எம்.ரிஷான் ஷெரீப்

 

 

யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்

புறக்கணித்துவிட்ட

இலையுதிர்த்த விருட்சங்களில்

பௌர்ணமி நிலவு

கோடையை வாசித்தபடி வானில் நகரும்

 

வனத்தில்

புள்ளி மான்கள் நீரருந்திய

குட்டைகள் வரண்டு விட்டன

 

அகோரச் சூரியன் தினமும்

தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்

பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்

தன் மென்பரப்பையிழந்து

வெடிக்கத் தொடங்கி விட்டது

 

சாம்பல் குருவிகள் ஏழு

இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு

தினந்தோறும் காலையில்

முற்றத்திலிறங்கும்

 

காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்

உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த

காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி

தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன

 

எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்

தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென

கேட்டுக் கொள்ளும் பார்வைகளை

சேமித்து வைத்தவாறு

வட்டமிட்டபடியே இருக்கின்றன

கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட

மரங்கொத்திப் பறவையின் கண்கள்

 

கொக்குகளும் நாரைகளும்

தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட

தண்ணீர்க் குளங்களின்

ஈர மணற்தரையைத் தொடுகின்றன

ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்

தாகித்த மேக விம்பங்கள்

 

அவ்வாறாக

கோடைக்கு இரை

ஈரமென ஆயிற்று

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *