எழுத்து -3
வேதா.இலங்காதிலகம்
எழுத்து வார்த்தை ஒரு மந்திரம்.
அழுத்தி வரலாறு படைக்கும் சுந்தரம் (நன்மை)
அழுக்கின்றி நீரின் மேலும் வானத்திலும்
முழுக்கவென் தலை மேலும் சுற்றுகிறது.
விழுந்திடாத வண்ணத்துப் பூச்சிச் சிறகசைவு.
எழும் இரகசியக் கனவின் பெருக்கம்.
விழுந்து பொங்கி நனைக்கும் நீரூற்று.
வழுதில்லா மலரின் மலர்வு எழுத்து.
என்னிலிருந்து பிறக்கும் எழுத்து விதை
மின்னும்! உலகெங்கும் பறவையாய் பரவும்!
அன்னியக் காடு, அமைதி வெளி,
சின்னக் கற்பாறை, சதுப்பு நிலமென
என்னவொரு வித்தியாசமின்றிப் பாரெலாம் பரவுகிறது.
இன்னலற்ற காற்றாக இறுக்கம் இன்றி
இன்னமுத அன்பாக என்றும் ஊடாடுகிறது.
என்னை வெகு சுதந்திரமாக ஆக்குகிறது.
கன்னல் கரும்பென நானெண்ணும் எழுத்து
என் புலன் உயிரிற்குள் புகுந்தது.
கன்னங்கரு இரவிலும் வெள்ளி தங்கமாய்
மின்னும் பகலிலும் குமிழ்களாய் எழுகிறது.
என்னெழுத்தின் கவர்ச்சியில் நானே மயங்குவேன்.
சின்ன அகக்காயமும் வானவில்லான எழுத்தாகும்.
வன்னிகை (எழுதுகோல்) சுமையல்ல, சுகமான சுமை
வன்னம் (தங்கம்) எழுத்திற்கு பரிசு புகழுண்டு.
வின்னியாசம் (பேச்சுத் திறமை)எழுத்தால் தானே நிறைவுறும்.
பொன்னிலவொளி நிறையும் முற்றமாய் எழுத்து
மென்னகையோடு கைபிடித்துலவும் உலக நடைபாதையில்.
என் கவிக் கதிரின் பிரகாசம்
அன்வயமாய் (இயைபு) நாளும் மக்களோடு கரையட்டும்.
அன்பித்துக் கனவுகளைக் கைத்தடியாக எழுப்பட்டும்.
இன்பித்துத் துணிவை ஏற்றட்டும் எழுத்து.
உன்னதமாயாடும் மயிலின் நடனம் எழுத்து.

