் பத்துக் குறட்பாக்களிலும் காட்டுகிறார் திருவள்ளுவர்.

    “தனக்குவமை இல்லாதான்”, “கோளில் பொறியில்”, “பிறவிப்பெருங்கடல்” என்ற குறட்பாக்கள் மூலம் பகவானின் பரநிலையையும், “அகரமுதல”, “கற்றதனால் ஆயபயன்” என்ற குறட்பாக்களால் வியூக நிலையையும், “வேண்டுதல் வேண்டாமை”, “இருள்சேர் இருவினையும்”, “பொறிவாயில்” என்ற குறட்பாக்களில் விபவ நிலையையும், “அற ஆழி அந்தணன்” என்ற குறட்பா மூலம் அர்ச்சை நிலையையும், “மலர்மிசை ஏகினான்” என்ற குறட்பா மூலம் அந்தர்யாமி நிலையையும் காட்டுகிறார்.இது தவிர முற்றும் துறந்த தவ யோகிகள் சென்றடையும் மோக்ஷலோகம் தாமரைக்கண்ணனான செங்கண்மாலின் உலகமே என்று “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக்கண்ணான் உலகு” என்ற குறட்பாவின் மூலம் மிகத்  தெளிவாகக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

    இக்குறட்பாவில் பகவானைத் “தாமரைக்கண்ணான்” என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. “தாமரைக்கண்ணன்” என்பது திருமாலுக்குரிய சிறப்பான திருநாமங்களில் ஒன்று. மேலும் இக்குறட்பாவின் மூலம் சிற்றின்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மோக்ஷலோகமான செங்கண்மால் உலகை அடைய முடியாது என்பதையும் நிரதிசய இன்பமான மோக்ஷ இன்பத்தை விழைபவர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.  ஒரு பெண்பித்துப் பிடித்தவனின் கூற்றாக இக்குறளை அமைத்திருக்கிறார்.

    நிரதிசய இன்பமான மோக்ஷம் என்பது திருமாலின் உலகுதான் என்பது திருவள்ளுவருக்குத் தெரிந்திருந்ததால்தான் மோக்ஷத்தைப் பற்றிய பேச்சு வருமிடத்தில் “தாமரைக்கண்ணான் உலகு” என்ற சொற்றொடர் மூலம் செங்கண்மால் உலகைக் காட்டுகிறார். மோக்ஷத்திற்கு சிற்றின்பம் எதிர்தட்டானது என்பதைக் காட்டவே இக்குறட்பாவைக் காமத்துப்பாலில் வைத்தார். உலகியல் ஆசைகளில் மூழ்கியிருப்பவனுக்கு மோக்ஷத்தின் அருமை தெரியாதென்பதும் மோக்ஷத்தை விரும்புவோர் உலகியல் ஆசைகளை அறவே விடவேண்டும் என்பதும்தான் இந்தக் குறட்பா நமக்குத் தரும் செய்தி.

    பிறவித் தளையிலிருந்து விடுதலை என்று சொல்லக்கூடிய மோக்ஷம் என்பதைத் திருமால் தான் கொடுக்க முடியும் என்ற சங்கத் தமிழரின் கோட்பாட்டை அப்படியே வழிமொழிந்திருக்கிறார் திருவள்ளுவர்.

    நிறைவுப் பகுதி 

    திருவள்ளுவர் தனது நூலில் குறிப்பிடும் தெய்வங்கள் எல்லாமே வைதிக தெய்வங்கள்தான். அந்தத் தெய்வங்களுள் அவர் மனதில் நிறைந்து நின்ற தெய்வங்கள் திருமாலும் திருமகளும்தான். சங்கத் தமிழரின் மரபுப்படி தனது நூலில் திருமாலையே பரம்பொருளாக முழங்கியிருக்கும் திருவள்ளுவர், பெரிய பிராட்டியாரான திருமகளின் அனுக்ரஹம் பற்றியும் சில குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது அவர் அப்பழுக்கற்ற சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தனது நூலில் வேதம், வைதிக கர்மங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள், இவற்றின் சிறப்பையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்கும் திருவள்ளுவர் ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே காட்டுவதால் அவர் ஒரு ஸனாதன வைதிக நெறியைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவ அந்தணர் தான் என்பதே அவரது நூலிலிருந்து வெளிப்படுகிறது. ஆகவே அவருக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டுமென்றால், நெற்றியிலும் உடலிலும் பன்னிரண்டு திருமண்காப்புகள், தூய மெல்லிய வெண்ணிற ஆடை, கழுத்தில் தாமரை, துளசி மணிமாலைகள், மார்பில் யஜ்ஞோபவீதம் (பூணூல்) இவற்றுடன் கூடிய ஒரு உருவத்தைத்தான் கொடுக்க முடியும். அவ்வுருவம் தான் அவருடைய நூலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் பொருத்தமான உருவமாக இருக்கும். வேறு எந்த உருவத்தைக் கொடுத்தாலும் அது அவரது நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முரணாகத்தான் இருக்கும்.

    ஆகவே திருவள்ளுவர் ஸனாதன வைதிக மதத்தைப் பின்பற்றும் ஒரு ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒருவனுடைய குலத்தை அவனது வாய்ச்சொல்லே காட்டிவிடும் (குறள்-959) என்று திருவள்ளுவரே கூறியிருப்பதால் அவரது சொல்லான திருக்குறளே இதற்குச் சான்று. திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் பல உரைகள் இருந்தாலும் பரிமேலழகரின் உரைதான் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. திருவள்ளுவர் வைணவராகவும் திருக்குறள் வைணவ நூலாகவும் இருந்ததால் தான் பரம வைணவரான பரிமேலழகர் அதற்கு உரை எழுதினார். வைணவ ஆசார்யர்களில் பலர் தங்களது தத்துவ விரிவுரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகராக இருந்தவர் பரிமேலழகர். திருவள்ளுவரின் திருவுள்ளத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு திருக்குறளுக்கு உரை எழுதியவர் அவர். ஆனால் அவரது உரை, சிலருக்குப் பிடிக்காது. ஏனெனில் உண்மையைச் சொன்னால் சிலருக்குப் பிடிக்காது என்பது உண்மைதானே? ஆரியச் சார்போடு உரை எழுதிவிட்டார் என்று அவரைச் சாடுவார்கள். “ஆரியன்” என்றால் “உயர்ந்தவன்”, ”அறிவாளி” என்று பொருள். திருவள்ளுவரும் பரிமேலழகரும் ஆரியர்களே.

    “ஆய்வு” என்ற பெயரில் தங்கள் எண்ணத்துக்கு முரண்பாடான குறட்பாக்களையெல்லாம் இடைச்செருகல் என்பார்கள் சிலர். திருக்குறள் மேல் தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச அந்நூலில் உள்ள சொற்களுக்கு நேர்மையற்ற முறையில் வலிந்து பொருள்கொண்டு இன்றும் எத்தனையோ பேர் புதிது புதிதாக உரை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்படியாக இவர்கள் உரை எழுதிவிட்டதால் திருக்குறள் இவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் நூலாகிவிடாது. திருவள்ளுவரும் இவர்களைச் சேர்ந்தவர் ஆகிவிடமாட்டார்.

    மேலும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி முதலிய புலால் வகைகளை உண்ணுதல், விதவிதமான மதுபானங்களை அருந்துதல், சுயஒழுக்கம் இல்லாமல் வைப்பாட்டிகளோடும் விலைமாதரோடும் இன்பம் துய்த்தல், பெண்களின் சுதந்திரத்துக்குக் கற்பு, ஒழுக்கம் இவையெல்லாம் தடையாக உள்ளவை என்று பிரசாரம் செய்தல், அடுத்தவன் மனைவியை ஒருவன் விரும்புவதும், ஒருவனின் மனைவி வேறொருவனை விரும்புவதும் தவறில்லை என்று பிரசாரம் செய்தல், இறை நம்பிக்கை இல்லாமல் ஸனாதன மதத்தில் உள்ள தெய்வங்களை இழிவுபடுத்துதல்- இவையே இன்று “பகுத்தறிவு”வாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களின் பண்புநலன்கள்.

    இந்தப் “பகுத்தறிவு”வாதிகள் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, கற்பு, இறை நம்பிக்கை முதலிய நல்லறங்களைப் போதிக்கும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் உரிமை கொண்டாடுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது? திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசுவதற்குக் கூட இவர்களுக்குத் தகுதி இல்லை. இவர்களின் பண்புகளுக்கும், திருக்குறளின் கொள்கைக்கும் ஏதாவது ஸம்பந்தம் உண்டா? இன்று, பசுவதை செய்து மாட்டுக்கறி தின்பதை ஆதரிப்பவர்களும், குடிகாரர்களும், கூத்தியருடன் கும்மாளம் அடிப்பவர்களும், ஸநாதன மதத்தின் தெய்வங்களை இழித்துரைப்பவர்களும் “திருவள்ளுவர்“ எங்கள் தமிழ் இனத்துக்கே தலைவர்”, ”எங்கள் பாட்டன்”, ”எங்கள் பூட்டன்”, “எங்கள் ஐயன்” என்றெல்லாம் சொல்லித் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரிகிறார்களே, இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா?

    ஆகவே இந்தப் “பகுத்தறிவு”வாதிகளும், இவர்களது கொள்கைளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்பதோடு திருவள்ளுவரையும் திருக்குறளையும் அசிங்கப்படுத்தும் விஷயமும் ஆகும். திருவள்ளுவரை வைத்து இவர்கள் செய்வது ஈனத்தனமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? திருவள்ளுவரையும் திருக்குறளையும் பெருமைப்படுத்த விரும்புவோர் திருக்குறளில் சொல்லப்பட்ட அறங்களைத் தங்கள் வாழ்வில் முடிந்த அளவு பின்பற்ற முயல வேண்டும். அது ஒன்று தான் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

    -முற்றும்-

    Share
  • திருவள்ளுவர் யார்? – 7

    திருவள்ளுவர் யார்? – 7

    புதுக்கோட்டை பத்மநாபன்

    “பொறிவாயில் ஐந்தவித்தான்”

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்”

    என்பது அடுத்த குறட்பா.

    ஐம்பொறிகளை அடக்கிய இறைவனின் பொய்யில்லாத ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “ஜிதேந்த்ரிய:” என்ற ஒரு நாமமுண்டு. அதற்கு ‘புலன்களை வென்றவன்’ என்று பொருள். பகவான் மனிதனாக அவதாரம் செய்தாலும் சராசரி மனிதனுக்குள்ள புலன் விஷயங்கள் அவனிடம் நெருங்குவதில்லை. ராமாவதாரத்தில் அவன் வாழ்ந்து காட்டிய நெறிமுறைப்படியும் கிருஷ்ணாவதாரத்தில் அவன் உபதேசித்த நெறிமுறைப்படியும் வாழ்பவன் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வான் என்பதே திருவள்ளுவர் இங்கு கூற வரும் கருத்து.

    ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ’பொறி’ என்ற சொல்லுக்கு ‘தீப்பொறி’, ‘அழகு’ என்ற பொருள்களும் உண்டு. ப்ரளய காலத்தில் தீப்பொறிகளை உமிழ்கின்ற அல்லது அழகான தனது திருவாயில் (‘திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று கோதையார் அனுபவித்த கோலத்திருவாயன்றோ அது!) ஐந்தின் மடங்கான தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கிய ப்ரபஞ்சத்தை அவித்துக்கொள்ளும் அல்லது விழுங்கிவிடும் திருமால் என்ற பொருளும் உண்டு. தனது அடியார்களின் புலன் விஷயமான உணர்வுகளை அறவே அழித்துவிடுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். இதைத்தான் “ஐந்து இருள் அறநீக்கி நான்கினுள் துடைத்து தம் ஒன்றாற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர்” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகிறது. ஆகவே இந்தக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது.

    “தனக்குவமை இல்லாதான்”

    அடுத்த குறட்பாவில் பகவானைத் “தனக்குவமை இல்லாதான்” என்று அழைக்கிறார் திருவள்ளுவர். “न ते विष्णो जायमानो न जातो देव महिम्नःपरमन्तमाप” (ந தே விஷ்ணோ ஜாயமானோ ந ஜாதோ தேவ மஹிம்ந பரமந்த மாப-ரிக் வேதம்-7-99-2) என்று ரிக்வேதம் பகவானைத் துதிக்கிறது. “பகவானே! விஷ்ணோ! பிறக்கின்றவனும் பிறந்தவனும் உன் பெருமையின் மேல்எல்லையை அறியவில்லை” என்பது இந்த ரிக்வேத வாக்யத்திற்குப் பொருள்.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘அனுத்தம’, ‘அதுல:’ என்று இரண்டு நாமங்கள் வருகின்றன. ‘அநுத்தமன்’ என்றால் ‘தனக்குமேல் உயர்ந்தவன் இல்லாதவன்’ என்று பொருள். ‘அதுலன்’ என்றால் ‘தனக்கு ஸமமானவன் எவனும் இல்லை’ என்று பொருள். “न त्वत्समोऽस्त्यभ्यधिकःकुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव”(ந த்வத் ஸமோஸ்த்யப்4யதி4க:குதோந்யோ லோகத்ரயேப்யப்ரதிம ப்ரபா4வ -கீதை-11-43) என்று கீதையிலும் சொல்லப்பட்டது. “மூவுலகிலும் உனக்கு ஸமமானவன் இல்லாதபோது உயர்ந்தோர் எங்கிருப்பர்” என்பது இந்த கீதை வசனத்தின் பொருள்.

    “இன்னோர் அனையை இனையயால் என அன்னோர் யாம் இவண் காணாமையின்” (பரிபாடல்-1) என்றும் “நின்னைப்புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ” (பரிபாடல்-3) என்றும் எம்பெருமான் விஷயமாகச் சங்க இலக்கியம் பேசுகின்றது. அதனால் திருவள்ளுவர் குறிப்பிடும் தனக்குவமை இல்லாதான் திருமால்தான் என்பதில் ஐயமில்லை.

    “அற ஆழி அந்தணன்”

    அடுத்த குறட்பாவில் பகவானை “அற ஆழி அந்தணன்” என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் பகவானின் அஸாதாரண அடையாளமான ஆழிப்படையை நினைவுபடுத்துகிறார் திருவள்ளுவர். பகவான் தன் கையில் வைத்திருக்கும் ஸுதர்ஶனச் சக்கரத்தால் உலகில் தர்மத்தைக் குலைக்கும் துஷ்டர்களை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டுகிறார். உலகில் தர்மத்தை நிலைநாட்டவே சக்கரத்தைத் தனது கையில் தரித்திருக்கிறான் பகவான். அதனாலேயே “அறஆழி” என்று குறிப்பிட்டார்.

    “चतुर्भिस्साकं नवतिञ्च नामभिश्चक्रं न वृत्तं व्यतीनवीविपत्” (தனது ஸுதர்ஶனச் சக்கரத்தைச் சுழற்றுவதுபோல், தொண்ணூற்று நான்கு அவயவங்களைக் கொண்ட காலச் சக்கரத்தையும் விஷ்ணு தன் கையில் வைத்துக்கொண்டு சுழற்றுகிறார்) என்று ரிக்வேதம் (ரிக்-1-155-6) கூறுகிறது. இதனால் ஸுதர்ஶனமே காலச் சக்கரமாகவும் இருக்கிறது என்பது தெளிவாகிறது. “மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே”(பரிபாடல்-3) என்று எல்லா உலகத்தின் பாதுகாப்பும் பகவானது திருச்சக்கரத்தின் நிழலில் தான் உள்ளது என்று சங்க இலக்கியமும் கூறுகிறது.

    உலகில் அந்தணர்களையும் அவர்களது தர்மமான வைதிக நெறியையும் ஒரு மன்னன் பாதுகாக்க வேண்டும் என்று ‘ஆபயன் குன்றும்’ ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்கள் மூலம் திருவள்ளுவரே கூறுகிறார். வேத வைதிக நெறியான அந்தணரின் அறம் தான் உலகில் உள்ள மற்றவர்களின் அறங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. உலகில் அந்தணருக்கும் அவர்களது அறத்திற்கும் நலிவு ஏற்படுகின்ற பொழுது அதர்மம் தலைதூக்கி விடுகிறது. பகவான் அந்த அறத்தை நிலைநாட்டி உலகத்தைக் காக்கவே தனது அவதார காலங்களில் அந்தணர் வடிவிலும் தோன்றியிருக்கிறான். அதனால்தான் ‘அந்தணன்’ என்று பகவானைக் குறிப்பிட்டார் திருவள்ளுவர். அதனால் இக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது. 

    எண்குணத்தான்

    அடுத்த குறட்பாவில் பகவானை எண்குணத்தான் என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். சாந்தோக்ய உபநிஷத்தில் “एष आत्माऽपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपास्सत्यकामः सत्यसंकल्पः” (பாபமற்றவன், கிழத்தன்மையற்றவன், மரணமற்றவன், ஶோகமில்லாதவன், பசியற்றவன் தாக மற்றவன், உண்மையான எல்லா இன்பங்களையும் உடையவன், வீணாகாத ஸங்கல்பத்தை உடையவன்) என்று பரமாத்மாவுக்கு எட்டு குணங்கள் இயல்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை குணாஷ்டகம் என்று கூறுவர். முக்தி பெற்ற நிலையில் தான் ஜீவாத்மாவுக்கு இக்குணங்கள் ஏற்படுகின்றன.

    கோரர் என்ற ரிஷி, ஒரு க்ருஷ்ண பக்தர். ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா எனப் புரிந்துகொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால் அவரது இறுதிக் காலத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் பேறு பெற்றதுடன் மேற்படி எட்டு குணங்களை அடைந்து முக்தரானார் என்ற விஷயம் மேற்படி உபநிஷத்திலேயே சொல்லப்படுகிறது. பகவான் அநந்த கல்யாண குணங்களை உடையவன். அவனது குணங்களை எண்ண முடியாது. முக்தி பெறும் ஜீவாத்மாக்கள் பகவானிடமுள்ள பல்வேறு குணங்களில் குறிப்பாக எட்டு குணங்களை மட்டும் அடையும் தகுதி பெறுகிறார்கள் என்பதை உணர்த்தவே மேற்படி எட்டு குணங்களை மட்டும் உபநிஷத் எடுத்துக் காட்டுகிறது. அதுவே குணாஷ்டகம் என்று ப்ரஸித்தி பெற்றுவிட்டது. முக்தி பெற்றோருக்குத் தனது எட்டு குணங்களை மட்டும் அநுக்ரஹிப்பவன் என்பதால் தான் பகவான் “எண்குணத்தான்” என்றும் ப்ரஸித்தியடைந்தான்.

    பரமாத்மாவின் இந்த எட்டு குணங்களை மட்டும்தான் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா பெற முடியுமேயொழிய பகவானின் மற்ற குணங்களைப் பெற முடியாது. அதனால் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவோடு எல்லா வகையிலும் ஸாம்யத்தை அடைந்து விட முடியாது. இதுவே வேதாந்தத்தின் முடிவு. பரம வைதிகரான திருவள்ளுவர் அதை மனதிற் கொண்டுதான் பகவானை எண்குணத்தான் என்கிறார்.

    பகவானது குணங்களை எண்ணினால் எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவில்லை. அதனாலும் எண்குணத்தான் என்பது பொருத்தம்தான். ‘எண்பதத்தான்’(குறள்-548) ‘எண்பதத்தால்’ (குறள்-991) என்ற இடங்களில் போல பகவானின் ஸௌலப்ய குணத்தைக் குறிப்பிடுவதற்காகக் கூட ‘எண்குணத்தான்’ என்று சொல்லலாம். இவ்விடத்துக்கு உரை செய்த பரிமேலழகர் எண்வகைப்பட்ட குணங்களை உடையானது என்று பொதுவாகச் சொல்லிச் செல்கிறாரேயொழிய அந்த குணங்கள் எவை என்னும் விஷயத்தில் தன் கருத்தாக எதையும் குறிப்பிடவில்லை.

    இது குறித்துப் பலருடைய கருத்தை வெளிப்படுத்துமிடத்தில் ஶைவ ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். ஶைவாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று தான் கூறுகிறாரேயொழிய, திருவள்ளுவர் ஶைவாகமத்தைப் பின்பற்றியே எண் குணத்தான் என்று கூறினார் என்று அவர் சொல்லவில்லை. ஏனெனில் ஶைவாகமம், ஶைவ ஸித்தாந்தம் இவையெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை.

    திருவள்ளுவர் சங்கத் தமிழர்களின் மரபில் வந்தவர். சங்கத் தமிழர்கள் இடம் சார்ந்து பல தெய்வங்களை வழிபட்டிருந்தாலும் வைதிக தெய்வமான திருமாலையே பரம்பொருளாகக் கருதி வழிபாடு செய்தனர். வேறொரு தெய்வத்தை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இதற்கு சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் திருமாலின் அவதாரச் செய்திகளும் பரத்வமும் தான் பேசப்படுகின்றன.

    ருத்ரனைக் குறித்த சில குறிப்புகள் சில இடங்களில் வருகின்றனவேயொழிய ஶைவாகமம் ஶைவ ஸித்தாந்தம் இவற்றில் கூறப்படும் ஶிவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக் கூடச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. ஶிவன். ஶைவம் என்ற சொற்களே சங்க இலக்கியங்களில் இல்லை. சங்கத் தமிழர்கள் வேத வைதிக நெறியையும் அதைப் பின்பற்றும் அந்தணர்களையும் ஆதரித்துப் போற்றியவர்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் சொல்லப்படும் எண்குணத்தான் என்பது தமிழர்களின் வைதிக தெய்வமான திருமாலைத்தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தொடரும்…

    Share
  • திருவள்ளுவர் யார்? – 6

    திருவள்ளுவர் யார்? – 6

    புதுக்கோட்டை பத்மநாபன்

    ஆதி பகவன்

    திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் காணப்படுகின்றன. இந்த பத்துக் குறட்பாக்களிலும் குறிபிட்ட தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அற ஆழி அந்தணன், எண்குணத்தான்  என்று கடவுளுக்குரிய அசாதாரணப் பண்புகளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறார் திருவள்ளுவர். இதைவைத்து இவர் குறிப்பிடும் கடவுள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    முதற் குறட்பாவில் வரும் ‘பகவன்’ என்ற சொல் ஒரு முக்கியமான சொல். மண்டல புருடன் இயற்றிய பதினோராவது தமிழ் நிகண்டில் பகவன் என்ற சொல்லுக்கு“பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பகவன் என்ற சொல் சிவன், திருமால், ப்ரஹ்மன், சமண மதக் கடவுள், புத்தன் ஆகியோரைக் குறிக்கும் என்று அந்த நிகண்டு நூல் குறிப்பிடுகிறது. இந்த ஒரே சொல் ஐந்து தெய்வங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இவற்றுள் ஏதோ ஒரு தெய்வத்தைக் குறித்துத்தான் திருவள்ளுவர் அச்சொல்லைப் பயன்படுத்தியிருக்க முடியும். சமண,  பௌத்த மதங்களின் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கொள்கைக்கும் ஸம்பந்தமில்லை என்பதால் இச்சொல் அம்மதங்களின் தெய்வத்தைக் குறித்துப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது . மீதமுள்ள மூன்று தெய்வங்களில் யாரைக் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

    ஓருசொல்  ஒரு காரணத்திற்காக ஒருவரைக் குறித்து முதலில் பயன்படுத்தப்படும். பிறகு அச்சொல் உபசாரத்திற்காக மற்றவர்களைக் குறித்தும் பயன்படுத்தப்படுவது உண்டு. அது பயனாகும் இடத்தை வைத்துத்தான் உண்மையில் அச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதை அறிய முடியும். அதாவது தலைமைப் பண்பு உள்ளவனைத் “தலைவன்”என்று சொல்கிறோம். சில நேரங்களில் உபசாரத்திற்காக மற்றவர்களையும் “தலைவா”என்று அழைக்கிறோம். அதுபோலத் தான் ‘பகவன்’ என்ற சொல் பரம்பொருளுக்குரிய காரணப் பெயர்ச்சொற்களில் ஒன்று. இந்த முதல் குறட்பா, ஜகத் காரணமான பரம்பொருளைப் பற்றிப் பேசுகிறது. மற்றவர்களையும் குறிக்கும் உபசாரச் சொல்லாக இச்சொல்லை யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இச்சொல்லுக்கு முன்னால் ‘ஆதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    ‘ஆதி’ என்றால் முதல் என்று பொருள். அதாவது உலகத் தோற்றத்துக்குக் காரணமான முதற்பொருள் என்று கருத்து. ஸநாதன வைதிக சமயத்தில் ப்ரஹ்மா, ருத்ரன் உள்ளிட்ட அனைவரையும் படைத்த ஜகத்காரணன் திருமால்தான். “ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ:நலமுழுது அளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ” என்ற சங்க இலக்கிய வரிகள் இவ்விஷயத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. தொன்மையான சங்க இலக்கியங்கள் ப்ரஹ்மனையோ ருத்ரனையோ ஜகத்காரணமாக எவ்விடத்திலும் காட்டவில்லை. திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்த சங்கத் தமிழர் மரபில் வந்தவராகையால் ஆதி பகவன் என்ற சொல்லால் அவர் குறிப்பிடும் பரம்பொருள் திருமால்தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. மேலும் அவ்விடத்தில் அவர் காட்டியுள்ள உவமை, இவ்விஷயத்தை மேலும் உறுதி செய்கிறது.

    “अक्षराणाम् अकारोस्मि” (அக்ஷ்ராணாம் அகாரோஸ்மி) என்கிறார் பகவான் கீதையில். அதாவது எழுத்துகளுக்குள் நான் அகரமாக இருக்கிறேன் என்று சொல்கிறார் பகவான்.  இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள உவமையை வைத்துப் பார்த்தால் எழுத்துகளுக்குள் அகரமாக இருக்கும் பகவானே ஜகத் காரணமான ஆதிபகவன் என்பதே இக்குறட்பாவின் உட்பொருளாகத் தேறுகிறது. ஆகவே திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன், திருமால்தான்.

    மேலும் அகரம், தமிழ் மொழிக்கு மட்டும் முதல் எழுத்தன்று. உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குமே அகரம்தான் முதல் எழுத்து. அதைப் போல திருமாலே அகில உலகிற்கும் காரணமான ஸர்வலோகேஶ்வரன் என்ற உண்மையைக் காட்டுவதற்காகவே இந்த உவமையை இங்கு பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். திருமாலே ஸர்வேஶ்வரன் என்பதை சங்கஇலக்கியமும் “இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தெளிவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

    “வாலறிவன்”

    இரண்டாவது குறட்பாவில் பகவானை “வாலறிவன்” என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். ”வாலறிவன்” என்றால் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று பொருள். பரம வைதிகரான திருவள்ளுவர் முண்டகோபநிஷத்தில் சொல்லப்படும் “यःसर्वज्ञःसर्ववित्” (ய:ஸர்வஜ்ஞ:ஸர்வவித்) என்பதையே “வாலறிவன்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”वेदाहम् समतीतानि वर्तमानानि चार्जुन।भविष्याणी च भूतानि माम् तु वेद न कश्चन॥”(வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந| பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஶ்சந||) என்று பகவானும் கீதையில் கூறுகிறான். “கழிந்து போனவையும், இருப்பவையும், இனி வரப்போகின்றவையுமான எல்லாப் பூதங்களையும் நான் அறிவேன். ஆனால் என்னை மட்டும் எவனும் அறியமாட்டான்” என்பது மேற்படிகீதை ஶ்லோகத்தின் கருத்து.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் “ஸர்வஜ்ஞ:” என்ற நாமம் இரண்டு இடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. படைப்புக்கு முன்னும் படைப்புகள் அழிந்த பின்னும் பகவான் ஒருவனே இருக்கிறான் என்பதால் படைக்கப்பட்டவர்களான ப்ரஹ்மனுக்கும் ருத்ரனுக்கும் இச்சொல் பொருந்தாது. மேலும்,“நீயா நினைவ” என்றும் “நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்” என்றும் சங்க இலக்கியம் திருமாலை வர்ணிக்கிறது. அந்தக் கருத்தைக் கொண்ட சொல்தான் ‘வாலறிவன்’ என்னும் சொல். ஆகவே “வாலறிவன்” என்ற சொல்லால் திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வம் திருமாலே என்பது தெளிவாக விளங்குகிறது.

    “மலர்மிசை ஏகினான்”

    மூன்றாவது குறட்பாவில் வரும் “மலர்மிசை ஏகினான்” என்பது ஹ்ருதய கமலத்தில் வசிப்பவன் என்ற பொருளில் பகவானையே குறிக்கிறது. மலரில் இருப்பவன் என்பதால் இது ப்ரஹ்மனையும் குறிக்கலாம் என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால் அது பொருந்தாது. “कारणम् तु ध्येयः”(காரணம் து த்யேய:) -“ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கதக்கது” என்ற வைதிக நெறியைப் பின்பற்றி திருவள்ளுவர் ஜகத்காரண வஸ்துவைப் பற்றியே பத்துக் குறட்பாக்களிலும் பேசுகிறார். ப்ரஹ்மனுக்கும் காரணமானவன் பகவான் விஷ்ணுவே என்பதால் “மலர்மிசை ஏகினான்” என்பது திருமாலையே குறிக்கும். மேலும் இந்த குறட்பாவில் இடம்பெறும் மாணடி, நிலமிசை நீடு வாழ்வார் என்ற விஷயங்களெல்லாம் ப்ரஹ்மனுக்குப் பொருந்தாது. இங்கு குறிப்பிடப்படும் நிலம் என்பது மோக்ஷ லோகத்தைக் குறிக்கும். வேதமும் சங்க இலக்கியமும் திருமாலின் உலகம்தான் மோக்ஷலோகம் என்று கூறுகின்றன. ஆகவே இந்தக் குறட்பா, திருமாலைப் பற்றிய விஷயம்தான்.

    “पद्मकोशप्रतीकाशं” (பத்மகோஶப்ரதீகாஶம்) என்ற வேதவாக்யம் ஹ்ருதயம் தாமரை மலர்போல் இருப்பதாகக் கூறுகிறது. அங்கு வசிக்கும் பகவானைக் குறிப்பிடவே மலர்மிசை ஏகினான் என்றார். இவ்விடத்தில் “மலர்மிசை” என்பதற்கு “நினைவாரது உள்ளக் கமலத்திங்கண்” என்று பரிமேலழகர் உரையிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த “மலர்மிசை ஏகினான்” என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘மலர்’ என்பதற்கு விரிந்த அல்லது பரந்த என்ற பொருளும் உண்டு. ‘மிசை’ என்பதற்கு வானம் என்ற பொருளும் உண்டு. “மலர்மிசை” என்பதை வினைத்தொகையாகக் கொண்டு “பரந்து விரிந்த வானத்தின்கண் ஏகிய த்ரிவிக்ரமன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே எல்லா வகையிலும் “மலர்மிசை ஏகினான்” என்பது திருமாலையே குறிக்கும்.

    வேண்டுதல் வேண்டாமை இலான்

    அடுத்த குறட்பாவில் பகவானை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்றால் விருப்பு வெறுப்பு அற்றவன் என்று பொருள். உலகமே அவனுடையது என்று சொல்லும் போது அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏற்பட வழியில்லை. அவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று யாரும் இல்லை. அதனால் தான் சங்க இலக்கியம், “நினக்கு மாற்றோரும் இலர்: கேளிரும் இலர்”என்று திருமாலைக் குறித்துப் பேசுகிறது.

    இதையே பகவானும் “समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः” (ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய:) என்கிறான் கீதையில். “எல்லா உயிர்களிடத்தும் நான் ஸமமாகத்தான் இருக்கிறேன். எனக்கு பகைவனோ அன்பனோ இல்லை” என்பது இந்த கீதை வரியின் பொருள். மேலும் பகவான் கீதையில் நான் அடையவேண்டிய பொருள் என்று எதுவும் இல்லை என்று கூறுகிறான். அதனால் அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏற்பட வேண்டிய அவஶ்யம் இல்லை. அந்த வகையில் திருவள்ளுவர் கூறும் வேண்டுதல் வேண்டாமை இலான் திருமாலே என்பது தெளிவாகின்றது.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

    அடுத்த குறட்பாவில் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்று பகவானைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது சராசரி ஜீவராசிகளுக்கு உள்ளது போல் பகவானுக்குக் கர்மவினையால் ஆன பிறவி கிடையாது என்பதே திருவள்ளுவரின் கருத்து. பகவானுடைய அவதாரங்கள் எல்லாம் கர்மவினையாலான பிறப்புகள் இல்லை என்பதை “முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை பிறப்பித் தோரிலையே” என்று சங்க இலக்கியங்களும் கூறுகின்றன.

    பகவானும் கீதையில் “न मां कर्माणि लिम्पन्ति” (நமாம் கர்மாணி லிம்பந்தி) என்று கூறுகிறான். ஆதாவது “என்னைக் கர்மங்கள் ஒட்டாது” என்று சொல்கிறான் பகவான். அதனால் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது திருமாலையே என்பது தெளிவாகிறது. இக்குறட்பாவில் இடம்பெறும் பொருள் சேர் புகழ் என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது.

    தகுதியுள்ளவரைப் புகழும் புகழுரைகளே உண்மையான புகழுரையாக இருக்கும். தகுதியில்லாதவரைப் புகழ்ந்தால் உண்மையில் அது முகஸ்துதியாகவோ பக்ஷபாதமாகவோதான் இருக்கும். பரம்பொருளும் ஸர்வேஶ்வரனுமான திருமாலே எல்லாப் புகழுரைகளுக்கும் தகுதி உடையவன். பொருள்சேர் புகழ் என்பது அவனைக் குறித்த புகழ் உரைகளே. மற்றவர்களைக் குறித்த புகழுரைகள் பொருள்சேர் புகழ் ஆகாது. அதனால்தான் சங்க இலக்கியங்கள் புகழைப் பற்றிய பேச்சு வருமிடங்களிலெல்லாம் திருமாலைப் பற்றியே குறிப்பிடுகின்றன.

    “தாவா விழுப்புகழ் மாயோன்”என்று தொல்காப்பியத்திலும், “தேயா விழுப்புகழ் தெய்வம்” என்று கலித்தொகையிலும் “அருந்திறல் கடவுள்” என்று பெரும்பாணாற்றுப்படையிலும் “புள் அணி நீள்கொடிச் செல்வன்” என்று திருமுருகாற்றுப்படையிலும் “எண்ணிறந்த புகழவை, நின் புகழ் உருவின கை, ஏவலின் முதுமொழி கூறும் நற்புகழவை, நின்னொக்கும் புகழ் நிழலவை, நல் புகழவை” என்று பரிபாடலிலும் “விண் உயர் புட்கொடி விறல் வெய்யோன், புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன” என்று புறநானூற்றிலும் கூறப்படுகின்றன. அதனால் சங்கத் தமிழர்கள் உயர்ந்த புகழுக்கும் உண்மையான புகழுக்கும் உரிய தெய்வமாக திருமாலையே கொண்டாடினர் என்பது தெளிவாகிறது.  அந்த வகையில் பொருள் சேர் புகழ் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது திருமாலின் புகழ்தான்.

    தொடரும்…

    Share
  • திருவள்ளுவர் யார்? – 5

    திருவள்ளுவர் யார்? – 5

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவருடைய பெயரைக் காரணம் காட்டி அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்து மிக மிகத் தவறானது.

    திருவள்ளுவருக்குத் திருவள்ளுவர் என்ற பெயரைத் தவிர நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்ற பெயர்களும் உண்டு. “திருவள்ளுவர்” என்ற அவருடைய பிரபலமான பெயரே “திருவல்லவன்” என்ற பெயரின் மருவிய வடிவம்தான். பிங்கல நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் கணவனைக் குறிக்கும் பெயர்களின் வரிசையில் “வல்லவன்” என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. “திருவல்லவன்” என்றால் திருமகளின் கணவனான திருமால் என்று பொருள். ஆகவே “திருவல்லவன்” என்பது திருமாலின் பெயர்.

    ‘குறள்’ என்றால் குட்டையான என்று பொருள். திருமால் குறள் வடிவெடுத்து வந்து தன் திருவடிகளால் உலகங்களை அளந்தார். இவரும் குட்டையான குறள் வெண்பாக்களால் அறிவுலகை அளந்தார். அதனால் இவருக்குத் “திருவல்லவன்” என்ற பெயர் பொருத்தமானதுதான். இந்தத் “திருவல்லவன்” என்ற பெயர்தான் நாளைடைவில் “திருவள்ளுவன்” என்று மருவிவிட்டது. ஆகவே இவரது பெயரை வைத்து இவரைத் தாழ்ந்த குலத்தவர் என்று கூறுவது பரம அபத்தமாகும். நீதிநூல் என்பது மனித சமூஹத்திற்கான சட்டம். அதை அரசனுக்கு அறிவுரை கூறும் ஸ்தானத்தில் இருப்போரால் தான் எழுத முடியும்.

    இதுதவிர, அவரது படைப்பான திருக்குறளே அவர் யார் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. எந்த ஒரு வர்ணத்தவனும் தன் வர்ணத்தைப் பற்றிய குறை நிறைகளைப் பற்றித்தான் சிந்திப்பானேயொழிய மற்ற வர்ணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான். ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறவந்த இடத்தில் மற்ற வர்ணத்தவரைப் பற்றிப் பேசாமல் அந்தணரின் ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். அதுவும் அந்தணனின் பிறப்பு, உயர்ந்த பிறப்பு என்கிறார். கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனால் இப்படிக் கூற முடியுமா?

    மேலும் எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தைக் கூறுகிறார். அந்த இலக்கணப்படி வாழ்ந்த அந்தணராக அவர் இருந்ததால் தான் கொல்லாமை பற்றி அவரால் எழுத முடிந்தது. மாட்டுக்கறி தின்னும் ஒரு மனிதனால் கொல்லாமை பற்றியும் புலால் மறுத்தல் பற்றியும் மதுப் பழக்கத்தைக் கண்டித்தும் எழுத முடியுமா? அதனால் திருவள்ளுவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்தான். அதற்கு அவர் எழுதிய திருக்குறளே சாட்சி.

    திருவள்ளுவர் தனது நூலில் வேதத்தையும் வைதிக வேள்விகளையும் வைதிக அந்தணர்களையும் வர்ண தர்மங்களையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார் என்பதை இதுவரை விரிவாகப் பார்த்தோம். இனி அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிப் பார்ப்போம்.

    திருவள்ளுவரின் சமயம்

    திருவள்ளுவர் ஸநாதன வைதிக சமயத்தில் சொல்லப்படும் மனித வாழ்வின் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு இலக்குகளைப் பற்றியும் கல்வி, இல்வாழ்க்கை, விலகல், துறவு என்ற நான்கு ஆஶ்ரம தர்மங்களைப் பற்றியும் தனக்கே உரிய முறையில் தனது நூலில் எழுதியிருக்கிறார். இதுதவிர தெய்வங்கள் என்று எடுத்துக்கொண்டால் திருமால், இந்திரன், லக்ஷ்மி, பிரஹ்மா, பித்ருக்கள், யமன் என்ற வைதிக தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தான் திருக்குறளில் காணப்படுகின்றன.

    திருமாலை இரண்டு (610, 1103) குறட்பாக்களிலும் திருமகளை ஐந்து (84, 179, 519, 617, 920) குறட்பாக்களிலும் நேரடியாகவே குறிப்பிடுகிறார். யமனை ஐந்து (269, 326, 765, 1083,1085) குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். பிரஹ்மாவைப் பற்றி 1062ஆம் குறளிலும், இந்திரனைபற்றி 25ஆம் குறளிலும் பித்ருக்களைப் பற்றி 43ஆம் குறளிலும் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது திருவள்ளுவர் ஒரு ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்தவர் என்பது தான் புலப்படுகிறது.

    ஸநாதன வைதிக சமயம் தான் திருவள்ளுவர் காலத்திலும் அவருக்கு முற்பட்ட சங்க காலத்திலும் தமிழ்நாட்டில் நிலவி வந்த ஒரே சமயம். ஸநாதன வைதிக சமயத்தில் பரம்பொருளாகச் சொல்லப்படும் கடவுள் திருமால்தான். வேதத்தை அடிப்படையாகக்கொண்ட வேள்வி மூலமான வழிபாடே திருமாலைக் குறித்த வழிபாடுதான்.

    “கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்”, “வேதத்து மறை நீ”, “விறல் மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் நீ”, “கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி, திகழ் ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும், நின் உருபுடன் உண்டி பிறர் உடம்படுவரா, நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு” , “ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி, ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாயவண்ணனை மனன் உறப்பெற்று” முதலிய சங்க இலக்கிய வரிகள் வேதத்தில் சொல்லப்படும் பரம்பொருளும் வேள்வியால் ஆராதிக்கப்படும் பரமனும் திருமாலே என்பதைத் தெளிவாக முழங்குகின்றன.

    சங்கத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப் பகுதிக்குத் தக்கவாறு நான்கு தெய்வங்களையும் மற்றும் சில சிறு தெய்வங்களையும் வழிபட்டிருந்தாலும் அவர்கள் பரம்பொருளாகக் கருதிய ஒரே தெய்வம் திருமால்தான். வேறு தெய்வங்களை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இவ்விஷயம் சங்க இலக்கியங்களில் தெளிவாக உள்ளது. ”அருள் குடையாக அறம் கோலாக இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தமிழகம் மட்டுமல்லாது அகில உலகிற்கும் திருமாலே பரம்பொருள் என்று கூறியிருக்கிறார்கள் சங்கத் தமிழர்கள்.

    வேள்வி வழிபாட்டின் நீட்சியாக ஆலய வழிபாடு தோன்றிய காலத்திலும் நம் நாட்டில் முதலில் தோன்றிய ஆலயங்கள் திருமாலுக்குரிய ஆலயங்களே. காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களில் திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா, திருவனந்தபுரம் முதலிய திருமாலின் திவ்ய தேசங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே ஓழியத் தற்காலத்தில் பிரபலமாகவுள்ள மற்ற தெய்வக் கோயில்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக்கூடக் காணப்படவில்லை.

    மேலும் பகவானுடைய அவதாரப் பெருமைகளும் பரத்வமும் ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளும் பாஞ்சராத்ர ஆகமக் குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் தொல்பழம் வைதிக சமயமான ஸ்ரீவைஷ்ணவ மதம் தான் பழம் தமிழரின் மதம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. பழந்தமிழரான திருவள்ளுவரின் மதமும் அந்த மதம் தான் என்பதை அவரது நூலான திருக்குறளே தெளிவாகக் காட்டுகிறது. எப்படியென்று பார்ப்போம்.

    – தொடரும்

    Share
  • திருவள்ளுவர் யார்? – 4

    திருவள்ளுவர் யார்? – 4

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் கூறும் ஒழுக்கம் என்பது, அவரவரின் வர்ணத்திற்குரிய ஒழுக்கம்தான்.

    “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

    இந்தக் குறட்பா, ஓர் அந்தணனுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓதல் முதலிய ஆறு தொழில்களே அந்தணருக்கு உரியவை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அந்தணர்களில் சிலர் தங்களது அறுதொழிலை விட்டுவிட்டு, அத்தொழில்களுக்கு அடிப்படையான வேதத்தையும் மறந்துவிட்டு, வேறு தொழில்களை நாடிச் சென்றிருக்கின்றனர். வேள்வி முதலிய வைதிக கர்மங்களை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்களை ‘வேளாப் பார்ப்பான்’ என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அந்த வகை அந்தணர்களை நோக்கித்தான் இந்தக் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் அறிவுரை கூறுகிறார்.

    வேதத்தை அந்தணர் மறக்கலாகாது. அந்தணர்களின் அறு தொழில்களுக்கு அடிப்படையே வேதம்தான். வேதம் மறந்து போய்விட்டால் அவர்கள் தங்களது தொழிலைச் செய்ய முடியாது. வேதம் நினைவில் இருக்க வேண்டுமானால் தங்களது அறுதொழில்களையும் அவர்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். தங்கள் தொழிலைச் செய்ய முடியாத நிலையில் ஜீவனத்துக்காக அவர்கள் வேறு தொழிலை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படி வேறு தொழிலை நாடிச் செல்லும் அந்தணர்களை நோக்கித்தான் திருவள்ளுவர், இக்குறட்பாவின் மூலம் அறிவுரை கூறுகிறார். அதாவது, “நீங்கள் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடி கற்றுக்கொள்ளலாம். ஆனால் வேதம் மறந்து போய்விட்டது என்பதற்காக நீங்கள் வேறு தொழிலை நாடிச் சென்றால் அத்தொழிலுக்கு உரிய பழக்க வழக்கங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுவிடும். உங்களது ஒழுக்கம் போய்விடும். அதனால் உங்கள் உயர்வு கெட்டுப் போய்விடும். பிறப்பால் அமைந்த உங்களது சிறப்பை இழந்துவிடுவீர்கள். ஆகவே வேறு தொழிலை நாடிச் செல்லாதீர்கள்”என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

    எல்லாக் காலங்களிலுமே அறுதொழில் செய்யும் அந்தணரை சமூஹம் உயர்ந்த இடத்தில் வைத்துத்தான் மதித்திருக்கிறது. அறுதொழில் செய்யும் அந்தணரை அரசனே வணங்கியிருக்கிறான் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. ஆனால் ஜீவனத்துக்காகத் தன் தொழிலை விட்டுவிட்டுத் தாழ்ந்த தொழிலைச் செய்யும் அந்தணருக்கு அவரது பிறவிக்குரிய மரியாதை கிடைப்பதில்லை. வேள்வி செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்கும் மரியாதை, சங்கறுத்து வளையல் வியாபாரம் செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்காது. வேறு தொழிலை நாடிச் சென்றாலும் தன் பிறவிக்குத் தாழ்வு ஏற்படுத்தும் தொழிலை நாடி ஓர் அந்தணன் செல்லக் கூடாது. தான் பிறருக்கு அறிவுரை கூறும் அளவிற்குத் தலைமைத் தன்மை உள்ள தொழிலைத்தான் அந்தணன் எப்போதும் செய்யவேண்டும். தன் தகுதிக்குத் தாழ்ந்த தொழிலைச் செய்தால் அத்தொழிலுக்குரிய தாழ்ந்த ஒழுக்கங்கள் அவனைப் பற்றிக்கொண்டு அவனது அந்தணத் தன்மையைப் போக்கிவிடும். இந்தக் குறட்பாமூலம் வர்ண தர்மத்தை சிறப்பாக ஆதரிக்கிறார் திருவள்ளுவர்.

    அந்தணர்கள் வேதத்தை ஏன் மறக்கிறார்கள் என்றால் அதற்கும் திருவள்ளுவரே காரணம் கூறுகிறார். ‘ஆபயன் குன்றும்’ என்ற குறட்பாவில் அரசன் நல்லாட்சி புரியாத நாட்டில், அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது ஓர் அரசன், அந்தணர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் முதலிய சௌகர்யங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மதித்து ஆதரித்துப் பாதுகாக்க வேண்டும். அப்படி அரசனால் கௌரவிக்கப்படும் அந்தணர்கள், தங்களுக்குரிய அறுதொழில்களைச் செய்துகொண்டு ஜீவனம் செய்வார்கள். அரசன் அவர்களை இம்முறையில் ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு ஜீவனத்துக்காக வேறு தொழிலை நாடவேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும். வேறு தொழிலில் வேதத்தின் தேவை இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். அதனால்தான், ‘காவலன் காவான் எனின் அறுதொழிலோர் நூல் மறப்பர்’ என்கிறார். எனவே தான் அந்தணர்களைப் பாதுகாப்பது அரசனுடைய கடமை என்கிறார்.

    அந்தணரின் அறுதொழிலின் சிறப்பையும் அவர்களது பண்பட்ட வாழ்க்கை முறையின் சிறப்பையும் எடுத்துக் காட்டத்தான் மற்றவர்களின் தொழில்களைப் பற்றி எல்லாம் பேசாமல், நல்லாட்சியில்லாத நாட்டில் அந்தணர்கள் தங்கள் தொழிலை விட்டுவிடுவார்கள் என்று கூறினார். அரசன் எல்லோரையும் பாதுகாக்க வேண்டியவன் என்றாலும் குறிப்பாக அந்தணரை அவன் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னது அந்தணரின் பெருமை கருதியே.

    திருவள்ளுவர் தன் வாழ்நாளில் ஒரு கொடுங்கோல் அரசனையும் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது என்பதை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கொடுங்கோலனின் ஆட்சிக் காலத்தில் இருந்த அந்தணர்கள், தங்களை அரசன் முறைப்படி ஆதரிக்காததால் தங்கள் தொழிலை விட்டுவிட்டனர். அதனால் அவர்களுக்கு வேதம் மறந்துபோய்விட்டது. அந்த நிலையில் அவர்கள் வேறுதொழிலை நாடிச் செல்ல நினைத்த போதுதான் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாக ‘மறப்பினும் ஓத்துக்கொளலாகும்’ என்ற குறட்பாவை எழுதினார் திருவள்ளுவர்.

    “அந்தணர்களே! அரசன் உங்களை ஆதரிக்காததால் உங்கள் தொழிலைக் கைவிட்ட நீங்கள் அத்தொழிலுக்கு ஆதாரமான வேதத்தையும் மறந்து விட்டீர்கள். நீங்கள் கற்ற வேதத்தை மறந்துவிட்டாலும் திரும்பக் கற்றுக் கொள்ளலாம். மறந்து போய்விட்டதே என்று கவலைகொள்ள வேண்டாம். அந்த வேதம் உங்களுக்கு என்றும் பாதுகாப்புத் தரும். ஆனால் ஜீவனம் போய்விட்டதே என்பதற்காக வேறு தொழிலுக்குப் போய்விடாதீர்கள். வேறு தொழிலுக்கு நீங்கள் சென்றால் அத்தொழிலுக்குரிய பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வர்ண ஒழுக்கம் குறைந்துவிடும். அதனால் உங்களது உயர்வு கெட்டுப் போய்விடும்” என்பதுதான் திருவள்ளுவர் அந்தணர்களுக்கு கூறும் அறிவுரை.

    ஜீவனத்துக்காக அந்தணர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தகுதிக்குப் பொருந்தாத தொழிலைச் செய்யக்கூடாது என்பதும், தங்களது பெருமைக்குக் குறைவு ஏற்படுத்தாத தொழிலைத்தான் எப்போதும் அவர்கள் செய்யவேண்டும் என்பதும் இதனால் தெளிவாகிறது. ”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”என்ற இடத்தில் தொழில்களில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் காட்டிவிட்டார் திருவள்ளுவர். அதனால் திருவள்ளுவர், வர்ண தர்மத்தை முழுக்க முழுக்க ஆதரித்த ஒரு வைதிகர் என்பது தெளிவாகிறது.

    உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் உயர்ந்த குணம்தான் இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இவ்விஷயம் மாறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது நடைமுறையில் சில இடங்களில் உயர்ந்த குலத்தில் பிறந்தவனிடம் இழிவான குணங்களும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவனிடம் உயர்ந்த குணங்களும் காணப்படுகின்றன. இவ்விஷயம் குறித்தும் விளக்குகிறார் திருவள்ளுவர்.

    “மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு”

    “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழ்அல் லவர்”

    என்ற குறட்பாக்கள் மூலம் கல்வி ஞானம், ஒழுக்கம், நற்பண்பு இவையெல்லாம் மேற்குலத்தில் பிறந்தவனிடம் இல்லையென்றால் அவன் மேற்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் மேற்படி விஷயங்கள் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் காணப்பட்டால், அவன் கீழ்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். மேற்குலத்தில் பிறந்தவனிடம் கல்வி, ஞானம் முதலிய நற்பண்புகள் இல்லாமற் போவதற்கும் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் அந்த நற்பண்புகள் காணப்படுவதற்கும் என்ன காரணம் என்றால் அதற்கும் அவரே பதிலளிக்கிறார். குடிமை என்ற அதிகாரத்தில்,

    “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்”

    என்று ஒரு குறட்பா இடம்பெறுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் நற்பண்பு காணப்படாவிட்டால் அவனது பிறப்பு சந்தேகத்துக்குரியது என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.”

    என்பது அதற்கு அடுத்த குறட்பா. நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் முளைத்து வரும் முளையை வைத்து நாம் அறிந்துகொள்வது போல ஒருவன் உயர்குலத்தில் பிறந்தவன் என்பதை அவனது வாய்ச்சொல் காட்டிவிடும் என்பது இக்குறட்பாவின் கருத்து. அதாவது நல்ல நிலத்தில் நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் உருவாகும். கெட்ட நிலத்தில் நல்ல விதையையோ நல்ல நிலத்தில் கெட்ட விதையையோ விதைத்தால் விளையும் பயிர் நல்ல பயிராக இருக்காது. இதுதான் திருவள்ளுவர் சொல்ல வரும் விஷயம்.

    மஹாபாரதம் வனபர்வத்தில் தர்மராஜரான யுதிஷ்டிரருக்கும் ஒரு மலைப் பாம்புக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் சொல்லப்படுகிறது. அவ்வுரையாடலில் தர்மராஜர் “அந்தணனாகப் பிறந்த ஒருவனிடம் நான்காம் வருணத்தவனுக்குரிய குணங்களும் பழக்கவழக்கங்களும் காணப்பட்டால் அவன் அந்தணனாகமாட்டான். நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒருவனிடம் அந்தணனுக்கு உரிய குணங்களும் நடவடிக்கைகளும் காணப்பட்டால் அவன் நான்காம் வர்ணத்தவன் ஆகமாட்டான்” என்று கூறுகிறார். அதைக் கேட்ட அந்த மலைப்பாம்பு “ஒழுக்கத்தினால் தான் ஒருவன் அந்தணன் என்று சொல்லப்படுவான் என்றால் அந்தணனுக்குரிய ஒழுக்கம் இல்லாதபோது ஜாதி பயனற்றதாகிவிடுமே” என்று கேட்டது. அதற்கு தர்மராஜர், “ஆம், இந்த மானிட ஜாதியில் தற்காலத்தில் வர்ணபேதமின்றி ஆண்களும் பெண்களும் உறவு வைத்துக்கொள்வதால் அதற்குத் தக்கபடி அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன. ஆகவே, வர்ணக் கலப்பு ஏற்படுவதால் எல்லாவிதத்திலும் ஜாதி ஆய்வு செய்யத்தகாது என்பது என் கருத்து. இவ்விஷயத்தில் ஆசாரத்தையே (ஒழுக்கம்) பிரதானமாகக் கொள்ளவேண்டும் என்று தத்துவமறிந்தோர் கூறுகின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

    கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் இல்லாத ஒருவன் உயர்ந்த குலத்தில் பிறப்பதற்கும் கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் உள்ள ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறப்பதற்கும் குலக் கலப்பே காரணமென்கிறார் தர்மராஜர். இதைத்தான் “நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்” என்ற குறட்பா மூலம் திருவள்ளுவரும் சொல்கிறார். உயர்ந்த குலத்தவனான ஓர் அந்தணனுக்கு மூடனும் துர்புத்தி உள்ளவனுமான ஒரு பிள்ளை பிறப்பதற்கும், தாழ்ந்த குலத்தவனுக்கு நற்பண்புகளும் கல்வி ஞானமும் நிறைந்த ஒரு பிள்ளை பிறப்பதற்கும் நிலம், விதை இவற்றின் தன்மைதான் காரணம் என்று திருவள்ளுவரும் தர்மராஜரும் சொல்கிறார்கள். இவ்விடத்தில்,

    वाङ्मैथुनमथो जन्म मरणम् च समम् नृणाम् (வாங்மைதுநமதோ ஜந்ம மரணம் ச ஸமம் ந்ருணாம்) என்று தர்மராஜர் சொன்னதையே திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறார். ஆகவே சில அம்சங்களில் பிறப்பு எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும், ஒருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனுடய பிறப்பே காரணமாகிறது என்று கூறுவதால் திருவள்ளுவர், வர்ணக் கலப்பை ஆதரிக்காத ஸநாதன வைதிகர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    -தொடரும்

    Share
  • திருவள்ளுவர் யார்? – 3

    திருவள்ளுவர் யார்? – 3

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் வர்ணாஶ்ரம தர்மங்களுக்கு எதிரானவர் என்றும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அவர் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை முன் வைப்பவர்கள், தங்கள் கருத்துக்கு ஆதாரமாக

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.”

    என்ற குறட்பாவை மேற்கோள் காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டும் இந்தக் குறட்பாவில் பிறப்பால் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு உண்டு என்றுதான் திருவள்ளுவர் கூறுகிறார். எப்படியென்று பார்ப்போம்.

    இக்குறட்பாவின் உட்பொருளைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஓர் இலக்கியமும், அது தோன்றிய காலத்தில் உள்ள ஸமுதாய நிலையைப் பிரதிபலிப்பதாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில் ஒரு நீதிநூல் உருவாகிறது என்றால் அந்நூல் உருவான காலத்தில் இருந்த ஸமுதாயத்தில், அந்நூலில் சொல்லப்பட்ட நீதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை அல்லது அறவே பின்பற்றப்படவில்லை என்றுதான் பொருள். அக்கால ஸமுதாய மக்களுக்கு அறிவுரை சொல்லத்தான் அந்த நீதிநூல் ஏற்பட்டது என்று கொள்ளவேண்டும். அக்கால ஸமுதாயத்தில் எழும் பல கேள்விகளுக்குப் பதிலாகவும் அந்நூலில் சில விஷயங்கள் அமைந்திருக்கும்.

    திருவள்ளுவர், திருக்குறளை ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு ஒரே நாளில் எழுதி முடிக்கவில்லை என்பது திருக்குறளின் அமைப்பைப் பார்த்தாலே புரியும். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஸமுதாயத்தில் தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அநுபவங்கள், ஸமுதாயத்தில் தான் கண்ட காட்சிகள், தன்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் திருக்குறளை அவர் எழுதியிருக்கிறார். அதுவும் அந்தந்த அனுபவங்கள், காட்சிகள், கேள்விகள் ஏற்படுகின்ற ஸமயத்தில்தான் அவற்றுக்குத் தகுந்த குறட்பாக்களை எழுதினாரேயொழிய ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே நாளில் 1330 குறட்பாக்களையும் அவர் எழுதிவிடவில்லை. இப்படித் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் கற்ற கல்வி ஞானத்தின் உதவியோடு பல்வேறு சமயங்களில் தான் எழுதிய குறட்பாக்களை ஒரு நூலாக அமைத்திருக்கிறார். ஆகவே திருவள்ளுவர் தான் வாழ்ந்த ஸமுதாய நிலையைத் தான் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் என்பதை அவரது நூலிலிருந்தே அறிய முடிகிறது.

    திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஸமுதாயத்தில் வர்ணாஶ்ரம தர்மம் பின்பற்றப்பட்டது. ஸமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டுத் தங்களை விட உயர்ந்தவர்கள்மீது பொறாமைப்படுவதும் தங்களது தாழ்வுநிலையை நினைத்து ஆதங்கப்படுவதும் எல்லாக் காலத்திலும் இயற்கைதான். அவ்வுணர்வுகளால் உந்தப்பட்டவர்களில் சிலர், ஸமூகத்தில் மனிதர்களுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கேள்விகள் எழுப்புவதும் இயற்கைதான். “எல்லோரும் பெண் வயிற்றில் பத்து மாதம் இருந்து தான் பிறக்கிறார்கள். எல்லோரின் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது; எல்லோரின் பிறவிக்கும் ஆண்-பெண் சேர்க்கைதான் காரணம்; எல்லோரும் ஒருநாள் மரணமடையத் தான் போகிறார்கள். அப்படியிருக்கும் போது மனிதர்களுக்குள் ஏன் ஏற்றத்தாழ்வு?” என்று இக்காலத்தவர் கேட்பது போல் அக்காலத்திலும் திருவள்ளுவரிடம் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறான் ஒருவன். அவனுக்குப் பதில் சொல்வதாக அமைந்ததுதான் ‘பிறப்பொக்கும்’ என்ற குறள்.

    அந்தக் கேள்வியை எழுப்பியவனுக்குத் திருவள்ளுவர் என்ன பதில் சொல்கிறார் என்றால், “அப்பா! நீ சொல்வதுபோல் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுமே ஒரே மாதிரியாகத்தான் பிறக்கின்றன. ஏதோ ஒருவகையில் ஆண்-பெண் சேர்க்கையால் தான் பிறக்கின்றன. அதனால் பிறக்கும் தன்மை எல்லா உயிர்களுக்கும் ஸமமானது தான். ஆனால் செய்கின்ற தொழிலை வைத்துப் பார்க்கின்றபோது சிறப்பு என்பது ஸமமானதாக இருக்காது. செய்யும் தொழிலின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்” என்று கூறுகிறார். இதுதான் அந்த ‘பிறப்பொக்கும்’ என்ற குறட்பாவின் கருத்து.

    “தொழிலில் சிறப்பான தொழில், சிறப்பில்லாத தொழில் என்று வேறுபடுத்திப் பார்த்து அதன் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வோடு பார்ப்பது சரியா?” என்ற கேள்வி எழலாம். தொழிலின் அடிப்படையிலான அந்த ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாதது என்று தான் இக்குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் கூறுகிறார். இக்காலத்துக்குத் தக்கபடி இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். கலெக்டரும் கலெக்டரின் பியூனும் பத்து மாதத்தில் பிறந்தவர்கள்தான். இருவருடைய உடம்பிலும் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது. இருவரும் ஆண்-பெண் சேர்க்கையால் பிறந்தவர்கள்தான். இருவரும் ஒருநாள் மரணமடையத்தான் போகிறார்கள். ஆனால் கலெக்டருடைய இருக்கையில் பியூன் அமரமுடியுமா? அமர்ந்தால் என்ன நடக்கும்? கலெக்டரோடு சரிசமமாக அமர்ந்து அந்த பியூன் பேச முடியுமா? அந்த பியூனும் மனிதன்தானே!

    இந்த ஏற்றத்தாழ்வு என்பது ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்குத் தக்க வடிவத்தில் இந்த ஸமுதாயத்தில் இருக்கின்ற இயல்பான நிலை தான். இன்று தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு கடைநிலை ஊழியனின் நிலை, மனு சொன்ன ஶூத்ரனின் நிலையை விட மோசமானது என்பதை அந்த ஊழியனிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். இதெல்லாம் சரியா, தவறா என்பதெல்லாம் வேறு விஷயம். இதுதான் ஸமூஹத்தின் யதார்த்த நிலை. ஸமூஹத்தின் யதார்த்த நிலையைத்தான் நீதி நூல்கள் பிரதிபலிக்கின்றன. அதனால் ஸமூகத்தில் மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என்ற யதார்த்த நிலையைத் திருவள்ளுவர் அங்கீகரித்திருக்கிறார் என்பதுதான் இந்தக்குறட்பா நமக்குக் கூறும் செய்தி.

    மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையிலானது தான் என்பதற்கும் “பிறப்பொக்கும்” என்ற குறட்பாவே சான்றாக உள்ளது. எப்படியெனில் ஒருவன் செய்யும் தொழில் என்பது அவனது திறமை, அறிவாற்றல், குணம் இவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் திறமை, அறிவாற்றல், குணம் இவை எல்லாம் ஒருவனுக்குப் பிறப்பால் ஏற்படும் பண்புகள். பெற்றோரிடமுள்ள பண்புகள்தான் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இருக்கும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. பெற்றோர் எந்தத் தொழிலில் திறமை உள்ளவர்களோ அந்தத் தொழிலில் தான் அவர்கள் பெற்ற பிள்ளைக்கும் திறமை இருக்கும். தொழில்களில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்குத் தக்கபடியே அந்தத் தொழில்களைச் செய்யும் மனிதர்களுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

    பிறவிக் குணத்தின் அடிப்படையில் ஏற்படும் தொழில் ரீதியிலான பிரிவுகளே அக்காலத்தில் வர்ணம் என்று அழைக்கப்பட்டன. வர்ணம், ஜாதி என்ற சொற்களைத் திருவள்ளுவர் தனது நூலில் பயன்படுத்தவில்லை என்றாலும் அச்சொற்களின் பொருளைக் கொண்ட குலம், குடிமை என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். குலம், குடிமை என்ற சொற்களுக்குத் தற்காலத்தில் உள்ளோர் சிலர் வேறுவிதமாகப் பொருள் கொள்கின்றனர். அவர்கள் எவ்விதமாகப் பொருள் கொண்டாலும் அவர்கள் சொல்லும் பொருளின் அடிப்படையில் பார்த்தாலும் குலம், குடிமை என்பவை ஒருவனது பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் அடையாளங்களே.

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.”-

    என்ற குறளில் தன் அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவன் எத்தனை நூல்களைப் படித்தாலும் அவனிடம் அவனது இயற்கையான அறிவுதான் மிகுந்து இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். இங்குத் திருவள்ளுவர் கூறும் ‘உண்மை அறிவு’ என்பதற்குப் பிறவிக் குணம் என்பதுதான் பொருள். அந்த வகையில் ஒரு தொழிலைச் செய்யத் தகுந்த ஆற்றலும் ஞானமும் பிறவியில்தான் அமைகிறது என்பதால் தொழிலின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையில் ஏற்படுவதுதான் என்பதே ‘பிறப்பொக்கும்’ என்ற குறட்பாவின் மையக் கருத்து. இதைப் புரிந்துகொள்ளாமல் இக்குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் வர்ண தர்மத்தை எதிர்க்கிறார் என்று கூறுவது அறியாமையாகும்.

    ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் மற்றவர்களையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லாமல்,

    “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

    என்ற குறளில் அந்தணன் தன் ஒழுக்கத்தை விடலாகாது என்றும் அந்தணனது உயர்வு, அவனது பிறப்பால்தான் என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் திருவள்ளுவர். மனிதர்களுக்கு இடையிலான உயர்வும் தாழ்வும் பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை என்பதே திருவள்ளுவரின் கொள்கை என்றால் இக்குறளில் ‘பிறப்பு’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தாமல் ‘சிறப்பு’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதாவது குறளின் இரண்டாவது வரி ‘சிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்றுதான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் திருவள்ளுவர் அப்படி எழுதாமல் ‘பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்று ஏன் எழுதியிருக்கிறார் என்றால் அந்தணன் பிறப்பால் உயர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்தத்தான்.

    அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணப் பிரிவுகளில் மற்ற மூவரைப் பற்றிக் குறிப்பிடாமல் அந்தணரின் பிறப்பை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், மற்ற மூவரும் அந்தணரைப் பின்பற்றியே வாழ்கின்றனர் என்பதாலேதான். மேலும் அந்த மூன்று வர்ணத்தார்கள் தங்கள் ஒழுக்கங்களிலிருந்து தவறினால், அந்தணர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களைத் திருத்திவிடலாம். ஆனால் அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் எப்படி ஒரு கட்டடம் நிலைநிற்காதோ அதைப்போல ஒரு நல்ல ஸமுதாயத்துக்கு அஸ்திவாரமான அந்தணரின் வாழ்வியல் ஒழுக்கம் குன்றினால், அந்த ஸமுதாயம் நிலைகுலைந்துவிடும். அதனால்தான் ஒழுக்கம் பற்றிக் கூறுகின்ற இடத்தில் மற்றவர்களைக் குறிப்பிடாமல் அந்தணரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டுப்பேசுகிறார். இதை மனதிற்கொண்டுதான் பரிமேலழகர் இக்குறட்பாவிற்கு உரையிடுமிடத்தில் “சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்களுக்கும் கொள்ளப்படும்”என்று எழுதினார்.

    -தொடரும்

    Share
  • திருவள்ளுவர் யார்? – 2

    திருவள்ளுவர் யார்? – 2

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து.

    “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனின்”

    “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.”

    “அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால், ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் தங்களது வேதத்தை மறந்து விடுவார்கள். பசுமாட்டில் பால் குறைந்துவிடும். அந்தணர்களின் வேதமும் அவர்களின் வேத தர்மமும் அரசனின் செங்கோலைப் பற்றியே நிற்கின்றன” என்பது தான் இந்த இரண்டு குறட்பாக்களின் பொருள். வேதம் ஓதுதல், பிறர்க்கு அந்த வேதத்தைக் கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் என்பவையே அந்தணர்களுக்குரிய ஆறு தொழில்கள். இதுவே வடமொழியில் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பரிக்ரஹம் என்று சொல்லப்படுகிறது.

    இந்த ஆறு தொழிலுக்கும் வேதமே அடிப்படை. அரசன் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்றும் அதனால் பசுமாடுகளில் பால் குறைந்துவிடும் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். பசுமாட்டிற்கும் அந்தணர்க்கும் ஒரு ஸம்பந்தம் உள்ளது. அதாவது, அந்தணர்கள் செய்யும் வேள்வியில் பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் இவையே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே சுழற்சி முறையிலான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. வேள்விமுறைகள் நினைவில் இருக்க வேண்டுமானால், வேதம் நினைவிலிருக்க வேண்டும். வேதம் மறந்துபோய்விட்டால் வேள்வி செய்ய முடியாது. வேள்வி இல்லையென்றால் மழை பொழியாது. மழை இல்லையென்றால் புல் தழைக்காது. புல் இல்லை என்றால் பசுமாட்டிற்கு உணவு இல்லாமல் போய்விடும். உணவில்லாத பசு, பால் கொடுக்காது. பால் இல்லை என்றால் தயிர், நெய் இவை கிடைக்காது. பால்,தயிர்,நெய் இவை இல்லாமல் வேள்வி செய்யமுடியாது. இதனால்தான் பசுவையும் அந்தணரையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார் திருவள்ளுவர்.

    பசு பால் கொடுக்காது என்று சொல்வதன் மூலம் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிட்டால் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் நாட்டின் வளமையும் செழிப்பும் அந்தணர்களின் தொழிலாலும் அறத்தாலுமே நிலைநிற்கின்றன என்பதையும் நிலைநாட்டுகிறார். அந்த அந்தணர்களின் அறமும் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டுமென்றால் நாட்டில் நல்லாட்சி நடக்கவேண்டும். இந்தக் குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் வேதம் மற்றும் அவர்களது அறமான வைதிக தர்மம், பசுக்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டியது ஒரு மன்னனின் கடமை என்பதையும் இவற்றுக்குப் பாதுகாப்புக் கொடுக்காத மன்னன் அரசாளும் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.

    अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।
    यज्ञाद्भवति पर्जन्यो यज्ञःकर्मसमुद्भवः॥

    அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:|
    யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:||

    என்ற பகவத்கீதை ஶ்லோகத்தின் கருத்தை இந்தக் குறட்பாக்கள் பிரதிபலிப்பது கவனிக்கத்தக்கது. அதனால் இந்த இரண்டு குறட்பாக்களின் கருத்தைக் கொண்டு பார்க்கின்றபோது, திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்பது  தெளிவாகிறது. ஆகவே திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று கூறுவது ஆதாரமற்ற பிதற்றல்தான்.

    திருவள்ளுவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவரா?

    “வைதிக வேள்விகளில் உயிர்பலி கொடுக்கப்படுகிறது. ஆனால் திருவள்ளுவர் கொல்லாமயை வலியுறுத்தியவர்.

    “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

    என்ற குறட்பாவில் அவர் அஹிம்ஸையை ஆதரிக்கிறாரேயொழிய வேள்வியை ஆதரிக்கவில்லை. அதனால் அவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவர்தான்” என்று சிலர் கூறுகிறார்கள்.

    இதுவும் தவறான கருத்துத்தான். இவர்கள் எடுத்துக் காட்டும் குறளில் உள்ள அவி என்பது யாகங்களில் உபயோகப்படும் நெய், அன்னம் இவற்றைக் குறிக்கும். “நெய்யையும் அன்னத்தையும் கொட்டி ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாமல் இருப்பது நல்லது” என்பதே இந்தக் குறட்பாவின் கருத்து. இதனால் திருவள்ளுவர், வேள்விக்கு எதிரானவர் என்பது எப்படித் தேறும்?

    இந்தக் குறட்பாவின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், வேள்வியை விட அஹிம்ஸை சிறந்தது என்று சொல்கிறார். வேள்வியைவிட அஹிம்ஸை சிறந்தது என்று சொன்னால் வேள்வியை அவர் புறக்கணித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. மாறாக வேள்வியை அவர் ஆதரித்திருக்கிறார் என்பது தான் அதற்குப் பொருள். மாம்பழத்தைவிட பலாப்பழம் இனிமையானது என்று ஒருவன் சொன்னால், மாம்பழத்தை அவன் இனிமையற்றது என்று சொல்லிவிட்டான் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? அதைப்போல இந்தக் குறட்பாவில் வேள்வியின் சிறப்பையும் அஹிம்ஸையின் சிறப்பையும் ஒப்பீட்டு அடிப்படையில் கூறுகிறார் திருவள்ளுவர்.

    ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூற வேண்டுமானால் அவ்விஷயத்தை வேறொரு விஷயத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது மரபு. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்த விரும்பும் விஷயம் கொல்லாமை. கொல்லாமையின் சிறப்பை வேள்வியின் சிறப்போடு ஒப்பிடுகிறார். வேள்வியால் ஒருவன் அடையும் நன்மையையைவிட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னாமல் இருப்பதால் அடையும் நன்மை உயர்ந்தது என்பதே அந்தக் குறளின் உட்பொருள். அவர் வேள்விக்கு எதிரானவராக இருந்திருந்தால் ‘ஆபயன் குன்றும்’ என்ற குறளையும் ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறளையும் அவர் எழுதியிருக்கவே முடியாது. ‘ஆபயன் குன்றும்’, ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்களின் மூலம் திருவள்ளுவர், வைதிக வேள்வியைச் சிறப்பாக ஆதரித்தே பேசுகிறார்.

    “செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து”

    என்ற குறட்பாவில் தேவர்களுக்கு உரிய உணவு அவி உணவுதான் என்கிறார். வேள்வியை ஆதரிக்காதவராக அவர் இருந்திருந்தால் தேவர்களின் உணவு அவி உணவுதான் என்று அவரால் எழுதியிருக்க முடியாது. ஆகவே திருவள்ளுவர் நெய், அன்னம் இவற்றால் அக்னியில் செய்யப்படும் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் தான் என்பதே இக்குறட்பாக்கள் நமக்குக் கூறும் செய்தி.

    வைதிக வேள்விகள் சிலவற்றில் உயிர்ப்பலி சொல்லப்படுகிறது. அஹிம்ஸையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் உயிர்பலியுள்ள வைதிக வேள்வியை எப்படி ஆதரித்தார் என்ற கேள்வி எழுவது இயற்கை. இக்கேள்விக்கு பதில் திருக்குறளிலேயே இருக்கிறது. அதாவது விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்று இருந்தே தீரும். விதிவிலக்கில்லாத விதி என்றுமே இருந்தது கிடையாது. ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னக் கூடாது என்பது பொதுவிதி. இந்தப் பொதுவிதியை வலியுறுத்திக் கூறும் திருவள்ளுவர், வைதிக வேள்வியை ஆதரிப்பதன் மூலம் வேள்விகளில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக அவர் ஏற்கிறார் என்பது தெளிவாகிறது.

    “உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்ற இடத்தில் அவர் சொல்லவருவது என்னவென்றால் உணவுக்காக ஓர் உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்பது தவறு என்பதே. வேள்விகளில் உணவுக்காக உயிர்ப்பலி செய்யப்படுவதில்லை. தேவர்களுக்கு ஹவிர்பாகம் அளிக்கப்பட்ட பிறகு மிகுந்ததை வேள்வி செய்யும் கர்த்தாவும் வேள்வி செய்துவைக்கும் ரித்விக்குகளும் பிரஸாதமாக உண்பது மரபு. கொல்லாமையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் போரில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் குற்றவாளிக்கு அரசன்  மரண தண்டனை கொடுப்பதையும் எப்படி விதிவிலக்காக ஆதரித்துள்ளாரோ அதே அடிப்படையில்தான் யாகங்களில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக ஆதரித்துள்ளார் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் என்பதே அவரது நூலான திருக்குறள் நமக்குக் கூறும் செய்தி.

    ‘அவிசொரிந்து’

    ‘அவிசொரிந்து’ என்ற குறட்பாவில் புலால் உண்ணாமையின் சிறப்பு வலியுறுத்தப்படுகிறதேயொழிய வேள்வி செய்வது தவறு என்று கூறப்படவில்லை. இதே கருத்து வைதிக ஶாஸ்த்ரங்களான மனுஸ்ம்ருதியிலும், மஹாபாரதத்திலும் கூடச் சொல்லப்படுகிறது.

    वर्षे वर्षेश्वमेधेन यो यजेत शतम् समाः।
    माम्सानि च नखादेद्यस्तयोःपुण्यफलम् समम्॥

    வர்ஷே வர்ஷேஶ்வமேதேந யோயஜேத ஶதம்ஸமா:|
    மாம்ஸாநிச நகாதேத்யஸ் தயோ: புண்யபலம் ஸமம்||

    என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது. “எவன் நூறு வருடம் வரை வருடம் தோறும் அஶ்வமேதயாகம் செய்கிறானோ அவனுக்கும் எவன் தன் உயிருள்ளவரை கொல்லாமையைப் பின்பற்றி மாம்ஸத்தை உண்ணாமலிருக்கிறனோ அவனுக்கும் புண்ய பலன் ஒன்றுதான்” என்பது இந்த ஶ்லோகத்தின் பொருள். இதைப் போலவே மஹாபாரதத்தில்,

    इष्टम् दत्तमधीतम्च क्रतवश्च सदक्षिणाः।
    अमाम्स भक्षणस्यैव कलाम् नार्हन्ति षोडशीम्॥

    இஷ்டம் தத்த மதீதஞ்ச க்ருதவஶ்ச ஸதக்ஷிணா:|
    அமாம்ஸ பக்ஷணஸ்யைவ கலாம் நார்ஹந்தி ஷோடஶீம்||

    என்று சொல்லப்படுகிறது. அதாவது, ”பெருமளவில் தக்ஷிணைகள் கொடுத்துச் செய்யப்படும் யாகம், அக்னிஹோத்ரம், தானம் வேதாத்யயனம் இவையெல்லாம் புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது” என்பது இதன் கருத்து. உணவுக்காக ஓர் உயிரைக்கொன்று அதன் உடலைப் புசிப்பவன் யாகம் செய்வது என்பது வீணான வேலை என்று மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் கூறுகின்றன. இதிலிருந்து இன்னொரு அர்த்தமும் கிடைக்கிறது. அதாவது புலால் உணவு உண்ணாமல் இருப்பவன் யாகம் செய்தால், புலால் உண்ணாமல் இருப்பதால் ஏற்படும் புண்ணியத்தையும் யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணியத்தையும் அடைந்து இரட்டித்த புண்ய பலனை அடைகிறான் என்பதையும் அறிய முடிகிறது. மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் சொன்ன கருத்தையே ‘அவிசொரிந்து’ என்ற குறட்பா பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தாரைக் குறித்துச் சொல்லப்பட்ட செய்திதான், இக்குறட்பாவில் சொல்லப்பட்ட விஷயம். அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவர்களும் உணவுக்காக உயிர்களைக் கொல்கின்றனர். அந்த மூவருள் அரசர், வணிகர் என்ற இரண்டு வர்ணத்தவருக்கு மட்டுமே வேள்வி செய்ய அதிகாரம் உண்டு. நான்காம் வர்ணத்தவருக்கு வேள்வி விதிக்கப்படவில்லை. அரசர், வணிகர் இருவரும் உணவுக்காக உயிர்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் யாகமும் செய்கிறார்கள். அந்த இரண்டு வர்ணத்தாரையும் நோக்கித்தான், “நீங்கள் வேள்விகள் செய்வதைவிட உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாமல் இருப்பதே சிறந்தது” என்று திருவள்ளுவர் இந்தக் குறட்பா மூலம் கூறுகிறார். அதேபோல, வேள்வி செய்யத் தகுதியில்லாத நான்காம் வர்ணத்தவரை நோக்கி, “நீ வேள்வி செய்ய முடியவில்லையே என்று கவலைகொள்ளத் தேவையில்லை. நீ வாழ்நாள் முழுவதும் புலால் உண்ணாமல் இருந்தாலே உனக்கு வேள்வியின் பலன் கிடைத்துவிடும்” என்றும் திருவள்ளுவர் இக்குறட்பா மூலம் கூறுகிறார். அதாவது நான்காம் வருணத்தவர் உட்பட யாராக இருந்தாலும் மாமிசம் உண்ணக் கூடாது என்பதுதான் இந்தக் குறட்பாவின் திரண்ட கருத்து.

    அந்த வகையில் வேள்வி செய்ய இயலாதவரும் உய்வடைவதற்கு வழிகாட்டியுள்ளார் திருவள்ளுவர். அதனால் மாமிச உணவுப் பழக்கம் உள்ளவர்கள், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இயலாது. அவர்களுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையும் இல்லை. ஆகவே இக்குறட்பா, அந்தணர் தவிர்த்த மற்ற மூன்று வர்ணத்தாருக்காக எழுதப்பட்டது. இக்குறட்பாவில் உணவுக்காக எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது வேள்வியைவிடச் சிறந்தது என்று சொல்லப் படுவதால் புலால் உணவுப் பழக்கம் உள்ளவர்கள், வேள்வி செய்வதால் பயனில்லை என்பதும் புலால் உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் வேள்வி செய்வதால் அவர்களுக்கு இரட்டித்த புண்ய பலன் கிடைக்கும் என்பதும்தான் இக்குறட்பாவின் திரண்ட பொருள்.

    மஹாபாரதத்தில் பீஷ்மர், தர்மராஜருக்கு தர்மோபதேஶம் செய்யும் சமயத்தில் புலால் உணவில் உள்ள தோஷங்களை எடுத்துக் கூறி ‘க்ஷத்ரியர்களும் புலால் உணவைத் தவிர்ப்பது தான் உத்தமம்’ என்று கூறுகிறார். யாகங்களில் உயிப்பலி சரியா, தவறா என்பது குறித்த சர்ச்சை ரிஷிகளுக்கு மத்தியில் எழுந்ததாகவும் உயிர்பலி இல்லாமலும் யாகங்கள் செய்யலாம் என்ற முடிவுக்கு ரிஷிகள் வந்ததாகவும் மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. மேலும் அஶ்வமேதம் முதலிய உயிர்ப்பலி உள்ள பெரிய வேள்விகள் கலியுகத்தில் செய்யக் கூடாது என்றும் ஶாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விஷயங்களையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டவரே திருவள்ளுவர்.

    “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.”

    என்று அந்தணருக்கான இலக்கணத்தைச் சொல்கிறார் திருவள்ளுவர். அதாவது எந்த உயிரிடத்தும் கருணையோடு இருப்பதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று கூறுகிறார். அதே நேரத்தில் அந்தணரின் ஆறு தொழில்களில் ஒன்றான வேள்வியையும் ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்களால் ஆதரித்துப் பேசுகிறார். வைதிக வேள்வியில் உயிர்க்கொலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாத விஷயமன்று. இதிலிருந்து வேள்வியில் செய்யப்படும் உயிர்க்கொலையை அவர் எதிர்க்கவில்லை என்பதே தெரிகிறது.

    ஆகவே, எல்லாவுயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டவர்களாக இருப்பதால் அந்தணர்கள் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தை வரையறை செய்த திருவள்ளுவர், ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் ஆறு தொழில்களில் ஒன்றான உயிர்ப்பலியுள்ள வேள்வியை ஆதரித்துப் பேசுவதால், எப்படிப் போர்களில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் அரசன் குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையையும் விதிவிலக்காக ஆதரித்தாரோ அதைப் போலவே வேள்விகளில் செய்யப்படும் மந்த்ர ஸம்ஸ்காரத்துடன் கூடிய உயிர்ப்பலியையும் வேள்வியோடு தொடர்புடையவர்கள் செய்யும் மாம்ஸ பக்ஷணத்தையும் விதிவிலக்காக அவர் ஆதரிக்கிறார் என்பதே இங்கு தெளிவாகின்ற விஷயம். ஆகவே இந்தக் குறட்பா, கொல்லாமை, புலால் உண்ணாமை இவற்றின் சிறப்பை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயொழிய வேள்வியை மறுப்பதற்காக எழுதப்பட்டதன்று. அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளுக்கு எதிரானவர் என்ற கருத்து மிகவும் தவறானது.

    —தொடரும்

    Share
  • திருவள்ளுவர் யார்? – 1

    திருவள்ளுவர் யார்? – 1

    புதுக்கோட்டை பத்மநாபன்

    சில நாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது. திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கிய விஷயம். இது குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

    திருக்குறளில் உள்ள ஞானச் செழுமை, சொல்லாட்சி இவற்றை வைத்துப் பார்க்கும் போது அதை எழுதிய திருவள்ளுவர், ஓர் ஈடு இணையற்ற ஞானி என்று தான் சொல்லவேண்டும். சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய நூல், திருக்குறள். அந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் திட்டவட்டமாகக் கூறுவதற்கு எந்தவிதமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. இந்த நிலையில், ஞானச் செறிவுள்ள அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களை, முடிந்த அளவு நம் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டியதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். அதை விட்டுவிட்டு அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து, அவருக்கு ஓர் அடையாளத்தைக் கற்பித்து அரசியல் செய்வதும், அந்த அடையாள அரசியலை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் தங்கள் சாயத்தைத் திருவள்ளுவர் மேல் பூசப் பார்ப்பதும் அடியேனைப் பொறுத்தவரை வேண்டாத வேலை என்றே நினைக்கிறேன்.

    இதுவரை, அடியேன் திருவள்ளுவரின் ஜாதி, மதம் பற்றி ஆய்வு செய்ததுமில்லை, செய்ய நினைத்ததுமில்லை. அந்த விருப்பம் அடியேனுக்கு இருந்ததும் இல்லை. அடியேன் அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களையும், சொல்லிய விதத்தையும் சுவைத்துப் படித்துப் பல தடவை மெய்சிலிர்த்து வியந்ததுண்டு. அதே நேரத்தில், தற்போது எழுந்துள்ள சர்ச்சை விஷயம் வீதிக்கு வந்துவிட்டபடியால் அதுபற்றி நமது கருத்தையும் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

    முதலில் திருவள்ளுவருக்குக் காவி உடைபோட்டுப் படம் வரைந்ததைக் கண்டு கொதித்தெழுந்து கடுமையாகக் கண்டிக்கும் பரம யோக்கியர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன். திருவள்ளுவர் எந்த உருவத்தில் இருந்தார் என்பது பற்றியோ அவரது வாழ்க்கை வரலாறு பற்றியோ எந்தவிதமான ஆதாரங்களும் தெளிவாகக் கிடைக்காத நிலையில் வெள்ளை ஆடை அணிவித்து தாடிவைத்து அவருக்கு ஒரு உருவத்தை நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே, எந்த அடிப்படையில் அந்த உருவத்தை நீங்கள் அவருக்கு ஏற்படுத்தினீர்கள்? அவருக்கு ஒரு உருவம் கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கின்றபொழுது, மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லையா?

    திருவள்ளுவராண்டு என்று ஓர் ஆண்டை உருவாக்கியிருக்கிறீர்களே எந்த அடிப்படையில் உருவாக்கினீர்கள்? திருவள்ளுவரின் பிறப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா? ஆய்வு என்ற பெயரில் எந்தவிதமான ஆதாரமும் இன்றி வெறும் அனுமானத்தால் உங்களின் சொந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கப் பல அபத்தமான காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற பொழுது மற்றவர்கள் ஆய்வு செய்யக் கூடாதா? திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாட உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, அருகதையும் இல்லை. ஏனெனில் திருவள்ளுவரின் கொள்கைக்கும் உங்கள் கொள்கை, நடைமுறை இவற்றுக்கும் உள்ள ஸம்பந்தம் கருணை உணர்வுக்கும் கசாப்புக் கடைக்காரனுக்கும் உள்ள ஸம்பந்தம் தான். அதனால் திருவள்ளுவருக்குக் காவிஉடை அணிவித்தது பற்றிக் கேள்வி கேட்க, உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை.

    அதே நேரத்தில் பிரச்சனை பெரிதாகிவிட்டபடியால் திருவள்ளுவர் உண்மையில் யார், அவருக்கு எந்த உருவம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதுடன் தவிர்க்க முடியாத கடமையும் ஆகிவிட்டது. அந்தக் கடமை உணர்வோடு திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்த முக்கியமான சில விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

    ஒருவரது அடையாளத்தைத் தெரிந்துகொள்ள வெளிப்படையான ஆதாரங்கள் இல்லை என்பதற்காக அவருக்கு எந்த அடையாளமும் இல்லை என்று முடிவு கட்டிவிடவும் முடியாது. எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் இருந்தே தீரும். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள, வலிமையான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவரது படைப்பில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரது அடையாளத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் திருவள்ளுவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்குச் சரியான புறச்சான்றுகள் கிடைக்காததால் அவரது சீரிய படைப்பான திருக்குறளில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும்.

    திருக்குறளில் தங்களுக்குச் சாதகமாகத் தோன்றும் சில குறட்பாக்களை மட்டும் எடுத்துக் காட்டி, திருக்குறள் தங்கள் நூலென்றும் திருவள்ளுவர் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்றும், ஜைனர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் தற்காலத்தில் நாஸ்திகம் பேசும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் பொதுவுடைமைவாதிகளும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட முயன்று கொண்டிருகிறார்கள். முதலில் மேற்படி ஜைனம் முதலிய மதங்களின் கருத்துகளுக்கும் நாஸ்திகக் கருத்துகளுக்கும் அணுவளவும் திருக்குறளில் இடமில்லை என்பதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபிப்போம்.

    திருக்குறளின் முதற்குறளிலேயே இறைவனே உலகிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து நாஸ்திகர்களுக்கும் பொருள்முதல்வாதிகளுக்கும் உடன்பாடான கருத்தன்று. மேலும் தெய்வ வழிபாடு, ஊழ் என்று சொல்லப்படும் விதி, மறுபிறப்பு, வினைப்பயன், வேத வைதிக நெறி, இல்லறப் பெண்களின் ஒழுக்கம், கற்பு, பிறனில் விழையாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், தவம், துறவு இவற்றைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாஸ்திகர்களுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும் திருவள்ளுவர் கூறும் இவ்விஷயங்களில் எல்லாம் உடன்பாடு உண்டா? திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இன்றைய பகுத்தறிவுவாதிகளின் தந்தை என்று சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவனுக்கு ஆண்களின் ஒழுக்கம், பெண்களின் கற்பு, மரபுவழியான திருமணமுறை, பிறனில் விழையாமை இவையெல்லாம் பிடிக்காத விஷயங்கள். திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது என்றும், திருமண முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும், ஒருவனுடைய மனைவி உப்பு, மிளகாயைப் போல் அவனுக்கு மட்டும் தனி உடைமைச் சொத்தாக நினைப்பது தவறு என்றும், கற்பு, விபசாரம் போன்ற வார்த்தைகள் பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு எதிரானவை என்றும், திருக்குறள் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றும் இவர்களின் தந்தையான பகுத்தறிவுப் பகலவனே கூறியிருக்கிறார். பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகளுக்கெல்லாம் ஆசான் என்று சொல்லப்படும் கார்ல் மார்க்ஸ், பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் தனிஉடைமை ஆகிவிடுவாள் என்றும், அவளைப் பொதுவுடைமையாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுவான விபசாரியாக்க வேண்டும் என்றும் private property and communism என்ற தலைப்பில் economic and philosophic manuscript of 1844 என்பதில் எழுதியுள்ளார். இப்படியெல்லாம் கூறியிருக்கின்ற இந்த ஆசான்களின் வாரிசுகளான இன்றைய பகுத்தறிவு வாதிகளுக்கும், பொதுவுடைமை வாதிகளுக்கும் திருக்குறளை உரிமை கொண்டாட என்ன அருகதை இருக்கிறது? இவர்களுக்கும் திருக்குறளுக்கும் என்ன ஸம்பந்தம்? திருக்குறளைப் பற்றிப் பேசக்கூட இவர்களுக்கு உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே, திருக்குறள் நாஸ்திக நூலும் அன்று. திருவள்ளுவர் நாஸ்திகரும் அல்லர். அதனால் இந்த நாஸ்திக இயக்கவாதிகள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறள் பற்றியும் கருத்துச் சொல்வது என்பது ஒரு மட்டரகமான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஜைனமும் பௌத்தமும் வேதங்களையும் வைதிக கர்மங்களான வேள்விகளையும் ஏற்றுக்கொள்ளாத மதங்கள். அம்மதங்களில் சொல்லப்படும் அஹிம்ஸை , துறவு, தவம், ஆசையைத் துறத்தல், நல்ல நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் முதலிய கோட்பாடுகள் அம்மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்த வேதங்களிலும், உபநிஷத்துகளிலும், வைதிக இலக்கியங்களிலும் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்தான். அவையொன்றும் புத்தராலும் மஹாவீரராலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை. அவ்விருவரும் வேத இலக்கியங்களிலிருந்து அக்கருத்துகளை ஸ்வீகரித்துக்கொண்டு, அவற்றைத் தங்கள் மதங்களின் முக்கியக் கோட்பாடுகளாகக் காட்டிக் கொண்டார்கள்.

    இந்த அஹிம்ஸை முதலிய கோட்பாடுகள் திருக்குறளில் காணப்படுவதால், திருக்குறள் புத்த சமய நூல் என்று சிலரும் சமண சமய நூல் என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்து அடிப்படையற்றது. பௌத்த சமண சமயக் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கருத்துக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது என்பதை மிக முக்கியமான ஆறு காரணங்களால் தெளிவுபடுத்துவோம்.

    முதலாவதாக சமணமும் பௌத்தமும் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் திருவள்ளுவர் முதல் குறட்பாவிலேயே கடவுள் தான் உலகைப் படைத்தார் என்கிறார். அவர் சொல்லும் “ஆதிபகவன்” என்பதற்கு இந்த இரண்டு மதக்காரார்களும் தங்களுக்குச் சாதகமாகக் கூடப் பொருள் கொள்ளலாம். அப்படி இவர்கள் பொருள் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அக்குறளில் ஓர் அழகான உவமையைத் திருவள்ளுவர் காட்டுகிறார். அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் எப்படி முதலாக உள்ளதோ அதைப்போல உலகுக்கு முதலாக இருப்பவர் ஆதிபகவன் என்று கூறுகிறார்.

    இங்கு ‘படைத்தல்’ என்பதற்கு என்ன இடம் இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். எந்த மொழியைப் பேச வேண்டுமானலும் முதலில் வாயைத் திறந்துதான் பேசமுடியும். வாயைத் திறக்கும்போது முதலில் வெளிவருவது அகர ஒலிதான். இதனால் மற்ற எழுத்துகளின் ஒலி உருவாக அகரமே காரணமாக இருக்கிறது என்பது புலனாகிறது. அப்படி உருவாகும் மற்ற எழுத்துகளுக்குரிய ஒலிகளிலும், அகரம் உள்ளீடாகச் சேர்ந்தே இருக்கிறது. அதனால், மற்ற எழுத்துகள் தோன்ற அகரமே காரணமாகிறது என்பதால்தான், “அகர முதல எழுத்தெல்லாம்” என்றார். எப்படி அகரம் மற்ற எழுத்துகளை எல்லாம் தோற்றுவித்ததோ, அதாவது படைத்ததோ அதைப் போலக் கடவுள் உலகைப் படைத்தார் என்பதே அந்த முதல் குறட்பாவின் கருத்து. “முதற்றே”என்றால் ‘முதலாக உடையது’ என்று பொருள். அதாவது அந்த முதல்வனான ஆதிபகவன் என்ற கடவுளிடமிருந்து உலகம் தோன்றியது என்று பொருள். ஸர்வசூன்யவாதிகளான பௌத்தருக்கும், கடவுள் உலகுக்குக் காரணம் இல்லை என்ற கருத்துடைய சமணருக்கும், இந்த முதற்குறட்பாவின் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?

    இரண்டாவதாக, கொல்லாமையை வலியுறுத்தும் திருவள்ளுவர்,

    “கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்” என்று அரசன், குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையை ஆதரித்துப் பேசுகிறார். எல்லா நிலையிலும் அஹிம்ஸையையே வலியுறுத்தும் சமண, புத்த சமயங்களுக்கு இந்தக் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?

    மூன்றாவதாக, சமணர்களும் பௌத்தர்களும் வேள்விக்கும் அதற்கு அடிப்படையான வேதங்களுக்கும் எதிரானவர்கள். திருவள்ளுவர் “ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்”, “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்ற குறட்பாக்களால், அந்தணரையும் அவர்களின் நூலான வேதத்தையும், அவர்களின் தொழிலான வேள்வி முதலியவற்றையும், அவர்களின் அறமான வைதிக தர்மத்தையும், ஓர் அரசன் பாதுகாக்க வேண்டும் என்று கூறி, வேதவைதிக நெறியையும் அந்தணரையும் ஆதரித்துப் பேசுகிறார். திருவள்ளுவரின் இந்தக் கருத்து, சமண பௌத்த சமயக் கொள்கைக்கு எதிரான கருத்து.

    நான்காவதாக பூமியில் விளையும் கிழங்கு வகைகளைக் கூட சாப்பிடக் கூடாது என்னும் அளவிற்கு அஹிம்ஸையை வலியுறுத்துவது சமண சமயம். ஆனால் உழவுத் தொழிலான வேளாண்மையை ஆதரித்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார் திருவள்ளுவர். இதனாலும் திருவள்ளுவர் சமணக் கொள்கைக்கு எதிரானவர் என்பது தெளிவாகிறது. பௌத்தம் அஹிம்ஸையை வலியுறுத்தினாலும் கொல்லாமல் தானாகவே இறந்த விலங்கின் மாமிசத்தை உண்ணலாம் என்று சொல்கிறது அந்த மதம். ஆனால் திருவள்ளுவரோ, “தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்” என்ற குறட்பாவின் மூலம் பிற உயிர்களின் மாமிசத்தை உண்பவர்களைக் கண்டிக்கிறார். இவர் எப்படி சமணராகவோ பௌத்தராகவோ இருக்க முடியும்?

    ஐந்தாவதாக, துறவறம், நிலையாமை ஆகியவற்றையே முழுமையாக வலியுறுத்தும் சமண, பௌத்த சமயங்களுக்கு இல்லற இன்பம், காம சுகம், மக்கட்பேறு முதலியவை எல்லாம் ஸம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் திருவள்ளுவர் இல்லறம், அங்கீகரிக்கப்பட்ட தர்மதோடு கூடிய காம சுகம், இவற்றையெல்லம் ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் சமண, பௌத்தக் கருத்துகளுக்கும் திருக்குறளின் கருத்துகளுக்கும் எந்தவித உறவும் இல்லை என்பது புலனாகிறது.

    ஆறாவதாக அசோகர், புத்த சமயத்தைத் தழுவிய பின் போரைக் கைவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதனால் போர் புத்த சமயத்துக்கு, உடன்பாடான விஷயமன்று என்பது புலப்படுகிறது. தாவரங்கள், புழு பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இவற்றைக் கூடக் கொல்லக் கூடாது என்ற கொள்கையை உடைய சமணர்கள், மனிதர்களைக் கொல்லும் போரை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் திருவள்ளுவரோ போரை ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் திருவள்ளுவரின் கருத்து சமண, பௌத்த மதக் கருத்துகளுக்கு முரணானது என்பது புலனாகிறது. இந்த ஆறு முக்கியமான காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், சமணர்களும் பௌத்தர்களும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட எந்தவித நியாயமும் உரிமையும் அணுவளவும் இல்லை என்பதுதான் புலப்படுகிறது.

    இதைத் தவிர, கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் புலால் உணவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருக்குறளில் புலால் உணவு கண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூறுவதற்கோ இஸ்லாமியர் என்று கூறுவதற்கோ எந்தவிதமான அடிப்படையுமில்லை.

    திருக்குறளில் கடவுள் வாழ்த்து- இரண்டாவது குறளில் “நற்றாள் தொழார் எனின்” என்று வருகிறது. இதில் வரும் ‘தொழுதல்’ என்ற வார்த்தை, இஸ்லாமுக்குரிய வார்த்தை என்றும், முஸ்லிம்கள்தான் வழிபாட்டை ‘தொழுதல்’ என்று சொல்வார்கள் என்றும், மற்ற மதத்தினர் வழிபாட்டுக்கு அச்சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் இஸ்லாமியர் ஒருவர் கூறி வருகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இந்த இஸ்லாமியருக்குத் தன் மதத்தைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றியும் ஆழமான அறிவு இல்லை என்பது தான் தெரிகிறது. இஸ்லாமியரின் வழிபாட்டுக்கு அரபி மொழியில் “நமாஸ்” என்று பெயர். அச்சொல்லுக்கு இணையாகத், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழில் உள்ள தொழுகை என்ற சொல்லை அமைத்துக்கொண்டார்கள்.

    ’நின் தாள் நிழல் தொழுதே’ என்றும், ‘நிற் பேணுதும் தொழுதே’ என்றும், ‘நின் அடி தொழுதனெம்’என்றும் சங்க இலக்கியமான பரிபாடலில் ‘தொழுதல்’ என்ற சொல் திருமால் வழிபாட்டைக் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆகவே தொழுதல் என்ற சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இந்த இஸ்லாமியருக்கு, மதங்கள் ஸம்பந்தமான அடிப்படை அறிவு இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. அதனால் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எந்தவித உரிமையும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏன் அவர்கள் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் ஓர் அரசியல்தான்.

    — தொடரும்

    Share