Blog

  • நோபெல் திருவிழா ~1

     

    இன்ன்ம்பூரான்

    2012 வருட நோபெல் பரிசு திருவிழா இன்று தொடங்கியது. இனி சில நாட்களுக்கு, நாள்தோறும் களைகட்டும். வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இவ்வருட பரிசுகளிலிருந்து ஆரம்பித்து, நோபெல் மஹாத்மியத்தை, சுருக்கமாக, கூறுவதாக உத்தேசம். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்கு விஷயம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று ஒரு அசரீரி கூறுகிறது. வாசகரோ ரக்ஷது.

    இவ்வருட மருத்துவ/உடலியல்(Physiology or Medicine) பரிசு இருவருக்கு:  டாக்டர்  ஸர் ஜான் பி.கார்டன் (கேம்ப்ரிட்ஜ்: இங்கிலாந்து) & டாக்டர் ஷின்யா யாமானகா (க்யோட்டோ: ஜப்பான் & க்ளாட்ஸ்டன் நிறுவனம், சான் ஃப்ரான்சிஸ்கோ)  மூன்றாவது பங்கு கொடுக்கப்படவில்லை. முன்னோடிகளான ஜேமி தாம்சனையும், ரூடி ஜேய்னிஸ்சையும் ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வரும் முன் காப்போன் சிக்கனமாக இருக்கலாம். காலம் கெட்டுக்கிடக்கிறது அல்லவா! இந்த பரிசுகளிலேயே ஐந்தில் ஒரு பங்கு குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். வட்டி வருமானம் மிகவும் குறைந்து விட்டதாம். பரவாயில்லை. அப்படி குறைந்தாலும், பரிசின் மதிப்பு $ 1.2 மிலியன்.

    ஸர் ஜான் தான் செயற்கையாக உயிரூட்டும் வித்தையின் தந்தை. முதல் படைப்பு ஒரு தவளை. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு, (1962: டாக்டர். யாமனாகா பிறந்த வருடம்) இப்போது பரிசு. அவர் இன்றைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

    ஸர் ஜானின் தவளை வந்த விதம் விந்தை. அவர் போட்டது ‘தூபம்’. தாந்தோன்றியாக வளர்ந்தது, தவளை, சுருக்கமாக சொன்னால். அது எப்படி நேர்ந்தது என்பது புரிய 44 ஆண்டுகள் பிடித்தன. 2006ல், டாக்டர் யாமானகா எலிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு, அந்த தவளை வளர்ந்த விதத்தின் சூட்சுமத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அந்த நான்கு மரபணுக் கண்ட்ரோல் புரதங்கள் (Myc, Oct4, Sox2 and Klf4.). அவை வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றும் பணியை செய்தன. இது ஒரு விஞ்ஞானப் புரட்சி.

    ஒரு வேடிக்கையான கொசுறு தகவல்: ஸர் ஜானின் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் அவருக்கு சுட்டுப்போட்டாலும் விஞ்ஞானம் வராது என்று கொளுத்திப் போட்டார்! அந்த ஜான் சிறுவனும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ஆழ்ந்து விட்டான். இருந்தாலும், வண்ணத்துப் பூச்சிகளின் வண்ண அழகில் மனதை பறி கொடுத்து,1956ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புழு, பூச்சி ஆராய்ச்சியில் புகுந்தார். விஞ்ஞானத்தின் அறைகூவல் அவ்வாறு அவரை பிடித்திழுத்து வைத்துக்கொண்டது.

    டாக்டர் யாமனாகோ ஒரு எலும்பு டாக்டர். டாக்டர் வேலை தனக்கு ஒவ்வாது என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்ட அவர் தன் திறனை இந்தப்பக்கம் திருப்பினார். அமெரிக்கா வந்தார். சாதனை படைத்தார். அவரை ஊக்குவித்தது, டாக்டர் சுசுமு டோனெகவா என்ற மற்றொரு நோபலர் (1987). அவரைப் பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. நோபெல் பரிசு வந்த விதமே ஒரு காதை. இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    ஸர் ஜான் கர்டனுக்கும், டாக்டர் யாமனாகோ அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    Share
  • கையறு நிலையில்

    சாந்தி மாரியப்பன்

    “எப்போதான் கண் திறந்து
    பார்க்கப்போறியோ?”
    அங்கலாய்த்த பக்தனுக்குக்
    கூரையைப்பிய்த்துக்கொண்டாவது
    உதவிடும் துடிப்பில்
    ஓடி வந்த கடவுள்
    பேச்சற்று நின்றார்..
    பிய்ப்பதற்குப்
    பொத்தல் கூரைக்கும் வழியின்றி
    வானமே கூரையாய்
    உறங்கும்
    நடைபாதை வாசியாய்க்கண்டு.

