Blog

  • உன்னைப் போல எவருண்டு!

     

    கவிநயா

    சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
    சின்னப் பாப்பா வா
    கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
    கண்ணே பாப்பா வா

    அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
    அழகாய்ப் பேசிடணும்
    நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
    கண்ணாய்ப் போற்றிடணும்

    உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
    பகிர்ந்தே உண்டிடணும
    உதவி வேண்டும் பேர்க்கு உடனே
    ஓடி உதவிடணும்

    கோபம், அழுகை, பிடிவாதம், இவை
    எல்லாம் விட்டிடணும்
    அன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்
    மனதில் நின்றிடணும்

    குழந்தை உள்ளம் மாறாமல் நீ
    உலகில் வாழ்ந்திடணும்
    உன்னைப் போல எவருண்டு என
    உலகம் சொல்லிடணும்!

    படத்திற்கு நன்றி :

    http://www.pakindifun.com/picdetail.php?catId=33&tid=471

    Share
  • காணிக்கை

     

    சு. கோதண்டராமன்

    கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
                காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
                “பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
                அறங்காவலரால் ஆலயம் சூறை,
                என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.

                நேரே  நல்லோர்க் கீவாய்” என்றது.

                தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
                வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
                “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
                தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”

               
                வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
                “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
                ஆலயப் பணியின் புனிதம் மறந்து
                அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”

                வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
                எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
                உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
                “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
         எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.”

    தெருவில் இறங்கி நடந்தபோது
    எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
    “கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
    பலனை அலசுதல் மாபெரும் மடமை.”

    காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
    கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

    Share
  • குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! (2012)

     

    பவள சங்கரி

     மலரும் மொட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    உலகிலேயே மிக அதிகமான குழந்தை மக்கள் தொகை உடைய நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. குழந்தைகள் மீது அதீதமான அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர், நம்முடைய சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லார் நேரு. இவரின்  நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ம் தேதியன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1925ம் ஆண்டு, ஜெனீவாவில் குழந்தைகள் நலவாழ்வு என்பதன் அடிப்படையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறர்கள். 1954ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் தினத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. சர்வசேத குழந்தைகள் தினம் நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.  குழந்தைகள்தான் ஒவ்வொரு நாட்டின் வருங்காலத் தூண்கள் மற்றும் அந்நாட்டின் எதிர்காலம்ர்ர் அவர்கள்தான் என்று பல பெரியோர்களால் போற்றப்பட்டாலும், அவர்களை நல்வழியில் செலுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசியர்களுக்கு உண்டு.

    உலகளவில் கோடிக்கணக்கானக் குழந்தைகள் இன்று ஊட்டச்சத்து குறைபாடு, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் போன்று பலவிதமான பிரச்சனைக்களுள்ளாவதையும் கருத்தில் கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய காலமிது. சரியான உணவும், நல்ல உடைகளும், சுகாதாரமான தங்குமிடங்களும் இல்லாமல் எண்ணிலடங்காத குழந்தைகள் இன்று அல்லலுறுவதைக் காண மனம் வேதனை கொள்ளுகிறது. குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் நலவாழ்வு குறித்து பல்வேறு திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றியிருந்தாலும் அவை யாவும் இன்று நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. அனைத்தும் பேச்சளவிலேயே நின்று கொண்டிருப்பதே நிதர்சனம். இந்த பிரச்சனைகளெல்லாம் களையப்பட்டு குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகச் சிறகடிக்கும் காலமே அவர்களின் வசந்த காலம்.  அடுத்த ஆண்டின் குழந்தைகள் தினமாவது அப்படி ஒரு தினமாக அமைய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்!

    தளிரே, எம் இளந்தளிரே
    அரும்பாய் நீ மலர்ந்திடவே
    கனிவாய் நீ கற்றிடுவாயே

    உவகையும் ஊட்டமும் ஊறட்டும்
    ஈகையும் எளிமையும் இருக்கட்டும்
    நம்பிக்கையும் ஊக்கமும் பெருகட்டும்

    சிறகு விரித்து பரவசமாய்
    வானில் மிதந்து களிப்பாய்
    கடமையுணர்ந்து கருத்தாய்

    காலம் கடந்து ஞானம் நிறைந்து
    வாழையடி வாழையாய் வாழ்கவே!

     

    படங்களுக்கு நன்றி :

    http://www.desicomments.com/childrens-day/

    Share
  • “பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை”

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 53)

    புர்லா திரும்பியதும்  மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிக்கையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட  வேண்டியது. இதில் ஏதும்  சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

    இப்படி எல்லோரும் போய்க்கொண்டிருந்தால் இங்கு மிகுந்த நாட்களுக்கு வேலை நடக்க வேண்டாமா? வேறு வேலைக்கு உத்தரவு வந்த போதிலும் இருக்கும் வேலையைச்  செய்ய ஆட்கள் இல்லையென்று நிர்வாக மேல் அதிகாரிகள் வேலை கிடைத்தவர்களை விடுவிக்க மறுத்தார்கள். அந்த ஆபத்து வேறு ஒன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது, என் செக்‌ஷனுக்கு பொறுப்பாக இருந்த தேஷ் ராஜ் பூரி எனக்கு ஆசுவாசம் அளித்திருந்தார். “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் சொல். பதிலுக்கு ஆள் வேண்டும் என்று நான் உனக்குத் தடை சொல்ல மாட்டேன். உடனே உன்னை விடுவித்து விடுகிறேன். கவலைப் படாதே” என்று எப்போதாவது தோணும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு வருஷங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த சமயம் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் ஒரு சில மாதங்களில் மிகவும் கனிந்த மனிதராக மாறியவர். அந்த ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவரிடம் நான் வேலை பார்க்கவில்லை. ஆனால், அன்று விட்டுப்போன அந்தக் கனிவை இன்று இப்போது திரும்பப் பார்க்க முடிந்தது. உறவுகள் எப்படியெல்லாம் தான் மாறுகின்றன!

    Wanted columns பார்த்து வேலைக்கு  மனு எழுதிப் போடுவதும் எங்கிருந்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பும் தொடர்ந்தது. ஊர் சுற்றும் ஆசையும் அந்த எதிர்பார்ப்போடு சேர்ந்து கொள்ளும். வந்தது ஒரு அழைப்பு. Eastern Railway யிலிருந்து. கல்கத்தாவுக்குப் போகவேண்டும் நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். மிருணாலுக்கு சந்தோஷம் தான். ஆனால் கல்கத்தாவில் அவன் குடும்பத்தார் யாரும்  இல்லை. அப்பா இன்னமும் டாக்காவில் தான் வேலை பார்க்கிறார். ஆனால் முன்னொரு தடவை எல்லோரும் கல்கத்தா போயிருந்த போது எங்களுக்கு இடவசதிகள் செய்து கொடுத்தவர் இம்முறையும் தனக்குத் தெரிந்தவருக்கு ஒரு கடிதம் கொடுத்தார் பாலிகஞ்சில் வெகு காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். அங்கு நான் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் தான் தங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் பரிட்சை. மறுநாள் நேர்காணல். நேர்காணல் 12 மணிக்குள் முடிந்துவிடும். பின்  மதியம் எங்கும் போகலாம். அல்லது இன்னும் ஒரு நாள் தங்கவும் செய்யலாம். இரவு தான் பம்பாய் மெயில். காலை ஐந்து மணிக்கு ஜார்சகுடா போய்ச் சேர்ந்து விடும். அலுவலகத்துக்கு 10 மணிக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

    இம்முறை குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்கவில்லை. நேர் காணலில் தான் நான் என் இயல்பில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் கடைசியில் என்னை அறியாது தவறிழைத்தது தெரிய வந்தது. மூன்று அதிகாரிகள் நேர்காணலில் இருந்தனர். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகவே பதில் சொன்னதாகத் தான் நான் நினைத்தேன். கடைசியில் அந்த மூவரில் மூத்தவராகத் தோன்றியவர் ஒரு கேள்வி கேட்டார்.

    ”பதினைந்து நிமிஷங்களாகப் பார்த்து வருகிறேன். நாங்கள் உன்னை இங்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கான உன் தகுதியை நிச்சயிக்கிறவர்கள். நாங்கள் உயர் அதிகாரிகள். எங்களைப் போன்ற ஒருவரிடம் நீ வேலை செய்ய வேண்டும். எங்கள் கேள்விகளுக்குப் பதில் தந்தாயே தவிர ஒரு தடவை கூட எங்களுடன் பேசும் போது “Sir” என்று நீ சொல்ல வில்லை. உயர் அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லையே உனக்கு?” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது? என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின்? ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தால்தான் “Sir” சொல்ல வரவில்லையா? வேலை கிடைக்கப் போவதில்லை என்று வெளியே வரும்போதே மனதுக்குள் நிச்சயமாகி விட்டதால் அதைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளவில்லை. இன்னும் எத்தனையோ வாய்ப்புக்கள் விளம்பரங்கள் வரும் என்று மனம் சமாதானம் கொண்டது.

    மறுபடியும் பேலூர் மடம் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும்  என்று ஒரு ஆசை. மிக அழகான  கோயில். மடம். ஆற்றங்கரை. எல்லாமே நமக்குப் பழக்கமில்லாத புதிய முறையில் கட்டப்பட்ட கோயில்கள். அன்று மாலை காலேஜ் ஸ்ட்ரீட் போனேன். அங்கு தான் அந்த தெரு முழுதுமே நம்மூர் மூர் மார்க்கெட் போல நடைபாதையிலும் கடைகளிலும் பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு நடை பாதைக் கடையில் Bertrand Russel-ன்  A History of Western Philosophy கிடைத்தது. பெரிய புத்தகம் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது. எனக்கு ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷம். ரஸ்ஸல் எனக்கு பிடித்தமானவராகியிருந்தார். பாதியும் ஸ்ரீனிவாசனும் எனக்கு ரஸ்ஸலைப் பழக்கி விட்டிருந்தார்கள். மிகுந்த நகையுணர்வும் மிகக் கஷ்டமான தத்துவ கருத்துக்களையும்  மிக எளிய ஆங்கிலத்தில் மிக எளிய நடையில் சொல்வதில் அவர் திறமைசாலி. அவரைப் போலவே C.E.M Joad-ம் மிக எளிய நடையில் விளக்கி எழுதிய தத்துவ தரிசனப் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவற்றை ரஸ்ஸல் சொல்லப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது.

    ரஸ்ஸல் மாதிரி வெகு சிக்கலான தத்துவார்த்த தரிசனங்களையும் வேடிக்கையாகவும்  அதே சமயம் அவை சிதைபடாமலும் சொல்வது ஒரு கொடை என்று தான் சொல்ல வேண்டும்

    புனிதர் அகஸ்டினின் Confessions பற்றி பேசும்போது ரஸ்ஸலுக்கு மகாத்மா காந்தி தன் பால்ய பருவத்து பாலியல்  உணர்வுகளைக் குற்ற உணர்வுடனேயே தன் சுய சரிதத்தில் (My Experiments with Truth) நினைவு கொள்வதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் ஒரே ரக ஜீவன்கள் என்பார். அந்தக் குற்ற உணர்வு ரஸ்ஸலுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்னொரு இடத்தில் அவர் காலத்து மனோவியல் அறிஞர்கள் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஆழந்து மனம் என்றே ஏதும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது போல பௌதீக அறிஞர்களும் பொருளைப் பற்றி விளக்கப்போக கடைசியில் பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை. எல்லாம் ஆராயப் போகப் போக ஒரு சக்தியின் வெளி தான் கிடைப்பது என்றும் சொல்வதெல்லாம். தையல்காரர்கள் உலகத்தில் எல்லோரும் நிர்வாணமாகத்தான் செல்கிறார்கள், ஆடை என்று ஒன்று உலகத்தில் இல்லை என்று சொல்வது போலும், , செருப்பு தைப்பவர்கள் உலகத்தில் எல்லோரும் வெறுங்காலுடன் தான் நடக்கிறார்கள், என்றும் சொல்வது போல் இருக்கிறது என்பார். தன்னுடைய சகா ஆல்ஃப்ரெட் நார்த் வொய்ட் ஹெட் என்ன சொல்கிறார் என்றே ஒருவருக்கும் புரியாது அவர் விளக்கங்கள அவ்வளவு கடினம். ஆனால் அவர் பிரசங்கங்களுக்கு பெருங்கூட்டம் கூடும். வொயிட் ஹெட் பேச்சைக் கேட்டு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை என்றும் காரணம் சொல்வார்.  இப்படி ரஸ்ஸல் பெரிய விளக்கங்கள் சொல்லிச் செல்லும்போது நகைச் சுவையான கமெண்ட் அடித்துக்கொண்டே செல்வார்.

    ஆனால் ஐம்பதுகளிலும்  அறுபதுகளிலும் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் பேசப்பட்டது  போல் இப்போது அவர்களை யாரும் நினைவு கொள்வதில்லை. இதுவும் ஒரு இழப்பாகத்தான் தோன்றுகிறது. இந்த சோக உணர்வு ஒரு வேளை வயது முதிர்ந்த காலத்தில் பழைய நினைவுகளைக் கிளறும்போது தோன்றுவது இயல்பு என்று இளைஞர்கள் சொல்லக் கூடும்.

    அப்படித்தான் அன்று  எனக்கு இருந்தது. இந்த இடத்தை விட்டுப் போகவேண்டும் என்று  முனைப்போடு முயன்று கொண்டிருக்கும் போதே இவர்களை எல்லாம் விட்டுப் பிரிகிறோமே என்ற நினைப்பும் உடன் தோன்றிக்கொண்டே இருந்தது.

    புர்லா திரும்பியதும் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இந்த கல்கத்தா பயணம் வீண் தான் வேலை கிடைக்காது என்றால் அவர்கள் காரணம் கேட்டுச் சிரித்தார்கள். ”உனக்குத் தெரியாது. உனக்குள் ஒரு திமிர் இருக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கவலைப் படாதே. இன்னும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும்” என்றும் சமாதானம் சொன்னார்கள். கிடைத்தது. இப்போது எனக்கு அழைப்பு வந்தது கட்டக்கிலிருந்து. ஒரிஸ்ஸாவின் தலைநகர். அப்போது புபனேஸ்வர் கட்டப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் உள்துறை யிலிருந்து அழைப்பு. போனேன். எப்படிப் போனேன் என்று நினைவில்லை. பஸ்ஸில் தான் போகவேண்டும். ஆனால் பஸ்ஸில் போய்ப் பார்க்க வேண்டும் என்று அந்நாளைய வாலிப வீம்பில் ஒரு முறை போனேனே தவிர நிர்ப்பந்தத்திற்கு கட்டக் பஸ்ஸில் போன நினைவு இல்லை. ஏதோ கொஞ்ச தூரம் பஸ்ஸிலும் பின் எங்கே ரயில் ஏறினேன் என்று நினைவில்லை.

    இந்தப் பயணத்தில்  என்னுடன் கட்டக்கில் பரிட்சைக்கும் நேர்காணலுக்கும் வந்திருந்தவர்கள் இன்னம் நான்கு பேரை எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மற்ற எந்த பயணத்திலும் யாரும் நினைவில் இல்லை. டி.எம். ராகவாச்சாரி நாக்பூரிலிருந்து வந்தவன். பி.எஸ் ராஜூ, எங்கிருந்து என்று நினைவில் இல்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து வந்தவர். எங்கள் எல்லோரையும் விட மூத்தவர். நல்ல உயரமான மனிதர். டி.ஆர்.ஜி பிள்ளை என்று எனக்கு இளையவனான ஒருவன். பின் ஏ. சீனிவாசன் போற்றி. இருவரும் மலையாளிகள். நினைவிலிருக்கக் காரணம் இவர்கள் எல்லோருடனும் வெகு காலம் பழக விதிக்கப் பட்டிருந்தார்கள் என்பது அன்று எங்கள் எவருக்கும் தெரியாது. எப்படியோ நாங்கள் ஐவரும் கட்டக்கில் சந்தித்த கணத்திலிருந்தே வெகு நெருக்கமாக பேசிப் பழகினோம் அதுவும் ஏதோ விதிவசத்தில் நடந்தது போல் தான்.

    கட்டக்கில் தங்கியது,  சுற்றி உலவியது எதுவும்  எனக்கு நினைவில் இல்லை. சுற்றி எங்கும் குடிசைகள், ஓரு பெரிய விஸ்தாரமான கிராமம் போலத் தான் இருந்தது கட்டக். ஒரு பெரிய அழகான கட்டிடம் என்று பார்த்தது ராவென்ஷா காலேஜ் கட்டிடம் ஒன்று தான். நேதாஜி வாழ்ந்த ஊர் அது. அவர் படித்த காலேஜ் அது. அவர் வாழ்ந்த, படித்த காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்குமோ, கற்பனை செய்துக்கொள்ளத் தான் வேண்டும்.

     தொடரும்

    Share
  • இலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி

     

    இன்னம்பூரான்
    14 11 2012

    சில வருடங்களாகத்தான் எனக்கு தமிழார்வம். தற்செயலாக, அது நிகழ்ந்தது என் பாக்கியம். கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்னால் பரிசாக கிடைத்தது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் கட்டுரை நூல் ஒன்று. அப்பொழுது ஒரு சொல் கூட புரியவில்லை. இப்போது அகஸ்மாத்தாக மறுபடியும் கிடைத்தது; புரிந்தது. அதே மாதிரி இதுவும் கிடைத்தது. வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். ஒரு டால்ஸ்டாய் கதை. ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுகிறான். பத்து வயதில் அதை படித்து விட்டு அழுததின் நற்பயனாக, அப்பா நல்ல நூல்களை மதுரையிலிருந்து கொண்டு வந்து கொடுத்து ஊக்கமளித்தார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள். ஒரு அணா ஒன்று. ராமுலு பிரசுரகர்த்தா என்று நினைவு. ஆங்கிலத்திலும், தமிழிலும் தொகுப்புக்கள். அன்று பிடித்த புத்தகபைத்தியம் என் மக்களுக்கும் இருப்பது எனக்கு திருப்தி.

    அது ஒரு புறமிருக்க, ஒரு கவலை என்னை ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் அகல்யை சாபவிமோசனத்தை பற்றி சொன்னபோது, யார் அந்த பித்தன் என்று மெத்தப்படித்த பெண்மணியொருவர் வினவினார். தமிழுலகில் நடமாடும் நண்பரொருவரிடம் நான் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ பற்றி அளவளாவியபோது அவர் தி.ஜ.ர. பற்றி பேசுகிறேன் என்று நினைத்தபோது, நான் திகைத்துத்தான் போனேன். எனக்கு பாடம் எடுத்த முனைவரொருவர் ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இருக்கிறதா?’ என்று உத்வேகத்துடன் வினவினார். அதன் பிறகு பல தமிழன்பர்களிடம் பேசும்போது, பெரும்பாலோர் இலக்கிய ரசனை, விமர்சனம், ஆய்வு, ஒப்பியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்தது. இந்த இலக்குகளை நாடும் நூல்கள் குறைவு என்றாலும், இருப்பதையாவது படிக்க வேண்டாமா? அப்படி படித்ததைப் பகிர்ந்து கொள்வதால் எனக்கும் மனதில் படியும். அவரவர் சுயவிருப்பப்படி, உருப்படியாக பங்கேற்கலாம். அதான்.

    இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி என்பார்கள். 24 கதைகளும் இரண்டு கட்டுரைகளும் மட்டும் எழுதிய மணி (27.7.1907 ~ 6.7. 1985) உள்மனதைக் குடைந்து, சல்லடை போட்டு அரிந்து, அதை எக்ஸ்ரே படம் போல், சாட்சிக்கூண்டில் நிறுத்துவார். மாயவரத்து ஆசாமி. கும்பகோணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தவர். குடும்பச்சொத்தை பராமரிக்க, சிதம்பரம் வந்து சேர்ந்தார். அவரை தேடிச்சென்ற ‘இலங்கையன்’ பேராசிரியர் எம்.ஏ.நுமான் வீடு தெரியாமல் திண்டாடுகிறார். அவர் வசிக்கும் தெருவிலேயே அவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய புனைப்பெயர் ‘மெளனி’ பொருத்தம் தான்! ஒரு மாவு மில் நடத்தி வந்ததால்,’ மில் மணி ஐயர் என்று சொன்னால் தெரிந்திருக்கலாமோ என்னமோ! தற்கால தமிழிலக்கியத்தின் தூண்களில் ஒன்றான மணிக்கொடியில் எழுத ஆரம்பித்து பிற்காலம் ‘கசடதபற’ விலும் எழுதி வந்த ‘சிறுகதை சிற்பி’ மெளனியை, பிரபல இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யன் அவர்கள் மிகவும் சிலாகித்துள்ளார். க.நா.சு. உலகசிந்தனை படைத்தவர். உலக இலக்கியங்களை ஆராய்ந்தவர். அவரே ஒரு படைப்பாளர். அவரது விமர்சனங்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அவற்றின் அலசல்களை புறக்கணிக்க முடியாது.

    1984ல் பேராசிரியர் எம்.ஏ.நுமான் மெளனியுடன் நடந்த நேர்காணலை விவரிக்கும்போது, தன்னுடைய, தருமு சிவராமு, நமது வெங்கட் சாமிநாதன், சச்சிதானத்தனின் ஆகியோரின் கருத்துக்களயும் தந்துள்ளார். அவற்றின் சுருக்கம்:

    நுமான்:

    முதுமையின் தாக்கம் அதிகம். அவருக்கு ஈழத்து தமிழ் பணி பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். தமிழ் முறையாகப் படித்ததில்லை.  படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு விமர்சகனுக்கு வேண்டும் என்றார். அவருக்கு தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் ஆர்வமிருந்தது. ‘…தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது…’. கதை எழுதிய அவர் தலைப்புகளை பத்திரிகைக்காரர்களிடம் விட்டு விட்டாராம்.’தனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார்…உங்கள் மொழி  நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார்… தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார்…’.

    ‘… சில சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது… ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன…

    தருமு சிவராமு

    ‘மௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி “அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது” என்று கருதினாராம். ‘இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது.’ என்று கூறும் நுமான் அவர்கள், மெளனி தன்னிடம் சொன்னது, இதற்கு முரண் என்று சுட்டுகிறார்.

    வெங்கட் சாமிநாதன்: ‘மௌன உலகின் வெளிப்பாடு’:

    ‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார்… பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.’

    கி.அ. சச்சிதானந்தன்

    “(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”.

    ஒரு இலக்கியவாதியை பற்றி நால்வரின் கருத்துக்களை சுருக்கி அளித்திருப்பதால், பேராசிரிய உசாத்துணையில் இருக்கும் நுமானின் முழுக்கட்டுரையையும்  நீங்கள் படித்தால் நல்லது.

    நன்றி, வணக்கம்.
    இன்னம்பூரான்
    உசாத்துணை:

    http://azhiyasudargal.blogspot.co.uk/2010/10/blog-post_22.html

    Share
  • எங்க வீட்டு சர்வெண்ட்

     

    முகில் தினகரன்

    காய்கறி மார்க்கெட்.

    ‘அய்ய்யோ…சதீஷ் வேற வர்றானே!…இப்ப என்ன பண்றது?…இந்த மாதிரி ஒரு அம்மாவோட…இத்தனை பைகளைத் தூக்கிட்டு…நான் போறதைப் பார;த்துட்டான்னா…அவ்வளவுதான்… என்னோட ஃபிரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிக்குவான்!…அது மட்டுமா?…காலேஜ்ல எல்லார; முன்னாடியும் வெச்சு…இதைச் சொல்லிச் சொல்லிக் கிண்டல் பண்ணியே என்னை சாகடிச்சிடுவான்!…” குமார். அந்தப் பணக்காரத் தோழனின் கண் பார்வையில் பட்டு விடாமல் நழுவும் எண்ணத்தில் சுற்றும் முற்றும் வழி தேடினான்.

    அதற்குள் அந்த சதீஷ் அவனைப் பார்த்து விட, ‘போச்சுடா… பார்த்துட்டான்….இனி தப்பவே முடியாது!” தனக்குத் தானே புலம்பிக் கொண்டு உடன் வரும் அம்மாவைப் பார்த்தான்.  ‘அய்யோ…இந்த அம்மாவைப் பார்த்தால் எனக்கே ஒரு மாதிரியிருக்கு…எண்ணை காணாத நரைத் தலையும்…வெளுக்குப் போன நூல் புடவையும்…”எங்கம்மா”ன்னு அறிமுகப் படுத்தினா நிச்சயம் என்னைத்தான் கேவலமா நினைப்பான்.”

    தன்னுடைய ஹூண்டாய் காரை பார;க் செய்து விட்டு குமாரை நோக்கி படு ஸ்டைலாக வந்தான் அந்த சதீஷ்.

    குமார; தன் கைகளிலிருந்த காய்கறிப் பைகளை அவசர அவசரமாய் அம்மாவின் கைகளில் திணித்து விட்டு, முக பாவனையைச் சற்று இறுக்கமாய் மாற்றிக் கொண்டு, சதீஷை சற்றுத் தள்ளியே நிறுத்தி விடும் நோக்கத்தில் அவனைப் பார்த்துக் கையசைத்தபடி வேகமாக முன்னால் வந்தான்.

      ‘ஹாய் குமார;!…எங்கே இந்தப் பக்கம்?….ஹூ ஈஸ் தட் ஓல்டு லேடி?” கூலிங் கிளாஸைக் கழற்றிச் சுழற்றியவாறே அவன் கேட்டான். அவன் அணிந்திருந்த உயர;தர டீ-ஷர;ட்டும்….ஜீன்ஸ் பேண்ட்டும் அந்தக் கூட்டத்தில் அவனைத் தனியே காட்ட, அவன் மீதிருந்த வீசிய காஸ்ட்லி செண்ட்டின் நறுமணம் அங்கிருந்த அனைவரின் நாசியையும் நளினமாய்த் தடவிச் சென்றது.

    ‘நோ யா…சும்மா டைம் பாஸிங்க்காக வந்தேன்!….ச்சை…வெரி டர;ட்டி ப்ளேஸ்…இஸிட்?” செயற்கைத்தனமான பகட்டுடன் பேசினான் குமார்.

    ‘யா…நானும் கூடத்தான் சும்மாத்தான் வந்தேன்!…ம்ம்…அது யாருன்னு நீ சொல்லலியே!” குமாரின் தாயாரை சுட்டிக் காட்டி அந்த சதீஷ் விடாமல் கேட்க. குமார் நெளிந்தான்.

    ‘ஓ…தட் ஓல்டு லேடி?…அவங்க எங்க வீட்டு சர;வெண்ட்!” மனங் கூசாமல் பெற்ற தாயை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்தினான். மேலும் அவனுடனான உரையாடலைத் தொடர;ந்தால் பொய்க்கு மேல் பொய்யாய் அடுக்க வேண்டி வரும் என்பதை உணர;ந்த குமார;, “ஓ.கே.டா..நான் கௌம்பறேன்…வீட்ல கெஸ்ட் வருவாங்க!” இன்னொரு பொய்யை வீசி விட்டு நகர்ந்தான்.

    தூரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவை நெருங்கியவன், “வாம்மா கௌம்பலாம்…மீதியெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம்!”என்றான் ஒரு வித பதட்டத்துடன்.

    “அட..என்னடா நீ?…இன்னும் பாதி சாமான்கூட வாங்கலை… அதுக்குள்ளார போலாம்கறே?” அவனது அவஸ்தை புரியாத அவள் அப்பாவியாய் கூறினாள்.

    “அய்யோ…உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?” எரிந்து விழுந்தான்.

    “சரிடா…ரெண்டு..மூணு முக்கிய சாமான்களையாவது வாங்கிட்டு வந்திடறேனே!” கெஞ்சலாய்க் கேட்டாள்.

    “ம்.ம்.ம்..சரி…சரி…நீயே மட்டும் போய் வாங்கிட்டு வந்து சேரு…நான் மார்க்கெட் வாசல்ல நிக்கறேன்!” சொல்லி விட்டு வேக வேகமாய் ஓடினான்.

    மார்க்கெட் வாசலில் ‘கச..கச’வென்று நின்று கொண்டிருந்த கார்களுக்கு மத்தியில் தன்னை மறைத்தவாறு நின்று, தாயின் வருகைக்காக காத்திருக்கலானான் அவன்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இயற்கை உந்துதலைத் தவிர்க்க மாட்டாமல் நாலைந்து கார்களைத் தாண்டி மறைவிடம் தேடிப் போனான்.

    ஒரு வெண்ணிற மாருதி காரைத் தாண்டும் போது, அந்த சதீஷ் அங்கு நின்று யாரோ ஒரு டீன் ஏஜ் ஏஞ்சலிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சட்டென்று நின்றான்.

    “அடப்பாவி…இங்கேயும் வந்துட்டானா?” ஒளிந்தபடியே நகர;ந்த அவன் காதுகளில் அவர;களின் சம்பாஷனை விழஇ கூர;ந்து கேட்டான்.

     

    “ஹேய்…சதீஷ்….மார;க்கெட்டுக்குள்ளார நின்னு யாரோடவோ பேசிட்டிருந்தியே…யார; அது?…உன்னோட ஃப்ரெண்டா?” ஒரு வித முகச் சுளிப்புடன் அந்த ஏஞ்சல் குரலில் பியானோ இசைத்தது.

    “வாட் தட் ஃபெலோ?…மை ஃபிரெண்ட்?…நோ…நோ…அவன் என் வீட்டு சர்வெண்ட்…அவனைப் போய் என் ஃபிரெண்டுன்னு…ச்சே!…ஜஸ்ட்…என்னென்ன வெஜிடபிள்ஸ் வாங்கனும்னு அவனுக்கு சொல்லிட்டிருந்தேன்!” என்றான் சதீஷ் படு கேஷூவலாக.

    முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது குமாருக்கு.  வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    பத்தே நிமிடத்தில் வந்து சேர்ந்த அம்மாவிடமிருந்து காய்கறிக் கூடைகளை தானே வாங்கிக் கொண்டு நிதானமாய் நடந்தான்.

    (முற்றும்)

    Share
  • வெளி

     

    மதியழகன்

    அது ஒரு  தொடக்கப்பள்ளி.வாரத்தில்  மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட  கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள்  வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன்  தான் காரணம்.

    பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன்  கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளை தலைமை  ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில்  சிறிது கெஞ்சலும் இருக்கும்,இன்று வகுப்புக்கு எங்களை அழையுங்கள் என்ற வேண்டுகோளும் அதில் அடங்கி இருக்கும்.

    அந்தப்  பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமானது.பெண் துறவிகள் மேற்பார்வையில் இயங்கி வருவது.அங்கு  எந்த ஆணையும் பணிக்கு அமர்த்துவதில்லை.முதல்  முறையாக இளங்கோவனை ஆசிரியராக  நியமித்தார்கள்.

    சொந்த பந்தங்கள்  சிறிதும் மதிப்பதில்லை இளங்கோவனை. அவன் கவி தான்,ஆனால் கவிதை எழுதுவதை ஒரு வேலையாக சமூகம் நினைப்பதில்லை.உலகியல் ரீதியான வெற்றியை தவற விட்டவன் தான் இளங்கோவன்.வெற்றி கர்வத்தையும்,செல்வத்தையும் தரும்;ஆனால் தோல்வியோ சிறிது உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும்.அப்படி சிந்தனை பயணம் செய்ததில் இளங்கோவன் ஒன்றை உணர்ந்தான்.இந்த உலகே மயானம், இறப்பதற்காகத்தான் எல்லோரும் இருக்கிறார்கள். வாழ்க்கையே நிலையில்லாத போது அது என்ன நிலையான வேலை. நாம் தங்கியிருக்கும் வீடு கூட விடுதி போன்றது தான்.நேற்று தந்தை வசித்தார்,இன்று நான்,நாளை என் மகன் வசிப்பான்.

    எப்போது இந்த உலகம் அநித்யம் என்று  உணர்கின்றோமோ அப்பொழுதே  இந்த உலகை வேறு மாதிரியாக  பார்க்க ஆரம்பித்து விடுவோம்.நாம் செய்யும் செயல்களின் பலன்கள்  நல்ல பலன்களாக இருந்தாலும்  சரி,தீய பலன்களாக இருந்தாலும் சரி எங்கிருந்தாலும் நம்மை அடையாமல் விடாது.செயலுக்குத்தான் இவ்வுலகில் தண்டனை தருகிறார்கள்,இந்தியாவில் இ.பி.கோ சட்டம் போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம்.ஆனால் மனதில் எண்ணுவதே மிகப்பெரிய பாவம்.

    அவனுக்கும்  பெண் பார்த்தார்கள்.மணம் முடிக்க  நல்ல மனம் இருந்தால் மட்டும்  போதாது. பணம் வேண்டும், அக்கரைச் சீமையில் பணியிலிருக்க வேண்டும். பெண் பார்த்த அனுபவம் ருசிகரமானதாக இல்லை.முதல் பெண்ணை பிடித்திருந்தது தான், ஆனால் லகான் இவன் கையில் இல்லையே. ஊதியத்தைக் காரணம் காட்டி இவனை நிராகரித்தார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலானது.

    கடைசியில் அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டிலிருக்கும் ஒருவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் மாப்பிள்ளை பின்வாங்க யாரோ சொந்தக்காரப் பையன் ஒருவனை கட்டி வைத்ததாக கேள்விபட்டான்.

    ‘புதனுடன் கேது சேர்ந்தால் எப்படி படிப்பு சரியா வரும்’ இப்படி புலம்புவாள் அம்மா.ஏன் புலம்ப மாட்டாள் இவன் பொறியியல் பட்டப் படிப்பை முடிக்காமல் பாதியில் விட்டவன்.

    இங்கே அதை  சொல்லித்தான் ஆக வேண்டும்.பொறியியல்  இரண்டாம் ஆண்டில் நடைபெறும்  மூன்றாம் பருவத் தேர்வு, ஒரு பாடத்தில் விடை எழுதும் தாளில் இவன் தத்துவக் கருத்துக்களை எழுதிக் கொடுத்துவிட்டான்.எது தெரிந்ததோ அதைத்தானே எழுத முடியும்.அடுத்த நாள் எல்லா பேராசிரியருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. தெர்மோடைனமிக்ஸ் வகுப்பு எடுக்கும் வாத்தியார் கூப்பிட்டு பிசிக்ஸ் மேடத்தைப் போய் பார்க்கச் சொன்னார். ஏனென்றால் அந்தப் பாடத்தின் விடைத் தாளில்தான் இவன் தன் தத்துவத்தை அருவியாய்க் கொட்டியது.

    பிசிக்ஸ்  மேடத்திடம் போய் நின்றான். ‘வெளியே என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா’ என்று கேட்டார். ‘எது இப்படி உன்னை எழுத தூண்டுனிச்சி’ என்றார்.அதற்கு இவன் ‘நான் தோத்துட்டேன் மேடம்’ என்றான்.ப்உண்மை தான் இவனோட படித்த ஒரு பெண் கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருக்கிறாள். இப்போது சொல்லுங்கள் இவன் தோற்றுவிட்டான் தானே.

    ‘ஆம்பளையா பொறந்துட்டு இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லை’ என்றார் மேடம். ‘மத்தவங்க உன்னை பிரின்சிபால்கிட்ட மாட்டிவிடச் சொன்னாங்க நான் தான் ஒத்துக்கலை சரி,வேற எதுல உனக்கு ஆர்வம் அதிகம்’ என்று அக்கறையுடன் கேட்டார்.

    உடனே இளங்கோவன்  சுதாரித்துக் கொண்டு ‘கொஞ்சம் கவிதை எழுதுவேன் மேடம்’ என்றான். ‘அப்ப அதுலேயே கவனம் செலுத்தி முன்னேற வேண்டியது தானே.எந்த நிர்பந்ததுக்கும் வளைந்து கொடுக்காதே நீ உன் முடிவில் உறுதியா இரு.இஞ்சினியரிங் படிப்பை டிஸ்கன்ட்னியூ பண்ணிடு.நாங்க எல்லோரும் க்யூல நின்னு உன்னைப் பார்க்கணும்,அப்படி நீ வளரணும் என்ன புரியுதா’ என்றார் மேடம்.

    இளங்கோவனை இது தான் நம் வழி என்று  உணரச் செய்ததே அந்த மேடம்  தான். இளங்கோவனை கவிப்பித்தனாக்கிய  கதை இது. இறைவனை பயபக்தியோடு  வணங்குகிறோம் என்றால் அவனது  படைப்புக்களான மனிதர்கள்  மீதும் நேசம் வைக்க வேண்டும் என உணர்ந்தான்.அவனுக்கு ஏற்பட்ட  ஒவ்வொரு அவமானமும் அவனை  ஆன்மிகத்தின் பக்கம் திசை திருப்பியது  

    இந்த நிலையில் தான் ஆசிரியர் வேலை கிடைத்தது  இளங்கோவனுக்கு. எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல எண்ணும்  மனப்பக்குவம் இருந்தது அவனுக்கு.அவன் சொல்லும் கதையைக் கேட்க குழந்தைகள் சத்தம் போடாமல் கம்மென்று  இருக்கும்.

    பள்ளியை கோயிலாக்கிய இளங்கோவனை  இறைவன் கணக்கு முடித்து அனுப்பி  வைத்த இடம் மயானம்.அவன் கதை  சுமந்து வந்த பாதைகளின்  வழியே அவனைச் சுமந்து பாடை சென்றது. குழந்தைகள் சொல்லிக் கொண்டிருந்தன கதை சொல்லும் வாத்தியார் கண்டிப்பாக ஒரு  நாள் வருவாரென்று.

    Share
  • ஒரு காதல் தோல்வியாகிறது

    செழியன்

    காதலே !
    நீ ஒரு  கானல் நீரே .
    விலையில்லா
    இந்த உயிர்களை
    ஏன் ? விட்டில்    பூச்சி  ஆக்குகிறாய் .

    உனக்கும்
    தோல்விக்கும் ஏன்
    இந்த பற்றுதல்

    முதலில் பசுமை காட்டி
    முன்னேற விட்டு
    முடிவில்
    தோல்விப் பாலைவனத்தில்
    தள்ளும்  நீ
    ஒரு கானல் நீரே.

    விளையாத  நிலத்தில்
    முளையாத
    வித்தாக  விழுந்து
    வெறுப்பேற்றி
    நெஞ்சங்களை  ஏன்?
    வேதனைப்  படுத்துகிறாய் .

    எங்களை  எப்போதும்
    ரோமியோ -ஜூலியட்
    அம்பிகாபதி-அமராபதி
    லைலா -மஜ்னு வாக
    பார்க்கத்தான்  விருப்பமா?
    ஷாஷகான் -மும்தாஜ்  ஆக
    பார்க்க விருப்பமில்லையா?

    தோல்விக்குத் தஞ்சம் அளிக்கும்
    உன்னால்
    துவண்ட  நெஞ்சங்களுக்கு
    வாழ்வு  அளிப்பதில்
    ஏனிந்த  கஞ்சம் .

    பருவக் குளத்தில்
    துள்ளித் திரியும்
    எங்களுக்கு
    நீ
    தூண்டில்  புழுவாகவே
    காட்சி அளிக்கிறாய்

    தேனைத்
    தேடி வரும்  வண்டிற்கு
    திராவகத்தை
    கொடுப்பதிலையே  மலர்கள் .

    தோல்வி
    சரித்திரத்தை  நீ
    தொடர
    எங்கள்  உயிர்தான்
    உனக்கு மையாகுகிறது .
    காதலே !
    உன் தோல்வித் தாகம்
    இன்னுமா  தணியவில்லை.

    உன்
    தோல்வித்  தொடரை
    பல நூறு  ஆண்டுகளாக
    படித்து  கொண்டுதான் இருக்கிறோம் .
    நீயும்  தொடரை  முடிக்கவில்லை .
    நாங்களும்  திருந்த வில்லை .

    காதலே !
    உனக்காக  கோயில்
    கட்ட முனைந்தோம் .
    நீ
    எங்களை
    தோல்விக் கல்லறைக்குள்
    தள்ளுவாய்  என்று  அறியாமல் .

    இளமைப்  பூங்காவில்
    நீ
    தென்றலாய்த்தான்  நுழைகின்றாய் .

    அதை நீ
    கடந்த பின்னர்
    பார்த்தால்
    அது
    புயல்  நுழைந்த
    பூங்காவாக  அல்லவா  இருக்கிறது .

    இது புரியவில்லை
    இந்த  பூஞ்செடிகளுக்கு .

    உன்னால்
    இணைந்த உள்ளங்கள்  சில .
    இடிந்த உள்ளங்களோ  பல .

