Blog

  • கிரேசி QUOTE from கிரேசிஸ் கிழிஞ்ச COAT….!

    1)தை பொறந்தா வழி பொறக்கும்….ஆனா ஆடி பொறந்தாத்தான் தை பொறக்கும்….!
    2)”சினிமா வாழ்க்கை மாதிரிதான்….ஃபர்ஸ்ட் -ஹாஃப் நன்னா இருந்தா செகெண்ட் -ஹாஃப் சுமாராத்தான் இருக்கும்’’….அதான் சொல்றேன் ‘’இண்டெர்வெல் விடாதீங்க….
    கிரேசி கோட் ஃப்ரம் க்ரேசிஸ் கிழிஞ்ச கோட்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (2)

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
    சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • ’’பொது வெண்பாக்கள்’’….!

     

    அச்சம் விலகிடும் ஆண்மை பெருகிடும்
    நிச்சயித்தக் கர்மம் நொறுங்கிடும் -இச்சகச்
    சேறான மாயையில் செந்தா மரைபூக்கும்
    கூறாமல் சந்யாசம் கொள்….

    பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
    ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
    காதை உரைத்தது கீதை உரைத்தது
    ஏதும் உறைக்கலை யே….

     
    பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
    மயமான மூட மனமே -அயலாம்
    இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
    சுவைசுகித்து வாழ சுகம்….

     
    வருவதை ஏற்று வராததை விட்டு
    தருவதில் கொள்வாய் பெருமை -இறைவனவன்
    தானேதன் கைப்பட தானியம் எண்ணிடுவான்
    தானேமே நாம்லிக்கா ஹை….கிரேசி மோகன்….!

    Share
  • ’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’(பொன்மகள் வந்தாள்)….!

    VaraMahaLakshmi
    “பிருகு குலத்தில் பிறந்த திருவே
    உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
    அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
    வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….!
    —————————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்
    ——————————————————————————————————–

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….!
    ——————————————————————————————————————

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….!

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
    பாலின் நிறத்தில் பொலிவு”….!

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….!கிரேசி மோகன்….!
    ————————————————————————————————————————–

    Share
  • புறநானூற்றில் – அறம்

    -முனைவர் கோ.வசந்திமாலா 

         தனிமனிதன் தன் கடமைகளைத் தவறாது செய்வது அறமாகும். மனிதனின் நல்லொழுக்கம் என்பது செயல், எண்ணம் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பண்டைய தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைக் கொள்கையாகவோ, கோட்பாடாகவோ போற்றவில்லை. சமயமாகவும் கருதவில்லை. அறத்தை வாழ்க்கை நெறியாகவே போற்றினார்கள்; வாழ்ந்தார்கள். மனிதன் தன் வாழ்க்கையின் பலவகை அனுபவங்களிருந்து அறிவு பெறுவதே சிறந்த வாழ்வியலாகும். அவ்வாழ்வியல் தூய்மையானதாக அமைய வேண்டுமெனில் மனிதன் தனக்கென ஒரு தனி நியதி அறத்தை மேற்கொண்டு வாழவேண்டும். அத்தகைய அறவாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதனை, நமது சங்க இலக்கியப் பேழை என்று அழைக்கப்படும் புறநானூறு செம்மையுறச் செய்துள்ளது. நமது தமிழ் நாகரிகத்திற்கு ஒரு மூலதாரம்.

    அறம் – சொற்பொருள் விளக்கம்:

         அறம் என்பதற்குத் தமிழ் அகரமுதலி, “தருமம் புண்ணியம் அறச்சாலை, தருமதேவதை, யமன், தகுதியானது, சமயம், ஞானம், நோன்பு, இன்பம், தீப்பயன் உண்டாக்கும் சொல்”1 என்றுபொருள் தருகின்றது. இதில் கூறப்பட்டுள்ள அனைத்துச் சொற்பொருள்களும் மனிதனுடைய வாழ்வோடு தொடர்புடையனவாகும்.

         அறம் என்னும் சொல் முறையே வழக்கம், நீதி, கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது”2 என்று க.திருநாவுக்கரசு அவர்கள் அறம் என்பதற்குப் பொருள் கூறுகின்றார். எனவே, மனிதன் அறவழிப்பட்ட வாழ்க்கை வாழ்தலே தனி மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் நன்மையும், உயர்வும் தரும் என்பதனைக் கருத்தில் கொண்டு வாழவேண்டும்.

    இலக்கண நூல்களில் அறம்:

         பண்டைத் தமிழிலக்கண நூல்களும், இலக்கியங்களும் அறத்தைப் பின்பற்றியே எழுதப்பட்டனவாக அமைந்துள்ளன.

         தொல்காப்பியம் தமிழ்மொழியில் சிறந்த இலக்கண நூல். தமிழ் மொழியின் இலக்கணத்தைச் செம்மையாகக் கூறுவதுடன் அறக்கருத்துக்களையும் விளக்குகின்றது. தலைவன் தலைவியின் வாழ்வியல் அறன் வழிப்பட்டதாய் அமைய வேண்டும் என்பதனை,

         காமஞ் சான்ற கடைக் கோட் காலை
         ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
         அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
         சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”என்றும்,

    அன்பே அறனே இன்பம் நாணொடு”என்றும் மற்றும் பிற அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

    களவியல் உரை:

         இறையனார் களவியல் உரையிலும் அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில்,
    பெண்டிற்கு அறமென்பது கற்பு
         கற்பின் தலைநிற்றல்
         அறத்தொடு நிற்றலாகும்”என்ற அடிகளால் அறியலாம்.

    சங்க இலக்கியங்களில் அறம்:

         சங்க இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இருப்பினும் பெரிதும் அறக்கருத்துக்களையும், அவ்விலக்கியங்கள் போற்றுகின்றன. வீரத்திற்கு முதலிடம் கொடுத்தவர்கள் அறக்கருத்துகளையும் நினைவு கூர்ந்தனர்

         அறனும் அன்றே ஆக்கமும் தேயும்”என்று நற்றிணையும்,

    திறவோர் செய்வினை அறவது ஆகும்”7என்று குறுந்தொகையும்.

    அறம்புரி அருமறை நவின்ற நாவின்”8என்று ஐங்குறுநூறும்,

    அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி”9

    என்று பதிற்றுப்பத்தும்.

    ஞாயிறு திங்கள் எறனும் ஐவரும்”10என்று பரிபாடலும்,

    பிறர் நோயுந் தந்நோய் போல் போற்றி அறனறிதல்”11
    என்று கலித்தொகையும்,

    அறன் கடைப் படாஅ வாழ்க்கையும்”12
    என்று அகநானூறும், அறக்கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.

         அறநூல்களில் முதலாவதாக அமையும் திருக்குறள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தத் தேவையான அறக்கருத்துக்களக் கூறியுள்ளது. தனி மனிதனுக்குத் தேவையான அறங்களை வலியுறுத்துகிறது.

         “அறத்தான் வருவதே இன்பம்”13என்றும்.

    “அறனிழுக்கா தல்லவை நீக்கி”14என்றும்,

    “ அறன் அறிந்த மூத்த அறிவுடையார்”15என்றும்,

    அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்.”16என்றும்,

         “அறத்திற்கும், ஆதியாய் நின்றது”17     என்றும் கூறுவதை நோக்க இல்லறம் ஆடம்பரத்தாலோ, பொருள் சேர்க்கையாலோ, இன்னும் பிறவற்றாலோ உயர்ந்திருப்பின் பெருமையில்லை. பழிநீங்கி வாழ்வதலே சிறந்தது என்பதனைக் குறிப்பால் ஆங்காங்கே வள்ளுவர் உணர்த்துவதை அறியலாம். அரசுக்கும் அறமே துணை என்று வலியுறுத்துவதை அறிய முடிகின்றது. மேலும் அறத்தின் மாண்பினையும், அறம் செய்யப்படும் விதத்தையும் உணர்த்துகிறது.

    அறத்தின் சிறப்புக்கள்:

         ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தான் மறத்தலின் மேம்பட்ட கேடும் இல்லை. இதனை வள்ளுவர்,

         அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
         மறத்தலின் ஊங்கில்லை கேடு”18 என்கிறார்.

    புறநானூறு போற்றும் அறம்:

         பதினெண் மேல்கணக்கு நூல்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனக் கூறுவார். அவற்றில் எட்டுத்தொகை நூல்களின் வரிசையில் புறநூலாக இடம் பெறுவது புறநானூறு. இதில் பண்டைத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு, பண்பாட்டுக் களஞ்சியம், இலக்கியக் கருவூலம், இதனுள் தமிழகத்தின் கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திகளும், புரவலர்கள், புலவர்களைப் போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புக்களும், மன்னர் தம் மாண்பு பற்றிய அரிய குறிப்புகளும் போர்த்தினவுற்று அறமுறை பிறழாது போர்புரிந்து மார்பில் வேலேற்ற மைந்துடைக் காளையின் வீரப்பெருமைகளும், மூவேந்தரின் குடிமை முதலான பண்புகளும், குறுநில மன்னர்களின் ஆண்மை, ஈகை, ஒப்புரவு முதலான சால்புகளும், களச்சாவுற்ற தம் மைந்தரின் உடல் கண்டு பெருமிதமெய்திய தாயரின் மறக்குணங்களும் பிறவும் மிகவும் அழகுற எடுத்துணர்த்துகின்றன. மேல் எடுத்துரைக்கப்பட்ட அனைத்திலும் “அறம்” என்ற உணர்வு தோய்ந்து காணப்படுவது நாம் அறியத்தக்கது என்பதற்குச் சில சான்றுகள்.

         இவ்வுலகம் இன்றளவும் நிலையாக அமைவதற்குக் காரணங்கள் எவை என்று வேண்டுவோர்க்கு அறம் செய்வோரும், அறச்சிந்தனையுடையோருமே என்பதனை, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி,

         உண்டால் அம்ம, இவ் உலகம் – இந்திரர்
         அமிழ்தம் இயைவது ஆயினும். இனிது” எனத்
         தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்,
         துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
         புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்
         உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
         அன்ன மாட்சி அனையர் ஆகி,
         தமக்க என முயலா நோன் தாள்
         பிறர்க்கு என முயலுநர் உண்மையானே”19  என்கிறார்.

         அமிர்தமே இயைவது ஆயினும் தாமே தனியே உண்பவர்கள் இல்லை. அறம் செய்து வாழும் தன்மையுடைய பெரியோர்கள் இவ்வுலகில் வாழ்வதால் தான் இவ்வுலகம் நிலைந்துள்ளது என்று அறத்தின் சிறப்பு பேசப்படுகிறது.

         இக்கருத்து திருக்குறளில் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்,

         விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
         மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று”20 

         என்று வள்ளுவர் விருந்தினர் வெளியே இருக்க சாவா மருந்து என்றாலும் அமிர்தம் என்றாலும் உண்ணக்கூடாது என்று குறிப்பிடுகின்றார்.

    மறத்திலும் அறம்

         தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வில் மறக்குடியில் பிறந்தவர்கள். எனினும் அறம்போற்ற மறந்தில் என்ற கருத்தினை, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடடுமிப் பெருவழுதி நெட்டிமையார்,

         ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
         பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
         தென்புலவாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
        பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்
         எம்அம்பு கடி விடுவதும், நும் அரண் சேர்மின்
        என அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்”21என்ற படலில், போர் செய்வதிலும் அறம்போற்றி வாழ்ந்த அறச்சிந்தனைகளைப் புறநானூற்றுப் பாடல்கள்வழி அறியலாம்.

         உலகிலுள்ள உயிர்களைக் காத்துநின்று வலிமை மிக்கவர்களுடன் மட்டுமே போர் செய்ய வேண்டும். இல்லை எனில் பழி பாவங்கள் உண்டாகும் என்ற  இக்கருத்தை வள்ளுவர்.

         மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
         தன்னுயிர் அஞ்சும் வினை”22 

    காலத்தை வென்ற புறத்தில் – அறம் :

         நம் நாட்டின் பழந்தமிழர்கள் எக்காலத்திலும், எந்த நேரத்திலும் எல்லோருக்கும் வழங்கி அறம் போற்றி வாழ்ந்தார்கள் என்ற சிந்தனையை அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடிய

         ஒருநாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
         பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்
         தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ –
        இழைஅணி யானை இயல்தேர் அஞ்சி
        அதியமான்; பரிசில் பெறூம் காலம்
         நீட்டினும் நீட்டாது ஆயினும் யானைதன்
        கோட்டுஇடை வைத்த கவளம் போலக்…என்ற படலில் அதியமான் அஞ்சி எவ்வாற அறம் செய்து வாழ்ந்தான் என்பதனைப் புறப்பாடல் கல்வெட்டு போல் பதிவு செய்துள்ளது நமக்கு அகச்சான்றாய் அமைகின்றது.

    வள்ளுவர் கூறிய,

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
         பேரறி வாளன் திரு”24

    என்ற குறளைப் போல் அதியன் உள்ளூரில் பழுத்த பயன்மரம் போன்று வாழ்ந்தான் என்ற வாழ்வியல் இலக்கியமாய்ப் புறநானூறு புலப்படுத்துவது தெளிவாகிறது.

    அளந்தறியா – அறம்:

         அறம் என்பது மழை எவ்வாறு கைமாறு கருதாமல் வரையாது எல்லோருக்கும் ஏற்றத்தாழ்வின்றி வாரி வழங்குகிறதோ, அதுபோல் நம் முன்னோர்கள் அறம்செய்து வாழ்ந்தனர் என்பதற்கு மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடண்திணை வழிப் பாடியுள்ள பாடல்,

         நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
         யார்க்கும் எளிதே. தேர் ஈதல்லே
         தொலையா நல்இசை விளங்கு மலையன்
         மகிழாது ஈத்த இழை அணி நெடுந்தேர்
         பயன் கெழு முள்ளுர் மீமிசைப்
         பட்ட மாரி உறையினும் பலவே 

    நன்றாக வாழும் நாள்களில் மதுவை உண்டு மகிழ்ச்சியுடன் வாழும் நாள்களில் அறம் செய்தோர் பலர். ஆனால் மது அருந்தாமல் இருக்கும் வேளையிலேயும் விருப்பமுடன் பொன் அணிகலன் அணிந்த நெடுந்தேரினைக் கொடையாக வழங்கினான். அவ்வாறு வழங்கிய தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலை உச்சியின்கண் பெய்த மழைத்துளியினும் பலவாகும் என்று கூறியுள்ள இருக்கருத்து அறத்தின் உச்சநிலையைக் காட்டுவதாய் அமைந்துள்ளது.

