மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்
சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்… கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன
ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.
வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்
எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.
( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )