Blog

  • நலம் .. நலமறிய ஆவல் (68)

    நிர்மலா ராகவன்

    இருவரும் வெற்றி காண..

    நலம்-4

    ஆணோ, பெண்ணோ, எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், அவர்கள் படும் அவதிகள் பொதுவானவைதாம். இருபாலருக்குமே சரியான முறையில் ஒருவரையொருவர் நடத்துவது எப்படி என்று தெரிவதில்லை. ஒருவருடைய சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, இன்னொருவர் பறிக்காமல் இருந்தால்தான் உறவு நீடிக்கும்.

    கதை

    டாங் (TONG) கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரி மாணவன். பணக்காரப் பெற்றோருக்கு ஒரே மகன். பெண்களுடன் நெருங்கிப் பழகியது கிடையாது. அவன் அறிந்ததெல்லாம் படிப்பும், பாட்டும்தான்.

    இவனிடம் வலுவில் வந்து உறவாடி, பலவாறாக அவன் திறமைகளைப் பாராட்டி, நெருங்கிப் பழகலானாள் ரோஸ். இவனுடைய மென்மையான குணம் அவளுடையதைவிட நேர்மாறாக இருந்ததே முதலில் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது.

    ஈராண்டுகள் இன்பமாகக் கழிந்தன. பல இடங்களிலும் ஒன்றாகச் சுற்றினார்கள். அதன்பின், காதலன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும், தனக்காகவே செலவு செய்யவேண்டும் என்பதுபோல் ரோஸ் எந்நேரமும் உரிமை கொண்டாட ஆரம்பிக்க, ஏதோ தன்னை நெருக்குவதுபோல் உணர்ந்தான் டாங். `நம்மிருவருக்கும் ஒத்துவராது,’ என்று கழன்றுகொண்டான்.

    அவளுக்கு ஒரே ஆத்திரம், நல்ல பொருள் கைவிட்டுப்போகிறதே என்று. அவனைப்பற்றித் தாறுமாறாக அவனுடைய நண்பர்களிடம் சொல்லிப் பொருமினாள்.

    “ஆனால் எங்களுக்கு அவன் குணம் நன்றாகத் தெரியும். அவள் சொல்லியதை யாரும் நம்பவில்லை,” என்று என்னிடம் கூறினான் இக்கதையை என்னுடன் பகிர்ந்துகொண்ட டாங்கின் நண்பன்.

    பெண்களுக்கு மரியாதையா!

    பெண்களுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று ஆண்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இளம் வயதிலேயே பெற்றோரும், ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கடமை அது.

    சில ஆசிரியர்களுக்கே அந்த அறிவு இருப்பதில்லையே, என்ன செய்வது?

    கதை

    என் பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் வேறு ஏதோ வேலையாக சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்தேன்.

    பந்து என்னருகே விழ, அவர்களுடைய ஆசிரியர் ஃபாதில் (FADHIL) “ஏய்! பந்தை எடுத்துப்போடு!” என்று என்னை விரட்டினார். அவர் கட்டொழுங்கு ஆசிரியர் ஆனதால், `நான் மிகப் பெரியவன்!’ என்ற எண்ணம். மாணவர்கள் மட்டுமின்றி, எல்லாரையும் விரட்டலாம் என்ற மமதை.

    அவரது கூப்பாடு காதில் விழாதமாதிரி நின்றேன்.`தான் சொல்ல, மாணவர்களுக்கு எதிரே இவள் – ஒரு பெண் — தன்னை மதிக்காமல் நடந்துகொள்வதா!’ என்ற ஆத்திரத்துடன் “உன்னைத்தான்! பந்தை எடுத்துப்போடச் சொன்னேனே!” என்று அவர் மீண்டும் மலாய் மொழியில் கத்த, நான் நிதானமாக அவர் பக்கம் திரும்பினேன்.

    “Who do you think you are? No one talks to Mrs. Raghavan like that, Mister. Speak with respect,” (உங்களை நீங்கள் யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னிடம் யாரும் அப்படிப் பேசிவிட முடியாது. மரியாதையாகப் பேசுங்கள்!” கண்களைச் சுருக்கிக்கொண்டு, ஆள்காட்டி விரலை நீட்டியபடி மிரட்டினேன்.

    மெதுவாக ஆரம்பித்து, ஒவ்வொரு வாக்கியத்திலும் சூடு ஏறிக்கொண்டே போக, மாணவர்களுடன் சேர்ந்து அவரும் அரண்டு போய்விட்டார். புரியாதவர்போல நடித்து, “ஓ, அப்படியா?” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    நான் பந்தை எடுக்கவில்லை.

    இம்மாதிரியான ஆசிரியரை முன்னோடியாகக் கொண்ட மாணவர்களும், அவருடைய மகன்களும் அவரைப்போலத்தானே ஆவார்கள்?

    இன்னொரு முறை, வேறு பள்ளிக்கூடத்தில் கால்பந்து என்னருகே விழ, `”டீச்சர், டீச்சர்! பந்து!” என்று மாணவர்கள் கெஞ்சலாகக் கூவினார்கள்.

    `இருங்கள்!’ என்று நான் சைகை காட்டிவிட்டு, சில அடிகள் பின்னோக்கி நடந்து, பந்தை உதைத்தேன். அது வெகு தூரம் பறக்க, மாணவர்களுக்கு ஒரே அதிர்ச்சியும், ஆச்சரியமும். பிறகு, ஒரே குரலில் சிரித்தார்கள்.

    மரியாதை கொடுத்தால்தான் மரியாதையை எதிர்பார்க்க முடியும்.

    அன்று பிற வகுப்புகளைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னிடம் வந்து, “டீச்சர் கால்பந்து விளையாடி இருக்கிறீர்களா?” என்று மிக மரியாதையாக விசாரித்தார்கள்!

    பள்ளிக்கூடத்தில் எல்லாவித விளையாட்டுகளையும் தினமும் முக்கால் மணி கற்றிருக்கிறேன். குறிப்பிடும்படியாக எதிலும் சிறக்காவிட்டாலும், இளமையில் முடிந்தவரை எல்லாவற்றையும் கற்பது எக்காலத்திலாவது உதவுகிறது.

    அச்சுறுத்திப் பெறுவது மரியாதை இல்லை. அது வெறும் கட்டுப்பாடுதான். நாளடைவில் இரு தரப்பினருக்குமே வெறுமை ஏற்பட்டுவிடும்.

    யாரையெல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள்?

    1. பதின்ம வயதுப்பெண்கள்தாம் பலவிதமாகப் பழிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த வயதில், தம்மைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ, அழகாக இருக்கிறோமா, எல்லாருக்கும் நம்மைப் பிடிக்குமா என்று ஏதேதோ குழப்பங்கள் எழும். `நீ குண்டு!’ `முட்டாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, மனமுடைந்து போய்விடுவார்கள்.

    2. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, பணத்தை நிர்வகிக்கத் தெரியாது வளர்ந்திருக்கும் பெண்ணைக் கட்டுப்படுத்துவது எளிது. இவளைப் போன்றவர்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது. சம்பாதிப்பது எல்லாவற்றையும் கணவனிடம் கொடுத்துவிட்டு, அத்துடன் தன் சுதந்திரத்தையும் இழந்து, தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமையை அவனுக்கு அளித்துவிடுபவள்.

    3. ஆண்களுடனும் அதிகம் பழகியிராது, மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்திருக்கும் பெண். `கணவன் சொற்படி நடந்தால்தான் பிறந்த வீட்டுக்கு மரியாதை!’ என்பதுபோல் வளர்க்கப்பட்டிருப்பாள். இவள் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ வதைக்கு ஆளாகிறாள். அவளுடைய திறமைகள் ஒடுக்கப்படுகின்றன. `ஏன் முன்போல் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பத்திற்கு அவளால் விடை காண முடிவதில்லை.

    உடல் ரீதியிலோ, உணர்ச்சிபூர்வமாகவோ வதைக்கு உள்ளாகுபவர்கள் தன்னம்பிக்கை குன்றிப், மன இறுக்கத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு.

    அடுத்த தலைமுறையினரும் இப்படி ஆகாமலிருக்க என்ன வழி?

    பெற்றோர் சொல்வதையெல்லாம் மறுபேச்சு பேசாது ஏற்று நடப்பவர்கள்தாம் நல்ல பிள்ளைகள் என்பதில்லை. ஆணோ, பெண்ணோ, சுயமாகச் சிந்தித்து நடக்கும் உரிமையை, திறமையை, பெற்றோர் அவர்களிடம் வளர்க்க வேண்டும். ஆனால், தமது கருத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், அது நன்மைதானா என்று அறியும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லையே!

    மகனுக்கு வழிகாட்ட, `உன் மனைவியை மதித்து நட. உன் தந்தையைப்போல் மனைவியைத் தூக்கி எறிந்து நடத்தினால், இந்தக் காலத்துப் பெண் ஒரே மாதத்தில் உன்னை விவாகரத்து செய்துவிடுவாள்!’ என்று பேச்சுவாக்கில் கூற, பெண்களை எப்படி நடத்துவது என்று புரிந்துகொள்வான்.

    கதை

    அன்று காலைதான் அவனுக்குக் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. ஆனால் மணமகனின் முகத்தில் கலக்கம்.

    “எல்லாரும் Happy married life! என்று வாழ்த்துகிறார்கள். அது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை!’ என்று அயர்ந்தான்.

    “பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதைப் புரிந்து, மதித்து நட. அவளுடைய பொழுதுபோக்குகளில் ஊக்கமளிப்பதுடன், முடிந்தால், நீயும் உதவி செய். ஆனால், ரொம்பத் தழைந்துபோய், மனைவி உன்னை மட்டமாக நினைத்து நடத்த இடம் கொடுக்காதே!” என்று அறிவுரை கூறினேன்.

    (பணியில் சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், சிரித்த முகத்துடன் பழகும் ஆசிரியர்களுக்கு பிறகு எப்போதுமே அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். இது என் அனுபவம். ஆரம்பத்தில் கெடுபிடியாக இருந்தால், பிறகு அதிகாரத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளலாம். இதைத்தான் மணமகனுக்கு மாற்றிச் சொன்னேன்).

    அவன் மணந்த பெண் பணக்காரி, கர்வி. கல்யாணம் முடிந்து, ஒரு வாரத்திலேயே அவளுடைய சுபாவம் புரிந்தது. பெற்றோர்களிடமே மரியாதைக்குறைவாகத்தான் நடந்துகொண்டாள். ஆனால் அவளுடைய அதிகாரம் அவனிடம் செல்லவில்லை. தான் மிரண்டால் கணவருடைய அதிகாரம் இன்னும் அதிகரித்துவிடும் என்று பயந்தோ, என்னவோ, மரியாதையாக இருக்கிறாள். இல்லறம் நல்லபடியாக நடக்கிறது.

    சில பெண்கள், `நாங்கள் நீண்ட காலம் ஆண்களைவிடக் கீழான நிலையிலே இருந்துவிட்டோம். இப்போது, ஒரு மாறுதலுக்காக, நீங்கள்தாம் எங்களைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்து பாருங்களேன்!’ என்பதுபோல் மிரட்டலாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது பிரச்னைகளைப் பெரிதாக்கும் வீண்முயற்சிதான்.

    தாழ்ந்தே இருக்க நேரிட்டால், எவருக்குமே ஆத்திரம்தான் வரும். ஒருவர்க்கொருவர் ஊக்கமளித்து உதவினால், இருவருமே முன்னேறலாமே!

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -90

    க. பாலசுப்பிரமணியன்

    நுண்ணறிவின் பல பரிமாணங்கள் (Multiple Intelligence)

    education-1-1-1

    நுண்ணறிவைப் பற்றிய ஆராய்ச்சி உலகளாவிய பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது கற்றலைப் பற்றிய ஆராய்ச்சி மையங்கள் (Centers of Educational Research) மூளை – நரம்பியல் பற்றிய ஆராய்ச்சி நிலையங்கள்,(cognitive Research centers) மனநலம் பற்றிய ஆராய்ச்சி மையங்கள்(Mental Health and psychometric research centers) போன்ற பல இடங்களில் நுண்ணறிவு மூளையின் இயற்பியலைச் சார்ந்ததா அல்லது வேறு காரணங்களின் தாக்கத்தால் நுண்ணறிவின் தன்மையும் திறமையும் மாறுபடுகின்றதா என்ற பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நுண்ணறிவைப் பொதுவாக ஒரு அறிவுசால் திறனாக (cognitive intelligence) மட்டும் கருதப்பட்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மூலமாக ஒருவருக்கு அறிவுசால் நுண்ணறிவு இருக்கும் பட்சத்தில் அதன் தாக்கம் பல மூளைத் திறன்களில் வெளிப்படுகிறது என்றும், இதன் காரணமாக ஒருவருக்கு ஏதாவது ஒரு அறிவு நுட்பத்தில் நுண்ணறிவின் அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் அது மற்ற கற்றல் திறன்களிலும் வேறுபட்ட பரிமாணங்களில் வெளிப்படும் என்றும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறிவுசால் நுண்ணறிவை மதிப்பீடு (Assessment of Intelligence Quotient) செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீட்டுக்கு குறியீடுகள் தயாரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை இந்தக் குறியீடுகள் ஒரு தனி மனிதனின், ஒரு மாணவனின், ஒரு படைப்பாளியின் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் அடையாளங்களாகக் காட்டப்பட்டன

    ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner) என்ற ஒரு அமெரிக்க மூளை மற்றும் உளநல மேதை தன்னுடைய பல ஆராய்ச்சிகள் மூலமாக “அறிவுசால் நுண்ணறிவு” என்பது எவ்வளவு சிறப்பாக அமைந்தாலும் ஒரு மாணவனுடைய பன்முக அறிவித் திறன்களை (Multiple achievements) வெளிப்படுத்த அது போதுமானதாக இல்லை என்ற ஒரு கருத்தைத் தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனையாளர்களின் மற்றும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசி ஆராய்ந்து இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நுண்ணறிவு இருந்தது என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். ஆகவே நுண்ணறிவுக்குப் பல பரிமாணங்கள் உண்டென்றும் அவைகளை பொதுவாக ஏழு வகைகளாகப் பிரிக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை வெளியிட்டார்.

    அது மட்டுமல்ல. கால நேரங்களுக்குத் தகுந்தவரும், சமுதாய விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கேற்றவாறும் கற்றலிலும் மூளை வளர்ச்சி மற்றும் செயல்களிலும் நுண்ணறிவின் செயல்பாடுகளிலும் அதன் அமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்றும், இப்போது சொல்லப்பட்ட ஏழு நுண்ணறிவுகளைத் தவிர மேலும் பல நுண்ணறிவுகள் காலப்போக்கில் வளர செயல்பட வாய்ப்புக்கள் உண்டு என்ற ஒரு கருத்தையும் முன் வைத்தார்

    அவர் அறிவித்த ஏழு நுண்ணறிவுகள் கீழ்க்கண்டவை :

    1. இசைசார்ந்த நுண்ணறிவு (Musical Intelligence)
    2. மொழிசார்ந்த நுண்ணறிவு (Linguistic Intelligence)
    3. தர்க்கரீதியான நுண்ணறிவு (Logical Intelligence)
    4. இயக்க (தசை) சார்ந்த நுண்ணறிவு (Kinesthetic Intelligence)
    5. தனிப்பட்ட உறவுசார்ந்த நுண்ணறிவு (inter-personal intelligence)
    6. தனிப்பட்டவரின் உள்ளுணர்வுசார்ந்த நுண்ணறிவு (Intra-personal intelligence)
    7. காட்சி-வெளி சார்ந்த நுண்ணறிவு (visual-spatial intelligence)

    இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு நுண்ணறிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டன.

    அவையாவன:

    8.. இயற்கைசார்ந்த நுண்ணறிவு (Naturalistic Intelligence)
    9. இருத்தலியல் சார்ந்த நுண்ணறிவு (Existential Intelligence)

    இதன் தொடர்ச்சியாக டேனியல் கோல்மான் என்ற ஒரு உணர்வியல் மற்றும் மனநல ஆராய்ச்சியாளர் பத்தாவது நுண்ணறிவினைப் பற்றிய விளக்கம் தந்தார்.

    அது

    10. சமூகம் சார்ந்த நுண்ணறிவு (Social Intelligence)

    மேற்கூறப்பட்ட பத்து வகையான நுண்ணறிவுகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளும் அதற்கான வறைபாடுகளும் கற்றல் முறைபாடுகளும் விளக்கமாக அளிக்கப்பட்டு; கற்றல் முறைகளிலும் அறிதல் -புரிதல் செயல்களை வேகப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

    காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிறுத்தி மேலும் சில நுண்ணறிவுத் திறன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அவற்றில் சில :

    1. கணினிசார் நுண்ணறிவு (Digital Intelligence)
    2. பாலியல்சார் நுண்ணறிவு (Sexual Intelligence)

    ஆயினும், இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாத சில மனநல மூளையியல் வல்லுனர்கள் நுண்ணறிவு கருத்தினை வலியுறுத்தி இந்தக் கோட்பாடுகளை புறக்கணித்தும் வருகின்றனர். இருப்பினும் உலகத்தின் நாடுகளில் இந்தக் கோட்பாடுகளைத் தழுவிய கல்வித் திட்டங்களும் பரிந்துரைகளும் (curricular framework) பரிசீலிக்கப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வெவ்வேறு விதமான நுண்ணறிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, பள்ளிகளிலும் வீடுகளிலும் இந்தக் கருத்தை அறிந்து எவ்வாறு நம் குழந்தைச் செல்வங்களின் வாழ்க்கையையும் கற்றலையும் மேம்படுத்தலாம் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

    (தொடரும் )

    Share
  • உங்களில் ஒருவன்

    முல்லைஅமுதன்

     

    ஊர்வலத்தில் கோசமிட்டபடி

    போனவன்

    கையில்

    திணித்துச் சென்ற

    தேசியக்கொடியை

    உயரே பிடித்தபடி

    உங்களுடன்

    கலந்து கொள்ளவேண்டும்தான்..

    முன்னால் போகும்

    உங்களில் ஒருவன்

    உருவிச் சென்ற

    கோவணம்..?

    மறைவிடத்திலிருந்து

    வெளிவரமுடியவில்லை.

    நீ தந்த தேசியக் கொடியை

    என்ன செய்ய?

    இனி இருட்டில் தான்

    வெளியேற வேண்டும்..

     

     

     

    Share
  • போற்றுவோரைக் காத்துவிடு!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    அகிலத்தைக் காப்பவனே
    ஆதிரை மேய்த்தவனே
    யசோதை மைந்தனே                          Cute Lord Krishna
    யமுனை நீராடிய மாதவனே
    எழில்முகம் கொண்டவனே
    ஏழுமலை வாசனே
    மண்ணைத் தின்றவனே இம்
    மண்ணுலகம் ஆள்பவனே
    கோபியர் கொஞ்சும் கண்ணனே
    கோவர்த்தன மலை எடுத்தவனே
    பால்வடியும் வதனம் கொண்டவனே
    பிரபஞ்சத்தை வாயில் காட்டியவனே
    குறும்புத்தனம் காட்டியவனே
    குழலூதும் கண்ணனே
    ஏற்றித் தொழுகிறோம்
    எளியவரைக் காத்துவிடு உன்
    பிறந்த நாளில் உன் பொன்னடி
    போற்றுவோரைக் காத்துவிடு!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(179)

    -செண்பக ஜெகதீசன்

    மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள். (திருக்குறள் -617:  ஆள்வினையுடைமை) 

    புதுக் கவிதையில்…

    முயற்சியற்ற சோம்பேறியிடம்
    வறுமைதான் வந்துசேரும்,
    வடிவிலே மூதேவியாய்…
    முயற்சியுடையவனிடம்
    திருமகள்
    வந்து குடியேறுவாள்
    சேரும் செல்வமாய்…! 

    குறும்பாவில்…

    முயற்சியின்மை கொண்டுவரும்
    மூதேவியாம் வறுமையை, முயற்சி
    சேர்க்கும் செல்வத்தை, திருமகளாய்…! 

    மரபுக் கவிதையில்…

    செயலில் முயற்சி யில்லாமல்
         -சோம்பி யிருப்பார் இல்லமதில்
    பயமது தந்திடும் மூதேவி
         -பற்றி உறைவாள் வறுமையதாய்,
    சுயமாய் முயன்றே செயல்புரிந்தால்
         -சேரும் செல்வம் அவ்விடமே,
    தயவாய்த் தனந்தரும் திருமகளும்
         -தானே உறைவாள் அவனுடனே…!

     லிமரைக்கூ…

    வறுமையாய் வந்திடுவாள் மூதேவி
    முயற்சியிலாரிடமே, செல்வமாய்ச் சேர்ந்தே
    முயற்சியுடையோருடன் உறைவாள் சீதேவி…!

    கிராமிய பாணியில்…

    முயற்சிவேணும் முயற்சிவேணும்
    செய்யும் செயலுல முயற்சிவேணும்…
    செய்யும் செயலுல முயற்சியில்லாம
    சோம்பியிருந்தா பயனில்ல,
    வாட்டும் வறுமயா மூதேவி
    வந்து தங்கிருவா வூட்டுக்குள்ள… 

    முயற்சியோட செயலச்செஞ்சா
    செல்வமெல்லாம் வந்துசேரும்,
    சேந்து குடிவருவா
    செல்வந்தரும் லெச்சுமியே…
    அதால,
    முயற்சிவேணும் முயற்சிவேணும்
    செய்யும் செயலுல முயற்சிவேணும்…!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    ”கண்ணிலே ஏரார்ந்த கண்ணி இடுகின்றாள்,
    மண்ணுண்ணப் போவார் மடியிறங்கி’’ -எண்ணத்தில்:
    நோக்கம் அவளுக்கு நெற்றித் திலகமல்ல,
    காக்கைக்கு குஞ்சுபொன் குஞ்சு’’….!
    ’’அன்னை புரியும் அலங்காரம் பாராது
    என்னதான் அப்படி யோசனை -கண்ணனே
    ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா?
    ஆதலினால் தானே அலுப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது


    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறுவனுக்குத் தெரிகிறது.  ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    +++++++++++++++++++++

    கதிரவனின் சினம் எல்லை மீறிக்
    கனல் நாக்குகள் நீளும் !
    கூர்ந்து நோக்கினால் பரிதி ஓர்
    போர்க்களம் !
    நெற்றிக் கண் திறந்து
    வெள்ளிச் சுடரொளி இரட்டிக்கும் !
    துள்ளிக் கதிரலை பாயும் !
    பொல்லாச் சிறகுகள் விரிந்து
    பல்கோடி மைல் பயணம் செய்யும் !
    வெப்ப அணுக்கரு உலையாம்
    சூரியன் !
    வீரியம் மிக்க தீக்கதிர்கள் !
    பீறிட்டெழும் ஒளிப்பிழம்பு வீச்சுகள் !
    மீறி வெளிப்படும் காந்த அலைச்
    சூறாவளி !
    குதித் தெழும்பும்
    கோரத் தீப்பொறிகள் !
    வட துருவத்தில்
    வண்ணக் கோலங்கள் விளையாடும் !
    வடுக்கள் முகத்தில் களையாகும் !
    துணைக்கோள்கள்
    முடமாகும் !
    புவிக்கோள் தகவல் அமைப்புகள்
    தவிக்கும் !
    கோடான கோடி ஆண்டுக்கு முன்
    செவ்வாய்க் கோள்
    நீரை ஆவியாக்கியது
    சூரியப் புயலே !

    ++++++++++++++++

    சூரிய உட்கரு வேகச் சுழற்சி கண்டுபிடிப்பு, கடந்த பத்தாண்டு களில்  நாசா ஸோஹோ விண்ணுளவியின் ஒரு பெரும் சாதிப் பாகக் கருதப்படுகிறது.  40 ஆண்டுகளில் ஆழ்ந்து தேடி சூரிய விஞ்ஞானிகள், அதன் உட்கருவில் ஒருவித நடுக்க அதிர்ச்சி அலை [Seismic Wave] இருக்கும் நீடித்த சான்றை அறிந்துள்ளார்.