    படத்துக்கு நன்றி

    http://funtimebirdy.wordpress.com/2010/07/07/lovebirds-in-the-wild/

    Share
  • இருளில் ஒளிரும் தீப ஒளி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு, வானவேடிக்கை என்று தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடிய காலமொன்று இருந்தது. வருடம் முழுவதும் உழைத்து, அதில் பெற்ற ஊக்கத் தொகையை வைத்து ஆயிரம் கற்பனைகளுடன் காத்திருக்கும் குழந்தை குட்டிகளுக்கு ஓரளவிற்காவது திருப்திபடுத்தி இன்பமாக கொண்டாடிக் கொண்டிருந்ததற்கும் இன்று வேட்டு வைத்தாகிவிட்டது. “என்னங்க …. தீபாவளி, வயித்துப்பாட்டுக்கே இங்கே திண்டாட்டமா இருக்கு, இதுல எங்க, பண்டிகைக் கொண்டாட்டமெல்லாம்” இதுதான் இன்றைய ஜவுளி நகரமான கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தின் மத்தியதர மற்றும் கீழ்தட்டு மக்களின் புலம்பலாக இருக்கிறது. மத்தியதர குடும்பங்களும் இன்று கீழ்தர பொருளாதார நிலைக்கு இறங்கியுள்ளதுதான் வேதனையின் உச்சம். உழைக்கத் தயாராக இருக்கும் மக்களுக்கே இந்த நிலை என்றால் ஏனையோருக்கு கேட்கவே வேண்டியதில்லை. மின்வெட்டு, வேலை இல்லை என்று சுருண்டு கிடக்கப் பழகிவிட்டார்கள். ஆம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே தொழிற்கூடங்கள் இயங்க முடிகிற இன்றைய நிலையில் தொழிலாளர்களுக்கு, சிறு முதலீட்டாளர்கள் எந்த அளவிற்கு ஊக்கத்தொகை கொடுக்க முடியும்? எட்டு மணி நேரம் செய்யும் வேலைக்கு வாங்கும் கூலியே வாய்க்கும், வயிற்றுக்கும் போதவில்லை, குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை என்று புலம்பும் தொழிலாளர்கள் இன்று மூன்று மணி நேர வேலை மட்டுமே செய்ய முடிந்து அதற்கான கூலியை மட்டுமே பெறும் சூழலில் புலம்பவும் சத்தில்லாமல் நொந்து போய்க் கிடக்கிறார்கள் என்பதுதான் உணமை.. 50 தறி போட்டு ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு முதலீட்டாளர், மூன்று மணி நேர மின்சாரம் மட்டுமே இருக்கும் சூழலில் , கொள்முதல் செய்யும் சரக்கின் அளவும் குறைந்து, அந்த வியாபாரிக்கும் சரக்கு தேங்கிப் போகும் சூழலோடு, தொழிலாளர்களுக்கு மூன்று மணி நேரத்திற்குரிய கூலி மட்டுமே கொடுக்க முடிகிறது.  அவர்களுக்கான ஊக்கத் தொகையும் கனிசமாகக் குறைத்து விட்டது.. சமத்துவம் என்று வாயளவில் பேசுபவர்களின் பாரபட்சம் விளங்கவில்லை. கடுமையாக தொழில்நிலை பாதிக்கப்பட்டு, மொத்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்யக்கூடிய ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் நலிவடையும் படியாக கடுமையான மின்வெட்டு இருக்கும் போது சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மட்டும் 2 மணி நேரமே மின்வெட்டு என்று நிர்ணயிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. இதற்கான எதிர்ப்புகளும் கிளம்பிய சூட்டோடு அணைக்கப்பட்ட மர்மமும் புரியவில்லை. இந்த இலட்சணத்தில் பண்டிகை கொண்டாட்டங்களுக்காகச் சில பெரிய கடைகளில் சீரியல் விளக்குகளைப் போட்டு மின்சாரத்தை வீணாக்கும் கொடுமையைக் கேட்க எவரும் இல்லை, சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதற்கான பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடியச் சூழலில் நோம்பிய்ம், நொடியும் தேவையா என்று நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் இன்றுவரை வெளிவரவில்லை என்பதே நிதர்சனம்.  இருளில் ஒளிரும் தீபத்திருநாளுக்கு வாழ்த்துக்கள்.

    Share
  • இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

     

    அன்னை அபிராமி பத்து

     

    அவளொளி அருளொளி!

     

    தீபாவளிப் பரிசு

     

    ஆடகேச்சுரம – (ஹாட்கேஷ்வர்)* – ஓர் தேவார வைப்புத்தலம

     

    இணைய வெளியும் மெய்ப்பாடும் – ஒரு மாற்றுச் சிந்தனை

     

    துர்காபாய் தேஷ்முக்

     

     குந்தி – ஒரு பார்வை

     

    நேசத்தின் ஒளி தீபத்தின் வழி

     

    “ கங்கா ஸ்னானம் ”

     

     வாழ்த்துவோம்…

     

     அன்பெனும் ஒளி

     

    ஆனந்த தீபாவளி

     

    தித்திக்கும் தீபாவளி!


    தீபாவளி நன்னாள்

     

    தீபாவளிச் செய்திகள்

     

    தீ தான் நீ!

     

    ‘வல்லமை’ தீபாவளி சிறப்பிதழே

     

    தீபங்களும் திரிகளும்

     

    தீபாவளியன்று மிருகங்களும் ஸ்பெஷல் தான்!

     

     

    மருத்துவர் (சிறுகதை)

     

    முந்தி இருப்பச் செயல் (சிறுகதை)

     

    சிறுகதை–சிதகு

     

    உனக்கும் எனக்கும்…. (சிறுகதை)

     

     

     

     

     

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    ”உள்ளம் என்பது ஆமை – அதில் 

    உண்மை என்பது ஊமை,

    சொல்லில் வருவது பாதி, 

    நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி” 

    கவியரசு கண்ணதாசனின் இந்த அருமையான பாடலை யாராவது அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திக் கொ0ண்டிருப்பார்கள் போலும்!


     உள்ளம் அல்லது மனதில் ஊறும் சிந்தனைகளை யாரும் அப்படியே வெளியே சொல்ல முடியாதுதான்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனை விதமான விசித்திர உருவகங்கள், எத்தனை விதமான சிந்தனைகள், எத்தனை விதமான விருப்பங்கள்.. ஒரு தனி மனிதனின் விருப்பமான விஷயங்கள் பற்றி ஒரு உண்மை அறிய கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு கேட்டால் ஏகப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது தீனி போடும்.. ஏகப்பட்ட சினிமாப் படங்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உருவாகி ( இந்தியாவைப் பொறுத்த வரை மலையாளிகள்தானே உண்மையான திரைப் படைப்புகளை இன்னமும் தருகின்றார்கள்!) மேலும் மேலும் மனிதனை வியக்க வைக்கும்.


    தனி மனிதன சிந்தனைப் போக்குக்கு தடையே இல்லைதான்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளாகட்டும் மெய்ஞ்ஞான நீதியாகட்டும் அவனின் தனிப்பட்ட சிந்தனைப்போக்கில்தான் அது உருவாகிறது.. வேதாந்த சித்தாந்தங்களும் கூட அவன் சிந்தனையின் ஒரு கட்டம்தான். விருப்பமும் வெறுப்பும் கூட அவன் தனி மனிதப் போக்குதான். ஒருவனுக்கு ஒன்றைக் கண்டால் காரணமில்லாமலே பிடிக்காது.. ஒருவனுக்கு அந்த குறிப்பிட்ட ஒருவனைக் கண்டாலே பிடிக்காது. இதற்கெல்லாம் காரணம் அவனிடம் நிச்சயமாகக் கிடையாது. மனம் சொல்கிறது.. பிடிக்கவில்லை.. அவனால் அந்த உணர்ச்சியை மாற்றிக்கொள்ள முடியவே முடியாது போலத்தான் தோன்றும். மனமாற்றம் என்பது எளிதில் பெறக்கூடியது அல்லவே அல்ல. மனமாற்றம் என்பது பல சோதனைக் கட்டங்களைத் தாண்டித்தான் ஏற்படும்.. 


    இப்படித்தான் மனத்தில் தோன்றும் ஒரு விசித்திரமான விருப்பத்தின் பேரில் ஒரு கதையை எழுதி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் திரு அரவிந்த சச்சிதானந்தம். http://www.vallamai.com/literature/short-stories/28531/ இந்தக் கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்திலிருந்தே பெண்கள் அணியும் ஆடையிலிருந்து கைக்குட்டை வரை உள்ள தனிப்பட்ட பிரியத்தை அழகாக விளக்கி இருக்கிறார். இது சாதாரணமாகப் படிக்கும்போது இந்தக் கதாபாத்திரத்தில் சாயல் மாறுபட வாய்ப்புள்ளது. ஆனால் இப்படி மாறுபடாமல் உள்ளத்திலேயே ஊற வைத்துக்கொண்டு மறைமுகமாக தன் உள்ளத்து ஆசைகளைத் திருப்திப்படுத்துவதாக எழுதி இருக்கிறார். மெல்லிய கயிறின் மேல் நடப்பதாக இந்தக் கதாபாத்திரம் காணப்பட்டாலும் கயிறு அறுக்கப்படாமல் பாத்திரத்தின் நடையை நகர்த்தி செல்லும் திரு அரவிந்த் சச்சிதானந்தந்தத்தை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் அறிவிக்கிறோம். இது போன்ற மனோவியல் சம்பந்தப்பட்ட கதைகளை அடிக்கடி எழுதவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்..


    திரு அரவிந்த அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.


    கடைசி பாரா: 

    வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து…

    சதம் அடித்த திருமதி விசாலம் அம்மையாருக்கு வாழ்த்துகள்
    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி

     

                                                                     சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையஆய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o   [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.

    “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பலகலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது. ‘

    ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

    fig-1d-mars-climate-orbiter-1-failure

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார்.

    ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.   அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன.

    நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.


    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது !

    பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் !

    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற்றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவுகளை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது.

    4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங்களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப்படும்.

    நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.  மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

    fig-1g-climate-orbiter-details

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    பீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கிலிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

    . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

    . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

    . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

    . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

    . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !

    fig-5-mars-climate-orbiter-1-assembly

    1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    fig-6-mars-exploration

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts)
    20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)
    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)
    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ·பீனிக்ஸ் தளவுளவி)
    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)
    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]
    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)
    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)
    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)
    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)
    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)
    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)
    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)
    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)
    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]
    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)
    39. http://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]
    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]
    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]
    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    (தொடரும்)

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 11, 2012
     

     

    YouTube – Videos from this email
    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: நச்சு மூன்று

     

    இன்னம்பூரான்

    5. நச்சு மூன்று

     

    கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட

    இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்

    சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும்

    அறியாமையான் வரும் கேடு. [3]

     

    5.1. கற்றறியாதவர்க்கு உறவினனாகி நடத்தலும், மனவுறுதிகொண்ட இல்லாளை   கோலினால் அடித்தலும், தம் வீட்டுள் சிற்றறிவினரை  உடன் கொண்டு, புகுதலும், இம் மூன்று செயல்களும் தன் அறியாமையினாலே விளைகின்ற கேடுகளாம்.

    5.2. அதாவது, மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் தீமைகள் விளைவிப்பன.

    5.3. நல்லறம் தீயதை விலக்கவும் வேண்டும். நச்சுப்பொருள்களை புறக்கணிக்கச்சொல்வதும் மருத்துவ நெறியே. கல்வி அறிவை வளர்க்கும். கற்று அதன் பயனாக அறிவை பெறாதவர்களுடன் நட்பும், உறவும் கொண்டாடுவதைத் தவிர்ப்பது நலம்.

    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டாதவன் நன்மரம்.  (மூதுரை 4: ஒளவையார்)

    5.4. இல்லாளை அடிப்பது என்பது அவளை எந்த வகையில் துன்புறுத்துவதையும், கொடுமைக்கு ஆளாக்குவதையும், அவளுக்கு மன உளைச்சலை கொடுப்பதையும் குறிக்கும். இல் வாழ்க்கையில் விலக்க வேண்டிய நச்சு, அத்தகைய நடவடிக்கை. அன்றாட வாழ்க்கையில் இல்லத்தரசியின் மனதை புண்படுத்தாமல் இருப்பது பண்பு. பிரியமாக இருப்பது இருவருக்கும் சுகம். இவ்வாறு நல்லாதன் அறிவுரைத்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், பெண்கள் பலதுறைகளில் திகழ்ந்தாலும், பேச்சளவில் பெண்ணியம் ஆண்களால் போற்றப்பட்டாலும், இல்வாழ்க்கையில் ஆணாதிக்கத்தின் ஆளுமை இந்தியாவில் அதிகமாக காணப்படுவது துர்பாக்கியமே. அநேக இல்லங்களில் நல்லாதனின் அறிவுரை இயல்பாகவே பின்பற்றப்படுவதை காண்கிறோம். இருந்தபோதிலும், ‘இல்லாளை கோலால் புடைத்தல்’ பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆங்கிலத்தில் chattel என்ற சொல் உண்டு. அதன் பொருள்: ஜங்கம சொத்து/ அடிமை. ஆண்கள் இயற்றிய சட்டம் இல்லாளை chattel என்றது! சில வருடங்கள் முன்னால், அடையார் பிரதான சாலை ஒன்றில் ஒருவன் ஒரு பெண்பாலரை தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தான், ஒரு உருட்டுக்கட்டையால். தடுக்கப்போன எனக்கு பலமான அடி. தெரிந்த கடைக்காரர் ஒருவர் ஓடோடி வந்து என்னை காப்பாற்றினார். ஆனால், ‘அவன் தன் பொண்டாட்டியை அடிக்கிறான். நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’ என்று தான் என்னை கேட்டார். போலீசுக்குப் போனேன். அந்த ‘இல்லாளை கோலால் புடைத்தவனை’ தருவித்தார்கள். அவனுடைய கூற்று,’ என் மனைவியை அடிப்பேன். இவர் யார் கேட்பதற்கு?’ . போலீசும் தலையாட்டியது. சமூகம் பெண்பாலாரை சமமாக நடத்தும் வரை, நம் நாடு உருப்படாது.

    5.5. நமது இல்லம் நமது உறைவிடம். அங்கு அறிவீனரை உபசரிப்பது தீங்கு விளைக்கும். அறியாமையினால் இந்த தீமைகள் விளைவதால், அறியாமையை ஒழிக்கவேண்டும் என்பது தான் அடிப்படை கருத்து. சமூகமே ஒன்று கூடி கல்வியை பரப்ப முயன்றால் தான் அறியாமையை குறைக்க முடியும். ஆரம்ப கல்வி அனைவரைக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும் என்று கூறும் இந்திய அரசியல் சாஸனம், அதை அடிப்படை மனித உரிமையாக பிரகடனம் செய்ய மறந்ததால், கோடிக்கணக்கான இந்தியர்கள் கல்வியைன் பயனை பெறாமலே இறந்து போனார்கள். இன்றைக்கும் சர்வ சிக்ஷா அப்யான் என்ற அரசு கல்வி இயக்கம் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா நமது இல்லம் என்று எடுத்துக்கொண்டால், நாம் நல்லாதனர் அறிவுரையை மதிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    11 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    சித்திரத்துக்கு நன்றி: http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_63019526005.jpg

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-4)

     

    ராமஸ்வாமி ஸம்பத

    ”கண்ணா, நீங்கள் சொல்வதுபோல் தர்மன் என்னை அஸ்தினாபுர அரியணைக்கு உரியவனாக்கினாலும், என்னால் அந்த சிம்மாசனத்தில் அமரத்துடிக்கும் துரியோதனனுக்கு ஏமாற்றத்தை அளிக்க முடியாது. செங்கோல் என் கைக்குக் கிடைத்த உடனே அதனை துரியனுக்குத் தாரை வார்த்து விடுவேன். அது உங்களுக்கு சம்மதமாயிருக்குமா? மேலும், உங்களுக்கு எந்த அளவு தர்மம் முக்கியமோ அவ்வளவு எனக்கு என் தர்மமாகிய இடுக்கண் களையும் நட்பு முக்கியம். என்மீது அபரிமிதமான அன்பைப் பொழிவதோடு என்னை பூரணமாக நம்பியிருக்கும் துரியனை நான் எவ்வாறு கைவிட முடியும்? ’எல்லாவிதத்திலும் நட்பினால் பயனடைந்தபின் இறுதியில் ஆருயிர் நண்பனைக் கைவிட்டான் கர்ணன்’ என்ற அவலத்தை நான் சுமக்க வேண்டுமா? என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கோரிக்கையைத் தீர்க்க என்னால் இயலவில்லை,” என்றான் கர்ணன் முடிவாக.

    மீண்டும் அவனுக்கே உரித்த மோஹனப் புன்னகையை உதிர்த்தான் கண்ணன். “எழுதிவைத்த விதியை ஈசனாலும் மாற்ற முடியாது என்பது சான்றோர்களின் வாக்கு. உன் மெச்சத்தகுந்த நிலைப்பாடு எனக்கு ஒருவிதத்தில் பெருமையாக இருக்கிறது. நீ குந்தியின் மகனல்லவா! அதனால்தான், உன் நிர்ணயம் ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதனை உலகுக்கு கொட்டி முழக்கும் வகையில் அமைந்துள்ளது. நான் வேண்டுமென்றே உனக்கு வைத்த சோதனையில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நாளைக்காலை உன்னை ஈன்ற அன்னை உன்னிடம் வரம் கோரி வருவாள். அவள்மீது சினம் கொள்ளாமல் அவள் நிலையைப் புரிந்து கொண்டு அவளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு செய்வாயாக,” என்ற கண்ணன், “வரம்வேண்டி உன்னிடம் வந்தேன். இப்போது நானே உனக்கு வரம் அளிக்க விழைகிறேன். கேள் கர்ணா,” என்றுரைத்தான்.

    “நன்றி கண்ணா, நான் உங்களிடம் வேண்டுவது ஒரே ஒரு வரம்தான். தயவு செய்து நான் மூத்த பாண்டவன் என்பதனை அவ்வைவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான் கர்ணன் நீர்மல்கிய கண்களோடு.

    ”அப்படியே ஆகட்டும். நீ தன் முதல் புத்திரன் என்பதனை உலகுக்கு குந்தி மஹாராணியே பறைசாற்றுவாள். உன் உயர்ந்த உள்ளத்துக்கு இன்னொரு வரம் தர விரும்புகிறேன். கேள்.”

    ”கண்ணா, என்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்ட என்னிடம் சொற்களே இல்லை. உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை அவன் தந்தையின் தொழிலைக் கொண்டு இகழ்வது எவ்வகையில் நியாயம்?”

    “கர்ணா, ‘செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்பதனை உணராத அற்பர்கள்தான் அப்படித் தூற்ற முனைவார்கள். எத்தனையோ பேர் என்னை மாட்டிடையன் என்று எள்ளி நகையாடினார்கள் என்பது உனக்குத் தெரியாததல்ல. ராஜசூய யாகசாலையில் பன்னாட்டு மன்னர்கள் குழுமியிருந்த சபையில் என்னை பசுபாலன் என்று பழித்தான் சிசுபாலன். அத்தகைய ஈனமானவர்களை பொருட்படுத்தக் கூடாது,”

    “தெரியும் கண்ணா1 ஆனால் நான் அனுபவித்த வேதனை….’தேரோட்டி மகன், தேரோட்டி மகன்’ என கணக்கற்ற முறையில் என்னை இகழ்ச்சி செய்தார்களே..  என் வளர்ப்புத் தந்தை அதிரதன் ஒரு தேரோட்டி என்பது அவர் செய்த தவறா? தேரோட்டுவது இழிசெயலா? சொல் கண்ணா!.” உணர்ச்சிகளுக்கிடையே கண்களில் நீர்மல்கக் கேட்டு நின்ற ராதேயனை [கர்ணனின் வளர்ப்புத் தாயின் பெயர் ராதை என்பதால் அவன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான்] வருத்தமாகப் பார்த்தான் கண்ணன்.

    ”கவலைப் படாதே கர்ணா! எதற்கும் ஒரு தீர்வு உண்டு.. நீ எதை இழிநிலை என நினைத்து வருத்தப் பட்டாயோ, பிறர் எதை வைத்து உன்னை இழிவாகப் பார்த்தனரோ, அவைகளுக்கும் ஒரு முடிவுண்டு” என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் கண்ணன்….
                               
