நிர்மலா ராகவன்

காலம் மாறிப்போச்சு

நலம்-4
ஒரு தலைமுறைக்குமுன் இருந்ததைவிட தற்போது குடும்பச்சண்டை, விவாகரத்து இதெல்லாம் அதிகரித்துவிட்டது என்று சமூக நல இயக்கத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மேடையில் முழங்கினார். முன்பெல்லாம் பெண்கள் `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று அமைதியாக இருந்தார்கள், இப்போது அவர்களுக்குப் பொறுமையும், விட்டுக்கொடுக்கும் குணமும் போய்விட்டன என்று காரணம் காட்டிப் பழித்தார்.

பெண்கள் மோசமாகிவிட்டார்களா, அல்லது ஆண்கள்தாம் கடவுளைப்போல் இல்லையா? ஆராய்வோமா?

அன்பு என்பது..

காதலியோ, மனைவியோ, தன்னைத்தவிர வேறு எந்த ஆணுடனும் பழகக்கூடாது என்று மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தடைவிதிக்கும் ஆண் அவள் தனது உடைமை என்று எண்ணுகிறான். தான் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படி நடந்தால்தான் அவளுக்குத் தன்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம் என்று தவறாக நினைக்கிறான். அவனை மீறினால், உணர்ச்சிபூர்வமாகவோ, உடலாலோ வதைப்பதும் அவனுக்குச் சரியென்றே படுகிறது.

பெண்களுக்கு உணர்ச்சிகளா? சேச்சே!

சமீபத்தில் மலேசிய சட்டசபையில் ஓர் அரசியல்வாதி கூறியிருந்தார், கணவன் இன்னுமொரு பெண்ணை மணக்க ஒப்புதல் தராத மனைவி அவனை உணர்ச்சிபூர்வமாக வதை செய்கிறாள் என்று!

இவரைப் போன்றவர்களுக்கு ஆண் என்ன செய்தாலும், `சரி’ என்று சொல்கிற பெண்கள்தாம் நல்லவர்கள். அதாவது, பெண்கள் சுயமாகச் சிந்திக்கக்கூடாது, அவர்களுக்கு உணர்ச்சிகள் என்று இருக்குமாயின், அவைகளை மறைத்துக்கொள்ள வேண்டும், அல்லது குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும். அப்போதுதானே ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அவர்களை வைத்திருக்க முடியும்!

பெண் வெறும் போகப்பொருளாக இருந்த காலம் போய்விட்டது. தம் தாய்மார்களும், அத்தை, பெரியம்மாக்களும் வாழ்ந்து காட்டியதைப்போல் இன்றைய இளம்பெண்களுக்கு வாழ விருப்பமில்லை. இருப்பினும், கட்டுப்படுத்தும் ஒருவரை – காதலனாகவோ, கணவனாகவோ — தம்மையறியாது தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.
நாமிருவர், எப்போதும்!

காதலர்களோ, புதிதாக மணம் புரிந்துகொண்டவர்களோ, எப்போதும் ஒன்றாக இருப்பதுதான் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறார்கள். `இவருக்குத்தான் தான் எவ்வளவு தேவைப்படுகிறோம்!’ என்று ஆரம்பத்தில் பெண்ணுக்கு ஏற்படும் பெருமை நாளடைவில் பொறுக்க முடியாத பாரமாகிவிடுகிறது.

ஒன்றாகப் போகும்போது செல்ல வேண்டிய இடத்தையும், செய்ய வேண்டிய காரியத்தையும் ஒருவரே முடிவு செய்யும்போது, நாளடைவில் அடுத்தவருக்கு அதிருப்தி பிறக்கிறது.

`நீ எங்கே போயிருந்தாய்?’

`நான் உன்னுடன் இல்லாதபோது என்ன செய்கிறாய்?’

இப்படி அடிக்கடி நேரிலோ, தொலைபேசிவழியோ ஒருவர் விசாரிப்பது அவர்களது பாதுகாப்பின்மையைத்தான் குறிக்கும். தன் காதலுக்கு உரியவர் தன்னைவிட்டுப் போய்விடுவாரோ என்ற பயம்தான் இப்படியெல்லாம் ஒருவரை அலைக்கழிக்கிறது. இது கண்டிப்பாக அன்போ, பரிவோ இல்லை. கட்டுப்பாடுதான்.

கதை

எப்போதும் காதலி தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று நினைத்தான் நாதன். அதனால் அவளுக்கு நெருக்கமானவர்களுடன் இருக்கும் தொடர்பை முறித்துவிடுகிறான். அப்படியே அவள் பிறருடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாலும், அவனுக்குப் பிடிப்பதில்லை. `நாமிருவர் மட்டும் தனியாகப் போகலாமே! எதற்குப் பிறரை இழுக்கிறாய்?’ என்று நைச்சியமாகப் பேசுகிறான். தகராறு செய்கிறான்.

பிறரிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் வதையின் ஆரம்பம். வதைப்பவனுக்கு அதிகாரம் கூடுகிறது.

`இவர் சொல்வதும் நியாயம்தானே!’ என்றெண்ணியோ, இல்லை, `எதற்கு வீண் சண்டை!’ என்று நினைத்தோ, அவளும் விட்டுக்கொடுக்கிறாள்.

அவனுடைய ஆக்கிரமிப்பால் விளையும் சுதந்திரமின்மை பொறுக்க முடியாது போகிறது. ஆனால், யாரிடம் போய்ச் சொல்வது என்று புரியாது, மேலும் ஒடுங்கிப்போகிறாள்.

எப்போதாவது தோழிகளுடன் வெளியே போகையில், பழைய கலகலப்பு குறைந்திருக்கிறது. அவர்களிடம் அவனைப்பற்றித் தரக்குறைவாகப் பேசவும் முடிவதில்லை.

எந்தவித வதையை அனுபவிப்பவர்களும் தம்மை வதைப்பவர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள்.

`என்னிடம் சொல்லாது, உன் ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினியா? என்னைப்பத்திதானே பேசினீர்கள்?’ என்று நாதன் அடித்தபோது கலக்கம் வந்தது.
உடனே அவன் மன்னிப்பு கேட்டு, கொஞ்ச ஆரம்பித்தான். அவள் மனம் சமாதானப்பட்டது. அதுதான் அவள் செய்த தவறு.

வதை ஆரம்பிக்கையிலேயே அதைத் தடுக்க முயல வேண்டும். இல்லாவிட்டால், அது தொடரும். முற்றிவிடும்.

`உங்களுக்கும் மகிழ்ச்சியும் பாதுகாப்புமாக வாழ உரிமை இருக்கிறது என்று பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெண்களுக்குப் பிடித்தம் இல்லாததைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது,’ என்று அறிவுரை வழங்குகிறார் பெண்கள் ஆதரவு இல்லத்தை நிர்வகிக்கும் ஒரு பெண்மணி.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.