Blog

  • எரியும் இருள்

     

    ராஜகவி ராகில்

     

    நான் ஓட்டை விழுந்த கம்பல்ல

    புல்லாங்குழல்

     

    உன் உளி தொடும் வரை

    கல்லாய்க் காத்திருக்கிறேன் நான்

     

    நான் செய்வதை நிழலும் செய்தது

    பொம்மை வெறுத்தேன்

     

    கல் வீசியும் விழாத மாங்காய்

    என் கனவில் விழுந்து கிடந்தது

     

    கண்ட கனவை

    காலையில் கட்டிலில் தேடினேன் நான்

     

    உன் அழகு குளிர்த் தேநீர்

    என் கண் குவளையில் ஊற்றி அருந்துகிறேன் நான்

     

    சொற்களால் என்னைக் கிழித்த நான்

    சொற்களால்தான் தைக்கிறேன்

     

    நான் நீர்க் குமிழி

    என்னை உடைத்து விடாதீர்கள்

     

    நான் பட்டாம் பூச்சி

    பூவென்று நினைத்து சிலந்தி வலையில் அமர்ந்து விட்டேன்

     

    நீ விளக்கேற்றினால்

    எரியும் எனது இருள்

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 95

    குவா கெலாம் குகை அருங்காட்சியகம், பெர்லிஸ், மலேசியா

    முனைவர் சுபாஷிணி

    ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் வரலாற்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.

    1s

    உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் தேடுதல்களின் பலனாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களின் தேடுதல் முயற்சியினாலா, அல்லது வணிகம் செய்ய மலாயா வந்த சீனர்களின் தேடுதல் முயற்சியா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவியத் தொடங்கினர். இது நிகழ்ந்தது 19ம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் எனலாம்.

    குகைகளுக்குள் சென்று, ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடினமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலர் இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.

    இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலாற்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இங்கு பணி செய்தோரில் பலர் குகைக்குள் இருக்கும் போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காகப் பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்துத் தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.

    2s

    உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து இப்பகுதியைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

    இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.

    3s

    தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு செல்வதற்குக் குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.

    4s

    ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார். மிக வியப்பாகவும் இருந்தது.

    5s

    இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர் மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கனத்தது.

    இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.

    Share
  • ’’ஜீவான்மன்’’….!

     

    ’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
    பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
    கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    கவிதை கணக்கு கற்பூரத்தை
    கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
    அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!

    ’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
    பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
    கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    கவிதை கணக்கு கற்பூரத்தை
    கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
    அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (20)

    க. பாலசுப்பிரமணியன்

    இறையுணர்விற்கு என்ன வழி?

    திருமூலர்-1

    ஒரு முறை ரோமாபுரியின் பேரரசராக இருந்த  ஜூலியஸ் சீசர் தன்னுடைய குருவை சந்திக்கச் சென்றார். அவரை வணங்கிய மாமன்னர் குருவிடம் “நான் தங்களுக்கு என்ன சேவை செய்யலாம்” என்று கேட்டாராம். அவனைப் பார்த்துச் சிரித்த குருவோ ” நீ என்னுடைய வெளிச்சத்தில் நிற்காமல் இருந்தாலே போதும்” என்றாராம். ஒவ்வொரு குருவும் இதையே தான் விரும்புகின்றார். தன்னுடைய சீடனுக்குத் தான் வழிகாட்டியாக இருந்தாலும், தன்னுடைய வழியை அவன் தானே  தேடிக்கொள்ள வேண்டும் என்பதே உட்கருத்து. எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடனின் கைகளை பிடித்துக் கடைசி வரை நடப்பதில்லை.

    இறைவனைத் தேடும் ஒவ்வொரு மனிதனும் இருளை நீக்கும் குருவின் துணைகொண்டு தன் உள்ளத்துள்ளே இருக்கும்  ஆன்மீகப் பாதையில் பயணம் செய்கின்றான். அவ்வாறு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம், ஏராளம் ! அந்த அனுபவங்களைத் தருவதற்கு குரு என்னவெல்லாம் செய்கின்றார்? பின் வரும் பாடல் அதை நன்கு விளக்குகின்றது

    பத்தி பணித்து பரவும் அடிநல்கிச்

    சுத்த உரையால் துரிசறச்  சோதித்துச்

    சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்

    சித்தம் இறையே சிவகுருவாமே.

    அனுபவங்களின் முத்தாய்ப்பாக சீடனுக்குக் கடைசியில் அறிவும் ஒளியும் கிட்டுகின்றன. இது ஒரு ஆனந்தமான அனுபவம். இந்த ஆனந்த அனுபவத்தை உணர்கின்ற ஒருவன் இறைவனைத் தன்னுடைய இதயத்தில் நிறுத்தி மகிழும் பொது அவனுக்கு இந்த வெளி உலகையெல்லாம் துறந்து ஆன்ம உலகின் வெளிச்சமும் அதைச் சார்ந்த ஒரு முக்தி நிலையும் தென்படுகின்றது. இந்த நேரத்தில் அந்த குருவே இறைவனின் உருவாகாத்  தென்படுகின்றார் . அந்த இறைவனும் குருவின் வடிவில் தோற்றமளிக்கின்றார் . இந்த இனிய பயணத்தை விளக்குவது போல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    மாடத்து  ளானலன் மண்டபத் தானலன்

    கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்

    வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்

    மூடத்து ளேநின்று முக்திதந் தானே .

    இதயத்தின் உள்ளே இறைவன் அமர்ந்தாலும் அவனை அறிந்து கொள்ளக்கூடிய அறிவும் அதற்கான முயற்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. குருவின் துணைகொண்டு இந்த அறிவை பெற்றால் உள்ளும் புறமும் இறை சக்தியே சூழ்ந்திருப்பதை உணரமுடியும். இந்த உன்னத அறிவு நிலையே உண்மையான முக்தி நிலை. இதை உணர்ந்த பட்டினத்தார் கூற்று இதோ :

    எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க

    மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே.

    இந்த முக்தி உணர்வு நிலையை விளக்கும் அப்பரோ தேவாரத்தில், இந்த நிலையை அடைவதற்குக் காரணம் கூட அந்த பரம்பொருளின் அருள்தான் என்று எடுத்துச்  சொல்லும் வண்ணம் பாடுகின்றார் :

    “ஊனாகி உயிரோடு யதனுள் நின்ற உணர்வாகிப்

    பிறவனைத்தும் நீயாக நின்றாய்

    நானேதும் அறியாமே என்னுள் வந்து

    நல்லனவும் தீயனவுங் காட்டா நின்றாய் ..”

    இப்படிப்பட்ட உன்னதமான உணர்வுநிலைக்கு வழிகிடைத்தாலும் அதைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நெஞ்சை எப்படிப் போற்றமுடியும்? அதனால்தானோ மாணிக்க வாசகர் எல்லாம் இருந்தும் அவனை அறிய முயலாத நெஞ்சை “பிண நெஞ்சே” என்ற சொற்றொடரால் அழைக்கின்றார்

    அறிவு இல்லாத என்னைப் புகுந்து ஆண்டுகொண்டு

    அறிவதை அருளி மேல்

    நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப்

    பந்தனை அறுப்பானைப்

    பிறவி இலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்

    மாறு ஆடுதி பிண நெஞ்சே

    கிரி எலாம்  மிகக் கீழ்படுத்தாய் கெடுத்தாய்

    என்னைக் கெடுமாறே

    (தொடரும்)

    Share
  • “வேர்களும் விழுதுகளும்” – “ஈழத்து இலக்கியப் பரப்பு”

    20431640_1461941410511289_3613242538548371941_n

    **********************************************
    வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
    (தி. ஞானசேகரன் – பகுதி-I)
    *********************************
    தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்.
    15.4.1941 பிறப்பு (74 வயது).
    நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
    ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார்.
    பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார்.
    அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார்.
    யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது
    சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
    இவர் “ஞானம்” என்னும் சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.
    1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும்
    ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த
    அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம்
    விதந்தோதத்தக்கது.
    அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும்
    பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன.
    தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
    இவரது படைப்புகள்
    *************************************************
    வட இந்தியப் பயண அனுபவங்கள் – 2013
    எனது இலக்கியத் தடம் முதலாம் பாகம் (2013)
    கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
    ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
    அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
    புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
    அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
    கவ்வாத்து (குறும் புதினம்) – 1996
    லயத்துச் சிறைகள் (புதினம்) – 1994
    குருதிமலை (புதினம்) – 1979
    புதிய சுவடுகள் (புதினம்) – 1977
    காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973
    ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட தி ஞானசேகரன் தம்பதிகள் லண்டனுக்கும் வந்தனர்.
    இவர்களுடனான சந்திப்பை “தேசம்நெற்” நவம்பர் 08 இல் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்திருந்தது.
    ஒரு இலக்கியக் கலந்துரையாடலாகவும் இலக்கிய நண்பர்களின் சந்திப்பாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
    புலம்பெயர் இலக்கியங்களை எவ்வாறு வரையறுப்பது என்பது பற்றிய உரையாடல் முக்கியத்துவம் பெற்றமைந்தது.
    புலம்பெயர்ந்தவர்கள் எழுதுவது எல்லாம் புலம்பெயர் இலக்கியங்களாகக் கொள்ளப்பட முடியாது என்றும்
    அதன் உள்ளடக்கம் புலம்பெயர்ந்த சூழலின்
    வெளிப்பாடாக அமைய வேண்டும் என்றும்
    தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    புலம்பெயர் இலக்கியங்கள் ஆரம்பத்தில் முற்றாக
    தாயக நிகழ்வுகளையே பதிவு செய்வதாக அமைந்து
    படிப்படியாக புலம்பெயர் சுழலை வெளிப்படுத்தி
    தற்போது முற்றுமுழுதாக புலம்பெயர் சுழலை,
    அங்குள்ள சமூகங்களை மையைப்படுத்தி
    வெளிவருவதை தி. ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    ஞானம் இதழின் தொகுப்பு இதழ்கள்
    வரலாற்று ஆவணங்கள் என்றும்
    இவை ஆண்டாண்டு காலத்துக்குமான
    இலக்கியப் பதிவை மேற்கொண்டுள்ளது என்பதும்
    அங்கு ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டது.
    போருக்குப் பின்னான ஒரு இலக்கியப் பதிவை
    ஞானம் கொண்டு வரவேண்டும் என்பதை
    எழுத்தாளர் உதயணன் வலியுறுத்தினார்.
    அதனை நிச்சயம் கொண்டு வரத் திட்டமிட்டு
    இருப்பதாகவும் ஆனால் அதற்கான காலம்
    இன்னமும் உள்ளதாகவும்
    தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    இதனை ஏனையவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
    இன்னமும் போருக்குப் பின்னான பதிவுகள் வந்து கொண்டிருப்பதால் அதற்கான தொகுப்பை சிறிது
    காலத்திற்குப் பின் வெளியிடுவதே உகந்தது என்ற
    கருத்து அங்கு வெளியிடப்பட்டது.
    ஈழத்தின் முன்னணி சஞ்சிகை ‘ஞானம்” ஆசிரியர்.
    2000 ஜுன் முதல் வருகிறது. இறுதியாக 184ஆவது இதழ்
    கடந்த மாதம் இணையத்திலும் வருவதால் அதிக
    வாசகர்களை உள்வாங்குகின்றது.
    பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம்’ எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவருகின்றது.
    1960களிலிருந்து எழுதிவரும் இலக்கியப் படைப்பாளி.
    வைத்தியர்- மலையகத்தில் நீண்ட காலமாக
    (புசல்லாவையில்) பணியாற்றியவர்.
    கல்வி:
    புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை,
    உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்
    பழைய மாணவராவார்.
    தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி
    சி. கணேசையர் இவரின் பூட்டனார்.
    நல்லை ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள்
    இவரது தாய் மாமா.
    இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற
    சிறுவர்களுக்கான சஞ்சிகையில் பள்ளிப் பராயத்தில்
    சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை
    அடிக்கடி எழுதி வந்தார்.
    1964ஆம் ஆண்டில் ‘கலைச்செல்வி’ எனும் சஞ்சிகையில்
    “பிழைப்பு” எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது.
    ‘கலைமகள்” இவரின் சில கதைகள் பிரசுரம் செய்தது.
    இதுவரை 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார்.
    எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக
    எமது படைப்பாளிகள் பலர் நாட்டை விட்டும்
    புலம்பெயர்ந்தனர்.
    மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.
    வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின.
    சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம்.
    இவை யாவும் எமது படைப்பாளிகளின்
    படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த
    நிலைமையை தோற்றுவித்தன.
    வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம்
    அருகத் தொடங்கிற்று.
    ஆனாலும், இலக்கியச் செயற்பாடுகள்
    காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட
    வேண்டியது அவசியமானது என்பதை உணர்ந்து,
    இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே
    இப்பணியில் ஞானசேகரம் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
    முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய
    இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி
    அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய
    நிலையில், ஈழத்து இலக்கியத்தின் உறவுப் பாலமாக இயங்குகின்றார்.
    உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே.
    மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய
    சாதனையைப் படைத்து வருகின்றார்
    என்றால் மிகையாகாது.
    இவர் 1997ஆம் ஆண்டு மத்திய மாகாண
    சாகித்திய விழாவில் இலக்கிய சேவைகளுக்காகக் கௌரவிக்கப்பட்டார்.
    மேலும், ரத்னதீப பதநம என்ற அமைப்பு,
    1998 ஆம் ஆண்டில் கண்டியில் ரத்னதீப
    விருது வழங்கி இவரைக் கௌரவித்தது.
    அகில இலங்கை சமாதான நீதவானான இவருக்கு
    அரசு வழங்கும் அதியுயர் கௌரவமான கலாபூஷண
    அரச விருதும் கிடைத்துள்ளது.
    மிக அண்மையில் உடத்தலவின்ன சிந்தனைவட்டம்
    இவருக்கு இதழியல் வித்தகர் எனும் பட்டம்
    வழங்கி கௌரவித்தது.
    இவ்வாறாக பிரதேச, மாவட்ட, மாகாண,
    தேசிய மட்டத்தில் இவர் பல விருதுகளையும்,
    கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
    டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை
    தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர்
    கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது.
    அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக
    மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது.
    ஞானசேகரன் நூல்கள்:
    1973 கால தரிசனம் – சிறுகதைகள்.
    12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு
    பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார்.
    1977 புதிய சுவடுகள் (மறுபதிப்பு 2004) முதல் நாவல்.
    வீரகேசரி நாவல் போட்டிக்காக எழுதப்பட்டது.
    இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
    அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
    1979 குருதிமலை- நாவல் (2005 மீள்பதிப்பு)
    1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
    அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது.
    தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத்
    தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம்
    இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது.
    இந்நாவல் ‘தகவம்’ பரிசினையம் பெற்றுக் கொண்டது.
    1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த
    ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும் பெற்றது.
    1992இல் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில்
    எம்.ஏ. வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
    தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று
    பதிப்புகளைக் கண்டது.
    மணிமேகலைப் பிரசுரத்தின் முதற் பதிப்பாக
    2005இல் வெளியிடப்படுகின்றது.
    ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான
    மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின்
    பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப்
    போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின்
    வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின்
    மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
    1994 லயத்துச் சிறைகள் 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
    இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த
    நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.
    1996 கவ்வாத்து குறுநாவல் தேசிய கலைஇலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது.
    ‘விபவி” கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு” விருதும், சான்றிதழும் பெற்றது.
    மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.
    இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள்
    1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.
    1998 அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்).
    தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் BA வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
    1999 அவுஸ்திரேலியப் பயணக்கதை புதிய சூழலில் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ள வாற்றையும், தமது ஆன்மீக, உலகியல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும் கோவில்களையும் கல்வி நிலையங்களையும் கலை-இலக்கிய மன்றங்களையும் அவர்கள் அமைத்துள்ளவாற்றையும் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
    1999 புரிதலும் பகிர்தலும். அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் தொகுதி.
    அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கலை இலக்கிய கர்த்தாக்கள் ஐவரின் நேர்காணல்கள் இங்கு இடம்பெறுகின்றன.
    எஸ்.பொன்னத்துரை,
    மாத்தளை சோமு,
    லெ.முருகபூபதி,
    அருண் விஜயராணி,
    சி.மனோகரன்
    ஆகியோரது கலை இலக்கியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும், கருத்துக்களையும் அவர்களது மன உணர்வுகளையும் சிறப்பான முறையில் இந்நேர்காணல்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    01/08/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இன்று பார்க்க ‘’தன்வந்த்ரி” போலிருக்கார், உடுப்பி கிருஷ்ணர், அமிர்த கலஸ ஹஸ்தராய்….!
    —————————————————————————————————————————————-

    170801 - Udupi Krishna -lr

    ‘புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
    தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
    எல்லோர்க்கும் உண்டு எமபயம், தன்வந்த்ரி
    கொள்வார்க்கு என்றுமவர் காப்பு”….கிரேசி மோகன்….

    ’’பானைக்குள் பாற்கடல், த்வாபர(துவாபர -த்வார) பாலகன்,
    ஆனைக்கா அய்யன் அகிலாண்ட -மோனே(மலையாளம்)
    எதுகையாய் வந்தோன் யதுகுல அண்ணன்
    முதுமை இலாமுகுந்த(மூவா முகுந்தர்க்கு இளையவளே-அபிராமி அந்தாதி) மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (233)

    செல்வன்

    இந்த வார வல்லமையாளர் – திரு. என். சொக்கன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர், கவிஞர் திரு என்.சொக்கன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    திரு என். சொக்கனை பத்தாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். இவ்வாரம் இவரது “பக்தித்தமிழ்” எனும் நூல் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இதை பற்றி குறிப்பிடும் என்.சொக்கன் அவர்கள்

    “தமிழைப் பொறுத்தவரை பக்தியும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கின்றன. வைணவத்தை ஆழ்வார்களும், ஆசார்யன்களும் தமிழால் வளப்படுத்தி, பாரெங்கும் பரப்பினார்கள் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சைவமும் அடியார்களால், நாயன்மார்களால் தமிழை ஆதாரமாகக்கொண்டு செழித்து வளர்ந்தது. இங்கே தமிழ், ஒட்டுமொத்தமான பக்தி வளர்ச்சிக்குதான் பயன்பட்டதே தவிர பிரிவினை எதற்கும் வித்திடவே இல்லை என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.அதைவிட பக்தியோடு தானும் வளர்ந்தது, பாமரராலும் எளிதாகஉணரப்பட்டது.

    எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என். சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து நூறு அத்தியாயங்கள் எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். சுமார் எண்ணூறு பாடல்களுக்கான எளிய விளக்கங்களோடு பலப்பல கதைகள், சுவையான நிகழ்வுகளோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    இந்நூல் தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. அச்சு நூலின் முதல் பாகம் வெளியாகிவிட்டது, அடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்” என்கிறார்.

    1

    Screen Shot 2017-07-31 at 10.30.19 PM

    குழந்தைகளுக்கு தமிழை அழகான எழுத்துநடை மூலம் கொண்டுசேர்க்கும் தமிழாசிரியர் என்.சொக்கன். குழந்தைகளுக்கான திருக்குறள் எனும் ஆடியோ, விடியோ தொகுப்பையும் வலையேற்றி வருகிறார். இவ்வாரம் அதில் 158வது விடியோ/ஆடியோ பதிப்பு வெளியானது. கம்பராமாயண வகுப்புகள், குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகளை எடுப்பதும் இவரது சாதனைகளில் சேர்ந்தது.

    தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர் ஆவார். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

    அம்பானி, ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி , சல்மான் ரஷ்டி, குஷ்வந் சிங், வால்ட் டிஸ்னி போன்ற பலரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தினமணி போன்ற பல நாளிதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    இவரைப் போல தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கம் கிடைக்கும் வகையில் இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • படக்கவிதைப் போட்டி 121-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

    coinsinhand

    உழைப்பின் கறைபடிந்த மனிதரை அக்கறையோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. ஜேக்ஸன் ஹெர்பி. படக்கவிதைப் போட்டிக்கு இந்தப் படத்தைத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படப்பிடிப்பாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்குரியோர்.

    உழைப்பில் வரும் கறையில் குறையில்லை. எனினும் இவ்வுழைப்பு போதிய வருவாய் திரட்டி குடும்பத்தின் வறுமையை விரட்ட உதவாதது வருந்தத்தக்கதே!

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரின் இன்மை அகலவேண்டும்; துயரம் நீங்கி உயரப்பராய் அவர் ஓங்கும் காலம் கனியவேண்டும்!

    இனி, இவ்வாரக் கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

     ***

    படித்து முன்னேறவேண்டிய பருவத்தில் தோன்றும் தேவையற்ற சிந்தனைச் சிதறல்களால் சிலர்தம் வாழ்வே சில்லறையாய்ச் சிதறிப்போவதை வேதனையோடு  விளம்புகின்றது திருமிகு. அமுலாதாவின் கவிதை.

    அன்று எனது சிந்தனைகளைச்
    சிதற விடாமல்இருந்திருந்தால்
    இன்று சில்லறைகளை எண்ணும்
    நிலை வந்திருக்காது…!

    *** 

    ”கையில் கறையிருந்தால் என்ன? என் காசுக்காக அல்லாமல் காதலுக்காகக் காத்திருக்கும் மனையாள் துணையிருக்க எனக்கென்ன மனக்குறை?” என்று மகிழும் மனிதனை மனக்கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. மங்கை.

    சம்பள நாள்!

    பையில் ரூபாய் கையில் சில்லறை
    இது என் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்
    கிடைக்கும் நல்ல உணவு நாளை மதியம்
    கையில் கறை இருந்தாலும் மனதில் குறை இல்லை
    சட்டைப் பை நிறைந்திருக்கும் மாதம் ஒரு நாள் மட்டும்
    கைக்குள்ளே காசை ஒளித்து வைக்க ஆசைதான்
    கடன்காரன் வந்து கையைப் பிரித்து எடுத்து செல்வானே
    எது எப்படி இருந்தாலும்,
    வாசலில் காத்திருப்பாள் மனைவி காசுக்காக அல்ல இந்தக் காதலனுக்காக!!!!!

    ***

    ”முறையற்ற சில்லறை வேலை செய்தால்தான் கைநிறைய வெள்ளிப்பணம்; அதைவிடுத்து மாடாய் உழைத்தால் வெறும் சில்லறைதான் மிஞ்சும்” என்று இன்றைய சமூகநிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றார் திரு. ஆனந்த். 

    உழைப்பின் கறைபடிந்த
    உன் கரங்களில்
    சில்லறைதான் மிஞ்சும்
    சில்லறை வேலைசெய்யும்
    ஊழல் உத்தமர்க்கே
    ஊதிப்பெருகும் பணம்…!

    ***
    வாழ்வுக்கு அவசியம் ஆனபோதிலும் நல்லவரையும் கெடுமதியாளராய் மாற்றவல்லது பணம். அத்தகு பணத்தைப் பார்த்து, ”உன்னோடு வாழ்தல் அரிது” என்று பொருத்தமாய்ப் பகர்கிறார் திரு. சி. ஜெயபாரதன். இவ்வரிகள், ”என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று வயிற்றின் இயல்பைப் பாடும் அவ்வையின் நல்வழியை நினைவூட்டுகின்றன.

    கைப்பணம் போதாது
    கள் குடிக்க!
    பைப்பணம் போதாது
    பட்டப் படிப்புக்கு!
    வங்கிச் சேமிப்புப் போதாது
    வாஷிங்டன் சுற்றுலா
    போய்வர!
    திருடத் தூண்டும் பணம்!
    தீப்பெட்டி போட்டு
    பசியாற்றும் மனையாள் காசைப்
    பறிக்கச் சொல்லும்!
    தினமும் வீடு வீடாய் நடந்து
    பேப்பர் போடும்
    சிறுவன் கூலிப் பணத்தைப்
    பறிக்கச் சொல்லும்!
    லஞ்சம் வாங்கத் தூண்டும்!
    லட்சாதி பதியாய்
    வாழ்வதற்குப்
    பஞ்சமா பாதகம் செய்ய
    அஞ்சாது!
    உண்ட வீட்டைத் துண்டாக்கி
    உரிமை ஆக்கும்!
    வேலைக்காரி கொலையும்
    செய்வாள்,
    வீட்டுக்காரியை!
    நாட்டில் நடக்கும் அத்தனை
    நயவஞ்சகமும்
    நோட்டுப் பணத்தால்
    நேர்வது!
    அசுரப் பற்களில் கடிக்கும்
    திமிங்கலப் பணமே!
    தேவை நீ ஆயினும்,
    துரோகி !
    உன்னோடு வாழ்தல் அரிது!

    ***

    சலசலக்கும் சில்லறைக்காசுகள் தம் சில்லறைத்தனத்தைப் பறைசாற்ற, மதிப்புமிக்க உரூபாய் நோட்டுக்களோ நிறைகுடமாய்ச் சத்தமின்றி இருக்கும் வாழ்வியல் தத்துவத்தைத் தன் கவிதைவழிச் சத்தாகப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஓசை…

    சட்டைப் பையில்
    ரூபாய் நோட்டு,
    சத்தமில்லாமல் இருக்கிறது..

    கையிலுள்ள
    சில்லறைக் காசுகள்,
    சலசலவெனச்
    சத்தமிடுகின்றன..

    ஓ,
    வாழ்க்கைத் தத்துவம்
    இதுதானோ-
    மதிப்புமிக்க இடத்தில் அமைதி,
    குறைந்த இடத்தில் கூத்தாட்டம்தான்…!

    ***

    கடும் உழைப்பைக் கைக்கொண்டாலும் பாட்டாளியின் கையில் செல்வம் தங்குவதில்லை. இளமையில் நன்றாய்க் கற்று உயர்பதவி பெற்றிருந்தால் ஏழைமையோடு தோழமை கொள்ளவேண்டிய அவலநிலை இல்லையே” என்று இரங்குகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வியே அல்லவா!

    இளமையில் கல்!

    ஏழைக் குடிலையும் ஏழ்மையின் கொடிதையும்..
    ……என்றேனும் பார்த்ததுண்டா அல்லது கேட்டதுண்டா.!
    உழைக்கும் வர்க்கத்துக்கு ஊதியமே சில்லறையில்தான்
    ……உழைப்பாலுயர்ந்து பெரும் பணத்தை ஈட்டியவரரிதே.!
    தாழ்வைப் பெரிதாய் எண்ணாமல் தன்னலமின்றி..
    ……உழைத்து வருமற்பச் சம்பளத்திலுயர வழியில்லை.!
    வாழ்வு வளமாக வளரும்போதே கற்கவேண்டும்..
    ……வளர்ந்த பின்யோசித்து வருந்துவ தாலென்னபயன்.?

    படிக்காமலிள வயதில் பொறுப்பின்றிச் சுற்றியதால்..
    ……பலரைப்போல் நானும் படாதபாடு படுகிறேன்.!
    விடிந்ததுமுதல் மீண்டுமடுத்த நாள் விடியும்வரை..
    ……வியர்வை சிந்தியுழைத்தாலும் சில்லரைதான் மிஞ்சும்.!
    ஓடிஓடி உழைத்தாலும் ஓட்டைவிழுந்த சட்டைதான்..
    ……ஒழுங்காகக் கற்காவிட்டால் ஏழ்மைதான் வாழ்க்கை.!
    இடித்துரைத்தான் வள்ளுவனும் இதையே தான்..
    ……இனியாவதெம் சந்ததியைப் படிக்க வைப்பேன்!

     ***

    உழைக்கத் தெரிந்த மனிதருக்குப் பிழைக்கத் தெரியவில்லை. அதனால் பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்தம் உழைப்பில் சவாரி செய்கிறது எனும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் வரிகள் நம்மைச் சிந்தக்க வைக்கின்றன.

    உங்கள் பார்வையில் தெரிவது அழுக்குக்கறை!
    உண்மையில் இது ஏழைகளின் இன்றைய நிலை!
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
    என்றார் ஓர் அறிஞர்!
    உண்மை முற்றிலும் உண்மை!
    இது வரை எந்த ஏழையும் சிரித்ததுமில்லை!
    இறைவனை எவரும் பார்த்ததுமில்லை!
    சில்லறைகளே ஏழைகளுக்குச் சொத்தாகிப் போனதால்
    கல்லறைகளே இவர்களுக்கு நிச்சயம் ஆனது!
    பணம் இவர்களுக்கு எதிரியாய்ப் போனது!
    உழைக்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும்!
    பிழைக்கத் தெரியாது!
    இவர்களின் உழைப்புப் பல்லக்கில்
    ஊர்வலம் போகும் பணக்காரக் கூட்டம்!
    வாழ்க்கை என்பது என்றும் ஒரு வட்டம்!
    போதும்! போதும் உங்களின் ஆட்டம்!
    பகிர்ந்துண்டு வாழ்தல் நல்ல பழக்கம்!
    இதை உணர்ந்தவர் வாழ்வில் இல்லை குழப்பம்!

     ***

    அயரா உழைப்பால் உடையும் உள்ளங்கையும் கறைபட்டிருக்கும் மனிதனின் அவலநிலையை, பணத்துக்காக அந்த ஏழை படும்பாட்டைத் தம் பாட்டுக்களில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டு!

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து நம் பார்வைக்கு…  

    எத்தனை முறை எண்ணிப்பார்த்து என்ன?
    வயிற்றுப் பசிக்கும் வாங்கிய கூலிக்கும்
    இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்பும்
    கணக்கு இன்னும் கைவரவில்லை.
    உழைத்துக் காய்த்துப்போன
    உள்ளங்கைப் புண்ணில்
    சில்லறை உறுத்துகிறது.
    பிஞ்சுக்குழந்தைக்கு பிஸ்கெட்டுக் காகும்
    நெஞ்சுக்குள் நெகிழ்வு.

    வயிற்றில் எரியும் அங்கியை(தீ) அவிக்க அங்கையில் இருக்கும் சில்லறை போதாதெனினும் பிஞ்சுக்குழந்தையின் பிஸ்கெட் செலவுக்காவது ஆகும் என்று சிறுபிள்ளையாய் மகிழும் ஏழைமனிதனை நம் பார்வையில் நிறுத்தி நம்மை நெகிழ்த்தும் இக்கவிதையின் சொந்தக்காரர் திரு. அ. இராஜகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கின்றேன். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • ’’பாமரன் vs பண்டிதன்”….!

     

    ”பாத்தா பண்டிதன்
    படுத்துவிட்டா நொண்டிதான்
    தோத்தா தெரியும் சேதிடா -ஞானதங்கமே
    தீயிலிட்டா எரியும் ஜோதிடா

    பாமரர்கள் நாலுபேரு சில்லறைக்காக, -இவுரு
    மாமரமாய் சாச்சாங்க கல்லறைக்குள்ளே
    இளமையிலே கல்லென்று எழுதி வச்சாரு-இவரை
    இழுத்துபோட காட்டினிலே கல்லானாரு….

    பாமரனும், பண்டிதனும் பக்கம்பக்கம்தான் -அந்த
    பரமன் அருள்சிக்னலிலே நிக்கவப்பாரு-நடைபாதை
    பாமரனோ முந்தி கொண்டாரு -கடைவிரித்த
    பண்டிதனோ காரில் பிந்திபுட்டாரு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    ”நாரதர் பக்திக்கு, சாரதை கல்விக்கு,
    தேரதில் கீதோப தேசஆயர் -ஊரதன்
    கண்ணனைக் காட்டிய கேசவ் உனக்கென்றும்
    வண்ணமாய்(Colourful) பக்திகல் வி(V for VICTORY)’’….கிரேசி மோகன்….!

    Share
  • Early Spring – வசந்த விடியல்

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : சோ.ஊஞ்சை
    தமிழாக்கம் : பவள சங்கரி

    Icicles on Bee Street in front of the Sequoia. Democrat photo by Shelly Thorene

    பனிபடர் காலையில்
    பொறாமையில் கருகும் பைன்கள்
    மஞ்சள் பச்சை தீப்பிழம்புகள்,
    விழுங்கலைப் போன்று உனது முகத்தைக் கழுவிக்கொண்டாய்
    நீரில் மூழ்கி,
    உன் பின்புற முடி வறண்டுவிடும் முன்பு
    பளபளக்கும் கண்களுடன் என்னிடம் வந்துவிடு நீ.

    Share
  • எதிர்பாராதது

     

    ரா.பார்த்தசாரதி

     

     

    மனித வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்,

    ஏனென்று  தெரியாத வருத்தம்

    மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்

    உள்ளத்தினில் சத்தம் போடாத ஆசைகள்

     

    எதற்குமே வெட்கப்படாத ஏக்கம்

    நெஞ்சினில் வேதனை கலந்த துக்கம்

    படபடப்பில் ஏற்படும் காரணமில்லாத கோபம்

    இழந்ததை கண்டு, கண்ணீர் சிந்தும் தோல்வி!

     

    வாழ்வில் மறக்க விடாத நினைவுகள்

    மனதினில் மறைக்க முடியாத உறவுகள்

    மனதிலே அலைபாயும் காதல்

    மனிதன் அலைந்து தேடும் வேலை!

     

    என்றும் விட முடியாத தொடர்புகள்

    விட்டொழியாத தொல்லைகள்

    கலங்க வைக்கும் அவமானங்கள்

    கலைய மறுக்கும் கனவுகள்!

     

    இத்தனையும் மொத்தமாகி நிற்க

    இவ்வளவு தான் வாழ்க்கை என

    எதையும் தொலைத்து விட வேண்டாம்!

     

    கிடைத்த வாழ்க்கையை

    குறைகள் சொல்லி உடைத்து விடாமல்

    இருப்பதை  கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தாலே!

    மகிழ்ச்சி  என்றும் நம்பக்கம் !

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (122)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20562921_1393331930721002_1911738997_n

    ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -88

    க.பாலசுப்பிரமணியன்

    கற்றலும் சுயகட்டுப்பாடும்

    education-1-1

    ஒரு மனிதனுக்கு எவ்வளக்கெவ்வளவு தன்னம்பிக்கை தேவையோ அதே அளவுக்கு அவனுக்கு சுயகட்டுப்பாடும் தேவை. பல நேரங்களில் மாணவர்கள் வளரும் பருவங்களில் அதிகமான தன்னம்பிக்கையோடு வளர்ந்தாலும் சுயகட்டுப்பாடு இல்லாததால் வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோள்களையும் வெற்றிப்படிகளையும் தவற விட்டுவிடுகின்றார்கள். காலம் தவறியபின் வருந்தும் நிலையில் அவர்கள் தள்ளப்படும் பொழுது தங்களுடைய சுயகட்டுப்பாடின்மையையும். வெளி கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாமல் தவறுகளை தொடர்ந்து செய்ததையும் நினைத்து வேதனைப்படுகின்றனர். ‘சுயகட்டுப்பாடு’ என்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலி. அது நம்மைப் பல துயரங்களிலிருந்து சரியான நேரங்களில் காப்பாற்றும். சுயகட்டுப்பாடு இயலாமையின் அறிகுறி அல்ல. அது ஒரு மனிதனின் பயத்தையோ அல்லது அறியாமையையோ காட்டுவதாக எண்ணுதல் தவறான கருத்தாகும். ஒரு கருத்தையோ அல்லது நிகழ்வையோ நன்றாக ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக நாம் எடுக்கும் ஒரு முடிவே சுயகட்டுப்பாடாகும். கற்கும் காலங்களில் இதை நல்ல அறிவாற்றல் மூலமாகவும் முடிவெடுக்கும் திறன்கள் மூலமாகவும் நாம் வளர்த்துக்கொள்ளலாம். சுயகட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் திக்குத் தெரியாத காட்டில் வழி தேடுவது போல் வாழ்க்கையில் அலைவது பல நேரங்களில் பார்க்க முடிகின்றது.

    வளரும் பருவங்களில் சுயகட்டுப்பாட்டிற்கான நெறிகளை வளர்ப்பதற்கு பள்ளிகளை விட பெற்றோர்களின் பங்கே முதன்மையாகவும் அவசியமானதாகவும் தென்படுகின்றது. வீடுகளில் உள்ள பழக்க வழக்கங்கள் சுய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தால் அதுவே மறைமுகமான கற்றலின் வித்தாக அமைந்து அத்துடன் சார்ந்த திறன்களையும் பழக்கங்களையும் வளர்ப்பதற்கு ஏதுவாக அமையும். பல வீடுகளில் தங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வதாகக் கருதி அல்லது தங்கள் அன்பின் வெளிப்பாட்டாகக் கருதி கட்டுப்பாடற்ற சூழ்நிலைகளுக்கு வழி வகுக்கின்றனர்.  பிற்காலத்தில் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான வளரும் குழந்தைகள் அந்தச் செயல்களுக்கு மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது மட்டுமின்றி அவைகளைத் தங்கள் இயலாமையின் அறிகுறியாக ஏற்றுக்கொள்கின்றனர். சுயகட்டுப்பாட்டிற்கு குழந்தைகளை உருவாக்குவது எந்த வகையிலும் அவர்களிடம் நம்முடைய அன்பின் குறைபாடாகக் நினைக்கக் கூடாது. உண்மையில் அது அவர்களை பிற்காலத்தில் பல எதிர்மறையான விரும்பத்தகாத சூழ்நிலைகளிலும் நிகழ்வுகளிலும் தடுமாற்றமின்றி சந்திப்பதற்குத் தேவையான உள்ளத் திறனை வளர்ப்பதற்கு உதவும்.

    சுய கட்டுப்பாடு என்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரத்திற்கோ தேடலுக்கோ விருப்பு வெறுப்புக்களுக்கோ அல்லது மகிழ்விற்கோ எதிர்மறையான கருத்து அல்ல. மாறுதலாக, அந்தத் தேடல்களையும் அதற்கான முயற்சிகளையும் சுயகட்டுப்பாடு பாதையிட்டு வளப்படுத்தி சிறப்புற உதவி செய்யும்.

    வீடுகளில் பெற்றோர்கள் கற்றலின் ஒரு பகுதியாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கக் கூடிய சில முக்கியமான சுயகட்டுபாட்டுத் திறன்கள்:

    1. தங்கள் இடங்களைத் தாங்களே தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்
    2. தங்கள் துணிமணிகளை தாங்களே சுத்தப்படுத்தி தயாரித்து வைத்துக்கொள்ளுதல்
    3. பள்ளிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் சரியான முறையான இடங்களில் வைத்துப் பாதுகாத்தல்
    4. தாங்கள் உணவுண்ட இடங்களையும் பொருள்களையும் தாங்களே சுத்தப்படுத்துதல்
    5. தங்கள் நேரங்களை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்துதல்
    6. தங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடித்தல்
    7. தங்களுக்குத் தேவையில்லாத உறவுகளையும் பேச்சுக்களையும் தவிர்த்தல்
    8. புறம்பேசுதலைத் தவிர்த்தல்
    9. நேர்மையற்ற செயல்களுக்குத் துணைசெல்லாது இருத்தல்
    10. தங்களுடைய தேவைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்
    11. மற்றவர்களுடைய எண்ணங்களுக்கோ அல்லது பொருள்களுக்கோ விருப்பமுற்று அடிமையாகாமல் இருத்தல்
    12. சரியான நேரங்களில் சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு உடல்நலம் காத்தல்
    13. தினசரி ஒரு முப்பது மணித்துளிகளுக்காவது உடற்பயிற்சி செய்தல்
    14. நித்தம் சிறிது நேரம் மனத்தை அலைபாயாமல் நிறுத்த தியானப் பயிற்சி செய்தல்
    15. தங்கள் உறங்கும் இடங்களையும் நேரத்தையும் சிறப்பாக முறைப்படுத்துதல்

    கற்றல் என்பது வெறும் புத்தகங்களை சார்ந்த அறிவு ஈட்டல் மட்டும் அல்ல. சிறப்பான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதே கற்றலின் அடிப்படை நோக்கமாகும்.

    இந்த சுய கட்டுப்பாட்டுத் திறன்களையும் பழக்கங்களையும் கற்றலின் ஒரு பகுதியாக நாம் ஏற்றுக்கொண்டு மேன்மைப்படுத்திக்கொள்ளும் பொழுது வாழ்வின் பிற்காலத்தில் அது பல நல்ல போற்றலுக்குடைய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

    உதாரணமாக, சுயகட்டுப்பாடுள்ளவர்களின் கீழ்கண்ட திறன்கள் சிறப்படைவதாக மனநல வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    1. இலக்குகளின் தெளிவு
    2. தெளிவான செயல் முறைகள்
    3. ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன்
    4. மன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு
    5. நேரம் பேணுதல்
    6. தோல்விகளில் துவளாமை
    7. தொடர் முயற்சிக்கும் வல்லமை
    8. பொருள்வளங்களைப் பேணும் திறன்
    9. சிந்தனைச் சீரமைப்பு
    10. மன நிறைவு

    சுயகட்டுப்பாட்டின் மூலம் தன்னை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளாத ஒருவனால் எப்படி மற்றவர்களை கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ முடியும்? சப்பானிய சிந்தனையாளர் லா-திசு என்பவர் கூறுகின்றார் : “மற்றவர்களை வெற்றிபெற படை தேவை. தன்னை வெற்றிகொள்ள வலிமை தேவை.” (Conquering others requires Force; Conquering the self requires strength- Lao-Tzu)

    இந்த வல்லமைக்கு வலிமைக்கும் கற்றல், வீட்டிலும் பள்ளியிலும் வழி வகுத்தல் மிக்க அவசியம்.

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (66)

    நிர்மலா ராகவன்

    பயணம் செய்யலாமா?

    நலம்

    ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஆசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்திருந்தனர். நீதிபதிகள் ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவித்திருந்தனர்: அந்த இருபது எழுத்தாளர்களும் ஒரு நாட்டிற்குமேல் வசித்திருப்பவர்கள். (அவைகளில் என்னுடையதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது).

    வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்களைத் தவிர, வெகு சிலருக்குத்தான் பயணம் செய்யப் பிடிக்கிறது. சிலர் உள்நாட்டில்கூடப் பிரயாணம் செய்யத் தயங்குவார்கள்.

    கதை

    “விடுமுறை வரப்போகிறதே! எங்கே போகப்போகிறாய்?” என்று என்னுடன் வேலை பார்த்த மிஸஸ் சின்னைக் கேட்டேன்.

    அந்த இளம் சீனப்பெண், “எனக்கு வெளியூர்களுக்குப் போகவே பிடிக்காது. திரும்பி வந்ததும் குப்பை மாதிரி சாமான்கள் கிடக்கும்! அவைகளை ஒழித்துவைக்க எனக்குப் பொறுமை கிடையாது,” என்று முகத்தைச் சுளித்தாள்.

    அவளுடைய போலிச்சிரிப்பும், நயந்து பேசி, பிறரை உபயோகப்படுத்தும் தன்மையும் அவளைப் பிறருக்குப் பிடிக்காமல் செய்திருந்தது.

    நிறையப் பயணம் செய்பவளாக இருந்திருந்தால், பலதரமான மக்களை அறிந்திருக்க முடியும். பார்ப்பவர்களெல்லாம் தனக்கே உதவ வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை அகன்றிருக்குமோ?

    அனுபவம் புதுமை

    `வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்!’ என்கிறார்கள். நம் வாழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று தெரியாது. அதுதான் சுவாரசியமே.

    வீட்டைவிட்டு வெளியே செல்லும் பயணமும் அப்படித்தான். நல்லதும் நடக்கலாம், நமக்குப் பிடிக்காததும் நடக்கக்கூடும். அனுபவங்கள் என்று எடுத்துக்கொண்டால், நமக்கு வேண்டாதவற்றை மறுமுறை தவிர்க்கலாம்.

    விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே! பிறர் வீட்டில் தங்கினால் நாம் அடுத்தவருக்குச் செலவு வைக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை நம் சௌகரியத்துக்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இடத்தில் வசதி, பிறருடைய பழக்கவழக்கங்களைப் புரிந்து நடப்பது — இதெல்லாம் நமக்கும் கடினம்தான்.

    நாட்டின் அருகாமையிலுள்ள பிற நாடுகளைச் சுற்றிப் பார்க்கவோ சில தினங்களே போதும். வீடு திரும்புகையில், எல்லாமே புதியதாகத் தோற்றமளிக்கும். புத்துணர்ச்சி பெருகுவது இதனால்தான். எவ்வளவுதான் புதிய அனுபவங்களைப் பெற்று வந்தாலும், வெளியில் அலைந்து திரிந்து, ஓய்ந்துபோய் வந்தால், `நம் வீடு, நம் அறை!’ என்று நிம்மதியாக, மிதப்பாக இருக்கும்.

    வியட்நாமில் ஒரு கோயிலில் ஷேக்ஸ்பியரைக் கடவுளாகக் கும்பிடுகிறர்கள்! புதிதாக ஓரிடத்திற்குச் செல்கையில், அங்கு எதை எதிர்பார்க்க முடியும் என்பதை அறியாததே உற்சாகத்தை அளிக்கவல்லது. எதையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடிவதால், அங்கு பெறும் அனுபவங்களே சிறந்த கல்வி.

    வித்தியாசமான பிறரை ஏற்று, விசாலமான மனப்பான்மையை அடைய ஒருவருக்கு தூரப்பயணத்தைப்போன்று வேறில்லை. ஆனால், அவை மட்டமானவை என்ற எண்ணம் கொண்டால் நம் வளர்ச்சியில் ஒரு மாற்றமும் இருக்காது.

    இருபது ஆண்டுகளுக்குமுன், இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்பில் சாரோங் மட்டும் உடுத்துப் போவதைக் கண்டிருக்கிறேன். மார்பு திறந்திருக்கும். அது அவர்கள் கலாசாரம். மலேசியாவிலும், பூர்வ குடியினப் பெண்கள் அப்படித்தான். வெளிநாட்டுக்காரர்கள் இவர்களை புகைப்படம் எடுத்ததைப் பார்த்து எனக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. பெண்மையை மதிக்கத் தெரியாதவர்கள்!

    ஆனால், இப்போது இப்பெண்களெல்லாம் சட்டை அணிகிறார்கள். அவர்களது நாகரீகத்தை மதிக்காது, உல்லாசப்பயணிகள் விரிந்த கண்களுடன் புகைப்படம் எடுத்ததன் விளைவோ?

    புதிய இடங்களில், நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை வேறு கோணத்திலிருந்து பார்க்கவும் கற்கிறோம். அவைகளை மாற்றுவதிலேயே ஒரு மகிழ்ச்சி.

    கதை

    மழை நாட்களில் என் தாய் என்னை பள்ளிக்கூடம் அனுப்பமாட்டாள், `மழையில் நனைந்தால் ஜூரம் வரும்!’ என்று.

    மறுநாள் ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன், `நீ என்ன வெல்லக்கட்டியா? கரைஞ்சு போயிடுவியா?’ என்று.

    சில ஆண்டுகளுக்குமுன், பாலியில் நானும் என் பேத்தியும் ஒரு சாயங்கால வேளையில் உலவச் சென்றோம். எங்களுடன் அருகில் தங்கியிருந்த செல்லம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் வந்திருந்தாள்.

    வழியில் மழை வரும்போல் இருந்தது. அந்த அம்மாள் பயந்து, திரும்பிப் போய்விட்டாள்.

    நாங்கள் தங்குமிடம் பதினைந்து நிமிடத் தொலைவில் இருக்க, “இன்னும் சில நிமிடங்களில் மழை வரப்போகிறது. எப்படியும் நனையப்போகிறோம். எதற்காக ஓடவேண்டும்?” என்றேன். என் பேத்திக்குப் பரம சந்தோஷம். (எந்தச் சிறுமியைத்தான் நனைய விட்டார்கள் பெற்றோர்!)

    மழை கொட்ட, இருவரும் கைகளைக் கோர்த்து, வீசிக்கொண்டு, பாடியபடி மெதுவாக நடந்தோம். பார்ப்பவர்களெல்லாம் சிரித்து, “குடை கொண்டுவரவில்லையா?” என்று (அநாவசியமாக) விசாரித்தார்கள்.

    நாங்களும் சிரித்தபடி கையை ஆட்டினோம்.

    அறைக்குத் திரும்பியதும், குளிர்ந்த நீரில் தலைக்குக் குளித்தோம். அப்போதுதான் மழைநீர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    மறுநாள் காலை. செல்லம்மாள், “நல்ல வேளை, நான் ஓட்டமும் நடையுமா மழைக்குமுந்தி வந்துட்டேன்!” என, நான், “நாங்க ஜாலியா மழையிலே நனைஞ்சுண்டே வந்தோம்!” என்றேன், அந்த நினைவு எழுப்பிய பூரிப்புடன்.

    “ஜாலியா?” என்று விழித்தாள் அம்மாது.

    எங்களுக்குக் காய்ச்சல் வரவில்லை என்பதுடன், சில வருடங்களுக்குப் பின்னரும் அந்த நிகழ்ச்சி பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது என்றால், அது அந்த வித்தியாசமான அனுபவம் அளித்த மகிழ்ச்சியால்.

    எல்லாம் மனதில்தான்

    கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவில் (அது ஆர்க்டிக் பகுதியாம்) நான் சந்தித்த ஒரு ஐரோப்பிய மாது மிக மெல்லிய சட்டை மட்டும் அணிந்திருந்தாள். நானோ, சட்டைக்குமேல் ஸ்வெட்டர், கோட்டு இத்தியாதிகளோடு நடுங்கிக்கொண்டிருந்தேன்.

    “உங்களுக்குக் குளிரவில்லையா?” என்று அதிசயப்பட்டுக் கேட்டேன்.

    “நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது, என் பாட்டி, “குழந்தே! ரொம்பக் குளிர்கிறது. வாசலில் நிற்காதே!’ என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். இப்போது இந்தக் குளிர் என்னை எதுவும் செய்வதில்லை. எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது,” என்று சிரித்தாள்.

    அவள் வீட்டில் பல பூனைகள் இருந்தன. சாய்பாபா பஜன் கேட்கும்போதெல்லாம் அவை ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் என்று கூற ஆச்சரியமாக இருந்தது.

    எந்தப் பயணமும் எளிதாக அமைந்து விடுவதில்லை. காய்ச்சல், தலைவலி, அஜீரணம் (அல்ட்ரா கார்பன்தான் (ULTRA CARBON) மிகச் சிறந்தது என்று விமானதளத்தில் உள்ள கடையில் சிபாரிசு செய்ய, உடனுக்குடன் குணப்படுத்தும் அது இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை), வயிற்றுப்போக்கு என்று பலவித உபாதைகளுக்கும் மருந்துகளை எடுத்துப்போவது நல்லது. புதிய இடத்தில் மருந்துக்கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக நிறைய இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம்.

    எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டாலும், எப்படியோ குளறுபடி ஆகிவிடும். அதற்குப் பயந்து, நமக்குப் பழக்கமான சொகுசான இடத்திலேயே இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்னதான் படித்தாலும், தொலைகாட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா?

    தென்கிழக்கு ஆசியாவிலிருக்கும் அங்கோர் வாட்டைக் கண்டு களிக்க கம்போடியா சென்றிருந்தபோது, போரில் கால்களை இழந்தவர்கள் உட்கார்ந்த நிலையில் பாடிப் பிழைப்பதையும், அங்கிருந்த KILLING FIELDS என்னுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்டையோட்டையும் கண்டு மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று.
    அதேபோன்ற பாதிப்பைத்தான் வியட்நாமிலிருந்த யுத்த கால அருங்காட்சியகமும் உண்டாக்கியது.

    “இனிமேல் இங்கெல்லாம் வரவே கூடாது,” என்றேன், அந்த வேதனை அளித்த அலுப்புடன்.

    என் மகள், “இங்குள்ள மக்களின் பிழைப்புக்கு நம்மைப்போன்ற உல்லாசப் பயணிகள் பெருமளவு உதவுகிறார்கள். யாருமே வராவிட்டால் என்ன ஆகும்?” என்றாள்.

    உண்மைதான். பயணங்கள் மேற்கொள்வதால், நமது அறிவும் விசாலமாகிறது, அந்நியர்களும் பலனடைகிறார்கள்.

    `எப்போதும் மகிழ்ச்சி குன்றாத நிலையில்தான் இருப்பேன்!’ என்றால் நடக்கிற காரியமா? துன்பம் அனுபவித்தால்தானே இன்பத்தின் அருமை புரியும்?

    தொடருவோம்

    Share