Blog

  • கோப்புக்கூட்டல் [5]

    -இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 7, 2017

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [5]

    வல்லமையாளர்

    innam

    வல்லமை என்ற மின்னிதழ் வாரந்தோறும் ஒரு வல்லமையாளரைத் தேர்வு செய்கிறது. தற்காலம் அந்த பணியை மனமுவந்து முன்னின்று நடத்தி வரும் செல்வன், ஆய்ச்சிமார் போல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போலும், தங்கத்தைப் புடம் போடும் ஆசாரி போலும், நன்கு ஆராய்ந்தபின் நமக்கு நற்செய்திகள் பல அளிக்கிறார், தேர்வு செய்யப்பட்ட வல்லமையாளரின் சாதனைகளை விவரிக்கும்போது. எனக்கு எவிடென்ஸ் கதிர் பற்றிப் பல வருடங்களாகத் தெரியும்; திரு வின்சென்ட் ராஜ் பற்றி இன்றுதான் தெரியும்.

    திரு. வின்செண்ட் ராஜ் தன்னலம் நாடாதவர், நீதிக்குப் போராடும் விடாக்கொண்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூகத்தில் அடிக்கசண்டாகத் தங்கிக்கொண்டு, சமுதாயத்தில் நஞ்சு விதைக்கும் சாதி,மத, இன பேதங்கள், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,ஊழல்கள், முறைகேடுகளுக்கு அரசு முன்னின்று கவசம் பூட்டும் கேவலங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது உயிருக்கு அபாயம் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அவர் அத்துடன் நிற்காமல், சமுதாயத்தால் காயம் பட்டவர்களுக்கு புத்துணர்ச்சியும், புனர்வாழ்வும் அளிக்கப் பாடுபடுவது போராளியின் அமைதிச்சாரல் என்க. போனஸ்:  கூட்டுப் போராளி.

    திரு.செல்வன், எவிடென்ஸ் கதிர் அவர்கள் சட்டத்தைக் கையாளும் விதத்தை வருணித்திருப்பது தேவையான அணுகுமுறைதான். சட்டத்தை எதிர்க்குமுன் அமலில் இருக்கும் சட்டத்துக்கு நாம் கட்டுப்படுகிறோமா என்ற வினாவுக்கு விடை நாடுவது நலம் பயக்கும்.

    தேசியச் சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதியப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருப்பது பிரதிநிதித்துவ மேலாண்மைக்கு, ஓர் இழுக்கு. ஏன்? தமிழ்நாட்டு அரசியலில் சாதீயம் தான் பல்லாண்டுகளாகப் பேயாட்டம் ஆடுகிறது. இந்தச் சூழ்நிலையில் நமக்கு நூற்றுக்கணக்கான எவிடென்ஸ் கதிர்கள் தேவை.

    உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் அவலட்சணத்தில், தமிழகஅரசு தங்கள் மாநிலத்தில் சாதியப் படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமன்று; அவ்வாறு சாட்சியம் பதிவு செய்தவர் மீது ‘பொய்சாட்சி’ வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பல்லாண்டுகளாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மலம் அள்ளுவது, துப்புரவு செய்வது ஆகியவற்றைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அரசு இயந்திரத்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதியப் படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே என்ற புள்ளி விவரம் தமிழ்ச் சமுதாயத்தை, நமது சங்க காலப் பண்பை, எள்ளல் செய்கிறது. ஓர் ஆறுதல் செய்தி: ஒரு பெண் ஓர் இளைஞனை அழைத்து வருகிறாள், காதலனாக. அவர் நசுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அதனால் மேல்தட்டு தருமமிகு சென்னைச் சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்வதைக் கண்ணாரக் கண்டேன். பிறந்த வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களிடம் சொல்லப்போவதில்லை என்பதில் திடமாக இருந்தாள். என் செய்வது? என் தீர்மானத்தை ஒப்புக்கொள்வதிலும் தீர்மானமாக இருந்தார்கள், இருவரும். அதாவது என் சம்மதமில்லாமல் திருமணம் முடிப்பதில்லை என்ற தோற்றம். யாதொருவிதமான அசம்பாவிதம் இல்லாமல் திருமணம் நிறைவேறியது. பிறந்த வீட்டிலும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிவிட்டது, மேலும் மென்மையான செய்திகள் உண்டு. அவரவது தனிமை உரிமையை மதித்து (ப்ரைவசி) மேலதிக விவரங்களை கூறவில்லை. இந்த உண்மை வரலாறு ஒரு பாடம் போதிக்கிறது. அவரவரது குடும்பத்தில் முதியவர்கள் அறிவு முதிர்ச்சியையும், சங்கப்பாடல்களில் வரும் முக்கோல்பகவர்களைப் போல் இயல்பு வாழ்க்கையின் சுவாசத்தையும், தங்கள் மலர்ந்த நினைவுகளின் இன்பத்தையும் முன்னிறுத்திக் கலப்புமணமோ, சாதி மணமோ, மனம் ஒத்து நடக்கும் காதல் மணங்களை வரவேற்க வேண்டும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://discoverybookpalace.com/product_images/p/766/_சமுதாயம்__11579_zoom.JPG

     

     

     

    Share
  • அவலம் ஓயனும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    இழிவுகளும் நாட்டினிலும் பெருகுது 

    பெரும் இடரதனால் நாட்டின்வளம் கருகுது 

    மிக அழிவதனை அன்னைநாடு அணைப்பதற்கு

    முன்னதனைக் காக்கனும் – துயர் – போக்கனும்!
    அண்ணல்காந்தி தந்தவுயர் விடுதலை 

    தனை அடகுவைத்து வளர்க்கின்றார் கெடுதலை 

    பெரும் தன்னலத்தார் அரசியலால் தாய்நாடு தள்ளாடி வீழுது

     துயர் – சு+ழுது!
    காந்தியவர் வாரிசெனச் சொல்லுறார் 

    அதில் கருணையதும் இன்றியுமே கொல்லுறார் 

    மிக வாந்தியுமே எடுத்தாற்போல் வகையற்ற துயராட்சி நடத்துறார் 

    காலம் – கடத்துறார்!
    அவசரக் கோலமெனும் திட்டம் – தந்த அலங்கோலத் தால்கண்டோம் நட்டம்

     பெரும் நவரச நாயகனாய் நடித்தேய்க்கும் தாடிமிக மோசம்

     வெற்று – கோஷம்!
    ஊர்ஊராய் சுற்றியுமே திரிவார்

    மிக உத்தமராய் காட்டியுமே வருவார்

     உற்றுப் பாரெந்தன் நடிப்பதனை பாரனைத்தும்

    போற்றுதெனை என்கிறார் – நாட்டைத் – தின்கிறார்!
    தாமரையை வளர்க்கவுமே எண்ணுறார் 

    ஆட்சித் தளவாடத் தால்துயரும் பண்ணுறார் 

    பெரும் பு+மறையும் நாகமெனப் பெருந்தீங்கை

    மறைந்தவரும் செய்யுறார் வாகை – கொய்யுறார்!

    தூஙகும்வரை தொடையில்கயிறு திரிப்பார் 

    நம் தயவாலும் ஜெயித்துமிகச் சிரிப்பார் 

    துயர் தாங்குதற்கா நாம்பிறந்தோம்?

    துணிந்தெழுந்து நாம்புயலாய் பாயனும் – அவலம் – ஓயனும்!
    08.08.2017

    Share
  • ‘’நந்தனார்’’….!

     

    இன்று ‘’நந்தனார்’’ சினிமா பார்த்தேன்….அடடா க்ளைமாக்ஸ் ஆடடா என்றிவர் பாட ,நடராசர், உமையாளொடு ஆட அட்டகாசம்….மெய்சிலிர்ப்பு….அதனால் அம்பலவாணரே ‘’ஆட வருகவே’’…..!

    ஆட வருகவே….
    ———————–

    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)….கிரேசி மோகன்….!
    ————————————————————

    Share
  • Elegy – இரங்கற்பா

     

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இரங்கற்பா

    images (3)

    உன்னால்தான் உயிரோடிருக்கிறேன்.
    உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான்.
    ஓ எனதன்பே.

    குரலற்ற எமது இரைச்சல்
    விண்ணையே குத்திக் கிழித்தாலும்
    உன்னை மட்டும் அடைவதேயில்லையது
    எனினும் பனியாய் உறைந்து
    தொலைதூர சிகரங்களில் குவிந்திருக்குமது
    மீண்டும் ஆதிநாளுக்கே இழுக்கிறது.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_7255

    ’’ராஜாவாய் ஆனாலும் ரங்கனவர் ராதைக்கு
    கூஜாவாய் ஆனாரே காதலால் : -’’ஆஜா’’(ஹிந்தி -Come)
    அவள்சொல்ல வந்திடுவார், ஆவினத்தை விட்டு
    இவளுக்(கு) இணை இவள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா

    ​​தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    IMG_20170804_100748
    கல்வி கடவுள்’ என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ ஹயக்ரீவருக்கு இன்று 07.08.2017 ஆவணி திருவோணம் – ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரையுடன், லக்ஷ்மி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார்.

    IMG_20170807_105622

    இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும் காட்சி கொடுத்தவர்

    ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்வி ஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹயக்ரீவர் ஹோமமும் மஹா அபிஷேகமும் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.பங்கேற்ற மாணவ மாணவிகளுக்க பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு அன்ன படையலும் இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
    வாலாஜாபேட்டை – 632513.
    Ph: 04172- 230033, 9443330203
    Web: www.danvantritemple.org Email: danvantripeedam@gmail.com
    Bank Details :Name : Sri Muralidhara Swamigal , Bank Name : State Bank of India,
    Account Number : 10917462439, Branch : Walajapet, Bank Code:0775,
    IFSC: SBIN0000775

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ”நூதனர் , நித்ய நவனீதர், வந்துசெல்லும்
    சேதனர், சீராயர் சீதரர், -யாதவர்,
    மாதவர், கேசவர், மாபா ரதம்செய்து
    தீதகற்றும் கீதையாம் தேர்’’….கிரேசி மோகன்….

    Share
  • தானத்திலே சிறந்த தானம்!

    பவள சங்கரி

    மனிதர்களின் ஐம்புலன்களின் ஆகச்சிறந்த புலன் கண்கள்தான். கண்கள் இல்லையென்றால் ஏற்படும் இழப்பு ஈடுசெய்ய இயலாததொன்று.

    20621144_679452455587023_2567135607939585084_n

    உலகில் கிட்டத்தட்ட  3 கோடியே 70 இலட்சம் பேரின் பொழுதுகள் இருண்டே கிடக்கின்றன. பிறவியிலேயே பார்வையின்றி பிறந்தவர்கள், இடையில் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளால் பார்வையிழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடக்கம். நம் இந்தியாவில் சுமாராக, 27 மில்லியன் பேர்கள் மித பார்வை கோளாறுகளாலும், 9 மில்லியன் பேர்கள் இருகண் பார்வையின்மையாலும், 2,60,000 குழந்தைகள் பார்வையற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

    New Doc 2017-08-07_1

    ஒரு முக்கியமான, மகிழ்ச்சியான விசயம் என்றால் இவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான். இந்தியாவில் மட்டும் 1 1/2 கோடி பேர் பார்வையற்றவர்கள். அதாவது உலக பார்வையற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர்.

    20170805_102301

    இதில் 60% பேர் குழந்தைகள் என்பது கொடுமையிலும் கொடுமை. மொத்த பார்வையற்றவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள்.  இவர்களுக்குப் பார்வை கிடைக்கவேண்டுமானால் ஆண்டொன்றுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் கருவிழிகள் தானமாக தேவைப்படுகின்றன. ஆனால், கண்கள் தானமாகப் பெறக்கூடியவைகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.

    New Doc 2017-08-07_2

    ஆண்டொன்றிற்கு சராசரியாக 80 இலட்சம் பேர் இறக்கிறார்கள்.  இறையருளால் கண் பார்வை பெற்றுள்ள மனிதர்கள் பார்வையற்றோர் மீது இரக்கம் கொண்டு தங்கள் வாழ்க்கை முடிந்த பின்பு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் கண்களை தானமாகக் கொடுக்க மனது வைத்து, உற்றார் உறவினரிடம் சொல்லிவைப்பதன் மூலம்  உலகத்தில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும் என்பதே நிதர்சனம்.

    கண் தானம் கொடுக்க வேண்டியதன் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதில் இன்று பேர் சொல்லும் வகையில் முன்னணியில் இருப்பவர், பட்டாசு நகரான சிவகாசி அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா டாக்டர் கணேஷ் அவர்கள். இதுவரை 7500 விழிகளுக்கு ஒளி வழங்க தம் தன்னிகரில்லா சேவையை வழங்கியுள்ளார். இவர் நீண்ட காலங்களாக கல்லூரி, பள்ளிகளில் தொடர்ந்து கண் தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார்.     சென்ற 05/7/2017 அன்று தமது 1011 வது கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பெண்கள் கலை& அறிவியல் கல்லூரியில் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியை மாணவர்களுக்கு சிறிதும் சலிப்பு ஏற்படாத வகையில், மிக அழகாகத் திட்டமிட்டு சுவையாக நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண் தானம் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும், ஐயங்களுக்கும் சரியான விளக்கமும் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, அவர்கள் சரியான முறையில் அக்கருத்துகளை உள்வாங்கியதற்கான ஆதாரங்களாக அவர்களின் பின்னூட்டங்களும் அமைந்தது பாராட்டுதலுக்குரியது!

    இருளின்பிடியில் கருமையின்நெடியில்
    கோடிபேர் கொத்தடிமைகளாய்
    ஒளியாய் விடியுமென நாடியுள்ளோர்
    விழியில் குருதியென வாடியுள்ளோர்
    மொழியில் பேதமென சாடியுள்ளோரும்
    அருளில் பாவமில்லையென பாடியுள்ளோர்.

    பசும் மரங்களும் புல்பூடுகளும்
    வண்ண மலர்களும், நீல வானும்
    சிற்றலைகளுடன் நீர்நிலைகளும்
    பேரிரைச்சல்களுடன் நீர்வீழ்ச்சிகளும்
    உலகின் காணக்கிடைக்காத அதிசயங்கள்
    அனைத்தும் மொத்தமாய் கருமையாய்
    கடக்கும் கொடுமை எதிரிக்கும்
    கிடைக்கக் கூடாத சாபம்.

    பட்டும் பளபளப்பும் தொட்டு
    உணரவியலா உச்சபட்ச இரணங்கள்
    ஐந்து நிமிட தியானம் அமைதிக்கு வரமாம்
    கண்ணொளியிலா வாழ்நாள் தியானம் சாபமாம்

    இருளில் வாடும் வறியோருக்கு
    ஒளியில் வாழ்ந்து வானமேகியோர்
    மண்ணில் மக்கிப்போகும் கண்ணின்
    மணியை தானமாய் அளித்து
    விண்ணில் நிலையாய் உயர்ந்தோர்
    நிலையைப்பெற்று புண்ணியம் கோடியும்
    இயைந்து பெற்று நல்லறம் காப்பீரே!
    ஈசனின் திருவடியை உவந்து பெறுவீரே!!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (123)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20645963_1399821553405373_447907129_n

    முருகானந்தன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
            

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (234)

    இவ்வார வல்லமையாளாராக போராளி திரு வின்சென்ட் ராஜ் (எவிடென்ஸ் கதிர்) அவர்களை வல்லமை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறது. தனது உயிரையும் பணையம் வைத்து அவர் பல சமூக நலக் காரியங்களில் ஈடுபடுகின்றார்.
    சென்ற ஆண்டு நடந்த சங்கர் , கௌசல்யா – சங்கர் கொலையில் கௌசல்யாவின் தரப்பில் நீதி கிடைக்க போராடியவர் இவர்  போராடிக் கொண்டிருப்பவர் என்பதோடு அப்பெண் மீண்டும் கல்வியைத் தொடர உதவியதோடு புத்துணர்ச்சியுடன் புது வாழ்வு தொடங்கிடவும் வேலை செய்து சுய காலில் நிற்கவும் தைரியம் அளித்தவர்.
    அது மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் கொலை, பென்கள் ஆலியல் வன்கொடுமை ஆகியற்றிற்கு உடனடியாக  தனது உதவிக் கரம் நீட்டி அவர்களுக்காக சட்டப்படி நீதி கிடைக்க போராடி வருகின்றார்.

    சங்கர் கொலை குறித்த நிகழ்வில் பேசிய எவிடன்ஸ் கதிர், “இளவரசனின் திவ்யா, கோகுல்ராஜின் ஸ்வாதி ஆகியோர் இன்று நம்முடன் இல்லை.. ஆனால் சங்கரை இழந்த கெளசல்யா இன்று நம்முடன் இணைந்து நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார். தேசிய சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதிய படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழக அரசு தங்கள் மாநிலத்தில் சாதிய படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதிய படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் சாதி எதிர்ப்புக்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த அந்த பெண்கள் அனைவரும் தியாகிகள் தான்.

    உடுமலை சங்கர் நினைவு நாள் கருத்தரங்கம்

    சங்கரின் படுகொலைக்கு பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரண தொகையில் சுமார் 1.75 லட்சம் ரூபாய் இன்னும் வரவேண்டியுள்ளது. இருந்தாலும் கொலை நடந்து ஒரு வருட காலம் ஆகியும், குற்றவாளிகளுக்குப் பிணை கிடைக்காமல் பார்த்துக்கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

     பாதிக்கபடும் பெண்களுக்கு குரம் கொடுத்தும், பட்டியல் இன மக்கள் மேலான வன்முறையையை எதிர்த்தும் செயல்பட அனைவர்க்கும் இத்தேர்வு ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
    இவ்வார வல்லமையாளராக எவிடென்ஸ் கதிர் அவர்களை பரிந்துரை செய்த முனைவர் கே. சுபாஷினி அவர்களுக்கு வல்லமையின் நன்றி.இந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
    Share
  • படக்கவிதைப் போட்டி 122-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    dryleaf

    பசும்புல்லின் உச்சிமீது ஒய்யாரமாய் வீற்றிருக்கும் சருகை அருகுசென்று அழகாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் ஒளிஓவியர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் என் கனிவான நன்றி!

    பச்சிலை பழுத்து மண்ணேகுவதுபோல், உடலென்னும் துச்சிலைச் சார்ந்திருக்கும் உயிரும் காலனின் அழைப்புவரும் வேளையில் உடல்நீத்து விண்ணேகுகின்றது! இலை சொல்லும் நிலையாமைப் பாடம் மானுடர் அனைவரும் கற்கவேண்டிய ஒன்றல்லவா?

    புல்லையும் சருகையும் வைத்துப் புதுக்கவிதை புனையக் காத்திருக்கிறார்கள் புலவர் பெருமக்கள்; அவர்களை அவைக்கழைப்போம்!

    ***

    ”தாத்தனுக்கும் பேரனுக்கும் நடுவிருக்கும் நல்லுறவு, தொடக்கத்திற்கும் முடிவிற்குமான தொடர்கதையின் ஒரு தொகுப்பு” என்று வாழ்க்கையை அனுபவித்தறிந்த முதுமையொன்று இளமையிடம் இன்பமாய்ப் பகிர்ந்துகொள்வதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியம்.

    தலைமுறை

    வையகம் என்ன வென்று
    வாழ்ந்து பார்த்து அனுபவித்த
    என் நாட்களவை நிறைவடையும்
    வயோதிக வேளை தன்னில்

    என்ன தான் உலகென்று
    வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
    என் னுலகாக மாறியெனைப்
    புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

    என்னுள் மறைந் திருக்கும்
    குழந்தை யதை எழுப்பிவிட்டு
    உன்னுள் தொலைக்கச் செய்யும்
    மாயம் உந்தன் விளையாட்டு!!!!

    எத்தனை கவலைகள்
    எண் ணத்தில் இருந்தாலும்
    அத்தனையும் மறைந்து விடும்
    முத்தே உன் மொழிகேட்டு….

    தத்தித் தத்தி நடந்து வந்து
    தாத்தாயென்றழைக் கையிலே
    என்தலைமுறை”- யே உனைவாரி
    முத்தம் வைக்கத் தோன்றுதடா

    தாத்த னுக்கும் பேரனுக்கும்
    நடுவி லிருக்கும் நல்லுறவு
    தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
    தொடர்கதையின் ஒரு தொகுப்பு

    ஓய்வெடுக்கும் வயதி லென்னை
    ஓயாமல் உன்தன் பின்னே
    ஓட வைக்கும் ஓவியமே கேள்

    ஓர் அவாவும் எனக்குள் ளுண்டு

    அன்று துளிர்த் தெழுந்து
    அகிலம் காண ஆசைப்படும்
    பச்சைப் புல்வெளி மேல்
    படர்ந்திடும் ஓர் சருகாய்

    அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
    உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
    வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
    இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்.
    உன் மடிமீது நானும்
    என் தலை கோதி நீயும்!!!!

    ***

    பழுத்துவீழ்ந்த இலைகண்ட பசும்புல் இளமைச் செருக்கோடு ஏளனமாய்ச் சிரிக்க, வாழ்வின் நிலையற்ற தன்மையை புல்லுக்குப் புரியும்வண்ணம் நல்லசொல்லெடுத்துச் சருகு உரைப்பதைக் கேட்கமுடிகின்றது திருமிகு. ராதா மரியரத்தினத்தின் பாவில்.

    காலைக் கதிரவனின்
    ஒளி முத்துக்களைக் 
    வயிற்றில் தாங்கியபடி 
    வளைந்து மிளிர்ந்தன புற்கள்
    அவற்றின் கண்களிலோ பெருமிதம்
    பசுமைகளுக்கெல்லாம் தாமே
    குத்தகை எடுத்தது போலப் பெருமிதம்
    கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பசுமை
    தூர நின்ற மரத்தில் 
    பழுத்துச் சுருங்கிய இலையொன்று
    இனித் தாக்குப்பிடிக்கவியலாத நிலையில்
    விடுதலையடைய வீசிய காற்று
    அதனை எடுத்துச் சென்று
    தூரத்திலிருந்த பசும் தரையில் போட்டது
    தீண்டத் தகாதவனைப் போல
    பசுமைகள் கொக்கரித்தன
    ஏளனமாகப் பார்த்தன
    இலை மெதுவாகப் பேசியது
    என் தாய் மிக வலிமை மிக்கவள்
    இன்று முளைத்து நாளை கருகும் புல்லல்லள் அவள்
    அவள் பல நூறு ஆண்டுகள் வாழ்வாள்
    பிறப்பு போல இறப்பு நிச்சயம் அது ஒரு நாள் உனக்கும் புரியும் என்றது

    ***

    ”பச்சைப் பசேல் பசுமையா? கருகிவீழும் சருகு நிலையா? இதில் எது நிலையானது…நிஜமானது? மண்ணில்தோன்றிய அனைத்தும் சருகாகி மறைவதே வல்லவன் வகுத்த விதி…இதற்கில்லை விலக்கு!” எனத் துலக்கமாய்ச் சொல்லுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    எது நிஜம் ?

    கண்ணைக் கவரும்
    பச்சைப் புல்தளம் நிஜமா ?
    அல்லது
    கருகிப் போன சருகுதான்
    நிஜமா ?
    சிரசிலிருந்து கீழே விழுந்தால்
    உரோமத் துக்கு
    ஒரு மதிப்பில்லை !
    பச்சைக் கம்பளப் பின்புலம்
    நிஜமா ?

    போலிப் பின்புலம் !
    நீர் வறண்ட பாலையில்
    வேர் விடுமா
    ஆல மரம் ?
    பச்சைப் புல் எல்லாம் கரிந்து
    நரையாகி
    ஒருநாள் சருகாகும் !
    சருகெல்லம் மீண்டும் கண்கவர்
    பச்சை இலை ஆகுமா ?
    பிறந்த ஒவ்வொன்றும் பசுமையாய்
    இளமையில் கவர்ந்து
    முதுமையில் கூனிக் குறுகிச்
    சருகாய்ப் போகும்
    இதுவே விதி !

    ***

    ”பச்சை நிரந்தரமன்று..உன் பகட்டும் நிரந்தரமன்று” என்று பசும்புல்லுக்குச் சுடச்சுட வாழ்க்கைப் பாடம் புகட்டும் அனுபவசாலியான சருகைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்!

    நிலையல்ல

    பச்சையாய்த்தான் இருந்தேன்,
    பழுத்துதிர்ந்து சருகனேன் இன்று..

    உயரத்திலிருந்தேன் ஒயிலாக,
    உதிர்ந்த சருகாய் இன்று..

    பரிகாசம் செய்யாதே
    பச்சைப் புல்லே,
    பச்சை நிரந்தரமல்ல
    உன்
    பகட்டும் நிரந்தரமல்ல..

    வான்மழை பொய்த்தால்
    வாடிவிடுவாய் நீ,
    மனிதன் நினைத்தால் நீ
    மாண்டுவிடுவாய்..

    காற்று வந்தது,
    கொண்டுசென்றது சருகை
    கதைசொல்ல வேறிடத்தில்…!

    சருகையும் புல்லையும் வைத்து அருமையாய் வாழ்வியல் உண்மைகளை விளம்பியிருக்கின்றனர் நம் வித்தகப் புலவர்கள்; பாராட்டுக்கள் அவர்களுக்கு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

    நிலையில்லா நிலை

    இலையாய் நான் இருந்த கதை
    கேளாயோ பச்சைப் புல்வெளியே!
    பூமித்தாய் மடியினிலே விதை ஒன்று
    அழகுச் செடியாய் பிறந்ததம்மா!
    அச் செடியில் தளிர் இலையாய் இருந்து
    வந்த தங்க மகன் நானம்மா!
    மொட்டோடும், மலரோடும்

    ஆடி மகிழ்ந்ததும் நிசமம்மா!
    காயோடும், கனியோடும்
    களித்துக் கிடந்ததும் உண்டம்மா!
    மரப் பெண்ணின் மானம் காக்க
    நானே ஆடையாய் இருந்ததும் உண்டம்மா!
    காற்றுத் தேவன் ஆணைப்படி
    பூமியில் விழுந்தேன் நானம்மா!
    புதிய இலைகள் வாழ்வதற்கு
    பழைய இலை நான் உதிர்ந்து விட்டேன்!
    சருகாய் நானும் உலர்ந்து விட்டேன்!
    மண்ணில் கலந்து மறையுமுன்னே!
    மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன்!
    ’நிலையாமை ஒன்றே நிலை’ என்னும்
    உண்மை நானும் உணர்ந்து விட்டேன்!
    மனிதர்கள் உணர்ந்திட நான் உரைத்தேன்!
    வாழ்ந்து முடித்த மனிதர்களே!
    வாழ்க்கைத் தத்துவம் தெளிந்திடுங்கள்
    இளைய தலைமுறைக்கு இடம் கொடுங்கள்!
    இளைய தலைமுறையே, மூத்த தலைமுறை
    இளைப்பாற, இதமாய் அவர்களைத் தாங்கிடுங்கள்! !

     ’பழையன கழிதலும் புதியன புகுதலுந்தானே’ வாழ்க்கை நியதி? அதற்கு இலைகளும் விதிவிலக்கிலையே! ’நிலையாமை ஒன்றே நிலையானது’ எனும் வாழ்க்கைத் தத்துவத்தைத் தன்கவி வழியே நம்செவிபுகச் செய்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • வல்லமையின் மறுவடிவம் பாரதி!

    கவிஞர் இடக்கரத்தான்

    1449822241-4574

    வல்லமையில் மறுவடிவம் பாரதி 

    நரிகள் வெள்ளையர்க்குத் தானவனும் பேரிடி 

    அடிமைப் பள்ளமதில் நமைத்தள்ளிப் படுத்தியவர் தமைப்பதறச் செய்தவன் – பாட்டால் – வைதவன்!
    அனைவர்க்கும் வேண்டும்தான் வல்லமை – எதிர்ப்பு அஞ்சிஓடும் வண்ணம்திடச் சொல்லமை – செய்யின் உனைத்துரத்தும் எதிர்ப்பலையை உன்காலில் விழச்செய்வாய் என்றான் – மனதில – நின்றான்!
    பாரதியின் பாட்டனைத்தும் நெருப்பு – வெள்ளைப் பதர்களுக்கு அவனென்றால் வெறுப்பு – பெரும் பாரதிரும் பாட்டாலும் பரங்கியரை ஆட்டிவைத்துக் காட்டினான் – துரத்தி – ஓட்டினான்!
    ரௌத்திரமும் கொள்ளுமெனச் சொன்னவன் – பாட்டு ரதமோட்டி வலம்வந்த தென்னவன் – பெரும் ஔவியமும் கொண்டவெள்ளை அரக்கர்தமை நடுநடுங்கச் செய்தவன் – வாகை – கொய்தவன்!
    தோட்டாக்கள் எனும்அவனின் பாட்டு – வெள்ளைத் துரைமார்க்கு வைத்ததுதான் வேட்டு – பாட்டு நாட்டோரை உந்தவைக்க நரிகளெனும் பரங்கியரும் பணிந்தார் – ஓடத் – துணிந்தார்!
    பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி – விடுதலைப் போரில்ரதம் செலுத்தியநற் சாரதி – எங்கள் நாட்டின்பெரும் செல்வமதை நக்குபவர் நாவறுப்பேன் என்றவன் – பாட்டால் – கொன்றவன்!
    பாரதியை நெஞ்சிலென்றும் வைப்போம் – அவன் புனிதமொழி தமைவணங்கி மெய்ப்போம் – நமை யாரெதிர்க்க வந்திடினும் அச்சமில்லை அச்சமில்லை சொல்லுவோம் – நிமிர்ந்து – செல்லுவோம்!
    06.08.2017

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -89

    க.பாலசுப்பிரமணியன்

    கற்றலும் நுண்ணறிவும் (Learning and Intelligence)

    education-1-1-1

    பல நேரங்களில் பள்ளிகளிலும் கல்வித்துறைகளிலும் கற்றலின் குறிக்கோள் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தகுதிக்குத் தயார் செய்வதாகமட்டும் இருக்கின்றது. இதற்கு மையமாக ஒரு பாடப்புத்தகமும் அதைச் சார்ந்த தேர்வுகளும்  முன்வைக்கப்படுகின்றன.  பாடப்புத்தகங்களைச் சார்ந்த  தேர்வுகளும் பொதுவாக ஒரு மாணவனின் கற்றலின் திறன்களின மதீப்பீட்டிற்காக (Assessment of skills)  நடத்தப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த  நோக்கங்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டு வெறும் நினைவுகள் சார்ந்த (Memory based) மற்றும் செய்திகள் சார்ந்த (information based) தேர்வுகளாக மாறி அதன் முழுமையான பலனைத் தருவதில்லை. இதன் காரணமாக தேர்வுகளின் மதிப்பீடுகள் ஒரு மாணவனின் முழு கற்றலையோ அல்லது கற்றல் சார்ந்த திறன்களையோ  வெளிப்படுத்திடுவதில்லை. மதிப்பெண்களின் தரக்குறைவால் அந்த எண்களுக்கும் அவை வெளிப்படுத்தும் திறன்களுக்கும் எந்த சம்பந்தமும் சமன்பாடும் இருப்பதில்லை. ஒரு மாணவனின் நுண்ணறிவை வளர்ப்பதற்க்கோ அல்லது மதிப்பேடு செய்வதற்க்கோ அவை காரணமாகவோ அல்லது கருவியாகவோ அமைவதில்லை.

    எந்த ஒரு பொருள் கருத்து அல்லது  அறிவுத் துகளையோ அலசி ஆராய்ந்து அதை புத்திக்கூர்மையுடன் உபயோகிப்பதே நுண்ணறிவாகக் கருதப்படுகின்றது. ஆகவே நுண்ணறிவை வெளிப்படுத்துவதற்குத் தேவையான நிகழ்வுகள் – அறிதல்,(Cognition) புரிதல் (understanding). இடம், பொருளுக்குத் தகுந்தவாறு ஒரு கருத்தை உபயோகித்தல்,(contextiual application of knowledge) அந்த உபயோகத்திற்கான  முழுமையான பலனை  அடைதல் (Maximizing the application of knowledge)  ஆகியவையாகும். எப்பொழுது இந்த நிகழ்வுகளைச் சார்ந்த கற்றல் ஏற்படவில்லையோ அப்பொழுது கற்றலின் நோக்கம் பலவீனமாகி  “நுனிப்புல் மேய்தல்” என்ற சொற்றொடருக்கு விளக்கமாக அமைந்துவிடும்.

    பல நூற்றாண்டுகளாக “நுண்ணறிவு” (Intelligence) என்பதை வெறும் “அறிவுசால்  நுண்ணறிவாகவே”  (Cognitive Intelligence) கருதிவந்தனர். அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் ஒருவர் காட்டும் திறனை  வைத்து அவர்களுடைய  நுண்ணறிவு மதிப்பிடப்பட்டு அதற்கான குறியீடுகள்  Cognitive intelligence scales ) தயாரிக்கப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட அறிவுத்திறன்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் நுண்ணறிவில் குறைந்த தகுதி உள்ளவர்களாகக் கருதப்பட்டு சிறப்பான வேலைகளுக்கும் செயல்களுக்கும்  தகுதியற்றவர்களாகக்  கருதப்பட்டனர்.. “நுண்ணறிவு எண்கள்”(Cognitive Index)  ஒரு மனிதனின் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

    பல ஆராய்ச்சிகளின் காரணமாக, ‘நுண்ணறிவு’ என்பது வெறும் ‘அறிவுசால்” வெளிப்பாடு அல்ல என்றும்   அதிகமான நேரங்களில் அது ‘உணர்வுசால்”  நிகழ்வென்றும் அறியப்பட்டு “உணர்வுசால்  நுண்ணறிவுக்கான ” (Emotional Intelligence) விளக்கங்களும் அதற்கான குறியீடுகளும்  கண்டுபிடிக்கப்பட்டன. நடைமுறையில் “உணர்வுசால் நுண்ணறிவில்” மேம்பட்டவர்கள் ‘அறிவுசால் நுண்ணறிவில் மேம்பட்டவர்களைக் காட்டிலும் திறனுடையவர்களாகவும் வாழ்க்கைப் பாதையில் வெற்றிப்படிகளை எளிதாக அடைபவர்களாகவும் அறியப்பட்டனர். ஆகவே  கல்வி பாடத்திட்டங்களில் “உணர்வுசால் நுண்ணறிவை” வளர்ப்பதற்கான  வழிகளையும் கோட்பாடுகளையும், நடைமுறைத் திட்டங்களையும் கொணருவதற்க்கான முயற்சிகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

    உணர்வுசால் நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சிகளின் விளக்கத்தையும் கற்றலுக்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அதன் பயன் பற்றிய பல மேபட்ட விளக்கங்களை டேனியல் கோல்மான் என்ற அறிஞர் மற்றும்  ஆராய்ச்சியாளர் விளக்கமாக எழுதி  உள்ளார். ஒரு தனி மனிதனின் தன்னறிவு, தன்னடக்கம், முயற்சிகள், உறவுமுறைகள், செயல் பரிமாணங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள், வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கு, சமூக உள்ளுணர்வுகள் போன்ற பல பரிமாணங்கள் இந்த உணர்வுசால் நுண்ணறிவால்  பாதிக்கப்படுகின்றன.

    எனவே கற்றல் நடக்கும் காலங்களில் அதற்கான பாடத் திட்டங்கள், பாடம் நடத்தும் முறைகள், அதற்கான பயிற்சிகள் ஒரு மாணவனின் உணர்வுகளை வலுப்படுத்துவதாகவும், வளப்படுத்துவதாகவும், மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இவைகள் வெறும் புத்தகக் கட்டமைப்புக்குள் இருக்கும் எழுத்துக்களுக்கும் பின்னப்படுவதில்லை. இதனால்தான் “பாடத் திட்டங்களும், புத்தகங்களும் ஒரு விமானத்திற்குத் தேவையான ஓடுகளத்தைப்  போல் கருதப்படுகின்றன.” எவ்வாறு ஒரு விமானம் ஓடுகளத்தை    உபயோகப்படுத்தி வானில் பறந்து உயர்காணலைத் தேடிச்  செல்கின்றதோ அதே போல் கற்றலின் நோக்கம் புத்ததகங்களையும் பாடங்கள் நடத்தப்படும் முறைகளையும் உபயோகப்படுத்தி நுண்ணறிவின் உச்சங்களைத்  வேண்டும் இந்த நுண்ணறிவு அறிவுசால் நுண்ணறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவு ஆகிய இரண்டு வளங்களின் இனப்பிப்பில் வளர்ந்து வளப்பட்டு மேன்மை அடைதல் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக்க அவசியம்.

    நுண்ணறிவின் மற்றொரு பரிமாணமாக ‘திறன் நுண்ணறிவு’ (Skill Quotient ) கருதப்படுகின்றது . ஒரு மாணவன் தன்னுடைய அறிவுசால் நுண்ணறிவோடும், உணர்வுசால் நுண்ணறிவோடும் எவ்வாறு தன கருத்து சார்ந்த மற்றும் கைத்திறன் சார்ந்த நுண்ணறிவை  வெளிப்படுத்துகின்றானோ  அவனுக்கு  வெற்றிப்படிகளின் பயணம் மிகவும் எளிதாக அமைகின்றது. அறிவும், உணர்வும் சார்ந்த நுண்ணறிவுகள் எவ்வளவு இருந்தாலும் அவைகள் அவனுடைய செயல் பரிமாணங்களில் வெளிப்படவில்லையென்றால்  விழலுக்கிறைத்த நீரைப்போல் வீணாகிவிடுகின்றது. ஆகவே கற்றலின்  முழுமையின் வெளிப்பாடாக செயல்திறன்கள் அமைய வேண்டும். எப்போது இந்த செயத்திறன்கள் அவனுடைய அறிவு மற்றும் உணர்வுசால் நுண்ணறிவுகளோடு இணைந்து ஒளிர்கிறதோ அப்பொழுது அவனுடைய முழுத்திறனும் உலகுக்கு வெளிச்சம்போட்டுக்  காட்டப்படுகின்றது. ஆகவேதான் பல நாட்டுக் கல்வித்திட்டங்களில் இந்த மூன்று நுண்ணறிவுகளின் சங்கமத்தை (IQ, EQ and SQ) உயர்த்துவதற்கான முயற்சிகள் தளர்வின்றி எடுக்கப்படுகின்றன. நம்முடைய பாடத்திட்டங்களும் அதன் வரைபாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் இன்றியமையாததாக ஆகின்றது.

    தொடருவோம்

    Share
  • ஊர் நினைப்பு

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    நான் இல்லாமலேயே  எங்கோ வெகு தூரத்தில் இருக்கிறதே

    என் கால் தடம் படாத அந்த சவுக்கு காடும் இருக்கின்றதே

    மழை வராத காலங்களில் மணல் சுடுவதும் தெரிந்ததே

    கடும் வெய்யிலில் எனக்கு நூங்கும், இளநீரும் தாகம்தீர்த்ததே!

     

    சப்பாத்தி முள்ளில் பெயரெழுதிய அந்த கள்ளிச் செடி வரவேற்றதே

    நான் வளர்த்த தென்னையும்,மாமரமும் காயும்,கனியுமாய் நின்றதே

    ஊர் அம்மன் கோவில் குகை என் குரலை அன்றும் எதிரொலித்ததே

    ஏரியும், குளமும் வறண்டு பாலைவனமாய் காட்சி அளித்ததே!

     

    அன்று மழை பெய்து பயிர்கள் யாவும் பசுமையாய் காணப்பட்டதே

    மழை இன்மையால் உழவு மாடுகளும்,பசுக்களும் காணாமல் போனதே

    விவசாய  நிலங்களும் வீட்டு  மனைகளாக கூறு போடப்பட்டதே

    மக்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாய் ஆனதே!

     

    ஏதோ ஒருநாள் குலதெய்வம் வேண்டுதலுக்காக ஊர்  கூடுகின்றதே

    அன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து விழாவிற்கு உதவி செய்கின்றதே

    யாதும் ஊரே ! யாவரும் கேளிர் என்ற பழமொழி ஞாபகம்  வருகின்றதே

    ஊர் விட்டு, நகரில் வசித்தாலும் ஒரு நாள் ஊர் நினைப்பு   மனதில் தோன்றுதே !

     

     

    Share
  • நட்பு தினம்

    ரா.பார்த்தசாரதி              

    நட்பு என்பது இருபாலார்க்கும், மாநிலங்களுக்கும் பொது 

    ஒருவர் பொறை, இருவர் நட்பு என்பது  பழமொழி 

    நல்லவர்களது  நட்பு என்பது  வளர்பிறை போன்றதாகும்

    தீயவர்கள்     நட்பு  என்பது  தேய்பிறை  போன்றதாகும் !

     

    நட்பு  என்பதின்   அடிப்படை அன்பும், நம்பிக்கையுமே 

    பழக, பழக  ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையே,

    பண்புடையோர் நட்பு என்றும்  இன்பம் தரும் 

    பண்பிலார்  நட்பு  என்றும்  துன்பத்தை  தரும் !

     

    ஒத்த உணர்ச்சியே  ஒருவனின்  நட்பினை பெருக்கும் 

     மாறுபட்ட  உணர்ச்சியே  ஒருவனின் நட்பினை விலக்கும் 

     ஆடை  அவிழும் போது மறுகை  தானாகவே பிடித்திழுக்கும் 

    நல்ல நண்பனின் உதவியும் தானே தேடி வரும் !

     

    நட்பிற்கு இலக்கணம், பிசிராந்தையார், கோப்பெருங்சோழன்

     நட்பிற்கு இலக்கணம் ஒளவையாரும், அதியமானும் 

    உலகில்  தவிர்க்க முடியாதது  பந்தமும், பாசமும்,

    உலகில்   பிரிக்கமுடியாதது  உறவும்,  நட்பும்  !

                 

    அண்டை மாநிலத்துடன் நட்பாய் இருந்தால் பிரச்சனைகள் தீரும் 

    ஒருவர்க்கொருவர் நேசமும், நட்பாய் இருந்தால் நன்மைகள் பல.

    யாதும் ஊரே, யாவரும் கேளிர் ! என்பது   பழமொழியாகும் 

     நட்பு தினத்தன்று, நட்பை பாலமாக, அமைப்பதே புது மொழியாகும் !

     

     

     

    Share