’’வெண்பூ வெண்பாக்கள்’’….!
’’வரலஷ்மி விரதம் ஆச்சு…அடுத்து வரவீணா நமஸ்துப்யம்’’….!
———————————————————————————————————————
நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(1)
நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(2)
ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(3)
வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(4)
பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருள வா’’….(5)
தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(6)….கிரேசி மோகன்…!
பாடல் 2ன் ஈற்றடி
அலைபாய்ந் திடா(து) அடங்கு என்பது, அலைபாய்ந் திடா தடங்கு என்றாகும்போது வெண்டளை பிறழ்ந்துவிடும்.
அலைபாய்ந் திடாதே அடங்கு என்றிருந்தால் சரியாக இருக்கும்.
அ.இராஜகோபாலன்
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சார்….விஜயதசமிக்குள் ‘’மூவரைப்’’ பற்றி எழுதிவிடவேண்டு என்ற ஆர்வக் கோளாறால் தளை தட்டிவிட்டது….புத்தகமாகப் போடும் முன் வெண்பா ஞானம் மிக்கவரிடம், தளை,சீர்,க்,ச் போன்ற அச்சுப்பிழை பிச்சப்பாகளை அடியேன் திருத்திக் கொள்வது மரபு….அன்பன் கிரேசி மோகன்….