    ***

    பார்வை :

    1. ம.சண்முகம்பிள்ளை – தமிழ் – தமிழ் அகரமுதலி
    2. க.த. திருநாவுக்கரசு – திருக்குறள் நீதிஇலக்கியம்
    3. தொல்காப்பியம்
    4. இறையனார் களவியலுரை
    5. நற்றிணை
    6. குறுந்தொகை
    7. ஐங்குறுநூறு
    8. பதிற்றுப்பத்து
    9. அகநானூறு
    10. புறநானூறு

     

     

     

    Share
  • ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

    சி.ஜெயபாரதன்

    cover-image

    வெனிஸ்  கருமூர்க்கன்

    [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
    தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++++++++++

    தோல்வி காயப் படுத்தி ஊனமுற்ற ஆத்மா
    ஓல மிட்டால் அமைதி செய்ய  முயல்வார் !
    வலித்துயர்  மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்
    புலம்புவோம்  அதிகம், அன்றி இணையாய்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] 

    என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்
    குதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்….
    ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்
    தான் இழந்ததை என்னிடம் களவாடி
    என்னை வறியன் ஆக்குவ துண்மை. 

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]

    +++++++++++++++++++

    முன்னுரை :  உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்கள், பல ஈரேழு வரிப் பாக்கள் எழுதியதாகத் தெரிகிறது.  கடந்த 400 ஆண்டுகளாய் அவரது நாடகங்கள் எல்லா மொழிகளிலும், அனைத்து நாடுகளிலும் பன்முறை அரங்கேறியுள்ளன.  அவரது நாடகங்களில் மனித ஆசாபாசங்கள், வெறுப்பு விருப்புகள், கோப தாபங்கள், அச்சம், மடமை, பொறாமை, அகந்தை, மோகம், மோசடி, வஞ்சக வாணிப இச்சைகள், நிறவெறி, இனவெறி மாந்தர்களைக் காணலாம். அவரது இறுதிக் காலங்களில்தான் ஹாம்லெட், மாக்பெத், கிங் லியர், ஒத்தல்லோ போன்ற துன்பியல் நாடகங்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. இந்த ஒத்தல்லோ நாடகம் அவரது காலத்திலும் இன வெறுப்பு, நிற பேதச் சண்டைகள், கொலைகள் இருந்ததைக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர்.  தானே நாடங்கள் எழுதியவர்.  நாடகக்கலை மன்றங்கள் அமைத்தவர். அவர்க்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஆணும் இருந்துள்ளனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் [ஏப்ரல் 23, 1564] இறந்த நாளும் [ஏப்ரல் 23, 1616] ஒரே தேதியில் நேர்ந்ததாகச் சிலர் கருதுகிறார்.

    othello-image-10

    மோனிகா & ஒத்தல்லோ

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் : 

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ துன்பியல் நாடகம் 400 ஆண்டுகட்கு முன்னர் வெனிஸ் நகரிலும் , சைப்பிரஸ் தீவிலும் நிகழ்ந்த இன வெறுப்பு, பொறாமையால் விளைந்த தீவினைக் காட்சிகள். அந்த இனச்சண்டை, நிறச்சண்டைகளால் பரிதாபமாகப் பலியான நபர்களைப் பற்றியது.  நாடகம் வெனிஸ் சாம்ராஜிய வல்லமைக் கருந்தளபதி ஒத்தல்லோ, அவனது வெள்ளைக் காதலி, இளங்குமரி மோனிகா ஆகியோரைச் சுற்றி நடப்பது. மோனிகா தந்தைக்குத் தெரியாமல் ஓடி, பலத்த எதிர்ப்பு மீறி, கருந்தளபதியை மணம் செய்து கொள்கிறாள்.  அவரது காதல் திருமண வாழ்க்கை நிற வெறுப்பு, இனக் கசப்பு சமூகத்தால் முறிந்து போகிறது.  முற்போக்குச் சிந்தனையுடைய, பராக்கிரம கருந்தளபதி ஒத்தல்லோ, பொய்யான மாற்றான் சொற்கேட்டு, மனைவி மீது நம்பிக்கை இழந்து, பயங்கரக் கொலை செய்யத் துணிகிறான். முன்கோபியான ஒத்தல்லோ “மூர்” [Moore] எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.  வெனிஸ் சாம்ராஜியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்ட பராக்கிரம வீரன்.

    othello-image-9

    மோனிகா, ஒத்தல்லோ, புரூனோ

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மூலம் வெனிஸில் 1565 ஆண்டில் வெளியான  ஓர் இத்தாலிய நாவல் ஹெகாடோமிதி [Hecatommithi] எனப்படுவதில் ஒரு பகுதி எழுதிய இத்தாலியர் பெயர் கிரால்டி சிந்தியோ [Giraldi Cinthio]. ஷேக்ஸ்பியர் தன் நாடகத்துக்காக,  அதில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்.

    20 ஆம் நூற்றாண்டில் உலக மாந்தரைத் துயர்ப் படுத்தும்  நிற வெறுப்பும், இனக் கசப்பும், ஷேக்ஸ்பியர் காலத்திலேயே [1600 ஆண்டுகளில்] மத்திய தரைக்கடல் ஐரோப்பிய பகுதியில் இருந்திருப்பதை ஒத்தல்லோ நாடகம் மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளது. 1940 ஆண்டில் அமெரிக்கா பிராட்வே தியேட்டரில் முதன்முதல் அரங்கேறிய ஒத்தல்லோ நாடகம்  [American and the Son of a Slave]  அடிமைகளைக் கொடுமைப் படுத்தி வந்த அப்போதைய அமெரிக்க வாழ் மாந்தருக்குப் பேரதிர்ச்சியும், பேரடியும் கொடுத்துள்ளது !  அந்த இன வெறுப்பும், நிற வேற்றுமையும் உலக நாடுகளில்  21 ஆம் நூற்றாண்டிலும்  பெருகி பேரிடர் அளித்து வருவது, நாகரீக மனித சமூகம் வெட்கப் பட வேண்டிய நிகழ்ச்சி !

    unnamed

    +++++++++++++++++++

    புரூனோ & ஷைலக்

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

    [ வெனிஸ் கருமூர்க்கன் ]

    அங்கம் –1 காட்சி –1 பாகம் : 1

    ++++++++++++++++

    நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

    ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]

    மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

    புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]

    காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

    ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

    சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

    கிராடினோ :சிசாரோவின் சகோதரன்.

    லோடாவிகோ : மோனிகா உறவினன், அரசாங்க அதிகாரி.

    எமிலியோ : புருனோவின் மனைவி.

    மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

    பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

    மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். 

    நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு

    ++++++++++++++++++

    othello-image-5

    ஒத்தல்லோ & மோனிகா

    அங்கம் : 1 காட்சி : 1 பாகம் : 1

    இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு.

    நேரம் :  மங்கிய மாலைப் பொழுது.

    அமைப்பு :  தெரு ஓர மரத்தடியில் இராணுவச் சேவகன் புரூனோ பெருஞ் சினத்துடன் ஒருவனைத் திட்டிக் கொண்டு நிற்கிறான். அப்போது  செல்வந்த நண்பன் ஷைலக்  வருகிறான்.

    ஷைலக் : புரூனோ !  யாரைத் திட்டிக் கொண்டிருக்கிறாய் ? யார் மீது கோபம் உனக்கு ?

    புரூனோ : கேட்காதே அந்த அநியாயத்தை ! நான் நொந்துபோய் உள்ளேன்.  என மனத் துடிப்புக்கு அந்த கருப்பன் தான் காரணம் ! என் உயர் பதவி போச்சு !  என் யுத்த அனுபவம் வீணாய்ப் போச்சு ! மூவர் ஆதரித்து எடுத்துரைத்தும் எனக்குக் கிடைக்காமல் போச்சு !

    ஷைலக்: யாரந்தக் கருப்பன் ?   எந்த வேலை கிடைக்காமல் போச்சு ?

    unnamed (1)

    மோனிகா

    புரூனோ :  அந்த தடித்த  உதடன் எனக்குத் தர வேண்டிய லெஃப்டினென்ட் வேலையைத் தகுதியே இல்லாத  காஸ்ஸியோவுக்குக் கொடுத்துவிட்டான். வெனிஸ் நகரத்தைச் சேராதவன்.  பிளாரென்ஸ்  நகரத்தைச் சேர்ந்தவன் காஸ்ஸியோ ! உயர் பதவி  கொடுத்த ஆப்பிரிக்க  மூர்க்கன் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவன் ! அகந்தை கொண்டவன் !  அண்டங் கறுப்பன்  !

    ஷைலக் : யார் ?  அந்த மைக்கேல் காஸ்ஸியோவுக்கா மேற்பதவி கிடைச்சது ?  நம்ப முடியவில்லையே !  யாரை மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

    புரூனோ :  ஆம் !  எனக்குத் தெரிந்த அந்த கருப்புத் தளபதி ஆப்பிரிக்க  “மூர்” இனத்தவன்தான் !  காட்டுமிராண்டி ! ஆற்றல் படைத்த கருப்பன், அறிவில்லாத அந்தக் கழுத்தைக்குத்தான் உயர்பதவி  அளித்துள்ளான் !  எனக்குத் தருவதாய்க் கூறி, என்னை ஏமாற்றி விட்டான்.  எனக்குத் தெரியாமல் எப்படிக் காஸ்ஸியோவுக்கு  தரலாம் ?  அவனுக்குக் கூட்டல், கழித்தல் மட்டுமே தெரியும்.  எந்தப்  போரிலும் கலந்து கொள்ளாதவன். முன்னின்று படை நடத்திச் செல்லும் அனுபவமும் கிடையாது.

    ஷைலக் :  ஜெனரலை ஏன் மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

    புரூனோ:  கருப்பன் என் மேலதிகாரி.  மூர்க்கன் !  முரடன் ! காமாந்தகன் ! கன்னிப் பெண்ணைத் தூக்கிச் சென்றவன் !  கள்ளத்தனமாய்க் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டவன் !  ஆப்பிரிக்க  “மூர்”  இனத்தைச் சேர்ந்தவன் ! அவன்  ஒரு  முசுடன் !  அதனால்  கரு மூர்க்கன் என்று திட்டுகிறேன்.

    ஷைலக்:  என்ன ?  இளங்கன்னி மோனிகாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டானா?  மோனிகா என்னருமைக் காதலி அல்லவா ?  என்னைப் பற்றி, அவள் தந்தையிடம் சொல்லி மோனிகாவைக் கட்ட நீயெனக்கு உதவி செய் ! , புரூனோ ! நானுனக்குப் பண முடிப்பு அளிக்கிறேன் !   அவள் தந்தை சிசாரோவுக்கு இதை நாம் தெரிவிக்க வேண்டும் !   அவர் மோனிகாவை எனக்கு மண முடிப்பதாய் வாக்குறுதி அளிக்க வேண்டும் !

    புரூனோ :  நான் கருமூர்க்கனை வெறுக்கிறேன்.   மோனிகா வெண்ணிலவு போன்ற வெள்ளைப்புறா !  அவன் கருநிலவு ! ஏதாவது உடற் பொருத்தம் உள்ளதா ?  அவள் வெனிஸ் அழகி ! வீனஸ் !  சிறு வடிவம்.  அவன் பூத வடிவம் ! இருவரையும் பார்த்தால் யானைக்குப் பக்கத்தில் வெள்ளைப் பசு நிற்பது போல் தெரியும் !  அவள் அப்பனைக் கூப்பிடு ! மகள் தப்பினைக் காட்டிடு ! கோபத்தைக்  மூட்டிடு !  மகிழ்ச்சி மனத்தில் விஷத்தை  ஊற்றிடு !  தெருவைக் கூட்டி முரசடி ! ஊரார், உற்றார் உறவினர்க்கும் உரைத்திடு !  ஊரைக் கூட்டி அவர் பேரைக் கெடு !  தளபதிக்கு எதிராய்ப் பேசி மோனிகாவின் தந்தைக்கும் அவருக்கும் பிளவை உண்டாக்கித் தளபதியின் புது மண வாழ்வைச் சீர்குலைத்திடு !

    villain-bruno

    வில்லன் புரூனோ 

    ஷைலக் :  எதிரில்தான் மோனிகா இல்லம் !  இருட்டி விட்டது ! விளக்கில்லை !  உரத்த குரலில் அவள் அப்பனை விளிக்கிறேன் !

    புரூனோ :  இடி முழக்கம் எழட்டும் வீட்டு முன் !  இரவில் யாருக்கும் தெரியாமல் நேர்ந்த கள்ளக் கடத்தல் கன்னியைப் பற்றிச் சொல் !

    ஷைலக் :  [மோனிகா வீட்டு முன் சென்று, கதவைத் தட்டி உரத்த குரலில் ]  ஐயா பெரியவரே ! விழித்தெழுவீர் ! வெளியே வாரீர் !   உமது வீட்டில் களவு போயிருக்குது ! பெருங்களவு !

    புரூனோ :  [மோனிகா வீட்டு முன் சென்று]  விழிதெழுவீர் கிழவரே !  உமது குமரிப் பெண்ணைக் கடத்தி விட்டான் கரு மூர்க்கன்! கள்ளன் ! வீட்டுக்குள் தேடிப் பாரீர் !  பணப் பெட்டியைத் திறந்து பாரீர் ! கன்னிப் பெண் எங்கே ? கண்ணைத் திறந்து பாரீர் பெண்ணைப் பெற்றவரே !

    [ கதவைத் திறந்து பரபரப்புடன் சிசாரோ, சிசாரோவின் மனைவி புதல்வர், வெளியே வருகிறார்]

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. Othello By William Shakespeare,  Folger Shakespeare Library [1993] 
    2. Othello DVD Movie by Warner Brothers [2007] 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    170803 - Vanvihari -Inink-papyrus -icam -lr

    SRI AUROBINDO
    ————————-
    AN ETERNAL CHILD PLAYING AN ETERNAL GAME IN AN ETERNAL GARDEN….!

    ”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்’’….!
    ——————————————————————————————————————————————

    BEYOND PERSONALITY THE MAYAVADIN
    SEES INDEFINABLE EXISTANCE; I FOLLOWED
    HIM THERE AND FOUND MY ”KRISHNA”
    BEYOND IN INDEFINABLE PERSONALITY….

    முடிந்தவரை மொழிபெயர்ப்பு
    ————————————
    நேதிநேதி என்று நினைப்பைக் கடந்தமாயா
    வாதிகள் கண்டனர் வாழ்விருப்பை -பாதையில்
    சென்றன்று கண்டேன்காண் கன்றன்று மேய்த்தோனை;
    ஒன்றென்று உள்ளம் உவப்பு….!
    ——————————————————————————————————-
    ”சேணம் குதிரைபோல் சேர்ந்தே செல்வது
    ஞானம் அறிவு நமக்குள்ளே -காணும்நாம்
    வேகத் திலைவதால் வேறாகும், உண்மைவி
    வேகக்கண் ணேதெய் வதம்”….கிரேசி மோகன்….!
    —————————————————————————————————————

    Share
  • ’’ஆடிப் பெருக்கு’’….!

    images (2)

    ”ஆடிப் பெருக்கினாலும் ஆடா(து) இளைத்தாலும்
    வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி
    இருக்கையில் இன்பம் பிரிகையில் துன்பம்
    பருக்கைக்கோ தீராப் பசி”….கிரேசி மோகன்….

    Share
  • ஆடிப் பெருக்கு..!

     

    பெருவை பார்த்தசாரதி

     

     

    ஆடிப்பெருக்கு

     

     

     

     

     

     

     

     

     

     

    ஆற்றுப் பெருக்கினால் குளம் வாய்க்கால்..

    ……அனைத்தும் நீர்நிரப்பி வளமாக்கும் வேணியே.!

    சேற்றுடன் கதிரும் தலைசாய்க்கு முனைக்கண்டு.!

    ……செங்கதிரோன் முகம்பார்க்கவுன் நீர்நாடி வருவான்.!

    காற்றோடு வந்தசெய்தி காதிற்படா கலைந்ததுபோல்..

    ……காலத்தே வருமழையும் வாராது பொய்த்ததின்று,!

    ஊற்றாக எழுமுன் கருணையை எதிர்பார்த்து..

    ……ஊருணியும் வயலும் வாய்பிளந்து எதிர்நோக்கும்  .!

    ஆற்றுமணல் திருட்டால் அழிந்தது வயல்வளமே.!

    ……ஆறறிவால் வந்ததெலாம் நமக்கென்றும் வினையே.!

     

    ஆடித்திங்கள் ஈராறில் பொங்குமுன் புனலில்..

    ……அமிழ்ந்து நீராடிக்களித்த ஆனந்தம் எங்கே.?

    ஓடிவயல் நிறைக்குமுன் வள்ளல் நீரெல்லாம்..

    ……ஒளிந்து கொண்ட இடத்தைத்தான் யாரறிவர்.?

    வாடிய முகத்துடன் வறண்ட காவிரிதனை..

    ……வாட்டமுடன் காண கல்நெஞ்சம் வேணுமம்மா.!

    நாடியுனை ஆராதித்து நாங்களிட்ட உணவை..

    ……உன்னருளால் பெற்றுனை மகிழ்விக்க வந்தோம்.!

    பாடியுனை ஆராதிக்க பகல்பொழுது கழிந்தபின்..

    ……அருஞ்சுவை உணவைப் புனலுக்கு அளிப்போம்.!

     

    வற்றியகாவிரி வளமாக மாமழையை அழைப்போம்..

    ……வருணனை வேண்டியே இன்று தவம்செய்வோம்.!

    நாற்றுக் கன்றுகளெலாம்  பயிராய்த் தழைத்துவளர..

    ……நலமுடன் மிதமாய் பொழியுமுன் அருள்வேண்டும்.!

    பற்றியுனை நினைத்து தினமுனைத் தொழுவோம்.!

    ……பண்டங்கள் பலபடைத்துன் மனங்குளிரச் செய்தால்..

    ஆற்றுப்படுகைச் சோலையில் குயில்களும் கூவுமா.?

    ……ஆடிப்பெருக்கின்று காவிரியில் கயல்கள் உகளுமா.?

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ”வைதசிசு பாலன் வசவுநூறைத் தாண்டிட
    மைதவழ் கண்ணன் முறுவலித்து -எய்த,
    சுதர்ஸனம் சென்றவன் சென்னியைக் கொய்து
    நுதற்சிவன் கண்ணா னதே’’….கிரேசி மோகன்….!

    நுதற்கண் -நெற்றிக் கண் நெருப்பு
    சென்னி -கழுத்தை நெறித்துக் கனலானது….!(சிவன் -நெற்றிக் கண்ணன், இவர்-வெற்றிக் கண்ணன்)….!

    Share
  • வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 04.08.2017 ல் வரலக்ஷ்மி தினத்தை முன்னிட்டுவரம் அருளும் ஸ்ரீ வர மஹாலக்ஷ்மி யாகத்துடன் கூழ்வார்த்தல் விழா

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குளந்தைகள் கல்வியில் மேன்மை அடயவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி மாதம் 19ம் தேதி 04.08.2017 வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி நோன்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கோபூஜை கணபதி பூஜையுடன் வரம் அருளும் வர மஹாலக்ஷ்மி யாகமும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைக்கும் கூழ்வார்த்தல் விழா நடைபெறவுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும் முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன.ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன.

    வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.

    ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

    அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.

    மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம்.

    இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். இத்தகைய சிறப்புவாய்ந்த வரலக்ஷ்மி தினத்தில் நடைபெறும் மேற்கண்ட யாகத்திலும் கூழ்வார்த்தல் நிகழ்சியிலும் கலந்துகொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

    மேலும் விபரங்களுக்கு,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
    வாலாஜாபேட்டை – 632513
    வேலூர் மாவட்டம்.
    Ph : 04172-230033 / 230274/9443330203
    Web: www.danvantritemple.org

    Share
  • Encounter With A Difference – வேறுபாட்டுடன் ஓர் சந்திப்பு

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின் – மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    1 (1)

    எனக்காகக் காத்திருக்கிறாய் நீ,
    உனக்காகக் காத்திருக்கிறேன் நான்.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருக்கிறோம்.

    நீ என்னிடம் வருவதில்லை,
    நான் உன்னிடம் வருவதில்லை.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் வருவதில்லை.

    ஒருநாள் நான் உன்னிடம் வருவேன்
    ஆனால் நீ என்னிடம் வராமலே போகலாம்.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருந்தாலும்
    ஒரே மனமென்பதால் என்றுமே வருவதில்லை.

    Share
  • மருதத்தச்சன்

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். இவை புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும். அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் பங்கயத்தில் உறைபவர்கள். பங்கயமெனும் தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

    Vishnu- Lakshmi

    குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முதல் பாட்டிலேயே அழகுபட ஒரு சுவையான மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். முதல்பருவமான காப்புப்பருவத்தின் முதல்பாடலில் திருமாலின் பெருமையைக் கூறும்போது அவன் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார்.1

    காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

    கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

    கலுழிபாய்ந் தளறுசெய்யக்

    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

    கையணை முகந்துசெல்லப்

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

    பணைத்தோள் எருத்தலைப்பப்

    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

    பச்சைப் பசுங்கொண்டலே.

    (மீனாட்சியம்மை பி. த.- காப்புப்பருவம்- குமரகுருபரர்)

    ‘கையணை முகந்துசெல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல’ எனும் பொருள்படும்.

    ***

    அடுத்து, தாலப்பருவத்தினின்று ஒரு அழகான கற்பனைக்குவியல்!

    கயல்மீன்கள் துள்ளிக் குதித்து மகிழ்கின்றன. மேகங்கள் பொழிகின்ற மழைநீரிலும், சுழியை வீசியெறியும் கழிமுகத்திலும், சிறிய குழிகளிலும், கரையிலும், கரையை மோதுகின்ற அலையிலும், தலையை விரித்துக் கொண்டிருக்கும் தாழம்புதர்களிலும், இளம்பெண்கள் விளையாடுமிடங்களிலும், நெற்போர்களிலும், அதன் பக்கமாக அமைந்துள்ள உழவர்களின் வீடுகளில் உள்ள நெற்கூடுகளிலும் குளத்தில் நிறைந்த நீரிலும் இந்தக் கயல்மீன்கள் குதித்துக் கூத்தாடிப் போர்புரிந்து மகிழ்கின்றன. இவை மருதநிலத்துச் செழிப்பினைப் புலப்படுத்துகின்றன.

    இவற்றை, இக்கயல்மீன்களை மதுரைநகர்வாழ் கணிகையரின் கண்களுக்கு உவமையாக்கி அவை புரியும் போரினை நயம்பட விளக்குகிறார் புலவர்.

    அப்பெண்டிர்தம் கண்களாகிய கெண்டைமீன்கள், தேரில் செல்லும் இளைஞர்களுடைய மார்பிலும், அவர்களுடைய செல்வச் செழிப்பிலும், போர்புரியும் ஒப்பில்லாத கட்டமைந்த வில்லிலும், திரண்ட மலைபோன்ற தோள்களிலும், ஊடலை நீக்கிட அவர்கள் பெண்டிர் கால்களில் பணியும்போது உதிர்ந்த மாலையிலும், சென்று போர் செய்கின்றன; அத்தகைய மதுரைக்கு அரசியே! தாலோ! தாலேலோ! சங்கம் வளர்ந்திட நின்று அருள்செய்த பொற்கொடியே! தாலோ! தாலேலோ!

    நீரிலுள்ள கயல்மீன்கள் பெண்களின் கண்களாகிய கெண்டைமீன்களுக்கு உவமையாகின்றன.

    உவமைநயம் மட்டுமின்றி, சந்தநயமும் பொருந்தியதொரு சிறப்பான பாடல் இதுவாகும். பாடியோ பொருள்கூட்டிப் படித்தோ பார்த்தாலே இதனழகு கண்முன் விரியும்!

    காரிற் பொழிமழை நீரிற்சுழியெறி

    கழியிற் சிறுகுழியிற்

    கரையிற் கரைபொரு திரையிற்றலைவிரி

    கண்டலில் வண்டலினெற்

    போரிற் களநிறை சேரிற்குளநிறை

    புனலிற் பொருகயலிற்

    பொழிலிற் சுருள்புரி குழலிற்கணிகையர்

    குழையிற் பொருகயல்போய்த்

    தேரிற் குமரர்கள் மார்பிற்பொலிதரு

    திருவிற் பொருவில்வரிச்

    சிலையிற் றிரள்புய மலையிற்புலவி

    திருத்திட ஊழ்த்தமுடித்

    தாரிற் பொருதிடு மதுரைத்துரைமகள்

    தாலோ தாலேலோ

    சங்கம் வளர்ந்திட நின்றபொலன்கொடி

    தாலோதாலேலோ

    (மீனாட்சியம்மை பி. த.- தாலப்பருவம்- குமரகுருபரர்)

    இன்னும் பிறிதோரிடத்திலும் மருதநிலத்துச் சிறப்பை நயம்பட உரைக்கிறார் குமரகுருபரனார்.

    Paddy-field (1)

    அழகான மருதநிலத்து வயல். அந்தப் பசிய மருதநிலத்தில் திருமகள் குடியிருக்க விருப்பம் கொண்டுள்ளாள். அவள் ‘மருதம்’ எனும் பெயர்கொண்ட தச்சனிடம் தனக்காக அழகான ஒரு வீட்டினை அமைக்க வேண்டுகிறாள். அவள் விருப்பம் என்னவென்று தெரிந்த தச்சன் அவன். அவன் அழகான பல தாமரைப்பூக்களாகிய கோவில்கள் பலவற்றை அவளுக்காகச் சமைத்தருளுகிறான். இனி அவள் குடிபுக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமே! அவள் உள்ளே புகுவதற்காக அவ்வீடுகளின் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாமா?

    இதற்காக வண்டுகள் துணை செய்கின்றனவாம்! மகரந்தப்பொடியை அளைந்து தேனருவிப் பெருக்கில் துளைந்து மூழ்கி விளையாடும் அறுகால் தும்பிகளாகிய அவ்வண்டுகள் விடியற்காலையில் அத்தாமரைமலர் வீடுகளின் பசிய இதழ்களெனும் கதவுகளைத் திறக்கின்றனவாம்! பின் இலக்குமி குடியேற ஏது தடை? இவ்வாறு குமரகுருபரர் மதுரையின் மருதநில அழகினைச் சொல்லோவியமாக நம் கண்முன்பு வரைகின்றார்.

    ‘சுண்ணந் திமிர்ந்து தேனருவி

    துளைந்தா டறுகால் தும்பிபசுந்

    தோட்டுக் கதவம் திறப்பமலர்த்

    தோகை குடிபுக் கோகைசெயும்

    தண்ணங் கமலக் கோயில்பல

    சமைத்த மருதத் தச்சன்………. ‘

    (மீனாட்சியம்மை பி. த.- வருகைப்பருவம்- குமரகுருபரர்)

    இவ்வாறு எண்ணற்ற இலக்கிய நயங்களைக் கொண்டு பிள்ளைத்தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. இன்னும் கண்டு களிப்போம்.

    *****

    மீனாட்சி பாலகணேஷ் . இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-1- வல்லமை – செப்.9, 2015. )

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • திரைப்பாடல்களில் உறவுமுறை: தந்தை-மகன்/தாய்-மகள் – ஆய்வு  

     –பேரா.செல்வ கனிமொழி 

    முன்னுரை:

    உறவுமுறைகள் காலங்கடந்தும் வாழுகின்ற மக்கட்பண்புகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இவற்றில் தந்தை – மகன் – தாய் – மகள் என்னும் உறவு பிரிக்கமுடியா நிலையுடையது. அவ்வுறவில் பொதிந்திருக்கும் அன்பின் அடர்த்தியை உணர்ந்த இயல்பான மக்கள் தாங்கள் பாடிவைத்த மக்கட்பாடல்களில் அதைப் பதிவுசெய்திருந்தனர். அதனையொட்டி எழுந்த பல்வேறு இலக்கியங்களிலும் அதைக் காணமுடிகின்றது. இத்தன்மையைத் திரைப்படப்பாடல்களில் பாடலாசிரியர்கள் உறவுமுறைகளின் உயிர்மை குறையாமல் எடுத்தாண்டுள்ளனர். அவ்வகையில் திரையிசைப்பாடல்களில் வெளிப்படும் தந்தை – மகன் – தாய் – மகள் உறவுமுறை குறித்த அடர்ந்த அன்பை ஆராய்வது இக்கட்டுரை. 

    உறவுப் பொதுநிலை: 

    தாயிற் சிறந்த கோயிலுமில்லை
    தந்தைசொல் மிக்க  மந்திரமில்லை
    ……………………………
    அன்னை தந்தையே அன்பின் எல்லை. 

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    மாதா பிதா குரு தெய்வம்  (முன்னோர் மொழி)

    இவ்வாறாகத் தாய் தந்தையரின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சமூக வாழ்வியல் இல்லறத்தில் கணவன் மனைவி என்பதான உறவு முறை ஒரு கூறாகும். இதில், இருவருக்கிடையிலான புரிதல், மற்றும் இன்பவாழ்வின் வெளிப்பாடு மழலை எனலாம்.

    கணவன் மனைவி என்ற நிலையில் இருந்து அடுத்த படிநிலையாகத் தாய் தந்தை என்னும் வளர்ச்சியை, பெருமையினை எய்துகின்றனர். வழித்தோன்றல் என்பது முக்கிய ஒன்று எனலாம். மனித வாழ்வில் பல உறவுமுறைகள் காணப்படுகின்றன. தாத்தா-பாட்டி – மாமன்–அத்தை – பெரியப்பா–பெரியம்மா – சித்தப்பா–சின்னம்மா – அண்ணன்–தம்பி – அக்கா–தங்கை – எனக் குறிப்பிடலாம். இவை மனிதகுலத்தைப் பிணைப்போடு வாழச் செய்கின்ற உறவின் முறை ஆகும். இவற்றையெல்லாம் கடந்து பார்க்கின்றபோது,

    `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்பது கணியன் பூங்குன்றனாரின் அன்பினை எடுத்துரைக்கும் வலிமைமிக்க பாடல்.  இதில், இவ்வுறவு முறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுவது,

         தாய்-மகன்
         தந்தை-மகள்

    உறவின் நிலைப்பாடு. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தை இருந்தாலும், அன்பு என்பது ஒன்றே. இருப்பினும், தாய்க்கு மகன்மீதும், தந்தைக்கு மகளின் மீதும் இருக்கக் கூடிய அன்பு, பாசம் என்பது இயற்கையான ஒன்று. இதே போல் பெண்மகள் தந்தை மீது செலுத்தக் கூடிய பாசமும், ஆண்மகன் தாய்மீது வைக்கக்கூடிய பாசமும் சமுதாய வாழ்வில் கண்கூடு.

    தாயானவள் தன்மகனை வாழ்வின் ஆதாரம் என்று கருதுகின்றாள். ஆனால், தந்தையோ தன்மகளை இன்னொரு தாயாகவே பார்க்கின்றான்.

    `தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்`
    என்று வள்ளுவம் சுட்டுகின்றது.

    `மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்என்கிறார் கவிமணி.

    இதன்மூலம் ஆண்- பெண் குழந்தையின் பெருமை உணரப்படுகின்றது.

    அவ்வகையில் தாய்–மகன் – தந்தை–மகள் பிணைப்பு திரைப்படங்களில், குறிப்பாக சிறுவருக்கான திரைப்பாடல்களில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகக் கொள்ளலாம்.

    திரைப்பாடலில் தாய்-மகன்:

    திரைப்படங்களில் பொருண்மை என்பது வரலாறு, காதல், துயரம், வீரம், நகைச்சுவை என வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில், ஏதாவது ஒரு காரணியாகக் குழந்தை அல்லதி சிறாரின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அப்படிப் பார்க்கின்றபோது சில படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    ராம், வேலையில்லாப் பட்டதாரி, மன்னன், அப்பா, தோனி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

    சான்றாகப் பாடல்,

    `ஆராரிரோ நான் இங்குப் பாட
    தாயே நீ கண்ணுறங்கு
    என்னோட மடிசாய்ந்து` (ராம்)

    `அம்மா அம்மா எனக்கு யாரு? அம்மா!
    உன்ன விட்டா எனக்கு யாரு? அம்மா!` (வேலையில்லாப் பட்டதாரி)

    `அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே` (மன்னன்)

    என்பது போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். தாய்-மகன் உறவு நிலையில் இவை சில. இதுபோல எண்ணிலடங்காப் பாடல்கள் காணக்கிடக்கின்றன.

    `சான் பிள்ளை ஆனாலும்
    ஆண் பிள்ளை` (பழமொழி)

    எனக்கருதும் மனப்போக்கு தாயிடம் உள்ளது எனலாம். தன் வாழ்வாதாரம் தன் மகன் என நினைக்கின்றாள் தாய்; அதுபோலவே மகனும் தன் தாயின் மீது எல்லையற்ற பாசமும் பற்றும் கொண்டவனாக இருக்கின்றான்.

    `அம்மா என்றால் அன்பு`என்பதற்கேற்பப் பசித்திருக்கும் வேளையறிந்து உணவுத்தரக்கூடியவள், தன்னலனை நாடாமல் தன்மகன் நலனையே எண்ணிப் போற்றுபவளாக இருப்பவள், வாழ்பவள் தாய் என்றால் மிகையன்று.

    தந்தை – மகள் – பிணைப்பு:

    குழந்தைக்குத் தாய் முதன்மையானவள் என்றால், தந்தை அதற்கு அடுத்து போற்றப்படக் கூடியவர். பல வீடுகளில் தந்தையே தாயாக மாறி வாழ்பவர் இருக்கின்றனர். தாயுமானவன் என்று சொன்னால் அது அமிழ்தம்.

    ஒரு தந்தைக்குத் தன் இருபால் குழந்தைகள் மீதும் அன்புஉண்டு. இருப்பினும் பெண் பிள்ளைகளைத் தாயாகப் பார்க்கும் தந்தையர் ஏராளம் ஏராளம். ஒரு குடும்பத்தில் மூத்தபிள்ளை பெண்ணாகப் பிறக்கின்றபோது, அக்குழந்தையினை மகாலட்சுமியாகவே கருதுகின்றனர். சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவை காலப்போக்கில் அழிந்துவிட்டன எனலாம்.

    தந்தை மகளின் அன்பினை வெளிப்படுத்தும் சில படங்களின் பாடல்களைக் காணலாம்.

    • கன்னத்தில் முத்தமிட்டால்
    • சொல்ல மறந்த கதை
    • அபியும் நானும்
    • சிறுத்தை
    • தெய்வத்திருமகள்
    • தங்க மீன்கள்
    • உன்னை அறிந்தால்
    • உன்னைச் சொல்லி குற்றமில்லை
    • பசங்க-2

    இதில்,  சில படங்களில் பாடல்களைக் பார்க்கின்றபோது தந்தை – மகளின் பிணைப்பு நெகிழச்செய்கிறது எனலாம்.

    சான்றாக, 

    வாவா என் தேவதையே
    பொன்வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா (அபியும் நானும்)

    என்பதில், தந்தை தன் மகளை இளவரசியாக, தேவதையாகப் பல வடிவங்களில் நோக்குகின்றான்.

    `சித்தாடைக் கட்டியவள் நடக்கும்போது
    பெத்தவள் சாயல் என்று நினைத்துக்கொண்டேன்.

    எனவும், `தங்கத்தை மார்போடு அணைக்கையிலே தாய்மையின் பெருமையினை உணருபவராக குறிப்பிடுவது மறுக்க இயலாத உண்மை.

    இதைப்போல், வேறொரு பாடலில்,

    `உனக்கென்ன வேணும் சொல்லு`

    என்பதில் மகளோடு தந்தை இருக்கும்போது உலகமே மாறிவிட்டதாகவும், புது உலகம் சென்றதாகவும் எண்ணச்செய்வது உடல் சிலிர்க்கச் செய்கின்றது. தாலாட்டு என்பது தாய்க்குரியது மட்டுமல்ல தந்தைக்கும் உண்டு என்பதைப் பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது. 

    ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
    ………………………….. மழலையின் மொழிகேட்டு
    தாயாகத் தந்தை மாறும்………………     (அபியும் நானும்)

    என்பதிலிருந்தும்,

    ஆராரோ ஆரிரரோ
    அம்புலிக்குத் தான் இவரோ (சிறுத்தை) 

    எனவரும் பாடலிலும் தந்தை தாலாட்டுப் பாடுவதாக இருப்பது அவர்களின் அன்பினைப் புலப்படுத்துவதாகவே அமைகின்றது. மேலும்,

    ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
    அன்பெனும் குடையை நீட்டுகிறாய்… (தங்கமீன்கள்)

    மகளை ஆனந்தயாழ் இசையாகக் கருதுவது சொற்களில்லா வார்த்தை எனலாம். 

    முடிவுரை:

    திரைப்பாடல்கள் தரமுள்ளவை தரமற்றவை என்னும் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அப்பாடல் மக்கள் மனத்தில் எளிதில் சென்றுசேரும் ஊடகக்கருவியாகத் திகழ்ந்துக்கொண்டிருக்கிறது. திரையிசைப்பாடலுக்கான மெட்டுக்குள் வார்த்தைகளை நுழைப்பது நேர்த்தியே. திரைப்பாடல்களில் குழந்தைகளுக்கான பாடல்கள், குழந்தைகள் பிம்பங்களாக வந்து நிகழ்த்தும் பாடல்கள் என்று குழந்தைகளுக்கும் தாய் தந்தையர்களுக்குமான உறவுநிலை உணர்த்தும் பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கால வேறுபாடின்றி இத்தன்மைத்தான பாடல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

     

    Share
  • ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    start-dot

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இலக்கில்லாமல் யாவரும் வாழ்வில் பயணித்தாலந்த

    ……இல்வாழ்க்கை யென்பதொரு போதும் பயன்தாரா.!

    இலகுவாகப் வாழ்வின் உச்சம்தொட நினைத்து

    ……இதுதான் வழியென வகுத்துக் கூறவுமுடியாது.!

    பலபிறவி எடுத்தாலும் மாந்தர்பிணி யென்றும்தீராதாம்.!

    ……சிந்தனைசெய்து சீரும்சிறப்புமாக வாழ்வதற்கு மனித

    குலத்திற்கே மகத்தான வரமாகுமந்தச் சிந்தனையே..

    ……ஒரு புள்ளியில் தொடங்கும் புனிதப்பயணமாகும்.!

     

    கருப்பையில் தோன்று மதற்குள்ளொரு புள்ளியாகத்

    ……தொடங்குகிற வாழ்க்கை பயணமதன் முடிவுவரை..

    கருத்தோடு வாழக் கற்கவேண்டு மொருபாடம்.!

    ……கருவறைமுதல் கல்லறைவரை கற்றலே வாழ்க்கை.!

    பொருள் பொதிந்த வாழ்வதனை வாழ்வதற்கேநாம்..

    ……பெற்றிடுவோம் அனுபவங்கள் புதிதா யனுதினமும்.!

    ஒருநிறுத்தமிலா பயணம்தான் வாழ்க்கை என்றாலது..

    ……புள்ளியிலா வாக்கியமாயது இனிதே தொடரவேணும்.!

     

    உமையாளின் துணையின்றி ஈசனுலகாள முடியாது.!

    ……வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்தும் பயனில்லை.!

    நமைக்கேட்டு நம்தோலின் முடியுதிர்வ தில்லை.!

    ……பயணமென்று வரினதில் படுந்துன்பம் இயற்கையே.!

    இமைகேட்டு விழியிரண்டும் மூடிக் கொள்வதில்லை.!

    ……வழிகேட்டுநம் வாழ்க்கைப் பயணம் அமைவதில்லை.!

    சுமையென்று தாய்தன் கருவைச் சுமப்பதில்லை.!

    ……சுகமான பயண மென்றெதுவும் தொடங்குவதில்லை.!

     

    எண்ணத்தில் நல்லெண்ணம் சேர்ந்து விட்டால்..

    ……இயல்பு வாழ்க்கை யென்பது மாந்தர்க்கெளிதாகும்.!

    மண்ணுலகில் பிறப்பதற்கு மாதவனருள் வேண்டும்.!

    ……மனம்நிறைந்த வாழ்க்கைப் பயணமதில் வேண்டும்.!

    புண்ணிய மொன்றே செய்யின் பிறவியில்லையாம்..

    ……புதிதாய் மீண்டுமீண்டும் பிறக்கவேணு மேனென்றால்.!

    பண்ணுடனே பார்த்தவெது வொன்றையும் பாடும்..

    ……புலவராகயெம் பயணம் முடிவுவரை தொடரவேணும்..!

    ==============

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::31-07-2017

    நன்றி:: கூகிள் இமேஜ்..

     

    Share