சி.ஜெயபாரதன்

cover-image

வெனிஸ்  கருமூர்க்கன்

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

தோல்வி காயப் படுத்தி ஊனமுற்ற ஆத்மா
ஓல மிட்டால் அமைதி செய்ய  முயல்வார் !
வலித்துயர்  மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்
புலம்புவோம்  அதிகம், அன்றி இணையாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] 

என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்
குதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்….
ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்
தான் இழந்ததை என்னிடம் களவாடி
என்னை வறியன் ஆக்குவ துண்மை. 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]

+++++++++++++++++++

முன்னுரை :  உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்கள், பல ஈரேழு வரிப் பாக்கள் எழுதியதாகத் தெரிகிறது.  கடந்த 400 ஆண்டுகளாய் அவரது நாடகங்கள் எல்லா மொழிகளிலும், அனைத்து நாடுகளிலும் பன்முறை அரங்கேறியுள்ளன.  அவரது நாடகங்களில் மனித ஆசாபாசங்கள், வெறுப்பு விருப்புகள், கோப தாபங்கள், அச்சம், மடமை, பொறாமை, அகந்தை, மோகம், மோசடி, வஞ்சக வாணிப இச்சைகள், நிறவெறி, இனவெறி மாந்தர்களைக் காணலாம். அவரது இறுதிக் காலங்களில்தான் ஹாம்லெட், மாக்பெத், கிங் லியர், ஒத்தல்லோ போன்ற துன்பியல் நாடகங்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. இந்த ஒத்தல்லோ நாடகம் அவரது காலத்திலும் இன வெறுப்பு, நிற பேதச் சண்டைகள், கொலைகள் இருந்ததைக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர்.  தானே நாடங்கள் எழுதியவர்.  நாடகக்கலை மன்றங்கள் அமைத்தவர். அவர்க்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஆணும் இருந்துள்ளனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் [ஏப்ரல் 23, 1564] இறந்த நாளும் [ஏப்ரல் 23, 1616] ஒரே தேதியில் நேர்ந்ததாகச் சிலர் கருதுகிறார்.

othello-image-10

மோனிகா & ஒத்தல்லோ

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் : 

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ துன்பியல் நாடகம் 400 ஆண்டுகட்கு முன்னர் வெனிஸ் நகரிலும் , சைப்பிரஸ் தீவிலும் நிகழ்ந்த இன வெறுப்பு, பொறாமையால் விளைந்த தீவினைக் காட்சிகள். அந்த இனச்சண்டை, நிறச்சண்டைகளால் பரிதாபமாகப் பலியான நபர்களைப் பற்றியது.  நாடகம் வெனிஸ் சாம்ராஜிய வல்லமைக் கருந்தளபதி ஒத்தல்லோ, அவனது வெள்ளைக் காதலி, இளங்குமரி மோனிகா ஆகியோரைச் சுற்றி நடப்பது. மோனிகா தந்தைக்குத் தெரியாமல் ஓடி, பலத்த எதிர்ப்பு மீறி, கருந்தளபதியை மணம் செய்து கொள்கிறாள்.  அவரது காதல் திருமண வாழ்க்கை நிற வெறுப்பு, இனக் கசப்பு சமூகத்தால் முறிந்து போகிறது.  முற்போக்குச் சிந்தனையுடைய, பராக்கிரம கருந்தளபதி ஒத்தல்லோ, பொய்யான மாற்றான் சொற்கேட்டு, மனைவி மீது நம்பிக்கை இழந்து, பயங்கரக் கொலை செய்யத் துணிகிறான். முன்கோபியான ஒத்தல்லோ “மூர்” [Moore] எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.  வெனிஸ் சாம்ராஜியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்ட பராக்கிரம வீரன்.

othello-image-9

மோனிகா, ஒத்தல்லோ, புரூனோ

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மூலம் வெனிஸில் 1565 ஆண்டில் வெளியான  ஓர் இத்தாலிய நாவல் ஹெகாடோமிதி [Hecatommithi] எனப்படுவதில் ஒரு பகுதி எழுதிய இத்தாலியர் பெயர் கிரால்டி சிந்தியோ [Giraldi Cinthio]. ஷேக்ஸ்பியர் தன் நாடகத்துக்காக,  அதில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்.

20 ஆம் நூற்றாண்டில் உலக மாந்தரைத் துயர்ப் படுத்தும்  நிற வெறுப்பும், இனக் கசப்பும், ஷேக்ஸ்பியர் காலத்திலேயே [1600 ஆண்டுகளில்] மத்திய தரைக்கடல் ஐரோப்பிய பகுதியில் இருந்திருப்பதை ஒத்தல்லோ நாடகம் மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளது. 1940 ஆண்டில் அமெரிக்கா பிராட்வே தியேட்டரில் முதன்முதல் அரங்கேறிய ஒத்தல்லோ நாடகம்  [American and the Son of a Slave]  அடிமைகளைக் கொடுமைப் படுத்தி வந்த அப்போதைய அமெரிக்க வாழ் மாந்தருக்குப் பேரதிர்ச்சியும், பேரடியும் கொடுத்துள்ளது !  அந்த இன வெறுப்பும், நிற வேற்றுமையும் உலக நாடுகளில்  21 ஆம் நூற்றாண்டிலும்  பெருகி பேரிடர் அளித்து வருவது, நாகரீக மனித சமூகம் வெட்கப் பட வேண்டிய நிகழ்ச்சி !

unnamed

+++++++++++++++++++

புரூனோ & ஷைலக்

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

[ வெனிஸ் கருமூர்க்கன் ]

அங்கம் –1 காட்சி –1 பாகம் : 1

++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]

மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

கிராடினோ :சிசாரோவின் சகோதரன்.

லோடாவிகோ : மோனிகா உறவினன், அரசாங்க அதிகாரி.

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். 

நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு

++++++++++++++++++

othello-image-5

ஒத்தல்லோ & மோனிகா

அங்கம் : 1 காட்சி : 1 பாகம் : 1

இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு.

நேரம் :  மங்கிய மாலைப் பொழுது.

அமைப்பு :  தெரு ஓர மரத்தடியில் இராணுவச் சேவகன் புரூனோ பெருஞ் சினத்துடன் ஒருவனைத் திட்டிக் கொண்டு நிற்கிறான். அப்போது  செல்வந்த நண்பன் ஷைலக்  வருகிறான்.

ஷைலக் : புரூனோ !  யாரைத் திட்டிக் கொண்டிருக்கிறாய் ? யார் மீது கோபம் உனக்கு ?

புரூனோ : கேட்காதே அந்த அநியாயத்தை ! நான் நொந்துபோய் உள்ளேன்.  என மனத் துடிப்புக்கு அந்த கருப்பன் தான் காரணம் ! என் உயர் பதவி போச்சு !  என் யுத்த அனுபவம் வீணாய்ப் போச்சு ! மூவர் ஆதரித்து எடுத்துரைத்தும் எனக்குக் கிடைக்காமல் போச்சு !

ஷைலக்: யாரந்தக் கருப்பன் ?   எந்த வேலை கிடைக்காமல் போச்சு ?

unnamed (1)

மோனிகா

புரூனோ :  அந்த தடித்த  உதடன் எனக்குத் தர வேண்டிய லெஃப்டினென்ட் வேலையைத் தகுதியே இல்லாத  காஸ்ஸியோவுக்குக் கொடுத்துவிட்டான். வெனிஸ் நகரத்தைச் சேராதவன்.  பிளாரென்ஸ்  நகரத்தைச் சேர்ந்தவன் காஸ்ஸியோ ! உயர் பதவி  கொடுத்த ஆப்பிரிக்க  மூர்க்கன் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவன் ! அகந்தை கொண்டவன் !  அண்டங் கறுப்பன்  !

ஷைலக் : யார் ?  அந்த மைக்கேல் காஸ்ஸியோவுக்கா மேற்பதவி கிடைச்சது ?  நம்ப முடியவில்லையே !  யாரை மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

புரூனோ :  ஆம் !  எனக்குத் தெரிந்த அந்த கருப்புத் தளபதி ஆப்பிரிக்க  “மூர்” இனத்தவன்தான் !  காட்டுமிராண்டி ! ஆற்றல் படைத்த கருப்பன், அறிவில்லாத அந்தக் கழுத்தைக்குத்தான் உயர்பதவி  அளித்துள்ளான் !  எனக்குத் தருவதாய்க் கூறி, என்னை ஏமாற்றி விட்டான்.  எனக்குத் தெரியாமல் எப்படிக் காஸ்ஸியோவுக்கு  தரலாம் ?  அவனுக்குக் கூட்டல், கழித்தல் மட்டுமே தெரியும்.  எந்தப்  போரிலும் கலந்து கொள்ளாதவன். முன்னின்று படை நடத்திச் செல்லும் அனுபவமும் கிடையாது.

ஷைலக் :  ஜெனரலை ஏன் மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

புரூனோ:  கருப்பன் என் மேலதிகாரி.  மூர்க்கன் !  முரடன் ! காமாந்தகன் ! கன்னிப் பெண்ணைத் தூக்கிச் சென்றவன் !  கள்ளத்தனமாய்க் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டவன் !  ஆப்பிரிக்க  “மூர்”  இனத்தைச் சேர்ந்தவன் ! அவன்  ஒரு  முசுடன் !  அதனால்  கரு மூர்க்கன் என்று திட்டுகிறேன்.

ஷைலக்:  என்ன ?  இளங்கன்னி மோனிகாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டானா?  மோனிகா என்னருமைக் காதலி அல்லவா ?  என்னைப் பற்றி, அவள் தந்தையிடம் சொல்லி மோனிகாவைக் கட்ட நீயெனக்கு உதவி செய் ! , புரூனோ ! நானுனக்குப் பண முடிப்பு அளிக்கிறேன் !   அவள் தந்தை சிசாரோவுக்கு இதை நாம் தெரிவிக்க வேண்டும் !   அவர் மோனிகாவை எனக்கு மண முடிப்பதாய் வாக்குறுதி அளிக்க வேண்டும் !

புரூனோ :  நான் கருமூர்க்கனை வெறுக்கிறேன்.   மோனிகா வெண்ணிலவு போன்ற வெள்ளைப்புறா !  அவன் கருநிலவு ! ஏதாவது உடற் பொருத்தம் உள்ளதா ?  அவள் வெனிஸ் அழகி ! வீனஸ் !  சிறு வடிவம்.  அவன் பூத வடிவம் ! இருவரையும் பார்த்தால் யானைக்குப் பக்கத்தில் வெள்ளைப் பசு நிற்பது போல் தெரியும் !  அவள் அப்பனைக் கூப்பிடு ! மகள் தப்பினைக் காட்டிடு ! கோபத்தைக்  மூட்டிடு !  மகிழ்ச்சி மனத்தில் விஷத்தை  ஊற்றிடு !  தெருவைக் கூட்டி முரசடி ! ஊரார், உற்றார் உறவினர்க்கும் உரைத்திடு !  ஊரைக் கூட்டி அவர் பேரைக் கெடு !  தளபதிக்கு எதிராய்ப் பேசி மோனிகாவின் தந்தைக்கும் அவருக்கும் பிளவை உண்டாக்கித் தளபதியின் புது மண வாழ்வைச் சீர்குலைத்திடு !

villain-bruno

வில்லன் புரூனோ 

ஷைலக் :  எதிரில்தான் மோனிகா இல்லம் !  இருட்டி விட்டது ! விளக்கில்லை !  உரத்த குரலில் அவள் அப்பனை விளிக்கிறேன் !

புரூனோ :  இடி முழக்கம் எழட்டும் வீட்டு முன் !  இரவில் யாருக்கும் தெரியாமல் நேர்ந்த கள்ளக் கடத்தல் கன்னியைப் பற்றிச் சொல் !

ஷைலக் :  [மோனிகா வீட்டு முன் சென்று, கதவைத் தட்டி உரத்த குரலில் ]  ஐயா பெரியவரே ! விழித்தெழுவீர் ! வெளியே வாரீர் !   உமது வீட்டில் களவு போயிருக்குது ! பெருங்களவு !

புரூனோ :  [மோனிகா வீட்டு முன் சென்று]  விழிதெழுவீர் கிழவரே !  உமது குமரிப் பெண்ணைக் கடத்தி விட்டான் கரு மூர்க்கன்! கள்ளன் ! வீட்டுக்குள் தேடிப் பாரீர் !  பணப் பெட்டியைத் திறந்து பாரீர் ! கன்னிப் பெண் எங்கே ? கண்ணைத் திறந்து பாரீர் பெண்ணைப் பெற்றவரே !

[ கதவைத் திறந்து பரபரப்புடன் சிசாரோ, சிசாரோவின் மனைவி புதல்வர், வெளியே வருகிறார்]

+++++++++++++++++++++++++++++++++

தகவல்:

  1. Othello By William Shakespeare,  Folger Shakespeare Library [1993] 
  2. Othello DVD Movie by Warner Brothers [2007] 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *