(எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

கோடியைக் கொடுத்து நிற்போம்

கொடைதனில் சிறந்து நிற்போம்

வாடிய வாட்டம் காணில்

மனமெலாம் இரங்கி நிற்போம்

கூடிய மட்டும் நல்லாய்

குணமுடன் நடந்தே நிற்போம்

ஆருமே சொல்ல மாட்டார்

அதன் பெயர் நன்றியாகும் !

 

பிள்ளையின் பின்னால் நின்றாலும்

பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்

கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்

கருணையுடன் கடமைகளைச்  செய்தாலும்

உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்

ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்

நல்லவரே எனும்நினைப்பும் வாராதே

நன்றியுணர்வு என்பதுவுமே   மலராதே !

 

நாடுமொழி இனம்காத்த பெரியவர்கள்

நலம்துறந்து நலிந்துநின்ற மூத்தோர்கள்

வாழ்வெல்லாம் பிறருக்காய் உழைத்தவர்கள்

வதைபட்டு அடியுண்ட தியாகிகள்

நோயுண்டார் தனைப்பார்க்கும் நல்மனத்தார்

நொருங்குண்டார் தனைத்தேற்றும் பெருமனத்தார்

வாழ்நாளில் காணாத ஒன்றென்றால்

வாராத நன்றியுணர் வொன்றேயாம் !

 

பிள்ளைகளைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள்

பேணிநின்று வளர்திடுவார் பெரும்பொறுப்பாய்

இல்லையெனச் சொல்லாது கொடுத்திடுவார்

எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள்

அள்ளவள்ள   நீரூறி   வருமெனவே

அவர்கனவு கண்டுநிற்கும் வேளைதனில்

உள்ளமதை ஒருபக்கம் வைத்திடுவார்

ஒருநாளும் நன்றிதனை உரைக்கமாட்டார் !

 

எமைப்படைத்த   இறைவனுக்கு நன்றிசொல்வோம்

எமையீன்ற பெற்றவர்க்கும் நன்றிசொல்வோம்

எழுத்தறிவை ஊட்டியெம்மை உயர்த்திவிட்ட

எங்குருவர் யாவர்க்கும் நன்றிசொல்வோம்

உதவிநிற்கும் கரங்களுக்கும் நன்றிசொல்வோம்

உடனுறையும் நட்பினுக்கும் நன்றிசொல்வோம்

உணர்வில்லா மனிதர்களாய் வாழுவோரே

நன்றியெனும் உணர்ச்சியினை நசுக்கிவிட்டார் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *