Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181118 -DWA wcol- Canson A4 100gsm 300dpi lr
    ”தென்பாண்டி சீமையில் தேரோடும் வீதியிலே
    என்பாண்டு மைந்தனை யரடிச்சார் -விண்பார்த்த
    வைகுண்ட வாசலின் மைவண்ணன் வாத்சல்யக்
    கைகொண்டு பார்த்தனுக்கு காப்பு’’…..கிரேசி மோகன்…..!
    Share
  • “சிறுவா புரி சதகம்”

     

    ————————-
    காப்புச் செய்யுள்
    ———————-
    “உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து
    தரைசே ரவடித் தருள்வே ழவரே
    சிறுவா புரியார் சதகம் எழுதத்
    தருவாய் எனக்குத் தமிழும் திறனும்”….

    சிறுவாபுரி சதகம்….கந்தரனுபூதி பாதிப்பில்….

    “தனியா னைசகோ தரனார் துணையால்
    வனமா துடல்மே விடவே டுவனாய்
    தனியாய் வருவேல் தணிகா சலனே
    வினைதீர்த் திடவா சிறுவா புரியே”….(1)

    “அடடா எனவூர் அனுதா பமுற
    சுடுகா டுடலே கிடுநாள் துணையாய்
    உடனே வருவாய் உமைபா லகனே
    இடுவாய் பிறவா இடமே விடநான்”….(2)

    “புதனோ டொளிசேர் பொலிவாய் உமையாள்
    சுதனே சிவனார் சிறுவா புரிவாழ்
    மதலாய் பெருமாள் மருகா வருவாய்
    அதுவாய் இதுவாய் எதுவா கிலுமாய்”…(3)

    “உனைநா னறிவேன் உமையாள் சுதனா
    திணைமா துடன்சேர் தணிகா சலனே
    எனைநா னறியேன் எழுவாய் பயனாய்
    சினைநான் உயிர்நீ சிறுவா புரியே”….(4)

    “பணநா கவணை பெருமாள் மருகா
    வானமா துடன்வா னவரா னையுடன்
    மனவே கமுடன் மயிலே றிடவே
    ஷணமே வருவாய் சிறுவா புரியே”….(5)

    “ஆசா பாச மதனால் உலகில்
    காசும் புகழும் குறியாய் உழலும்
    நீசன் எனையுன் நிலைசேர்த் திடவே
    வாஷண் முகனே வழிகாட் டிடவே”….(6)

    “நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
    உமைச்சி வேலை உடையோய் படையாய்
    சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
    நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….(7)

    “தீயாய் வளியாய் திசைமண் ஜலமாய்
    காயாய் மலராய் கனியாய் மரமாய்
    வாயாய் ருசியாய் வயிறாய் பசியாய்
    நீயாய் மறைவாய் நிருவா கனனே”…(8)

    “அய்யோ யெனயென் கிளைகூ டியழும்
    அய்யோ மணவா ளரவர் வரவால்
    அய்யா அதனால் அனுபூ தியுறச்
    செய்யாய் முருகா சிறுவா புரியே”….(9)

    “அண்ணா மலையும் அவன்பா திபடர்
    உண்ணா முலையும் சிறுவா புரியில்
    முன்னால் இருக்க முகநா ணமுறும்
    பெண்ணா லோலப் பிடிமால் மருகா”….(10)

    “மரணா கதியில் மனிதா செலுமுன்
    சரணா கதிசெய் சிவனார் செவியில்
    மறையோ தியவன் திருவே ரகனை
    சுரர்நா யகனை சிறுவா புரியை….(11)

    “அத்திக் கிறைவா அமரா வதியின்
    வெற்றிக் குதவும் விசுவேஸ் வரரின்
    நெற்றிக் கனலே நெடுமால் மருகா
    சுற்றத் துடன்வாழ் சிறுவா புரியே”….(12)

    “எதிரா ஜனரின் எஜமா னவனை
    பதிநூ றுடன்எண் படர்மால் புகழை
    துதிசெய் அருணை கிரிபோல் எழுத
    உதவத் தமிழே உடனே வருவாய்”….(13)

    “அயனார் அரியார் அறியா நுதல்வாய்
    நயனார் புதல்வா நரையும் திரையும்
    மயமாய் இவனா குமுனே வருவாய்
    பயனாய் சிறுவா புரிவாழ் பொருளே”….(14)

    “ஓரா றுமுகம் ஒளிரும் இருதாள்
    ஈரா றுபுயம் இறைவா மறவேன்
    சேறாம் உலகில் செந்தா மரையாய்
    போரா டஅருள் பஞ்சா மிருதா”….(15)

    “பாதிக் கொருபெண் பரமேஸ் வரியின்
    ஆதிக் கமுறும் அரனார் நுதற்க்கண்
    ஜோதிக் கருவே சிறுவா புரியில்
    சாதித் தருள்வோய் சரணா கதியை”….(17)

    “கிரௌஞ்ச மலையைக் கூழா கிடவேல்
    எறிஞ்ச முருகா என்றும் இளையோய்
    குறிஞ்சி மலைவாழ் கிழவா தமிழைத்
    தருஞ்சி வைமுலை திகழ்வோய் சரணம் ….(18)

    “கூறும் அருணை கிரியின் புகழில்
    ஏறும் மயிலோ டெழில்சே வலுடன்
    சூரன் பதுமன் சிரம்வாங் கியவா
    சேரும் தமிழே சிறுவா புரியே”….(19)

    “கல்லா லமர்வோன் காதில் ப்ரணவச்
    சொல்லாழ் பொருளை ஸ்லாகித் தவனே
    எல்லாம் அறிந்தும் எனைநான் அறியேன்
    வல்லான் ரமணர் வழிசேர்த் திடுவாய்”….(20)

    “தள்ளா டிவுடல் தடுமா றிடவாய்ப்
    பல்லா டிடமண் புதையப் படரும்
    புல்லா டிடநான் போகா வகையென்
    உள்ளா டிடவா உமையாள் சுதனே”….(21)

    “வடமா லையுடன் வனமா லையணி
    திடமா ருதிதோ ழனவன் மருகா
    கடலா டிடுவாய் குடிபோ கியவா
    உடனே வருவாய் உயிர்மெய்ப் பொருளாய்”….(22

    “வேதா கமநூல் வழிபோ னதிலை
    ஏதா கிலும்செய் துனைஏத் தவிலை
    சாதா ரணநென் சகமா யையற
    நீதான் வரணும் நிகமான் தகனாய்”….(23)

    “இம்மா மடையன் இறைவாழ் வதனில்
    எம்மா திரியும் இசையான் எனவே
    சிம்மா சனமுன் சீர்பா தமுற
    சும்மா இருயென் றொருசொல் அருளேன்”….(24)

    “கண்மாய் தனில்கார்த் திகைமங் கையரால்
    ஒண்ணா னவனே ஓமா றுமுகா
    என்னா வியுடல் பொருள்யா வையும்நீ
    நன்நாள் இதுவே நலம்சேர்த் திடவா….(OR )
    அண்ணா சிறுவை அழகா வருக”….(31)

    “மயில்வா கனனே அயில்வே லவனே
    கயிலா யசிவன் குருவா னவனே
    பயிலா தழின்தேன் பரஞா னமதை
    மயல்தீர்த் தருள்வாய் முருகா சரணம்”….(32)

    “பிடிவா தமுடன் பிழைசெய் திடுமென்
    கடிவா ளமிலாக் குதிரைப் புலனை
    அடிபோ ட்டதைஆண் டருளச் சிறுவை
    வடிவே லவரே வருவீர் குருவாய்”….(33)

    “வனபாக் கியமாய் வள்ளி இருக்க
    தனபாக் கியமாய் தாரிணி சுரக்க
    சினம்போக் கியவா செந்திற்க் கடலில்
    மனபாக் கியமாய் வழிகாட் டிடவா”….(34)

    “கிழவே டமுடன் குறமா தணையும்
    மழுமான் சிவனார் விழிபா லகனே
    அழவேண் டிவரும் அடியார் வினையை
    விழத்தீண் டிடுவேல் விடுநா யகனே”….(35)

    “வானாய் நிலநீர் வளியாய்க் கனலாய்
    ஆணாய் அலியாய் அவளாய் அருவாய்
    ஆனாய் ஜடமாய் அறிவாய், ரமணர் (OR )அகந்தை
    நானாய்ன் துனைநா டிடவா முருகா”….(36)

    “எப்படி வருவான் எமனென் றறியேன்
    அப்படி வருமுன் அனுபூ தியினை
    இப்படித் தானென் றிரவுக் கனவில்
    செப்பிட வாராய் சிறுவை முருகா”….(37)

    “முற்றம் வரையில் மனையாள் வருவாள்
    சுற்றமும் பெற்றதும் சுடுகா டுவரை
    கற்றதும் கொண்டதும் கால்தூ சிபெறா
    நற்றமி ழேவா நமனார் வருமுன்”….(38)

    “மாவாய் பிளந்த மதுசூ தனர்க்கு
    ஆவாய் மருமான் அவன்சோ தரியால்
    வாவா எனகா டழைக்கும் தருணம்
    போபோ எனவீ டுபுகுத் திடவா”….(39)

    “தந்தைக் கொருமந் திரம்தந் தவரின்
    சிந்தைக் கபிமா னசிரோன் மணியே
    கந்தக் கனலே குருவாய் அருள்வாய்
    மந்தப் பயலென் மதம்மாற் றிடவே”….(40)

    “வாயிட் டயென்பின் வடித லென்றே
    நாயிட் டமொடு நறுக்கும் நாவை
    ஆயிற் றதுபோல் அடியேன் வாழ்வு
    பாயுற் றுடும்முன் பிணியோட் டிடவா….(41)

    “தப்பா னவாழ்க்கை தவறா னசேர்க்கை
    இப்பா வியுற்றான் இதனா லெமன்கை
    ஒப்பா ரிவைத்தூர் அழுமுன் செவியில்
    செப்பாய் முருகா சிவஞா னபோதம்”….(42)

    “திருவோ டணையும் திருமால் மருகா
    திருவோ டணையும் திருவா திரையான்
    பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
    சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)

    “வாசத் துழாய்மால் வயிற்றுப் புதல்வி
    நேசக் குறத்தி நினைவோய், திருத்தைப்
    பூசத் திறைவா ப்ரணவப் பொருளை
    ஈசர்க் குபதே சிகனே இறைவா….(44)

    “வருந்தாய் மனமே வருவான் முருகன்
    பிருந்தா வனமாய் பொழிவான் அருளை
    கருந்தா மரைக்கண் குறத்தி மணாளன்
    திருந்தா தவர்க்கும் மருந்தா கிடுவான்”….(45)

    “எலிவா கனரின் இளையோய், சபரிப்
    புலிவா கனர்முன் பிறந்து வளர்ந்த,
    கிலிநா கமுறக் கிளம்பும் அகவல்
    ஒலிவா கனரே உடனே வருக”….(46)

    “கீரன் துதிசெய் ஆற்றுப் படையை
    பேரன் புடனே ஏற்றக் குகையுள்
    சேரும் புலவர் சிறைமீட் டிடவே
    கூர்வேல் எரிந்து கிரிசாய் குகனே”….(47)

    “சிறுபா லனென மதியா துசெலும்
    மறைநான் முகனார் மிகுகர் வமற
    சிறைசே றயிடும் சிவதே சிகனே
    கரைசேர்த் திடுவாய் கடலா டுகுகா”….(48)

    “கன்றா டிடவேய்ங் குழலோன் மருகா
    மன்றா டிடுவோன் மகனே புவியில்
    குன்றா டிடுவோய் குருவாய் வருவாய்
    மன்றா டுகிறேன் மனம்வைத் தருள்வாய்”….(49)

    “ஆகா இவனே அதிமே தையென
    பாகாய் உருகும் பொருளுள் ளவரை
    மோகா சனத்தில் முனியாய் இருக்க
    ஏகாக் ரமதை எளிதாக் கிடுவாய்”….(50)

    “மாலா டிடும்யவ் வனம்சொப் பனமே
    கோலா டிடும்மூப் பதுநிச் சயமே
    வாலா டிடும்வாழ்க் கையைவிட் டுவடி
    வேலா யுதன்தாள் தலைவைத் திடுவாய்….(OR )
    வேலா யுதன்தாள் வனசம் தொழுவாய்”….(51)

    “நூறோ டிடவே தேரோ டியமால்
    சீரா டிடுமூர் சிறுவை மருகன்
    ஈறா றுபுயன் பேரா றுமுகன்
    நீறா டநுதல் நினைவாய் மனமே”….(52)

    “கள்ளப் புலனைந்த் துறவா லகந்தை
    மெல்லப் புகுந்து மமதை மனமாய்
    உள்ளத் தறையில் உனைபூட் டிடுவான்
    வள்ளிக் கணவன் வாஞ்சைக் கிலைதாள்”….(53)

    “புதிராம் புவியில் பொழுதோட் டிடவே
    சதிரா டியபின் சலியும் மனமே
    எதிரா ளியெமன் எதிரே கிடுமுன்
    கதிர்வே லவனே கதியென் றிடுவாய்”….(54)

    “மமகா ரமதை மனிதா விடுவாய்
    எமனே கிடுமோர் எழிற்கா லையிலே(one fine morning )
    சுமையா கிடுவாய் சுடுகா டுவரை;
    சமபா வமுற சிறுவா புரிசேர்”….(55)

    “பரங்குன் றலைவாய் பழம்வீழ் பொழில்,கோல்
    கரங்கொள் பழனி ,குமிழ்வாய் சிவனார்
    கரங்கொள் கிரியே ரகமும் தணிகை
    வரங்கொள் அடியார் வரவீ டுடையோய்”….(56)

    “முத்தாய் அருணை முனிநா எழுதிக்
    கொத்தாய் அடைந்தாய் கவிசந் தமதை
    அத்தா அதுபோல் அடியேன் அளிப்பு
    கத்தா ழையெனின் கமல மெனக்கொள்”….(57)

    “கிரியார் கந்த ரனுபூ தியின்மேல்….(OR )
    அருணை கிரியார் அனுபூ தியின்மேல்
    வெறியால் விளைந்த வடிகா லிதுவே
    சரியா தவறா சதகம் அறியேன்
    விரிஆர் வமிதை வளர்பக் தியென”….(58)

    “பாக்கள் வருதல் பனிமா மலையோன்
    தீக்கண் மகனுன் தயவென் றெண்ணி
    ஊக்க மடைந்தேன், ஓங்கும் தமிழின்
    தாக்க மெனநீ திரைபோ டாதே”….(59)

    “அம்பாள் மகனே அரிமால் மருகா
    உன்பால் உருகி உனைநான் அடைய
    வெண்பா சதகம் வடித்தேன் ,புகழின்
    சம்பாத் தியமாய் சொல்லி விடாதே”….(60)

    “எமாதி கணமே கிடுநாள் ரமண
    சமாதி நிலையில் ஸ்திரமாய் இருக்க
    ரமாதி மாலர் ரமிக்கும் மருகா
    உமாதி ஈசர்க் குகந்தோய் அருள்வாய்”….(61)

    “உள்ளக் கனகல் லையுடைத் தெறிய
    மெல்லத் தலைநீட் டிடு(ம்)ஆன் மவொளி
    புல்லைப் புலியாக் கிடுமிக் கலையை
    தெள்ளத் தெளிவாக் கிடுதே சிகனே”….(62)

    “அலையும் மயிலை, அயில்வேல் அணிசே
    வலையும், வனவான் வளையார் தமையும்,
    மலையும், மலையே றிவளர் உனையும்,
    முளையும் சதகம் மதிலா டிடவை”….(63)

    “தாரா சுரன்தன் தவவாழ் வதனால்
    பேரா சையுறப், பலிவாங் கிடவே
    வீரா சனத்தோன் விழிவாய் பிறந்த
    ஆரா அமுதே அமரர் துணையே”….(65)

    “கெட்டாள் திருந்தி குருவாய் அழைக்க
    சிட்டாய் வருவான் சும்மா இருக்கத்
    தொட்டோ திடுவான் திருவா சகத்தை
    முட்டாள் மனமே முனியச் சிறுவன்”….(66)

    “பந்தத் தைவிடு பாசத் தைவிடு
    சொந்தத் தைவிடு சோகத் தைவிடு
    சிந்தித் துவிடு சிறுவா புரிவாழ்
    கந்தத் தனைநீ கயிலா யமுற”….(67)

    “சம்பந் தாண்டான் ஸ்தம்பித் திடவே
    நம்பும் கிரியார் நவிலச் சந்தம்
    கம்பம் தனிலா டியெழும் இளையோய்
    உம்பர் துணைக்கு உருவா கியவா”….(68)

    “கனிகை கிடைக்க ககனம் சுற்ற
    புனிதர் கணேச பிள்ளைக் களிக்க
    தணியா சினத்தில் தண்டா யுதனாய்
    முனியாய் பழனி மலையே றியவா”….(69)

    “அமரா வதியின் அணிகா வலனாய்
    சமரால் கொடுசூ ரனுடல் கெடவே
    உமையாள் கொடுவேல் உதிர்த்து அலைவாய்
    குமரா சுரர்பெண் கரங்கொள் முருகா”….(70)

    “எதிர்பார்த் திருந்த எமனே ளுகையில்
    சதுர்வே தனைவெஞ்ச் சிறைவைத் திடுவோய்
    கதிர்கா மமதில் கனிந்து பழமாய்
    உதிர்சோ லைமலை உறவே வருக”….(71)

    “பழுதூ றியவாழ் வினில்போக் கிரியாய்
    பொழுதோட் டினைஐம் புலனார் வமதால்
    தொழுதேத் திடுவாய் கழுகா சலனை
    முழுதாட் கொளவான் மயிலே றிடுவான்”….(72)

    “அயலார் சிரிக்க அருகார் வெறுக்க
    மயலா டிமகா மடுவீழ் கையிலே
    செயலா கிடுசிந்தை தையில்சீர் மிகவே
    வயலூர் வளர்வாழ் வதன்தாள் விழுங்கோள்”….(73)

    “பதினா றுபெரும் பெருவாழ் வுபெற
    அதிகா ரவிடை அமர்வோன் நுதல்நீ
    றதுகா யவுதித் தனலாய்ப் பிறந்த
    பதியா றுடையோன் பதம்மே விடுவாய்”….(74)

    “சேதா ரமிலா செய்கூ லியிலா
    ஆதா ரமருள் அயில்வே லவனின்
    பாதாம் புயமே பரமார்த் திகமாம்,
    பேதாய் மனமே பணிந்தேத் திடுவாய்”….(75)

    “மனமா ஸனமாய் மயில்வா கனமாய்
    குணம்கோ ழியெழுப் பதிகா லையுமாய்
    முனைவேல் மதியாய் மனையுன் மலையாய்
    தினமாண் டிடவா திணைமா தணைவோய்”….(76)

    “திகழா பரணம் திடமார் பசைய
    நகைபூட் டிடநா டகமே டைதனில்
    நகைப்பூட் டிடவா நடுநா யகமாய்
    நகைபூத் திடுவாய் நதிபா லகனே”….(77)

    “அதிகா ரமவா அழுக்கா றவச்சொல்
    குதிகோ பமிலா குணம்வாய்த் திடவே
    சுதிவள் ளுவனார் சொலும்வார்த் தையினை
    மதியேற் றிடவை மருதா சலனே”….(78)

    “மிகவாட் டமுறும் மனிதா ,ரமண
    அகநாட் டமுற அங்குஷ் டமென
    குகநாட் டியம்காண் குகையாழ் மனதில்
    சுகசாட் சியமாய் சும்மா இருநீ”….(79)

    “குசனார் லவணார் அசுவ மதைத்தம்
    வசமா கயிரா கவன்வா ளியெதிர்
    அசலம் சிறுவா புரிவாழ் அழகா
    வசன முரைக்க வருவாய் குருவாய்”….(80)

    “சோணை ரமணே சரைப்போல் சதமாய்
    ஞானம் பெறநா டிடுசெந் தமிழின்
    மோனை எதுகை யெனவள் ளியும்தே
    வானை தழுவும் வடிவே லவனை”….(81)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    060303 -Pharoah Krishna 02 -with Vijayaraghavan (mythu friend) A4 papyrus. watercolour.
    (The illustrations below the blue line were by default -this was a letter pad. lr

    ”எங்கிருந்(து) ஆரம்பம் எங்கெதில் சங்கமம்
    இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்
    ஆதலால் ஆண்ட்டனி வேதனை வேண்டாம்வல்
    சூதினைக்கொல் ,கண்ணசீ ஸர்’’….கிரேசி மோகன்….கேசவ் ஓகேயா….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181117 -DWA wcol- Canson A4 200gsm 300dpi wm

    குந்திசேயே கேளாய்,குதிரைக்கோ பொய்க்கால்காண்,
    வந்திருப்போர் பீஷ்மகர்ண வீரர்கள் -சிந்தித்து,
    காண்டீபம் கொள்வாய்நீ, கைவல்ய கீதைகேள்
    பாண்டவா பாரதப் போர்….கிரேசி மோகன்….!

    Share
  • பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்

    திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழ் வணிகரின் கடல்வழிப் பாதை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணிம வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

    கடல் வழியை அடிப்படையாகக் கொண்டால் உலகை வடக்கும் தெற்குமாகப் பிரிக்கும் இடம் பண்டைய எகிப்து எனக் கருதலாம். பழந்தமிழர்களுக்கு எகிப்துடன் நெடுங்கால வணிக உறவு இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் சுட்டும்.

    தரைவழிப் பாதையாக உலக வணிகர்கள் பயன்படுத்திய பாதைகள் சந்திக்கும் இடம் எகிப்து என்றாலும் வடக்கையும் தெற்கையும் பிரிக்கும் எகிப்தின் சிறிய நிலப்பரப்பைத் தாண்டி செங்கடல் வழியாகத் தெற்கில் வரும் சூக்குமம் தமிழர்கள் நன்கறிந்து காற்றின் போக்கில் கடல் வழியாகச் செங்கடலை அடைந்து அலெக்ஸ்சான்ட்ரியா வழியாக கிரேக்க உரோமாபுரி வணிகத்தை மேற்கொண்டனர்.

    மேலும் தமிழ் வணிகர்கள் இந்துமாக்கடல் பசிபிக் கடல் மேலாண்மையில் சிறந்து சிறு தீவுகளை இணைத்து கடல்வழியை உருவாக்கினர். அங்கே தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களையும் தோற்றுவித்தனர்.

    தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த ஆய் நாடு உலக வணிகத்தைக் கிழக்கிலும் மேற்கிலும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக அமைந்திருந்தது. தமிழர் வரலாற்றில் ஆய்நாடு தொடர்பான தகவல் கடலுக்கடியில் புதைந்துள்ளது.

    ஆய்நாடு அழிந்த நிலையில் ஆய்வேளிர் இடம்பெயர்ந்து கொங்கு நாட்டை உருவாக்கி கடல் வணிகத்தைத் தொடர்ந்தனர். மூவேந்தர் கீர்த்தியைப் பாடிய தமிழ் வரலாற்றாளர் கொங்கின் சிறப்பை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

    இளம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்

    நாகராசன்

    Share
  • எண்ணிம தமிழர் வாழ்வியல் ஆய்வுப் புலம்

    பேரா. நாகராசன்

     

    கணினிப் புரட்சியும் இணைய வளர்ச்சியும் எண்ணற்ற கருத்து வளங்களை இணையத்தில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. தமிழின் இலக்கிய வளங்கள் இன்று இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் எண்ணிம நூலகங்களில் கிடைக்கின்றன. இணையத்தின் நுட்பம் அறிந்தவர்கள் வலைத்தளம் மூலமாகவும் மடலாடல் குழு மூலமாகவும் தமிழர் வாழ்வியல் தொடர்பான கருதுகோள்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

    சமூக ஊடகங்கள் தங்கள் பங்குக்கு தமிழர் வாழ்வியல் தொடர்பான எண்ணற்ற வளங்களை பல்லூடக வடிவில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் புலவர்களும் தமிழ் ஆய்வாளர்களும் தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த தமிழர் வாழ்வியல் இன்று இணையவெளியில் கட்டற்ற கருத்துகளாக வெளியாகின்றன.

    புதிய ஆய்வுப்புலமாக உருவாகியுள்ள எண்ணிமத் தமிழர் வாழ்வியல் ஆய்வு சமூகவியல், மானுடவியல் உளவியல், ஆய்வுத்தளங்களையும் இணையத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய ஆய்வுப் புலத்தை உருவாக்கியுள்ளது.

    இந்தப் புதிய ஆய்வு முயற்சியைப்பற்றி இனிவரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ஏற்படுவது சகஜம். புத்தாடைகள் வாங்கிப் பட்டாசுகள் வெடித்து ஆடம்பரமான கேளிக்கைகள் இடம்பெறும் அதேசமயத்தில் நாட்டில் நிலவும் சமகால நிகழ்வுகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

    இங்கிலாந்தில் இவ்வாரம் பல விடயங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக அலசப்பட்டு வருகிறது. இவற்றில் அதிமுக்கியமாக லண்டனில் கடந்தவாரம் நடைப்பெற்ற சுமார் நான்கு கொலைகள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளின் முடிவில் இருக்கும் இளைஞர்கள் கத்திக்குத்து ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத அசம்பாவிதங்களில் உயிரிழந்திருப்பது பலருக்கும் மிகவும் விசனத்தை அளித்துள்ளது. இலண்டன் மாநகர போலிஸ் பந்தோபஸ்து தேவையான அளவு இல்லை எனும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலண்டன் நகர மேயரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. இத்தகைய கத்திக்குத்துக்கள் சம்பந்தமான வன்முறைகளை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னும் பத்து வருடங்கள் எடுக்கலாம் என்று அவர் கூறியதே சர்ச்சைக்குரிய கருத்தாகிறது.

    இன்றைய பிரதமராக இருக்கும் தெரேசா மே அவர்கள் முன்னர் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். இங்கிலாந்துப் போலிஸ்துறை உள்நாட்டு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அப்போது தெரேசா மே அவர்கள் நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்படுத்த முனைந்த நிதியமைச்சரின் திட்டப்படி போலிஸ்துறையின் செலவீனத்தை அதிக அளவில் குறைத்தார் அதன் விளைவாக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இத்தகைய அரசாங்கத்தின் நிதிக்கட்டுப்பாடே இன்றைய மேற்படி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதவாறு இருப்பதன் காரணம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகளும், பொருளாதார நிபுணர்களும். போலிசாரின் கவனத்தை இத்தகைய வன்முறைச் சம்பவங்களின் பால் திருப்பப் போதுமான எண்ணிக்கை இல்லை என்று பலரது கணிப்பு. இதற்காக அரசாங்கம் போதுமான அளவு நிதியைப் போலிஸ்துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கோஷமாக இருக்கிறது. மேலும் சிலரோ இளம்பிராயத்திலேயே மாணவர்களுக்கு இத்தகைய வன்முறைகளின் விபரீதமான தாக்கங்களை விளக்கிக் கல்விமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

    ப்ரெக்ஸிட் எனும் பூதம் மறுபடியும் தன் தலையை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஆமாம் டீலா? அல்லது நோ டீலா? எனும் கேள்விக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தரப்பினரும் தமது வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். பிரதமரும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் விரைவில் தாம் இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் ஒரு தீர்வை எட்டப்போவதாகக் கூறிவருகிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிகின்றன. இதற்கான காலக்கெடு மிக விரைவாக அண்மித்துக் கொண்டு வருகிறது. இதை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது இன்னமும் அனைவரின் மனதிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    அமெரிக்காவில் நடைபெற்ற செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை இவைகளுக்கான தேர்தலை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் எஞ்சிய இரண்டு வருட பதவிக்காலத்தில் அவர் நிறைவேற்ற எண்ணும் சட்டங்களுக்கு ஏதுவாக இவ்விரண்டு சபைகளிலும் அவருடைய கட்சி பெரும்பான்மை பெறுவது அவசியம். அதேசமயம் பல சர்ச்சைகளை உலகளாவிய அளவில் ட்ரம்ப் அவர்கள் ஏற்படுத்தி வருகையில் எதிர்க்கட்சியான டெமகிரட் கட்சி பெரும்பான்மை பெற்றால் திரு ட்ரம்ப் அவர்களின் மீதான மக்களின் அதிருப்தியை எடுத்துக்காட்டும் எனும் வாதத்தோடு எதிர்க்கட்சியும் தமது பெரும்பான்மைக்காகப் பாடுபட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்து விட்டது. செனட் சபையின் பெரும்பான்மையை ரிபப்ளிகன் கட்சியும், மக்கள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையை டெமகிரட்ஸ் கட்சியும் பெற்றுக் கொண்டன. இது தமது கட்சிக்கு கிடைத்த பெரும் ஆதரவு என்று ட்ரம்ப் அவர்கள் மார்தட்டிக் கொண்டாலும். இனி அவரது கொள்கைகளைச் சட்டமாக்குவதில் சிறிது சிரமத்தை எதிர்கொள்வார் என்பதே அரசியல் அவதானிகளினது அனுமானம்.

    கடைசியாக இன்று 14.11.2018 கிடைக்கும் செய்திகளின் படி இங்கிலாந்து அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து வெளியேறுவதற்கான உடன்படிக்கையை எட்டிவிட்டன. நேற்று மாலையிலிருந்து இங்கிலாந்துப் பிரதமர் தமது அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து வருகிறார். இன்று மதியம் 2 மணிக்கு அவரது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் இவ்வுடன்படிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதைத்தொடர்ந்து இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக விடப்படும். பாராளுமன்றத்தில் பிரதமரின் இவ்வுடன்படிக்கை வெற்றியடைவது மிகவும் கடினம் என்பதே அவதானிகள் கருத்து. தோல்வியுற்றால் அடுத்தது என்ன? பாராளுமன்றம் கலைக்கப்படுமா? இல்லை உடன்படிக்கை எதுவும் எட்டாமல் இங்கிலாந்து வெளியேறுமா? விடையில்லாத பல கேள்விகள் அனைவரின் மனங்களிலும் தொங்குகிறது. இவற்றிற்கு வரும் நாட்கள் பதிலிறுக்குமா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • கம்பனின் படைப்பில் கைகேயியின் மனம்

    -முனைவர் த. மகாலெட்சுமி

    கம்பராமாயணத்தில் தசரதன் என்ற அரசன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர்கள் இருந்தனர். எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். யாகங்களின்  பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலைக்கு திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயிக்கு பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரைக்கு இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர். கைகேயி ஒருமுறை போரில் தசரத மன்னனின் உயிரைக் காப்பாற்றினாள். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இந்த வரங்களின் துணையோடு, ராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனியின் தூண்டுதலால் ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள். இத்தகைய பாத்திரமேற்றிருக்கும் கைகேயி பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

    கைகேயியின் பிறப்பு

    கைகேயியைப் பற்றிப் பலரும் பல்வேறு விதமாகப் பேசுகின்றனர். இவளை ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. சனகன் மகள் சானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரசுவதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரசுவதிதேவி தரிசனம் தந்தாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.

    சரசுவதி சிரித்தவாறு, எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சாரசுவத இஷ்டீ என்ற யாகம் செய். நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரசுவதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரசுவதி சொன்ன சாரசுவத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரசுவதிதேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி உண்டாகும்! என்றாள். அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.

    தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள்.

    ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிசேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள். இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரசுவதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரசுவதி. அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. பிரச்சனை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.

    இத்தகைய வேலையைத்தான் சரசுவதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரசுவதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். தசரதரை வரவேற்றாள் சரசுவதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.

    சரசுவதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார். மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரசுவதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி. சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரசுவதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோசங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மகாவிஷ்ணுவே உங்கள் பரம்பரை பூசா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூசை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து  என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரசுவதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரசுவதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.

    கைகேயிக்கும் இராமனுக்கும் உள்ள உறவு நிலை                                                     

    கைகேயியிக்கும் இராமனுக்கும் இடையே இருந்த உறவு மிகவும் ஆழமானது. அவன் தாயான கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டு மகிழ்ந்தாள். முதலில் கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவளுக்கு உண்டான கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால்  அவளை ஏசுதலாய் பேசி விமர்சிக்கிறாள்.

    “எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல” (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசிப்பேசுகிறாள்.

    எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
    தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
    உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
    மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!
    (கம்ப.1471)

    என்று சொல்லக் கேட்டதும், இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்தாள் கூனி. ‘கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்’ என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது.

    கைகேயியின் சூழ்வினை

    நல்லவளாக இருந்த கைகேயி, மந்தரையின் சூழ்ச்சியால் மனமாற்றம் ஏற்பட்டு இராமனைக் காடு புகப் பணித்தாள். ஆயினும் நல் அரசனாய் வருவதற்குத் தவம் மேற்கொண்டு, புண்ணியத் துறைகள் நீராடி 14 ஆண்டுகள் கழித்து வா என்றும். 14 ஆண்டுகள் என்பதை ஏழு-இரண்டு ஆண்டுகள் என்று சுருக்கிக் கூறியும், ‘வா’ என்றும் கூறினாள். மேலும் ‘இயம்பினன் அரசன்’ என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது என்பதைச் சுட்டினாள். ‘பரதனே’ என்பதில் அவளின் புத்திர பாசம் மேலோங்கியது.

    ஆழி சூழ் உலகம் எல்லாம்
    பரதனே ஆள, நீ போய்த்
    தாழ் இரும் சடைகள் தாங்கித்,
    தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
    பூழி வெம் கானம் நண்ணிப்,
    புண்ணியத் துறைகள் ஆடி,
    ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
    இயம்பினன் அரசன்‘‘ என்றாள்.
    (அயோத்தி – கைகேயி  சூழ்வினை.1601)

    தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

    கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் அனுப்பக் காரணம்

    யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல்) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும், என்கிறது இந்துமத சாத்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள். இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம். இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். எனவே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்பது கைகேயியின் கணக்கீடாகும்.

    தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். முதலில் கைகேயிடம் புலம்புகிறான். பின், இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவனை நினைத்து புலம்புகிறான். இராமன்மேல் கொண்ட பாசம் ஒருபுறம், இராசநீதி தவறிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் மறுபுறம், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம்… தசரதன் தவிக்கிறான்…. அந்தத் தவிப்பை கம்பன் இங்கே படம் பிடிக்கிறான்.

    “என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு” என்று கதறுகிறான்.

    கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
    உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
    பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
    மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற’ என்றான்  (கம்ப.1611)

    கைகேயி இரண்டு வரங்களை கேட்டுவிட்டாள். ஒன்று பரதன் நாடாளவும், மற்றது இராமன் காடாளவும். என் கண்ணை வேண்டுமானாலும் தருகிறேன், என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன், முதல் வரத்தை பெற்றுக் கொள், இரண்டாவது வரத்தை மற என்று கெஞ்சுகிறான்.

    கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் = என் கண்கள் வேண்டும் என்றாலும் நான் தருகிறேன்.

    என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? = என் உயிர் வேண்டுமா, அது உனது, எடுத்துக் கொள்.

    பெண்ணே! நீ பெண் அல்லவா (கொஞ்சம் பெண்மையின் இரக்கம் இருக்காதா என்று சொல்லிப் பார்க்கிறான்)

    ண்மைக் கைகேயன் மானே!  இப்படிச் சொல்லியும் அவள் அசைந்த பாடு இல்லை… கைகேயன் குலத்துப் பிறந்த மானே

    பெறுவாயேல் = வேண்டும் என்றால்

    நீ மற்றையது ஒன்றும் மற = அந்த இன்னொரு வரத்தை மறந்து விடு (கேட்காதே என்று சொல்லவில்லை, மற என்கிறான் )

    நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
    உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
    என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
    நன்மகன் இந்த நாடிறவாமை நய’ என்றான். (கம்ப.1526)

    கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் நட்பை அழகாய் விளக்குகிறது. “இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
    கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
    ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
    தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார். (கம்ப.1591)

    இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. “மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்.”

    மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
    பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
    என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
    மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் (கம்ப.1604)

    தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் “நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல” என்று தசரதன் மனம் வெறுத்துக் கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு “நீ என் தாயே அல்ல” என்று சொல்லிவிட்டுப் போனபின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

    எந்த மகனுக்காக அவள் அரச பதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப்போல் வாழ ஆரம்பித்தபோது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவற்றை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

    இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தைக் காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனத்தில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள்மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாததாக அமைகிறது.

    தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாக உள்ளது. ஆனால் இராமன் கைகேயிமீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை என்பதை உணர்த்துகிறது. அதனால் தசரதனிடம் “தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்” என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை ‘தெய்வம்’ என்று உயர்த்துகிற பண்பைக் காணலாம்.

    தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
    தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான். (கம்ப.10079)

    இதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். இதனால் இராமன் கடைசி வரை கைகேயியின் மீது தாய்ப்பாசம் குறையாமல் இருந்தான் என்பது புலப்படுகிறது.

    இராமன் காடு சென்றதால் கைகேயிக்கு என்ன நன்மை என்றால் எதுவுமே இல்லை. மாறாகத் தன் கணவனான தசரதனை இழந்து விதவையாகிப் போனமை; தன்மகன் பரதனின் வெறுப்புக்கு ஆளாகியமை; சிற்றன்னையாக இருந்தபோதிலும் தன் தாய் போல கைகேயிக்கு மதிப்பளித்த இராமனை காட்டிற்கு அனுப்பியமை; இதனால் அயோத்தி மக்களின் ஆத்திரத்திற்கு ஆட்பட்டமை எனப் பல வழிகளிலும் கைகேயி துன்பப்பட்டாள். அதேநேரம் கூனியாகிய மந்தரை இராமனைக் காட்டிற்கு அனுப்பியதன் மூலம் தனது சதித்திட்டத்தை நிறைவேற்றிக் களிப்புற்றாள்.

    தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்குப் பிறந்தவனாக இருந்தாலும் இராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கடினம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம். கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

    இக்கட்டுரை வழி கைகேயியின் பிறப்பு நிலை மற்றும் மண வாழ்க்கை நிலை வெளிப்பட்டு இருப்பினும் இராமனைத் தன் மகனாகவே பாவித்து வளர்த்த பாங்கு சிறப்பிற்குரியது. எனினும் சூழ்ச்சிக்காரி மந்தரை(கூனி)யின் சூனியப் பேச்சைக் கேட்டு மனமாற்றம் அடைந்து தன் மகன் பரதனை அரியணையில் அமர்த்த நினைப்பது மற்றும் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்புவது கதைக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் ஆனால் உண்மையில் கைகேயி கேட்பார் பேச்சைக் கேட்பவளாகவே காட்டப்படுகிறாள் என்பது நன்கு விளங்கும். 

    துணை நூற்கள்

    1. கம்பராமாயணம் – ஆரண்ய காண்டம் உரையுடன், கம்பன் அறநிலை, கோவை-37
    2. ஸ்ரீமத் கம்பராமாயணம், புலவர் சி. திருநாவுக்கரசு, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17
    3. கம்பர், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1
    4. கம்பன் புதிய பார்வை, அ.ச. ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை-17
    5. கம்பன் கற்பனை, முனைவர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

    சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்

     

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்… கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன

    ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.

    வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்

    எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.

    ( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    070131 Ananda -graphite – A4-cam 300dpi

     

    “நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
    வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
    மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
    நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • முன்னுரை சாம்பியன்ஸ் சென்னை….!

     

    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    060709 -Rang de Krishna – oil on canvas 2006 18×24” ? wm

    வறுமை சிவப்புநிறமே, வர்ணத்தார் கண்ணன்
    கருமைரங் கீலாவில் காட்சி: -வறுமை
    சுதாமர்க்கன் றேவளம் சேர்த்தவரை நெஞ்சே
    கதாநா யகனாய்க் கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

     

    கிரேசி மோகன் & குருகல்யாணின் – குழந்தைகள் தின பாடல்

    குழந்தைகளின் மனம்கவர்ந்த கலைமாமணி கிரேசி மோகன் அவர்களின் வரிகளில் இசை அமைப்பாளர் குரு கல்யாண், குழந்தைகள் தினத்தை ஒட்டி (Nov 14 2018) ஒரு தனி பாடல் இசை அமைத்து வெளியிட உள்ளார். இப்பாடல் குழந்தைகளை கவரும் வண்ணம், துள்ளல் இசையாக வந்துள்ளது, இதில் தனித்துவம் மிக்க திரு கிரேசி மோகன் அவர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த காணொளியில் அணைகட்டுச்சேரி குழந்தைகள் திறன் மேம்பாட்டு அமைப்பான “வெற்றியாளர் பட்டறை”யை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுள்ளனர் என்று குரு கல்யாண் தெரிவித்தார்.

    பையன் மண்ணைத் தின்றால்
    வையாதே….
    வாய்க்குள் பார்….
    வையம் தெரியாவிட்டால்
    ஐயமே இல்லை நீ
    அசோதை அல்ல….!

    மதர் தெரேஸாவா
    எம்.எஸ்ஸா
    முனியம்மாவா….
    வியப்பில் நாய் வால் நிமிர்ந்தது
    குப்பைத் தொட்டியில் பெண்
    குழந்தை….!கிரேசி மோகன்…..!

     

     

    Share
  • காண அருள் தாமுருகா !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    தேவரை வதைத்த சூரர்
    திருந்திடச் செய்த வேலா
    பூவுலகு எங்கும் அசுரர்
    புரிகின்ற கொடுமை தன்னால்
    மேவிய துயரம் கொண்டு
    விக்கித்து நிற்கும் மக்கள்
    ஓலங்கள் போக நீயும்
    ஓடியே வருவாய் ஐயா !

    உபதேசம் அளித்த குருவே
    உலகுளோர் துயரம் பார்நீ
    நிலையான அறத்தை மறந்து
    நிற்கின்றார் மனதை மாற்று
    விலைபேசும் நிலையில் உள்ளார்
    வெற்றிவேல் என்றிட செய்வாய்
    குலையாத ஞானம் தன்னை
    குமராநீ கொடுக்க வேண்டும் !

    காமம் நிறை மக்களெலாம்
    காமம் அற்ற கந்தனுக்கு
    கல்யாணம் செய்து வைத்து
    களிப் பெய்தி நின்றிடுவர்
    சேமம் உற வாழ்வதற்கு
    சேவல் கொடி வேலவனார்
    பாதமதை பற்றி நின்று
    பாடி நிற்போம் கவசந்தனை

    வள்ளி தெய்வ யானையுடன்
    காட்சி தரும் திருமுருகா
    உள்ள மெலாம் உன்நினைவை
    இருத்தி விடு திருமுருகா
    கள்ளம் நிறை எண்ணமெலாம்
    கழன்றோடச் செய் முருகா
    கால மெலாம் திருமுகத்தை
    காண அருள் தாமுருகா !

    Share
  • எல்லோருக்குமான உலகத்தை நோக்கி….

    எஸ் வி வேணுகோபாலன்

     

    குழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’, நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி அவர்களது கண்கள்! குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல, எப்போதுமே குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

    எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியில் பிறப்பதில்லை. அவர்களது எதிர்காலத்தை அவரவர் வாழ்விடமும், சூழலும் தீர்மானிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள் எனில், பிறக்க அனுமதிக்கப்படுவதே சாதனை. அதன்பிறகும் தொடரும் கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.

    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
    பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
    கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
    கலயங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி ….

    என்று ‘துலாபாரம்’ எனும் திரைப்படத்திற்கான பாடல் ஒன்றில் எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

    ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள், பிறந்த 28 நாட்களுக்குள் கண்ணை மூடிவிடுகின்றன என்கிறது யூனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. தப்பி வளரும் குழந்தைகளில் உடல் வலுவோடு இருப்போர் எண்ணிக்கையும் சுவாரசியம் அற்றது. 20 சதவீத குழந்தைகள் மிக மிக உடல்வலு குறைவான – ஊட்டச்சத்து போதாத எண்ணிக்கையில் இருக்கின்றனர். நாம்தான் உலக பட்டினி நாடுகள் வரிசையில் 103வது இடத்தில் இருப்பவர்கள் ஆயிற்றே!

    51 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும், கர்ப்பிணிப் பெண்களில் 65 முதல் 80 சதவீதம் வரை இந்த பிரச்சனையால் பாதிப்புற்று இருப்பவர்கள். இவர்கள் சுமக்கும் பிள்ளைகள் எப்படி வலுவாகப் பிறந்து உடல் நலத்தோடு வளர முடியும்? பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறி வாழும் மனிதருக்கெல்லாம்.. முதலில் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்.

     

    குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் எனில், அவர்களது இளமைக்காலம் துடிப்புடன் இருக்க வேண்டும். கல்வி பெறும் வயதில் பாடசாலை போகவேண்டும் பாப்பா எழுந்திரு என்று பாட்டுப்பாடி அனுப்ப வேண்டும். ‘தலைவாரி பூச்சூட்டி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…’ என்று பாவேந்தர் இனிமையாகச் சொல்வதுபோல் ஆசை தீர அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன?

    கிட்டத்தட்ட ஒரு கோடி குழந்தைகள் பள்ளிக்கூட வாசல் மிதிப்பதில்லை. மகிழ்ச்சிக்கான குறியீட்டு வரிசையில் நமது எண் 133. ‘ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்த மானிடர்கள்’ நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் தேசம் இந்தியா. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 2009 -17 ஆண்டுகளில் மூன்று பங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. 90 ஆயிரத்திற்கும் அதிகமான கொடுமைகள், வன்முறைகள், கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், அராஜக தாக்குதல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.காஷ்மீர் மாநிலத்தில் கதுவா சிறுமி, எட்டு வயதில் எதிர்கொண்ட அதிர்ச்சிக் கொடுமையை நினைத்துப் பார்த்தால், குழந்தைகள் தினத்தை நினைவூட்டும் தகுதி கூட நமக்கு உண்டா என்று கலங்குகிறது நெஞ்சம். குழந்தை திருமணங்கள் இன்னும் நிற்காத நாடு.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் எங்கோ உறங்கிக்கொண்டிருக்க, நாடு முழுவதும் சிறுவர், சிறுமியர் கணக்கற்றோர் அன்றாடம் சுரண்டப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அலைமோதுவதை எழுத்தாளர் சுஜாதா தமது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்:

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் ……..***

    (முழு கவிதை கீழே தரப்பட்டுள்ளது)

    என்று நீளும் அந்தக் கவிதை, சம காலத்திலும் தொடரும் குழந்தைத் தொழிலாளர் அவலத்தை எண்ணி சமூகத்தை வெட்கமுறச் செய்யும்.

    Ural Rahul, 15, works on a car at a repair garage in Dimapur, India’s northeastern state of Nagaland, on June 12, 2013, the World Day Against Child Labour. The day, first observed in 2002 and sanctioned by the International Labour Organization (ILO), aims to highlight the plight of children engaged in work that deprives them of adequate education, health, leisure and basic freedoms, violating their rights. AFP PHOTO/CAISII MAO (Photo credit should read Caisii Mao/AFP/Getty Images)

    இப்படிப்பட்ட சூழலில்தான், குழந்தைகள் தினத்தை நாம் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. குழந்தைகள் தினம் என்பது, ஆரோக்கியமான தலைமுறையை அன்போடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை சமூகத்திற்கு நினைவூட்டுகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி குழந்தைகளை சமமாக பாவிக்க வற்புறுத்துகிறது. வீட்டு வேலைகள் செய்யப்பழக்குவதிலிருந்து விரும்பிய கல்வி பெறச் செய்வது உள்ளிட்டு இரு பாலரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் உணர்வை ஊட்டுகிறது.

    பாலியல் சீண்டல், பாலியல் வக்கிரம் மற்றும் பலவிதமான பாலியல் கொடுமைகளுக்கு சிறார்கள் அதிகம் உள்ளாகும் செய்திகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன. பிள்ளைகளுக்கு இவை குறித்து எளிய முறையில் அறிவுறுத்தி, எக்குத்தப்பாக யாரும் நடந்து கொள்வதை சகிக்காத துணிவும், அப்படி நடக்க எத்தனிப்போர் குறித்து உடனே தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நேர்த்தியும் பழக்க வேண்டியது நம் கடமை.

    கற்பனையும், கைவண்ணமும், கனவுகளும் சிறகடிக்கும் பருவம் குழந்தைப் பருவம். குழந்தைகள் உலகம் குதூகலமிக்கது. குழந்தைகள் உள்ளம் பரந்துவிரிந்தது. குழந்தைகள் எளிதில் கோபமுறவும், மிக எளிதில் குளிர்ந்து புன்னகைக்கவும் வரம் பெற்றவர்கள். பாட புத்தகங்களுக்கு வெளியே உற்சாகமான வாசிப்புக்குக் காத்திருக்கும் நூல்கள் குழந்தைகள் கைபடக் காத்திருக்கின்றன. கண்களை அகலமாக விரித்து அவர்கள் மேற்கொள்ளும் வாசிப்பு அனுபவம் கவித்துவமானது. முன்னேற்றமான மாற்றங்களுக்கான நம்பிக்கையின் வேரில் குழந்தைகள் மிக அழகாகத் தண்ணீர் ஊற்ற முடியும். குழந்தைகள் தினம் அதைத்தான் கோருகிறது.

    குழந்தைகள் தினம், வளர்ந்த மனிதருக்குள்ளும் குழந்தைத் தன்மை மலர்வதை .வண்ணமுறக் கொண்டாடி வருகிறது. எல்லோருக்குமான உலகத்தை சமைக்கும் பாதையில் குழந்தைகள் தினம் கூடுதல் மகிழ்ச்சியை வீடெங்கும் நிரப்பிக் கொடுக்க வருகிறது. குழந்தைகள் தினம் வாழ்க!.

    நன்றி: மகளிர் சிந்தனை (நவம்பர் 2018)

    சர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி சுஜாதா எழுதிய கவிதையை அப்போதே குமுதம் இதழில் வாசித்திருக்கிறேன்… பெரும்பாலான வரிகள் நினைவில் உண்டு. இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன்.. எழுத்துப் பிழையோடும் சில தளங்களில் கண்டேன்… குமுதம் கவிதையைக் கண்ணில் பாராமல் இதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராக இல்லை. எனினும் கிடைத்தை நீங்களும் வாசிக்கலாம்: (இன்னின்ன வேலைகளையெல்லாம் செய்வாய் என்று குழந்தையிடம் மனம் வெதும்பி உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையின் கடைசி வரி, அவன் பிச்சையும் எடுக்க வைக்கப்படுகிறான் என்பதைக் கண்ணில் நீர் வரச் சொல்லி முடிகிறது)

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்

    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்

    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்

    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்

    சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்

    காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்

    கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

    மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்

    மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்

    கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்

    கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

    ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்

    ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்

    திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

    தீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி

    வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து

    வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

    குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு

    கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்

    சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

    சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

    *****************************

    Share