மீனாட்சி பாலகணேஷ்

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். இவை புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும். அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் பங்கயத்தில் உறைபவர்கள். பங்கயமெனும் தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

Vishnu- Lakshmi

குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முதல் பாட்டிலேயே அழகுபட ஒரு சுவையான மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். முதல்பருவமான காப்புப்பருவத்தின் முதல்பாடலில் திருமாலின் பெருமையைக் கூறும்போது அவன் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார்.1

காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

கலுழிபாய்ந் தளறுசெய்யக்

கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

கையணை முகந்துசெல்லப்

பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

பணைத்தோள் எருத்தலைப்பப்

பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

பச்சைப் பசுங்கொண்டலே.

(மீனாட்சியம்மை பி. த.- காப்புப்பருவம்- குமரகுருபரர்)

‘கையணை முகந்துசெல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல’ எனும் பொருள்படும்.

***

அடுத்து, தாலப்பருவத்தினின்று ஒரு அழகான கற்பனைக்குவியல்!

கயல்மீன்கள் துள்ளிக் குதித்து மகிழ்கின்றன. மேகங்கள் பொழிகின்ற மழைநீரிலும், சுழியை வீசியெறியும் கழிமுகத்திலும், சிறிய குழிகளிலும், கரையிலும், கரையை மோதுகின்ற அலையிலும், தலையை விரித்துக் கொண்டிருக்கும் தாழம்புதர்களிலும், இளம்பெண்கள் விளையாடுமிடங்களிலும், நெற்போர்களிலும், அதன் பக்கமாக அமைந்துள்ள உழவர்களின் வீடுகளில் உள்ள நெற்கூடுகளிலும் குளத்தில் நிறைந்த நீரிலும் இந்தக் கயல்மீன்கள் குதித்துக் கூத்தாடிப் போர்புரிந்து மகிழ்கின்றன. இவை மருதநிலத்துச் செழிப்பினைப் புலப்படுத்துகின்றன.

இவற்றை, இக்கயல்மீன்களை மதுரைநகர்வாழ் கணிகையரின் கண்களுக்கு உவமையாக்கி அவை புரியும் போரினை நயம்பட விளக்குகிறார் புலவர்.

அப்பெண்டிர்தம் கண்களாகிய கெண்டைமீன்கள், தேரில் செல்லும் இளைஞர்களுடைய மார்பிலும், அவர்களுடைய செல்வச் செழிப்பிலும், போர்புரியும் ஒப்பில்லாத கட்டமைந்த வில்லிலும், திரண்ட மலைபோன்ற தோள்களிலும், ஊடலை நீக்கிட அவர்கள் பெண்டிர் கால்களில் பணியும்போது உதிர்ந்த மாலையிலும், சென்று போர் செய்கின்றன; அத்தகைய மதுரைக்கு அரசியே! தாலோ! தாலேலோ! சங்கம் வளர்ந்திட நின்று அருள்செய்த பொற்கொடியே! தாலோ! தாலேலோ!

நீரிலுள்ள கயல்மீன்கள் பெண்களின் கண்களாகிய கெண்டைமீன்களுக்கு உவமையாகின்றன.

உவமைநயம் மட்டுமின்றி, சந்தநயமும் பொருந்தியதொரு சிறப்பான பாடல் இதுவாகும். பாடியோ பொருள்கூட்டிப் படித்தோ பார்த்தாலே இதனழகு கண்முன் விரியும்!

காரிற் பொழிமழை நீரிற்சுழியெறி

கழியிற் சிறுகுழியிற்

கரையிற் கரைபொரு திரையிற்றலைவிரி

கண்டலில் வண்டலினெற்

போரிற் களநிறை சேரிற்குளநிறை

புனலிற் பொருகயலிற்

பொழிலிற் சுருள்புரி குழலிற்கணிகையர்

குழையிற் பொருகயல்போய்த்

தேரிற் குமரர்கள் மார்பிற்பொலிதரு

திருவிற் பொருவில்வரிச்

சிலையிற் றிரள்புய மலையிற்புலவி

திருத்திட ஊழ்த்தமுடித்

தாரிற் பொருதிடு மதுரைத்துரைமகள்

தாலோ தாலேலோ

சங்கம் வளர்ந்திட நின்றபொலன்கொடி

தாலோதாலேலோ

(மீனாட்சியம்மை பி. த.- தாலப்பருவம்- குமரகுருபரர்)

இன்னும் பிறிதோரிடத்திலும் மருதநிலத்துச் சிறப்பை நயம்பட உரைக்கிறார் குமரகுருபரனார்.

Paddy-field (1)

அழகான மருதநிலத்து வயல். அந்தப் பசிய மருதநிலத்தில் திருமகள் குடியிருக்க விருப்பம் கொண்டுள்ளாள். அவள் ‘மருதம்’ எனும் பெயர்கொண்ட தச்சனிடம் தனக்காக அழகான ஒரு வீட்டினை அமைக்க வேண்டுகிறாள். அவள் விருப்பம் என்னவென்று தெரிந்த தச்சன் அவன். அவன் அழகான பல தாமரைப்பூக்களாகிய கோவில்கள் பலவற்றை அவளுக்காகச் சமைத்தருளுகிறான். இனி அவள் குடிபுக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமே! அவள் உள்ளே புகுவதற்காக அவ்வீடுகளின் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாமா?

இதற்காக வண்டுகள் துணை செய்கின்றனவாம்! மகரந்தப்பொடியை அளைந்து தேனருவிப் பெருக்கில் துளைந்து மூழ்கி விளையாடும் அறுகால் தும்பிகளாகிய அவ்வண்டுகள் விடியற்காலையில் அத்தாமரைமலர் வீடுகளின் பசிய இதழ்களெனும் கதவுகளைத் திறக்கின்றனவாம்! பின் இலக்குமி குடியேற ஏது தடை? இவ்வாறு குமரகுருபரர் மதுரையின் மருதநில அழகினைச் சொல்லோவியமாக நம் கண்முன்பு வரைகின்றார்.

‘சுண்ணந் திமிர்ந்து தேனருவி

துளைந்தா டறுகால் தும்பிபசுந்

தோட்டுக் கதவம் திறப்பமலர்த்

தோகை குடிபுக் கோகைசெயும்

தண்ணங் கமலக் கோயில்பல

சமைத்த மருதத் தச்சன்………. ‘

(மீனாட்சியம்மை பி. த.- வருகைப்பருவம்- குமரகுருபரர்)

இவ்வாறு எண்ணற்ற இலக்கிய நயங்களைக் கொண்டு பிள்ளைத்தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. இன்னும் கண்டு களிப்போம்.

*****

மீனாட்சி பாலகணேஷ் . இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-1- வல்லமை – செப்.9, 2015. )

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *