Blog

  • பெருந்துயர்

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

     

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    unnamed

     

     

     

     

     

     

     

     

    கடுமை யாக நடத்திய தென்னை

    இவ்வையகம் ! பெருந்துயரே !

    என்றும் அழாத குணத்தவன் நான் !

    தாழ்வாக மதித்த தென்னை

    இவ்வையகம் ! பெருந்துயரே !

    இப்போ தவளை நான்

    இழந்து விட்டேன் நிச்சயமாய் !

    இனிக் காணப் போவ தில்லை.

    இழுத்து வர வேண்டும் என்னிடம்

    இனி அவளை ! பெருந்துயரே !

     

    நினைவுக்கு வரும் நாங்கள் செய்த

    நல்வினைகள் யாவும் !

    தனித்துப் போன

    தன்னைப் பற்றி மட்டும்

    ஒன்றும் அறியா தவளா அவள் ?

    அழைத்துவா மீண்டும் அவளை

    என்னிடம் !  ஏனெனில்

    எல்லாரும் அவளைக் காணலாம்.

     

    அவள் இன்றேல் வரும் துயர் எனக்கே !

    நினைவுக்கு வரும் நாங்கள் செய்த

    நல்வினைகள் யாவும் !

    அவளுக்குத் தெரியும்

    அவள் மட்டும் தனித்துப் போனதை !

    அழைத்து வா அவளை,

    என்னிடம்

    அனைவரும் காண !

    அவள் இன்றேல் துயர்தான் எனக்கு !

    துயர்தான் ! துயர்தான் !

    துயர்தான் !

     

     

     

     

    Share
  • ஒரு வரிக் கரும்பு

     

    ராஜகவி ராகில்

     

     

    * முள்ளில் பனித்துளி

    * சிலந்தி வலையில் பட்டாம் பூச்சி

    * குளத்தில் நிலா அசைகிறது

    * உதிர்ந்து கிடந்த இலையில் பிணவாடை

    * குடத்தினுள் காற்று

    * அரிசிப்பானைக்குள் கடன்

    * அடுப்பில் எறும்புகள்

    * விளக்கில் இருள்

    * வேப்பமரத்தின் கீழ் மிட்டாய்க்காரன்

    * காலையில் உதிர்ந்து கிடந்தது கனவு

    * தேநீர்க் கடைக்காரன் கோபக்காரன்

    * கொக்கு இருளில் கறுப்பு

    * ஆற்றில் விழுந்தும் நிழல் நனையவில்லை

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (67)

    நிர்மலா ராகவன்

    காலம் மாறிப்போச்சு

    நலம்-4
    ஒரு தலைமுறைக்குமுன் இருந்ததைவிட தற்போது குடும்பச்சண்டை, விவாகரத்து இதெல்லாம் அதிகரித்துவிட்டது என்று சமூக நல இயக்கத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மேடையில் முழங்கினார். முன்பெல்லாம் பெண்கள் `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று அமைதியாக இருந்தார்கள், இப்போது அவர்களுக்குப் பொறுமையும், விட்டுக்கொடுக்கும் குணமும் போய்விட்டன என்று காரணம் காட்டிப் பழித்தார்.

    பெண்கள் மோசமாகிவிட்டார்களா, அல்லது ஆண்கள்தாம் கடவுளைப்போல் இல்லையா? ஆராய்வோமா?

    அன்பு என்பது..

    காதலியோ, மனைவியோ, தன்னைத்தவிர வேறு எந்த ஆணுடனும் பழகக்கூடாது என்று மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடைவிதிக்கும் ஆண் அவள் தனது உடைமை என்று எண்ணுகிறான். தான் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி நடந்தால்தான் அவளுக்குத் தன்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம் என்று தவறாக நினைக்கிறான். அவனை மீறினால், உணர்ச்சிபூர்வமாகவோ, உடலாலோ வதைப்பதும் அவனுக்குச் சரியென்றே படுகிறது.

    பெண்களுக்கு உணர்ச்சிகளா? சேச்சே!

    சமீபத்தில் மலேசிய சட்டசபையில் ஓர் அரசியல்வாதி கூறியிருந்தார், கணவன் இன்னுமொரு பெண்ணை மணக்க ஒப்புதல் தராத மனைவி அவனை உணர்ச்சிபூர்வமாக வதை செய்கிறாள் என்று!

    இவரைப் போன்றவர்களுக்கு ஆண் என்ன செய்தாலும், `சரி’ என்று சொல்கிற பெண்கள்தாம் நல்லவர்கள். அதாவது, பெண்கள் சுயமாகச் சிந்திக்கக்கூடாது, அவர்களுக்கு உணர்ச்சிகள் என்று இருக்குமாயின், அவைகளை மறைத்துக்கொள்ள வேண்டும், அல்லது குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும். அப்போதுதானே ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவர்களை வைத்திருக்க முடியும்!

    பெண் வெறும் போகப்பொருளாக இருந்த காலம் போய்விட்டது. தம் தாய்மார்களும், அத்தை, பெரியம்மாக்களும் வாழ்ந்து காட்டியதைப்போல் இன்றைய இளம்பெண்களுக்கு வாழ விருப்பமில்லை. இருப்பினும், கட்டுப்படுத்தும் ஒருவரை – காதலனாகவோ, கணவனாகவோ — தம்மையறியாது தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
    நாமிருவர், எப்போதும்!

    காதலர்களோ, புதிதாக மணம் புரிந்துகொண்டவர்களோ, எப்போதும் ஒன்றாக இருப்பதுதான் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறார்கள். `இவருக்குத்தான் தான் எவ்வளவு தேவைப்படுகிறோம்!’ என்று ஆரம்பத்தில் பெண்ணுக்கு ஏற்படும் பெருமை நாளடைவில் பொறுக்க முடியாத பாரமாகிவிடுகிறது.

    ஒன்றாகப் போகும்போது செல்ல வேண்டிய இடத்தையும், செய்ய வேண்டிய காரியத்தையும் ஒருவரே முடிவு செய்யும்போது, நாளடைவில் அடுத்தவருக்கு அதிருப்தி பிறக்கிறது.

    `நீ எங்கே போயிருந்தாய்?’

    `நான் உன்னுடன் இல்லாதபோது என்ன செய்கிறாய்?’

    இப்படி அடிக்கடி நேரிலோ, தொலைபேசிவழியோ ஒருவர் விசாரிப்பது அவர்களது பாதுகாப்பின்மையைத்தான் குறிக்கும். தன் காதலுக்கு உரியவர் தன்னைவிட்டுப் போய்விடுவாரோ என்ற பயம்தான் இப்படியெல்லாம் ஒருவரை அலைக்கழிக்கிறது. இது கண்டிப்பாக அன்போ, பரிவோ இல்லை. கட்டுப்பாடுதான்.

    கதை

    எப்போதும் காதலி தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று நினைத்தான் நாதன். அதனால் அவளுக்கு நெருக்கமானவர்களுடன் இருக்கும் தொடர்பை முறித்துவிடுகிறான். அப்படியே அவள் பிறருடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாலும், அவனுக்குப் பிடிப்பதில்லை. `நாமிருவர் மட்டும் தனியாகப் போகலாமே! எதற்குப் பிறரை இழுக்கிறாய்?’ என்று நைச்சியமாகப் பேசுகிறான். தகராறு செய்கிறான்.

    பிறரிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் வதையின் ஆரம்பம். வதைப்பவனுக்கு அதிகாரம் கூடுகிறது.

    `இவர் சொல்வதும் நியாயம்தானே!’ என்றெண்ணியோ, இல்லை, `எதற்கு வீண் சண்டை!’ என்று நினைத்தோ, அவளும் விட்டுக்கொடுக்கிறாள்.

    அவனுடைய ஆக்கிரமிப்பால் விளையும் சுதந்திரமின்மை பொறுக்க முடியாது போகிறது. ஆனால், யாரிடம் போய்ச் சொல்வது என்று புரியாது, மேலும் ஒடுங்கிப்போகிறாள்.

    எப்போதாவது தோழிகளுடன் வெளியே போகையில், பழைய கலகலப்பு குறைந்திருக்கிறது. அவர்களிடம் அவனைப்பற்றித் தரக்குறைவாகப் பேசவும் முடிவதில்லை.

    எந்தவித வதையை அனுபவிப்பவர்களும் தம்மை வதைப்பவர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள்.

    `என்னிடம் சொல்லாது, உன் ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினியா? என்னைப்பத்திதானே பேசினீர்கள்?’ என்று நாதன் அடித்தபோது கலக்கம் வந்தது.
    உடனே அவன் மன்னிப்பு கேட்டு, கொஞ்ச ஆரம்பித்தான். அவள் மனம் சமாதானப்பட்டது. அதுதான் அவள் செய்த தவறு.

    வதை ஆரம்பிக்கையிலேயே அதைத் தடுக்க முயல வேண்டும். இல்லாவிட்டால், அது தொடரும். முற்றிவிடும்.

    `உங்களுக்கும் மகிழ்ச்சியும் பாதுகாப்புமாக வாழ உரிமை இருக்கிறது என்று பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்களுக்குப் பிடித்தம் இல்லாததைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது,’ என்று அறிவுரை வழங்குகிறார் பெண்கள் ஆதரவு இல்லத்தை நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.

    தொடருவோம்

    Share
  • சந்தோஷம் என்றும் நம் பக்கம்

     

    ரா. பார்த்தசாரதி

     

    சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,

    சந்தோஷம்  என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,

    அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,

    சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,

    எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது

    போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது !

    சூரியனைக்  கண்டால்  தாமரை

    சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,

     

    கார்முகில்கள்  திரண்டு  வந்து

    மழை தந்துதான்  பழக்கம்,

    மழையைக்  கண்டால்  மயிலுக்கு

    மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,

    காட்டில்  உள்ள  குயிலுக்கோ

    சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.

     

    கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை

    எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால்

    வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!

    Share
  • குறளின் கதிர்களாய்…(178)

    செண்பக ஜெகதீசன்

    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று. (திருக்குறள் -753: பொருள் செயல்வகை) 

    புதுக் கவிதையில்…

    சேரும் செல்வமோர்
    அணையா விளக்கு…
    அது
    சேர்ந்தவர்க்கு,
    எண்ணிய தேசமெலாம் சென்று
    இருளெனும் பகையழிக்கும்…! 

    குறும்பாவில்…

    செல்வமெனும் அணையா விளக்கு,
    சேர்ந்தவர் விரும்பும் தேசமெலாம் சென்று
    இருளாம் பகையை இல்லாமலாக்கும்…! 

    மரபுக் கவிதையில்…

    இருளை யகற்றி ஒளிகொடுக்கும்
         -என்றும் அணையா விளக்காகி,
    பொருளது அதனைச் சேர்ப்பவர்க்குப்
        -பெரிதும் துணையாய் வந்திடுமே,
    விரும்பும் தேசம் எங்கேயும்
    -விரைந்தே உடனே சென்றாங்கே
    பொருந்தா இருளாம் பகையழித்துப்
       -போகுமே பொருளாம் விளக்கதுவே…! 

    லிமரைக்கூ…

    அணையா விளக்காகும் பொருளே,
    அதுவே விரும்பும் தேசமெலாம் சென்றாங்கே
    போக்கிடும் பகையெனும் இருளே…! 

    கிராமிய பாணியில்…

    சேருசேரு செல்வஞ்சேரு
    நல்லபடியா செல்வஞ்சேரு…
    சேருஞ்செல்வம் ஒருவெளக்கு,
    சூறக்காத்து அடிச்சாலும்
    அதுவொரு அணையாவெளக்கு…
    அந்த வெளக்குதான்
    விரும்புற
    அந்நிய தேசமெல்லாம் போயி
    பகங்கிற இருட்டப்
    பக்குவமா அழிச்சிடுமே…
    அதுக்கு,
    சேருசேரு செல்வஞ்சேரு
    நல்லபடியா செல்வஞ்சேரு…!

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 237

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரை காதை

    திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை

    செங்கோல் கொண்ட பாண்டியனின்
    திருந்திய செயல் உடைய
    அந்தணர்கள் வசிக்கும் ஊர் திருத்தங்கால்…
    அவ்வூரில் உள்ள
    பசுமையான தழைகளால் நிறைந்த
    அரசமரத்தின் கீழ்த்
    தண்டையும் கமண்டலத்தையும் வெண்குடையையும்
    பண்டங்கள் உடைய சிறிய பொதியையும்
    மிதியடியையும் வைத்திருப்பவன் அவன்…

    குடிமக்களைக் காக்கும் வெண்கொற்றக் குடையும்
    அறநெறியால் கொண்ட வெற்றியும் உடைய
    மேலானவன் வாழ்க…
    கடலின்கண் பகைவர் தம்மை அழித்த
    மன்னவன் வாழ்க…
    இமயமலையில் வில்லெழுதிய
    காவலன் வாழ்க…
    பொலிவும் குளிர்ச்சியும் பொருந்திய
    பொருநையாற்றினையுடைய
    பொறையன் வாழ்க…!

     

     

    Share
  • தற்காலப் பெண்ணின் சமூகச் சிக்கல்களும் தீர்வுகளும்

    -கு.கோபாலகிருஷ்ணன்

    முன்னுரை

                    இக்கட்டுரை, மரபுகாலம் தொட்டுத் தற்காலம் வரை சமுதாயத்தில் பெண்ணிய வளர்ச்சியும்  அதே நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களையும் காண்கின்றது. தீர்வுகள் என்பதைச் சிக்கல்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யலாம் என்னும் பாங்கில் அமைந்திருக்கின்றது.

    சமுதாயம், ஓர் விளக்கம்

                 சமுதாயம் என்பது பல்வேறு சமூக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் சமூகக் கூட்டமைப்பு என்பர்.  தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இனப்பெருக்குவதற்கும், புதிய தேவைகளை உருவாக்கம் செய்வதற்கும், காரணிகளை உற்பத்தி செய்யும் கூட்டியக்கமே சமுதாயம் ஆகும்.

    பெண்ணியம் – விளக்கம்

                    பாலினப்பாகுபாடு தொடர்பானச் சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொள்ளவும், பெண்ணியம் தெளிவான வரையறையை வகுத்துக் கொள்கிறது. பெமினிசம் (Feminism) என்ற ஆங்கிலச் சொல் ‘பெமினா’ (Femina) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். ‘பெமினா’ (Femina) என்ற சொல்லுக்குப் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது என்பது பொருளாகும்.  முதலில் இச்சொல் பெண்ணின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிட்டு வழங்கப்பட்டுப் பின்பு பெண்களின் உரிமையைப் பேசப் பயன்பட்டது.

                    1890-க்கு முன்பு வரை உமனிசம் (Womanism) என்ற சொல் பெண்ணின் உரிமைப் பிரச்சனையும் அதன் அடிப்படையில் எழுந்த போராட்டத்தையும் உணர்த்தப் பயன்பட்டது. 1890லிருந்து உமனிசம் என்ற சொல்லினடத்தைப் பெமினிசம் (Feminism) என்ற சொல் பெற்றது.

                    பெண்ணியம், பெண்ணியல், பெண்நிலைவாதம், பெண்ணுரிமை எனப்பலவாறு ‘பெமினசம்’ (Feminism) என்ற ஆங்கிலச் சொல் தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. எனினும் ‘பெண்ணியம்’ என்ற சொல்லே இன்று வழக்கில் நிலை பெற்று வருகின்றது.

                    ‘போர்லடபன்ச்’ என்ற அறிஞர் பெண்ணியம் என்பது பெண்ணின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்து கொண்டு அவற்றை நீக்க முயல்வதாகும்.  அவற்றின் வழியாக உலகளவில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆன்மிக நெறியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும் பெண்ணியம் என்பது எல்லாப் பெண்களையும் அரசியல் மற்றும் பிற அடிமைத்தளையிலிருந்து விடுவித்தல் என்ற கொள்கை உடையதாகும்.  இளம்பெண்கள், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஏழைப் பெண்கள், தன்பால் சேர்க்கையுடைய பெண்கள், வயதான மூதாட்டிகள் மற்றும் பொருளாதார நிலையிலும், மரபு மணமுறையிலும் துன்புறும் பெண்கள் ஆகிய அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் தலையாய இலக்காகும்.

    சமுதாயச் சிக்கல்கள்

                    சமுதாயத்தில் மரபுகளைத் தொட்டுப் பெண்ணைத் தெய்வமாகவும், தாயாகவும் போற்றும் முறைகள் எண்ணற்ற சிக்கல்களையும், கொடுமைகளையும் பெண்ணுக்குப் பரிசாக கொடுக்கிறது என்பதை மறுக்க முடியாது எனலாம்.

    1)            தொழிற்புரட்சி சிக்கல்கள்
    2)            மேற்கத்திய உருவாக்கச் சிக்கல்கள்
    3)            நகரிய உருவாக்கச் சிக்கல்கள்
    4)            புதுமையாக்க நிலைகள்
    5)            சமூகச் சீர்திருத்த இயக்கக் கூறுகள்
    6)            நாட்டு விடுதலை இயக்கங்கள்
    7)            சமநிலை இன்மை
    8)            பாலுறவுச் சிக்கல்கள்
    9)            பெண்மீதான வன்முறைகள்
    10)          குழந்தை முதல் முதியோர்வரை ஏற்படும் இன்னல்கள், போராட்டங்கள்

    ’பெண் என்று பிறந்து விட்டால். பெரும் பிழை இருக்குதடி’ என்றான் பாரதி. இந்த ஒப்பற்ற பிறவியைத்தான் இந்த ஆண் சமுதாயம் பெரும் அடிமைப்படுத்துகிறது.

                    உற்பத்திப் பொருளாதார அமைப்பிலே (Productive Economy) ஆண், பெண் இருபாலரின் பணிகள் தனித்தனியாக வரையறுக்கப்பட்டதனால், குடும்பம் பொருள் உற்பத்தி செய்யும் களமாக விளங்கியது.  இவற்றின்வழிப் பெண்களுக்குச் சிக்கல்கள், போராட்டங்கள் எழலாயின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்யத் தொடங்கிய நாள்முதல் மேனாட்டுக் கல்விமுறையும், பண்பாடும், தொழில் நுட்பங்களும் உற்பத்தி முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. ‘மகளிர் ‘ பலர் கற்கத் தலைப்பட்டனர்.  மேற்கத்தியப் பண்பாடான நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் இந்நாட்டிலும் வளரத் தொடங்கின. இதன் விளைவால் சமூகச் சிக்கல்கள், குற்றங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.  நகரிய ஆக்கத்தால் கிராமங்களில் செய்து வந்த உழவுத் தொழில்களையும், கைத்தொழில்களையும் கைவிட்டு ஆண், பெண் இரு பாலரும் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இவற்றின் வழியாக வளர்ச்சி அதே அளவுக்குப் பெண்களின் மீதான பல்வேறு சிக்கல்கள், கொடுமைகள் யாவும் வளர்ச்சி அடைய தொடங்கின.

                    கால நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளும் உருமாறின, புதிய வாழ்க்கை முறைக்கு வழி வகுத்தன. அரசியல், சமூகம், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதுமைகள் தழைத்தன. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நெகிழ்ச்சி அடையும் அளவுக்கு வளர்ச்சிப் பெற்றனர்.  வேத காலத்திலும், பழந்தமிழர் காலத்திலும், உரிமையோடு கடமையாற்றிய மகளிர் உரிமையை இழந்தனர் என்பதும் நினைவுக் கூரத்தக்கது.

    1)            குழந்தைமணம்
    2)            கொடுமை
    3)            விதவைத் துயர்
    4)            உடன்கட்டை ஏறுதல்
    5)            பலதாரமணம்
    6)            பிற மூடப் பழக்கங்கள்
    7)            குழந்தைப்பேறு இன்மை பிற

    மேற்கண்ட கொடுமைகள் எல்லாம் உடைத் தெரிந்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றிக் கண்டு வரும் வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.

    தற்காலச் சமூகம்

                    இன்னும் பிறந்தக் குழந்தை பெண் என்பதால் முயற்சியில்லா மூடர்கள் சலிப்பும் வெறுப்பும் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். மேலும் காலங்காலமாய்ப் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இவற்றிற்குக் கடுமையான சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். பழக்க வழக்கங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் கலந்து போன ‘இன்டர்நெட்’ அறிவியல் வளர்ச்சி என்பதில் ஆபாசத்தை உட்படுத்துவது நாட்டுப் பண்பாட்டை முற்றிலும் அழித்து வருவதை பெண்கள் (இளைஞர்கள்) உணர்ந்து நடக்க வேண்டும்.

                    பெண்கள் மதிப்பும், மரியாதையும் உரிய தொழில்களைத் தேர்வு செய்து பணியாற்றிட வேண்டும். கலைத்துறை, உழைப்பு, பணியகம் இவற்றில் உடலியல் சார்ந்த அநீதிகள் தவிர்க்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘சாதீயம்’என்ற ‘தீ’ அழிக்கப்பட வேண்டும். அது எரியும் வரைச் சமுதாயமும் எரிந்து கொண்டிருக்கும்.

                    ஆண். பெண்ணின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் என்றென்றும் வழிவகை செய்ய வேண்டும்.  பத்துமாதம் சுமந்து பெற்ற ஒப்பற்ற தெய்வம் ‘தாய் ’ ஒரு பெண்தானே என்பதை உணர்ந்து அனைவரும் வாழச் சமுதாயம் வளரும்.

    Share
  • நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.

    Posted on August 5, 2017

     

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து
    நாசாவின் விண்வெளிக் கப்பல்
    இரண்டு
    பரிதி மண்ட லத்தின்
    விளிம்பு அரணைக் கடந்து
    தொடர்ந்து முன்னேகும் !
    பக்கத்து விண்மீன் மண்டலத்தில்
    பாய்ந்து நுழையும்  !
    நேர்கோட் டமைப்பில் வந்த
    சூரியனின்
    வெளிப்புறக் கோள்களை
    விண்கப்பல்கள்
    ஆழ்ந்து உளவுகள் செய்யும் !
    நெப்டியூனின் நிலவை,
    கருந் தேமலை,
    பெரும் புயலைக் காணும் !
    நாலாண்டு திட்டப் பயணம்
    நீள்கிறது
    நாற்பது ஆண்டுகளாய் !
    அடுத்த பரிதி மண்டலத்தின் எல்லையில்
    அன்னிய கோள்களுக்கு
    சின்னமாய் எடுத்துச் சென்று, நமது
    ஞாலக் கதை சொல்லும்
    காலச் சிமிழ் !

    +++++++++++++++++

    கடந்த 40 ஆண்டு கால நாசா விண்வெளிக் குறிப்பணிகளில் வாயேஜர் விண்கப்பல் பயணத்தைப் போல் இயங்கிய ஒப்பில்லா விண்வெளித் தேடல் வேறெதுவும் இல்லை.  அவற்றால் நமது பிரபஞ்சத்தின் தெரியாத அற்புதங்களை அறிந்து கொண்ட தோடு, சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளதையும் இப்போது காண வாய்ப்புக் கிடைத்துள்ளது.

    தாமஸ் சுர்புசென் [NASA Science Mission Associate Administrator]

    நாசாவின் நெடுந்தூர, நீண்ட காலப் பயண விண்கப்பல்கள்

    1977 ஆகஸ்டு / செப்டம்பரில் ஏவப்பட்ட வாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து பயணம் செய்து, சூரியப் புறக்கோள்கள் பூதக்கோள் வியாழன், வளையக் கோள் சனி,  வாயுக்கோள் யுரேனஸ், நெப்டியூன் கடந்து, சூரிய குடும்ப எல்லை தாண்டி, இப்போது  அடுத்த சூரிய மண்டல விளிம்பைத் தொட்டிருக்கின்றன.  வாயேஜர் -1 தற்போது பூமியிலிருந்து 13 பில்லியன் மைல் தூரத்தில் பறந்து கொண்டுள்ளது.  மேலும் வாயேஜர் -1 விண்கப்பல் நமது புவிச்சின்னமாய் வட்டக் காலச்சிமிழ் [Circular Time Capsule] ஒன்றைத் தூக்கிச் செல்கிறது.

    வாயேஜர் 1 & 2 விண்கப்பல்கள் கண்டுபிடித்தவை என்ன ? பூமிக்கு அப்பால் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” [Lo] கொண்டுள்ள  பொங்கும் முதல் எரிமலை ! வியாழன் துணைக்கோள் “ஈரோப்பா” [Europa] கொண்டுள்ள உட்தளக் கடல் ! சனிக்கோளின் துணைக்கோள் “டைடான்” பூமியைப் போல் இருப்பது.  புறக்கோள் யுரேனஸில் பனிக்கோள் மிராண்டா [Miranda] துணைக்கோளாய் இருப்பது.  புறக்கோள் நெப்டியூனில் பனிநீர் எழுச்சிகள் பற்பல துணைக்கோள் டிரைடான் [Triton] கொண்டிருப்பது.  பூமிக்குப் 13 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -1 அண்டவெளியில் அகிலக் கதிர்கள், அணுக்கருக்கள் ஒளிவேகத்துக்கு ஒட்டிய விரைவில், ஓடுவதைக் கண்டுள்ளது.

    பூமிக்குப் 11 பில்லியன் மைல் தூரத்தில் செல்லும் வாயேஜர் -2 சூரிய மண்டல விளிம்பில் மின்னியல் துகள்கள், காந்த தளங்கள், தணிவு -அதிர்வு ரேடியோ அலைகள், சூரியப் புயல் ஒளிப்பிழம்பு [Solar Wind Plasma] ஆகியவற்றின் பரிமாணத்தை அறியும் கருவிகளைக் கொண்டுள்ளது.  நெடுந்தூரம், நீண்ட காலம் பயணம் செய்ய வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களை இயக்குவது  புளுடோனியம் -238 அணுக்கருசக்தி ஓட்டும் தனித்தனி மூன்று கதிர்மூல வெப்ப-மின்சக்தி ஜனனிகள் [ Plutonium -238 Radio-isotope thermoelectric Generators] அதன் அணுசக்தி ஆற்றல் 88 ஆண்டுகளில் பாதி அளவு குறையும்.  அதன் கடைசிக் கருவி 2030 ஆம் ஆண்டில் நிறுத்தம் அடையும்.  ஆயினும்  30,000 mph [48280  kmh] வேகத்தில் பயணம் செய்யும் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்  தொடர்ந்து பல ஆண்டுகள் பறந்து செல்லும். அவற்றின் மங்கிய சிக்னல்களைத் தேடி உள்வாங்கும் ரேடார் தட்டுகள் : நாசாவின் 230 அடி அகல ரேடார் தட்டு; அமெரிக்க நியூ மெக்ஸிகோ தேசிய வானியல் நோக்ககத் தட்டு;  ஆஸ்தி ரேலியாவின் பார்க்ஸ் வானியல் நோக்கத் தட்டு; ஜப்பானின் உசுடா ஆழ் விண்வெளி  நோக்கு மையத் தட்டு.

    “இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012].  விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”

    ராபர்ட் டெக்கர் [John Hopkins University in Maryland]

    சூரிய மண்டலத்தைப் பற்றிய மகத்தான முக்கிய தகவலை  வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.

    ரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

    எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

    “பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

    ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)


    “வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

    ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

    “வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

    டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

    நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நாசா வெளியிட்ட அறிக்கை

    புதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்

    35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது.  இது நாசா விஞ்ஞானி களின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது.   10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன.   சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது.  இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன.   அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.

    2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ]  தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது.   இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது.  இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம்  [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது.   அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.

    இரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries].  அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.

    நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

    2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.

    ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

    வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது.  அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.

    இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

    வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

    புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

    1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !

    மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

    வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

    பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

    வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

    வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

    கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

    இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.

    ———————–

     

    *************************

    படங்கள்:  BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  Space Travel :   Mankind’s Messenger [Voyager 1 & 2]  at the Solar System  Frontier  [September 5, 2012]

    8.  http://en.wikipedia.org/wiki/Voyager_1   [September 8, 2012]

    9.  http://www.history.com/news/6-fascinating-facts-about-space-probe-voyager-1  [September 5, 2012]

    10.  http://voyager.jpl.nasa.gov/mission/interstellar.html  [Interstellar Mission]

    11.  http://www.nasa.gov/vision/universe/solarsystem/voyager_agu.html

    12.  https://en.wikipedia.org/wiki/Voyager_program  [February 9, 2016]

    13.  https://en.wikipedia.org/wiki/Voyager_1 [July 31, 2017]

    14. http://www.spacedaily.com/reports/Voyager_spacecraft_still_in_communication_40_years_out_into_the_void_999.html [August 1, 2017]

    15.http://www.spacedaily.com/reports/Two_Voyagers_Taught_Us_How_to_Listen_to_Space_999.html  [August 3, 2017]

    16.  https://en.wikipedia.org/wiki/Voyager_2 [August 4, 2017]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) August 5, 2017 [R-2]

    Attachments area

    Preview YouTube video NASA’s Voyager 1 is in Interstellar Space

    NASA’s Voyager 1 is in Interstellar Space
    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழா (2017)

     

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    INVITATION

    MSP-BOOK-2017-WRAPPER

    Share
  • ’யங் இந்தியா’!!

    பவள சங்கரி

    HATS OFF ‘YOUNG INDIA’ GUYS!!