    பெர்ன்ஹார்டு ஃபிலேக் [ ESA’s SOHO Solar Project Scientist ]

    இதுவரைச் சூரிய அலை அதிர்வுகள் [Solar Oscillations] பற்றி அறிந்தவை எல்லாம் ஒலி அலைகள் [Sound Waves] மட்டுமே. ஆனால் மேலும் கீழும், மற்றும் மட்டத்தில் கடலலைகள் போல் இயங்கும் சூரிய ஈர்ப்பலைகளும் [Gravity Waves, (G-Waves) ] உள்ளன.  40 ஆண்டு களாய்ச் சூரியனில் நாங்கள் இந்த ஈர்ப்பலைகளைத் தேடி வருகிறோம்.  முடிவாக அந்த ஈர்ப்பலைகளின் தட முத்திரையை முதன்முறை அளந்து உறுதியாகக் கண்டுபிடித் துள்ளோம்.

    எரிக் ஃபாஸ்ஸட் [ Astronomer Cote d’ Azur Observatory ]

    நாற்பது ஆண்டுத் தேடலில் கண்டுபிடித்த அற்புத சுழற்சி

    சூரிய விஞ்ஞானிகள் நாற்பது ஆண்டுகள் ஆய்வு செய்து சூரியனில் ஒருவித நடுக்க அலைகள் [Solar Seismic Waves] இருப்பதை நாசாவின் ஸோஹோ விண்ணுளவி [SOHO Solar Probe] மூலம் உறுதியாக அறிந்துள்ளார்கள்.  இதை 2017 ஆகஸ்டு முதல் தேதி நாசாவின் ஸொஹோ மூலம் ஆய்வுகள் செய்து, வானியல் இதழில் அறிவிப்பது ஈசா விஞ்ஞானிகள்.  இந்த தணிவு அதிர்வு அலைகள் [Low Frequency Waves ] ஜி முனைப்பாடு [G – Modes]  என்று அறிவிக்கப் பட்டுள்ளன.  ஜி – முனைப்பாடு சொல்வதென்ன வென்றால், சூரியனின் உட்கரு மேற்தளத்தைப் போல் நான்கு மடங்கு வேகம் உடையது.  பூமியின் ஊடே பூகம்பம் செல்வது போல், சூரிய கோளத்தில், சூரிய விஞ்ஞானிகள் ஸோஹோ விண்ணுளவி மூலம் ஈர்ப்பலைகள் பாய்வதைக் காண்கிறார்.

    Image result for suns core rotates faster than surface

    சூரியனில் ஒலி அலைகள் [Sound Waves] மூலம் தொடர்ந்து சத்தம் கிளம்புகிறது. காரணம் சூரியனின் உட்தளத்தில் கனல்சக்தி சுழலோட்டம் [ Constant Convection ] எப்போதும் நிகழ்ந்து கொண்டுள்ளது. பிரென்ச் விஞ்ஞானி எரிக் ஃபாஸ்ஸட்டும் அவரது குழுவினரும் ஸோஹோ மூலம் 16.5 ஆண்டுகள் தகவல் சேமித்து ஆய்வு செய்ததாக அறியப் படுகிறது.

    ஜி -அலைகளின் தடம் [Imprint of G -Waves] காட்டுவது சூரிய உட்கரு வாரத்துக்கு ஒருமுறை சுற்றுகிறது என்று.  சூரியனின் மையத் தளம் 25 நாட்களுக்கு ஒருமுறையும், துருவங்கள் 35 நாட்களுக்கு ஒருமுறையும் சுழல்கின்றன.  ஜி – முனைப்பாடுகள் [G -modes] நமது சூரியனிலும், மற்ற விண்மீன்களிலும் காணப்படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள், புதிய பரிதி விஞ்ஞானத்தை [Solar Science] இப்போது துவங்கப் போகிறது என்பது புல்லரிப்பை உண்டாக்குகிறது.

    Image result for suns core rotates faster than surface

    “பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது.  ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    “பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை.  அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”

    ஜே.பி.எஸ். ஹால்தேன் (J.B.S. Haldane, British-born Indian Geneticist & Evolutionary Biologist) (1892-1964)

    1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன !  அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும்.  ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன !  அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின !

    புரூஸ் சுருடானி (Bruce Tsurutani, NASA Plasma Physicist, JET Propulsion Lab)

    “சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,.  எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை.  தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும்.  ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”

    புரூஸ் சுருடானி (NASA Plasma Physicist)

    “சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவிடும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”

    ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA,)

    1859 ஆண்டில் பரிதியில் நேர்ந்த பூதப்புயல் !

    1.4 மில்லியன் கி.மீடர் (சுமார் 869000 மைல்) அகண்ட பரிதியின் நிறை மட்டும் பரிதி மண்டலத்தின் அனைத்துக் கோள்களின் நிறையில் 99.86 % பங்கு !  அந்த நிறைக் கணக்கிட்டால் அந்த அளவு மில்லியன் பூமிகளை விடச் சற்று பெரியது ! சூரியன் வெளியேற்றும் சராசரி எரிசக்தி ஆற்றல் : 383 பில்லியன் டிரில்லயன் கிலோ வாட் (10^21 kws) !  அந்த ஆற்றலை ஒப்பு நோக்கினால் ஒவ்வொரு வினாடியும் 100 பில்லியன் டன் டியென்டி (TNT) வெடிப்புச் சக்திக்கு இணையாகும் !  ஆனால் பரிதிச் சக்தி வெளியேற்ற அளவு எப்போதும் ஒரு நிலையானதல்ல !  பரிதியின் மேற்தளத்தைக் கூர்ந்து நுணுக்கமாக நோக்கினால் அதன் காந்தத் தளங்கள் தீவிரமாய்க் கொந்தளிக்கும் ஓர் போர்க்களமாய்த் தெரியும் !  வானவிற்கள் போல வளைந்த ஒளிப் பிழம்புக் கொதிப்பு முகில்கள், அலையும் கரிய சூரிய வடுக்களுடன் (Boiling Arc-Shaped Clouds of Hot Plasma, dappled with Dark, Roving Sunspots) காணப்படும்.  விஞ்ஞானிகள் கணிக்க முடியாத நிலையில், எப்போதாவது ஒருமுறை பேரளவு சக்தி வாய்ந்த “சூரிய தீவீச்சுகள்” அல்லது எரிவாயு வெளியேற்றம் (Solar Flares or Coronal Mass Ejection) உண்டாகும்.  அது வெப்பச்சக்தி வெடிப்பில் மின்னோட்ட வாயுவாக (Explosive Burst of Hot Electrified Gases) இமாலயச் சிகர அளவில் வெளியேறுகிறது !

    1859 ஆம் ஆண்டு வேனிற் காலத்தில் பரிதிக்கும் பூமிக்கும் இடைப்பட்ட 150 மில்லியன் கி.மீடர். (93 மில்லியன் மைல்) தூரத்து அண்டவெளியில் சூரியனை நோக்கும் வானியல் நிபுணர் ஆகஸ்டு 28 ஆம் தேதி அதன் முகத்தில் அநேக வடுக்களைக் (Sunspots) கண்டனர். அந்த வடுக்கள் அனைத்தும் பரிதியின் மிக அடர்த்தியான தீவிரக் காந்தக் களங்களில் (Extremely Intense Magnetic Fields) காணப்பட்டன !  அந்த காந்தக் களங்கள் உட்தளப் பின்னலில் பிணைந்து திடீரெனத் தாவும் சூரிய தீக்கனல் வீச்சை (Violent Release of Energy – A Solar Flare) உருவாக்கக் கூடியது.  ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அநேக தீக்கனல் வீச்சுகள் அடித்தன !  அந்த நாட்களில் செப்டம்பர் முதல் தேதி ஒரு பூதகரமான தீவீச்சு உண்டானது !  அந்த ஒரு நிமிடத்தில் மட்டும் பரிதியின் ஒளி திடீரென இரண்டு மடங்கானது !

    unnamed

    பரிதிச் சூறாவளியால் ஏற்பட்ட தீவிர இன்னல்கள்

    “1859 செப்டம்பர் முதலிரு நாட்களில் நேர்ந்த பரிதிச் சூறாவளில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,” என்று புரூஸ் சுருடானி கூறினார். “எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை.  பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும்.  ஒரே ஒரு தீவிர தீவீச்சு 17 மணி 40 நிமிடத்தில் விரைவில் பூமியைத் தாக்கி விட்டது.” என்றும் சுருடானி கூறினார்.  “என்னைப் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி :  அதைப் போன்று பூரணக் கோரப் புயல் ஒன்று பரிதியில் அடுத்து நிகழுமா ?  அதற்கு நான் பதில் சொல்வது :  ஆம் அப்படி நேரலாம் என்பதே.  ஏன் 1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியை விட மிகப் பெரும் நிகழ்ச்சி எதிர்காலத்தில் ஏற்படலாம் !” என்றும் சுருடானி கூறினார்.

    சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட அந்தச் சூறாவளியின் போது ஏதோ ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்து விட்டதாகப் பூலோக மாந்தர் கதி கலங்கினார் !  பரிதிப் புயல் தாக்கிய சில மணி நேரங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய தந்திக் கம்பிகள் (Telegraph Wires) ஒரே சமயத்தில் இணைப்பு இடையூறாகி (Short Circuit) அநேக இடங்களில் தீப்பற்றின.  பரிதித் தூள்களால் தூண்டப்படும் வடதுருவ வண்ண மின்னொளிகள் (Northern Colour Lights) பெருஞ்சுடரில் காட்சி அளித்ததைத் தென்புறங்களில் ஹவாயி, ஹவானா, ரோமாபுரியில் கூடத் தெரிந்ததாக அறியப்படுகின்றது !  அதே சமயத்தில் தென் துருவத்திலும் வண்ணக் கோலங்கள் காணப்பட்டன என்று தெரிகிறது !

    சூரியனின் எரிவாயுத் திணிவு வெளியேற்றத்தில் (Coronal Mass Ejection) உள்ள காந்தக் களங்கள் அடர்த்தியான தீவிரத்தில் விரைந்து பூமியின் காந்தத் தளங்களை நேராக எதிர்க்கின்றன !  அதாவது 1859 செப்டம்பர் முதல் தேதி பூகாந்தத்தை அமுக்கிக் கொண்டு பரிதியின் மின்னேற்றத் துகள்கள் (Charged Particles) பூகோள மேல் உயர வாயு மண்டலத்தை ஊடுருவின !  அத்தகைய கோர விளைவுகள் வானில் ஒளிமயக் காட்சிகளையும், மின்னியல் பரிமாற்றுத் துறைகளையும், தகவல் அனுப்பு & ஏற்பு அமைப்புகளையும் (Electrical Grids & Communication Networks) பேரளவில் பாதித்தன !  உலகின் 140,000 மைல் நீளத் தந்தித் தொடர்புச் சாதனங்கள் பல மணி நேரங்கள் முடங்கிப் போயின.  பேரளவு தீவீச்சு வெளியேற்றமானது பூமியில் ஏற்படும் பூத பூகம்ப ஆற்றலை விட மில்லியன் மடங்குச் சக்தி வாய்ந்தது !

    1994 இல் உண்டான சூரியப் புயல் தகவல் தொடர்பு துணைக்கோள்களைத் தாக்கிச் செய்தித்தாள் பதிப்புகள், தொலைக்காட்சி ஏற்பாடுகள், அமெரிக்கா, கனடா ரேடியோ அறிவிப்பு அமைப்புகள், செல் ·போன் கம்பியில்லாத் தொடர்புகள், பூகோளத் தளச்சுட்டு ஏற்பாட்டுத் துணைக்கோள்களின் தொடர்புகள் (TV Signals to Global Positioning Sytems – GPS Systems) மின்சாரம் பரிமாற்றுத் தொடர்புகள் (Electrical Power Grids) பாதிக்கப் பட்டன.  1989 மார்ச்சில் ஏற்பட்ட தீவிரமற்ற ஒரு சிறிய பரிதிப் புயலில் கனடாவின் ஹைடிரோ-குவபெக் மின்சாரப் பரிமாற்றம் (Hydro-Quebec Power Grid) முடக்கப்பட்டு 9 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது !  அதனால் விளைந்த நிதி விரயம் பல மில்லியன் டாலர் என்று கணிக்கப்படுகிறது.

    பரிதி வாயுக் கோளத்தின் உள்ளமைப்பு

    பரிதியின் விட்டம் 863,400 மைல், பூமியைப் போல் 109 மடங்கு விட்டம் ! அதன் எடை பூமியைப் போன்று 333,000 மடங்கு கனத்தது. சூரியனின் கொள்ளளவு [Volume] பூமியைப் போல் 1.3 மில்லியன் மடங்கு!  கண்ணைப் பறிக்கும் பரிதியின் பெருஞ்சுடர் மேல்தளம் ‘ஒளிமயக் கோளம்’ [Photosphere] என்று அழைக்கப் படுகிறது. அடிக்கடி ஒளிமயக் கோளத்தில் ‘கரும் வடுக்கள்’ [Dark Patches], சில சமயம் 50,000 மைல் அகலத்தில் காட்சி அளிக்கின்றன! அவற்றைப் ‘பரிதி வடுக்கள்’ [Sunspots] என்றும் குறிப்பிடுவதுண்டு. பரிதித் தேமல்களில் உஷ்ணம் [4000 டிகிரி C], மேல்தள உஷ்ணத்தோடு [6000 டிகிரி C] ஒப்பிட்டால் எப்போதும் குறைந்தே இருக்கிறது. ஒளிமயக் கோளத்தை ஒட்டி யுள்ளது ‘செந்நிறக் கோளம்’ [Chromosphere]  செந்நிறக் கோளுக்கு அப்பால் புறத்தே வெண்ணிறத்தில் ஒளிர்வது, ‘சுருள்தீ வளைவுகள்’ [Corona]. செந்நிறக் கோளும், சுருள்தீ வளைவுகளும், சூரிய கிரகணம் [சந்திரன், பூமிக்கும் பரிதிக்கும் நேரிடையில் கடக்கும் சமயம்] நிகழும் போதுதான் காண முடியும்! கண்களுக்குப் புலப்படாதபடி, செந்நிறக் கோளத்தி லிருந்து சில சமயங்களில் ஆயிரக் கணக்கான மைல் உயரத்தில் வாயுத்தீ நாக்குகள் [Flares of Luminous Gas] தாவி எழுவதுண்டு!

    பரிதிக்கு நகர்ச்சி உண்டா ? உண்டு. விண்வெளியில் எந்த அண்டமும் நகர்ச்சி இல்லாமல் அந்தரத்தில் நிற்பதில்லை! மற்ற அண்ட கோளங்களைப் போல், சூரியனும் தன்னைத் தானே மெதுவாகச் சுற்றுகிறது. காலையில் கீழ்வானில் உதயமாகும் பரிதி, வான வீதியில் நகர்ந்து மாலையில் மறைவது போல் தெரிகிறது. ஆனால் மெய்யாக நகர்வது பூமி! சூரியன் நகர்வதில்லை! ஆனால் பரிதிக்கு வேறு முறையில் நகர்ச்சி உள்ளது. பரிதி தனது அச்சில் சுற்றும் போது, மத்திம ரேகைப் பகுதியில் சுற்றுக்கு 25 நாட்களும், துருவப் பகுதியில் 34 நாட்களும் ஆகின்றன. பரிதி பூமியைப் போல் திரட்சிப் பொருள் [Solid] எதுவும் இல்லாமல், வாயுக் கோளமாக இருப்பதால், சுற்றும் காலங்கள் நடுப்பகுதியிலும், இரண்டு துருவங்களிலும் மாறுபடுகின்றன. சுற்றும் சந்திரனைப் பூமி சுமந்து கொண்டு, தானும் தன்னச்சில் சுழன்று கொண்டு, சூரியனைச் சுற்றி வருகிறது. அதைப் போல தன்னைச் சுற்றி வரும் ஒன்பது அண்டக் கோள்களைத் தாங்கிக் கொண்டு, சூரியனும் தன்னச்சில் சுழல சூரிய குடும்பம், பிரபஞ்சத்தில் மற்ற அகிலவெளி ஒளிமய மந்தைகளைப் போல் [Intersteller Galaxy] பால்மய வீதியில் நகர்ந்து கொண்டே போகிறது!

    சூரியனில் தெரியும் கருமை நிற வடுக்கள்

    சூரிய கோளத்தில் தெரியும் கரும் புள்ளிகளை [Black Spots], 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சைனாவில் வானியல் ஞானிகள் கண்டு குறிப்பிட்டிருக்கிறார்கள்! அவற்றைப் பரிதிவடுக்கள் [Sunspots] என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார். பரிதி வடுக்களில் கருந் தழும்புகளும் [Umbra], அவற்றைச் சுற்றிச் செந்நிற விளிம்புகளும் [Penumbra] சூழ்ந்துள்ளன!  பரிதி வடுக்கள் இரட்டையாக இணைந்தே, சூரியனில் குறிப்பிட்ட சில வளைய மண்டலங்களில் மட்டுமே தோன்றுகின்றன. ஒடுங்கிய குறுக்கு ரேகைக் [Lattitude] களத்தில் மத்திம ரேகைக்கு [Equator] 35 டிகிரி வடக்கிலும், தெற்கிலும் பரிதி வடுக்கள் அங்கும் இங்கும் படர்ந்துள்ளன! மத்திம ரேகையை நெருங்க நெருங்க, வடுக்களின் எண்ணிக்கை அதிகமாகி 8 டிகிரி குறுக்கு ரேகையில் ஒன்றும் இல்லாமல் பூஜியமாகிறது. மற்ற வெப்பக் களங்கள் 6000 டிகிரி C உஷ்ணத்தில் கொந்தளிக்க, வடுக்களின் உஷ்ணம் 1500-2000 டிகிரி C குன்றி, களங்கள் கருமை நிறத்தில் தோன்றுகின்றன. அதற்குக் காரணங்கள் இன்னும் அறியப் படவில்லை! ஒரு வேளை காந்த சக்தி கொந்தளிப்பால், பரிதி வடுக்கள் உண்டாகி இருக்கலாம்!  பரிதியில் ஒற்றை வடுவைக் காண்பது அபூர்வம்.  இரட்டை, இரட்டையாகவே தோன்றும் வடுக்களின் காந்தம் எதிர்முறையில் வட தென் துருவங்கள் போல நடிக்கின்றன. வடுக்கள் 20 நாட்களே நீடித்துப் பின்பு மறைந்து விடுகின்றன. பரிதி தன்னைத் தானே சுற்றும் போது, வடுக்களும் நகர்வதால். பரிதி சுழலும் வேகத்தை பூமியிலிருந்து தொலை நோக்கிகள் மூலம் அறிய முடிகிறது.

    2010-2012 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் அசுர சூரியப் புயல் !

    1859 இல் ஏற்பட்ட சூரியப் புயலை விட அசுர ஆற்றல் படைத்த சூறாவளி 2010-2012 ஆண்டுகளில் உண்டாகலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.  அந்தக் கதிரலைப் புயலடிப்பு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் 300 புவியிணைப்புச் சுற்றுத் துணைக்கோள்களைப் (GEO – Geosynchronous Earth Orbiting Satellites) பேரளவில் பாதிக்கும் !  அவற்றால் பயன் பெறும் தகவல் துறைகள் முடக்கமாகி வருமானம் 30 பில்லியன் டாலர் நட்டமடையும் என்று கணிக்கப் படுகிறது !  ஜியோ துணைக்கோள்களின் ஆண்டு வருவாய் 97 பில்லியன் டாலர் (2006 டாலர் மதிப்பு) !  அதாவது குறைந்தது 30% வருவாய் இழக்கப்படும் என்று கருதப் படுகிறது !  மேலும் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அகில நாட்டு விண்வெளி நிலையம் (International Space Station) பூமியிலிருந்து சுற்றும் உயரம் தாழ்த்தப்பட்டு, மீண்டும் பழைய சுற்று வீதிக்கு எழ முடியாமல் இடர்ப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது !

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What will Happen to the Sun ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 National Geographic Magazine : Sun Bursts – Hot News from Our Stormy Star (July 2004)
    25 Scientific American Magazine : The Paradox of the Sun’s Hot Corona By : Bhola N. Dwivedi & Kenneth Philips (June 2001)
    26 Scientific American Magazine : The Steller Dynamo By Elizab eth Nesme-Ribes (2004)
    27 Solar Superstorm – A NASA Report (Oct 23, 2003)
    28 Scientists Worry About Solar Superstorm By : Leonard David (www.Space.com) (May 2, 2006)
    29 Solar Storms Strip Water in Mars – Planetary Geology – Geotimes By : Sara Pratt
    30 The Science Behind Solar Storms By : Noelle Paredes\
    31 Bracing for a Solar Storm – http://www.unexpected-mysteries.com/
    32 What Causes Irradiance Variations ? (http://sdo.gsfc.nasa.gov/missiom/irradiance.php)
    33 The Solar Spectral Irradiance & Its Vaiations.
    34 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ?

    35.http://www.dailygalaxy.com/my_weblog/2017/08/nasaesa-discovers-suns-core-rotates-4-times-faster-than-surface-a-new-window-of-solar-physics-begins.html  [August 1, 2017]

    36.https://www.sciencedaily.com/releases/2017/08/170801094354.htm [August 1, 2017]

    37. https://phys.org/news/2017-08-sun-core-rotates-faster-surface.html [August 1, 2017]

    38.  http://zeenews.india.com/space/surprise-discovery-scientists-reveal-that-suns-core-rotates-four-times-faster-than-its-surface-2029419.html [August 2, 2017]

    39.http://www.dailygalaxy.com/my_weblog/2017/08/suns-core-makes-one-complete-rotation-per-week-not-predicted-by-prior-models.html  [August 7, 2017]

    ******************
    S. Jayabarathan [ jayabarathans@gmail.com]  [August 11, 2017] (R-1)

    Share
  • முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா? தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்காக முதியோர் சிறுசேமிப்பு செய்த பணத்தை டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பது நியாயமா?

    முதியோரின் மன நிலையை ஆட்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.. இறுதிக் காலத்தில் யாரிடமும், பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், கையேந்தாமல் தன்னிறைவு பெறவேண்டும் என்ற முனைப்பில் அரும்பாடுபட்டு சேமித்து வைத்து அதை அரசு வங்கிகளை மட்டும் நம்பி வைப்புத்தொகையாக வைத்து, வட்டியை மட்டும் வாங்கி செலவு செய்துகொண்டிருக்கும் முதியவர்களின் நிலை பற்றிய உளவியல் பிரச்சனை இது..

    யதார்த்தமாக வாழ்க்கையை சந்திக்கக்கூடிய மனிதர்கள் நாங்கள். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்க்கவும் முடியவில்லை, வரவேற்கவும் முடியவில்லை. இது எங்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் எந்தவொரு புதிய சட்டமாக இருப்பினும் மக்களின் ஒப்புதலுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக பிரிட்டனில் பிரெக்ஸிட் இப்படித்தானே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஒரு சாதாரண வியாபாரி மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் போக்குவரத்து நிலையங்கள் (லாரி பயன்பாட்டாளர்கள்) ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 வண்டி பயன்படுத்தினாலே 6 இலட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக செலுத்தப்பட வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இவை அரசுக்கு செலுத்தப்படாத வருமானங்கள். இன்று 2 இட்லி சாப்பிட்டாலே 5 ரூ ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இப்படி ஒரு சூழலில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புதிய வருமானமாக வருகின்றன. இன்னும் 15 நாட்களில் ஸ்குவாட் வேறு வரப்போகிறது. இப்போது மக்கள் தாமாக முன்வந்து வரிவிதிப்பை ஏற்கும்போது முதியோரின் சிறு சேமிப்பில் கைவைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை பாழாக்குவது சரியா? நம் கண்முன்னே ஒரு நாட்டில் தம் மக்களுக்கு வாழ்வதற்காக ஆண்டுதோறும் சுமாராக 1 இலட்சம் டாலர்களை மக்களுக்கு வழங்கி அவர்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு சுவீடன் நாட்டில் நடந்தது. மிகப்பெரிய ஒரு வருமானம் வரும்போதுகூட அரசு ஏன் முதியோர் சிறுசேமிப்பில் கை வைக்க வேண்டும்? தற்போது உள்ள அரசு வருமானங்களை சரியான முறையில் நிர்வகித்தாலே மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியுமே?

    பிரதமர் மோடி அவர்களின் முகநூல் பக்கத்தில் பதியப்பட்டுள்ள ஒரு முதியவரின் வேதனையான மடல் இது 🙁

    மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜீ!

    மதிப்பிற்குரிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜீ!

    உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இதைப் படிப்பதற்காக செலவிட்டு இந்த விஷயத்தில் சரியான ஒரு முடிவு எடுப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன் முதலில்.

    நான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள்.

    2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. புதிதாக எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் இருப்பதையும் குறைத்து விட்டீர்கள். எந்தப் பொருட்களின் விலையும் 2014ல் இருந்தது போல் இல்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமயங்களில் சில பொருட்களை எட்டி பார்க்கக் கூட திராணி இல்லை எங்களுக்கு.

    இந்த வட்டி விகிதக் குறைப்பிற்கு Demand மற்றும் supply ஐக் காட்டி அரசியல் மட்டும் கோட்பாட்டு ரீதியான காரணத்தை உங்களால் சொல்ல முடியும். ஆனால் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைச் சொல்ல முடியாது. முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தாங்கள் விரும்பினால், அது டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பதாய் இருக்கக் கூடாது. வராக்கடன்கள் என்னும் எரிமலைகளின் மீது வங்கிகள் இயங்குகின்றன.

    தங்கள் பொன்னான காலங்களை எல்லாம் பல நிறுவனங்களுக்கும், தேசத்துக்கும் சேவை செய்து வாழ்ந்த எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பது அரசின் கடமையல்லவா? இந்த 25 % இழப்பினை எப்படி ஈடு கட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எந்த அமைச்சரோ, எம்பியோ, எம்.எல்.ஏவோ தங்கள் வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வருவார்களா? இல்லையென்றால் மூத்த குடிமக்கள் மட்டும் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?

    உங்களைப் போல எங்களின் ஊதியத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. எந்த விவாதமும் இல்லாமல் உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆளும் கட்சி மேஜைகளில் இருப்பவர்களும், எதிர்க் கட்சி மேஜையில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும். பற்றாக்குறை, பொருளாதாரம் மற்ற எல்லாக் காரணங்களையும் உங்களால் கடந்து விட முடியும்.

    மூத்த குடிமக்களுக்கான இந்த டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஆரம்பத்தில் 9.20 சதவீதமாக இருந்தது. ஜூலை, 2014ல் அது 8.3 சதவீதமாக குறைந்தது. அதுவும் 15 லட்சம் வரைதான். இந்த வட்டி விகிதம் ஓய்வு பெறுகிற ஒருவருக்கு கிடைப்பதைப் போல 12 சதவீதமாக இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியான மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழ்வதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். எங்களின் சேமிப்பு மூலமாக வாழும் அவலநிலையில் நாங்கள் இருப்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    நான் எதுவும் தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    மரியாதையோடும், நன்றியோடும்-

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (4)

     
    மீ.விசுவநாதன்

    பகுதி: நான்கு
    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1
    ஸ்ரீராமன் சந்தித்த அனுமனும், சுக்ரீவனும்

    பம்பைநதிக் கரையில்தான் பணிவுமிக்க தூய
    பக்தனான அனுமனைப் பார்த்தான்ஸ்ரீ ராமன் !
    தெம்புதுளிர் விட்டதுபோல் திருமுகத்தில் மெல்லத்
    தெரிந்ததுநல் நம்பிக்கை ! தேவிதனைத் தேட
    அன்புள்ள சுக்ரீவன் அரவணைப்பும் பெற்றான் !
    அக்னிசாட்சி யோடவனும் அன்னையைக் கண்டு
    இன்பத்தைத் தருவதாக இதயத்தால் சொல்லி
    இராமனுடன் நட்புதனை இயல்பாகப் பெற்றான் ! (31)

    வாலி வதம்

    அதன்பின்னே வாலியுடன் அவன்பகையைக் கூறி
    அருள்கூர்ந்து தவுமாறு ஆறுதலாய்க் கேட்டான் !
    இவன்கவலை போக்குதற்கு இப்போதே ஈந்தேன்
    என்வாக்கை என்றுதன்வில் மீதடித்துச் சொன்னான் !
    சிவபக்தன் ராவணனை சிறைபிடித்த வாலி
    சேர்த்துள்ள பலந்தன்னை ஸ்ரீராமன் கேட்டு
    அவன்கதை முடிப்பதற்கு ஆயத்த மானான் !
    அங்குளஆச் சாமரங்கள் அத்தனையும் சாய்த்தான்! (32)

    மலைபோன்ற துந்துபியின் வலிவுடலைக் காட்ட
    மடக்கியதன் கால்விரலால் வானுயரம் வீச
    சிலைபோல நின்றிட்ட சுக்ரீவ(ன்) அங்கே
    சிரித்தஸ்ரீ ராகவனின் செம்மையினைக் கண்டான் !
    உலையிட்ட அரிசியைப்போல் உள்வெந்த கோபம்
    உடனங்கு பொங்கிவர கிஷ்கிந்தை வாசல்
    இலைபோட்டு அழைத்ததுபோல் இடியோசை போலே
    எதிர்ப்பகையை சுக்ரீவன் எதிர்கொண்ட ழைத்தான் ! (33)

    குரல்வந்த திசைநோக்கி குகைவெளியில் வாலி
    குதிபோட்டு வரும்வேளை குணவதியாம் தாரை
    குரல்தாழ்த்தித் தடுத்தாலும் கோபத்தை வெல்லும்
    குறியறியா வாலியினைக் கொன்றானே ராமன்
    விரல்தட்டிச் விட்டிட்ட வினைமுடிக்கு(ம்) அம்பால் !
    வேதனைதான் என்றாலும் வித்திட்டான் வாக்கை !
    பரல்முத்து மணிமகுடம் சுக்ரீவன் ஏற்க
    பறந்தனர்கள் வானரர்கள் சீதையினைத் தேடி . (34)

    சுந்தரகாண்டம்

    கழுகினமாம் “சம்பாதி” கருத்ததனைக் கேட்டு
    கடல்தாண்டி அனுமனும் காற்றாகச் சென்று
    மொழுகினதோ தங்கத்தால் முழுபூமி (இ)லங்கை
    முத்தாக ஒளிர்வதிலே முகம்பார்த்துக் கொண்டான் !
    மெழுகாக உருகிவரும் சீதைமுகங் கண்டு
    மெய்முழுதும் பூமிவிழ விநயமுடன் நின்றான் !
    தொழுதான், அறிமுகமும் கொண்டவுடன் (இ)ராம
    தூதனவன் ஆதாரங் கொடுத்துப்பின் வந்தான் ! (35)

    தன்னையங்கு எதிர்த்தவரை தவிடுபொடி ஆக்கி
    தளபதி”அட் சயகுமாரன்” தலையினையும் கொய்தான் !
    அன்னையவள் வைதேகி அசோகவனம் விட்டு
    அத்தனையும் தீவைத்து ஆத்திரமும் தீர்த்தான் !
    பின்னையவன் பெருங்கடலைப் பெருமையுடன் தாண்டி
    பேரின்ப ராமனிடம், “கண்டேன்நான் சீதை”
    உன்னையே நினைத்திருக்கும் உத்தமியாம் கோதை
    உனக்கான செய்தியிது உண்மையெனச் சொன்னான் ! (36)

    இராவண வதமும், சீதையின் தவமும்

    கடல்நீரைக் குறிவைத்தே ஓரம்பை எய்த
    கணப்போதில் கடல்மன்னன் காட்சியினைத் தந்து
    “இடரொன்றும் இல்லாமல் இலங்கைக்குச் செல்ல
    இப்போதே உதவிகளைச் செய்துதரு கின்றேன்
    கடல்நீர்மேல் “நளன்”கல்லை வைத்தாலே போதும்
    கடகடென கற்பாலம் கண்முன்னே தோன்றும்
    திடமான பாலமிது வெற்றியுடன் நீங்கள்
    திரும்பிவரும் நற்காலம் தெரிகிறதே” என்றான் ! (37)

    போரினிலே இராவணனைக் கொன்றவுடன் சீதை
    புடம்போட்ட தங்கமெனப் புரியவேண்டி அந்த
    ஊரினிலே அனைவர்முன் உத்தமியைக் கோபக்
    குரலாலே இராமனுமே குத்துகின்ற போது
    மாரியிலும் தூய்மையாம் மகராசி அன்னை
    மனத்தாலே தீக்குளித்து மானத்தைக் காத்தாள் !
    வாரிவாரிப் பூச்சொரிந்து வாழ்த்தினரே அக்னி,
    வானோர்கள் எல்லோரும் ! மகிழ்ந்தான்ஸ்ரீ ராமன் ! (38)

    ஸ்ரீராமன் பரத்வாஜர் ஆஸ்ரமம் வருதல்

    இலங்கைக்கு மன்னனாக வீடணனை ஆக்கி
    இறந்துபோன வானரரை எழுப்பிவிடச் செய்து
    கலங்கிநின்ற மனத்தோர்க்கு கவலைகளை நீக்க
    கல்யாண ராமனாகக் காட்ச்சிதர வேண்டி
    நிலங்குளிரும் கார்குணத்தான் நேரயோத்தி செல்ல
    நினைத்தங்கு புட்பகச்சீர் விமானத்தில் ஏற்றிப்
    புலம்பெயர்ந்தான் ! பரத்வாஜர் புகழ்க்குடிலில் கொஞ்சம்
    பொழுததனைக் கழித்திடவே புத்திதனைக் கொண்டான் ! (39)

    ஸ்ரீராம ராஜ்யம்

    பக்திமிகு அனுமனிடம் பரதனிடம் சென்று
    பக்குவமாய் வரும்செய்தி பகன்றிடவே சொன்னான் !
    எத்திக்கும் இராமனையே எதிர்பார்க்கும் காலம்
    இறங்கி”நந்தி கிராமத்தில்” இன்பமுடனி ருந்தான் !
    தித்திக்கும் செய்தியினால் தேர்க்கூட்ட மாகத்
    தேடிவந்த மக்களுக்குத் தேனாட்சி தந்தான் !
    முக்திக்கு வழிகாட்டும் முனிவர்க(ள்) எல்லாம்
    மோனத்தில் ஞானத்தில் மூழ்கிதனை வென்றார் ! (40)

    இன்பத்தைத் தவிரவேறோர் எண்ணமின்றி மக்கள்
    ஏற்றமுடன் வாழ்ந்தார்கள் ! எல்லோர்க்கும் தர்ம
    உன்மத்த மேறிநல்ல உள்பலங்கொண் டார்கள் !
    உடன்பிறந்தோர், நண்பர்கள், உற்றோர்கள் என்று
    அன்பொழுக வென்றார்கள் ! ஐயங்கள் தீர்க்கும்
    ஆசார்ய மேலோர்கள் அற்புதம்செய் தார்கள் !
    பொன்போன்ற காலமிது ! புகழ்ராம காதை
    பொய்யில்லா தர்மத்தால் புவியாண்ட சத்யம் ! (41)

    பதினோறா யிர(ம்)ஆண்டு பற்றின்றி ஆட்சி
    பார்த்துவந்தான் இராமராஜன் ! பட்டினியும் இல்லை,
    பதிஇறப்பு மில்லை, பசுக்களுக்குப் பச்சைப்
    பசேலென்ற புற்களுக்குப் பஞ்சமென்ப தில்லை !
    நிதிக்குறையு மில்லை!ஓ(ர்) ஏழைகூட இல்லை !
    நிறைவாக எவ்வுயிரும் எப்போதும் வாழ்ந்த
    பதியன்றோ இராமனாண்ட பண்புள்ள தேசம் !
    படிப்போர்க்கும் கேட்ப்போர்க்கும் பல்லாண்டு கூடும் ! (42)

     
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில்
    முதலாவது ஸர்க்கம் (பகுதி) முடிவடைந்தது)

    Share
  • வெண்பூ வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்
    ———————————————–

     
    காளிதாச கம்ப குமர குருபரர்கள்
    தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
    கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
    கைக்குட்டை யாய்கையில் கட்டு….(17)

    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….(19)

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….(20)

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….கிரேசி மோகன்….!

    Share
  • தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா

    Bharatha Matha (1)

    தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா 15.8.2017 நடைபெற உள்ளது

    தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா 15.8.2017 காலை 8.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.

    அரும்பாடுபட்டு நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமையாகும். அந்த வகையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதா 73 பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளது மட்டுமல்லாது இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழை பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து உலக நலன் கருதி வழிபட்டு வருகிறார் என்பது ஸ்வாமிகளின் கூடுதல் சிறப்பாகும்.

    நாளை 15.8.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.. மேலும் இந்த வைபவத்தில் அனைத்து பொதுமக்களும் வந்திருந்து பங்கேற்று பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளையும் பெறவேணுமாய் தன்வந்திரி குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுதந்திர தின விழா நடைபெற உள்ளது என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் .
    தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .

    தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
    Email : danvantripeedam@gmail.com

    Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    “சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை 
      ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன 
      மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய் 
      ஆனகல்கி மூர்த்தி அவர்”….கிரேசி மோகன்…
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170811 - Krishna Philharmonic -lr

    ’’மாட்டுக்(கு) ஒருகாலும், பாட்டுக்(கு) ஒருகாலும்
    கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
    போட்டதற்கு வண்ணத்தை பூசிய கேசவ்கை
    போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….

     
    ”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
    புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
    கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
    பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!

    இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்கிறான் கன்னையன்….!

    Share
  • ஜீவான்மன்

     
    ஆடு நனைய அழுகின்ற ஓநாய்
    வாடும் மனமாம் வெறும்தாளில் –
    கூடாம் உடலில் உயிரைக் கொடுத்த
    மடலோ வியனே கடவுள்காண்….!

    ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
    போர்வை மனமோ நார்நாராம்
    கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
    புந்தியை ஈசா பிழிந்திடுவாய்….!

    கைலாஸங்கள் வைகுண்டங்கள்
    காண்போர் கண்ணுக்கு மெய்யாகும்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….

    மதங்கள் நூறு ஜாதிகள் கோடி
    ஆதி அந்தமும் ஒன்றல்லோ
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை…!

    பூரணத்தைப் பரிபூரணமாக
    ஜீரணம் செய்யும் சூரணமே
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….(தொடரலாம்….!)

    Share
  • பொருள் ஒன்று, பயன் வேறு

      ரா.பார்த்தசாரதி

     

    உலை அரிசிக்கு தெரிவதில்லை – அது

    உருமாறி பலரின் பசியாற்றப் போவது!

     

    ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை – அது

    அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!

     

    அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை – அது

    மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!

     

    வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை – அது

    சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!

     

    ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை – அது

    ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!

     

    அரிசி ஒன்று தான் – ஆனால்,

    பயன் வேறு வேறு!

     

    மலர்கள்  ஒன்று சேர்ந்து   திருமண மாலையாகிறது

    மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !

     

    மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது

    மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !

     

    தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது

    அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !

     

    வாழ்க்கை ஒன்று தான் – அது

    வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!

     

     

    Share