Blog

  • வெள்ள நிவாரண முகாம்

    மொழிபெயர்ப்புச் சிறுகதை

    (சிங்கள மொழிச் சிறுகதை)

    வெள்ள நிவாரண முகாம்

    – அஜித் பெரகும் திஸாநாயக

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

             நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.

             அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.

             அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.

             பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.

             நண்டொன்று குறுக்கே அடி வைத்து புத்தகங்களின் மேலால் ஓடியது. ‘பாம்புகளும் இருக்குமோ தெரியாது’ எனப் பயந்து சடுதியாக பின்புறம் அடியெடுத்து வைத்தவள் சகதியில் வழுக்கினாள். சட்டென நிலைக் கதவைப் பற்றிப் பிடித்து கீழே விழாது தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். சுவரிலிருந்த அட்டைப் புழுவொன்று நசுங்கி அவளது கைகளில் அதன் சதைத் திரவம் படிந்தது. மிகுந்த அறுவெறுப்பாக உணர்ந்தாள். சுவரிலேயே பல தடவைகள் கையைத் தேய்த்தாள். ஏனைய நாட்களில் சுவரை அழுக்காக்க வேண்டாம் என மகனை மிரட்டுபவள் அவள்.

    அவளது கணவன் சேறாலும் சகதியாலும் மூடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மிகவும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டை விட்டுச் செல்லும்போதே வயல்வெளியின் மத்தியில் செல்லும் பாதை கழுத்தளவு நீரில் மூழ்கிப் போயிருந்தது. அவர்களை கடற்படையின் படகொன்று வந்து வெள்ள நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றது. எதையுமே எடுத்துச் செல்ல வழியிருக்கவில்லை. வாழ்நாளில் பாடுபட்டு வாங்கிய தமது முதல் வாகனத்தை வீட்டிலேயே விட்டுச் செல்ல அன்று நேர்ந்தது. இப்போதும் பஸ் செல்லும் தெருவுக்குச் செல்ல ஒரு கிலோமீற்றர் தூரம் சேற்றில் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். அயல்வீட்டுத் தம்பி நுவன் வாடகைக்கு ஓட்டும் முச்சக்கரவண்டிக்கும் கூட மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட கதியே நிகழ்ந்திருக்கிறது.

    அவள் தையல் இயந்திரத்தின் போர்வையை அகற்றினாள். தண்ணீர் உள்ளே சென்றிருந்த போதும் சகதி சொற்பமாகவே படிந்திருந்தது. மின்சார மோட்டார் பழுதடைந்திருக்கக் கூடும். புதிய மின்சார மோட்டார் எவ்வளவு விலை வரும் என அவளுக்கு ஒரு கணம் யோசனை எழுந்தது. தைக்கும் புடவைகளை வைத்திருந்த பெட்டியில் படிந்திருந்த சேற்றினிடையே சிறு குழந்தையின் சட்டையொன்றில் பதிக்கப்பட்டிருந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது. கார்ட்டூன் கதாபாத்திரமொன்று தூண்டிலிடப் போகும் காட்சி அங்கிருந்தது.

             சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவேனும் அவளுக்குத் தோன்றவில்லை. சமையலறை ஒரு படிக்கட்டின் கீழாக அமைந்திருந்தது. அதைப் பார்த்தால் தனக்கு மயக்கமே வரக் கூடுமென அவள் அச்சமுற்றாள். கணவன் குளியலறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டதும் அவனது தோளின் மேலாக அவளும் எட்டிப் பார்த்தாள். கழிவறையில் தண்ணீர் வற்றியிருக்கவில்லை.

             ‘கடவுளே, வாழ்நாள் முழுதும் தேடி சம்பாதிச்சது எல்லாமே தண்ணில.. நாங்க திரும்பவும் தலை தூக்குறது எப்படி?” என அவளது வாய் தானாக முணுமுணுத்தது. மாதவிடாய் தோன்றக்கூடிய அறிகுறிகளை இன்று காலையிலிருந்து அவளது உடல் அறிவித்துக் கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காக சேறும் சகதியும் மூடியிருந்த துண்டுகள், உள்ளாடைகள், சட்டைகள், சேலைகள், கட்டில் விரிப்புகள், தலையணைகள், பிள்ளைகளின் ஆடைகள், கணவனின் ஆடைகள், சட்டிகள், பானைகள், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த மசாலா, மிளகாய்த் தூள்களிட்ட போத்தல்கள் போன்ற இன்னும் பலவும் அவளது நினைவில் தோன்றிக் கொண்டேயிருந்தன.

            “இதையெல்லாம் நாம துப்புரவாக்க முடியாது. எனக்கு இங்க இருக்கவும் பயமா இருக்கு.. வாங்க போகலாம்” என்றாள். சுற்றுச்சூழல் முழுவதும் பாழடைந்து, மர்மமான துயரம் நிரம்பி, பரிதாபத்துக்குரியதாகவிருந்தது. வானம் கூட கரிய மேகங்களால் கனத்துப் போயிருந்தது. மீண்டும் பலத்த மழை பெய்யக் கூடும். அமைதியான துயரம் சூழ்ந்து பாழடைந்த அமைதியைக் குழப்பியவாறு வெட்டுக்கிளியொன்று சிறகடிக்கும் ஓசை கேட்டது.

                    “நீ போ” என அவளது கணவன் சந்தன கவலை தோய்ந்த கோபத்தோடு கூறுவது கேட்டது.

             நிச்சயமாக அவள் போயாக வேண்டும். பன்னிரண்டு வயதான மகளையும், எட்டு வயது மகனையும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்தாள். கணவனினதோ, அவளதோ ஊர்களுக்குச் செல்லக் கூட அவர்கள் எவரிடமும் நல்ல ஆடைகள் எவையும் இப்போது இல்லையென்பது அவளுக்குத் தோன்றியது. எனினும், அவ்வாறு இலகுவில் விட்டுச் சென்றுவிடவும் முடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையானது கொழும்போடு கட்டிப் போடப்பட்டிருக்கிறது. கணவனின் தொழில், அவளது தையல் பணி, பிள்ளைகளின் கல்வி என அனைத்துமே அழுக்கு வாடை வீசும், வடிகான்கள் பெருக்கெடுக்கும், வாகன நெருக்கடியில் இளைப்பாறும், சுவாசிக்கக் கூட முடியாதளவு உஷ்ணமான இக் கொழும்பு நகரத்திலேயே தங்கியிருக்கின்றன.

             மகளுக்கு கழிப்பறைக்குப் போக வேண்டிய தேவையேற்பட்டால் கூட அவள் தனியாக வெள்ள நிவாரண முகாமிலிருக்கும் கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதில்லை. நாலாபக்கமும் மலமும், சிறுநீரும், எச்சிலும், பீடி சிகரெட் துண்டுகளும்  பரந்திருக்கும் அப் பாடசாலைக் கழிப்பறைக்குச் செல்ல விருப்பமற்றதால் மகள் மாத்திரமல்லாது அவளும் கூட அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் மாத்திரமே கழிப்பறைக்குச் செல்கின்றனர்.

                “ஆஹ் தங்கச்சி… இப்ப நாங்களும் இங்கேதான்… நீங்களும் இங்கேதான் இல்லையா?” என மகள் மாலைவகுப்புக்கு போய் வரும் வேளைகளில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் முரட்டுப் பையன் ஒரு நாள் அவளுக்கும் கேட்கவே கூறியிருந்தான். எனவே மகளின் பாதுகாப்பு குறித்து நயனாவுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது.

            மகனுக்கு தடிமன் பிடித்திருக்கிறது. மூக்கைச் சிந்தித் துடைக்கவேனும் கைக்குட்டையொன்று இருக்கவில்லை. தண்ணீரில் இறங்கி ஓடியாடி நடப்பதால் அவனது கால்களும் அரிப்பெடுத்திருக்கின்றன. பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வந்திருந்த வயதான பெண்மணியும் ஒரு நோயாளி. நீரிழிவுக்கும், உயர் குருதியழுத்தத்துக்கும் மருந்து பாவித்துக் கொண்டிருப்பவளின் அனைத்து நோய் மருத்துவப் பத்திரங்களும் கூட வெள்ளத்தில் போய்விட்டிருந்தன.

             மகனின் ஆரம்பப் பாடசாலையே வெள்ள நிவாரண முகாமாக ஆகியிருந்தது. வகுப்புக்களிலிருந்த பிள்ளைகளின் உபகரணங்கள், புத்தகங்கள், படைப்புக்கள் ஆகியவை முழுவதுமாக சேதமாகிப் போயிருந்தன. பாதிக்கப்பட்ட இம் மக்கள் இம் முகாமிலிருந்து முழுமையாக வெளியேறும் வரைக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை இல்லை. மகனுக்கென்றால் இப் புதிய அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கிறது.

             எனினும், மஞ்சள் நிற இருள் சூழ்ந்த மின்குமிழ் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும், பூச்சிகளும் நுளம்புகளும் நிறைந்த, மக்கள் முணுமுணுக்கும், இருமும், காரித் துப்பும், குடிகாரர்களின் புலம்பும் ஓசைகளும் நிறைந்த முகாமில், இரும்புக் கால்களைக் கொண்ட பாடசாலைக் கதிரைகள் தரையோடு உரசுவதால் உடைந்து போன தரையின் மீது பன்சலை விகாரையால் தரப்பட்ட அழுக்குப் பாயில் உறங்குவதற்கென படுத்திருக்கும்போது ‘அம்மா, நாங்க நம்ம வீட்டுக்குப் போறது எப்போ?’ என மகன் எப்போதும் கேட்பான்.

                சந்தன கோபத்திலிருந்தான். நிவாரண முகாமுக்குக் கொண்டு வந்து பகிரப்படும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவன் பெரிதும் விருப்பமின்றியே வரிசையில் நிற்பான். உணவும், குடிநீரும் தவிர்ந்த வேறெதற்கும் அவன் வரிசையில் நிற்பதில்லை.

             ‘நாங்க பிச்சைக்காரர்களில்ல.. எங்களுக்கு வேறொண்ணும் தேவையில்ல’ என கோபமாகச் சொல்வான்.

             நிவாரணப் பொருட்களைப் பகிரும் குழுவினர் வந்தால் அயல்வீட்டுப் பெண்மணி பிள்ளைகளை மறந்து வரிசையில் முண்டியடிக்கச் சென்றுவிடக் கூடும். உடல் பலம் கொண்ட முரட்டு ஆண்கள் வந்து கொடுக்கப்படுபவற்றைப் பறித்துக் கொண்டு செல்வர். அவர்களில் பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களல்ல என பக்கத்து வீட்டுப் பெண்மணி கூறியிருக்கிறாள். பல ஊர்மக்கள் சேர்ந்திருக்கும் முகாம் மிகவும் சிக்கலானது. கிராம சேவக அதிகாரியான பெண்மணியால் மாத்திரம் அச் சிக்கலைத் தீர்ப்பது சிரமமானது.

             பக்கத்து வீட்டு பெண்மணியைச் சூழவும் எப்போதும் நிவாரணப் பொருட்கள் நிறைந்திருந்தன. பால்மா, பருப்பு, மீன் டின்கள், சீனி, தேயிலை, ஆடைகள், பயிற்சிப் புத்தகங்கள், பேனைகள், பென்சில்கள், வர்ணப் பெட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் எனப் பலவற்றையும் பொலிதீன் பைகளில் சேகரித்து வைத்திருந்தாள். அவள் பாவாடை சட்டை அணிபவள். எனினும் மகளிர் அமைச்சினால் கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருந்த இளம்பெண்களின் உள்ளாடைகளையும் ‘மகளுக்குக் கொடுக்கலாம்’ என இலவசமாக வாங்கி வைத்திருந்தாள். மகள் வந்து நிவாரணப் பொருட்கள் நிரம்பிய பொதிகளை வாங்கிச் சென்றாளே தவிர, தாயை தன்னோடு  கூட்டிக் கொண்டு போகவில்லை.

             அயலில் வசித்து வந்த திலினி இப்போது ஐந்து மாதக் கர்ப்பிணி. கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலையில் சென்று தங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவள் அங்கு சென்றால் அவளது ஏனைய இரண்டு குழந்தைகளையும் அவளது கணவனே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பிறகு வெள்ளத்தில் சிக்கியுள்ள அவர்களது வீட்டை துப்புரவு செய்வது யார்?

             ‘கீழே படுக்க, உட்கார, எழுந்திருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா’ என திலினி எப்போதும் கூறுவாள். முகாமில் ஆடை மாற்றுவதில் கூட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மோசமான ஆண்களின் காமப் பார்வை எல்லாப் புறத்திலிருந்தும் மின்சார விளக்குகளைப் போல பளிச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன. எவ்வாறாயினும் அதுதான் இப்போது இவர்களின் இருப்பிடம்.

             “நாங்கள் போவோம்” எனக் கூறியவாறு நயனா தனது கணவனின் கையைப் பிடித்தாள்.

             “நீ போ… என்னால முடியாது” என அவன் கையைத் தட்டி விட்டான்.

             இப்போது அவன் மிகவும் கோபமுற்றிருக்கிறான். முகாமில் ஒருவன் திடீரென கதிரைகளைக் கீழே தள்ளிப் பாய்ந்து தனது மனைவியைத் தாக்கியதை அவள் நேற்று காண நேர்ந்தது. ஏனையவர்கள் அவனைப் பிடித்து வேறு புறத்துக்கு இழுத்துச் சென்றனர். குழப்பத்தைக் கண்ட பொலிஸ் அதிகாரி சப்பாத்துக் கால்களுடன் நயனாவின் பாயை மிதித்தவாறு கடந்து சென்றார். அந்தச் சப்பாத்துக்களில் என்னென்ன அழுக்குகள் மிதிபட்டிருக்கக் கூடும்?

             முகாமுக்குச் சென்ற நாளிலிருந்து குளிக்கவில்லை. பாடசாலையில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயினருகே கால்களில் ஒட்டிக் கொள்ளுமளவுக்கு சேறு நிறைந்திருந்தது. அவளது தலை அரிப்பெடுத்தது. தலைமயிர்களிடையே விரலை நுழைத்துப் பார்த்தாள். அழுக்கு எண்ணெய்ப் பிசுக்கு அங்கிருந்தது. கால்களும் அரிப்பெடுத்தன.

                 “மகளை நினைச்சாப் பயமாயிருக்கு… வீட்டைத் துப்புரவாக்க உதவுங்கன்னு, உதவிக்கு வந்திருக்குற அந்தத் தம்பிகள்ட சொல்லுவோம். வாங்க இப்ப போகலாம்.”

             மகளின் நிலையைப் பற்றிச் சொன்னதும் சந்தனவின் மனம் மாறுவதை நயனா உணர்ந்தாள்.

    ***************

    mrishanshareef@gmail.com

    Share
  • வரலாற்றில் தடம்பதித்த கல்கியின் பார்த்திபன் கனவு

    -முனைவர் மு.புஷ்பரெஜினா

                    தமிழக வரலாற்றைச் சிறப்பித்த  பெருமை சோழர்களையே சாரும். சோழர்களின் வரலாற்றை அறியpushpa உதவியாகப் பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றுள் இன்றிமையாத ஒன்று இலக்கியங்கள். இலக்கியங்களிலும் குறிப்பாக இக்கால இலக்கியங்களில் சோழர்களின் வரலாற்றை நம் கண்முன் கொணர்ந்த பெருமை வரலாற்று நாவல்களை இலக்கிய உலகிற்கு படைத்தளித்த கல்கியின் படைப்புகளையே சாரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    வரலாற்று நாவல்களின் தந்தை – கல்கி

                    சோழநாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம், மாயூரத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்ற சிற்றூரில் பிறந்து, வரலாற்று நாவல்களால் தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர் கல்கி. ஒருமுறை நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று கடற்கரை மணல்வெளியில், நிலவொளியில் அமர்ந்திருந்த போதே கல்கிக்கு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் மனத்தில் தோன்றியதாகச் ’சிவகாமியின் சபதம்’ நாவலின் முன்னுரையில் கூறியுள்ளதன் மூலம் அறியலாம்.

                    கல்கியின் மனத்தில் வரலாற்று நாவலை எழுதவேண்டும் என்ற ஆவல் தோன்றியவுடன் தன்னை ஒரு வரலாற்று ஆராய்ச்சி மாணவனாகவே கருதிக் குறிப்புகளைத் திரட்டலானார். பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்ததோடு தான் எழுதவிருக்கும் வரலாற்று நாவலோடு தொடர்புடைய மாமல்லபுரம், தஞ்சை. இலங்கை போன்ற நாடுகளுக்கும், ஊர்களுக்கும், அஜந்தா போன்ற இடங்களுக்கும் சென்று கண்டு வந்தார்.

                    கல்கி தம் வரலாற்று நாவல்களில், வரலாற்றுச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று மாந்தர்களையும், கற்பனை மாந்தர்களையும் சேர்த்து வரலாற்றுக்கு முரணாகாமல் அக்கால மக்களின் பழக்க வழங்கங்கள், மனவியல்புகள், கலை, இலக்கியச்சிறப்பு முதலானவைகள் வெளிப்படுவதற்கு ஏற்ற கற்பனை வளத்தோடு, நாவலுக்குரிய தோற்றம், உள்ளடக்கம் குன்றாத வகையில் படைத்தளித்தார். ஆகவே கல்கி வரலாற்று நாவல்களின் வழிகாட்டி என்று புகழப்படுகிறார்.

    கல்கியின் பார்த்திபன் கனவு

                    பார்த்திபன் கனவு கல்கியின் முதல் வரலாற்று நாவலாகும். மகத்தான மானுட நாடகங்களை உருவாக்க கல்கி எடுத்து வைத்த முதல் அடி இது எனலாம்.

                     அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு நாட்டுப்பற்று தோன்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கல்கி வரலாற்று நாவலை எழுதியிருக்க வேண்டும் என்று கூறும் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், கல்கியின் பார்த்திபன் கனவு நாவலின் முன்னுரையில்,

                    “சோழநாடு சுதந்திரம் இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறது. அதன் சுதந்திர வாழ்வையும், பரதகண்டம் முழுவதிலும் பரந்து நிற்க வேண்டிய புகழையும் குறித்துப் பார்த்திபன் கனவு கண்டு, அக்கனவைச் சித்திரமாக எழுதி, ஏங்கி ஏங்கி வருந்துகிறான். தனது ராணியாகிய அருள்மொழியையும், தன் புதல்வனாகிய விக்கிரமனையும் தன் கனவுலகைக் காணச் செய்கிறான். சுதந்திரத்தை மீட்கும் பொருட்டு நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியுடன் வீரப்போர் செய்து மடிகிறான். இவ்வாறு நாவலின் முதலிலிருந்து கடைசிவரை தேசப்பற்று என்னும் அடிநாதமே ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்பார்.

                    நாவலின் வெற்றி அதன் கதைக்கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, உரையாடல், உத்திமுறைகள், காட்சி, வருணனை, நடை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே அமையும்.

    பார்த்திபன் கனவு – கதைப்போக்கு

                    பார்த்திபன் கனவைக் கல்கி அவர்கள் மூன்று பாகங்களாகப் பகுத்துள்ளார். பார்த்திப சோழன் மரணத்துடன் முதல் பாகமும், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதாகத் தொடங்கும் இரண்டாம் பாகம் விக்கிரமன் செண்பகத்தீவுக்குச் செல்ல, அரசி அருள்மொழி சிறுத்தொண்டருடன் புண்ணிய நகரங்களைத் தரிசிக்கச் செல்வதாகவும், அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் நிகழ்ச்சியுடன் மூன்றாம் பாகம் தொடங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை சுமார் பத்து ஆண்டுகள் நடப்பதாகக் கல்கி அமைத்துள்ளார்.

                    பார்த்திப சோழனின் கனவு, அவன் விக்கிரமனிடம் பெறும் வாக்குறுதி, சிவனடியாரான நரசிம்மர் பார்த்திபனுக்குத் தரும் வாக்குறுதி, அதன்படி விக்கிரமனைச் சுதந்திர மன்னனாக்கச் செண்பகத்தீவுக்கு அனுப்புதல், அவன் மாவீரத்தை விளக்கச் சிவனடியாரைக் கபால பைரவனிடமிருந்து விக்கிரமன் காப்பாற்றுதல், நரசிம்மர் அவனைச் சோழ நாட்டின் சுதந்திர மன்னனாக்குதல் என்பதாக நாவலின் கதை கட்டுக்கோப்போடு முரணின்றி வளர்ந்து முழுத்தன்மை பெறுவதை அறிய முடிகிறது,

    பாத்திரப்படைப்பு

                    தன் சோழநாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு ஓவியமாக வரைந்து, பெரும் படை கொண்ட நரசிம்ம வர்ம பல்லவனிடம் தோல்வி அடைந்து இறப்பதாகப் பார்த்திப மகாராஜா காட்சியளிக்கிறார்.

                    பார்த்திப மகாராஜாவின் மகனாக அவசரப்பட்டு எதையாவது செய்து மாட்டிக்கொள்வதும், அடுத்தவரின் உதவியில் தப்பித்துக் கொள்வதுமாக விக்கிரமனின் கதாப்பாத்திரம் மூலம் சுவாரசியப்படுத்தி இருக்கிறார் கல்கி.

                    படகோட்டி பொன்னனும், அவன் மனைவி வள்ளியும், சக்கரவர்த்தி மகள் குந்தவியும் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றனர். குந்தவி விக்கிரமனை நினைத்து உருகுவதும், அவனுக்காகத் தன் தந்தை  நரசிம்மச் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம் செய்வதுமாகிய இடங்களில் கல்கி அழகான வர்ணனையைத் தந்துள்ளார்.

                    நரசிம்ம வர்மனால் செண்பகத்தீவு சென்று மன்னனான விக்கிரமன் தேவசேனனாக மாறுவேடம் பூண்டு  மாமல்லபுரம் செல்ல, வீரசேனனால் காப்பாற்றப்படுகிறான். மாரப்பனால் காஞ்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட விக்கிரமன் கபாலிகர்களிடமிருந்து பொன்னனால் காப்பாற்றப்பட்டு, மகேந்திர மண்டபத்தில் சிறுத்தொண்டர் குழுவினருடன் இருந்த அருள்மொழியைச் சந்திக்கின்றான்.

                    சிறுத்தொண்டர் பல்லவரின் படைத்தலைவராக வாதாபி சென்ற போது, அவரால் உயிர்ப்பிச்சையளிக்கப்பட்ட, நீலகேசியே கபாலருத்ரபைரவன் என்றும், அவன் சூழ்ச்சியினால் கலகம் உண்டாக்கி நாட்டை வெல்லக்கருதியதாகக் கூற, மாரப்பன் நீலகேசியாகிய பைரவனைக் கொன்றார்.

                    விக்கிரமன் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட, விசாரணையில் நரசிம்மரே சிவனடியார் என்பதாகப் பாத்திரங்களைப் படைத்துச் செல்கிறார் கல்கி.

    பார்த்திபன் கனவு நாவலின் தொடக்கமும் முடிப்பும்

                    பார்த்திபன் கனவு நாவல் தோணித்துறை எனும் அத்தியாயத்தில் காவிரிக்கரையின் இயற்கை வருணனையோடு தொடங்குகிறது. ராஜாவும் ராணியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு  யுத்தம் வரப்போவதாகப் பொன்னன் கூறுகிறான். அப்போது மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்த வீரன் ஒருவன் தோணியைச் செலுத்துமாறு கூறுகிறான்.

                    சோழநாட்டில் போர் வரப்போகிறதே! யாருடன் சோழன் போரிடப் போகிறான்? அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறான் ஒரு வீரன்! அது என்ன செய்தி? போரைப்பற்றிய செய்தியா? வேறு செய்தியா? என்று வாசகர்களைப் பார்த்திபன் கனவு எனும் கோட்டைக்குள் ஆவலுடன் நுழையச் செய்கிறது கல்கியின் நடை.

                    இவ்வாறு ஆவலுடன் தொடங்கிய பார்த்திபன் கனவு நாவல், நரசிம்மனின் முயற்சி வென்றதா? குந்தவி காதலனைக்  கைப்பிடித்தாளா? விக்கிரமன் பார்த்திபனின் கனவை மெய்ப்பித்தானா? விக்கிரமனின் தாய் மீட்கப்பட்டாளா? விக்கிரமனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

                  பார்த்திபன் சிறந்த வீரன் என்பதை அறிந்த  நரசிம்மர் தனது இலட்சியத்தையும் விடுத்து  நாடு கடத்தப்பட்ட விக்கிரமன் அதை மீறித் திரும்பியதால், சோழரின் மணிமகுடத்தை விக்கிரமச் சோழர் இனிமேல் தனியாகத்தான் தலையில் தாங்க வேண்டும் என்று புதுமையான தண்டனை அளிக்க, விக்கிரமன் சோழ நாட்டின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தான்.

                 மேலும் பார்த்திபன் கனவில் ‘கனவு நிறைவேறியது’ என்னும் இறுதி அத்தியாயத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு நாடாக்கித்தன் கீழ் கொண்டுவந்து ஆளும் நரசிம்மவர்மரின் இலட்சியக்கனவு  நிறைவேறவில்லை என்பதாக நாவல் சுவையிறக்கமாக அமைகிறது.

    சோழ வரலாற்றை உணர்த்திய பார்த்திபன் கனவு

    பொதுவாக வரலாற்று நாவல்களில் காணப்படுவது போன்றே வீரமும் காதலும் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்றாலும், தமிழகத்தில் சைவமும் சமணமும் மோதிக்கொண்ட ஒரு காலச்சூழலில் காபாலிகச் சமயம் அரசியலில் செல்வாக்குப்பெற்றிருந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலும் சமயமும் கைக்கோர்த்துக் கொள்வதனால் நிகழும் தீமை தெளிவாக முன்வைக்கப்படுகிறது.

    ஆனாலும் கடல் கடந்த நாடுகளில் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று பார்த்திபன் கண்ட கனவு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர், இராசராசன், இராசேந்திரன் ஆகிய சோழப்பேரரசர்கள் காலத்திலேயே முழுமையாக நிறைவேறியது என்னும் வரலாற்றை உண்மையை உணர்த்தும் வகையில் பார்த்திபன் கனவு நாவல் அமைந்துள்ளது. கல்கியைப் போன்ற வரலாற்று நாவலாசிரியர்களின் படைப்புகள் வழி நாட்டுப்பற்றும், மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் இளைய சமுதாயத்தினரால் உணரப்படவேண்டும்.

    துணை நூல்கள்:

    1. கல்கியின் பார்த்திபன் கனவு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.
    2. தமிழக வரலாறும் பண்பாடும், வே.தி.செல்லம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
    3. வரலாற்று நாவல்களின் நோக்கமும், பயனும், கி.வா.ஜகந்நாதன்.
    4. கல்கியின் வரலாற்று நாவல்கள், பூவண்ணன்.

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(177)

    செண்பக ஜெகதீசன்

    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி யுறும். (திருக்குறள்-817: தீ நட்பு) 

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தில் பகைமையுடன்
    உதட்டிலே சிரிப்பைக் காட்டும்
    உறவு நட்பல்ல… 

    அதைவிட,
    பகைமையையே காட்டிடும்
    பகைவர் தரும் துன்பம்,
    பத்துகோடி மடங்கு
    இன்பந்தரும்…! 

    குறும்பாவில்…

    பகைகொண்ட உளத்துடன் நகைப்போர்
    நட்பைவிட, பகைவர்தரும் துன்பம்,
    பத்துகோடி மடங்கு இன்பமே…! 

    மரபுக் கவிதையில்…

    நெஞ்சில் முழுதும் நஞ்சுவைத்து
         -நிறைந்த பகையை மறைத்துவிட்டே
    கொஞ்சும் மொழியுடன் நகைத்துவரும்
       -கொடியோர் நட்பு வேண்டாமே,
    பஞ்சில் நெருப்பாய்ப் பகைவர்தரும்
      -பற்பல வகையாம் துன்பங்களும்,
    அஞ்சிடத் தக்கயிந் நட்பைவிட
    -அதிகக் கோடியாய் இன்பமாமே…! 

    லிமரைக்கூ…

    சிரித்திடுவார் பகையையுள் மறைத்து,
    தீநட்பிதனைவிடக் கோடிமடங்கு இன்பமே, வரும்
    தீயோர்துன்பம், பகையதை நிறைத்து…! 

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் தீநட்பு
    வெசமாக் கொல்லும் தீநட்பு…

     உள்ளே பகய மறச்சிவச்சி
    வெளியே சிரிப்போர் ஒறவுவேண்டாம்… 

    அப்புடிப்பட்ட நட்பவிட
    நேருல மோதுற பகயாளி
    நமக்குக் குடுக்கிற துன்பமெல்லாம்
    கோடி மடங்கு இன்பந்தான்… 

    அதால,
    வேண்டாம் வேண்டாம் தீநட்பு
    வெசமாக் கொல்லும் தீநட்பு…!

     

     

     

    Share
  • பாமரகீர்த்தி -1:2: ஹரிஜனத் தந்தை

     -இன்னம்பூரான்
    ஜூலை 28 2017

    innam

    பிரசுரம்:

    மதுரை மாநில மத்திய நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய MDU93641 நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். ஏழு வருடங்களுக்கு முன் சீதாலக்ஷ்மி எழுதியது நினைவில் வருகிறது:

    ‘… தினமணி செய்தி இது மதுரை,பிப். 23: அரிசன மக்களுக்கும், தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த  வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு (பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது தியாகிகளிடையே அதிர்ச்சியை

    ஏற்படுத்தியுள்ளது… உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது “புளியமர விளாரால்’ அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோமீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.

    கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப்போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்…தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில்

    கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலை போராட்டத்தில் வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறைத் தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது. அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த “தியாகதீபம்’ வைத்தியநாதய்யர். அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்…’. அந்த பதிவை படித்த திரு நரசய்யா அவர்களின் ஆதங்கம்:

    ‘இது தான் இன்றைய அரசியல்! தலை குனிய வேண்டியவர்களாயுள்ளோம். நான் சென்ற வாரம் மதுரை சென்றிருந்த போது, ஊரெல்லாம் ஒரு தலைவரின் கட் அவுட்டுகளாகவே இருந்தன. சுதந்திரம் இந்தியாவில் எவருக்குக் கிடைத்துள்ளது? தீர அலோசிப்போம்!’.

    [அவருடைய குடும்பத்திற்கும் வைத்யநாதய்யர் குடும்பத்திற்கும் தொடர்புண்டு. அவர் குமாரர் வை சங்கரன் இவரது சகோதரரின் உற்ற நண்பர். ஆலயப்ரவேசத்தில பங்கு கொண்ட புலி அய்யர் – இயற் பெயர் சுப்ரமணிய அய்யர்- இவரின் உறவினர்.

    ஆம் மதுரை ஏ. வைத்தியநாதய்யர் அவர்களை பற்றிய இந்த நூலின் பெயர் ”ஹரிஜனத் தந்தை.” தன் இடம், பொருள், உடல், ஆவி, குடும்பம் எல்லாவற்றையும் முழுமையாக நசுக்கப்பட்டவர்களை உய்விப்பதற்கு அர்ப்பணம் செய்த இவர் திட்டமிட்டு மீனாக்ஷி ஆலயப்பிரவேசம் செய்து, ராஜாஜி இதற்கேற்ற சட்டம் இயற்றியதை போற்றவேண்டும். அதற்கு முன் ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி நசுக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளவில்லை என்பது வரலாறு. அது மேன்மக்களாட்சி.

    1. திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்;
    2. திருவெண்ணை நல்லூர் கிருபா ஆசிரமம்;
    3. சென்னை நந்தனார் கல்விக்கழகம்ல்
    4. கோவை ராமகிருஷ்ணா வித்யாலயம்;
    5. திருச்சி பொதுநல ஊழியர் சங்கம்ல்
    6. வேலூர் ஒலவையார் கல்விக்கழகம்;
    7. சென்னை ஆதி திராவிடர் மகாஜனசங்கம்;
    8. சென்னை அருந்ததியர் மகாஜனசங்கம்;
    9. தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள்.

    எல்லாவற்றிற்கும் அரிஜன சேவாசங்கத்தின் தலைவர் என்ற முறையில் பொருளுதவி முதல் பல தொண்டுகள் செய்த சான்றோன், இவர். மதுரையில் இவருடைய விசாலமான வீடு ஓர் அன்னதான சத்திரம்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://upload.wikimedia.org/wikipedia/ta/d/d7/Vaithiyanatha_aiyar.jpg

     

     

    Share
  • சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு….

     

    ”செத்தாத்தான் என்னவோய் ! சேதாரம் மேனிக்கே!
    பத்தாம்நாள் பாலூத்தும் பங்காளி ! -சத்தான
    ஆன்மா இருக்கிங்(கு) அனைத்துக்கும் சாட்சியாய்,
    வீண்நான் உடம்பை விலக்கு’’….கிரேசி மோகன்…

    Share
  • TRY this ANGLE”(CHANGE THE ANGLE OF VISION)

    “பார்வையின் கோணத்தில் பேதம் விலகிட –
    பார்க்கும் பொருள்கள் பரமசிவம் -தீர்வை –
    அவனிடமே விட்டு அகார்யமாய் வாழு,
    சிவனிட பாகத்தைச் சார்ந்து “….கிரேசி மோகன் ….!

    சரியா !….இல்லை பகவான் சொல்வது போல ‘’சப்தஜால மஹாரண்யத்தில்(சொற்கள் என்னும் பெருங்காடு)’’ சஞ்சரிக்கின்றேனா….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    ”அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
    உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக வா”….கிரேசி மோகன்….!

    Share
  • ஏவுகணைகள் – சிஏஜி அறிக்கை

    பவள சங்கரி

    தலையங்கம்

    சிஏஜி யின் அறிக்கையின்படி நமது ஏவுகணைகள் எட்டுவித காரணங்களால் தரம் தாழ்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளைக்கொண்டு சீனாவோடு போர் மூண்டால் அதிக காலம் போரில் நிலைத்து நிற்பது சிரமம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இன்று பாகிசுதானில் அந்நாட்டு பிரதமர் தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இனி வாழ்நாள் முழுவதும் அரசு மற்றும் அரசியலில் பங்குகொள்ள இயலாதவாறு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை குறுகிய காலம் நிர்ணயிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஏவுகணைகளைப் பொறுத்தவரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தின் (DRDO) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் சிஏஜி யால் தரம் குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டால் தவறு எங்கே நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பாதுகாப்பு விசயத்தில் மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

    Share
  • இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு நீர்வெள்ளம் இருப்பதைக் காட்டியுள்ளது

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++++++

    http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/

    http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm

    https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project

    +++++++++++++++

    unnamed (4)

     

    நிலவின் ஒளிபுகா  துருவக் குழிகளில்
    நீர்ப்பனித் தேக்கம் பேரளவு
    இருப்பதாய் நாசா நிபுணர்
    தெரிவிக்கிறார் !
    குடிநீரை விண்கப்பலில்
    கொண்டு செல்வது
    கோடி கோடிச்  செலவு !
    மறைமுக நீர்ப்பனிப் பாறை
    பல யுகங்களாய்
    உறைந்து கிடக்கும்
    பரிதி ஒளிக்கதிர் படாமல் !
    எரிசக்தி உண்டாக்கும்
    அரிய வாயு ஹைடிரஜன்
    சோதனை மோதலில் வெளியேறும் !
    செவ்வாயிக்குச் செல்லும்
    பயணிகட்குத்
    தங்குமிடம் அமைக்க
    வெண்ணிலவில் பனிப்பாறைத்
    தண்ணீர் வசதி !
    எரிசக்தி ஹீலிய வாயு
    பிராண வாயு சேமிக்கும் !
    மீதேன், மெர்குரி, மெக்னீசியம்
    வெள்ளி, அம்மோனியம்
    உள்ளன !
    இந்திய விண்ணுளவி  சந்திரியான்
    துருவக் குழிகளில்
    பெரும் பனிநீர்ப் பாறைகள்
    இருப்பதைக் காட்டும் !
    நிலவின் அடித்தட்டிலும் நீர் உள்ளது  !
    பரிதி ஒளிக்கதிர் புகாத
    படு பாதாளத்தில்
    பாறை நீரைத் திரவ மாக்கி
    மேற்தளத் துக்கு
    ஏற்றுவது சிரம மானது !

    +++++++++++++++++

    Image result for water rich rocks on Moon

     

    நிலவின்  நீர்மயக் கரும் படிவுகள் பல தளங்களில் பரவியுள்ளன. அவற்றிலிருந்து தெரிவ தென்ன ?  அப்பெலோ -15 & -17 பயணத்தில் அமெரிக்க விண்வெளி விமானிகள் கொண்டு வந்த நீரியல் மாதிரிகள் ஒருதடவை நேர்ந்தவை அல்ல.  நிலவின்  எரிமலைக் கரும்படிவு மாதிரிகள்  [Lunar Pyroclastics] யாவும், நிலவின் உட்தள நீர்மயச் செழுமையைக் காட்டுகின்றன.

    ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

    அப்பொலோ மாதிரிகள் நிலவின் உட்தளம் வெளியேற்றிய எரிமலைச் சாம்பல்கள்.  அவை ஆழ்ந்து சோதிக்கப் பட வேண்டியவை. ஆனால் சோதிக்கப் படாதவை.  ஏறக்குறைய மாதிரிகள் அனைத்தும் நீர்த்தடம் உள்ளதாகக் காட்டியுள்ளவை. ஆதலால் நிலவின் உட்தளம் ஈரமானது என்பது இப்போது ஆய்வு மூலம் அறியப் படுகிறது.

    ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

    Evidence from ancient volcanic deposits suggests that lunar magma contained substantial amounts of water, bolstering the idea that the moon’s interior is water-rich.
    Credit: Olga Prilipko Huber

    நிலவின் உட்தளத்தில் நீர்மய இருப்புக்கு மிகுந்த ஆதாரங்கள், எப்படியோ சந்திரனில் நீர் வெள்ளம் நீடித்துப் பிழைத்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. மோதலில் தோன்றிய நிலவை, முரண்கோள், வால்மீன்கள் தாக்கி நீர் மேவி உடனே உறைந்து போயுள்ளது.  நிலவின் உட்பகுதியில் எப்படி நீர்வெள்ளம் புகுந்தது என்பதுதான் நமது இப்போதைய பெரிய கேள்வி !

    சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

    நிலவின் குளிர்ந்த துருவங்களில் உள்ள  ஒளிமறைவுக் குழிகளில் நீர்ப்பனிக்கட்டிகளை விண்ணுளவிகள் படமெடுத்துள்ளன. ஆனால் நிலவின் மேற்தளத்தில் காணும் எரிமலைச் சாம்பல் படிவுகளை [Pyroclastic Deposits] எடுத்து ஆய்வு செய்வது எளிது. எதிர்கால விண்வெளி விமானிகட்கு பூமியிலிருந்து ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதைத் தவிர்க்கும் எந்த நீர்மயக் கண்டுபிடிப்பும் ஒருபெரும் முன்னடித் தடவைப்பே !  எமது ஆய்வு விளைவும் ஒரு புதிய மாற்று வழியைக் காட்டுகிறது.

    சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

     

    [Click to Enlarge]

    நிலவின் தளம் மீது நீர்மயப் பாறைகள் கண்டுபிடிப்பு

    நிலவின் குளிர்ந்த துருவப் பகுதிகளில் உள்ள ஒளிபுகா உச்சக்குளிர் ஆழக் குழிகளில் [Shackleton Crater in South Pole] பேரளவு நீர்ப்பனிக் கட்டிகள் இருப்பதை நாசா விண்ணுளவி [Lunar Reconnaissance Orbiter (LRO)], இந்திய விண்ணுளவி சந்திரியான் -1 ஆகிய இரண்டும் கண்டுபிடித்துள்ளன.  இந்த நீர்வளம் நிலவிலிருந்து திரவமாய் எடுக்கப்பட்டால் அம்முயற்சி சிக்கன முறையில் எதிர்கால அண்டவெளிப் பயணங்கள் தொடர்ந்து திட்டமிடப் பேருதவி புரியும்.

    அந்த உச்சக்குளிர் ஆழ்குழியில் எத்தனைத் டன்  நீர்ப்பனிக் கட்டிகள் உள்ளன என்று தெரியாது.  ஆழ்குழி முழுவதும் நிரம்ப வில்லை. சாக்கிள்டன் ஆழ்குழி 12 மைல் [20 கி.மீ.] விட்டம் உள்ளது, 3 மைல் [4.4 கி.மீ.] ஆழம் கொண்டது.  அது நிலவில் உள்ள மிகப்பெருங்குழி என்று அறியப் படுகிறது.  நிலவின் வட துருவ  ஆழ்குழிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் நீர்ப்பனிக் கட்டிகளில் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் நீர் வெள்ளம் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.  அந்த நீர்க் கொள்ளளவை மின்சாரம் மூலம் பிரித்தெழும் வாயுக்களைத் திரவ ஹைடிரஜன்/ திரவ ஆக்சிஜென் ஆக மாற்றினால் 2200 ஆண்டுகளுக்கு தினமொரு விண்வெளி மீட்சிக் கப்பலை [NASA Space Shuttle] ஏவிட முடியும்.  விண்வெளிப் பயணத்தின் போது விமானிகள் குடிக்க ஏராளமான நீர்ப்புட்டிப் பாட்டில்களை மிகுந்த செலவில் சுமந்து செல்ல வேண்டாம். விண்வெளி விமானிகள் தங்கவும், ராக்கெட் எரிசக்தியை மீண்டும் நிரப்பிக் கொளவும் நிலவுக் குடியிருப்புக் கூடாரங்கள் நிறுவ ஏதுவாக இருக்கும்.

     

    “நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை !  இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும்.  நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.  முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.

    டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)

    “நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது.  விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

    மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)


    “வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ?  நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது.  ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன.  அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C).  அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”

    டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.

    “நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”

    கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)


    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)



    நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் சேமிப்புகள் இருப்பது உறுதியானது

    2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில்  (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன.  நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழி களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது.  ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது.  முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது.  மோதலில் வெளியேறிய தூசி, துணுக்கு களில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது.  2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது.  இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.

    நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பாதாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி.  1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது.  இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது.  அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது.  1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !


    2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.

    நிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?

    சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார்.  சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி.  ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும்.  அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன.  தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன.

    சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது.  பரிதியி லிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன.  அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.

    நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன.  சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது.  சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது.  சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.

    வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார்.  வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்தி ருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?” என்று கேட்கிறார்.

    காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387  F (-233 C).  இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறை யாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன !  இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !

    வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தி உள்ளது

    2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது.  லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது.  உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலை களின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.


    அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது.  லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது.  நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A).  25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !  அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப் பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

    நிலவு பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்

    நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே !  அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும்.  இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை :  பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி !  அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி !  அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத் துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி !  அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.  அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் !  இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !

    தகவல்:

    Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

    1. Indian Space Program By: Wikipedia

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    4. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    6 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    7.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    8.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    9  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

    16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

    19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

    20.  Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

    21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

    22  Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

    23. Scientific American :  LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

    24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

    25.  National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

    26.  International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

    27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

    28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

    29 https://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

    30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)

    31 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)

    32. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)

    33. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)

    34. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)

    35. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)

    36. https://www.technologyreview.com/s/428030/soviet-moon-lander-discovered-water-on-the-moon-in-1976/  [May 30, 2012]

    37.  https://www.theverge.com/2017/7/24/16020132/moon-water-rock-samples-mining-missions  [July 24, 2017]

    38.  https://www.sciencedaily.com/releases/2017/07/170724114125.htm  [July 24, 2017]

    39.  https://www.scientificamerican.com/article/scientists-spot-water-rich-rocks-on-moon/?WT.mc_id=SA_DD_20170725  [July 24, 2017]

    40. http://earthmysterynews.com/2017/07/27/scientists-spot-water-rich-rocks-on-moon/  [July 27, 2017]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July 29, 2017)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (3)

     

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: மூன்று

    பாலகாண்டம்
    இலக்குவனும், சீதையும் உடன் வருதல்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    அண்ணனுக்குத் தொண்டாற்றி ஆதிமுதல் வாழும்
    அடக்கமிகு இலக்குவனும் அடவிக்குச் சென்றான்
    மண்மகளாம் ஜானகியும் வருங்காலம் உங்கள்
    வரமென்றே தன்கணவன் மனமொப்பச் சென்றாள்!
    எண்ணத்தில் பாசத்தை ஏற்றிய மன்னன்
    ஈடிலா தயரதனும் எல்லைவரை வந்தான்
    தண்கங்கைக் கரைக்”குகனை” சந்தித்த பின்னால்
    தன்னுடைய மக்களைத் தா(ன்)அனுப்பி வைத்தான் ! (21)

    முனி பரத்வாஜர் ஆஸ்ரமம் அடைதல்

    ஒவ்வொரு வனப்பகுதி உள்ளேயும் சென்று
    ஓடிவரும் ஆறுகளை உற்சாகத் தோடு
    செவ்வானக் கோலமென சிந்தையிலே வைத்து
    சீர்முனியாம் பரத்வாஜர் சிறந்தகுடில் வந்தார் !
    அவ்வேளை அம்முனியின் ஆணையினை ஏற்று
    அழகு”சித்ரக் கூடத்தை” அப்போதே சேர்ந்தார் !
    இவ்விதமாய் மூவருமே இருக்கின்ற வேளை
    இறந்திட்டார் தசரதர் ஈடில்லா மன்னர் ! (22)

    பரதன் அரசேர்க்க மறுப்பதும் இராமனை வேண்டலும்

    வாரிசாய் பரதனை வசிட்டரும் மற்ற
    மகத்தான அந்தணரும் வருந்திட்ட போதும்
    நேரியநற் குணபரதன் நீதியைத்தான் தாங்கி
    நேராகக் காட்டிற்கு இராமவழி சென்றான் !
    நேரிலே அண்ணன்முன் நெஞ்சார வீழ்ந்து
    நீங்களே அரசரென நிசத்தோடு வேண்ட,
    “யார்வந்து சொன்னாலும் யான்கொடுத்த வாக்கை
    அப்படியே காப்பதாய் அண்ணலுமே சொன்னார்!” (23)

    பரதனுக்கு பாதுகை அளித்த இராமன்

    தன்னுடைய பாதுகையைத் தன்தம்பி கையில்
    தனிக்கருணை இராமனும் தந்தனுப்பி வைத்தார் !
    நன்றியுடன் அண்ணனது நல்மொழியைப் பெற்று
    “நந்திகிரா மத்”திலே நற்பாது கையால்
    அன்றுமுதல் பரதனும் ஆட்சியினைச் செய்தான் !
    அண்ணனை எதிர்பார்த்தே அருந்தவமும் ஏற்றான் !
    நன்றிந்த நேரமென, நாட்டோர்கள் யாரும்
    நடந்தறியாக் காட்டிற்குள் நல்ராமன் சென்றான் ! (24)

    ஸ்ரீராம பட்டாபிஷேகம் - ரவிவர்மா ஓவியம்

    அகத்தியமுனிவரை சந்தித்தல்

    “விராத”னெனும் அரக்கனை வீழ்த்திய பின்னே
    வேதமுனி “அகத்தியரின் வேள்விக்கூ டத்தில்
    இராமனும் சீதையும் இலக்குவனும் கூடி
    இணையிலா அகத்தியர் இணையடியைப் போற்ற
    வராதநற் செல்வமே வந்ததாக எண்ணி
    வாழ்த்தினர் மாமுனி வாஞ்சையாய் நன்றாய் !
    அராவணை விட்டுவந்த அழகனுக் கென்றே
    அம்பறாத்துணி இரண்டினை அகத்தியர் தந்தார். (25)

    தண்டகாரண்யத்தில் முனிவர்கள் வேண்டல்

    செந்தீயை வளர்த்துநிதம் வேள்விசெய்வோர் வந்து,
    “தீயதோர் அரக்கர்கள் தினம்தரும் தொல்லை
    இந்திரரே ஆனாலும் எதிர்த்துப்போர் செய்ய
    எப்போதும் அஞ்சுவர் ! இராமனே உங்கள்
    மந்திரவில் கொண்டுடன் மாற்றுவீர்எம் அச்சம் !
    மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று
    சுந்தர இராமனைத் தோத்திரம் செய்ய,
    “சூழ்வினை தீர்த்துமக்கு சுகந்தருவே” னென்றான் ! (26)

    சூர்ப்பணகையும், இராவணனும்

    அதன்பெயரே ஜனஸ்தானம் ! அங்குதான் தீய
    அரக்கியாம் சூர்ப்பணகை அட்டகாசம் செய்வாள் !
    அதனாலே அவளங்கு அங்கபங்கம் செய்து
    அவமானப் பட்டுவிட்டாள் ! ஆத்திரம் கொண்டு
    முதலாக கரதூஷண மூர்க்கரினை ஏவ
    முற்றுமவர் கொட்டத்தை முடித்திட்டான் ராமன் !
    பதிலுக்கு இராவணன் பழிதீர்க்க எண்ணி
    பற்றுள்ள மாரீசன் பக்கபலம் கேட்டான். (27)

    மாரீசன் நல்லுரை

    “ஆற்றலும், எந்நாளும் அறம்வழுவா நல்ல
    அகத்தாலும் உறுதிபெற்ற ஆண்வீரன் ராமன்
    தோற்றாலும் அவர்முன்னே தோற்றலே வெற்றி !
    தொலைத்திடு வீண்பகையை சொல்வதைக்கேள்” என்றான்.
    தூற்றினான் துப்பினான் தொடர்ந்துவா என்று
    துரத்தினான் மாரீசனை தூயராம தர்மம்
    நோற்றிடும் ஆசிரமம் நோக்கியே ! அந்த
    நூதன மாயாவி நொடியினில் சென்றான். (28)

    இராவணன் சீதையைக் கவர்தல்

    மாயாவி மாரீசன் வஞ்சகமாய் அங்கே
    வளையவந்து இராமனை மயக்கியே ஓட
    ஓயாத இலக்குவனும் ஓடிப்பின் போக
    ஒளிந்துவந்த இராவணனும் உத்தமியாம் சீதைத்
    தீயோடு போய்விட்டான் ! தேவமகள் கத்தும்
    திசைபார்த்து ஜடாயுவும் தேடிப்போர் செய்தார் !
    தீயோனோ ஜடாயுவை வெட்டியே சாய்த்தான் !
    இராமனிடம் கழுகுராஜன் எல்லாமும் சொன்னார் ! (29)

    ஜடாயுவும், சபரியும்

    கலங்கிநின்ற இராகவனோ கழுகுராஜன் ஈமக்
    கடன்முடித்தார் ! சீதையின் கண்ணீரைப் போக்கத்
    துலங்குகிற நாள்தேடிப் போகின்ற போது
    துட்டனாம் “கபந்தனை”க் கொன்றுதீ யிட்டார்!
    நிலம்விட்டுப் போகையில் “இராமாநீ நல்ல
    நெறியாளர் சபரிகுடில் செல்லுக வென்றான் !”
    அலம்பிவிட்ட நிலவொளியில் அமைதியைத் தேடி
    அலைந்தபடி “சபரி”யிடம் அமைதியைப் பெற்றார். (30)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ”ட்ராகனுக்கும் வாத்ஸல்யம், மோகனுக்கும் வாத்ஸல்யம்
    மேகவண்ணன் வாத்ஸல்யம் மேன்மையாம் -யோகமே:
    மானார்வ சீதையை மாருதி கண்டாற்போல்
    நானார் விசாரம் நிகழ்த்து”….கிரேசி மோகன்….!

    Share
  • ”படைப்பவரே காப்பவரே துடைப்பவரே”….!

     

    “படைப்பவரே காப்பவரே துடைப்பவரே -நீங்களெலாம் –
    அடைக்கலப் பொருள்தானா! இல்லை
    அடியார்கள் மருள்தானா !….
    கைலாசம் வைகுண்டம் கமலபுரம்
    இவைகளெலாம் -மெய்வி லாசங்களா! இல்லை மேதினி க்லேசங்களா! …,
    ஆத்திகம் நாத்திகம் அத்வைதம் -இவைகளெலாம் -பேத்தல் பயம்தானா! இல்லை ப்ரம்ம மயம்தானா! “
    வாழ்வதுவும்,வளர்வதுவும்,சாவதுவும் -இவைகளெலாம்-வாடிக்கைக் காட்ஷிகளா! இல்லை வேடிக்கை சாக்‌ஷிகளா’’….!கிரேசி மோகன்….!

    Share
  • புக்கெட் (Phuket) (பயணக் கட்டுரை)

    நிர்மலா ராகவன்

    தாய்லாந்தில் உள்ள புக்கெட் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாத வெகு சுத்தமான, ஆகவே அரிதான, கடற்கரைப் பகுதி. அந்தமான் கடலால் சூழப்பட்டிருக்கும் இத்தீவிற்கு உலகெங்கும் உள்ள உல்லாசப்பயணிகள், குறிப்பாக குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், வருகிறார்கள்.

    IMG_20170716_123346

    சுமார் இருபது வருடங்களுக்குமுன் மீனவர் கிராமமாக இருந்தது புக்கெட். இப்போதோ, அகில உலக விமான நிலையம். தாய்லாந்தின் தென்கோடியில் இருப்பதால், கோலாலம்பூரிலிருந்து விமானப்பயணம் ஒன்றேகால் மணிதான். Air Asia -வில் போனால்அவ்வளவாகக் கையைக் கடிக்காது.

    பொதுவாக, நீல வண்ணம் என்றுதானே கடல் வர்ணிக்கப்படுகிறது? இங்கிருக்கும் அந்தமான் கடல் se green என்ற வகை. வெளிர் பச்சைநிறக் கடல் கொள்ளை அழகு.

    கடை வெளியே அழகுப் பதுமை

    நாங்கள் தங்கியிருந்த கரோன் கடற்கரையை ஒட்டி தென்னை மரமும் சவுக்கு மரமும் அடர்ந்திருந்தன. எதிர்ப்புறம் தெருக்கள். தெருக்களுக்குப் பின்னால் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள்.

    அண்மையில் டெங்கிக் காய்ச்சல் கண்டு, பலவீனமாக இருந்த என் உடல் தேறுவதற்காக என்னுடன் வந்திருந்தாள் என் இளைய மகள் சித்ரா. கடலைப் பார்த்தாலே எனக்கு உற்சாகமாகி விடும் என்று புரிந்தவள்.

    ஆங்காங்கே, `இங்கு குளிக்கக் கூடாது!’ என்று அபாய அறிவிப்பு செய்யும் சிவப்புக் கொடிகள். `குளிக்கப் போவதில்லை. சும்மா காலை நனைத்துக் கொண்டால் என்ன!’ என்று நான் துணிந்து (அசட்டுத்தனமாக?) போக, ஒரு பேரலை எதிர்பாராவிதமாக என்னை வீழ்த்திவிட்டது. கையை ஊன்றி, ஒரு காலை மடித்து உட்கார்ந்து, சிரிக்க ஆரம்பித்தேன்.

    “இந்த இடத்தில் காலைக்கூட நனைக்க முடியாது. அப்படியே வீழ்த்திவிடும்!” என்று உள்ளூர்க்காரி ஒருத்தி என்னிடம் எச்சரிக்கையாகக் கூறினாள். நான் ஏன் வாயைத் திறக்கிறேன்!

    விடுமுறைக்காலம் முடிந்துவிட்டதால், கைத்தடியை ஊன்றி நடந்த, வயது முதிர்ந்த வெள்ளைக்காரர்கள்தாம் அவ்விடத்தில் அதிகம் காணப்பட்டனர். வாழ்க்கை என்றால் ஒரே இடத்தில் இருப்பதில்லை, எத்தனை வயதானாலும், உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தால் இயன்றவரை வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற பாராட்டத்தக்க குறிக்கோள் உடையவர்கள் அவர்கள்.

    `வயசாயிடுத்து. ஒண்ணுமே முடியலே!’ என்று சுயபரிதாபத்துடன், இருந்த இடத்திலேயே இருப்பது அறிவீனம் என்பது நல்ல பாடமாக அமைந்தது. மனம் இன்னும் தளர வழி செய்வதுபோல்தானே அது?

    தாய்லாந்தில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தினர். (ஆங்காங்கே மசூதிகளும் காணப்பட்டன). இங்கு எக்காலத்திலும் காலனித்துவம் இருக்கவில்லை. அதனாலோ என்னவோ, உயர்வு, மட்டம் என்று (பிறர் ஏற்படுத்திவிட்டுப் போகும்) வித்தியாசமும் கிடையாது. எல்லாரையும் அணைத்துப்போகும் குணம். `அலி’ என்று நாம் குறிப்பிடுபவர்கள் சமூகத்தில் பிறரைப்போல சமமாகக் கருதப்படுகின்றனர்.

    எந்தவித கண்டிப்பும் கிடையாது என்பதால் வீதிகளில் ஒரு சாண் அகல பிகினி அணிந்துபோகும் ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமான காட்சி. (முன்பு நிர்வாணக் குளியல் இருந்தது). குளிரால் பாதிப்பு அடையாதிருக்க விட்டமின் D உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு எவ்வித பிரயத்தனமும் இல்லாது சூரியனே அதை அளிக்கும்போது, மூடி மறைத்துக்கொள்வானேன்! உச்சி வெயிலில், மூன்று மணி நேரம் நீச்சல் குளத்துள் காய்ந்தவர்களைப் பார்த்து எனக்கு ஒரே வியப்பு.

    உல்லாசப்பயணிகளை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கிறது என்ற நிலையில், பல இடங்களில் சர்வசாதாரணமாகக் காணப்பட்டபோலித்தனம் எனக்கு எரிச்சலை மூட்டியிருக்கிறது. புக்கெட் தீவில் உள்ளவர்களின் சிரிப்பில் எவரையும் ஏற்கும் நல்ல குணம்தான் தெரிந்தது.

    ஒரு கடை சாப்பாட்டுக்கடை என்றால், அடுத்தது மசாஜ் பார்லர். `உடலை இளைக்க வைக்கும் மசாஜ்’ என்று ஒரு வகை! பலருக்கும் அவசியம்தான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது. பின்னே? மலிவாகக் கிடைக்கிறதே என்று, வேளை பொழுது பாராது வகைவகையாக உள்ளே தள்ளினால்?

    IMG_20170717_171737

    “தேங்காய் எண்ணை மசாஜ் செய்து, உடலை பழுப்பு நிறமாக்குகிறோம்!” என்று ஒரு பலகை அறிவித்தது. நாமோ, முகத்தை வெண்மையாக்கும் கிரீம்களை நாடுகிறோம்! கருப்பாக இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் ஆவதுகூட கடினம் என்ற நிலை! நல்ல உலகம்!

    தாய்லாந்தில் செய்யும் மசாஜ் உலகப் பிரசித்தமானதாகையால், தினமும் போனோம். எண்ணையைத் தடவி கையால் உடம்பை நீவிப் பிடித்துவிடுதல் ஒருவிதம். மூலிகைகளைத் துணியில் சுற்றி, சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பதுபோல் இன்னொன்று. இம்முறையைச் செய்பவர்கள் விசேடப் பயிற்சி பெற்றவர்கள். முதலில் கைகளையும் கால்களையும் முறுக்கினாள் எனக்கு மசாஜ் செய்தவள், கடினமான யோகப்பயிற்சியை ஒரே நாளில் கற்றுக்கொடுக்க விழைவதுபோல். வலி உயிர் போவதுபோல் இருந்தாலும், அதன்பின் புத்துணர்வு பிறந்தது. கண்கள் தெளிவாகின. குறித்த நேரத்துக்குமேல், நமக்குத் தேவையானவரை செய்கிறார்கள்.

    தீவானதால், இங்கு கடல்வாழ் இனங்களைக்கொண்டு ஆக்கப்பட்ட உணவுவகைகள் மலிவு. அதற்காகவே அண்டைநாடுகளிலிருந்து பயணிகள் வருகிறார்கள். காய் கனிகளும் மலிவு. ஒரு சாமானை விலை கேட்டு, வாங்காவிட்டால் கடைக்கார்கள் கோபிப்பதில்லை. புன்சிரிப்புடன், கைகூப்பி நமஸ்காரம் செய்கிறார்கள், `காபுன்கா’ (kapunka) என்று. (பெண்களுக்கு முகமன் கூறுவது, விடைபெறுவது இரண்டிற்கும் அதே வார்த்தைதான்).

    ஒரே மாதிரியான அக்கம்பக்கத்துக் கடைச் சிப்பந்திகளுக்குள் போட்டி இல்லை, நட்புடன் பழகுகிறார்கள் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய மற்றொரு சமாசாரம்.

    புக்கெட் தீவிலுள்ள எல்லாக் கடைகளிலும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ, வாகன வசதிக்கோ ஒரே விலைதான். (இரண்டுமே அதிக விலை). அதனால் பேரம் என்பதே இல்லை.

    சைவ உணவில், மீனுக்குப் பதில் (fish stock) தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கிறார்கள். வருகிறவர்கள் திருப்தியாக உணவருந்தி மகிழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஆக்குவதாலோ, என்னவோ, எல்லா இடங்களிலும் நல்ல ருசி. பெரிய அளவில் கொடுக்கிறார்கள்.

    ஒரு நாள், நான் நிறைய நடந்துவிட்டு, களைப்புடன் ஒரு சாப்பாட்டுக்கடையில் நுழையுமுன்னர், வாசலிலிருந்த இளைஞன் அருமையாக, “Mamma! Come!” என்று என் தோளைப்பற்றி, சற்று உயரமாக இருந்த வாசற்படியைக் கடக்கவைத்து, உள்ளே அழைத்துச் சென்றான். என்னைப் பிரத்தியேகமாகக் கவனித்தான்.

    திரும்பிப் போகையில், “உன் தாய் உன்னுடன் இல்லையா?” என்று விசாரித்தேன்.

    “வெகு தூரத்தில், பாங்காக்கில் இருக்கிறார்கள்!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, “எனக்கு நீங்கள்தான் அம்மா,’ என்றான்.

    ஆதரவுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தேன். அவனுக்குப் பரம சந்தோஷம். “Take care of Mamma!” என்று என் மகளுக்கு அறிவுரை வழங்கினான்!

    காற்றோட்டமாக இருந்ததால், நிறைய நடக்க முடிந்தது. எந்த வேலையும் கிடையாது. வெயில் வேளையில் உறக்கம். உடலும் மனமும் ஒருங்கே லேசானதில், கற்பனையில் ஒரு நாட்டியப் பாடலும் எழுந்தது. போனதற்கு ஒரு நற்பயன்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ’’ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -வீழ்ந்தடியை(வீழ்ந்து அடியை(பாதத்தை)
    ஆனத்தோல் போர்வைக்குள் ஆஅனன்யர் மால்மடிமேல்
    பூனைபோல் கள்ளமிதைப் பார்’’….கிரேசி மோகன்….!

    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
    அப்பயலுக்(கு) அன்பே அறம்….!

    Share