    IMG_20170805_153535289

    IMG_20170805_153559378

    IMG_20170805_153648727

    ‘யங் இந்தியா’ என்ற அமைப்பினர் ஈரோடு நகரை அழகுபடுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த அமைப்பில் இளைஞர்கள் , ஓவியர்கள், மாணவர்கள் , படித்த இளம் குடும்பப்பெண்கள் என்று இளைய சமுதாயமே நகரை அழகுபடுத்த முனைந்துள்ளனர்! நேற்று ஈரோடு இரயில்வே காலனி வழியாக சென்றபோது அங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விசயம், இவர்களில் ஒருவருமே தங்கள் பெயரைச் சொல்ல விரும்பாமல், ‘நாங்கள் யங் இந்தியா உறுப்பினர்கள் என்று சொல்லுங்கள் போதும்’ என்று சொன்னதுதான்! தற்பெருமை நாடாத, நல்வழிகாட்டும் இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    Share
  • ஹிரோஷிமா அணு ஆயுத அழிவுநாள் நினைவு [August 6th 1945]

    அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

    Image result for hiroshima japan

    சி. ஜெயபாரதன், கனடா

    பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து விழுதற்றுப் போக,
    விதையும் பழுதாக
    ஹிரோஷிமா எழில்மேனி அழித்து
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு!
    நாகசாகியும் அணுப் பேரிடியால்
    நாசமாகி
    மட்டமாக்கப் பட்டது!
    திட்ட மின்றி
    தென்னாலி ராமன் போல்
    மூடர்கள் அணு உலையைச்
    சூடாக்கி
    வெடிப்புச் சோதனை அரங்கேறி
    நிர்வாண மானது,
    செர்நோபில் அணு உலை !

    மாய்ந்தனர் மக்கள்,
    மடிகிறார் !
    மேலும் மரிப்பார் ! மரிப்பார்!
    நாடு நகரம்
    வீடு வயல்கள் எங்கும்
    மூடின வெங்கதிர் வீச்சுகள்!
    கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
    கடத்தப் பட்டார் வேறூர்
    கைப்பையுடன்
    கதிர்மழைப் பொழிவால்!
    புற்று நோயும், இரத்த நோயும்
    பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
    மன்னிக்க முடியாத,
    மாபெரும்
    மனிதத் தவறால் நேர்ந்த
    இரண்டாம்
    அணுயுகப் பிரளய
    அரங்கேற்றம் !

    ++++++++++++

    the-crying-soul

    [செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
    பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (1)
    “ஜராவேடன் அம்பால் ஜனார்த்தனன் மீண்டும்
    அராவணை செல்லல் அறிந்த -கராம்பசு;
    கோவிந்தன் காலுற்ற காலன்தன் கையெழுத்தை
    ஆவின்தன் நாவால் அழிப்பு”….

    (OR )…. ….-காராம்பசு
    வாசவன்தன் காலின் வலியை விலக்குதோ
    கேசவன் ப்ரஷாய் குவிந்து”…..கிரேசி மோகன்….!

    “நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
    வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
    மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
    நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!

     

    Share
  • ’’வெண்பூ வெண்பாக்கள்’’….!

     

    ’’வரலஷ்மி விரதம் ஆச்சு…அடுத்து வரவீணா நமஸ்துப்யம்’’….!
    ———————————————————————————————————————
    நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(1)

    நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(2)

    ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(3)

    வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(4)

    பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருள வா’’….(5)

    தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(6)….கிரேசி மோகன்…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    FullSizeRender

    ———————————————————–

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவ(து) எதற்கு….!

    அகந்தை இறக்குமங்(கு) ஆன்மா பிறக்கும்
    புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும் -மகிழ்ந்திருப்போம்
    ஆரா அமுதத்தில் ஆனந்த சாகரத்தில்
    நாரா யணஓம் நம….!
    நமநம என்றவனை நச்சரிப்பாய் நாமம்
    கமகமக்கும் நாவால் கணமும் -எமனெதிர்
    வந்தாலும் அச்சமின்றி நந்தமகன் அச்சுதன்
    சொந்தம் நமக்கென்று சொல்….

    கொட்டுது தேளின் கொடுக்காய்ப் புலனைந்தும்
    பட்டது போதும் பரந்தாமா -சட்டென
    வந்தெனக்குச் சத்துவ வாழ்வை அளித்திடுவாய்
    நந்தலாலா இந்தநாளே நீ….!

    நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
    தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
    வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
    அப்பனே ஆரா அமுது….!

    அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்

    Share
  • ‘’படமும் பாடலும்’’….!

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    ”மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
    வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
    பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
    தோள்தழுவும் பூவான தே”….கிரேசி மோகன்….!

    Share