     

    படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_10678670_kolkata-india–february-03-streets-of-kolkata-man-sleeping-on-the-streets-of-kolkata-india-on-februa.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 40

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

    மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

    விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
    அகன்ற பெருந்தோள் கணவருடன்
    ஊடல் பாராட்ட இயலாமல்
    அவருடன் பொருந்தியிருந்து
    வந்திட்ட விருந்தினரை
    வரவேற்று உபசரித்தனர்
    இல்லற மகளிர்.

    வழிபாட்டு ஒழுக்கத்தில்
    மேலோங்கிச் சிறந்த
    அருந்ததி போலும்
    கற்பில் சிறந்த
    இல்லற மகளிரை
    அவர்தம் கணவர் பெருமக்கள்
    மதித்தேதான் போற்றினர்.

    தம் நெஞ்சத்திடம்
    தம் எண்ணம் உரைத்தனர்.

    ஒளியும் அழகும் பொருந்திய
    இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
    நீலமணி ஒத்த இதழ்களையுடைய
    குவளை மலர்கள்
    புறங்கொடுத்துப் போயின.

    மகளிரின் கரிய கண்களின்
    கோபக் கருஞ்சிவப்பு
    விருந்தினர் வரவால்
    நீங்கியே போயிற்று.

    இக்கோபச்சிவப்பு மட்டும்
    நீங்காமல் போயிருந்தால்
    இந்தப் பரந்த நிலவுலகம்
    இவர்தம் ஊடல் நீங்கிட
    வேறு ஒரு மருந்தைத்
    தர வல்லதோ…

    இங்ஙனம் எண்ணி எண்ணிச்
    செயலற்று மயங்கினர்
    கணவன்மாரும்
    விழாவது நடந்திட்ட நாட்களில்..

    கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

    இச்சிறப்புடை இந்திரவிழாவின்
    நள்ளிரவுப் பொழுதொன்றில்
    தன்னுள்ளே இருக்கும்
    மணத்தாது மகரந்தங்கள்
    தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

    மேற்பரப்பில் இருக்கும்
    கட்டு மெல்லவே அவிழ்ந்து
    தேன் சொரியச் சொரிய
    நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
    உள்ளத்தின் நினைவை
    உள்ளே மறைத்துக்
    கண்ணீரைச் சொரிந்தன
    இரு பெண்களின் கண்கள்.

    கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
    கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
    பிரிவுத்துயர் தாளாமல்
    கண்ணீரைச் சொரிந்திட்டது;
    துடிக்கவும் செய்தது.

    கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
    மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
    ஆனந்தம் தாளாமல்
    கண்ணீரைச் சொரிந்திட்டது;
    துடிக்கவும் செய்தது.

    (குறிப்பு:
    பெண்ணின் இடக்கண் துடித்தல் – நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.

    பெண்ணின் வலக்கண் துடித்தல் – தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)

    (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கடல் ஆடு காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 227 – 240
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி:
    http://highqualitypic.blogspot.in/2011/06/raja-ravi-varma-paintings_17.html

    Share
  • வார ராசி பலன் 07.10.2012 முதல் 13.10.2012 வரை

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: மாணவர்கள் சீதோஷ்ண நிலைமைக்கு ஏற்ற உணவு வகைகளை உண்பது நல்லது. பெண்கள் வீண் செலவுகளைக் குறைப்பது மூலமாகப் பணத் தட்டுப்பாட்டையும், தேவையற்ற மன உளைச்சலையும் குறைக்கலாம். வியாபாரிளுக்குக் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறி, நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போனால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனமாக இருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்களுக்கு வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் நல்ல பலன் கை மேல் கிடைக்கும்.

    ரிஷபம்: பிள்ளைகள் மூலம் பெற்றவர்களின் சந்தோஷமும், மரியாதையும் கூடுவதோடு, இந்த வாரம் சற்றுச் செலவுகளும். கூடும். மாணவர்களுக்கு உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் உறவுகள் நடுவே சிறுசிறு விஷயங்களுக்குக்காகக் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அதனால் உறவுகளிடம் பெண்கள் பண விவகாரங்களில், எச்சரிக்கையுடன் செயல்படவும். வியாபாரிகளுக்கு, வேண்டிய சலுகைகள் வந்து சேரும். முதியவர்களுக்கு, அதிகப்படியாக இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். சுய தொழில் செய்பவர்களின் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். .

    மிதுனம்: பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வந்தால் வீண் அபராதத்தைத் தவிர்க்கலாம். சுய தொழில் புரிபவர்கள், புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், எதிர்பார்க்கின்ற லாபம் கிட்டும். மாணவர்கள், உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித் தனம். பொது வாழ்வில் இருப்பவர்கள், உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்வரை பொறுமை காக்கவும். கலைஞர்கள் பயணங்களின்போது புதியவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். பணிபுரிவோருக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை அவ்வப்போது வந்து போகும்.

    கடகம்: மாணவர்கள், இணக்கமாய் நடந்து கொள்வதில் கவனமாய் இருந்தால் உடனிருப்பவர்களின் மூலம் கிடைக்கும் உதவி உங்களுக்குச் சாதகமாய் இருக்கும். சிறிய வேலைகளை முடிப்பதற்கான அலைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள், அதிலும் கவனமாக இருப்பதே புத்திசாலித்தனம். கர்ப்பிணிப் பெண்கள், ஆயாசம் தோன்றாத வகையில் சத்தான உணவு வகைகளை உண்ணவும். பொது வாழ்வில் உள்ளவர்கள், பணப்புழக்கத்தில் உள்ள பிரச்சினைகளை நிதானமாகக் கையாளவும். கலைஞர்களுக்குப் புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் அளவோடு பழகுதல் நல்லது. பங்குதாரகள் இடையே கருத்து வேறுபாடு வரலாம். எனவே வியாபாரிகள் பக்குவமாக நடந்து கொள்ளவும்.

    சிம்மம்: வேலையில் இருப்பவர்கள், மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து, பாராட்டுக்களைப் பெறுவார்கள். படிப்பு விஷயங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டாலும், மாணவர்கள் உங்கள் விடா முயற்சியை மேற்கொண்டால், இந்த நிலைமாறி விடும். பொது வாழ்வில் உள்ளவர்கள், அதிக அலைச்சல் அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். பெண்கள், செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் வரவுக்கு ஏற்றவாறு சரக்குகளைக் கொள்முதல் செய்து கொண்டால், வருகின்ற லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு, அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறும்.

    கன்னி : பெண்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள் சுய தொழில் புரிபவர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றாலும் அதற்குரிய பண வரவு கிடைப்பதில், சிறிது தொய்வு உண்டாகும். கலைஞர்கள், ஆடம்பர செலவைச் குறைப்பது புத்திசாலித் தனம். பணியில் இருப்பவர்கள், பித்தம், தொடர்பான உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். மாணவர்கள், எடுக்கும் பணியில் சிரத்தை எடுத்துச் செய்தால், வேண்டிய பாராட்டும் தானே வந்து சேரும். பொது வாழ்வில் உள்ளவர்கள், புதிய சொத்து வாங்கும் எண்ணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரிகள், திறமையை முழு அளவில் பயன்படுத்தினால் நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

    துலாம்: இந்த வாரம், பெண்கள், எதிர்பார்த்த வகையில் விஷயங்கள் அமையாமல் சிற்சில பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி வரலாம். பொறுப்பில் உள்ளவர்கள், திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியம். பணியில் உள்ளவர்கள், பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும். வியாபாரிகள், அவ்வப்போது வழக்குகளில் போக்கைக் கவனித்து வருவது அவசியம். கலைஞர்கள், உடன் இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும் மாணவாகள் மனதை ஒருநிலைப்படுத்திப் படிப்பதில், உறுதியாக இருந்தால் சுலபமாக அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம்.

