Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Krishna Leela - oil on canvas 4’x4’ 2008 commissioned by Krishnan Microsoft Hyderabad —lowres
    Krishna Leela – oil on canvas 4’x4’ 2008 commissioned by Krishnan Microsoft Hyderabad —lowres

    ”லீலா தரங்கிணியில் லாகவ கேசவர்,
    மாலே மணிவண்ண மாமாயர் -நீல
    யமுனா ஆற்றில் இழந்ததைப் பெற்ற
    ரமணா பிரம்மச்சா ரி’’….கிரேசி மோகன்….!

    ஜாமக் கடுமிருளில் ஜாதிவிட்டு, நந்தனார்
    கோமக் களைமேய்த்த கோபாலன் -காமக்
    கடும்புனல் கோபியரைக் கூடியும், உள்ளக்
    கடும்பிரமச் சாரியாம் காண்….!

    Share
  • கோப்புக்கூட்டல் [6]

    இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 15, 2017

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [6]
    அலங்கார வேளையில் ஒரு அலங்கோலம்

    A large number of children admited at ICU for encephalitis treatment ,At least 30 children lost their lives due to encephalitis in last 48 hours at Gorakhpur’s BRD Hospital after Supply of liquid oxygen was disrupted yesterday due to pending payment. Express photo by Vishal Srivastav 12.08.2017
    A large number of children admited at ICU for encephalitis treatment ,At least 30 children lost their lives due to encephalitis in last 48 hours at Gorakhpur’s BRD Hospital after Supply of liquid oxygen was disrupted yesterday due to pending payment. Express photo by Vishal Srivastav 12.08.2017

    சுதந்திர தினம் ஒரு சுபதினம். கொண்டாட வேண்டிய தருணத்தில், பொது மக்கள் மீளா துக்கத்தில் திண்டாடினால், அது பற்றிய கவலை, சோகம் நம்மை ஆட்கொள்ளும். கடந்த ஒரு வாரத்தில் கோரக்பூர் மருத்துவகல்லூரியை சார்ந்த நேரு ஆஸ்பத்திரியில் (950 படுக்கைகள் கொண்டது) 70 சிசுக்களும், சில வயது வந்தவர்களும் மரித்து விட்டார்கள். அது பற்றி இன்றைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட முதல்வர் யோகி ஆதிநாத், இன்றைய தினத்தை சங்கல்பம் செய்யும் தினமாக அறிவித்து, தன்னை ஆற்றிக்கொண்டார். நீண்ட கால உண்மையை செப்பிய அவர் ஊரறிந்த சமீபத்தில் நடந்த இழவின் உண்மை பின்னணியை கூறியிருக்க முடியாது; ஏனெனில் ஒரு விசாரணை துவங்கப்போகிறது. அதை ஒரு மாபெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு, பொது மன்றத்தில் பிராணவாயு பற்றி உள்ள தகவல்களின் அலசலை சொல்லாமல், நாட்டின் சுகாதாரமின்மை பற்றி அவர் முரசொலித்தது விகாரமாக இருக்கிறது. அது நிஜம் தான். ஆஸ்பத்திரி கந்தரகூலம், பல்லாண்டுகளாக.

    என்னால் இயன்றவரை நம்பகமாக கிடைத்த செய்திகளை அறிந்த கொண்ட எனக்கு இது வரை வெளிவந்த எந்த கருத்தும் பிடிபடவில்லை. ஏனென்றால், ஒவ்வொருவரும் யானையை தொட்டறிந்த ஐந்து கண்ணொளி இழந்தவர்கள் போல முழு பின்னணியையும் நோக்கவில்லை. நானும் செய்யவேண்டிய அலசல்கள் பல உள்ளன. சாணக்கியர் தன் காலில் குத்திய பெரிய முள்ளை பிடுங்கி எடுத்ததும் அல்லாமல், அந்த செடியை வேருடன் பிடுங்கி தீயிட்டு கொளுத்தினாராம். கடந்த முப்பது வருடங்களாக உத்தரபிரதேசத்தை ஆண்ட மகாபிரபுக்கள் (நான் அந்த மாநிலத்தில் ஊழியம் செய்ததால், அவர்களில் சிலரை அறிவேன். சுயநல அரசியல் கம்பங்கூத்தாடிகள். ) மக்களை வாட்டிய மூளைக்காய்ச்சல் (Japanese Encephalitis and Acute Encephalitis Syndrome) பற்றி கவலை கொள்ளாததால், அம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் மட்டும், ஐம்பது ஆயிரம் மக்கள் மடிந்தனர். முதல்வர் பலவருடங்களாக இது பற்றி நன்கு அறிவேன்; இதை ஒழிக்க பாடுபட்டேன் என்று ஆஸ்பத்திரி சவகிடங்கை பார்வையிட வந்த போது கூறினார். என்ன செய்தார் என்ற விவரம் தான், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, எனக்கு. ஆம். இது தற்காலிக அலசல் தான்.

    ஆனால், இன்று ஆதாரத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.

    மெத்தப்படித்த அரசுபதவி வகிக்கும் மேதாவிகள், தங்கள் முதுகுக்குக் கவசம் பூட்ட, முரண்செய்திகளை ‘இரக்கத்துடன்/வருத்தத்துடன்’ அளிப்பார்கள். பல முரண்செய்திகளில், சம்பந்தப்பட்ட உண்மைகளையும், சம்பந்தமில்லா வரலாற்று உண்மைகளையும் கலந்து சாக்குபோக்குக்கள் கொடுக்கும் போது, அது பொய்யாக மறுஜன்மம் எடுக்கிறது; ஆனால் தோற்றம் உண்மை போல. அது தான் இங்கு நடந்திருக்கிறது. ஒரு விதண்டாவாதத்திற்காக (அதற்கென்ன குறைச்சல்!) சிசுக்கள் (பிறந்த சில நாட்கள் அடகு காத்து பாதுகாக்க வேண்டியவை) மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிசுக்கள் உற்பத்தி ஆனதே ஆஸ்பத்திரியில். எந்த சுகாதாரமின்மையினால் அது வந்தது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அது தொலையட்டும். அந்த அமைப்புகளுக்கு பிராணாவாயு தேவையில்லையா? அல்லது டாக்டர்கள் ( குறிப்பாக டாக்டர் கஃபீல் அகமது ) பிராணவாயுக்காக ஆலாய் பறக்கவில்லையா? டாக்டர் கஃபீல் அகமது பல இடங்களுக்கு அலைந்து, தன் பணத்தை செலவழித்து, பிராணவாயு வரவழைத்து, பல உயிர்களை காப்பாற்றியதாக செய்தி. அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம் என்று நானும் எனக்கு அதுவரை கிடைத்த செய்திகளை வைத்து எழுதினேன். அவரோ வேலை நீக்கம் செய்யப்பட்டார். காரணமாகத்தான்! அவருக்கு ஒரு சொந்த ஆஸ்பத்திரி உளது, மற்ற டாக்டர்களை போல. அரசு ஆஸ்பத்திரியிலிருந்து பிராணவாயு சிலிண்டர்கள் கூடு விட்டு கூடு பாய்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் கிடக்குமாம். அவரை திருடன் என்றே குறிப்பிட்டு இருக்கிறது, ஒரு நம்பகத்தனமான ஊடகம். எனக்கு இது வியப்பு அளிக்கவில்லை. நான் 1989ல் பார்த்திருக்கிறேன். அலஹாபாத் கமலா நேரு ஆஸ்பத்திரியில், அதற்கு எதிரே வரிசையாக, அரசு டாக்டர்களின் க்ளினிக்கள் இருக்கும். கோடிக்கணக்கான செலவில் வாங்கப்பட்ட ஆஸ்பத்திரி உபகரணங்கள் ஒடிக்கப்பட்டு கிடக்கும். எங்கள் அலுவலகத்தின் ஒரு கடை நிலை ஊழியருக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவை. அந்த துறைத்தலைவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரிடம் அந்த ஊழியரை அழைத்துச்சென்றேன். கனிவின் சிகரமாக திகழ்ந்த அவர், நான் சென்றபின் அவனிடம், ‘இது அபாயகரம். ஆஸ்பத்திரியில் செய்தால், நீ மரித்து போகலாம். நான் என் க்ளினிக்கில் செய்கிறேன். இத்தனை ரூபாய்!’ என்றாராம். பரிச்சயமாவது? மண்ணாங்கட்டியாவது? அந்த ஊழியர் காணாமல் போய்விட்டார். சில வாரம் கழித்து வந்தார். ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரி இலவசமாக எல்லாம் செய்தார்களாம். ஐயாவுக்கு புது பொலிவு. அவர் ஏன் கிருத்துவனாக மாறி நன்றிக்கடன் செலுத்த வில்லை என்று இன்று கூட புரியவில்லை. நானாக இருந்தால், ஏசு கிரிஸ்துவை பல்லக்கில் எழுந்தருள செய்திருப்பேன்! (ஐயங்காராகவே இருந்து கொண்டு, அதை செய்ய தயார்!)

    உடனே யோகி மீது கில்லி தண்டா ஆடாதீர்கள். நம்ம ஸ்டான்லியில் வந்த நோயாளிகள், காமாலையால் போனஸ் அடி வாங்கியிருக்கிறார்கள்.

    முடிந்தால், மேலும் எழுதுகிறேன். உதாரணமாக, வேலை நீக்கம் செய்யப்பட்ட உடனே ‘மாரல் க்ரவுண்ட்ஸ்’ ராஜிநாமா கொடுத்த தலைமை டாக்டர் ராஜீவ் மிஸ்ரா; புஷ்பா மெடிக்கலுக்கு பல லக்ஷம் பாக்கி; அவர்கள் எல்லா நோட்டீஸும் கொடுத்து விட்டாலும், இப்போது கூண்டில்; உண்மையை ஒத்துக்கொண்டு, அதற்கு பின் ஜகா வாங்கின அமைச்சர்பிரான்; பிணப்பரிசோதனை செய்யப்படவில்லை; ஆவணங்களும் காணாமல் போயின.

    இத்தகைய கூத்துக்களுக்கு மரணம் எப்போது சம்பவிக்கும்? I don’t care what Modi or Yogi or Amit says. I don’t care what condolence message President Trump sends or what Anbumani has to say. Words are dead, to my mind. We want positive deeds from the people also.
    -x-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://images.indianexpress.com/2017/08/gorakhpur-children-759.jpg

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 96

    தேசிய அகழாய்வு அருங்காட்சியகம் , ஏதன்சு, கிரேக்கம்.

    முனைவர் சுபாஷிணி

    கிரேக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் அதிர்வுகள் அதன் பழமையின் பெருமையைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இன்றைய கிரேக்கமும் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைப் போற்றும், அதன் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் தான் உள்ளன. கிரேக்கத்தின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளுமே அகழ்வாராய்ச்சி நடத்தினால் தோண்டத் தோண்ட புராதனச் சான்றுகள் கிடைக்கும் வகையில் தான் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் வழியாகத் தான் வரலாற்றுப் பழமை சொல்லும் சான்றுகளைத் தேட வேண்டும் என்ற வரையறை இன்றி நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த நாடு தான் கிரேக்கம். அதில் குறிப்பாகச் சொல்வதென்றால் கிரேக்கத்தின் தலைநகரமாக விளங்கும் ஏதன்ஸ் நகரைக் குறிப்பிட வேண்டும். இதில் முதன்மையாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது அக்ரோபோலிஸ். ஒரு தனி கட்டிடம் அல்லது ஊர் என்றில்லாது, ஒரு சிறு நகரமே தொல்லியல் அகழாய்வுச் சிறப்பு பெற்ற உலகின் மிக முக்கிய வரலாற்றுப் பகுதியாக கருதப்படுகின்றது . அக்ரோபோலிஸ் வகை கட்டிட கட்டுமான அமைப்பைச் சார்ந்து கட்டப்படாத உலக நாடுகளின் கட்டிடங்கள் மிகக் குறைவே எனலாம். அதிலும் குறிப்பாக, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் ஏனைய அனைத்து நாடுகளின் கட்டிட அமைப்பு பாணி பெரும்பாலும் அக்ரோபோலிஸ் வகை அமைப்பாக இருப்பதே இதற்குச் சான்று.

    அக்ரபோலிஸ் போன்றே அகோரா, அசுப்ரோசாலிகொ, ப்ரவுரன், கிரேட்ட, டெலொச், டெல்ஃபி, டிமினி, எப்பிடவுரஸ் ​டொடோனா, ​ மாரத்தோன், ஒலிம்பியா போன்ற அகழாய்வு நகரங்களையும் நாம் குறிப்பிடலாம். நிலத்துக்கு மேல் உள்ள சான்றுகளும், நிலத்துக்கு அடியில் அகழ்ந்து தோண்டி கண்டெடுத்த சான்றுகளும் சொல்லும் வரலாற்றினை மேலும் வளப்படுத்தும் வகையில் கிரேக்கத்தின் கடற்கரையோர அகழாய்வுகளும் தீவுகளில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழாய்வுகளும் புதிய வரலாற்றுச் சான்றுகளை வழங்கியவாறு இருக்கின்றன.

    2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏதன்ஸ் நகருக்கு சில நாட்கள் பயணம் சென்றிருந்தேன். இந்தப் பயணத்தின் போது ஏதன்ஸ் நகரைச் சுற்றிலுமுள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பார்வையிடுவதிலும் அங்குள்ள சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்த்து அங்கு ஆய்வுகளைச் செய்வதாகவும் எனது நாட்கள் கடந்தன. அந்தப் பயணத்தில் நான் சென்று வந்த அருங்காட்சியகங்களில் ஒன்று ஏதன்ஸ் தேசிய அருங்காட்சியகம்.

    as1

    19ம் நூற்றாண்டு வாக்கில் ஏதன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளைச் சேகரித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. ஆயினும் பின்னர் ஏதன்ஸ் நகருக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் கிரேக்கத்தின் மிகப் பெரிய அருங்காட்சியகம் என்ற சிறப்பு பெற்ற அருங்காட்சியகம் இது என்பதோடு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இது என அறியப்படுகின்றது. 11,000க்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் போது இது எவ்வளவு பெரிய ஒரு அருங்காட்சியகம் என்பதை ஓரளவு வாசிப்போரால் ஊகிக்க முடியுமல்லவா?

    1866ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. எலனி டொசொடா என்பவர் வழங்கிய நிலத்தில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் கட்டப்பட்டது. இங்குள்ள சேகரிப்புக்களை நான்கு பெரும் பகுப்புக்களாகப் பிரித்து விடலாம்.
    வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய நாகரிகத்தின் தொல்லியல் சான்றுகள் – கி.மு 6000 லிருந்து கி.மு. 1050 வரையிலான தொல்லியல் சான்றுகளின் சேகரிப்புத் தொகுப்புக்கள்.

    சிற்பத் தொகுதி – கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 5 வரையிலான சிற்பக் கலை வடிவங்களின் சேகரிப்புக்கள்.

    குடுவைகளும் பானைகளும் – பண்டைய கிரேக்க நாகரிகத்தின் சான்றாகத் திகழும் பானை வடிவங்களின் தொகுப்பு. இந்தப் பானை வடிவங்களின் மேல் கீறப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களின் வரலாற்றுச் செய்திகளைத் தருகின்ற ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த சேகரிப்பில் இவற்றில் பெரும்பாலானவை கி.மு 11ம் நூற்றாண்டு தொடங்கி ரோமானிய பேரரசின் காலம் வரையிலான சேகரிப்புக்களே.
    இரும்புக்கால சேகரிப்புக்கள் – வெவ்வேறு வகையான சிற்பங்கள், சிறிய கைவினைப் பொருட்களின் வடிவங்கள் ஆகியவற்றின் சேகரிப்புக்கள்.

    இவை தவிர உலக நாகரிகங்களில் புகழ்பெற்ற பழம்பெருமை கொண்ட எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் சேகரிப்புக்களுடன் சைப்ரஸ் தீவின் சேகரிப்புக்களும் இடம்பெறுகின்றன.

    இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் ஏராளம். ஒவ்வொன்றுமே தனித்துவம் பெற்றவையே என்றாலும் வரலாற்றுப் புகழ் மிக்க சில அரும்பொருட்களை மட்டும் ஓரளவு விளக்குவது அவசியம் எனக் கருதுகிறேன்.

    as2

    இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் முதலில் நுழைந்ததும் நம்மை வரவேற்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்து தொல்பொருட்களின் சேகரிப்பு. அங்கு மிக நேர்த்தியாக முதலில் நம் பார்வையில் தென்படுவது “Thinker” சிற்பம். கி.மு. 4500லிருந்து கி.மு. 3300 பழமையானது என அறியப்படுகின்றது இந்தச் சிற்பம். சிந்தனையில் ஒரு மனிதன் ஆழ்ந்திருப்பது போல இதன் வடிவம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் சிந்திக்கும் மனிதனின் சிற்பம் என்பது கிரேக்கத்தினை உருவகப்படுத்தும் மிகச் சிறந்த ஒரு சிற்பம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது. உலக சிந்தனையாளர்கள் வரிசையில் நீங்கா இடம்பெற்ற சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரின் சிற்பங்கள் ஏறக்குறைய இவ்வகையில் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் நாம் தொடர்புப்படுத்திக் காணலாம். ஐரோப்பாவின் பெரும் நகரங்களில் ஆங்காங்கே உள்ள சிற்பங்களில் சிந்திக்கும் மனிதனின் வடிவம் செம்பிலும் கருங்கல்லிலும் சற்றே வேறு வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த வடிவமே இதுவரை கண்டெடுக்கப்பட்ட சிந்திக்கும் மனிதனின் ஆரம்பக்கால மிகப் பழமையான சிற்ப வடிவமாக அறியப்படுகின்றது.

    as3
    “The Nurse” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் சற்றே நுணுக்கமானது. இச்சிற்பத்தில் தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட வகையில் இது அமைந்துள்ளது. கி.மு.4800 லிருந்து கி.மு.4500 ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட சிற்பம் என இதனை வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஒரு பெண் ஒரு குழந்தையை மிகுந்த வாஞ்சையுடன் அணைத்துப் பாதுகாப்பது போல அமைக்கப்பட்ட சிற்பம் இது. நாற்காலி பயன்பாடு என்பது இக்கால கட்டத்தில் ஏதன்ஸ் பகுதியில் இருந்தது என்பதற்குச் சான்றாகவும் இச்சிற்பம் இருக்கின்றது.

    as4
    டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ நாவலைப் படித்தவர்களோ அல்லது அதன் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தவர்களோ Death Mask என்பதைப் பற்றி அறிந்திருக்கலாம். கி.பி. 14ம் நூற்றாண்டு வாக்கில் ப்ளேக் நோயினால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததை குறியீடாகக் காட்டும் இன்ஃபெர்னோவின் இறப்பு முகமூடி. அது மெழுகால் செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் மைசேனியன் நாகரிகத்து மக்களால் செய்யப்பட்ட Death Mask ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த முகமூடியோ முழுதும் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி. கி.மு.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி என இது அறியப்படுகின்றது. தாடியுடன் கூடிய ஒரு மனிதனின் முகமாக இது அமைந்துள்ளது. காதுப் பகுதியில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இறந்து போல ஒரு அரச குலத்தவர் அல்லது பிரபுவின் முகத்தின் மீது வைத்து மூடப்பட்ட வகையில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. இன்று இந்தத் தங்க முகமூடி ஆண்டுகள் பல கழிந்தாலும், தான் அழியாமல் ஏதன்ஸ் அகழாய்வு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஒவ்வொரு அரும்பொருட்களையும் பற்றி விளக்கிக் கொண்டே செல்லலாம். மனிதர்கள் இறந்தவுடன் அவர்களது உடலைப் பானைக்குள் வைத்து அதனைப் புதைக்கும் முதுமக்கள் தாழி எனப்படும் பானைகள் இந்த அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவை மட்டுமன்றி அக்ரபோலிஸ், ஒலிம்பியா போன்ற மிகப்பெரிய தொல்லியல் அகழ்வாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமானச் சான்றுகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    as5
    இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூலகமும் இருக்கின்றது. 25,000க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. பெரும்பாலானவை அகழ்வாராய்ச்சி தொடர்பானவை. சில நூல்கள் 17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை 19ம், 20ம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்லியல் துறை சார்ந்த நூல்களே.

    பணடைய கிரேக்கத்த்க்கும் தமிழகத்துக்கும் நீண்ட நெடிஅ கடல்வழித் தொடர்புகள் இருந்தன. கிரேக்கத்திலிருந்து வணிகர்களும் பண்டைய தமிழகத்திலுரிந்து வணிகர்களும் இரு நாடுகளிலும் வணிகம் செய்தனர் என்பதை மறந்து விடலாகாது. இதனைக் குறிக்கும் வகையிலான குறியீடுகளைக் கொண்ட பானைகளும் சிற்பங்களும் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அந்த சிந்தனையோடு காணும் போது தமிழக வரலாற்றாய்வாளர்கள் இந்த அருங்காட்சியகம் சென்றும் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வது மிகப் பயணளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • அவள் நிற்பதை நோக்கினேன்

     unnamed

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    பதினேழு வயதுப் பாவை அவள்,

    புரியுதா நான் சொல்வது !

    ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு !

    எப்படி வேறொ ருத்தி யோடு

    நடனம் ஆடுவேன்,

    அங்கவள் நிற்பதைக் காணும் போது ?

    இப்போ தவள் பார்ப்ப தென்னை,

    நானும் பார்ப்ப தவளை !

    கண்டதும் காத லுற்றேன்,

    மற்றவ னோடவள் சேர்ந்தினி

    நடனம் புரிவாளா ?

    அங்கவள் நடனம் ஆடும் போது, அடடா

    பொங்கி எழுமென் இதயம்,

    பூரித் தோடும் அறை நெடுவே ! அவள்

    கரத்தை என் கரம் பற்றி,

    இரவு பூராவும் நடனம் ஆடினோம்,

    ஒருவரை ஒருவர்

    இறுகக் கட்டிக் கொண்டு;

    காதல் கொண்டேன், நானவள் மீது

    காலம் கடத்தாது !

    வேறொ ருத்தி யோடு இனிநான்  

    ஆடு வேனோ நடனம் ?

     

    Share
  • நன்றியுணர்ச்சி

    (எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    கோடியைக் கொடுத்து நிற்போம்

    கொடைதனில் சிறந்து நிற்போம்

    வாடிய வாட்டம் காணில்

    மனமெலாம் இரங்கி நிற்போம்

    கூடிய மட்டும் நல்லாய்

    குணமுடன் நடந்தே நிற்போம்

    ஆருமே சொல்ல மாட்டார்

    அதன் பெயர் நன்றியாகும் !

     

    பிள்ளையின் பின்னால் நின்றாலும்

    பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்

    கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்

    கருணையுடன் கடமைகளைச்  செய்தாலும்

    உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்

    ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்

    நல்லவரே எனும்நினைப்பும் வாராதே

    நன்றியுணர்வு என்பதுவுமே   மலராதே !

     

    நாடுமொழி இனம்காத்த பெரியவர்கள்

    நலம்துறந்து நலிந்துநின்ற மூத்தோர்கள்

    வாழ்வெல்லாம் பிறருக்காய் உழைத்தவர்கள்

    வதைபட்டு அடியுண்ட தியாகிகள்

    நோயுண்டார் தனைப்பார்க்கும் நல்மனத்தார்

    நொருங்குண்டார் தனைத்தேற்றும் பெருமனத்தார்

    வாழ்நாளில் காணாத ஒன்றென்றால்

    வாராத நன்றியுணர் வொன்றேயாம் !

     

    பிள்ளைகளைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள்

    பேணிநின்று வளர்திடுவார் பெரும்பொறுப்பாய்

    இல்லையெனச் சொல்லாது கொடுத்திடுவார்

    எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள்

    அள்ளவள்ள   நீரூறி   வருமெனவே

    அவர்கனவு கண்டுநிற்கும் வேளைதனில்

    உள்ளமதை ஒருபக்கம் வைத்திடுவார்

    ஒருநாளும் நன்றிதனை உரைக்கமாட்டார் !

     

    எமைப்படைத்த   இறைவனுக்கு நன்றிசொல்வோம்

    எமையீன்ற பெற்றவர்க்கும் நன்றிசொல்வோம்

    எழுத்தறிவை ஊட்டியெம்மை உயர்த்திவிட்ட

    எங்குருவர் யாவர்க்கும் நன்றிசொல்வோம்

    உதவிநிற்கும் கரங்களுக்கும் நன்றிசொல்வோம்

    உடனுறையும் நட்பினுக்கும் நன்றிசொல்வோம்

    உணர்வில்லா மனிதர்களாய் வாழுவோரே

    நன்றியெனும் உணர்ச்சியினை நசுக்கிவிட்டார் !

     

     

    Share
  • மனைவி அமைவதெல்லாம்!

     ரா.பார்த்தசாரதி

     

    இளைஞனே !   மனைவியை தேர்ந்தெடுப்பதில்  எச்சரிக்கையாய் இரு

    அவசரத்தில் கல்யாணம் பண்ணி  சாவாசத்தில் சங்கடப்படாமல் இரு

    புற அழகைப் பார்க்கும்போது உடலும், மனமும இச்சை கொள்ளாமல் இரு.

    பார்த்தாலே கவர்ந்து இழுக்கும் அழகைக் கண்டு மயங்காமல்  இரு.

     

    பூரித்து நிற்கும் சரீரத்தில் உன் பார்வை லயித்துவிடாமல் கவனமாய் இரு

    எந்த பெண்ணை பார்த்தாலும், சரியான கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பு

    ஆத்ம பூர்வமாய், பார்க்கும் பார்வை உனது எண்ணத்தில் தோன்றட்டும்

    காதல், அன்பு  என்பது ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே !

     

    பெண் பேசும் போது, கனிவு, மரியாதை தெரிந்தவளா என எண்ணிப் பாரு

    அகங்கார பேச்சு, கட்டளை இடும் தோரணைகளை நினைத்துப் பாரு

    படித்தும் கர்வம் கொள்ளாமல், ஆடம்பரம்  இல்லாமல் இருப்பதை பாரு

    உன்  வார்த்தைக்கும், பேச்சுக்கும் மதிப்பு அளிப்பவளா என எண்ணிப் பாரு!

     

    அழகும், ஆடம்பரமும், நிலையற்றது, குணம் ஒன்றே மதிப்பளிக்கும்

    பெண்ணின் பார்வை ஆணை நோக்கும்போது அச்சம்,நாணம் தோன்றும்

    காலப்போக்கில் ஆண், பெண் வேலைக்கு செல்வதால் இவை மாறும்

    ஆடவனின் அழகு அதிர்ச்சி தந்தாலும், தன் குல இயல்புடன் நோக்கவேண்டும்

     

    மனைவி கணவனின் சினத்தை தனிப்பவளாக இருக்க வேண்டும்

    கோபத்தை எண்ணெய் ஊற்றி பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும்

    கணவன் அறிவாளியானாலும்,கெட்ட மனைவியால் வாழ்க்கை பாழ்படும்

    மனைவி அறிவாளியாக இருந்தால், மூடனும் அறிவாளியாக ஆவான் !

     

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே

    கணவன் பெருமை அடைவதெல்லாம் மனைவி வந்த நேரமே

    மனைவி உணவு அளிப்பதில் தாயாக இருக்கவேண்டும்

    மனைவி மந்திரியாகவும்,கட்டிலில் கணிகையாகவும் இருக்க வேண்டும்

     

    கணவன் என்றாலே கண் + அவன்  என்பதாகும்

    அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்

    மனைவி, கணவன் இடையே   ஊடல், கூடல் இருக்கும்

    ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வாழ்க்கை இனிக்கும்!

     

     

    Share
  • மழை நீர் போல..!

    பெருவை பார்த்தசாரதி

     

    ஞாலத்தே பெறும்ஞானமும் சிந்திக்கும் திறனும்..

    ……….தானாகவந்து உன்னிடத்தில் சேர்ந்திடாது தம்பி.!

    காலத்தே பெய்யும் மழைநீர் போல..யெக்

    ……….கலையுமெதுவும் இயல்பாய் நம்மிடத்தே வாராது.!

    காலமாற்ற மென்பதெல்லாமே நம்கையில் தான்..

    ……….கனவுகள் நனவாவதும் நம்செய்கை யினால்தான்.!

    பலமான சிந்தனையும் எழுத்தும் பாருலகிலுன்..

    ……….பிறந்தஊர் பெருமை பாடவும் கைகொடுக்கும்.!

     

    கொஞ்சம் மழைநீர் பூமியில் விழுந்தாலேபோதும்..

    ……….நஞ்சைபுஞ்சை நிலமெலாம் வளம் கொழிக்கும்.!

    பஞ்சம் பட்டினியால் பரிதவிப்போர் ஆருமிலை..

    ……….நான்கு திங்கள் மழைநீரின் கொடையருளாலே.!

    அஞ்சிட வேண்டா ஆருமிங்கே..எங்களூர்..

    ……….அயலாருக் கடைக்கலம் கொடுப்பதற் கஞ்சாது.!

    பஞ்சுக்கிடங்கும் பருத்தி அரிசி ஆலையோடு..

    ……….பஞ்ச அருவியின் பெருமைபுகழை நீரறிவீர்.!

     

    குயிலாடும் மரம்செடி கொடியினை வருடியே..

    ……….குழலோசை போலவே ஒலியெழுப்பி வரும்.!

    மயிலாடும் உயர்மலைப் பாறைதனில் எழுந்தே..

    ……….மணம்பரப்பி வயல்வெளியில் துள்ளியோடும்.!

    ஒயிலாக மழைநீர்போலத் தவழ்ந்து வந்துமனம்..

    ……….ஒன்றிச் செயல்படவும் வைக்குமது.!அதிகாலைத்

    துயிலெழ வைக்குமந்த மலையருவியின் சாரலது..

    ……….தழுவிடும் பாறைக்கு மட்டுமேயது சொந்தமாகும்.!

     

    செழிப்பான சோலைகள் சூழ்ந்த எம்மூரைச்..

    ……….சிறப்புடனே கண்டுகளிக்க அயலார் வருவர்.!

    வழிமுழுதும் நிழல்தரும் அடர்ந்த மரமுண்டதில்..

    ……….விழும் நிழலில் விலங்கினங்கள் இளைப்பாரும்.!

    பொழிகின்ற மழைநீர் போலேகாண்பர் உள்ளத்துள்..

    ……….பொங்கு மின்பத்தாலே ஆடிப்பாடவும் தோன்றும்.!

    விழிகளிலே ஆனந்தம் தாண்டவ மாடுவதால்..

    ……….வாழியவென்றே எம்மூரை எவரும் வாழ்த்துவர்.!

     

    =========================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::12-08-2017

    Share
  • பறவை மோதிய தடம்?

    இல.பிரகாசம்

     
    ஆகாயத் தாமரைகள்
    அலைகளோடு
    வேரூன்றி வாழப் பழகிக் கொண்டன
    போலும்!

    இரட்டைத் துடுப்புகளுக்கு
    இனிய வரவுகளை காட்டுகின்றன
    அப்போதும் அலைகள்
    முன்னோக்கிச் செல்கின்றன!
    ஏரியில் தனியனாய் நான்!

    “நான்” புறவெளி
    சிந்தை அலைகளின் மீது!
    ஒரு பறவை தன் சிறகுகளால்
    அலையை மோதிய தடம எங்கே?

    Share
  • திருப்பாவையில் அர்த்தபஞ்சக ஞானம்

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை: 

    அன்ன வயல் புதுவையாம், திருவில்லிப்புத்தூரின்கண் அவதரித்து, அரங்கநகராள்வாருக்குப் பூமாலையுடன், பாமாலையும் சூட்டிச் சிறந்தவர், ஆண்டாள் நாச்சியார். அவர்,  சீவான்மாக்களை விண்ணேற்ற, பூமிப்பிராட்டியின் அம்சமென, மண்ணில் உதித்தவர்; பாடித் தந்த சொல்மாலையால் அருள்மணம் பரப்பி, அரங்கநகரானைத் தனது பக்திவலையில் அகப்படுத்திக்கொண்டவர்; அவர் அருளிச்செய்த, ‘திருப்பாவை’ப் பாசுரத் தொகுதியானது, நம்மைப் பிறவியாகிய பெருவலையிலிருந்து மீட்டருளவல்லது; ‘அர்த்தபஞ்சக ஞானம்’ என்னும் மதிநலம் விளங்கச்செய்வது; நிறைவுற அருள்நெறி காட்டி, ஆன்ம ஈடேற்றத்துக்கு வகைசெய்வது; அவ்வகையில், இறைநிலையும், உயிர்நிலையும், அருள்வகையும், அருள்வழியும், அருள்வகைக்குரிய தடையுமாகிய ஐம்பொருள் அறிவும், திருப்பாவையில் வலியுறுத்தப்பெறுகின்ற வகையினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அர்த்தபஞ்சக ஞானம்:

    சீவான்மாக்களாகிய நாம், பெருமாளாகிய பரமான்மாவை என்றும் மறவாது அடிமை பூண்டிருப்பதையே உண்மைஇயல்பாகக் கொள்ள வேண்டியவர்கள். பரமான்மாவும், யாதொரு நியதியும் இன்றி,  நம்மைக் காத்தருள்வதயே தமது இயல்பாகக் கொண்டவர். ஆயினும், நாம் அஞ்ஞானச் சூழலில்பட்டு, பரமான்மாவுக்கு  மட்டுமே அடிமைப்பட்டிருத்தலாகிய சேஷத்துவத்தை மறக்கின்றோம்; அவ் அறியாமையினால் வினைவழிப்பட்டு, பிறவித்துன்பத்தில் உழல்கின்றோம். இத்துன்பத்தினின்றும் ஈடேற்றவே இறைவனும் நமக்குப் பிறப்புகளைத் தந்தருள்கின்றார். அப்பிறப்புகள், இறைவனை மேன்மேலும் அறிதற்கும், அவரது திருவடியை மறவாமல் பணிதற்கும் வாய்ப்பாக அமைந்தால், பிறவிச்சுழலிலிருந்து நாம் கடைத்தேறலாம். மாறாக, இறைவனை மறந்து, தற்சுதந்திரத்தால் செருக்கித் திரிதலும், அதனால், பிறப்பின் பயன் பாழாதலும், பிறப்பின் பெருவாயில் நீள்தலுமே ஓயாது நிகழ்கின்றன.

    இவ்அவலத்தைக் குறித்த அறிவுறுநிலையே, சீவான்மாக்களுக்குத் தம்மையும், தம்மின் மேலான இறைவனையும், இறைவனிடத்தில் அடிமைபூணுதலின் இன்றியமையாமையையும், அடிமைத்திறத்துக்குரிய வழிகளையும், அவ்வழிமுறைக்குரிய தடைகளையும் அறிவுறுத்தும். திருப்பாவைப் பாசுரங்கள், இவ்ஐம்பொருள்கள் குறித்தும் விளக்குகின்ற, அர்த்தபஞ்சகப் புதையலாகத் திகழ்கின்றன.

    இறைவனின் இயல்பு: ‘நாராயணனே பறைதருவான்’:

      பாவைநோன்பினை வலியுறுத்துவதாகிய திருப்பாவையின் முதலாம் பாசுரத்தில் பாவைநோன்புக்கான பயனை, நாராயணனே தந்தருள்வான் என்று ஆண்டாள் நாச்சியார் அறுதியிட்டு உறுதியாக அறிவுறுத்துகிறார். பரமான்மாவாகிய பெருமாள், தானே எவர்க்கும் தனி முதலாக விளங்குபவர்; ‘ஏகமூர்த்தி’ என்று இப்பெருநிலையினை ஆழ்வார்கள் ஏற்றிப்போற்றுவர். பரமான்மா, இப்பெருநிலையில், ‘ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ்’ ஆகிய அறுவகைக் குணங்களும் நிறைந்த தனிமுதலாக விளங்குபவர்.

    இவர்தம் ஆணைவழியே, சங்கர்ஷணனும், பிரதியும்னனும், அநிருத்தனும், மும்மூர்த்திகளாக இயங்கவல்லவர்கள். ஆயினும், பெருமாளிடத்தில் விளங்குகின்ற அறுவகைக் குணநிறைவு, மும்மூர்த்திகளுக்கு அமைவதில்லை. அவரவரும் தமது தொழில் நிலைக்குரிய குணங்களை மட்டுமே பெற்றிருப்பர்.  மும்மூர்த்திகளும் பெற்றுள்ள திருக்குணங்கள் பெருமாளால் வழங்கப்பட்டவையும், அவர்கள் மூவரும், பெருமாளின் ஆணைவழியே செயல்புரிபவர்கள் என்பதும் தத்துவவிளக்கம். எனவேதான், ஆண்டாள்நாச்சியார் நம்மைப் பரமான்மாவாகிய  பெருமாளிடத்தில் நேரிடையாகச் சரண்புகுத்துகிறார். அந்நோக்கில், பெருமாளின் பரத்துவத்தை நமக்கு உறுதிபட அறிவுறுத்துபவராக, ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்று பாடியருளியுள்ளார்.

    ஆன்மாவின் இயல்பு: அறியாமைத் துயில் நீக்கம் 

    திருவரங்கக் கலம்பகம், சீவான்மாக்களின் அறியாமையாகிய இயல்பினைச் சுட்டுகின்றது. ‘புலன்கள் சிற்றறிவைக் காட்ட, அதன்வழியே நாளும் சிறுசெயல்கள் செய்து வாழ்கின்ற சீவனே!’, ‘உனது உண்மைஇயல்பை நீ அறிவாயோ?’. ‘நீ ஐம்பெரும் பூதங்களும் அல்லை; சிற்றின்பச் சுவை கூட்டுகின்ற ஐம்பொறிகளும் அல்லை; அவற்றின் வழியான சிற்றறிவும் அல்லை; உனக்கெனத் தற்சுதந்திரமும் இல்லை; இதனை நீ அறிதல்வேண்டும்’; ‘திருமகளை மார்பில் தாங்கிப் பரமபதத்தில் நிலைக்கின்றவனும், வாமனனாகி வந்து மாவலிக்கு அருளியவனுமாகிய திருஅரங்கனுக்கு என்றும் அடிமையாக உள்ளவன் நீ!. இதனை உணர்தலே அனைத்துலகிலும் சிறந்த தவமாகும்’ என்பது அப்பாடலின் கருத்தாகும். இவ்வாறு பெருமாளுக்கு ஆட்பட்டு இன்புறவேண்டிய ஆன்மநிலையினை ஆண்டாள்நாச்சியார்’ ‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற ஆறாம் பாசுரம் முதலாக, ‘எல்லே இளங்கிளியே’ என்ற பதினைந்தாவது பாசுரம் ஈறாக அருளிச் செய்கின்றார்.

    ‘பெருமாளே எளிவந்த கருணையுடன் கண்ணபெருமானாக ஆயர்ப்பாடியில் இரங்கியருளியபடியால், அவனைப்பணிந்து இன்புறுவோம்’ என்று ஆண்டாள்நாச்சியார் , ஆயர்க்குலத்துத் தோழியர்க்கு அறிவுறுத்துகின்றார். அதற்கென்று, தோழியரைத் துயிலுணர்த்துதல் என்னும் நிலையானது, ஆன்மாவின் சிற்றறிவுச் சிறுமைகளை ஆசாரியநிலையிலிருந்து சுட்டி, அச்சிறுமைகள் நீங்க, அருள்வெள்ளத்தில் மூழ்கி எழச்செய்தல் என்னும் பக்திநிலையினைக் குறிப்பதாகும். மேலும், இப்பத்துப் பாசுரங்கள், ‘யோகத்துயில் கொண்ட தோழியை, வெளியே இருந்து தோழியர் எழுப்புதல்’ போன்று அமைந்துள்ளன. விடமுண்டவர்க்கு, அவ்விடம் உடலின் தன்மைக்கேற்ப விளைவினைத் தரும். சிலர் மயக்கமுறுவர்; சிலர், அந்நிலையினும் மாறுபட்டதாகித் துடிதுடிப்பர். அதுபோன்றே, தன்னிலை மறந்து பெருமாளை மட்டுமே அனுபவித்தலாகிய அடிமைத்திறமும் ஆயர்குலப் பெண்களிடத்தில் வேறுவேறாக அமைந்ததனை இத்திருப்பாடல்கள் சுட்டுகின்றன எனலாம்.

    சீவான்மாக்கள் அனைத்தையும் ஆள்பவராகிய பெருமாள், நம்மைக் காப்பதையே தன்னியல்பாகக் கொண்டவர். ஆதலால், பெருமாள், நாம் வேண்டுவனவற்றைத் தந்து காலம் தாழ்த்துகின்றநிலையிலும், நாம் அவரையே பணிபவர்களாக, அவரது இருப்பிடத்தைச் சென்றுசேர்ந்து, பணிந்து அருள்பெறுவோம்’ என்ற உபாயஞானமும் இப்பாசுரங்களில் வலியுறுத்தப்பெற்றுள்ளன.

    ஆன்மாவுக்குரிய பயன்கள்: 

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களே நாம் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகும். அறமாவது, சொல்லாலும், செயலாலும் நிலைமாறாமை. ‘பெருமாளே, நமக்கு அருளவல்லவர்!’ என்னும் நிலையிலிருந்து என்றும் மாறாமையே, பக்திநிலைக்குரிய அறமாகும். அவ்வகையில், பகவானுக்குரிய அறமாவது, பெருமாளது வாய்மொழிகளாலேயே உறுதிபட மொழியப்பட்டதாக ஆண்டாள்நாச்சியார் தெரிவிக்கின்றார். ஆயர்குலத் தோழிகளுடன் நந்தகோபரது வளமனையினை அடைந்த நாச்சியார் அங்கு, திருமாளிகையின் திருவாயிலைத் திறந்தருள வேண்டுமென வாயில்காப்போரை வேண்டுகின்றநிலையில் தமதுரையாக வெளிப்படுத்துகின்றார்.  ‘ஆயர் சிறுமிகளாகிய எமக்கு, திருவருளைக் குறைவின்றித் தந்தருள்வதாகக் கண்ணபிரான், எம்மிடத்தில் நேற்றே உறுதியளித்தார்; அவரைக் கண்டு திருவருளைப் பெறுவதற்கு வந்துள்ளோம்!; அதனால், வாயில் காப்பவரே! மாளிகையின் திருக்கதவினைத் திறந்தருள்க! என்று வேண்டுகிறார். இதன்வழியே,  ‘திருவருளே ஆன்மா அடையத்தக்க பெரும்பயனாகும்’ என்பதும், திருவருளைப் பெறுவதற்கு, ‘பெருமாளை என்றும் மறவாமல் பணிவதாகிய பக்திஅறமே கருவியாகும்’ என்பதும்,  அப் பேரறிவுநிலையே,  பொருள், இன்பம், வீடு முதலாகிய பிற உறுதிப்பொருள்களுக்கும் வழிவகுக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

    திருவருளை அடையும் வகை: 

    சரணாகதியாகிய பணிவே சீவான்மாக்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரந்தருள்கிறது. நிலைமாறாத அப்பக்தித்திறத்துக்கு, ஆசாரியரே நம்மை வழிநடத்தவல்லவர். அவரே, பெருமாளிடத்திலான சரணாகதியில் சோதனைகளையும் சாதனைகளாகக் கண்டு தெளிகின்ற பக்குவத்தைத் தந்தருள்கின்றார். திருப்பாவையின்  ‘ஆழிமழைக்கண்ணா’ என்று தொடங்குகின்ற பாசுரத்தில், மழையை இறைவனது திருவருளாகவும், மழைக்கு நிலைக்களமாகிய மேகத்தை ஆசாரியராகவும், மேகம், மழைநீரைப் பொழிவதற்கு மூலமாகிய கடலை இறைவனாகவும் உருவகிக்கக் காணலாம். அவ்வகையில், திருவருள் பொழிவில் நாம் இன்புற ஆண்டாள் நாச்சியாரையே ஆசாரியராகக் கொண்டு உய்யலாம்.

    ஆசாரிய அபிமானம், நமக்குக் காட்டியருள்கின்ற சரணாகதியில் என்றும் நிலைத்திருப்பதற்கு, அடியார் இணக்கமே சிறந்த கருவியாகும். எனவே, அடியார்கட்குத் தொண்டு செய்தலாகிய பேற்றினையே ஆய்ச்சியர்கள் பெருமாளிடத்தில் வேண்டுகின்றனர்.

    ‘என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைக் கொள்வான்’ என்றமைந்த ஆயர்குலப்பெண்களின்  வேண்டுதலில்,  ‘சேவகம்’ என்பது, என்றும் மாறாமல் அடியவர்க்குத் தொண்டுசெய்கின்ற அடிமைத்திறத்தைக் குறிக்கிறது. பெருமாளின் அன்பர்களாகிய அடியவர்களிடத்தில் அன்புகாட்டுதலே சிறந்த அறமாகையால், அத்தொண்டுநெறியினை ஆண்டாள்நாச்சியார் மேலும் வலியுறுத்துபவராக, ‘திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்வோம்’ என்று பாடியருளியுள்ளார்.

    பணிவையும், தொண்டுநெறியினையும் கருவியாகக் கொண்டு செயல்படுகின்ற ஆயர்குலப் பெண்கள், ‘நந்தகோபரையும், யசோதையையும், பலதேவரையும் துயிலுணர்த்துகின்றனர். அதன்பின்பு, கண்ணபிரானது பள்ளியறை முன்பு நின்று, திருக்கதவம் தாள் திறந்தருள நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர். ‘அகலகில்லேன் இறையுமென்று, பெருமாளின் திருமார்பினை நீங்காத தேவியார், புருஷகாரமாகச் செயல்பட்டு, உயிர்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரக்கச் செய்பவர். பெருமாளை அழகாலும், ஆன்மாக்களை அறிவாலும் திருத்தவல்ல அவரது அணுகுமுறையே ‘புருஷகாரம்’ என்று போற்றப்பெறும்.

    பெருமாள்,  உயிர்கட்குக் கருணை செய்தலையே தமக்குரிய இயல்பாகக் கொண்டவராயினும், அவர் நொடிப்பொழுதும் அடியாரிடத்தில் பாராமுகமாக இருத்தலைப் பிராட்டி தாங்குவதில்லை. தம்மடியார்க்கு வேண்டுவனவற்றைக் குறைவின்றி வழங்கத் தாமும் ஒரு கருவியாவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    பெற்ற தந்தை, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றக் கூடியவரே. ஆயினும், தாயுள்ளமே அத்தேவைகளை உரியநேரத்தில், உரியவகையில், உரியவாறு பிள்ளைகளிடத்தில் கொண்டுசேர்க்கத் தீராத துடிப்புகொண்டு, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறது. அத்தகைய பிராட்டியின் தாயுள்ளத்தாலேயே, பெருமாளிடத்திலிருந்து நாம் இடையறாத திருவருளைப் பெற்றின்புறுகின்றோம். அவ்வகையில், புருஷகாரமாக விளங்கி, கண்ணபிரானின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக வேண்டும் என்றும், கண்ணபிரான் உடனே துயிலெழுவதற்கு நப்பின்னைப் பிராட்டி அருளவேண்டும் என்றும்  வேண்டுகின்றனர்.  எனவே, ‘பள்ளியறையின் திருக்கதவத்தினை விரைவில் திறந்தருள்க!’ என ஆயர்குலச் சிறுமியர்,  நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர்.

    ஆய்ச்சியர், கண்ணபிரானிடத்தில், ‘தாங்கள் துயிலெழுந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும்’ என இறைஞ்சுகின்றனர். ‘நாங்கள் நோன்பு நோற்பதற்கு, வெண்சங்கும், பறையும், பல்லாண்டு இசைப்போரும், மங்கலவிளக்குகளும், கொடியும், விதானமும் தந்தருள வேண்டும்’ எனக் கண்ணபிரானிடத்தில் வேண்டுகின்றனர். கண்ணபிரான் அவற்றைக் குறைவின்றி அருளினால், ‘ஐயமிடுதல், பிச்சையிடுதல் முதலானவற்றை உள்ளடக்கிய தொண்டுநெறியில் நோன்பும் இனிதே நிறைவுறும்’ என வேண்டுகின்றனர். நோன்பின் நிறைவில் அம்மகிழ்ச்சியினைக் கொண்டாடுவதற்கென, சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாத கடகம் முதலான அணிகளையும், பட்டாடையையும் பெற்று மகிழ்வோம்; அத்துடன், நெய்கலந்த பாற்சோறினைக் கூடியிருந்து உண்டு மகிழ்வோம்’ என்கின்றனர்.

    இங்குச் சுட்டப்பெறுகின்ற அணிகலன்கள், உடலழகுக்குப் பயன்படுவன அன்று; உள்ளத்தைப் பொலிவுறச்செய்கின்ற பக்தியினை அவை வளரச்செய்வன. கைகளை அலங்கரிக்கின்ற  ‘சூடகம்’ என்பது, பெருமாளைத் தவறாமல் கைகள் குவித்து வணங்குதலைக் குறிக்கும். தோள்களை அழகுபடுத்துகின்ற ‘தோள்வளைகள்’ என்பவை, ஆசாரியனால் அடியவனாக ஆட்கொள்ளப்பெறுவதன் அடையாளமாக, சங்கும் சக்கரமும் பொறிக்கப்பெறுதலைக் குறிக்கும். ‘தோடு’, ‘செவிப்பூ’ என்பன, ஆசாரியனிடமிருந்து பெறுவதாகிய திருமந்திர உபதேசங்களைக் குறிக்கும். காலணியாகிய  ‘பாடகம்’ என்பது, கால்களால் திவ்யதேசங்கள்தோறும் நடந்துசென்று, பெருமாளின் அர்ச்சைநிலைகளைக் கண்ணாரக் கண்டு தொழுகின்ற பக்தி அணுகுமுறைகளைக் குறிக்கும்.

    இறைநெறியில் ஆன்மாவுக்குத் தடையாவன: 

    இறைவனைப் பற்றுதலென்பது, நம்முயற்சியாக அன்றி, அவனருளாலே அனைத்துவகைப் பிறப்புகளுக்கும் அருளப்பெறுவது. இத் திருவருள் உறவினை ஆண்டாள் நாச்சியார், ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்கஒழியாது’ என்று திருப்பாவையில் சாற்றியுள்ளார். ஆயினும், சீவான்மாக்களாகிய நாம், அவ் உயர்வினை உணராது, உலகியலில் நாட்டம்கொண்டு, பிறந்த பிறப்பின் பயனை உணர்வதில்லை. உடலாலும், மனத்தாலும், செயலாலும் தீவினைகள் பல புரிகின்றோம். அதன்வழியே, துன்பப் பிறப்புகளுக்கு வாயில் அமைக்கின்றோம். இவ்வாறு திருவருளுறவுக்குத் தடையானவற்றை நீக்கியுய்ய ஆண்டாள்நாச்சியார் பாவைநோன்பின் வழி ஆற்றுப்படுத்துகின்றார்.

    தம் தோழியருடன் மேற்கொள்வதாகிய பாவைநோன்பில், தீக்குறளைச் சென்று ஓதாமை, செய்யாதன செய்யாமை,  ‘நான்’; ‘எனது’ என்ற தன்முனைப்பை வளர்க்கின்ற செய்கைகளைச் செய்யாமை எனக் கீழானவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகின்றார்.  சீர்மல்கிய ஆயர்க்குலச் சிறுமிகளுக்கு, ‘தொண்டினாலேயே இறைவனை அடையஇயலும்’ என்பதனை வலியுறுத்துகின்றார்.  ‘பெருமாள் அருளிய உலகஇன்பங்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் அவரைப் பணிவதனால், நமது சிற்றின்பஆவல், அவரையே பெற்றின்புறுவதாகிய பேரின்பத்தைத் தந்தருளும்’ என்கின்றார்.

    ‘நமது அறிவால் அவரைப் பணிகின்றோம்’ என்பதல்லாமல்,  ‘அவனருளால் அவரைப் பணிகின்றோம்’ என்னும் சரணாகதியில் உறுதிபடநிலைக்கச் செய்கின்றார். ‘கானகத்தில், பசுக்களை மேய்க்கின்ற ஆயர்குலச் சிறுமியராகிய நாங்கள் சிற்றறிவுடையவர்களே! ஆயினும், பக்திமேலீட்டினால் உமது திருப்பெயர்களை நாங்கள் அறிந்தவாறு சொல்லிப் பணிந்துள்ளோம்!’. ‘எமது குறைகளையும் குணமாகக் கொண்டருள்க!’ எனத் தமது தற்சிறுமையினை வெளியிட்டு ஆயர்குலச் சிறுமியர்கள் பெருமாளிடத்தில் சரண்புகுவதாகப் பாடியுள்ளார். மேலும், ‘மேற்கண்ட நன்னிலைகளுக்குத் தடையாகவுள்ள உலகியல் சிறுமைகளிலிருந்து, சிற்றுயிர்களாகிய நம்மை நீக்கியருளவேண்டும்’ என்றும் பணிகின்றார். அதற்கென, ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ எனப் பெருமாளிடத்தில் வேண்டுகின்றார். இவ்வாறு, ‘உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் உயர்தூய்மை உடையவர்களாக, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், நமது தீவினைகள் அனைத்தும், தீயினில் பட்ட தூசாக அழியும்’ என்கின்றார். அத்தூய்மை நிலையினில் எப்பொழுதும் நிலைகொள்வதற்குக் கருவியாக,  ‘அடியார் இணக்கத்தை’ வலியுறுத்துகின்றார். ‘தம்மைமறந்து, அடியவர்க்காக மட்டுமே சிந்திக்கின்ற தொண்டுநெறியினால்,  நம்மிடையே அன்புநெறி சிறக்கும்’;  அவ் உயர்மனப்பாங்கு, நமது உள்ளத்தாமரையில் பெருமாளை நிலைப்பெறச் செய்யும்’ என்பது திருப்பாவை காட்டுகின்ற பக்திநெறியாகும்.

    முடிவுரை:  

    மார்கழி நீராடுதல்’ என்பது, ஆன்மாக்கள், திருவருள்வெள்ளத்தில் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதனைக் குறிக்கும். ஆற்றில் இறங்கிநிற்போன், தனது கைகளில் அகப்படுவதனைப் பாதுகாப்பிற்காகப் பற்றுதல் இயற்கை. அதுபோல, ஆழம் காணஇயலாத பக்திக்கடலில், நாம் பற்றி உய்கின்ற புணையாகப் பெருமாள், திருப்பாவையினை அருளியுள்ளார். தீவினைகளை நீக்கியருளவல்ல மாயனாகிய பெருமாளின் பரத்துவமும், தற்சுதந்திரமின்றி, அவனுக்கே அடிமைபூணுதலாகிய ஆன்ம இயல்பும், சிற்றுயிர்களாகிய நமக்கு,  திருவருளே  உற்ற பயனென்பதும், அடியவருடன் கூடியிருந்து அவர்க்குத் தொண்டுசெய்தலே திருவருள்நெறி என்பதும், உடல், உள்ள, செயல் சிறுமைகளே, திருவருள் நெறிக்குத் தடையாவன என்பதும் திருப்பாவை உணர்த்துகின்ற அர்த்தபஞ்சக ஞானமாகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(245)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். கடந்தவாரம் மடல் வரைய முடியாத ஒரு சூழ்நிலை. நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்காக கனடா வரைசென்றிருந்த நான் அங்கிருந்து திரும்பாத நிலையில் மடல் வரையும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தேன். இப்போது நான் வரையும் இந்த மடல் கனடாவிலிருந்து திரும்பி இங்கிலாந்திலிருந்து வரையும் மடலாகும்.

    வாழ்க்கையில் சில சில சந்தர்ப்பங்கள்
    ஒரேயொருமுறைதான் பலருக்குக் கிட்டுகிறது. சில சமயங்களில் பற்பல காரணங்களினால் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடும் நிலையேற்படுகிறது. தவறவிட்ட பின்னால் அந்நிகழ்வின் மகத்துவத்தை, அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இழந்து விடுகிறோம். கடந்து போன சாதாரண நாள்களைப் போல் இந்நிகழ்வையும் கடந்து போய்விட்ட ஒரு சாதாரண நிகழ்வென்றே எடுத்துக் கொள்கிறோம்.

    கடந்த ஐந்து வருடங்களின் முன்னால் இதே போன்ற நான் படித்த யாழ் மத்திய கல்லூரியின் எழுபதுகளின் மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்று இதே கனடாவின் ரொராண்டோ மாநகரில் நிகழ்ந்தது. அதற்கும் எனது நண்பர்களின் மூலம் அழைப்பு கிடைக்கப்பெற்ற நான் பல காரணங்களினால் அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது. காலங்கள் கரைய அதுவும் காற்றோடு காற்றாகக் கலந்து போய்விட்டிருந்தது. அந்நிகழ்வினால் தாமடைந்த அளப்பரிய அனுபவங்களை எனது நண்பர்கள் மூலம் அறிந்தாலும் நான் எத்தகைய ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டேன் என்பதின் முழுத்தாக்கத்தையும் நான் அறிந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே கல்விபயின்ற பாடசாலையின் மீது இவ்வளவு ஈர்ப்பா என்று எண்ணும் என் சில நண்பர்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டு வருடங்களும் எனக்கு வாழ்வின் இனிய இருபது வருடங்களின் அனுபவத்தினைக் கொடுத்தது என்பதுவே உண்மை. அது எனது பள்ளிப்பருவத்தின் ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அப்பொற்காலத்தில் நான் பழியறிந்து, பார்த்துப் பேசிய தோழர்களின் ஞாபகங்கள் இன்றும் என்னுள்ளத்தில் ஈரப்பசையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.

    என் வாழ்வினில் நான் என் சகோதரனைப் போல, சகோதரனைவிட நேசத்தோடு பழகிய எனது உற்ற நண்பன் வாழ்வது கனடா நகரிலே என்பது எனது இந்த விஜயத்தின் மற்றொரு மகிழ்ச்சியாகும். அதுதவிர கனடாவில் வாழும் எனது மூத்த சகோதரன் ஓர் பேரனைப் பெற்று பாட்டனாகிய நல்ல நிகழ்வும் நான் கனடா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. லண்டனில் வாழும் என் குடும்ப அங்கத்தினர் சார்பில் பேரனைப் பார்த்த முதல் அங்கத்தினன் எனும் பெருமையையும் எனக்கு ஈட்டிக் கொடுத்தது என்பதும் இவ்விஜயத்தின் குரிப்பிடக்கூடிய அம்சங்களில் ஒன்றாகும். நிகழ்வுகள் ஆரம்பமாவது ஜூலை மாதம் 29ஆம் திகதி என்ற போதும் பத்து நாள்களுக்கு முன்னதாகவே நான் கனடா சென்றிறங்கி விட்டேன். நிகழ்வுகள் ஆரம்பத்தின் முன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பத்து நாள்கள் அவகாசம் நான் பார்க்க வேண்டிய எனது முக்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கான கால இடைவெளியைக் கொடுத்தது. எனது தாய்வழிச் சொந்தங்களே கன்டாவில் அதிகமாக உள்ளனர். அவர்களை, அதுவும் மூத்தோர்களைச் சந்திப்பதையே முக்கியமான கடமையாகக் கொண்ட எனக்கு எனது உற்ற நண்பனின் உதவியோடு என்றோ எப்போதோ லண்டனில் ஏதோ என்னாலான சிறிய உதவியைச் செய்த நண்பரொருவர் ஓடோடி வந்து உதவியது வாழ்வின் உண்மையான உறவுகளின் உன்னதமான யதார்த்த நிலைகளைப் படம் போட்டுக்காட்டியது.

    sakthi

    இந்த ஒன்றுகூடலின் உண்மையான் நோக்கம் எழுபதுகளில் யாழ் மத்தியக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று அகிலம் முழுவதும் பரவிக் கிடப்போரை ஒன்றிணைத்து அக்கால பசுமையான நினைவுகளை மீண்டும் உள்ளத்தில் மலரச் செய்து தொலைந்து போன கணங்களை சிலநாள்களுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதே. இவ்வற்புத நிகழ்வுகளுக்கான மேடைகளை அமைத்து, இத்தகைய ஓர் அரிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் நான்கே நான்கு பேர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? இவர்களின் பின்னால் நின்று பலர் தார்மீக ஆதரவை நல்கியிருந்தாலும் இவர்களின் இந்த மகத்தான சேவையும் இச்சேவையைப் புரிவதற்கு இவர்கள் பின்னால்நின்று இவர்களை இயக்கிய இவர்களின் வாழ்க்கைதுணைகளும், அவர்தம் குடும்ப அங்கத்தினர்களும் ஆற்றிய அளப்பரிய சேவைகளை வெறும் வார்த்தை அலங்காரங்களினால் விவரித்து விட முடியாது. ஆமாம், சிவா, மதி, ரமீஸ், பேரி எனும் இந்த நான்கு அன்பு உள்ளங்களும் இவர்களுக்குப் பக்கதுணையாக நின்று பணியாற்றிய இவர்களின் வாழ்க்கைத்துணைகளும் எம் அனைவருடைய அன்பான நன்றிகளுக்கு உரித்தானவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகிறது.

    சரி, இனி இந்த விழாவிற்கு வருவோம். இவ்வொன்றுகூடலில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் இவ்விழாவினை ஒழுங்கு செய்தோரின் இல்லங்களில் அறிமுக ஒன்றுகூடலுக்கான விருந்துகளில் கலந்து கொண்ட நிகழ்வோடு 29ஆம் திகதி ஆரம்பமாகியது விழா. ஆகா ! சுமார் 43 வருடங்களின் பின்னால் நான் சந்தித்த பழைய நண்பர்களின் தற்போதைய தோற்றம் மாறியிருந்தாலும் மத்தியக் கல்லூரியின் வாசம் அவர்களது மனத்தை விட்டு அகலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகவில்லை.. தொடர்ந்து 30ஆம் திகதி இளையோருக்கான சிறப்பு நிகழ்வு, மற்றும் விடுதி இரவு, கிரிக்கெட் போட்டி என ஒவ்வொரு நாளும் களைகட்டிய நிகழ்வுகளும் அதனோடு நண்பர்களின் ஒன்றுகூடலின் சிறப்புகளும் வெறும் வார்த்தைகளினால் விளக்கக்கூடிய ஒன்றல்ல. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாகக் கச்சேரி இரவு ஆண்கள் பெரும்பான்மையோர் தமிழ்க்கலாசார உடையான வேஷ்டி, சட்டையுடனும், பெண்கள் சேலையுடனும் கலந்துகொண்டு மேடைப்பாடல் நிகழ்ச்சிகளில் பாடிக்களித்த நிகழ்வும்,இதற்காகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு, மேற்கு கலந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் உள்ளத்தைக் குதூகலத்தில் ஆழ்த்தியது. அத்தோடு இந்நிகழ்வுகளை பசுமையான காலநினைவுகளைக்கூட்டும் நண்பர்களும் அமர்ந்து ரசிப்பதென்றால் கேட்கவும் வேண்டுமா?

    அடுத்த முக்கியமான நிகழ்வாக 1000 தீவுகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அனைவரும் ஓரிடத்தில் கூடி இரண்டு சொகுசு பஸ் வண்டிகளில் அக்கப்பற்தளத்தை நோக்கிப் பிரயாணித்தோம். பிரயாணித்தோம் என்றால் சும்மாவா? பஸ்ஸுக்குள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மீண்டும் அப்பதின்ம வயது மாணவர்களாகவே மாறிவிட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! மிகவும் வசதியான ஒரு சீன உணவு விடுதியில் அனைவருக்கும் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதிய விருந்து, மீண்டும் பஸ்ஸிலே பிரயாணித்து அக்கப்பற்தளத்தை அடைந்தோம். அங்குக் கப்பலில் ஏறுவதற்கு முன்னால் இருமணிநேர இடைவெளி அனைவரும் காலாற நடந்தும், அப்பிரதேசத்தின் அழகினை ரசித்தும் இருக்கும்போது , அடடா ஆச்சரியம் தேநீர் தயாரிக்கும் உபகரணங்களையும் அப்பிரயாணத்தில் கொண்டு வந்திருந்த அமைப்பாளர்கள் அனைவருக்கும் யாழ் முறையில் தேநீரும்,பிஸ்கட்டும் கொடுத்து கலக்கி விட்டார்கள் போங்கள்!

    சொகுசுக் கப்பலில் ஏறி உட்கார்ந்தோம். அப்பப்பா !அருமையான பிரயாணம், அற்புதமான ஆங்கிலப் பாடகரின் தொடர்ந்த இசைமழையுடன் கூடிய இராப்போசனம். இப்பிரயாணத்தின் முக்கிய அம்சமே ஆதவன் மேற்கினுள் வீழ்வதைக் காணும் அற்புதக் காட்சி.  இது ஒருபுறமிருக்க நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே கப்பலின் மேற்தளத்தில் நின்று தமக்குள்ளே இசைமழை பொழிந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் வாழ்வினில் ஒரேயொருமுறை கிடைக்கக்கூடிய அற்புதமான அனுபவம் என்றே கூறவேண்டும். அடுத்த நாள் பிரசித்தி பெற்ற பூங்காவில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு. அங்கேயே உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆறுதலாக, அமைதியாக அந்நாளைக் கழித்தார்கள்.

    இவ்விழாக்களின் இறுதி நிகழ்வாக அனைத்துக்கும் மகுடம் சூட்டும் வகையில் நடனத்துடன் கூடிய இராப்போசன வைபவம் பிரசித்தி பெற்ற ஒரு மண்டபத்திலே நிகழ்த்தப்பட்டது.

    யாழ் மத்திய கல்லூரியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது யாழ் மணிக்கூட்டுக் கோபுரமே! யாழ் மத்தியக் கல்லூரியின் சில பிரபல்யமான கிரிக்கெட்வீரர்கள் இக்கோபுரத்தை நோக்கி சிக்சர்களாக விளாசித்தள்ளிய வீரசாகசக் கதைகளும் உண்டு. இவ்விழா அமைப்பாளர்கள் இக்கோபுரத்தைச் கட்டமைப்பாகச் செய்வித்து அதனை இவ்விழா மண்டபத்தின் வரவேற்பு மண்டபத்தில் முக்கிய அடையாளமாக நிறுத்தி வைத்திருந்தமை அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது. அனைவரும் பழைய ஞாபகங்களின் வழிநின்று இம்மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நின்று புகைப்படம் பிடித்துக் கொண்டார்கள். அதுமட்டுமின்று! அக்கால மாணவர்களின் மனத்தில் என்றும் அழியாமல் பதிந்திருப்பது பள்ளியோடு ஒட்டியிருந்த “மணியம் கடை.” அதேபோல ஒரு பெட்டிக்கடையை உருவகித்து அதிலே வாழைப்பழக் குலைகளைத் தொங்கவிட்டது மட்டுமின்றி காலத்தோடு ஓட்டிய சினிமாப் போஸ்டர்களை ஒட்டியிருந்தமை அபாரமான, அற்புதமான திட்டமாகும். இதற்காக இவ்விழாவினை ஒழுங்குசெய்த நால்வரும் எத்தனைதூரம் கடினமாக உழைத்திருப்பார்கள் என்பதைச் சொல்லித்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. மிகவும் ஆடம்பரமாக , அழகாக, அமைதியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவினிலே மத்தியக் கல்லூரி பழைய மாணவர்கள் பங்கேற்று நடித்த சில பாடல் காட்சிகளோடு பிரபல்யமான ஆங்கில நடனக்குழுவினரும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் எம்மனைவருக்கும் அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமாகப்பட்டது எமது அருகிருந்த சகோதர பெண்கள் கல்லூரியான “வேம்படி மகளிர் கல்லூரி” ஆகும். இவர்களது யூனிபார்மாக அவர்களது டை மஞ்சள் கறுப்பு வரிகளைக் கொண்டது. இவ்வமைப்பாளர்கள் இவ்விருந்து வைபவத்தில் பரிமாறும் ஆங்கிலப் பெண்கள் வெள்ளை சார்ட்டுடன் இவ்வேம்படி மகளிர் கல்லூரி டைகளை அணிவிக்கச் செய்திருந்தது அனைத்துக்கும் மகுடம் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    என் வாழ்வின் என்றுமே மறக்க முடியாத இனிமையான ஒரு நிகழ்வினை அனுபவிக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித்தந்த அந்நால்வருக்கும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த அந்நாளைய நட்பினை மீண்டும் எனக்கு நினைவூட்டக் காரணமாயிருந்த அனைத்து நேச உள்ளங்களுக்கும், கனடா நாட்டில் வசிக்கும் பழைய மாணவர்கள் அளித்த நல்வரவேற்புக்கும் இவைகள் அனைவரினது வாழ்க்கைத்துணைகளுக்கும், குடும்ப அங்கத்தினருக்கும் எனது உளம் நிறைந்த, தாழ்மையான, அன்பான நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

    நாலுபேருக்கு நன்றி – அந்த
    நாலுபேருக்கு நன்றி
    நானிலமெங்கும் சிதறி வாழ்ந்த
    நம்மை ஒன்றுகூட்டி
    நெஞ்சில் நிழலாய்ப் பதிந்த
    அந்தநாள் ஞாபகங்களைப்
    பசுமைபூசி மீண்டும் மலர்வித்த
    புதுமைகள் பூட்டி நிகழ்வினைப்
    பெருமைகொள் ஒன்றாய்
    நிகழ்த்திக் காட்டிய அந்த
    நாலுபேருக்கு நன்றி!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    “காலகா லங்களாய் காலடி மேய்கின்ற –
    பாலு பசுவைப் புறந்தள்ளி -நாலுவேதம் –
    வாலாட்டிக் கொஞ்சுகின்ற வாஞ்சையில் மேய்க்கின்ற –
    பாலூட்டும் கண்ணன் பரம் “….கிரேசி மோகன் ….!

    Share
  • “வேர்களும் விழுதுகளும்” (2)

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    “ஈழத்து இலக்கியப் பரப்பு”
    **********************************************

    வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
    (தி. ஞானசேகரன் – பகுதி-II)
    *********************************

    GNANAM - 150

    2004 ஞானம் பொன் மலர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் அவர்களை பிரதம ஆசிரியராகவும், புலோலியூர் க.சதாசிவம் அவர்களை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் கலை இலக்கிய மாத இதழின் 50வது இதழ்.

    பேராசிரியர் சிவத்தம்பியுடனான நேர்காணல் இவ்விதழின் சிறப்பம்சமாக உள்ளது.

    வீ.என்.சந்திரகாந்தி, திக்குவல்லை கமால், யோகேஸ் கணேசலிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

    கவிதைகளில், மாவை வரோதயன், சி.மௌனகுரு, ரூபராணி,
    தவ சஜிதரன், சங்கீதா, இளைய அப்துல்லாஹ், தினகரன் ஆகியோரின் கவிதைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

    இலக்கியக் கட்டுரைகள் ஏழு இடம்பெற்றுள்ளன.

    பேராயர் எஸ்.ஜெபநேசன், கல்வயல் வே.குமாரசுவாமி, வ.இராசையா, துரை மனோகரன், புலோலியூரான், சுதர்சன், செ.யோகராசா ஆகியோரின் இலக்கியக் கட்டுரைகள்
    இவ்விதழை அலங்கரிக்கின்றன.

    2005 தி.ஞானசேகரன் சிறுகதைகள் 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

    2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான
    நாவேந்தன் விருதினைப் பெற்றது.

    2005 கார்த்திகேசு சிவத்தம்பி- இலக்கியமும் வாழ்க்கையும் . இலங்கை ஞானம் சஞ்சிகைக்கு பேராசிரியர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு.

    வேறு நேர்காணல்களில் சொல்லியிராத பல விடயங்களை
    இந்த நேர்காணலிலே பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.

    ஈழத்து நவீன இலக்கியத்துறையின் பிதாமகர்களில் ஒருவராக விளங்கும் பேராசிரியர் கடந்த 50 வருடகாலப் பகுதியில் ஈழத்து இலக்கியப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், எழுச்சிகள், முரண்பாடுகள் என்பவற்றையெல்லாம் அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார்.

    பேராசிரியரின் வாழ்க்கையின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இந்த நேர்காணல் ஓரளவுக்கு அவரது வாழ்க்கைச் சரிதம் போன்றும் அமைந்துள்ளது.

    2005 கொக்கிளாய் மாமி – ஞானம் பரிசுக்கதைகள் 2005தொகுப்பு

    ஞானம் கலை இலக்கியப் பண்ணை ஏற்பாட்டில் 2005ம் ஆண்டுக்கான கலாபூஷணம் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு.

    முல்லைமணி வே.சுப்பிரமணியம்,
    மாதுமை சிவசுப்பிரமணியம்,
    டாக்டர் ச.முருகானந்தன்,
    தம்பு-சிவா,
    புனிதகலா,
    நவஜோதி ஜோகரட்னம்,
    மு.சந்திரகாந்தா,
    த.அஜந்தகுமார்,
    தாட்சாயணி,
    டி.ஜனார்த்தனன்,
    சிவனு மனோகரன்,
    எஸ்.உதயச்செல்வன்
    ஆகிய எழுத்தாளர்களின் பரிசுபெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    எழுத்தாளர் பற்றிய சுருக்கக் குறிப்பும் ஒவ்வொரு கதைக்கு முன்னும் இடம்பெற்றுள்ளது.

    2006 சிறைப்பட்டிருத்தல் – ஞானம் பரிசுக்கதைகள் 2006 தொகுப்பு. ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் ஏற்பாட்டில் புலோலியூர் சதாசிவம் ஞாபகார்த்தப் போட்டியில் 2006ம் ஆண்டுக்கான பரிசினைப்பெற்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு.

    புதிய தலைமுறைப் படைப்பாளிகள் பன்னிருவரின் கதைகள் அடங்கியது.

    புலோலியூர் செ.கந்தசாமி,
    ஏ.கே.குணநாதன்,
    கார்த்திகா பாலசுந்தரம்,
    என்.ஏ.தீரன்,
    கே.எஸ்.சுதாகர்,
    ம.பா.மகாலிங்கம்,
    ஆ.புனிதகலா,
    பிரமிளா செல்வராஜா,
    நவஜோதி ஜோகரட்ணம்,
    பொன்னம்பலம் சுதாகர்,
    தர்மராஜா அஜந்தகுமார்,
    சிவனு மனோகரன்
    ஆகியோரின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    2007 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பவளவிழா மலர் நவீன இலக்கியச் செல்நெறியில் ஆழத்தடம் பதித்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் 75ஆவது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பவள விழா மலர்.

    பேராசிரியரின் பன்முகத் திறமைகளை பல்வேறு தளங்களில் விமர்சிக்கும் கட்டுரைகள் இம்மலரை நிறைத்துள்ளன.

    சி.மௌனகுரு,
    அ.சண்முகதாஸ்,
    எஸ்.சந்திரசேகரன்,
    பெ.மாதையன்,
    நாகராச ஐயர் சுப்பிரமணியன்,
    செ.யோகராசா,
    க.இரகுபரன்,
    அ.முகம்மது சமீம்,
    வே.விமலராஜா,
    தெணியான்,
    செங்கை ஆழியான்,
    அ.இரவி,
    எஸ்.மேசேஸ்,
    அந்தனி ஜீவா,
    எஸ்.எச்.எம்.ஜெமீல்,
    ஆகியோரின் கட்டுரைகளும் ஞானம் நேர்காணலின் சில பகுதிகளும் இம்மலரில் மணம் பரப்புகின்றன.

    நூலின் இறுதியில் பேராசிரியரின் வாழ்வும் பணியும் பற்றிய சுருக்கக் குறிப்பும் காணப்படுகின்றது.

    2007 போர்க்காலக் கதைகள்.

    அரை நூற்றாண்டுக்கால போர்க்கால வரலாற்றைச் சித்திரிக்கும் 20 கதைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.

    போரின் பல்வேறு வகைப்பட்ட தாக்கங்களை வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்த படைப்பாளிகளின் பன்முகப்பட்ட பார்வையில் தொகுப்பாசிரியர் தேர்ந்து பதிவு செய்திருக்கின்றார்.

    டிலான் ஜெயந்தன்,
    ராணி ஸ்ரீதரன்,
    தி.ஞானசேகரன்,
    புலோலியூர் செ.கந்தசாமி,
    ஓ.கே.குணநாதன்,
    தாமரைச் செல்வி,
    சுதர்ம மகாராஜன்,
    குமுதினி கலையழகன்,
    முல்லையூரான்,
    யோகேஸ்வரி சிவப்பிரகாசம்,
    வதிரி சி.இராஜேஸ்கண்ணன்,
    செங்கை ஆழியான்,
    ச.முருகானந்தன்,
    முல்லைமணி,
    தாட்சாயணி,
    கே.விஜயன்,
    முத்து,
    நீரங்க விக்ரமசிங்க,
    லோ.சுதர்மன்,
    சந்திரகாந்தா முருகானந்தன்
    ஆகிய இருபது படைப்பாளிகளின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    2008 ஞானம்- 100 ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ் .

    06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 100ஆவது இதழ் ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

    தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 100ஆவது இதழில்,

    42 இலக்கியக் கட்டுரைகளும்,
    33 கவிதைகளும்,
    ஒரு நாடகமும்,
    16 சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

    கௌதமன், மதிபுஷ்பா ஆகியோரின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன.

    2009 கருமுகில் தாண்டும் நிலவு .

    கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் 2007ம் ஆண்டு பரிசுபெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

    கருமுகில் தாண்டும் நிலவு (கார்த்திகாயினி சுபேஸ்),
    ஒடுக்கம் (கார்த்திகா பாலசுந்தரம்),
    கற்றுக்கொள்வதற்கு (கே.எஸ்.சுதாகர்),
    நான் சாகமாட்டேன் (ச.முருகானந்தன்),
    மீளாமகன் (தர்மராஜா அஜந்தகுமார்),
    பாடமாத்தி (சிவனு மனோகரன்),
    கல்லடிப் பாலம் (தீரன்-ஆர்.எம்.நௌசாத்),
    அறம்செய்ய (ஆவூரான்),
    தவம் கலைகிறது (கேணிப்பித்தன் ச.அருளானந்தம்),
    தேடல் (கயிலை-தம்பையா கயிலாயர்),
    ஒரு நாள் (பிரமிளா பார்த்திபன்),
    கனவு கனவாயே (நிரஞ்சனி சபாரத்தினம்)
    ஆகிய பன்னிரு பரிசுச் சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

    2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு:

    கட்டுரைக் கோவை (இணைப்பதிப்பாசிரியர்)

    2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவின் பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

    இதில் 3ஆவது கட்டுரையாக என்.செல்வராஜா எழுதிய “ஈழத்தமிழரின் நூல்களை ஆவணப்படுத்துவதில்
    நூல்தேட்டத்தின் பங்களிப்பும் அது எதிர்கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பிலான விரிவான ஆய்வும்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    2012 நகுலநாதம் (துணைவியாருடன் இணந்து வெளியிட்டது)
    24.3.2012 அன்று வெளியிடப்பெற்ற கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கும்பாபிஷேக மலர்.

    பாயிரவியல்,
    வாழ்த்தியல்,
    வரலாற்றியல்,
    கிரியாவியல்,
    மெய்யியல்,
    இசையியல்,
    மீட்பியல்,
    பதிவியல்,
    (எழுத்துரு/ஒளியுரு) ஆகிய எட்டுப் பிரிவுகளின் கீழ் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய பாரிய மலர் இதுவாகும்.

    2012 ஞானம் 150 ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்.

    தமிழிஇலக்கியப் பரப்பில் இது ஒரு புதிய இலக்கியப்பதிவு!!
    இதுவரை இத்தகைய “போர்க்கால இலக்கியம்” என்ற சொற்றொடரே ஞானம் இதழில் தான் அறிமுகமாகிறது.

    06.06.2000 அன்று தனது முதலாவது இதழை
    வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 150ஆவது இதழ் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக
    600 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

    150ஆவது இதழில், ஈழத்தின் போர்க்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பதிவுசெய்யும் கருத்தாடல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன இடம்பெற்றுள்ளன.

    சிவா கௌதமனின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன.

    இந்நூலின் இறுதியில் என்.செல்வராஜா எழுதிய
    ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும் போராட்ட இலக்கியங்களும் என்ற சிறப்புக் கட்டுரை (பக்.553-600) இடம்பெற்றுள்ளது.

    2013 வட இந்திய பயண அனுபவங்கள்.

    ஞானம் பதிப்பகத்தின் 27ஆவது வெளியீடாகவும்,
    3வது பயண இலக்கியமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது.

    கங்காஸ்நானம், திரிவேணி சங்கம ஸ்நானம், கேதார்நாத், பத்ரிநாத், காசி விசவநாதர் தரிசனம் ஆகியவை பற்றி அவர் விபரிக்கின்றபோது
    நாமும் ஸ்நானம் செய்து, தரிசனம்காணும்  பேறு பெறும் வகையில் அவர் விபரித்துச் செல்கின்றார்.

    மற்றையது ஒரு யாத்திரிகன் என்ற தளத்தைத் தாண்டி ஒரு படைப்பாளியின் மனோபாவத்துடன் அவர் இவ்விலக்கியத்தைப் படைத்துள்ளார்.

    புராண இதிகாச சம்பவங்களையும் பொருத்தமுற விபரித்துச் செல்லும் அவர், செல்லும் வழி, தூரம், பிரயாண ஊடகம்,
    தங்குமிட வசதி, முதலிய விடயங்களையும் ஆங்காங்கே பதிவுசெய்கிறார்.

    இப்பயண இலக்கியம் டில்லியையும் அதனைச் சூழவுள்ள வரலாற்று முக்கியத்துவமான இடங்களான தாஜ்மஹால்,
    ஜெய்ப்பூர் அரண்மணை, ஆக்ரா கோட்டை, கிருஷ்ணரின் ஜனனபூமியான மதுரா ஆகிய இடங்கள் பற்றியும் அங்கே ஆசிரியரின் அனுபவங்களையும் பதிவு செய்கின்றது.

    2013 ஞானம் – தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலர்.
    ஞானம் இதழின் 159ஆவது இதழ் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுச் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது.

    சபா.ஜெயராசா,
    எஸ்.சிவலிங்கராஜா,
    பேராயர் எஸ்.ஜெபநேசன்,
    சு.சுசீந்திரராஜா,
    சி.தில்லைநாதன்,
    செ.யோகராசா,
    அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்,
    க.இரகுபரன்,
    சந்திரசேகரம் சசீதரன்,
    வசந்தி தயாபரன்,
    ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகளும், வாகரைவாணனின் தமிழுக்கொரு தனிநாயகம்
    என்ற கவிதையும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.

    2013 எனது இலக்கியத் தடம் (1ம் பாகம்)
    ஞானம் பதிப்பகத்தின் 26ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள நூல்.

    ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன் அவர்கள் இந்நூல்வழியாகத்
    தனது இலக்கியப் பயணத்தை படிமுறையாக விளக்கிச் செல்கின்றார்.

    முன்னர் ஜீவநதி இலக்கியச் சஞ்சிகையில் தொடராக இது வெளிவந்தது.

    2013 சாகித்தியரத்னா செங்கை ஆழியான் நேர்காணல்
    இலங்கை அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா விருதினைப் பெற்ற ஈழத்துப் படைப்பிலக்கியவாதியான செங்கை ஆழியான் க.குணராஜாவுடன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் ஒரு விரிவான நேர்காணலை மேற்கொண்டு ஞானம் சஞ்சிகையில் அதனைத் தொடராகப் பிரசுரித்திருந்தார்.

    அதன் நூல்வடிவம் இதுவாகும்.
    46 நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுதிகளையும்,
    8 பல்சுவைக் கட்டுரைகளையும் பல்வேறு தொகுப்பு நூல்களையும் இதுவரை தந்தவரான செங்கை ஆழியானின் படைப்பிலக்கியப் பணி இன்னமும் தடையின்றித் தொடர்கின்றது.

    இந்நேர்காணல் வழியாக அவரது இலக்கியத்தேடலின் ஆழமும் அகலமும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

    வேர்களும் விழுதுகளும் இன்னும் வளரும்….

    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    16/08/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திருமால் கண்ணனாய் பிறந்து கோகுலத்தில் தாய்மடியில் தவழ்வதைக் கண்டு அம்பலவாணர் அம்பலமாய்(PUBLICகா) ஆசையில் காப்பிட(பிள்ளைக்கு காப்பு கட்ட) வந்தாராம்….கண்ணனுக்கு ஏக வருத்தம்….தன்னை பார்பதற்காக தங்கையை மதுரையில் தனியாக விட்டதோடல்லாமல், அன்னை யசோதை கண்களை யோக மாயையால் கஷ்டப்பட்டு கட்டி, எடுத்த அவதாரத்தை அம்பலவாணர் இப்படி அம்பலப் படுத்தி விட்டாரே ஆசையில்…. ஈஸா ‘’ஈஸனோடாயினும் ஆசை அறுமின்’’ ஓய்… என்பதாக வெண்பா…. (கருத்து -டோங்க்ரே மஹராஜ் பாகவதம்)

    170816 - Rudrageetham -lr
    170816 – Rudrageetham -lr

    ’’மாப்பிள்ளை டோயே!(பழைய சினிமா பாட்டு) மதுரைமீ னாளைவிட்(டு)-
    ஆப்புள்ளைக்(கு)(ஆயர்தம் பிள்ளை) இப்படியா அம்பலமாய்(PUBLICகா) -காப்பிடுவீர்!:
    -அப்பன் குதிருள்ளே இப்பத்தான் போனாராம்-
    சுப்பன்போல்(அந்த பையன் பேர் சுப்பன் என்று வச்சுப்போம்) செய்தீர் சிவம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (22)

    க.பாலசுப்பிரமணியன்

    அன்பின் ஆதிக்கத்தில் ஆண்டவன் அருள்

    திருமூலர்-1-3

    ஒரு மனிதனுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு சிந்தனை –“ இறைவனின் தரிசனமும் இறையுணர்ந்த ஆனந்த அனுபவமும் இந்த உடலும் உயிரும் இருக்கும் வரை கிடைக்குமா?  இந்த மானுட உடலும் அதைக்கட்டிப்போடும் ஐம்பொறிகளும் இறையனுபவத்திற்கு உதவுமா அல்லது அதற்குத் தடங்கலாக அமையுமா? இந்த உடல் மறைந்த பின்பு கிடைக்கப்போகும் இறையனுபவத்திற்கு  இந்த வாழ்க்கை ஒரு முன்னுரையா?  – இது போன்ற பல ஐயங்களால் நாம் கட்டிப்போடப்பட்டு எது உண்மை எது பொய் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றோம். இதற்க்கெல்லாம் விடை கொடுப்பது போன்று அமைந்துள்ளது திருமூலரின் கீழ்க்கண்ட பாடல்

    ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய் முன்னஞ்

    சேனாய்வா னோங்கித் திருவுருவம் அண்டத்

    தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்

    தான் முழு தண்டமு மாகி நின்றானே

    ஊனிலும் உறைபவன் உயிரிலும் நிறைபவன்.. காணுமிடமெல்லாம் காணும் பொருளிலெல்லாம் கண்ணுக்கு குளிர்வாய் காணக் கிடைப்பவன்.. அப்படி இந்த உடலிலும் உயிரிலும் உறைபவனிடம்  நம்மால் அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா?…

    இவ்வாறு அவனே உடலாகவும் அவனே உயிராகவும் அவனே உயிர் மூச்சாகவும் இருக்கும்பொழுது அவனிருக்கும் இந்த உடலையும் உயிரையும் நாம் நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டாமா?  உயிர் மூச்சுள்ள வரையிலும் இவை அனைத்தையும் அவனுக்குச் சேவை செய்யவும் அவன் பெயரைச் சொல்லவும் உபயோகப் படுத்த வேண்டாமா?

    ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இவை அனைத்தையும் வீணடித்து மீண்டும் அவன் பாதங்களில் சென்று “இறைவா என்னைக் காப்பாற்று, எனக்கு அருள் செய்” என்றல்லவா வேண்டுகின்றோம்?  இந்தத் துயர் நம் மனத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? இதை விளக்குவது போல் அமைந்துள்ளது பட்டினத்தாரின் இந்தப் பாடல் :

    பொல்லா தவநெறி நில்லா தவனைம் புலன்கடமை

    வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய்  யாடியவர்பாற்

    செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்

    பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.

    இந்தத் துயரிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியதென்ன? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவனிடம் அன்பு செலுத்தி உலகத்தில் காணும் இடமெல்லாம் அவனே காட்சியாயிருக்க, காணும் பொருளெல்லாம் அவனே மூலமாக இருக்க அத்துணை பொருள்களிலும் அவனைக்கண்டு அதில் அன்பு காட்டுவதே அவனுக்குச் செய்யும் தொண்டாகும். அந்த அன்பே அவனுக்கும் நமக்கும இடையே உள்ள பிணைப்பாகும்

    ஆகவே திருமூலர் அன்பையே சிவமாக்கி, அன்பையே நிறைத் தத்துவமாக்கி காணும் பொருளிலிலெல்லாம் அன்பைப் பொழிவதே இறையுடன் நமக்குள்ள தொடர்பு என்பதை தெளிவாக விளக்குகின்றார்

    அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

    இந்த இணையற்ற இன்பத்தை பெற்ற உள்ள எப்படி இருக்கும்? காணும் காட்சியெல்லாம் அவனாயிருக்க நெஞ்சம் க்ளிப்பினிலே கூத்தாடாதோ?

    அந்த நிலையைக் கண்டதால்தானோ மாணிக்கவாசகர் திருஅம்மானையிலே இன்பக் கிளைப்பில் கூறுகின்றார் :

    சூடுவேன் பூம் கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்

    கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று

    ஊடுவேன் செவ்  வாய்க்கு உருகுவேன் உள் உருகித்

    தேடுவேன் தேத் சிவன் கழலே சிந்திப்பேன்

    வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி

    ஆடுவான் சேவடியை பாடுதும் காண் அம்மானாய்

    அன்பு இல்லாத உள்ளத்தில் இறைவன் எப்படி குடியிருப்பான்? உடலாலும், செல்வத்தாலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் பணி செய்தாலும் அன்பு இல்லாத உள்ளத்தினால் செய்யும் பொழுது என்ன பயன் கிட்டும்? இதை மிகத் தெளிவாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது அப்பரின் இந்த தேவாரப்  பாடல்:

    கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை `

    ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்

    ஓடும் நீரினை ஓட்டைக்கு குடத்துஅட்டி

    மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே

    ஆகவே, அன்புக்கு மட்டும் கட்டுப்படுகின்ற இறைவனின் அருளாட்சியை உள்ளுணர்ந்த வள்ளலாரோ மிக அழகாக அன்பின் சிறப்பையும் அத்துடன் இறைவனின் இணைப்பையும் விளக்கும் வண்ணம் பாடுகின்றார் :

    அன்பெனும் பிடியுள் அகப்படும் மழையே

    அன்பெனும் குடில் புகும் அரசே

    அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே

    அன்பெனும் கரத்து அமர் அமுதே

    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

    அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

    அன்பெனும் அணுவுள் அமைந்த பேர்ஒளியே

    அன்புருவாம் பரமசிவமே !

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், பகவான் அரவிந்தர் பிறந்த தினம்….!
    ——————————————————————————————————————————-

    FullSizeRender
    ”வரவிந்த பூமிக்கு வேதாந்த சிங்கம்
    அரவிந்த தேவா, அடியேன் -பெறவந்தேன்
    தேசிய ஜெண்டா திருநாளில் நாடக
    ஹாஸியப்பூச் செண்டை அருள்”….
    ”திருவள்ளூர் ராமர், திருவல்லிக் கேணி
    கருவறையில் ராயர் கரத்தில், -சிறையுள்ளில்,
    தேவகிக்கு தோன்றி திருஆயர் பாடியில்
    கோவகிக்கும் கண்ணன் களிப்பு’’….

    ’’ஆழ்மனம் கொண்ட அமைதியே ஆண்டவன்:
    பாழ்மன புத்திப் புரவியில் -தாழ்வுற,
    டொக்டொக்டொக் என்று தரையில் உலவாது
    டக்கென்று வானுக்குத் தாவு’’

    ‘’பார்த்தனின் சாரதி, பார்த்தன் பரிதவிக்க,
    கீர்த்தனை செய்தனன் கீதையை, -தீர்த்தம்
    திருவல்லிக் கேணி திகழ்பெரிய தெய்வம்
    கருமல்லிக் கண்ணனே காப்பு”….கிரேசி மோகன்…

    Share