சிவபிரதோஷம் “ஆதிசக்தி வெள்ளம் “
மீ.விசுவநாதன்
பற்றறுந்து பற்றறுந்து பற்றறுந்து போக
பாவிநானும் எத்தனைநாள் இங்கிருந்து வாழ !
கற்றவித்தை அத்தனையும் கள்ளமென்று கண்டு
கண்மூடி உள்தேடக் காலமின்னு மில்லை !
உற்றதுணை அத்தனையும் ஓட்டையான கப்பல்
ஊர்சுற்றச் சென்றுவிட்டேன் உல்லாசத் தெப்பம்!
முற்றுணர்ந்த ஞானியில்லை முழுமூட(ன்) என்னுள்
மூச்சுமுட்ட நிற்குதடா ஆதிசக்தி வெள்ளம் !
சுள்ளென்ற வெய்யிலிலும் சொட்டுகிற வேர்வை
சுந்தரனாம் பேரொளியை நீராட்டும் சேவை !
உள்ளொன்றும் வெளியென்றும் ஒன்றுமெனக் கில்லை
ஓங்காரப் பொருள்தேடும் ஓயாத வேலை !
நள்ளிரவில் சூரியன்போல் நானுன்னைக் கண்டு
நாளெல்லாம் பைத்தியமாய் சுற்றுகிறேன் ஈசா !
வெள்ளிநிலாக் கொண்டவனே வெண்பனியாம் என்னுள்
வெளிச்சமெனும் சக்தியுடன் வீற்றிருப்பாய் என்றும் !
(இன்று 19.08.2017 பிரதோஷம்)