படக்கவிதைப் போட்டி 121-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
உழைப்பின் கறைபடிந்த மனிதரை அக்கறையோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. ஜேக்ஸன் ஹெர்பி. படக்கவிதைப் போட்டிக்கு இந்தப் படத்தைத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படப்பிடிப்பாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்குரியோர்.
உழைப்பில் வரும் கறையில் குறையில்லை. எனினும் இவ்வுழைப்பு போதிய வருவாய் திரட்டி குடும்பத்தின் வறுமையை விரட்ட உதவாதது வருந்தத்தக்கதே!
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரின் இன்மை அகலவேண்டும்; துயரம் நீங்கி உயரப்பராய் அவர் ஓங்கும் காலம் கனியவேண்டும்!
இனி, இவ்வாரக் கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!
***
படித்து முன்னேறவேண்டிய பருவத்தில் தோன்றும் தேவையற்ற சிந்தனைச் சிதறல்களால் சிலர்தம் வாழ்வே சில்லறையாய்ச் சிதறிப்போவதை வேதனையோடு விளம்புகின்றது திருமிகு. அமுலாதாவின் கவிதை.
அன்று எனது சிந்தனைகளைச்
சிதற விடாமல்இருந்திருந்தால்
இன்று சில்லறைகளை எண்ணும்
நிலை வந்திருக்காது…!
***
”கையில் கறையிருந்தால் என்ன? என் காசுக்காக அல்லாமல் காதலுக்காகக் காத்திருக்கும் மனையாள் துணையிருக்க எனக்கென்ன மனக்குறை?” என்று மகிழும் மனிதனை மனக்கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. மங்கை.
சம்பள நாள்!
பையில் ரூபாய் கையில் சில்லறை
இது என் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்
கிடைக்கும் நல்ல உணவு நாளை மதியம்
கையில் கறை இருந்தாலும் மனதில் குறை இல்லை
சட்டைப் பை நிறைந்திருக்கும் மாதம் ஒரு நாள் மட்டும்
கைக்குள்ளே காசை ஒளித்து வைக்க ஆசைதான்
கடன்காரன் வந்து கையைப் பிரித்து எடுத்து செல்வானே
எது எப்படி இருந்தாலும்,
வாசலில் காத்திருப்பாள் மனைவி காசுக்காக அல்ல இந்தக் காதலனுக்காக!!!!!
***
”முறையற்ற சில்லறை வேலை செய்தால்தான் கைநிறைய வெள்ளிப்பணம்; அதைவிடுத்து மாடாய் உழைத்தால் வெறும் சில்லறைதான் மிஞ்சும்” என்று இன்றைய சமூகநிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றார் திரு. ஆனந்த்.
உழைப்பின் கறைபடிந்த
உன் கரங்களில்
சில்லறைதான் மிஞ்சும்
சில்லறை வேலைசெய்யும்
ஊழல் உத்தமர்க்கே
ஊதிப்பெருகும் பணம்…!
***
வாழ்வுக்கு அவசியம் ஆனபோதிலும் நல்லவரையும் கெடுமதியாளராய் மாற்றவல்லது பணம். அத்தகு பணத்தைப் பார்த்து, ”உன்னோடு வாழ்தல் அரிது” என்று பொருத்தமாய்ப் பகர்கிறார் திரு. சி. ஜெயபாரதன். இவ்வரிகள், ”என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று வயிற்றின் இயல்பைப் பாடும் அவ்வையின் நல்வழியை நினைவூட்டுகின்றன.
கைப்பணம் போதாது
கள் குடிக்க!
பைப்பணம் போதாது
பட்டப் படிப்புக்கு!
வங்கிச் சேமிப்புப் போதாது
வாஷிங்டன் சுற்றுலா
போய்வர!
திருடத் தூண்டும் பணம்!
தீப்பெட்டி போட்டு
பசியாற்றும் மனையாள் காசைப்
பறிக்கச் சொல்லும்!
தினமும் வீடு வீடாய் நடந்து
பேப்பர் போடும்
சிறுவன் கூலிப் பணத்தைப்
பறிக்கச் சொல்லும்!
லஞ்சம் வாங்கத் தூண்டும்!
லட்சாதி பதியாய்
வாழ்வதற்குப்
பஞ்சமா பாதகம் செய்ய
அஞ்சாது!
உண்ட வீட்டைத் துண்டாக்கி
உரிமை ஆக்கும்!
வேலைக்காரி கொலையும்
செய்வாள்,
வீட்டுக்காரியை!
நாட்டில் நடக்கும் அத்தனை
நயவஞ்சகமும்
நோட்டுப் பணத்தால்
நேர்வது!
அசுரப் பற்களில் கடிக்கும்
திமிங்கலப் பணமே!
தேவை நீ ஆயினும்,
துரோகி !
உன்னோடு வாழ்தல் அரிது!
***
சலசலக்கும் சில்லறைக்காசுகள் தம் சில்லறைத்தனத்தைப் பறைசாற்ற, மதிப்புமிக்க உரூபாய் நோட்டுக்களோ நிறைகுடமாய்ச் சத்தமின்றி இருக்கும் வாழ்வியல் தத்துவத்தைத் தன் கவிதைவழிச் சத்தாகப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
ஓசை…
சட்டைப் பையில்
ரூபாய் நோட்டு,
சத்தமில்லாமல் இருக்கிறது..
கையிலுள்ள
சில்லறைக் காசுகள்,
சலசலவெனச்
சத்தமிடுகின்றன..
ஓ,
வாழ்க்கைத் தத்துவம்
இதுதானோ-
மதிப்புமிக்க இடத்தில் அமைதி,
குறைந்த இடத்தில் கூத்தாட்டம்தான்…!
***
கடும் உழைப்பைக் கைக்கொண்டாலும் பாட்டாளியின் கையில் செல்வம் தங்குவதில்லை. இளமையில் நன்றாய்க் கற்று உயர்பதவி பெற்றிருந்தால் ஏழைமையோடு தோழமை கொள்ளவேண்டிய அவலநிலை இல்லையே” என்று இரங்குகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வியே அல்லவா!
இளமையில் கல்!
ஏழைக் குடிலையும் ஏழ்மையின் கொடிதையும்..
……என்றேனும் பார்த்ததுண்டா அல்லது கேட்டதுண்டா.!
உழைக்கும் வர்க்கத்துக்கு ஊதியமே சில்லறையில்தான்
……உழைப்பாலுயர்ந்து பெரும் பணத்தை ஈட்டியவரரிதே.!
தாழ்வைப் பெரிதாய் எண்ணாமல் தன்னலமின்றி..
……உழைத்து வருமற்பச் சம்பளத்திலுயர வழியில்லை.!
வாழ்வு வளமாக வளரும்போதே கற்கவேண்டும்..
……வளர்ந்த பின்யோசித்து வருந்துவ தாலென்னபயன்.?
படிக்காமலிள வயதில் பொறுப்பின்றிச் சுற்றியதால்..
……பலரைப்போல் நானும் படாதபாடு படுகிறேன்.!
விடிந்ததுமுதல் மீண்டுமடுத்த நாள் விடியும்வரை..
……வியர்வை சிந்தியுழைத்தாலும் சில்லரைதான் மிஞ்சும்.!
ஓடிஓடி உழைத்தாலும் ஓட்டைவிழுந்த சட்டைதான்..
……ஒழுங்காகக் கற்காவிட்டால் ஏழ்மைதான் வாழ்க்கை.!
இடித்துரைத்தான் வள்ளுவனும் இதையே தான்..
……இனியாவதெம் சந்ததியைப் படிக்க வைப்பேன்!
***
உழைக்கத் தெரிந்த மனிதருக்குப் பிழைக்கத் தெரியவில்லை. அதனால் பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்தம் உழைப்பில் சவாரி செய்கிறது எனும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் வரிகள் நம்மைச் சிந்தக்க வைக்கின்றன.
உங்கள் பார்வையில் தெரிவது அழுக்குக்கறை!
உண்மையில் இது ஏழைகளின் இன்றைய நிலை!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்றார் ஓர் அறிஞர்!
உண்மை முற்றிலும் உண்மை!
இது வரை எந்த ஏழையும் சிரித்ததுமில்லை!
இறைவனை எவரும் பார்த்ததுமில்லை!
சில்லறைகளே ஏழைகளுக்குச் சொத்தாகிப் போனதால்
கல்லறைகளே இவர்களுக்கு நிச்சயம் ஆனது!
பணம் இவர்களுக்கு எதிரியாய்ப் போனது!
உழைக்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும்!
பிழைக்கத் தெரியாது!
இவர்களின் உழைப்புப் பல்லக்கில்
ஊர்வலம் போகும் பணக்காரக் கூட்டம்!
வாழ்க்கை என்பது என்றும் ஒரு வட்டம்!
போதும்! போதும் உங்களின் ஆட்டம்!
பகிர்ந்துண்டு வாழ்தல் நல்ல பழக்கம்!
இதை உணர்ந்தவர் வாழ்வில் இல்லை குழப்பம்!
***
அயரா உழைப்பால் உடையும் உள்ளங்கையும் கறைபட்டிருக்கும் மனிதனின் அவலநிலையை, பணத்துக்காக அந்த ஏழை படும்பாட்டைத் தம் பாட்டுக்களில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டு!
***
இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து நம் பார்வைக்கு…
எத்தனை முறை எண்ணிப்பார்த்து என்ன?
வயிற்றுப் பசிக்கும் வாங்கிய கூலிக்கும்
இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்பும்
கணக்கு இன்னும் கைவரவில்லை.
உழைத்துக் காய்த்துப்போன
உள்ளங்கைப் புண்ணில்
சில்லறை உறுத்துகிறது.
பிஞ்சுக்குழந்தைக்கு பிஸ்கெட்டுக் காகும்
நெஞ்சுக்குள் நெகிழ்வு.
வயிற்றில் எரியும் அங்கியை(தீ) அவிக்க அங்கையில் இருக்கும் சில்லறை போதாதெனினும் பிஞ்சுக்குழந்தையின் பிஸ்கெட் செலவுக்காவது ஆகும் என்று சிறுபிள்ளையாய் மகிழும் ஏழைமனிதனை நம் பார்வையில் நிறுத்தி நம்மை நெகிழ்த்தும் இக்கவிதையின் சொந்தக்காரர் திரு. அ. இராஜகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கின்றேன். அவருக்கு என் பாராட்டு!
மிக்க மகிழ்ச்சி. இந்த வாரத்தின் சிறந்த கவிஞராக என்னைத் தேர்வுசெய்த, நடுவர் உள்ளிட்ட வல்லமை குழுவினருக்கு நன்றி.
அ. இராஜகோபாலன்.