Blog

  • படக்கவிதைப் போட்டி 124-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ladyand sea

    வாரிதியை நோக்கிநிற்கும் காரிகையைக் காண்கின்றோம் திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தில். புகைப்படக்கருவி தந்த காவியமா, கை புனைந்த ஓவியமா என்று ஐயுறும் வண்ணம் திகழ்கின்றது  இப்படம்!

    மனங்கவரும் கடலரசி, தன் எண்ணங்களை அலைகளாக்கி மாந்தர்க்கு வரைகிறாளோ மடல்?

    நீலமும் மஞ்சளும் இணைந்து கோலங் காட்டும் வானின் தோற்றமும் காணக் கவினே!

    கண்கொள்ளாக் காட்சியிதனைத் தம் கவிதைகளில் பதமாய் வார்த்தெடுக்க வருகிறார்கள் கவிஞர் பெருமக்கள்!

    ***

    ”கடலழகு, கடல் தரும் அலையழகு; வானழகு, வான் வரும் நிலவழகு. மண்ணழகு, மண் வந்த அத்தனையும் பேரழகு; இவற்றையெல்லாம் தனித்துநின்று இரசிப்பதுமே ஓரழகு” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    தனிமையின் மகிமை: கடல் அழகு !
    கடல் வரும் அலை அழகு!
    கடல் வாழ் மீன் அழகு!
    கடல் தரும் முத்தழகு!
    வான் அழகு!
    வான் சேர் வண்ணங்கள் அழகு!
    வான் தோன்றும் நிலவு அழகு!
    கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தனி அழகு!
    முகில் அழகு!
    முகில் தரும் மழை அழகு!
    மண் அழகு!
    மண் தந்த அத்தனையும் பேரழகு!
    இத்தனையும் ரசிக்கும் பெண் அழகு!
    ரசிக்க வழி தந்த தனிமை தனி அழகு!
    பிறந்தது தனியாக!
    போவதும் தனியாக!
    தனிமை ஞானம் தரும்!
    தனிமை உனை உணர்த்தும்!
    தனிமை, இனிமை எனும்
    உண்மை, நீ உணர்ந்தால்!
    மன அமைதி, உடனே கை கூடும்!

    ***

    ”விண்ணைப் படைத்தான்; விரிகதிர் மதியொடு விண்மீனும் படைத்தான்; மண்ணைப் படைத்தான்; மண்ணொடு தொடரும் மாமலைகள் படைத்தான்; இவற்றையெல்லாம் கண்டு இரசிக்கும் கண்ணைப் படைத்தான்” என்று இறைவனின் படைப்பாற்றலை வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    இறைவனின் படைப்பாற்றல்..!

    அற்புதக் காட்சியொன்றை கண்டுவிட்டால் அதன்
    ……….அழகைப் படம்பிடித்து மூளைக்கனுப்பும் நம்மனது.!
    கற்பனைத் தேரிலேறி காட்சியோடது ஓடும்போது
    ……….கட்டுக்கடங்கா மகிழ்வும் புத்துணர்ச்சியு மதிலெழும்.!
    சுற்றிலும் அலைபாயும் அம்மனத்தைக் கட்டுப்படுத்த
    ……….சுகமாயங்கே காட்சிதரும்கடலும் மேகமும் நிலவும்.!
    பற்றுமிக்கப் புலவர்களதை பார்த்துவிட்டால் போதும்
    ……….பாட்டோடதைப் பண்ணுடன் பாமாலையாக்கி விடுவர்.!

    விண்ணைப் படைத்தானிறைவன் தொடரும் அதனுடன்
    ……….விரிகதிர் மதியொடு விண்மீனும் மேகமும் படைத்தான்.!
    மண்ணினைப் படைத்தான் மண்ணொடு தொடரும்
    ……….மலைகளும் மூவகை உயிர்களும் படைத்தான்..!
    தண்ணீரைப் படைத்தான் தொடரும் அதனுடன்
    ……….பன்னெடும்நதி கொடுக்கும்மழை கொடுத்ததுடன் புவி..
    மண்டலத்தில் காற்றைப் படைத்தான் அதனால்
    ……….பூங்காற்று தென்றலொடு உயிர்மூச்சைக் கொடுத்தான்.!
    தணலென நெருப்பைப் படைத்தான் அதனால்
    ……….எதையும் இயங்கவைக்கும் எரிசக்தி படைத்தான்.!

    எத்துணையோ நுண்ணுயிரும் மண்ணுயிரும் புவியுலகில்
    ……….இயற்கையாகத் தோன்றவொரு நெறிவகுத்தான் இறைவன்.!
    வித்தாக அவையெல்லாம்….விதையொன்றைப் படைத்தான்
    ……….வியந்துநோக்க எவ்வுயிர்க்கும் கண்களைப் படைத்தான்.!
    அத்தனையும் கண்டுகளித்து அனைத்தையும் பாதுகாக்க
    ……….பஞ்சபூத இயற்கையினைப் படைத்தனைத்தையும் காத்தான்.!
    இத்தனையும் விண்மண் நீர்நெருப்பு காற்றென விரியும்
    ……….இறைவனின் படைப்பாற்றலை யதிசயித்துப் பாடுகிறேன்.!

    ***

    ”கருநிலவுக்கு ஒளியூட்டூம் கதிரோனின்றி இருண்டுவிட்டது மருள்மாலை. ஈதொப்ப, மனைக்கு விளக்காம் மனைவியில்லையேல் மனை பாழ்; ஒளிரும் கதிரோனொத்த கணவனில்லையேல் வாழ்வு பாழ்” என்பது திரு. சி. ஜெயபாரதனின் கருத்து.

    அத்தமனம்!

    கரு நிலவுதான் நாம்
    காண்பது!
    ஒருமுகம் காட்டி நிலவு
    மறுமுகத்தை மறைக்குது!
    கரு நிலவுக்கு ஒளியூட்டும்
    கதிரோ னின்றி
    இருளடைந் துள்ளது
    இனிய மாலை பொழுது!
    கணவன் அத்தமித்த கருவானம்
    ஒளி மங்கி, இருள் மண்டி
    மனம் பொங்கி
    அழுகிறது!
    விடிவு காலம் வருமா?
    மனைக்கு விளக்கு வனிதை!
    மனைவி இல்லாத
    இல்லம் பாலை வனம்!
    ஆயினும்
    கதிரோன் இல்லாத
    தரணி இடுகாடு!

    ***

    படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துள்ள கவிதைகளை அளித்துள்ள கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி வருகின்றது…

    விடியுமா…?

    அலையே அலையே வருவாயே
    அங்கே அவனைக் காண்பாயா?
    சிலையாய் நானும் காத்திருக்கும்
    சேதி நீயும் சொல்வாயே!
    நிலையிலாச் செல்வம் போதுமென்பாய்
    நிம்மதி தரவே வரச்சொல்வாய்!
    கலைநிறை வானம் வெளுத்ததுவே
    காரிகை யெனக்கு விடியாதோ…?!

    தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவியொருத்தி தன் தாபத்தைக் கடலலைகளிடம் வெளிப்படுத்துகிறாள் இக்கவிதையில். நிலையில்லாச் செல்வத்தைத் தேடுவதில் முனைந்தால் இல்லறமாம் நல்லறமும் ஆடவர்க்கு மறந்துபோவதை நம் சங்கப்பாடல்கள் நிரம்பவே பேசுகின்றன. பொருளினும் தலைவனின் அருளே தலைவி என்றும் வேண்டுவது. அக்கருத்து இக்கவிதையில் வெளிப்படக் காண்கின்றேன்.

    நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை மென்மையாய்ப் பகடிசெய்யும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    Share
  • மழைநீர் போல

     

     ரா.பார்த்தசாரதி

     

     

    மழை  வேண்டாத  மக்கள்  உண்டோ !

    மழைநீர்  சேமிக்க  வழியும் உண்டோ !

    மழை வேண்டி யாகமும்,பூஜையும் நடக்கின்றதே!

    ஒரு சிலர் செய்த பாவத்தால் மழை வர தயங்குதே !

     

    மழைநீர்  இன்று மக்கள்  உயிரை காக்கும்  உயிர் நீர்

    மழைநீர் இல்லையெனில் பசும்புல்லையும் காணமுடியாது

    மழைநீர் வெள்ளமாய் உருவெடுத்து பலவற்றை அழிக்கிறது

    மழைநீர் இன்மையால்   பல இடங்கள் வறட்சியாயிருக்கிறது

     

    மழைநீரை  தேக்கி வைக்க திட்டங்களை அரசு செய்யவேண்டும்

    மழைநீர் வீணாவதை தடுக்க முயற்சி  செய்யவேண்டும்

    நதிநீர்  வீணாகி  கடலில் கலப்பதை தடுக்கவேண்டும்

    ஆறுகளையும் குளங்களையும்  தூர் வார  வேண்டும்

     

    மழைநீர் திட்டம் வீடு வரைக்கும் செயல் படுத்தியதே

    வெள்ளம் வரும்போது மழை நீரை சேமிக்க மறந்ததே

    மக்களுக்கு உதவியும், நிவாரணங்களும் அளிக்கப்பட்டதே

    மழைநீர் நிலத்தடியில் சேர்க்காமல் கடலில் கலந்ததே!

     

    மழைநீர்   மக்களுக்கும், விவசாயத்திற்கும் இன்றியமையாததே

    மழைநீரை அணையிலும், நிலத்தடியிலும் சேமிப்பது நல்லதே

    நீரின்றி  அமையாது உலகம் மக்கள் வாழ்க்கையும் சரிவர  நடக்காதே

    பருவ மழை பொய்த்ததாலே   மழைநீர்  தட்டுப்பாடு  ஏற்பட்டதே !

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (125)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20645670_1399832240070971_952874295_n

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு   ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம

    Share
  • தனிமனிதன் ஒழுக்கம்

     

    ரா.பார்த்தசாரதி

     

    நிதி நீச்சலடிப்பதால்,  நீதி அதனை எதிர்த்து நிற்க தவிக்குது

    அதிகாரம் எதையும் செய்ய துணிவதால்,அமைதி அல்லல்படுகிறது

    பழக்க வழக்கங்கள் பாழானதால், தனிமனிதன் ஒழுக்கம் நிலைகுலைந்தது

    காலில் விழுந்தாலே காரியம் முடிகிறது, இதில் மனிதநேயம்   எங்கே?

     

    நீதிநெறிகள் பித்தலாட்டமாய் இருப்பதால் தனிமனிதஒழுக்கம் மறைந்தது

    காந்தி தேசம் என்று சொல்லி,பிராந்தி கடையால் வாந்தி தேசமாயிற்று

    தனிமனிதன் ஒழுக்கம் ஏற்படின், காவலும்,நீதித்துறையும் குறையும்

    தனிமனிதர்கள் சேர்ந்தாலே ஓர் கூட்டுவுறவு அமைப்பு உண்டாகும் !

     

    தனிமனிதன்  ஓட்டுரிமையை அட்சய பாத்திரமாக நினைத்துவிட்டான்

    அதனையே பணத்திற்காக பிச்சையிட்டு, பிச்சைக்காரனாகி விட்டான்

    பணத்தை கொண்டு மக்களை அடிபணியவைத்து அராஜகம் செய்கிறான்

    எதிர்த்து கேட்போரை கட்டப்பஞ்சாயத்தை காட்டி பயமுறுத்துகின்றான் !

     

    தனிமனித ஒழுக்கம்  பணத்தால் சீரழிந்து மக்களை படுகுழியில் தள்ளும்

    ஒன்று கூடி காந்திய வழியில் போராடினால் நமக்கு நன்மை கிடைக்கும்

    ஒன்று கூடி எதிர்த்தால், நியாயமும், தீர்வும் விரைவில்  கிடைக்கும்

    நமது ஆன்மிகமும், பண்பாடும்,தனிமனிதன் ஒழுக்கதை நிலைநாட்டும் !

     

     

     

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 91

    க. பாலசுப்பிரமணியன்

    மொழிசார் நுண்ணறிவு (Linguistic Intelligence)

    education-1-1-1-1

    நுண்ணறிவுகளின் தன்மைகளையும் இயல்புகளையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிசெய்து அதன் விளக்கங்களை அளித்துள்ள அறிவியல் மேதை ஹோவர்ட் கார்ட்னர் மனிதர்களிடம் பரவலாக உள்ள நுண்ணறிவு “மொழிசார் நுண்ணறிவு” (Linguistic Intelligence) என்று கண்டுபிடித்துள்ளார். இதன் ஆங்கில சொல்லாடலுக்கு உகந்த தமிழாக்கம் “மொழியியல் நுண்ணறிவு” என்று எடுத்துக்கொள்ளப்பட்டால் அது சில தவறான கருத்துக்களுக்கு இடம் கொடுக்க வகையுண்டு. ஏனெனில், இந்த வல்லமைக்குத் தேவையானது மொழியறிவும் மொழிசார்ந்த அறிவின் மேலாண்மையே தவிர, ஒருவருக்கு “மொழியியலில்” திறன் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. எனவே இதை நாம் “மொழி சார்” நுண்ணறிவாகவே கருதுவோம்.

    இந்த நுண்ணறிவு ஒரு சாதாரண பாமரனுக்குக் கூட இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. வார்த்தைகளின் கையாடல், அதனைத் திறம்பட உபயோகித்தல், வார்த்தைகளின் மேலாண்மை, வார்த்தைகளின்  பல்வேறு பொருள்களுக்குத் தகுந்தவாறும், இடம் பொருள் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும் அவைகளை உபயோகித்தல், உருவாக்குதல் போன்ற பல திறன்கள் வெளிப்படுகின்றன.

    இந்த நுண்ணறிவைத் திறமையாக உபயோகிப்பவர்களை “Word Smart” மனிதர்கள் என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்தத் திறனில் வல்லமை பெற்றவர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், அரசியல்வாதிகள், மனநல மருத்துவர்கள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்களாக இருக்க அதிகம் வாய்ப்பு உண்டு.

    கவிஞர்கள் வார்த்தைகளைக் கையாளும் பொழுதும் அதன் கருத்துக்களைக் கையாளும் பொழுதும் தங்களுடைய மொழிசார்ந்த நுண்ணறிவின் திறனால் அவைகளுக்கு வலு சேர்ப்பதுமட்டுமின்றி அதற்கு ஒரு புதிய உயிரையும் அளிக்கின்றனர். உதாரணமாக, அனுமன் வாயிலாகக் கம்பன் “கண்டேன் சீதையை” என்று சொல்லுப்பொழுது அந்த சொல்லாடலில் இருக்கும் மேன்மையை நம்மால் காண முடிகின்றது.

    வள்ளுவர்  திருக்குறளில் எழுதிய குறள் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்று சொன்னது வார்த்தை மற்றும் மொழியின் வளமையை அவர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு முன்னுதாரணமாக அமைகின்றது.

    கவிஞர் கண்ணதாசனின் எத்தனையோ பாடல்களில் சொல்லாட்சியின் திறன் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதே போல் ஆயிரக்கணக்கான கவிதைகளில் மொழிசார்ந்த நுண்ணறிவுக்கான எடுத்துக்காட்டுகள் நமக்கு கிடைக்கின்றன.

    இது தமிழ் மொழி மட்டுமின்றி பிற மொழிகளிலும் பல வடிவங்களில் நமக்குத் தென்படுகின்றது. இந்தக் கவிஞர்களில் பலரும் இதற்காகக் கல்லூரிகளிலோ அல்லது பயிற்சி நிலையங்களிலோ பயின்றவரல்லர். எனவே மொழிசார் நுண்ணறிவுக்கும்  ஒரு தனி மனிதனின் கற்றலுக்கும் நேரிடையான நெருக்கமான தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் மொழி கற்றலும், மொழி வல்லமையும், மொழித்திறன்களும் ஒருவரின் மொழிசார் நுண்ணறிவை மேன்மைப்படுத்தவும் வளப்படுத்தவும் பெரிதும் உதவி செய்கின்றன.

    இவர்களைப் போல மேடைப்பேச்சாளர்களுக்கு இந்தத்  திறன்  அதிகமாகத் தேவை படுகின்றது. சொற்களைத் தேர்ந்தெடுத்தல், அவைகளின் பயன்பாடு, அவைகளின் பொருளாதிக்கம், கேட்பவர்களின் மீது  அந்தச் சொற்களின் தாக்கம், சொற்களின் பயன்பாட்டின் பொழுது இருக்கின்ற உணர்வு நிலைகள் ஆகியவை அந்த நுண்ணறிவின் பரிமாணத்தில் சில பகுதிகளாகத் தென்படுகின்றன. அரசியல் மேடைப்பேச்சாளர்கள் பலரும் இந்த நுண்ணறிவுத் திறனில் தேர்வுபெற்று சொற்களால் மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்வதிலும் , தம் மீதும் தங்கள் கொள்கை மற்றும் கட்சிகளின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்தத் திறனை வெகுவாக உபயோகிக்கின்றனர். அதே போன்று பல பயிற்சியாளர்கள் திறன்களை வளர்ப்பதற்கும் சில கோட்பாடுகளின் மீது “நம்பிக்கையை” உருவாக்கவும், மேன்மைப்படுத்தவும் இந்தத் திறனை பயன்படுத்துகின்றனர்.

    வழக்குரைஞர்கள் தங்கள் வழக்குகளுக்கு ஏதுவாக சட்டக் கோட்பாடுகளை வாதங்களால் இணைக்கவும், விளக்கவும், மேற்கோள்கள் காட்டவும் இந்தத் திறனை உபயோகிக்கின்றனர். வியாபாரிகளும்  விற்பனையாளர்களும் விளம்பரங்கள் செய்பவர்களும் மொழியின் நுண்ணறிவை தங்கள் தேவைக்கும் காலத்திற்கும் தகுந்தவாறு நடைமுறைப் படுத்துகின்றனர்.

    பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த நுண்ணறிவை வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம். பொதுவாக மூளை நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களின் கருத்து – கவிதை மற்றும் இசை மூலமாக இந்தத் திறனை வளர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும் என்பதே ஆகும்.  இயல், நாடகம், இலக்கணம் சார்ந்த பயிற்சிகள் அதிகமாக இடது மூளைத்   திறன்களைச் சார்ந்தவைகளாக இருப்பதால் அவைகளைக் காட்டிலும் கவிதை, இசை சார்ந்த கற்றலும் பயிற்சியும் வலது மூளைத் திறன்களையும் அதனைச் சார்ந்த கற்பனை வளத்தை ஆக்கப்பூர்வமாக இயக்கக்கூடிய, படைப்பாற்றல்களை வளர்க்கும் திறன்களையும் கொடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (69)

    நிர்மலா ராகவன்

    பொறுத்துப்போகவேண்டுமா!

    நலம்-4-1

    சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16).

    இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம்.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், `பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, — இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே!

    சுருங்கச் சொன்னால், கல்லான கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, `நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள்.

    ஒரு முதிய மாது, `நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! `மு..’ என்று அவர் திட்டினாருடி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (`கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?)

    `அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள்.

    வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்த நம்பிக்கையோடுதான் பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ?

    ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்!

    கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
    ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல.

    சுகன்யாவின் தாய் இப்படித்தான்.

    கதை

    சுகன்யாவின் தந்தையோ, குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார்.

    அவரைக் கண்டு நொந்துபோய், `எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள்.

    இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, `அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழக் கற்றாள்.

    காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், `பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள்.

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள்.

    `தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன்.

    `நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து.

    `ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன்.

    ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது.

    இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது.

    வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), `நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்!

    உலகில் எட்டு சதவிகிதத்தினர், `அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.

    எதுதான் நல்ல தாம்பத்தியம்?

    மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது.

    குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது.

    ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், `உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, `பெண்ணின் வேலை’, `ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்ளுல் நட்பை வளர்க்கும்.

    ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற பல தன்மைகளும் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும்.

    அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள்.

    இருவரில் ஒருவராவது, `நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார்.

    பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும்.

    தொடருவோம்

    Share
  • தமிழிசைப்பண்கள்

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    **************************************************
    உலகின் முதல் இசை
    தமிழிசையே!!
    ***********************************************
    இசைத்தமிழின் தொன்மை – 75
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    கர்நாடக இசையும் தமிழிசையும்
    *************************************************

    THODAR - 075
    கர்நாடக இசை மற்றும் தமிழிசை ஆகிய இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.

    ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.

    தமிழ்நாட்டு வரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டு முதல் 6ம் நுாற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது.

    தொடர்ந்து 20 ம் நுாற்றாண்டு வரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

    அப்போதும் வடமொழி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

    இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது.

    பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர்.

    நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். பிறகு மராட்டியர் காலகட்டம்.

    இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் கலைகளுக்கு இறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.

    தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான
    அருணாசலக் கவிராயர், 
    முத்துத் தாண்டவர், 
    மாரிமுத்தாப் பிள்ளை 

    ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.

    தியாகராஜர், 
    சியாமா சாஸ்திரிகள், 
    முத்துசாமி தீட்சிதர்

    என்போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றையே மேடைகளில் பாடினார்கள்.

    தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்தது.

    தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடக இசை தமிழிசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர்.

    இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

    தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்களின் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், ‘கருநாடக சங்கீதம்’ எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றது.

    சாரங்க தேவர்
    ********************
    சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 – 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்து தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து வடமொழியில்“சங்கீத ரத்னாகரம்” என்னும் நூலை எழுதினார்.

    இது வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும்.

    தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னரே அந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

    அந்நூலில் சாரங்க தேவர் இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்பதாம் நூற்றாண்டில் மதங்க முனிவர் இயற்றிய “பிருகத தேசி” என்னும் நூலிலும் தமிழ்ப் பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.

    அந்நூலில் உள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது.

    வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்றும் அறியப்படுகின்றது.

    சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.

    இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின.

    சில ராகங்களுக்குச் சாரங்க தேவர் “பாஷா ராகங்கள்”என்று பெயரிட்டுள்ளார்.

    “பாஷா” என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும்.

    இந்துஸ்தானி இசை
    ******************************

    கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது.

    தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின்
    இசையின் வரவால் தனித்துவம் இழந்தது.

    இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது.

    பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை.

    ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசையேயாகும்.

    அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.

    14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய “சங்கீத சுதாகரம்” என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன.

    கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன.

    தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.

    ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன.

    2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

    பார்ப்பனப் புரட்டும் திருட்டும்!
    ******************************************
    தமிழகத்தின் ஊர்ப்பெயர்களையே வடமொழியில்
    கும்பகோணம் (குடமூக்கு),
    வேதாரண்யம் (மறைக்காடு),
    விருத்தாசலம் (பழமலை)

    என்று மாற்றியதைப் போலவே திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களையும்
    வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

    தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாகவே வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

    17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார்.

    இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார்.
    தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் அந்நூலில் எழுதி வைத்துள்ளார்.

    எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார்.

    இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப்பெயர்களையும் பெரும் அளவில் இருட்டடிப்பு செய்துவிட்டார்.

    ஆபிரகாம் பண்டிதர்
    ******************************
    இந்த ஆரிய நாசகார இருட்டடிப்பு குறித்து இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பன்டிதர் தனது கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலில் குறிப்பிடுவது :

    “பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன.

    தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்.

    அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன.

    இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை.

    இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”.

    கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.

    20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் “பரத நாட்டியம்” என்று புதிய பெயரைச் சூட்டி அது நிலை பெற்றுவிட்டது போலவே சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு நிலை நிறுத்தியுள்ளனர்.

    சுமார் 700 ஆன்டுகளுக்கு முன்பு வடமொழியில்  “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர்.

    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    19/08/2017

    Share
  • தாமகோட்சி முதல் நீலத் திமிங்கலங்கள் வரை… (From Tamagotchi to Blue whales – the journey of an emotional disaster).

    க. பாலசுப்பிரமணியன்

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சப்பானில் தயாரித்து குழந்தைகளிடம் பழக்கத்திற்கு விடப்பட்ட “தாமகோட்சி” என்ற ஒரு மின்னணுவால் இயக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பொருளின் தாக்கத்தை பற்றி எழுதியிருந்தேன். ஒரு குழந்தையின் வடிவில் இயக்கப்பட்ட இந்த மின்னணு பொம்மை பள்ளிச் சிறுவர்களிடம் பாசத்தையும் ஒழுங்கையும் குழந்தைகளைப் பேணுவதற்க்கான திறன்களை வளர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த உயிரற்ற மின்னணுக் குழந்தைகளை சிறுவர்கள் உயிருள்ள குழந்தைகள் போல் பேணத் தொடங்குவர். இந்தக் குழந்தைக்குப் பசியெடுக்கும் பொழுது அது ஒரு குரல் (Beep sound)  எழுப்பும்.    உடனே அதன் உரிமையாளர் அதற்கு உணவு கொடுக்கும்வண்ணம் ஒரு இயக்கத்தைச் செய்ய வேண்டும். அதே போல் அந்தக் குழந்தைக்குத் தூக்கம் வரும்பொழுது விளையாடும் எண்ணம் இருக்கும் பொழுதோ அல்லது உடல் நலக்குறைவு ஏற்படும் பொழுதோ அது அதற்கான மாறுபட்ட ஒரு ஒலியை ஏற்படுத்தும். இவ்வாறு ஒவ்வொருமுறை ஒலி வரும்பொழுதும் அதன் உரிமையாளர் அதற்குத் தகுந்த தேவையான ஒரு இயக்கத்தைச் செய்தல் வேண்டும். அவ்வாறு  தவறினால் ஒரு சில முறைகளுக்குப் பின் அந்த உயிரற்ற மெய்நிகர் பொம்மை உயிரிழந்துவிடும்

    இதன் காரணமாக பல பள்ளிச் சிறுவர்கள் இந்த மெய்நிகர் (virtual) பொம்மைகளை தங்கள் பைகளில் வைத்துப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தனர். வகுப்பறைகளில் அந்த “பீப்” ஒலிகள் தொடர்ந்து வந்ததால் ஆசிரியர்களுக்கு பாடங்களை படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதால் இந்த விவகாரம் பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல ..இந்த பொம்மைகள் உயிரிழந்த காரணத்தால் அதன் சொந்தக்காரக் குழந்தைகள் துயரத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு மனநல மருத்துவர்களை அணுகியதாகச் செய்திகள் வந்தன. அது மட்டுமல்ல, தொடர்கதையாக இந்த இறந்த குழந்தைகளை அடக்கம் செய்வதற்கான ஒரு தனி வலைத்தளம் ஏற்படுத்தப்பட்டது.

    இது ஒரு விளையாட்டுப்  பொருளாக இருந்தாலும் குழந்தைகளின் மனநலத்திலும் வாழ்க்கைப் போக்கிலும் இவை ஏற்படுத்திய பெரிய அளவிலான தாக்கங்கள் பற்றி உலக அளவில்  விவாதிக்கப்பட்டது  .தொழில்நுட்பங்களில் வரும் மாற்றங்களால் புதிதாக அறிமுகமாகும் மின்னணு சார்ந்த பல விளையாட்டுப் பொருள்களின் தாக்கங்கள் உலக அளவில் வளரும் குழந்தைகளின் சிந்தனைப் போக்கு, உணர்வு நிலைகள், உறவு முறைகள் மற்றும் சமுதாயாப் பார்வைகள் பற்றி விவாதங்கள் தொடங்கின. ஆனால் வியாபார நோக்கில் இந்த மின்னணுப் பொம்மைகள் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சியும் லாபப்  போக்குகளும் இதன் தாக்கங்களை ஓரங்கட்டி வியாபாரத்தை மட்டும் பெருக்கிக் கொண்டிருந்தன.

    தாமகோட்சியைத் தொடர்ந்து பல மின்னணு விளையாட்டுப் பொருட்கள் குழந்தை உலகில் தங்கள் தோரணங்களைக் கட்டிக்கொண்டிருந்தன. அதன் கருத்துப் பரிமாணங்கள் செயல் பரிமாணங்கள் மாற்றம் கண்டு புதிய உணர்வுநிலைகளையும் சிந்திக்கும் திறன்களையும் அதன் பாதைகளையும் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தன. ஆனால் அதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்களை பொறுத்த வரையில் குழந்தைகள் தனிமைப் படுத்தப்பட்டதாலும் அவர்கள் நேரங்கள் விளையாட்டுப் பொருட்களோடு ஒதுக்கப் பட்டதாலும் தங்களுக்கு கிடைத்த “விடுதலை” உணர்வால் மகிழ்வுற்றுக் கண்மூடி நின்றனர். .

    இதன் விளைவுகள் :

    1. குழந்தைகளின் தனிமை விரும்பும் போக்கு
    2. போதையானதுபோல் விளையாட்டுக்களுக்கு அடிமையான நிலை.
    3. ஆக்கிரமிப்பு நடத்தை.
    4. பொறுமையின்மை
    5. தோல்விகளை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு மன நிலை.
    6. வெற்றியை நோக்கிய ஒரு வெறித்தனம்

    இது போன்ற பல உணர்வுகளின் தாக்கங்கள் வீட்டிலும் பள்ளியிலும் எளிதாக வெளிப்பட்டன. விளையாடும்பொழுது பேசப்பட்ட, உபயோகிக்கப்பட்ட வார்த்தைகள் – “Attack, Shoot, kill, Fire, Destroy – போன்ற பல வார்த்தைகள் மற்றவர்களோடு உறவாடும்பொழுது சாதாரணமாக வெளிப்பட்டு உறவு முறைகளை பாதித்து வந்தன. ஆனால் வீடுகளில் சமுதாயப் போட்டிகளின் பங்காளிகளாக இதை ஏற்றுக்கொண்டும், ;இந்தக் காலத்திற்கு இது சரி ” என்ற ஒரு வறட்டு வாதத்தில் தங்கள் கௌரவங்களைக் களைந்து வந்தனர்.

    இன்று.

    நீலத் திமிங்கலங்கள் விடும் சவால்  என்ற விளையாட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது.

    இதன் நோக்கமும் விளையாட்டு முறையும் தான் என்ன?

    இந்த மின்னணு விளையாட்டுக்கு இரையாகும் சிறுவர்கள் இந்த விளையாட்டை மேற்பார்க்கும் சிலரின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் இடும் கட்டளைகள் சிரம் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும். அந்த மேற்பார்வையாளர்கள் விடும் சவாலை ஏற்றுக்கொண்டு அதை சமாளித்து தங்கள் திறனை வெளிப்படுத்தி அதற்கான சான்றுகளோடு அவர்களை அணுகி தங்கள் வெற்றிக்கு முகாந்திரமிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக விளையாடுபவர்களுக்கு இடும் ஆணைகள் சமுதாய அளவில் ஏற்றுக்கொள்ளப் படுபவைகளாக இருக்காது. ” உங்கள் கைகளை பிளேடால் அறுத்துக் கொள்ளுங்கள் .. குறிப்பிட்ட மனிதரைத் தாக்கி வாருங்கள்… இந்த இடத்திலுள்ள பொருளை நொறுக்குங்கள்… உங்களைத் தற்கொலைக்குத் தயார் செய்து கொள்ளுங்கள் ..” என்ற வினோதமான விவாதத்திற்குரிய அழிவுக்கு வழிகாட்டக்கூடிய விளையாட்டுக்கள்..

    விளைவு ?

    இது வரை உலக அளவில் பல பள்ளி செல்லும் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இந்தியாவிலும் நடந்துள்ளது.

    நடப்பினைக் கண்டறிந்த அரசாங்கம் விழித்துக்கொண்டு இதற்கான விளையாட்டுத் தொடர்புகளை துண்டிக்க ஆணையிட்டுள்ளது..

    இப்படிப்பட்ட விளையாட்டுக்கள் தேவையா…? யார் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்?

    பெற்றோர்கள் எப்பொழுது விழித்துக் கொள்வார்கள்? தங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் அவர்கள் செல்லலாம்? தங்கள் சமுதாய அந்தஸ்தையும் பணவீக்கத்தையும் வெளிப்படுத்தக் குழந்தைகளின் வாழ்வுகளோடும் அவர்கள் சிந்தனைகளை நசுக்கும் சூழ்நிலைகளையும் உருவாக்கலாமா ?

    சிந்திக்க வேண்டிய தருணம்…

    நீலத் திமிங்கலங்களின் சவால்கள் சந்திக்கப்பட்டு அவைகள் மீண்டும் கடலுக்கு அனுப்பப்பட்டாலும், நாளை அவர்கள் வேறு சுறாக்களாக அவதாரம் எடுத்தது வராதா?

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய பொன்னான பரிசு… தங்கள் நேரம்…!!

    Share
  • குறளின் கதிர்களாய்…(180)

    செண்பக ஜெகதீசன்

    அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைப்
    பொச்சாப் புடையார்க்கு நன்கு. (திருக்குறள் -534: பொச்சாவாமை) 

    புதுக் கவிதையில்…

    கோட்டை கொத்தளத்தால்
    பயனேதுமில்லை,
    பயம்கொண்டிருந்தால் நெஞ்சிலே… 

    அதுபோல
    மறதியுடையோர் பெற்றிருக்கும்
    பெருஞ்செல்லவத்தினாலும்
    பயனேதுமில்லை…! 

    குறும்பாவில்…

    பயமுடையோர் கொண்ட கோட்டைகளாலும்,
    மறதியுடையோர் பெற்ற பெருஞ்செல்வத்தாலும்
    பயனேதுமில்லை…! 

    மரபுக் கவிதையில்…

    நெஞ்சில் பயமது கொண்டமன்னன்
         -நாட்டிற் கரண்பல அமைத்தாலும்,
    கொஞ்சமும் அவற்றால் பயனில்லை
         -கோட்டை கொத்தளம் வீணாமே,
    மிஞ்சிடும் செல்வம் கொண்டோரும்
          -மறதி தன்னைக் கொண்டிருந்தால்,
    எஞ்சிடும் பயனதால் ஏதுமில்லை
          -எல்லாச் செல்வமும் வீண்தானே…! 

    லிமரைக்கூ…

    பயந்தவனுக்கு உதவிடாது கோட்டை,
    மறதியுடையோன் செல்வமும் பயன்தராது
    உறுதியாய்க் கொண்டுவரும் கேட்டை…! 

    கிராமிய பாணியில்…

    மறக்காத மறக்காத
    எதயுமே எளிதா மறக்காத… 

    காடுமல கோட்டயெல்லாம்
    காப்பாத்தாது நாட்ட,
    பயந்தே ஓடுற ராசாவுக்கு
    இதால
    பயனா ஏதும் கெடயாதே… 

    அதுபோல
    மறந்தேபோகிற மனுசங்கிட்ட
    மலயாச் செல்வஞ் சேந்தாலும்,
    அதுனால
    பயனா எதுவும் சேராதே… 

    அதால,
    மறக்காத மறக்காத
    எதயுமே எளிதா மறக்காத…!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170821 -Indra garvabhangam -lr

    “இம்மி அசையா(து) இமையோன் அயிராவதம்(இந்திரன் பட்டத்து யானை)
    JIMMYயா(வாலை சுருட்டிக் கொண்டு நாயாகும் வரையில்)  கும்வரையில்  ஜிம்னாஸ்டிக்(கோவர்த்தனம் தூக்கியது) -MUMMYக்காய்;

    ஆனவரை பெய்தான் அமரன்(இந்திரன்),முடிவிலே-

    வானவில்லாய்(ஆகாஸத்தில் வானவில்-சமாதான ஸிம்பல்) ஆனான் வளைந்து’’….கிரேசி மோகன்….!

     MUMMY -கோமாதா….!
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….!

    Share
  • இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

    ????????????????????????????????????

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட்டது.

         மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    Blog 7

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை,     மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் மு.இளங்கோவனுடன் பகிர்ந்துகொண்டனர். விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் மு.இளங்கோவன் ஏற்றுக்கொண்டார்.

    Blog 10

         07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

         இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

         யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

         சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    Blog 9

         இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

         கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (5)

    மீ.விசுவநாதன்

    பகுதி: ஐந்து

    பாலகாண்டம்

    நாரதர் சென்றதும் வால்மீகி கண்டதும்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1

    நாரதரின் நாமொழிந்த நல்லகதை கேட்டுள்
    பூரணமாய் வாங்கிக் கொண்டார் வால்மீகி !

    அவரின்தாள் பணிந்துபின் அவரைவழி அனுப்ப
    தவயோகி நாரதரும் தான்மறைந்து போனார் !

    சீடர்பரத் வாஜரைச் சேர்த்தழைத்துக் கொண்டு
    காடதனின் காட்சியினைக் கண்டுவரப் புறப்பட்டார் !

    கங்கைக்குப் பக்கத்தில் கற்கண்டாய்ப் பாய்ந்துவரும்
    பொங்குநதி “தமஸா”வில் புகுந்துதான் நீராட

    விரும்பினார் வால்மீகி ! விரைந்தங்கு சென்றார் !
    திரும்பிய பக்கமெலாம் தெய்வீக முணர்ந்தார் !

    ஞானியரின் நெஞ்சம்போல் நல்முத்தாய் ஒளிவீசும்
    தேனினிக்கும் “தமஸா”வின் தீர்த்தக் கரையினிலே

    வானுயர்ந்த மாமரங்கள் வாசமிகு பூச்செடிகள்
    பானுவின் செங்கதிரைப் பக்குவமாய் உள்ளனுப்பும்

    பயிற்சியைப் பெற்றதனால் பறவையினங் கூடிக்
    அயற்சியைப் போக்கிடவோர் அழகான கூட மைத்து

    காதற்கண் கொண்டு காலமெலாம் களித்திருந்து
    நோதற்கே இடமின்றி நூறாண்டு கண்டிடலாம் !

    “வேடன் கொன்ற அன்றில் பறவை”

    அப்படியோர் கானகத்தில் “அன்றில்” பறவைகள்
    எப்போதும் காதலிலே இயல்பாக விளையாடும் !

    அதைப்பார்த்துக் குறிவைத்தே அடித்திட்டான் வேடன் !
    உதைபட்ட ஆண்பறவை உயிரிழந்த காட்சியைக்

    கண்டவுடன் பெண்துணை கதறியழும் குரல்கேட்டு
    உண்டான துன்பத்தின் கோபத்தி(ல்) ஒர்சாபம்

    வேடனுக்குத் தந்தார் விவேகமுள வால்மீகி !
    “வேடனே காதற்புள் ளிரண்டி லொன்றைக்

    கொன்றதனால் கொடியவனாம் உனக்கென்றும் அமைதியிலை
    சென்றிடு” என்றங்கே சீறினார் ! சினமடங்கி

    வருந்தினார்! தான்சொன்ன வார்த்தைகள் கவிதையாய்ப்
    பொருந்தியத்தில் தெய்வீகப் பொருத்தங் கண்டார் !

    “பிரும்மா வால்மீகி முன்தோன்றுதல்”

    முனிவரின் கவிவரியில் முழுமுதலோன் முகத்தொளியின்
    தனிக்கருணை பொழியுதென பரத்வாஜர் அகமகிழ்ந்தார் !

    ஆனாலும் வால்மீகி ஆழ்மனத்தில் வேடன்
    வீணாகக் கொன்றுவிட்ட ஆண்பறவைக் கோலந்தான்

    தானாக மேல்வந்து தவித்திடச் செய்கிறது!
    ஏனோவென் றறியாத இடர்பாட்டில் இருக்கையிலே

    வானிறங்கி பிரும்மன் வால்மீகி முன்வந்து,
    “மாமுனியே உன்னுள்ள மகத்துவத்தை நானறிவேன் !

    கவலைவிடு! காட்டினிலே கண்டதோர் காட்சியும்
    தவசியுந்தன் வாக்கினிலே தப்பாது வந்த

    கவிப்பொழிவும் நானுனக்குக் காட்டிய நல்வழியே !
    தவிப்புனக்கு அடங்கட்டும் ! தர்மத்தின் உருவான

    இராமகதை முழுவதும் எல்லா உயிர்களும்
    சேமமுறக் காவியமாய்ச் சிறப்பாக நீசெய்வாய் !

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் உண்மையாம் தரிசனமாய்
    எவ்விதக் குழப்பமின்றி எளிதாக அறிந்திடுவாய் !

    நன்மையெது தீமையெது நன்றாகக் கூறும்
    உன்கவியே உலகந்தான் உள்ளவரை வாழும் !

    உட்பொருளும் இலக்கணமும் ஒன்றான பெருஞ்செல்வம்
    இட்டமுடன் நீசெய்யும் இரகுவம்ச காவியத்தை

    எல்லோரும் கொண்டாடி இன்புற்றி ருப்பார்கள் !
    சொல்கின்றேன் நல்வாழ்த்து சுந்தரனைப் பாடுதற்கு!”

    என்று பிரும்மாவா(ன்) ஏக
    அன்று தொடங்கினார் அருள்ராம கதையே ! (43)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் இரண்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • 1000 கவிஞர்கள் கவிதை நூல் வெளியீடு 2017

    unnamed (5)

    unnamed
    ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி 32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின்
    கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும் பெரிய கவிதைத் தொகுப்பு நூல்
    யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும்  பெருவிழா நடைபெற இருக்கிறது.

    unnamed (4)
    தமிழ்க்கவிதை நூல் வெளியீட்டில் இவ்விழா மிகவும் சிறப்புடையதாக அமைகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்

    FullSizeRenderkee

    முகமில் திருமால், முகமில் துருவன்,
    அகம்புறம் இணைதார்தன் ஆன்ம -நகமாம்வெண்
    சங்கினால் கன்னத்தில் சித்திரம் இட்டளித்தார்
    மங்காத விண்மீன் மலர்’’….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….

    ”பக்த துருவனை பக்கம் அழைத்தவர்க்கு
    உட்கார் மடிதானே உன்தேவை -தேவுவவர்(தேவு அவர்)
    புள்ளா சனமமர்ந்து புள்ளைக்(கு) அளித்தார்,வான்,
    உல்லாஸ மீனாய்(துருவ நக்ஷத்திரம்) உலவு”….!
    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    Share
  • சிவபிரதோஷம் “ஆதிசக்தி வெள்ளம் “

         மீ.விசுவநாதன்

            lord-shiva-god-pictures-sivan-155910 (1)                                                                                                  

     பற்றறுந்து பற்றறுந்து பற்றறுந்து போக

        பாவிநானும் எத்தனைநாள் இங்கிருந்து வாழ !

    கற்றவித்தை அத்தனையும் கள்ளமென்று கண்டு

        கண்மூடி உள்தேடக் காலமின்னு மில்லை !

    உற்றதுணை அத்தனையும் ஓட்டையான கப்பல்

        ஊர்சுற்றச் சென்றுவிட்டேன் உல்லாசத் தெப்பம்!

    முற்றுணர்ந்த ஞானியில்லை முழுமூட(ன்) என்னுள்

        மூச்சுமுட்ட நிற்குதடா ஆதிசக்தி வெள்ளம் !

     

    சுள்ளென்ற வெய்யிலிலும் சொட்டுகிற வேர்வை

        சுந்தரனாம் பேரொளியை நீராட்டும் சேவை !

    உள்ளொன்றும் வெளியென்றும் ஒன்றுமெனக் கில்லை

        ஓங்காரப் பொருள்தேடும் ஓயாத வேலை !

    நள்ளிரவில் சூரியன்போல் நானுன்னைக் கண்டு

         நாளெல்லாம் பைத்தியமாய் சுற்றுகிறேன் ஈசா !

    வெள்ளிநிலாக் கொண்டவனே வெண்பனியாம் என்னுள்

         வெளிச்சமெனும் சக்தியுடன் வீற்றிருப்பாய் என்றும் !

                 (இன்று  19.08.2017 பிரதோஷம்) 

    Share