Blog

  • எல்லாமே தப்புதான்

    ரா.பார்த்தசாரதி

     

    தெரிந்தே  குப்பையை  தெருவில்  போடுகிறாய் !

    குப்பையை தொட்டியில் போடவேண்டும் என அறிந்திருப்பாய் !

    வீட்டைப்  பெருக்கி  குப்பையை தெருவில் போடுகின்றாய் !

    குப்பை தொட்டி இருந்தும், தொட்டியின் பக்கத்தில் போடுகின்றாய் !

     

    பிளாஸ்டிக் கழிவையும், மிச்ச மீதிகளையும் வீதிக் கால்வாயில் போடுகின்றாய்

    கழிப்பறையிலும் , சாக்கடையிலும் போட்டு தண்ணீர்  ஊற்றிவிடுகின்றாய் ,

    கட்டிட இடி பாடுகளை கொட்டி, தண்ணீர்  வாராமல் வீட்டை மேடாக்குகிறாய்

    சுயநலத்துடன் உன் வீட்டை  தண்ணீர் புகாமல்  தற்காத்துக் கொள்கின்றாய் !

     

    ஏரி ,ஆறு, குளங்களை ஆக்கிரமித்து பிளாட் போடுகிறோம்,

    பள்ளமான இடத்தில்  கட்டிடங்கள்  கட்டிக்கொள்கின்றோம்,

    விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும், இலஞ்சத்திற்கும் துணை போகிறோம் !

    அதிகாரத்திற்கும்  அரசியல்வாதிகளுக்கும் அடி பணிகின்றோம் !

     

    வெள்ளம்  வந்தபோதுதான்  நமது  இடத்தின் நிலைமை உணர்ந்தோம்,

    எல்லா பொருட்களை  இழந்து   நடுதெருவில்  நின்றதை அறிந்தோம்,

    சாக்கடை நீரும், குடிநீரும் கலந்து  மக்களுக்கு ஊறு விளைவித்ததே,

    அரசாங்கமும், மருத்துவ முகாம்  மூலம்  துன்பங்களை தீர்த்ததே !

     

    மக்கள் பட்ட  கஷ்டங்களை  எல்லோரும்  அறிவர்

    சிறு தொகை  கொடுத்து மக்களை திருப்தி படுத்தினர் ,

    சிறுதொகை அளித்ததால்   இழந்ததை மறந்தனர் ,

    பெற்றும், நம் அரசாங்கத்தையும்,அரசியலையும்,குறை கூறினர்!

     

    வரும் தேர்தலுக்கா,    மக்களின்  நல்வாழ்விற்கா

    இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதா !

    எதனையும்  திட்ட மிட்டு செய்வது   நல்லதே

    திட்டம் இல்லாமல் எதையும்  அரசாங்கம் செய்யாதே !

     

    நமக்கு தெரிந்தது  எல்லாம்  பணம் கொடுத்தால் மகிழ்ச்சி

    இல்லாவிடின்  அரசாங்கத்தையும், அரசியலையும் இகழ்கின்றோம்

    ஊழலுக்கும்  இலஞ்சத்திற்கும்  துணை  போகிறோம்

    என்றுமே உணர்வதில்லை  எல்லாமே  தப்புதான் என்று.!

     

     

    Share
  • பசிப்பிணி மருத்துவம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ”பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா” என்று பாட்டெழுதி வறுமையின் கொடுமையை உருக்கமாய் உலகுக்கு உணர்த்தினார் கவியரசு கண்ணதாசன். வறுமை இளமையில் மட்டுமா கொடுமை? இல்லை… முதுமையிலும் அது கொடுமைதான். ஏன் எந்தப் பருவத்தில் வறுமை வந்தாலும் அது கொடுமைதான்…அவ்வாழ்வே வெறுமைதான்!

    பசிவரப் பத்தும் பறந்திடும் என்கிறாரே கவிஞர்…அவை எவை?

    “மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
    தானந்
    தவம்உயர்ச்சி தாளாண்மை தேனின்
    கசிவந்த
    சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்
    திடப்பறந்து போம்”

    மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, தானம், தவம், உயர்வு, தொழில்முயற்சி, தேன்மொழி பேசும் பெண்கள்மீது வருங் காதல் ஆகியவையே அப்பத்து. இவ்விவரத்தை நமக்குத் தருவது ஔவையின் ’நல்வழி.’  வறுமை வந்தால் இப்பத்துக்குமே வந்திடும் ஆபத்து!

    காரிகையர் மீது வரும் காதலைக் கூடப் பொசுக்கிவிடக் கூடியது பற்றியெரியும் பசித்தீ என்பது பசியின் வீரியத்தைப் பாருக்கு உணர்த்துகின்றது.

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
    நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
    பசிப்பிணி எனும் பாவி”
    என்று பசியின் கொடுமையை உணர்த்தி, அதனைப் பாவி என்று ஏசுகின்றது மணிமேகலைக் காப்பியம். ’இன்மை என ஒரு பாவி’ என்று ஏற்கனவே வள்ளுவர் வறுமையைச் சாடியிருப்பது நாமறிந்ததே. அதைத்தான் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சற்றே மாற்றிப் பசிப்பிணி எனும் பாவி என்கிறார்.

    பிணியென்று வந்துவிட்டால் அதற்கு மருத்துவம் தேவையல்லவா?

    பசிப்பிணிக்கு மருத்துவம் அப்பிணியால் பீடிக்கப்பட்டு வாடுவோர்க்கு, வருந்துவோர்க்கு வயிறார உணவளிப்பதே.

    வந்தோர்க்கெல்லாம் வரையாது உணவளித்த வள்ளல் ஒருவனைப் ’பசிப்பிணி மருத்துவன்’ என்று புறநானூற்றுப் புலவரொருவர் புகழ்ந்துரைக்கின்றார். அவர் சாமானியர் அல்லர்; சோணாட்டு வேந்தராகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனும் அரசப் புலவர் அவர்!

    யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
    பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை
    யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
    ஊணொலி அரவந் தானுங் கேட்கும்
    பொய்யா எழிலி பெய்விட நோக்கி
    முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
    சோறுடைக் கையர் வீறுவீ று இயங்கும்
    இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
    மற்றும்
    மற்றும் வினவுதுந் தெற்றெனப்
    பசிப்பிணி
    மருத்துவன் இல்லம்
    அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம் – 173: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) 

    ”என் வாழ்நாளையும் பெற்று நீ வாழ்க” என்று சிறுகுடிகிழான் பண்ணனை வாழ்த்தியபடிச் செல்கின்ற பாணர்களே! இதோ என்னருகில் நிற்கும் இந்தப் பாணர்களின் வறுமையை நோக்குங்கள். பழுமரத்தில் பறவைகள் ஆரவாரிப்பதுபோல் ஊணொலி அரவம் எங்கும் கேட்கின்றது. தப்பாது மழை பெய்யுங் காலம்நோக்கித் தம் முட்டைகளைச் சுமந்தவாறு மேட்டுநிலத்தை நோக்கி நகரும் சிற்றெறும்புகளின் வரிசையொழுங்குபோலச் சோறுடைய கையராய்த் தம் சுற்றத்தோடும் சிறுபிள்ளைகளோடும் செல்வோரைக் காண்கின்றபோதும் எம் பசிவருத்தத்தால் மீண்டும் மீண்டும் உம்மைக் கேட்கிறோம்… “பசிப்பிணி மருத்துவன் (சிறுகுடிகிழான் பண்ணன்) இல்லம் பக்கமா… தூரமா… எமக்குக் கூறுங்கள்?” என்று தன்னை ஓர் இரவலனாய் உருவகித்துக் கிள்ளிவளவனே பாடிய அற்புதப் பாடலிது.

    அவனால் பசிப்பிணி மருத்துவனாய்ப் பாராட்டப்பெற்றுத் தனக்குரிய வாழ்நாளும் பெற்று வாழ்க என்று வாழ்த்தப்பெறுபவன் சிறுகுடி எனும் சோழநாட்டுச் சிற்றூரில் வசித்துவந்த பண்ணன் எனும் நிலக்கிழான். அரசனையே (அவனினும் எளிய) ஓர்  நிலக்கிழானின் கொடைத்தன்மை பெரிதும் கவர்ந்து, அவன்பால் அன்புகொள்ள வைக்கின்றதென்றால் அக்கிழானின் வண்மை உண்மையிலேயே போற்றத்தக்கதுதான்!   

    மன்பதையில் வாழும் மக்கள் யாக்கை உணவின் பிண்டமே ஆகும். ஆதலால் உண்டிகொடுத்தோர் மானுடர்க்கு உயிர்கொடுத்தோரே ஆவர். மாதவிமகள் மணிமேகலை வற்றாது சுரக்கும் அமுதசுரபி எனும் அட்சய பாத்திரங்கொண்டு பசியால் வாடுவோர்க்கெல்லாம் வரையாது உணவூட்டி அறச்செல்வியாய்த் திகழ்ந்தாள்; புகார்நகரச் சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாய் மாற்றினாள் என்று அவள்புகழ் பாடுகின்றது மணிமேகலைக் காப்பியம்.

    வளமையுடையோர் இருப்பதுபோலவே வறுமையுடையோரும் வையத்தில் என்றும் இருக்கவே செய்கின்றனர். எல்லாரும் சமநிலை எய்துந்தன்மை ஏட்டளவிலும் பாட்டளவிலுமே இன்றுவரைச் சாத்தியமாகியிருக்கின்றது; நாட்டளவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. ஆதலால், தம் செய்வினைப் பயனால் வளமையும் வசதியும் வாய்க்கப்பெற்றோர், வறுமையாளரின் இன்மையைப் போக்குதற்கும் அவர்வாழ்வின் புன்மையை நீக்குதற்கும் தம் செல்வத்தின் சிறுபகுதியையேனும் பயன்படுத்துதல் வேண்டும். ’செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது சான்றோர் நன்மொழியன்றோ!

     

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

    unnamed (2)

     

     

     

     

     

     

     

     

     

     

     

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

     

    [61]

    மேதையர், சித்தர்கள் போதிக்கட்டும்

    விரும்பு வதையோ, விரும்பாத வற்றையோ;

    அறுந்து போகா, முறியா, அப்பால் தாண்டா

    நிரந்தரத் தொடர்பில் சேரும் இணைப்பு தவிர.

     

    [61]

    For let Philosopher and Doctor preach

    Of what they will, and what they will not – each

    Is but one Link in an eternal Chain

    That none can slip, nor break, nor over-reach.

     

    [62]

    வானம் என்னும் கவிழ்த்திய கும்பாவின்

    கீழே நாம் கூடி வாழ்கிறோம், சாகிறோம்,

    கை உயர்த்தி உதவிக்கதை அழைக்காதே,

    நீயோ நானோ என்றுருளும் மலட்டுத் தனத்தில்.

     

    [62]

    And that inverted Bowl we call The Sky,

    Whereunder crawling coop’t we live and die,

    Lift not thy hands to it for help – for It

    Rolls impotently on as Thou or I.

     

    [63]

    புவிமுதற் களிமண்ணால் இறுதி மனிதன் வடித்து

    கடைசி அறுவடைக்குப் பின் விதை விதைத்தார்;

    ஆம் முதல்நாள் புலர்ச்சி படைத்தோன் எழுதியது

    கடந்த காலப் பொழுது கணக்கில் இருப்பதை.

     

    [63]

    With Earth’s first Clay They did the Last Man knead,

    And then of the Last Harvest sow’d the Seed:

    Yea, the first Morning of Creation wrote

    What the Last Dawn of Reckoning shall read.

     

    Share
  • எழுத்து -3

    வேதா.இலங்காதிலகம்

     

     

    12987089_1002193306538808_7990803277388296981_n

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    எழுத்து வார்த்தை ஒரு மந்திரம்.

    அழுத்தி வரலாறு படைக்கும் சுந்தரம் (நன்மை)

    அழுக்கின்றி நீரின் மேலும் வானத்திலும்

    முழுக்கவென் தலை மேலும் சுற்றுகிறது.

    விழுந்திடாத வண்ணத்துப் பூச்சிச் சிறகசைவு.

    எழும் இரகசியக் கனவின் பெருக்கம்.

    விழுந்து பொங்கி நனைக்கும் நீரூற்று.

    வழுதில்லா மலரின் மலர்வு எழுத்து.

     

    என்னிலிருந்து பிறக்கும் எழுத்து விதை

    மின்னும்! உலகெங்கும்  பறவையாய் பரவும்!

    அன்னியக் காடு, அமைதி வெளி,

    சின்னக் கற்பாறை, சதுப்பு நிலமென

    என்னவொரு வித்தியாசமின்றிப்  பாரெலாம் பரவுகிறது.

    இன்னலற்ற காற்றாக இறுக்கம்  இன்றி

    இன்னமுத அன்பாக என்றும் ஊடாடுகிறது.

    என்னை வெகு சுதந்திரமாக ஆக்குகிறது.

     

    கன்னல் கரும்பென நானெண்ணும் எழுத்து

    என் புலன் உயிரிற்குள் புகுந்தது.

    கன்னங்கரு இரவிலும் வெள்ளி  தங்கமாய்

    மின்னும் பகலிலும் குமிழ்களாய் எழுகிறது.

    என்னெழுத்தின் கவர்ச்சியில் நானே மயங்குவேன்.

    சின்ன அகக்காயமும் வானவில்லான எழுத்தாகும்.

    வன்னிகை (எழுதுகோல்) சுமையல்ல, சுகமான சுமை

    வன்னம் (தங்கம்) எழுத்திற்கு பரிசு புகழுண்டு.

     

    வின்னியாசம் (பேச்சுத் திறமை)எழுத்தால் தானே நிறைவுறும்.

    பொன்னிலவொளி நிறையும் முற்றமாய் எழுத்து

    மென்னகையோடு கைபிடித்துலவும் உலக நடைபாதையில்.

    என் கவிக்  கதிரின்  பிரகாசம்

    அன்வயமாய் (இயைபு) நாளும் மக்களோடு கரையட்டும்.

    அன்பித்துக் கனவுகளைக் கைத்தடியாக எழுப்பட்டும்.

    இன்பித்துத் துணிவை  ஏற்றட்டும்  எழுத்து.

    உன்னதமாயாடும் மயிலின் நடனம் எழுத்து.

     

     

     

    Share
  • பிரளயப் பிளவுப் பாறைகள்

    -காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

     

    பிரளயப் பிளவுப் பாறைகள்

     

    2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டிய நாட்டைத் தாக்கியுள்ளன.  அந்நிகழ்ச்சியைப் திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுகிறது.

    சுனாமி பற்றிக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    kalai1

    ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில் வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன.

    அந்தமான் நிக்கோபார் நிலப்பரப்பை ஒட்டிப் பெரும் நிலத்திட்டுகள் இருந்துள்ளன. இப் பெரும் நிலத்திட்டுகள் அவற்றின்  நிலையிலிருந்து புரள்கின்றன.  இவ்வாறு நிலத்திட்டுகள் புரள்வதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம்.  அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் பிரளயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் பெரும் நிலநடுக்கங்கள் உண்டாகியுள்ளன.  இந்த நிலநடுக்கம் மதுரை உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கங்களினால் பாறைகள் பிளவுபட்டுள்ளன.  இவ்வாறு பாறைகள் பிளவுபட்ட காரணத்தினால், இந்தப் பாறைகளிடையே பெரும் சந்துகள் (இடைவெளிகள்) உருவாகி இருக்கின்றன.

    இங்கே பெரும் நிலநடுக்கத்தால் பாறைகள் பிளவுபட்டுப் பாறைகளிடையே பெருஞ்சந்துகள் உருவாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அந்தமான் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்ட பிரயத்தைத் தொடர்ந்து பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகியுள்ளது.  அந்த பெருஞ் சுனாமியானது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பர்மா, இந்தோனேசியா முதலான  நாட்டு நிலப்பரப்புகளையும், மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியாவையும் தாக்கி அழித்துள்ளது.

    பிரளயத்தினால் ஏற்பட்ட பெரும் கடல்வெள்ளம் கரையைக் கடந்து தமிழகத்தைத் தாக்கும் போது, கடல்நீரால் அடித்துவரப்பட்ட கழிவுகள் எல்லாம் ஒன்று திரண்டு மாபெரும் கழிவுவெள்ளம் ஒன்று தோன்றிச் சுனாமி அலைகளுக்கு முன்னே வருகின்றது.  இந்தக் கழிவுவெள்ளமானது முன்னர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருந்த பெரும் சந்துகளில் சென்று சேர்ந்து அடைக்கிறது.

    kalai2

    பெரும் நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட, பிளவுபட்ட பாறைகளுக்கு இடையே சுனாமியின் கழிவுகள் சென்று சேர்ந்து பிளவுகளை அடைத்துள்ளன.  காலப்போக்கில் இவ்வாறு சுனாமிக் கழிவுகளும் பாறைகளுடன் இறுகிப் பாறைகளாக மாறிவிடுகின்றன.

    பாறைகளுக்கு இடையே மண்புதைந்த இந்த நிகழ்ச்சியை “மண்புதைக்க, திசைபுதைக்க …. “ கடல்வெள்ளம் வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

    திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளபடி, பிளவுபட்ட பாறைகளிடையே மண்புதைந்து கிடக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதைத் தமிழகத்தில் பழனி அருகே விருப்பாச்சி என்ற இடத்தில் நன்கு காணும்படியாக உள்ளது.

    இதைப் போன்று, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரமாநிலத்திலும் பிரளயத்தினால் பிளவு பட்டு மண்புதைந்து கிடைக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்”  இருப்பதை நன்கு காணமுடிகிறது.

    புராணங்கள் எல்லாம் பொய் எனப் பலரும் கூறிவரும் இந்நாட்களில், புராணத்தில் பாடப்பெற்றுள்ள பாடல் வரிகளுக்குப் பொருள்கூறும் வகையிலான “பிரளயப் பிளவுப் பாறைகள் பல தமிழகத்திலும் ஆந்திராவிலும் காணக்கிடைக்கின்றன..

    கொடைக்கானல் மலையில் “குணா குகை” என்று அழைக்கப்படும் பாறைப்பிளவும் பிரளய காலத்தில் உண்டான மாபெரும் நிலநடுக்கத்தில் தோன்றியதாக இருக்குமோ?

    (குறிப்பு – கட்டுரையாளரின் இந்தக் கருத்து அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்)

    கொதித்து எழுந்து தருக்கள் அறக் கொத்தி எடுத்து எத்திசையும்
    அதிர்த்து எறிந்து வகைள் எல்லாம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
    பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
    உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல் (திருவிளையாடல் புராணம்  1299. 

    மண் புதைக்கத் திசைபுதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம்
    விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
    கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
    பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா (திருவிளையாடல் புராணம் 1302)

    நிவப்பு உற  எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
    உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
    சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத்
    தெளிந்தோர் ஏழு பவப் பெரும் பௌவம் போலப்
    பசைஅற  வறந்தது அன்றே (திருவிளையாடல் புராணம் 1305)

     

     

     

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா – 16

    -சி. ஜெயபாரதன்

    cleo1

    அங்கம் -2 பாகம் -15

    “எவனொருவன் உன்னதக் களிப்பினை கவிதையின் உணர்வுகளிலிருந்து  கவர்ச்சி செய்கின்றானோ,  அவனே உண்மையான கவிஞனாகக் கருதப் படுகிறான், ஒருவரிக் கவிதை எழாதா விட்டாலும் கூட!”

    ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

    ஒவ்வொரு பளிங்குப் பாறைத் துண்டிலும் எனக்கு நேர் எதிராகத் தோன்றும் வடிவம் ஒன்று உருவாகி முழுமையுடன் நடமாடுவதைக் காண்கிறேன். வெளிச்சுவரை உடைத்துச் சிறையினில் அடைபட்டிருக்கும் அந்த வடிவத்தை வெளியேற்ற, என் மனக்கண் கண்டு துடிப்பது போல் மற்றவரும் காணும்படிச் செய்வதே எனது படைப்புப் பணியாகும்.

    மைக்கேலாஞ்சலோ [1474-1564]

    இயற்கை படைத்துள்ளதைப் போன்று எளிமையாக, நளினமாக, நேரிடையாக எதிலும் ஒன்று குறையாமலும், ஒன்று கூடாமலும், கூரிய அறிவுள்ள மனிதன் ஒருபோதும் ஆக்க முடியாது!

    லியானார்டோ டவின்ஸி [1452-1519]

    எடுத்து வா எனது மஸ்லீன் அங்கியை!
    சூட்டி விடு எனது கிரீடத்தை!
    தெய்வீக வேட்கை எழுகிறது என்னுள்!
    என் உதடுகளை நனைக்கா தினிமேல்,
    எகிப்தின் இனிய திராட்சைப் பழரசம்!
    அதோ! அதோ! அருமை ஐராஸ், சீக்கிரம்! …
    விடை பெறுகிறேன், நீண்ட விடுமுறைக்கு! …

    (கிளியோபாத்ரா)

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

    நேரம், இடம்:

    அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். ரோமனியக் காவலர். அரசியாக அலங்கரிக்கப் பட்டு, ராஜ கிரீடத்தை அணிந்து கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் ராணுவத் தளபதி உடுப்பணிந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

    cleo2

    காட்சி அமைப்பு:  

    [கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிந்து, கிளியோபாத்ராவின் கோபத்தைத் தூண்டி விடுகிறது. டாலமியும், அவனது போர் அதிகாரிகளும் கொல்லப் பட்ட பிறகு சீஸரின் பாதுகாப்புடன், கிளியோபாத்ரா எகிப்தின் ஏக போக அரசியாய் முடிசூட்டிக் கொள்கிறாள்.]

    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் வலது கையைப் பற்றி முத்தமிட்டு] கண்மணி கிளியோபாத்ரா! உனது முடிசூட்டு விழா சிறப்பாக முடிந்தது. நீ எகிப்தின் ஏகாந்த, இணையற்ற அரசி! உனக்குப் போட்டியான உன் தனையன் டாலமி நைல் நதியில் மூழ்கிப் போனான்! எதிரிகள் உனக்கில்லை இப்போது! உன்னை அரசியாக்க வேண்டும் என்ற எனது பொறுப்பு முடிந்தது. ரோம சாம்ராஜியத்துக்கு எகிப்து நாடு அடிமை நாடாயினும், ஆண் வாரிசை எனக்கு அளிக்கப் போகும் நீ ஓர் அடிமை அரசி யில்லை! ஜூலியஸ் சீஸரின் மனைவி மதிப்பைப் பெற்றவள் நீ! ஆம் எனது இரண்டாம் மனைவி நீ! கூடிய சீக்கிரம் ரோமுக்குப் போகும் நான் உன்னையும் கூட்டிச் செல்வேன்! எனக்குக் கிடைக்கும் மதிப்பும், சமூக உயர்வு நிலையும் உனக்கும் கிடைக்கும்.

    கிளியோபாத்ரா: [முக மலர்ச்சியுடன்] மாண்புமிகு சீஸர் அவர்களே! கிளியோபாத்ராவின் கனவை நிறைவேற்றினீர்! எகிப்தின் வரலாற்றை மாற்றினீர்! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவள்! உங்கள் எல்லையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் கட்டுப் பட்டவள்! ·பாரோ மன்னர்களின் ராஜ பரம்பரைத் தகுதி எனக்குக் கிடைக்க வாய்ப்பளித்து, வல்லமை அளித்து, பக்கத்தில் பாதுகாப்பு அரணாக நிற்பவர். ஒப்பற்ற சீஸரை, எனக்கு உயிரளித்த சீஸரை, ஆட்சி உரிமை தந்த சீஸரை, என்னை ராணியாய் உயர்த்திய சீஸரை என்னுயிர் நீங்கும் வரை மறக்க மாட்டேன்! உங்களை என் உடமை ஆக்கி, என் உறவாளி ஆக்கி, என் ஆண்மகவுக்குத் தந்தை என்னும் வெகுமதி அளிக்கிறேன் என் கைமாறாக!

    ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ரா தோள்களைப் பற்றிக் கொண்டு கனிவுடன்] கிளியோபாத்ரா! உன்னைப் போன்ற அறிவும், வீரமும் கொண்ட பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! உன்னைப் போன்ற எழில் மிக்க மங்கையை நான் எங்கும் சந்தித்த தில்லை! நெஞ்சு உறுதியும், எடுப்பான நடையும், மிடுக்கான சொல்லும், நாக்கில் நளினமும் பெற்ற நங்கையை என் கண்கள் எங்கும் கண்ட தில்லை! [கிளியோபாத்ரா சீஸரைப் பாசமுடன் அணைத்துக் கொள்கிறாள்]

    கிளியோபாத்ரா: [சீஸரை ஊன்றி நோக்கி] உங்கள் மார்பு பரந்தது; அதை விட உங்கள் மனம் விரிந்தது! அந்த எ·கு மனத்தை நான் பற்ற முடிந்தது எனக்குப் பூரிப்பளிக்கிறது. உங்கள் தோள் உயர்ந்தது; அதை விட உங்கள் உள்ளம் உன்னத மானது! அந்த உள்ளத்தில் நான் குடியேறியது எனக்குக் குளிர்ச்சி அளிக்கிறது! .. ஆனால் உங்கள் ரோமானிப் போர்த் தளபதிகள் பொல்லாதவர்! எனது முடிசூட்டு விழாவின் போது விஜயம் செய்த எல்லா மன்னர்களும் மண்டி யிட்டபோது, அவர்கள் மட்டும் நின்று விழித்துக் கொண்டு என்னை அவமானப் படுத்தினர்! என்ன அகங்காரம் அவருக்கு? நீங்கள் கூட மண்டியிட்டு எனக்கு மதிப்பளித்தீர்; அது எனக்கு மனம் மகிழ்ச்சி தந்தது! ஆனால், உங்கள் கொடிய தளபதிகள் …!

    cleo3

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] நான் கடைசியில் அவர்களுக்குக் கையசைத்து மண்டியிட வைத்தேன்! ரோமாபுரியில் யாரும் எவருக்கும் மண்டியிட்டு மதிப்பளிப்ப தில்லை! அதுவும் ஒரு பெண்ணரசிக்கு ஆடவர் மண்டி யிடுவதில்லை! எங்கள் நாட்டுக்கு அரசரே கிடையாது! அதுவும் உன்னைப் போலொரு வாலிபப் பெண் அரசியாக முடியாது! அடுப்பூதும் எமது அணங்குகள் உன்னைப்போல் கையில் செங்கோல் ஏந்திக் கம்பீர நடை போடுபவ ரில்லை!

    கிளியோபாத்ரா: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] ரோமாபுரி சாம்ராஜியத்தின் சர்வாதிகாரியான நீங்கள், ரோமின் சக்கரவர்த்தி அல்லவா? ரோமாபுரியின் வேந்தர் வேந்தன் என்று முடி சூடத்தானே, நீங்கள் சீக்கிரம் போவதாக உள்ளது!

    ஜூலியஸ் சீஸர்: [சற்று வருத்தமுடன்] கிளியோபாத்ரா! ரோமாபுரிக்கு நான் அதிபதியாகச் சென்றாலும், என்னை வேந்தன் என்று ரோமானியர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ரோமாபுரியின் சக்கரவர்த்தி போல் ரோமானியர் எனக்கு மதிப்பளித்தாலும், என்னை அரசன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்.

    கிளியோபாத்ரா: [சற்று கவனமாக] அரசராகக் கருதப் படாமல், உங்களுக்கு என்ன விதமான ஆதிக்கமும், அதிகாரமும் உள்ளது? நீங்கள் அரசனில்லை என்றால், நாட்டை ஆட்சி புரிவது யார்? நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்? நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பது யார்?

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! எகிப்த் ரோமின் அடிமை நாடுகளில் ஒன்று! ஆனால் எகிப்தில் உனக்கிருக்கும் அதிகாரம், உன்னை விட ஆற்றல் மிக்க எனக்கு ரோமில் கிடைக்காது! ரோமாதிபதிக்கு ஆலோசனை கூறி ரோமா புரியை முழுநேரமும் கண்காணித்து வருவது, குடியாட்சி மக்களின் பிரதிநிதிகளான வட்டாரச் செனட்டர்கள்! செனட்டரின் தீர்மானமே குடியாட்சியின் தெய்வ வாக்கு! முடியாட்சியில் நம்பிக்கை யில்லாத ரோமாபுரியில் நானோர் மன்னனாக ஆட்சி செய்ய முடியாது!

    கிளியோபாத்ரா: அப்படி யானால் நீங்கள் வெறும் பொம்மை ராஜாவா? குடியாட்சி என்றால் என்ன? எனக்குப் புதிராக உள்ளது! புரிய வில்லை, குடியாட்சி என்றால்! செனட்டர் குடித்து விட்டு நடத்தும் ஆட்சியா? குடித்து விட்டுக் கொட்ட மடிக்கும் ஆட்சி எப்படிக் கோமாளித்தனமாக இருக்கும்? குடிக்காமல் அறிவோடு நடத்தும் ஆட்சியே குழப்பத்தையும், கொந்தளிப்பையும் தூண்டும் போது, குடியாட்சி மட்டும் எப்படிக் கோணத்தனமாய் இருக்காது என்பதை என்னால் கற்பனை செய்ய முடிய வில்லை!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] குடிக்கும், குடியாட்சிக்கும் எந்தச் சம்பந்தமு மில்லை! முடியாட்சி என்பது உன்னைப் போன்ற ஒரு மன்னன் ஆட்சி புரிவது! அது ஒற்றை மனிதன் செய்வது! மன்னருக்கு ஓரிரு மந்திரிகள் ஆலோசனை கூற அருகிலிருப்பார். குடியாட்சியில் தலைவன் என்னைப் போலொரு போர்த் தளபதி! ஆனால் அவன் முடிசூடா மன்னன்! அவனுக்கு ஆலோசனை சொல்பவர் ஓரிருவர் மட்டும் அல்லர்! நூறு அல்லது அல்லது இருநூறு செனட்டர்கள். நாட்டு வட்டாரங்களின் அதிபதிகள் அவர். செனட்டர் மூலமாகக் குடியாட்சியில் நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களின் பிரச்சனைகள் கவனிக்கப் படுகின்றன. முடியாட்சியைக் கண்காணிப்பது இரண்டு கண்கள் என்றால், குடியாட்சியைக் கவனிப்பது ஆயிரம் கண்கள். தளபதி பொம்மை அரசன் அல்லன்! பிரச்சனையின் தீர்வை முடிவு செய்பவன் தளபதி. பிரச்சனையை எப்படி அணுகுவது என்று திசை காட்டுபவன் தளபதி. புரிகிறதா?

    கிளியோபாத்ரா: [சற்று வெறுப்புடன்] என்ன இருந்தாலும் எனக்குள்ள ஆற்றலும், அதிகாரமும் உங்களுக் கில்லை. உலக சாம்ராஜியங்கள் எல்லாம் முடியாட்சியில்தான் உன்னதம் அடைந்தன! குடியாட்சி எதையும் சாதிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கே பல தலைகள் ஒரே சமயத்தில் எழுவதால் குழப்பம்தான் உண்டாகும்.

    ஜூலியஸ் சீஸர்: அதை ஒப்புக் கொள்கிறேன். ரோமாபுரி ஆட்சி அரங்கில் இனவாரி ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது! என் பகைவன் பாம்ப்பியின் சகாக்கள் எண்ணிக்கையில் மிகுதி! அதாவது எனக்கு எதிரிகள் அதிகம். என் ஆணைகள் எதுவும் வாசலைத் தாண்டுமா என்பது ஐயம்தான்! என் கொள்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஐயம்தான்! நீண்ட காலம் ஆட்சிப் பீடத்தில் நான் அதிகாரம் செலுத்துவேனா என்பதும் ஐயம்தான்! ரோமாபுரியில் என் ஆணைக்கு மதிப்பில்லை! என் அதிகார மெல்லாம் நான் கைப்பற்றிய அன்னிய நாடுகளில்தான்!

    கிளியோபாத்ரா: [வருத்தமுடன்] அப்படி யானால் உள்ளூரில் பொம்மை ராஜா! வெளி ஊரில் உண்மை ராஜா!

    ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அப்படியே வைத்துக்கொள். நான் ரோமுக்குச் சீக்கிரம் புறப்பட வேண்டும்! போனால்தான் என்னிலையே எனக்குத் தெரியும்!

    கிளியோபாத்ரா: [கவலையுடன்] நான் உங்களைப் பிரிந்து எப்படி அரசாளுவேன்? என் மகன் பிறக்கும் போது, நீங்கள் என்னருகில் இருக்க வேண்டும்! ரோமுக்குப் போன பின்பு, எப்போது எகிப்துக்குத் திரும்புவீர்? நீங்களின்றித் தனிமையில் நான் வாழ முடியாது.

    ஜூலியஸ் சீஸர்: ரோம் எனக்கு ஒருபோக்குப் பாதை! நானினி எகிப்துக்கு மீள மாட்டேன்! பாலை வனத்தின் தீக்கனலில் வெந்து நான் பல்லாண்டுக் காலம் பிழைத்திருக்க முடியாது! நீ எகிப்தை விட்டு ரோமுக்கு வந்துவிடு! நிரந்தரமாக வந்துவிடு! என்னோடு நீண்ட காலம் வாழலாம்!

    cleo5

    கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] அதெப்படி முடியும்? நான் எகிப்திய ராணி! நான் ரோமாபுரி ராணி யில்லை! ரோமாபுரிக்கு ஒருமுறை நான் விஜயம் செய்யலாம், என் மகவோடு! அத்துடன் சரி! நிரந்தரமாக அங்கே நான் எப்படித் தங்க முடியும்? ரோமில் தங்கிக் கொண்டு கிளியோபாத்ரா ஒருபோதும் எகிப்தை ஆள முடியாது! ஆனால் அதே சமயம் நான் உங்களைப் பிரிந்து ஒருபோதும் தனியாக வாழ முடியாது!

    ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] கிளியோபாத்ரா! அது உன் பிரச்சனை! அதை என்னால் தீர்க்க முடியாது! நான் ரோமன்! எகிப்திலே உன் விருந்தினனாக என் வாழ்நாள் முழுதும் தங்க முடியுமா? சொல் கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்கு ராணி ஆக்கியதும் என் கடமை முடிந்து விட்டது! நான் போக வேண்டும். நாமிருவரும் ஒரே நாட்டில் நீண்ட காலம் சேர்ந்து வாழ முடியாது! நீயும் நானும் நிரந்தரமாகப் பிரிந்துதான் வசிக்கப் போகிறோம்! நீயும், நானும் தனித்தனி உலகில் தனியாகத்தான் வாழ வேண்டும்!

    கிளியோபாத்ரா: [ஏக்கமுடன்] அப்படியானால் பிறக்கப் போகும் ஆண்மகவின் கதி? அவன் உங்கள் புத்திரன்! அவன் உங்கள் வாரிசு. அவன் வாழப் போகுமிடம் ரோமாபுரியா? அல்லது எகிப்து நாடா?

    ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] எனக்குத் தெரியாது கிளியோபாத்ரா! உன்னிடம் அவன் வாழ்வதுதான் சரியாகத் தெரிகிறது எனக்கு! ரோமாபுரியில் எனக்கு எதிரிகள் மிகுதி! அவரிடம் என் மகன் சிக்கிக் கொண்டால், அவனைக் கொன்று விடவும் அவர் தயங்க மாட்டார்! அவன் ரோமுக்கு வாரிசாக வந்து விடுவான் என்று வாளெடுத்துச் சிறுவன் தலையைச் சீவி விடுவார்! பாதுகாப்பாக என் மகன் உன்னிடம் இருப்பதே மேலானது!

    [தொடரும்]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170810 - Anamika - lr
    ”தேரிலவர் சேணம் ,தெருவிலவர் ஸ்ரீசூர்ணம்(கண்ணன் உண்ட மண்னை(ஸ்ரீசூர்ணம்) நெற்றியில் இட்டுக்கொள்கிறோம்)-மாரிலவர் பூணல் மகாலஷ்மி -பேரில்லா(அனாமிகா)
    ஆன்மனவர் பாரதம்செய் ஆண்மகன் ,கீதையை
    வான்மண்ணுக்(கு) ஈன்றபெரு, மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’ஜீவான்மன்’’….!

    கிரேசி மோகன்

     
    தாளமது வேதாளமாகினால்
    முருங்கையின் உச்சியில் விக்ரமனே
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….

    கண்ணனின் உன்னத கீதையினாலே
    குருஷேத்ரமே கலங்கியதே
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

    சொப்பனம், ஜாக்ரத்,சுஷூப்தி மூன்றுக்(கு)
    அப்பால் உள்ளது அது துரியம்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….!

    கனவினில் கொண்ட தாகம் தீர்க்கும்
    கனவுநீரது கானல் நீர்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

    கனவுக்கும் நனவுக்கும் உள்ள வித்யாசக்
    கடுகளவைப் போய் கடலளவாய்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….!

    காண்போன், காண்பது, காட்சிகள் யாவையும்
    வீண்போம் விழித்து எழுந்தக்கால்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

    எதுதான் கனவு எதுதான் நனவு
    யாரறிவார் இவ்வியனுலகில்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை..

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    FullSizeRender

    ”SHOWEராக கர்வம்வர் ஷிக்க மழையை(இந்திர கர்வம்)
    COVEராகக் குன்றேந்தி கண்ணன் -TOWEராய்
    பசுக்களைக் காக்க பரம்பொருள் நின்றார்
    வசுக்களுக்காய் வந்தகோ விந்து’’….கிரேசி மோகன்….!”SHOWEராக கர்வம்வர் ஷிக்க மழையை(இந்திர கர்வம்)
    COVEராகக் குன்றேந்தி கண்ணன் -TOWEராய்
    பசுக்களைக் காக்க பரம்பொருள் நின்றார்
    வசுக்களுக்காய் வந்தகோ விந்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழிசைப்பண்கள் (1)

     

    சிறீசிறீஸ்கந்தராஜா

    **************************************************

    உலகின் முதல் இசை

    தமிழிசையே!!

    ***********************************************

    இசைத்தமிழின் தொன்மை – 74

    ***********************************************

     20733166_1468717456500351_41761712_n

    பழந்தமிழிசையில் பண்கள்

    **********************************

    **************************************************

    தமிழ்க்கீர்த்தனைக் காலம் : கி.பி.1550 – 1800

    *******************************************

     

    கீர்த்தனை என்பது இசைப்பாடல் வகைகளுள் ஒன்றாகும்.

     

    பெரும்பாலும் இறை புகழ் பாடும் இசைப்பாடல்களாக உள்ளன.

     

    பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய நிலையில்

    எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் நிலையில்

    இவை அமைந்துள.

     

    கலித்தொகைப்பாடலில் உள்ள தரவு, தாழிசை, சுரிதகம்

    இவ்வகை முன்னோடிகளாக உள்ளன.

     

    இவ்வகையில் தமிழில் கீர்த்தனைப் பாடல்கள்

    சீகாழி முத்துத்தாண்டவர் கி.பி.1525 – 1605 காலம் முதல் தொடங்கிற்று.

     

    முத்துத்தாண்டவர் திருஞான சம்பந்தரைப் போல்

    சீகாழியில் பிறந்தவர்.

     

    இவர் பாடிய 60 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

     

    இவர் தமிழ்க் கீர்த்தனையின் தந்தையாக விளங்குகிறார்.

     

    நாட்டியத்திற்குரிய பதம் என்கிற இலக்கிய வகையையும்

    இவர் படைத்துள்ளார்.

     

    தமிழ்நாட்டியப் பதத்தின் தந்தையாகவும்

    இவர் போற்றப்படுகிறார்.

     

    இவர் பாடிய நாட்டியப் பதங்கள் 25 கிடைத்துள.

     

    இவர் தமிழ்க் கீர்த்தனை பாடிய காலம் கீர்த்தனைக்

    காலமாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

     

    முத்துத் தாண்டவரைத் தொடர்ந்து

    பாபநாச முதலியார் (கி.பி.1640-1740)

    மிகச் சிறந்த இயலிசைப் புலவராக உள்ளார்.

     

    இவர் படைத்த கும்பேசாக் குறவஞ்சி எனும்  நூலைப் பாடியுள்ளார்.

     

    குறவஞ்சி நூலின் முதல் நூலாக இந்நூல் திகழ்கிறது.

     

    இவரைத் தொடர்ந்து இராமநாடகக் கீர்த்னை பாடிய

    சீகாழி அருணாசலக் கவிராயர் உள்ளார்.

     

    கம்பராமாணயத்தை இசை நாடகக் கீர்த்தனையாக

    இவர் இயற்றியுள்ளார்.

     

    இவர் இசை நாடகக் கீர்த்தனை பாடிய முதன்மையராக

    உள்ளார்.

     

    இவரைத் தொடர்ந்து தில்லைவிடங்கன்

    மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1787) உள்ளார்.

     

    பழிப்பதுபோல் புகழ்ந்து பாடும் நிந்தாஸ்துதியில் அமைந்த தமிழ்க் கீர்த்தனை பாடிய முன்னோடியாக இவர் உள்ளார்.

     

    இவர் பாடிய 25 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

     

    முத்துத்தாண்டவர்,  

    அருணாசலக் கவிராயர்,

    மாரிமுத்தாப்பிள்ளை

    மூவரையும் சீர்காழி மூவர் என்றும்

    தமிழ்க் கீர்த்தனை பாடிய மூவர்

    என்றும் அழைப்பர்.

     

    இவர்கள் பெயரால் சீர்காழியில் மணிமண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது.

     

    தமிழக அரசு சீர்காழி மூவர் விழாவையும்

    ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

     

    இம்மூவர்களையும் தொடர்ந்து தாயே யசோதாஎன்று தொடங்கும் தோடி இராகக் கீர்த்தனை பாடிய

    ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (1715 – 1775) உள்ளார்.

     

    இவர் பாடிய 11 க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள்

    இன்று வழக்கில் உள்ளன.

     

    இவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை இறைவன் மீது அருணாசலக் கீர்த்தனை பாடிய வீரணப் புலவர் (1720 – 1810) உள்ளார்.

     

    இவர் பாடிய 398 இசைப்பாடல்கள் உள.

     

    இக்காலத்தில் பள்ளு நாடகம், நொண்டி நாடகம், குறவஞ்சி என்கிற இசை நாடக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.

     

    குறவஞ்சியில் மட்டும் சுமார் 130 நூற்கள் உள.

     

    கும்பேசர் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி,

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, விராலிமலைக்குறவஞ்சி, தியாகேசர்குறவஞ்சி என்கிற நாட்டிய நாடகங்கள் தோற்றம் பெற்றன.

     

    குமரகுருபரர் (1615 – 1688),

    பரஞ்சோதி முனிவர் (1675 – 1725),

    அவிநாசி நாதர் (1725 – 1785),

    தொட்டியக்கலை சுப்பிரமணிய முனிவர் (கி.பி.1740-1810) போன்றோர் தோன்றி  நூற்களைப் படைத்துள்ளனர்.

    இந்நூற்களில் இசைபற்றிய செய்திகள் உள.

    நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும்

    இதர கீர்த்தனைகளையும்

    பாடிய கோபால கிருஷ்ணபாரதியார் (1790-1885)

    இசைத்தமிழ் உலகிற்குப் பெரிதும்

    சேவை புரிந்தவராக உள்ளார்.

    இவரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறந்த

    இசை நாடக நூலாகும்.

     

    இவரின் ஏனைய கீர்த்தனைகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

     

    இவரையும் சேர்த்து தமிழ்க் கீர்த்தனை நால்வர் என்று கூறும் வழக்காறும் நிலவுகிறது.

     

    18, 19 நூற்றாண்டுகளில் இசைத்தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளைத் பலர் தந்துள்ளனர்.

     

    இராமகவி (1750-1810) என்பார் தஞ்சையிலிருந்து

    சென்னைக்குச் சென்றவர்.

     

    இவர் பாடிய 9 பதங்கள் அச்சில் வந்துள.

     

    பாலகவி செண்பக மன்னார் (1789 – 1840)

    பார்வதி திருக்கல்யாண நாடகம்,

    சிவராத்திரி நாடகங்களை எழுதியுள்ளார்.

     

    ஆனைஐயா (1798 – 1824) தஞ்சை இரண்டாம் சரபோஜி

    அவையில் இருந்தார்.

     

    இவரும் இவரின் சகோதரர் ஐயாவையர் சிறந்த இசைவிற்பன்னர்களாக இருந்தனர்.

     

    தெலுங்கு, தமிழ் மொழிகளில் இசைப் பாடல்களைப்

    பாடியுள்ளனர்.

     

    26 தமிழ்க் கீர்த்தனங்கள் வழக்கில் உள.

    வைத்தீசுவரன் கோயில் சுப்பராமையர் (1800-1850)

    வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமாரசாமி மீது

    76 பதங்கள் பாடியுள்ளார்.

     

    இவை குஜ்லி பதிப்பில் வெளிவந்துள்ளன.

     

    கனம் கிருஷ்ணய்யர் (1825-1880) கன இராகங்களில்

    பாடுவதில் வல்லவர்.

     

    இவர் கவித்தலம் இராமபத்திர மூப்பனார் மீது குறவஞ்சி பாடியுள்ளார்.

     

    இவர் பாடிய 57 கீர்த்தனைகளை உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.

     

    இசைத்தமிழ் அறிஞர்களுள்

    நீலகண்ட சிவனும் (1839-1900) ஒருவராவார்.

     

    இவர் பாடிய இசைப் பாடல்கள் திருநீலகண்ட போதம்

    என்கிற பெயரால் 1895 இல் அச்சில் வந்துள.

     

    தேவாரம், திருவாசகம், தாயுமானவர்  பாடல்கள் போல்

    இவை உள.

    இவர்4446 பாடல்கள் வெளிவந்துள்ளன.

     

    தஞ்சை கரந்தையைச் சார்ந்த ஆறுமுக உபாத்தியாயர் (1820-1890) பாடிய கீர்த்தனங்கள் சிவ சுப்பிரமணிய சுவாமி கீர்த்தனம்

    என்கிற பெயரில் அச்சில் வந்துள.

     

    மரக்கத்தூர் ஆறுமுக சுவாமிகள் (1827-1888)

    போலீஸ்காரராக இருந்தவர்.

    கிளிக் கண்ணி பாடியுள்ளார்.

     

    தஞ்சை வாசுதேவ கவிபாடிய 76 பதங்கள்

    தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் மூலம்

    வெளிவந்துள்ளன.

     

    இவர்களைப் போல் பலர் இசைத்தமிழ்ப் பாடல்களைப் படைத்துள்ளனர்.

    அருட்பிரகாச இராமலிங்க அடிகளார்,

    வேதநாயகம் பிள்ளை,

    கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள்,

    மாம்பழக் கவி,

    காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார்,

    குணங்குடி மசுதான் சாகிப்

    போன்றோர் இசைத்தமிழ் வளர்த்த

    சான்றோர்களாக உள்ளனர்.

     

    இராமலிங்க அடிகளார் (1823 – 1874) படைத்த

    திருவருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன.

     

    இவை 5818 பாடல்களைக் கொண்டுள.

    இவைகளில் 1011 பாடல்கள் இசைப் பாடல்களாக உள்ளன.

     

    இவை இன்றைய இசை அரங்குகளில்

    பாடப் பெற்று வருகின்றன.

     

    மாயூரம் வேத நாயகம் பிள்ளை (1826 – 1889) பாடிய

    சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்கிற இசைப்பாடல்கள்

    இன்றைய இசை அரங்குகளில் பாடப்பெற்று வருகின்றன.

     

    192 இசை உருப்படிகள் உள.

     

    கிளிக்கண்ணி என்கிற இசை வகை உருப்படிகளைப் பாடிய கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (1820 – 1890) காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்தவர்.

     

    இவர் பாடிய 102 கிளிக்கண்ணிப் பாடல்கள் உள.

    இவரைப் பின்பற்றி பாரதியார் கிளிக் கண்ணிப் பாடல்களைப் பாடியுள்ளார் பலரும் பாடி வருகின்றனர்.

     

    மாம்பழச் சிங்க நாவலர் (1836 – 1884) பழனியில் பிறந்தவர் மூன்றாவது வயதில் ஏற்பட்ட அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார்.

     

    இவர் பாடிய பாடல்கள் கீதாமிர்தசாரம் என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 56 கீர்த்தனைகள் உள.

     

    காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் (1865 – 1891) பாடிய காவடிச்சிந்துப் பாடல்கள் கிளிக் கண்ணியைப் போல்

    இசைத்தமிழ் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உளது.

     

    இப்பாடல்களில் அமைந்துள்ள இசையமைதி அப்துல்காதர்

    என்கிற இசுலாமியரையும் பாரதியாரையும் ஈர்த்தது.

     

    இவர்களைப் போல் பலரும் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

     

    குணங்குடி மஸ்தான் சாகிபு (1825 – 1875) பாடிய பாடல்கள் இசைத்தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன.

     

    இவைகளைத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள்

    கண்டு கொள்வதில்லை என்பதும் மிகவும் வருந்துதற்குரிய ஒன்றாகும்.

     

    இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:

    1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
    2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
    3. இராமகவி
    4. ஆனை ஐயா
    5. பட்டாபிராமய்யர்
    6. கனம் கிருஷ்ண ஐயர்
    7. பராங்குசதாசர்
    8. நீலகண்ட சிவம்
    9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
    10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
    11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
    12. சுந்தர முதலியார்
    13. ஆறுமுக உபாத்தியாயர்
    14. முருகேச கவிராயர்
    15. சுப்பிரமணிய பண்டிதர்
    16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
    17. அகத்தியலிங்க கவிராயர்
    18. இராசப்ப முதலியார்
    19. சின்னசாமி நாயுடு
    20. சரவணபவ தாசர்
    21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
    22. நமச்சிவாய நாவலர்
    23. குப்புசாமி கிராமணி
    24. காஞ்சி சபாபதி முதலியார்
    25. கிருஷ்ணசாமி ஐயா
    26. வேலாயுதக் கவிராயர்
    27. கோவிந்தராச தேசிகர்
    28. சண்முக முதலியார்
    29. சாமிநாத தாசர்
    30. பாலசுப்ரமணிய முதலியார்
    31. காமியப்பக் கவிராயர்
    32. முத்துசாமிக் கவிராயர்
    33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
    34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
    35. குணங்குடி மஸ்தான் சாகிபு
    36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
    37. கவி குஞ்சரபாரதி
    38. முத்துத் தாண்டவர்
    39. பாபநாசம் சிவன்
    40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
    41. பாரதியார்
    42. தேசிக விநாயகம் பிள்ளைபல கீர்த்தனைகளை இயற்றினார்.
    43. பாரதிதாசன்
    44. சுத்தானந்த பாரதியார்
    45. பெரியசாமித்தூரன்தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

     

     

     

    ***********************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    08/08/2017

     

     

    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    Share
  • கோடைக்கு இரை ஈரம்

    எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்

    புறக்கணித்துவிட்ட

    இலையுதிர்த்த விருட்சங்களில்

    பௌர்ணமி நிலவு

    கோடையை வாசித்தபடி வானில் நகரும்

     

    வனத்தில்

    புள்ளி மான்கள் நீரருந்திய

    குட்டைகள் வரண்டு விட்டன

     

    அகோரச் சூரியன் தினமும்

    தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்

    பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்

    தன் மென்பரப்பையிழந்து

    வெடிக்கத் தொடங்கி விட்டது

     

    சாம்பல் குருவிகள் ஏழு

    இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு

    தினந்தோறும் காலையில்

    முற்றத்திலிறங்கும்

     

    காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்

    உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த

    காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி

    தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன

     

    எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்

    தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென

    கேட்டுக் கொள்ளும் பார்வைகளை

    சேமித்து வைத்தவாறு

    வட்டமிட்டபடியே இருக்கின்றன

    கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட

    மரங்கொத்திப் பறவையின் கண்கள்

     

    கொக்குகளும் நாரைகளும்

    தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட

    தண்ணீர்க் குளங்களின்

    ஈர மணற்தரையைத் தொடுகின்றன

    ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்

    தாகித்த மேக விம்பங்கள்

     

    அவ்வாறாக

    கோடைக்கு இரை

    ஈரமென ஆயிற்று

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-21

    க. பாலசுப்பிரமணியன்

    எந்த வடிவில் இறைவனைக் காணலாம்?

    திருமூலர்-1-3

    உள்ளத்தில் இறைவனை நிறுத்தி வழிபட நாம் முனைகின்றபொழுது நம்முள்ளே எழும் கேள்வி “எந்த இறைவனை நாம் வழிபட வேண்டும்?” “அவன் உருவம் எவ்வாறு இருக்க வேண்டும்?” “அவன் அமைதியானவனா இல்லை கோபத்தை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவனா?” என்ற பல தேவையற்ற கேள்விகள் உள்ளே எழுகின்றன. இந்தக் கேள்விகள் அனைத்தும் தெளிவில்லாத மனதின் அறிகுறியாக அமைகின்றது. “உண்மை ஒன்றே; அதைக் காண்பவர்கள் தங்கள் பார்வைக்குத் தகுந்தவாறு விமர்சிக்கின்றார்கள்” என்று நமது மறைகள் அழகாகச் சொல்லுகின்றன.

    சுந்தரமூர்த்தி நாயனாரோ இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கூறுகின்றார்:

    பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

    இந்தக் கருத்தை மேலும் தெளிவுறுத்துவதுபோல திருமூலர் விளக்குகின்றார்:

    “திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவோர்க்கு

    புரையற்   றிருந்தான் புரிசடை யோனே.” 

    பட்டினத்தாரோ அவனுடைய எங்கும் நிறைந்த நிலையை விளக்கி அவனை அனுபவபூர்வமாக உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்

    “நூலா லுணர்வரிய நுண்மையினு  நுண்மையன்காண்

    பாலாறு சர்க்கரைபோற் பரந்தபரி பூரணன்காண் “

    எவ்வாறு பாலில் கரைந்த சர்க்கரையின் இனிப்பு பால் முழுவதிலும் பரவி நிற்கின்றதோ அதுபோல் அவனும் எங்குமாகி நிற்கின்றான். அப்படிப்பட்ட இறைவனை நாம் எந்த உருவத்தில் காண்பது.? அவன் அணுவுக்குள்ளும் உள்ளானா? அல்லது மாமலைகளிலே இருக்கின்றானா?   இதற்குத் தீர்வு காண்பதுபோல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    ணுவுள் அவனும் அவனுள் அணுவுங்

    கணுவுற நின்ற கலப்ப துணரார்

    இணையிலி யீச னவனெங்கு மாகித்

    தணிவுற நின்றான் சராசரந் தானே..” 

    இறைவனின் இந்தப் பரந்த விரிந்த உலகளாவிய உண்மையினை விளக்கும் வகையில் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றார் மாணிக்க வாசகர்:

    அற்புதன் காண்க அனேகன் காண்க

    சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க

    சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க

    பத்தி வலையிற் படுவோன் காண்க

    ஒருவ னென்னு மொருவன் காண்க

    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

    அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

    இணைப்பறும் பெருமையி லீசன் காண்க

    அரியதில் அரிய அரியோன் காண்க

    மருவிய பொருளும் வளர்ப்போன் காண்க

    எத்தனை வடிவத்தில் அவன் காட்சி அளிக்கின்றான் ! அவனை ஏதாவது ஒரு வடிவத்தில், ஒரு உருவத்தில் அடைத்து வைக்க முடியுமா?

    ஒன்றே பலவாகி நிற்கின்ற இந்த உண்மையை விளக்கும் வண்ணம் வள்ளலாரோ இறைவனை எவ்வாறு காண்கின்றார் எனபதை விளக்குகின்றது கீழ்கண்ட பாடல் :

    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

    மறை நான்கின் அடிமுடியும் நீ

    மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

    மண்டல மிரண்டேழும் நீ.

    பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

    பிறவும் நீ ஒருவன் நீயே

    பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ

    பெற்ற தாய் தந்தை நீயே.

    உணர்வு பூர்வமாக, அறிவு பூர்வமாக நாம் சிந்திக்க முயன்றால் அவனே ஒன்றாகவும் அவனே பலவாகவும் தென்படுவான். எவ்வாறு ஒரே ஒளி பல வண்ணங்களில் கண்களுக்குப் புலப்படுகின்றதோ அவ்வாறே அவனது பல வண்ணங்கள் நம் கண்களுக்குத் தென்படுகின்றன. அனைத்திலும் உள்ளிருந்து அனைத்தையும் கடந்து அனைத்துமாக அனைத்தும் ஒருங்கிணைந்த ஒன்றாகத் தெரிகின்ற அவன் வடிவை நாம் எப்படிப் போற்றினாலென்ன !

    தொடருவோம்

    Share
  • நாணம்

          ரா.பார்த்தசாரதி

     

     

    கதிரவனை கண்ட  நாணலே,  நாணத்தால் தலை குனிந்தாயோ

    காதலன்  நெருங்கி வருவதை கண்டால் நாணம் கொள்வாயோ

    இனியவளே ! உன் நாணத்திற்கு  என் நெருக்கம்தான் காரணமோ

    இரு கைகளைக் கொண்டு மறைத்தால்  நாணம் போய்விடுமோ !

     

    நாணமெனும்  போர்வைக்குள் உன் உடல் மறைகின்றதோ

    கருமேக கூட்டத்திற்குள்  பால் நிலா  மறைகின்றதோ

    நாணமென்பது  பெண்ணிற்கு  ஓர்  அணிகலமானதோ

    முகத்தை மறைத்தாலும்,கன்னங்கள் சிவந்து வெளிப்படாதோ !

     

    நான் விண்ணை பார்க்கும்போது என்னை பார்க்கின்றாய்

    நான் உன்னை நோக்கும்போது, குனிந்து காலால் கோலமிடுகின்றாய்

    உன் நெஞ்சத்திற்குள்ளே  உன் முன் உலா  வருவேன்

    உன்  கன்னம்  சிவக்க காதல் மொழி பேசிடுவேன் !

     

    நாணம் என்பது  பருவத்தின்  கண்ணாடியோ !

    காதலில் பழகுவதற்கு ஓர் முன்னோடியோ

    இலைமறை காய்மறைவாய் காதலை  வெளிப்படுத்துமோ

    பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் கதைகள் பேசிடுமே !

     

    நாணமும், அச்சமும்  காதலியின்  உடைமையாகுமே

    ஒன்று கலந்த நெஞ்சம் உறவை நாடிக்   கெஞ்சுமே

    நாணத்தால் முகம் சிவந்து காதல் வெளிப்பட்டதே

    அன்பை நினைத்து ஏங்கி, அமுத நிலையை நாடுதே !

     

     

     

     

    Share
  • கடல் பயணம்..!

    பெருவை பார்த்தசாரதி 

    கட்டுமரம்

     

     

     

     

     

     

     

     

     

    தெம்பிருந் தாலுடலில்..தேர்கூடத் தனியேயிழுக்கலாம்..

    …….தெம்புடனுறுதியும் வேணும்..செல்லவே கடல்பயணம்.!

    கொம்புபோல சீவிய கட்டுமரமதைக் கடலில் செலுத்த..

    …….கையிரண்டில் கம்புகொண்டு கடல்நீரைத் தள்ளினால்..

    அம்புபோலச் சீறிப்பாயும்…ஆங்கே கடல்வெளியில்.!

    …….அப்போதே வீசிச் செல்வோம் மீன்பிடிவலையை.!

    வெம்பிய மனதுடன்தான் மீன்பிடிக்கச் செல்கிறோம்..

    …….எம்முயிர் உடைமைக்கே உத்திரவாத மில்லையப்பா.!

     

    ஓடும் மரக்கலம்தான் அதொருவழியேது மில்லாத..

    …….கடல்பயணம்..வழிதவறிச் சென்றால் கரைசேராது.!

    ஆடுகின்ற பாய்மரத்தில் சிலசமயமெம் வாழ்க்கை..

    …….ஆட்டம்கூட பாதியிலே முடிந்துவிடு மவலமுண்டு.!

    ஓடும் ராட்சதலை நடுவேகடும் கடல்பயணமதில்..

    …….ஓயாது உழைத்தால்தான் ஒருவேளை பசியடங்கும்.!

    தேடுகின்ற மீன்களெலாம் ஓரிடத்தில் கிடைத்தாலும்..

    …….தீராதெம் வாழ்வாதாரப் பிரச்சனை கடலுளவரை.!

     

    கப்பலிலே சீறிவரும் ஸ்ரீலங்கா கடற்படையது..

    …….கபடமில்லா மீனவனை அடித்துக் கைதுசெய்யும்.!

    தப்பேதும் செய்யாதெங்கள் மீனவ நண்பனை..

    …….தப்பாமல் படகிலேற்றி பலநாட்கள் சிறைவைக்கும்.!

    எப்போதுமெங்கள் கடல் வாழ்வே சூனியம்தான்..

    …….எதற்குமே எங்களுக் காரும்துணை நிற்பாரில்லை.!

    உப்பு நீரின் மேலெங்கள் கடல்பயணம்…அது..

    …….உண்ணாமல் உறங்காமல் பலநாள்கூட நீடிக்கும்.!

    ===========

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::07-08-2017

    நன்றி:: கூகிள் இமேஜ்..

    Share
  • வனநாயகன் – புதினம்: ஓர் அறிமுகம்

    வல்லமை வாசகர்களுக்கு,

    ஆரூர்பாஸ்கரின் அன்பு வணக்கங்கள்!

    baskar-picவனநாயகன் மலேசிய நாட்கள்” எனும் எனது இரண்டாவது புதினம் (நாவல்) கிழக்குப் பதிப்பகத்தால் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.

    2017-சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியான நாள்முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வனநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி!

    வனநாயகன் குறித்து நான் எழுதுவதைவிட, “காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்” எனும் தலைப்பில் நண்பரும் விமர்சகருமான  திரு. சுரேஷ் கண்ணன் எழுதிய விரிவான அறிமுகக் கட்டுரையின் ஒரு சிறுபகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

    “…..மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பான் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப் போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதேவனநாயகன்எனும் இந்தப் புதினம்

    புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண்விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம்இதைப் பற்றி சொல்கிறேன் பார்என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. “

    என்னைப் பொறுத்தவரை எழுதுவதைவிடவும், அது அச்சாகி நூலாக வெளியாவதை விடவும் எழுதியவனுக்கு மகிழ்வூட்டக் கூடிய ஒரு விசயம் அந்நூல் குறித்தான உரையாடல்கள்தாம். அந்த வகையில் வனநாயகனை வாசித்து பதிவுகள், மின்னஞ்சல்கள் வழியாகத் தொடர்ந்து உற்சாகமளித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ***

    புதின ஆசிரியரைப் பற்றி…

    அமெரிக்காவின் ஃப்ளாரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் திரு. ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.  தனது சொந்த ஊரான ஆரூரை (திருவாரூர்) தனது பெயருடன் சேர்த்து ஆரூர் பாஸ்கர் எனும் புனைபெயரில் எழுதிவருகிறார்.

    “சிறகுகள் கல்வி அறக்கட்டளை” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

    இவருடைய நூல்கள் : என் ஜன்னல் வழிப்பார்வையில் (கவிதை), பங்களா கொட்டா, வனநாயகன் – மலேசிய நாட்கள் (புதினங்கள்).

    இணையதளம்: http://aarurbass.blogspot.com/
    முகநூல்: https://www.facebook.com/aarurbass
    மின்னஞ்சல்: aarurbass@gmail.com

    ***

    நூல்கிடைக்கும் விவரம்:

    வனநாயகன் – மலேசிய நாட்கள்
    ஆரூர் பாஸ்கர்,

    கிழக்கு பதிப்பகம்,
    பக்கங்கள் 304, விலை ரூ.275

    நூலை இணையவழியே வாங்க:
    வனநாயகன் – மலேசிய நாட்கள்
    https://www.nhm.in/shop/9788184936773.html

    அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
    https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1

     

     

     

    Share