    நினைவலைகளின்று வெளிப்பட்ட கர்ணன், மானசீகமாகக் கண்ணனை வணங்கினான். ராஜசூய யாகத்தில் பங்குபெற்ற அந்தண சிரேஷ்டர்கள் விருந்து உண்டபின் அவர்கள் விட்டுச்சென்ற எச்சில் இலைகளை எவ்வளவு பவ்யத்துடன் கண்ணன் சேகரித்து ஆற்றில் கொண்டு சேர்த்தான் என்பதனை நினைவு கூர்ந்தான். “கண்ணா, இது என்ன விபரீதம்?” என்று கேட்டபோது. ”நான் எச்சிக்கலையும் எடுப்பேன்,” என்ற அவன் பதில் கர்ணன் செவிகளில் மீண்டும் ஒலித்தது.

     “எச் சிக்கலையும் எடுக்க வல்லவரல்லவா இந்த வாசுதேவர்! தானே தேரோட்டியாகி, தேரோட்டும் தொழிலை வானளவுக்கு உயர்த்தியோடு மட்டுமல்லாமல் என்னுடைய ‘தேரோட்டி மகன்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் எவ்வளவு லகுவாகத் தொலைத்திருக்கிறார் இந்த பார்த்த சாரதி!”  என்று மனதார அவரை வியந்து வாழ்த்தியதோடு, “இந்த விஜய சாரதியிடம் சரணடைந்த பாண்டவர்கள்  எவ்வளவு பாக்யசாலிகள்! எங்கு கண்ணன் இருக்கிறாரோ அங்கு வெற்றிச் செல்வியும் கடாட்சிப்பாள் என்பதனை உணர மறுக்கிறானே துரியன்” என்று பச்சாதாபம் கொண்டான் அங்க நாட்டரசன்.

    கர்ணன் மனம் துரியோதனனுக்காக ஒரு கணம் பரிதாபப்பட்டாலும் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து செயல்பட்டு தர்மத்தைக் காத்து வரும் கண்ணனின் கருணையையே நினைத்து நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கியது.
                             

    (முற்றும்)

    படங்களுக்கு நன்றி :

    http://www.tamilhindu.com/category/mahabharat/

     

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-3)

     

    பர்வத வர்தினி

    இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடியின் அரசாங்க ஆணைப் பத்திரத்துடனும் பொன்னுமலையான் போன்று வேடமிட்டிருந்த கிருஷ்ணசாமியுடனும் சாரு கோட்டைக்குள் புகுந்தாள். ஆணைப் பத்திரத்தைக் கண்டவுடன் இவர்கள் உள்ளே செல்ல தடையேதுமின்றி அனுமதிக்கப்பட்டது. 

    அது மாலைப்பொழுது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மல்லிகை வாசம் நாசியைத் துளைத்தது. இருவரும் மிகவும் ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர். கடம்பூரின் அரண்மனையும் அதன் பின்புறம் தோட்டமும் மாலை சூரியனின் சிவந்த ஒளியில் அழகுற காட்சியளித்தது. 

    சாரு கிருஷ்ணசாமியிடம் மெல்லிய குரலில் “நான் படிச்சிருந்தபடி இந்த இரவிலே தான் அந்த சம்பவம் நடக்கப் போகுது. அதுக்கு முன்னாடி வந்தியத்தேவர் அரண்மனை தோட்டத்துக்கு வருவார். அங்கிருந்துதான் மணிமேகலை அவரை சுரங்க வழிக்கு அழைச்சுக்கிட்டு போவா. அவர் மணிமேகலையை பார்க்கறதுக்கு முன்னாடி நான் அவரை சந்திக்கணும். ஸோ நாம கொஞ்சம் இருட்டினதும் அந்த மதில் சுவர் மேலே ஏறி அந்தப்பக்கம் அரண்மனைத் தோட்டத்துக்குள்ளே குதிச்சுடணும். சரியா?” என்று கேட்டாள். 

    “மதில் சுவர் மேலே ஏறி குதிக்கறது என்ன சாமானிய காரியமா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி. 

    “அங்கிள், அங்கேப் பாருங்க! ஒரு பெரிய மரம் சுவருக்குப் பக்கத்திலே இருக்கு. இந்த இடமும் ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கு. கண்டிப்பா முடியும்” என்று ஊக்குவித்தாள். 

    “சரி ஆகட்டும்” என்றார் அவர். 

    சற்று நேரம் அவர்கள் கடைவீதியில் உலாவிவிட்டு இருட்டியதும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவ்விடமே அமைதியாக நிச்சலனமாக இருந்தது.சாரு அங்கிருந்த பெரிய மரத்தின் மீது ஏறத் துவங்கினாள். மரம் ஏறி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனாலும் வந்தியத்தேவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவளை மேலும் மேலும் ஏறச் செய்தது. பின்னாலேயே கிருஷ்ணசாமியும் மூச்சிரைக்க மரம் ஏறிக் கொண்டிருந்தார். மரத்தினை முக்கால்வாசி ஏறியதும் மதில் சுவருக்கு தாவி சில அடிகள் நடந்து அந்தப்பக்கம் இருந்த மற்றுமொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு இறங்கினாள் சாரு. கிருஷ்ணசாமியும் இவளைத் தொடர்ந்து வந்திறங்கினார். 

    பதுங்கி பதுங்கி சென்று தோட்டத்தில் தாமரைக்குளத்தை இருவரும் கண்டுகொண்டனர். அப்போது யாரோ தோட்டத்திற்குள் வரும் சப்தம் கேட்டு இருவரும் ஒளிந்து கொண்டனர். வந்தது வந்தியத்தேவன் என்று தெரிந்ததும் இருவரும் வெளியில் வந்தார்கள். அவர்களைக் கண்டு வந்தியனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. “இங்கே எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டான். 

    “ஆழ்வார்க்கடியானின் உதவியுடன் வந்தோம். உங்களைப் பார்க்கவே சிரமப்பட்டு வந்தோம்” என்றாள் சாரு. 

    “எதற்கு? என்ன விஷயம்? ஆழ்வார்க்கடியான் ஏதேனும் சேதி சொல்லி அனுப்பினானா?” என்று கேட்டான் வந்தியத்தேவன். 

    “அவர் சேதி ஒன்றும் அனுப்பவில்லை. நாங்கள் திரும்பி செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களிடம் விடை பெற்று செல்ல வந்தோம். அத்துடன் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்யவும் வந்தோம். இன்று,இளவரசருக்கு ஆபத்து காத்திருக்கிறது. நீங்கள் அவருடன் இருந்தாலும் அவரை உங்களால் காப்பாற்ற முடியாது. ஆகையால் நீங்கள் எங்காவது சென்று விடுங்கள். அவருடன் நீங்கள் இருந்தால் ஒரு பெரும் பழிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதைத் தெரிவிக்கவே வந்தேன்” என்று கண்களில் நீர்மல்க கூறினாள் சாரு. 

    வந்தியத்தேவனுக்கு இவளது அன்பைக் கண்டு மனம் கனிந்தது. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் அன்புடன் தனது பாதுகாப்பை எண்ணி பேராபத்துக்கிடையில் இவள் கோட்டைக்குள் புகுந்திருக்கிறாளே என்று வியப்பு ஏற்பட்டது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது தெய்வப்புலவரின் வாக்கல்லவா! காலங்கள் தாண்டி என்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று எண்ணினான். 

    “சாரு உன்னு​டைய அன்பு என்னை பேச முடியாதபடி கட்டிப்போடுகிறது. இருந்தாலும் நான் என் கடமையை செய்யக் கடமைப்பட்டவன். எத்தகைய நிலையிலும் இளவரசரைப் பிரிய மாட்டேன் என்று எனது உயிருக்கும் மேல் நான் போற்றும் இளவரசி குந்தவையிடம் வாக்களித்திருக்கிறேன். ஆபத்துக​ளை சமாளித்துக் கொள்​வேன்! நீ கவலைப்படாதே! நீ பத்திரமாக உன் காலத்திற்கு செல்” என்றான் வந்தியத்தேவன். 

    கொஞ்ச தூரத்தில் மணிமேகலையின் குரல் கேட்கவே வந்தியத்தேவன் அவசரமாக “சாரு நீ சென்று விடு. மணிமேகலை வருகிறாள். அவள் உங்கள் இருவரையும் பார்த்து விட்டால் குழப்பம் தான் அதிகரிக்கும்” என்றான். 

    சூழ்நிலையை புரிந்து கொண்டு சாருவும் கிருஷ்ணசாமியும் அவசரமாக அகன்று சென்றனர். 

    தோட்டத்தின் மறுபகுதிக்கு வந்தபின் சாரு நின்றாள். சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். வந்தியத்தேவரை பின் தொடர்ந்து சென்றால் வேட்டைமண்டபத்தை அடையலாம். ஆனால் அங்கே சதிகாரர்களிடம் தானும் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். வேறெப்படி அந்தப்புரத்திற்குள், நந்தினியின் அறைக்குள் நுழைவது? அங்கு தான்ஆதித்தகரிகாலரின் மரணம் ஏற்படும் என்று படித்திருக்கிறோமே! 

    தீவிரமாக யோசித்ததில் அவளுக்கு ஒரு யுக்தி தோன்றியது. 

    “அங்கிள், எனக்கு ஒரு ஐடியா!” 

    “என்ன சாரு? சொல்லு” என்றார் கிருஷ்ணசாமி. 

    “என்னுடைய கணிப்பின்படி மேல்மாடத்துலே ஒரு துவாரத்தின் வழியா காபாலிக உருவத்துல பெரிய பழுவேட்lடரையர் நந்தினியைப் பார்க்கப் போவாரு. நான் ஒளிஞ்சிருந்து அவர் போகும் போது அவருக்குப் பின்னாலேயே போனேன்னா கொலை நடக்கபோற இடத்துக்கு ஈஸியா போய்டலாம்னு நினைக்கிறேன். ஆனா நீங்க இங்கேயே எனக்காக காத்திருக்கணும். நான் போய்ட்டு திரும்பினதும் நாம கால இயந்திரத்துலே கிளம்பிடலாம். ஒருவேளை நான் வர லேட்டானா, நீங்க கிளம்பிடுங்க. ஏன்னா அதுக்கும் மேல இங்கிருந்தா உங்களுக்கும் ஆபத்தா முடிஞ்சிடும்” என்றாள் சாரு. 

    “இதெல்லாம் தேவையில்லாத விஷப் பரீட்சைம்மா. நாம இப்போவே கிளம்பலாம்னு நினைக்கறேன்.” 

    “வந்த காரியத்தை அரைகுறையா விட்டுட்டு வர மனசில்லே  அங்கிள். ப்ளீஸ் இது தான் கடைசி முறை” என்றாள் கெஞ்சலாக. 

    “சரி. ஆனா உன்னை நான் பத்திரமா கூட்டிட்டு போகாம தனியா திரும்பி போக மாட்டேன். நீ சொன்னபடி உனக்காக இங்கேயே காத்திருக்கேன்” என்றார். 

    “நான் போய் தயாரா ஒளிஞ்சிக்கறேன் அங்கிள். நீங்களும் பத்திரமா இருங்க” என்று சொல்லி விட்டு சாரு மெல்ல நடந்து மேல்மாடத்திற்கு போகும் வழியைக் கண்டுபிடித்து சென்றாள். மேல் மாடத்தில் ஒரு பெரிய தூணின் பிரம்மாண்ட நிழலில் மறைந்துகொண்டாள். காபாலிகரின் வருகைக்காக காத்திருக்கலானாள். 

    நேரம் கடந்துகொண்டே இருந்தது. காபாலிகர் வரும் வழியாகத் தெரியவில்லை. ஒருவேளை வேறேதேனும் வழியில் போயிருப்பாரோ என்று அவள் மனம் யோசிக்கத் துவங்கியபோது அங்கே ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் கழுத்தில் ஒரு மண்டை ஓட்டு மாலையுடன் காபாலிகர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி மறைந்து மறைந்து வந்தார். சற்று தூரம் சென்று தரையில் ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ நெம்புவது போல் செய்யவும் கீழே ஒரு துவாரம் தோன்றியது. அது தான் களஞ்சிய அறைக்குச் செல்லும் வழியென சாரு புரிந்து கொண்டாள். அவர் உள்ளே சென்றதும் அவரைத் தொடரலாம் என்று எண்ணி எழுந்தவளுக்கு அதிர்ச்சி. அவருக்குப் பின்னே மற்றுமொரு மனிதன் அவர் சென்ற வழியிலேயே சென்று அதே துவாரத்திற்குள் இறங்கியதைக் கண்டாள். இவன் யார்? எதற்குப் பழுவேட்டரையரை பின்தொடர்கிறான்? என்று யோசித்தபடியே அவனை சாரு பின்தொடர்ந்தாள். 

    திறந்திருந்த துவாரத்தின் வழியே மெல்ல எட்டிப் பார்த்தபோது உள்ளிருந்த தீபத்தின் மங்கலான ஒளியில் அந்த சிறிய களஞ்சிய அறை கண்ணுக்குப் புலனாகியது. அங்கே ஒருவரும் இருக்கவில்லை. எனவே அவளும் அந்த துவாரத்தின் வழியாக நுழைந்து கீழே இறங்கினாள். அவள் இறங்கவும் பக்கத்து அறையில் தடதட என சப்தம் கேட்டது. தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் கண்ட காட்சி அவளுக்கு மிகுந்த பயத்தை அளித்தது. தவறியும் தான் அலறிவிடக்கூடாது என்று தன் கைகளால் தன் வாயைப் பொத்திக்கொண்டாள். களஞ்சிய அறையின் வாயிலில் வந்தியத்தேவன் மயங்கிக் கிடந்தான். நந்தினி பழுவேட்டரையரைக் கண்ட பயத்தில் நிலைகுலைந்து நின்றிருந்தாள். வேட்டை மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட ரவிதாசனும் அவனது ஆட்களும் பழுவேட்டரையரைத் தாக்கி நினைவிழக்கச் செய்தனர். 

    காபாலிக உருவத்தில் வந்த பழுவேட்டரையரின் கரத்தில் இருந்த ஒரு திருகுகத்தியைக் கொண்டு அவரைத் தொடர்ந்து வந்த மனிதன் ஆதித்தகரிகாலனை கொன்றிருந்தான். “கடைசியில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. இடும்பன்காரியின் கையினால் உனக்கு மரணம் என எமதர்மன் விதித்திருக்கிறான், பார்த்தாயா? ஹாஹாஹாஹா” என்று கொக்கரித்தான் அவன். இனியும் இங்கு நிற்பது ஆபத்து என்று ரவிதாசன் அனைவரையும் கிளம்புமாறு ஆணையிட்டான். நந்தினியின் வேண்டுகோளின்படி பழுவேட்டரையரையும் அவர்கள் தூக்கிச் சென்றனர். அனைவரும் சுரங்கவழியே தப்பிச் சென்றனர். அடுத்த சில விநாடிகளில் அந்த அறையில் இறந்து போன இளவரசரையும் மயங்கிக் கிடந்த வந்தியத்தேவனையும் தவிர யாரும் இல்லை. 

    சாருவின் மனம் பதைபதைத்தது. இந்தக்கட்டத்​தை பொன்னியின் செல்வன் புத்தகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட துயரமே மிக அதிகம். அந்தக் காட்சியை இப்போது நேரிலும் கண்டுவிட்ட பிறகு அவளது நிலையை என்னவென்றுசொல்ல! இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் துவண்டு கிடந்த வந்தியத்தேவனைக் கண்டாள். தன் மனதில் முடிவு செய்துகொண்டாள். இவர் இங்கு இருந்தால்தானே இவர் மீது பழி சுமத்துவார்கள். இவரை உடனே இங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ஆனாலும் மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணாகிய தான் அவரைத் தூக்கி நிறுத்தமுடியாது. அதற்குப் பதில் அவரை எழுப்பி கூட்டிச் செல்லலாம் என நினைத்தாள். 

    “வந்தியத்தேவரே! எழுந்திருங்கள். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இனியும் நீங்கள் இங்கிருந்தால் ஆபத்து. எழுந்திருங்கள்! கிளம்புங்கள் என்னுடன்!” என்று அழுதுகொண்டே வந்தியத்தேவனை எழுப்பினாள். 

    திடீ​ரென அவளது தோள்பட்டையில் ஒரு கரம். பயத்துடன் திரும்பிப் பார்த்தவள் அங்கிருந்தது கிருஷ்ணசாமி என்று கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள். “அங்கிள், அவரை எழுப்புங்க. இல்லாட்டி வீண் பழி அவர் மேலே விழும்” என்று கதறத் துவங்கினாள். 

    அவளது வாயை பொத்தி கிருஷ்ணசாமி அவளது பேச்சை நிறுத்தினார். “சாரு, இனி ஒரு கணமும் நாம லேட்பண்ணக் கூடாது. அது பெரிய ஆபத்துல தான் கொண்டு போய்விடும். யாராவது நம்மை இங்கே பார்த்துட்டா அந்த கொலைப்பழி நம்ம மேலே கூட விழ வாய்ப்புண்டு.  இங்கிருந்து இப்போவே நாம கிளம்பணும். போகலாம் வா,எழுந்திருசாரு” என்றார். 

    சாரு மறுத்தாள். “வந்தியத்தேவரை காப்பாத்தணும், அதை செய்யாம நான் வரமாட்டேன்” என்று அரற்றினாள். 

    “எழுந்திரு சாரு நேரமாகுது. எழுந்திரும்மா” என்றார் கிருஷ்ணசாமி மீண்டும். 

    “எழுந்திரு சாரு” 

    “எழுந்திரு” 

    “நேரமாகுது” 

    “எழுந்திரு சாரு” 

    திடீரென பெரும் அலை முகத்தில் அடித்தது போலிருந்தது சாருவிற்கு. விருட்டென எழுந்தாள். எழுந்ததும் ஒன்றும் விளங்கவில்லை. திருதிருவென விழித்தாள். 

    “என்னடி இது? இவ்வளோ நேரம் தூங்கியிருக்கே! அதுக்கும் மேலே ‘காப்பாத்தணும் வரமாட்டேன்’னு ஒரே புலம்பல். நானும் எழுப்பிட்டே இருக்கேன். நீயும் தூக்கத்துலே உளறிட்டே இருந்தே! அதான் முகத்திலே தண்ணி ஊத்தி உன் தூக்கத்தைக் கலைச்சேன்” என்றாள் சாருவின் தாய். 

    “நான் எங்கே இருக்கேன்? வந்தியத்தேவர் எங்கே? நீ எப்படிம்மா இங்கே வந்தே? கிருஷ்ணசாமி அங்கிள் எங்​கே போனார்?” என்று கேள்விகளை அடுக்கினாள் சாரு. 

    “சரியாப் போச்சு போ. நீ நம்ம வீட்டுல தான் இருக்​கே. கனவு கண்டியா? பொன்னியின் செல்வன் புக்கை கையிலே வெச்சிண்டு தூங்கிட்டு கனவு வேற கண்டிருக்கே. எப்​போதான் இந்தப் பைத்தியம் உனக்கு தெளியு​மோ​தெரிய​லை! சரி சரி. சீக்கிரம் போய் முகம் கழுவு. சித்து கொஞ்ச நேரத்துல வரேன்னு ஃபோன் பண்ணினான்” என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்றாள் சாருவின் தாய். 

    இன்னமும் கனவிலிருந்து விடுபட முடியாமல் முதல் நாள் நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்த சாருவிற்கு அப்போது தான் விளங்கியது. அட நேத்து தான் ஒரு இங்கிலீஷ் சினிமா பார்த்தோம்.  டைம் மெஷின் மூலமா கடந்த காலத்துக்குப் போற கதை. அதுவும் பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியும் கலந்து இப்படி ஒரு அற்புத கனவு வந்திருக்கும்போல. ஆஹா, இது நினைவாகவே இருந்திருக்கக் கூடாதா? என்று ஏக்கம் ஏற்பட்டது. 

    சிறிது நேரத்திற்கு பின் சித்து வந்தான். சாரு அவனிடம் “சித்து, உங்க மாமா பேரு என்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். 

    ஏன் இப்படி இவள் கேட்க வேண்டும் எனப் புரியாமல் பார்த்தான் சித்து.. இருந்தும் சற்று நிதானமாகவே சொன்னான். 

    “கிருஷ்ணஸ்வாமி”

     

    Share