    விருச்சிகம்: நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைப்பதால், மாணவர்களுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த வாரமாய் அமையும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கலில், கவனமாக இருந்தால், லாபம் குறையாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், வலிய உறவு கொண்டாட வருபவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது. இழுபறியாக இருந்த வழக்குகளில், நல்ல சாதகமான முடிவுகள் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள், மெத்தனமாக இருந்தால், கையில் உள்ள பணம் தண்ணீராய்க் கரையும். பெண்கள் குடும்பச் சூழலுக்கேற்றாற்போல் வளைந்து கொடுத்தால், காரியங்களைச் சாதிக்கும் வழி எளிதாகும். இந்த வாரம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

    தனுசு: மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடினமான வேலைகளில், ஈடுபட்டிருப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் வேலைகள் தேங்காமல் இருக்கும். பங்குதாரர்கள் திடீரென்று விலகிப் போகும் சூழல் உருவாகலாம். அதனால் வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள், சாமர்த்தியமாகச் செயல்பட்டால், எதிரிகளை எளிதில் வெல்ல முடியும் பெற்றவர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண்களுக்குப் பிரியமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், சிக்கலான விஷயங்களில், இறங்கும் முன் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்குத் திடீர் பண முடை மனக் கிலேசத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் பெண்கள் நினைத்தது போலக் காரியங்கள் நடக்காதது ஏமாற்றத்தை உண்டாக்கும். அதனால் பொறுமையுடன் இருந்து வருவது அவசியம். மாணவர்கள் .தன்னம்பிக்கையுடன் பாடங்களைப் படித்து வர கூடுதல் மதிப்பெண்களோடு பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்பட்டால் பணப்பற்றாக்குறை என்னும் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள், இதமான அணுகுமுறையை மேற்கொண்டால், காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ளலாம்.

    கும்பம்: மாணவர்கள் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் நட்பு வட்டத்தை விட்டு விலகி இருந்தால், படிப்பில் முழுக்கவனம் செலுத்த இயலும். சுப காரியங்கள் நினைத்தது மாதிரி நடப்பதால், பெண்களுக்கு இது சிறப்பான வாரமாக அமையும். படிப்புக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வதால் குடும்பத்தில், மகிழ்ச்சிக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிராது. பெண்கள், வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகளைத் தடுக்கலாம். சிறு சிறு போட்டிகள், பொறாமைகள் எழுந்தாலும், கலைஞர்கள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. கலைஞர்கள் வெற்றி கிட்டும் வரை, பொறுமை என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம்.

    மீனம்: இந்த வாரம் பணியில் இருப்பவர்கள், எந்தக் காரியத்திலும் இயல்பான மனநிலையோடு செயல்பட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. பெண்கள், குடும்ப அமைதிக்காக அதிக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள், உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். கலைஞர்கள், புதிய வீடு மாற்றம், மனை வாங்குதல் போன்றவற்றில், சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள், பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால் சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றைத் தவிர்த்து விடலாம் மாணவர்கள், கருத்துடன் படிப்பில் ஈடுபடுவது அவசியம்.

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-14)

    முகில் தினகரன்

    அவள் செல்வதையே விரக்திப் பார்வை பார்த்தபடி நின்றவன். “ஹூம்.. நியாயப்படி பார்த்தா.. எப்ப என் மைதிலி என்னைத் தூக்கியெறிஞ்சுட்டுப் போனாளோ.. அன்னிக்கே நான் உசுரை விட்டிருக்கணும்!.. ஏதோ இந்தத் தேவிக்காகத்தான் இன்னமும் உசுரோடவே இருக்கேன்!.. ப்ச்.. போகட்டுமே.. இந்த மீதி வாழ்க்கையும் அவ நன்மைக்காகவே போகட்டுமே!” தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.

    அவன் முதுகுக்குப் பின்னால் வந்து நின்ற லட்சுமி, “சுந்தர்.. என்னடா நீ பாட்டுக்கு அந்தக் கிறுக்குப் பொண்ணைக் கட்டிக்கறேன்னு சம்மதம் சொல்லி அனுப்பிச்சிட்டே!.. எனக்கென்னமோ.. அவங்க பொய் சொல்றாங்கன்னு தோணுதுடா!.. சத்தியமா எந்த டாக்டரும் கல்யாணம் பண்ணி வெச்சா கிறுக்குத்தனம் போய்டும்ன்னு சொல்லியிருக்க மாட்டான்.. இவங்களா ஒரு கதை விட்டு அந்தப் பைத்தியத்தை யாராவது தலைல கட்டிவிடப் பார்க்கறாங்க!.. அதுக்கு என் பையன்தானா கெடைச்சான்?.. வேண்டாம்டா.. அநியாயமா உன் வாழ்க்கைய நீயே தொலைச்சுக்காதடா!”

    “அம்மா!.. நெனைச்சது கெடைக்கலேன்னா.. கெடைச்சதை நெனச்சதா ஏத்துக்கனும்” தத்துவம் பேசினான்.

    ஆற்றாமையுடன் அவனை ஏறிட்ட லட்சுமி, “ஹூம்.. எந்த நேரத்துல இவன் ஜென்மம் எடுத்தானோ?.. வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இன்னிக்கு வரைக்கும் கஷ்டங்களை மட்டுமே பார்த்திட்டிருக்கான்!.. படிக்கற வயசுல அப்பன்காரன் செத்ததினால படிப்பை விட்டுட்டுத் தறிக்குப் போனான்!.. தறில உழைச்சு உழைச்சு ஓடாய்த் தேய்ஞ்சான்!.. கூடப் பொறந்தவ கல்யாணத்துக்காக அந்தத் தறிகளையும் வித்துட்டு கூலிக்குப் போனான்!.. போதாக்குறைக்கு ஆசைப்பட்ட அத்தை பொண்ணும்..ஏமாத்திட்டுப் போயிட்டா!.. இப்பக் கடைசியா ஒரு கிறுக்கியக் கட்டிட்டுக் காலம் பூராவும் சீரழியப் போறான்!.. கடவுளே!.. இதுக்காகவா இவனுக்கு இந்தப் பிறவியைக் குடுத்தே?”

    தேவியின் அண்ணன் ரேணுகாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டான், என்கிற செய்தியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களால் நம்பவே முடியவில்லை.

    “நெஜம்மாவா?.. நெஜம்மாவா?” என்று ஆளாளுக்கு தேவியைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் துளைத்தெடுத்தனர்.

    “டேய்.. ரத்னம்.. எதுக்கும் நீயே ஒரு தடவை அவரைப் பார்த்துக் கேட்டுட்டு வந்திடுடா!..” என்று தேவியின் மாமியார் மகனிடம் சொல்லியனுப்ப,

    அவனும் நேரில் வந்து கேட்டு விட்டுப் போனான்.

    தேவியின் திருமணத்தின் போது அந்தத் திருமணத்தை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து தாங்கள் கேட்டிருந்த தொகை பைசாக் குறையாமல் கைக்கு வந்த பிறகே நடத்தி முடித்த அதே குடும்பத்தினர் இன்று இந்தக் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நடத்தி முடிக்க வேண்டுமென்கிற வெறியோடு செயல் பட்டனர்.

    அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே நாள் குறித்து, அவசர அவசரமாய் பத்திரிக்கையடித்து, அழைப்பு வைத்து, சுந்தரின் தலையில் அந்தக் கிறுக்குப் பெண்ணைக் கட்டி வைத்து விட்டுத்தான் ஓய்ந்தனர்.

    “அடேங்கப்பா.. இவ்வளவு சடுதில ஒரு கண்ணாலத்தைப் பேசி..நடத்தி முடிச்சிட்டாங்கன்னா.. சாதனைதான்!” சிலர் வியந்து பேச,

    “அது செரி.. எங்க மாப்பிள்ளை மனசு மாறி வேண்டாம்னுடுவாரோங்கற பயத்துல புயல் வேகத்துல முடிச்சிட்டாங்கப்பா!” என்றும. சிலர் கிசுகிசுப்பாய்ப் பேசினர்.

    கல்யாணத்தின் போது அந்தக் கிறுக்கி பண்ணிய அட்டகாசத்தில் மண்டபமே சிரித்தது.

    எந்த வித பிரதிபலிப்பும் காட்டாமல் சிலையாய் அமர்ந்திருந்த சுந்தரைப் பார்த்து விதி சிரித்தது.

    அந்தக் கட்டாயக் கல்யாணம் ஒரு கலாட்டாக் கல்யாணம் போலானது.

    ஆயிரம் இரவுகள் வந்து போனாலும் முதல் இரவின் முதல் அனுபவம் மட்டும் எல்லோர் மன நாக்கிலும் இறுதி வரை ஒட்டிக் கொண்டிருக்கும்.. முதல் முத்தம் போல்.. முதல் காதல் போல்!

    சுந்தருக்கும் அந்த முதல் அனுபவம் வந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. ஆனால், இனிப்பாய் அல்ல!.. வெறுப்பாய்!

    தாம்பத்யத்தைப் பற்றி யாரோ எதையோ அரையும் குறையுமாய்ச் சொல்லிக் கொடுத்து புத்தி சுவாதீனமில்லாத ரேணுகாவை முதலிரவு அறைக்குள் அனுப்பியிருக்க,

    அவள் வந்ததும் வராததுமாய் பால் சொம்பை மேசை மேல் வைத்து விட்டு, அவன் காலடியில் அமர்ந்து ரெண்டு கால்களையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டேயிருந்தாள்.

    சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த சுந்தர், தாள முடியாமல், “போதும் எந்திரிம்மா!” என்றான்.

    “ம்..அதெப்படி?.. நீங்கதான் என் தோளைத் தொட்டுத் தூக்கி விடுவீங்களாம்.. ம்.. தொடுங்க.. தூக்கி விடுங்க!” என்று சொல்லி விட்டுத் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து “கெக்கே.. கெக்கே!” என்று சிரித்தாள்.

    சுந்தர் அதை விநோதமாய்ப் பார்த்தவாறே தோளைத் தொட்டுத் தூக்கினான்.

    “ம்ம்ம்.. மொதல்ல காலைத் தொட்டுக் கும்பிடணும்னு நீலவேணி அத்தை சொல்லிச்சு.. கும்பிட்டாச்சு!.. அடுத்தது என்ன?.. மறந்திடுச்சே!” தலையை “வறட்.. வறட்”டென்று சொறிந்தபடியே யோசித்த ரேணுகா,

    “ஆங்!.. ஞாபகம் வந்திடுச்சு!.. பால் குடுக்கணும்!..” என்றவாறு ஓடிச் சென்று பால் சொம்பை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

    அதை வாங்கி அவன் குடிக்கக் குடிக்க பாதியில் “படக்”கென்று பிடுங்கி, “மீதியை நான் குடிக்கணுமாம்.. நீலவேணி அத்தை சொல்லியிருக்கு!” என்றபடியே அவசர அவசரமாய் மார்புச் சேலையிலெல்லாம் சிந்திக் கொண்டு குடித்து விட்டு.

    மீண்டும் “கெக்கே.. கெக்கே!” என்று சிரித்தாள்.

    வெறுத்துப் பொனான் சுந்தா;. “கடவுளே!.. காலம் பூராவும் இது கூட எப்படி நான் காலந் தள்ளப் போறேனோ?”

    குதித்து கட்டிலின் மீது ஏறி நின்று, “தொபீர்”ரென்று சப்பணமிட்டு அமர்ந்தவள், “அய்ய்யோ.. .அப்புறம் என்ன சொன்னாங்க.. மறந்து போச்சே!.. .ம்ம்ம்.. ஏங்க மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா?.. தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிக் குடுக்கறீங்களா?”

    “தெரியாது” என்று சொல்லி விட்டுத் திரும்பி தலையிலடித்துக் கொண்டான் சுந்தர்.

    “அப்படின்னா.. நான் போயி நீலவேணி அத்தைகிட்ட நல்லாக் கேட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டு கட்டிலிலிருந்து குதித்திறங்கி, கதவருகே சென்றவளை ஓடிப் போய்த் தடுத்தான் சுந்தர்.

    “ஏய்..ஏய்..என்ன இது?.. வெளியில போகாதே!.. அவங்கெல்லாம் இன்னேரம் தூங்கியிருப்பாங்க!” என்றபடி சுந்தர் அவள் தொளைத் தொட்டு திருப்பிய போது,

    “அய்.. ஞாபகம் வந்திடுச்சே!.. ”என்றவள் அவன் எதிர்பார்க்காத விநாடியில் அவன் கன்னத்தில்.. மூக்கில்.. வாயில்.. தாடையில்.. .என மாறி.. மாறி முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

    “அய்யய்யோ.. யாரந்த நீலவேணி அத்தை.. அவ இன்னும் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருக்காளோ தெரியலையே!.” சுந்தர் தர்ம சங்கடத்தில் நெளிந்த போதுதான் அது நடந்தது.

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி: http://www.tamilnow.com/gallery/tamil-nadu/dakshina-chitra/tamil-marriage.html

    Share
  • பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (45)

     

    தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது. அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும்பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்?

    — செ. இரா. செல்வக்குமார்

    பதில்

    தமிழில் பேசும்போதோ எழுதும்போதோ  ஆங்கில ஒலிகளை அப்படியே கொண்டுவர வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. நான் முந்திய பதில்  ஒன்றில் கூறியது போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே  எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. தேவையும் இல்லை.

    ஒரு மொழியின் மரபு அதை இறுகப் பிடித்துவைத்திருக்கும் சட்டகம்  அல்ல; காலப்போக்கில் மாறாத ஒன்றும் அல்ல. கலப்புத் திருமணம் இன்று மரபிலிருந்து மாறிவரும் ஒரு வழக்கு, அதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இருந்தாலும். இதைப் போன்றுதான் தமிழ் மொழியின் மரபும் மாறிவருகிறது. மரபு மாற்றம் எல்லா மொழியிலும் நிகழும் ஒன்று. ஆங்கிலம் ஏற்றுக்கொண்ட அதன் மொழி மரபு மாற்றங்களைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்.

    ஒரு மொழிச் சமூகத்தின் (linguistic community) பார்வையில், எது மரபு, எவை ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் என்பவையே கவனிக்க வேண்டிய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும்போதுதான் வழக்கு என்னும் கருத்து முன்னுக்கு வருகிறது. வழக்கு என்பதன் அர்த்தத்தை விளங்கிக்கொளவதற்கு முன் மரபு என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தால் முதன்மையானது மட்டும் மரபு அல்ல; ஒரு காலத்து மரபு அடுத்த காலத்தில் மாறிப் புதிதாக ஏற்படுத்தும் வழக்கும் மரபு ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித் தமிழும் ஒரு மரபே. அதை மறுப்பதும், மறப்பதும் மொழி வளர்ந்த பாதையை மூடுவதாகும். இலக்கணத்தின் வேலை மொழியின் விதிகளை வரையறுப்பது அல்ல; அது வழக்கில் உள்ள விதிகளை வெளிப்படுத்துவது; புதிய மரபுக்கு வழி வகுப்பது. புதிய மரபில் பண்டைப் பழமையையோ அண்மைப் பழமையையோ முற்றிலும் அழித்துவிட முடியாது.

    தமிழின் புதிய மரபு என்பது என்ன, அதை எப்படி இனம்காண்பது என்பவை பற்றிய விவாதம் தமிழ் மொழியின் வரலாற்றில் இக்காலத்தில் நிகழ்வது; நிகழ வேண்டியது; தமிழைப் பற்றிப் பலவிதமான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் கலந்துகொள்ள வேண்டியது. ஒரு மொழியைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் எழுத்தில் தவறு செய்வதும், மாற்றம் செய்வதும் இயல்பு. இரண்டையும் பிரித்தறிவது இந்த விவாதத்தின் முதல் அவசியம். தவறு (error) ஒருவரால் திரும்பத் திரும்பச் செய்யப்படாதது; அவரே திரும்பப் பார்க்கும்போது திருத்திக்கொள்ளக் கூடியது; அதன் நிகழ்வு தனி மனிதரைச் சார்ந்தது. புதுவரவு (innovation) மாறி மாறி வராமல் ஒரு நிலையாக (consistent) வருவது; பலரிடம் பொதுவாக இருப்பது; மொழிச் சமூகத்தைச் சேர்ந்தது; பொதுவிதியில் அடங்குவது. பொதுவிதி புதிய விதியாக இருக்கும். மரபுவிதியிலிருந்து வித்தியாசப்படுவதெல்லாம் தவறு ஆகாது.

    சில உதாரணங்கள். ஒருத்தன் : ஒருவன் :: ஒருத்தி என்னும் இணைகளில் காலியாக இருக்கும் இடத்தில் ஒருவள் என்னும் சொல்லை அமைப்பது தவறு ஆகாது; புதுவரவு ஆகும். ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி என்னும் வரிசையில் மாட்டுக்குட்டி என்னும் சொல்லை அமைப்பது இன்றைய வழக்கில் தவறு ஆகும். அடுத்த தலைமுறையில் புறனடை பொதுவிதியில் சேர்ந்து பிழையாகக் கருதப்படாமல் புதுவரவு ஆகலாம். அப்பா தம்முடைய பங்கை விற்றுவிட்டார் என்னும் வாக்கியத்தை அப்பா தன்னுடைய / அவருடைய பங்கை விற்றுவிட்டார் என்று எழுதும் இரண்டு வழக்குகளும் புதுவரவில் அடங்கும். தற்சுட்டுப் பெயரில் மரியாதைப் பன்மை இல்லை; தற்சுட்டுப் பெயர் சுட்டுப்பெயரோடு மருவிவரும் என்பவை புதிய விதிகள். அவர் சொன்னவற்றை, அவர் சொன்னவைகளை என்று மருவி எழுதுவதும் பேச்சில் உள்ளதைப் போல அவர் சொன்னதையெல்லாம் என்று எழுதுவதும் தவறு என்பதிலிருந்து புதுவரவு என்னும் தகுதியை நோக்கி நகர்கிறது எனலாம். சுவரில் என்பதை சுவற்றில் என்று எழுதுவது சுவறு என்னும் ஒரு புதுச் சொல்வடிவம் சுவர் என்னும் சொல்வடிவத்தை நீக்கும்வரை தவறு என்று கருதப்படும். அநாதை / அனாதை, அந்நியன் / அன்னியன், இயக்குநர் / இயக்குனர்  என்பதுபோல் அநியாயம் / அனியாயம் என்று பேச்சைப் பிரதிபலிக்கும் வழக்கு வந்தால், அது தவறு ஆகாமல் புதுவரவு ஆகலாம்; அல்லது நியாயம் என்னும் சொல்லோடு உள்ள தொடர்பைப் போற்றித் தவறாகவே கருதப்படலாம். இந்த உதாரணங்களிலிருந்து, மரபிலக்கணத்தில் விதி இல்லை என்பதாலேயே ஒரு வழக்கு தவறு ஆகாது என்பது விளங்கும். இக்காலத் தமிழின் இயல்பை விவரிக்கப் புதிய இலக்கண விதிகளின் தேவையும் விளங்கும்.

    இலக்கியத்திற்கு இலக்கணம் என்பது போல், வழக்கிற்கு இலக்கணம். முன்னெழுதிய இலக்கணத்தின்படி வழக்கு இருக்க வேண்டும் என்பது இரண்டிற்கும் உள்ள உறவைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.

    மரபு இலக்கண விதிகளிலிருந்து  மாறவே கூடாது என்று பிடித்துக்கொள்வதைப்  போன்றதே நேர்மாறாக அந்த விதிகளை மீற வேண்டும் என்பதற்காகவே விடுவதும். இரண்டையும் மொழி கண்டுகொள்ளாது. மொழி சார்ந்த கருத்தாக்கங்களுக்கு மொழி மாற்றத்தில் பங்கு இருந்தாலும், மொழியின் பரிணாம மாற்றங்களையும், சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து ஏற்படும் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தும் வலிமை கருத்தாக்கங்களுக்கு இல்லை. செய்யுளின் யாப்பு, அழகியல் மரபுகளை முறிக்க வேண்டும் என்பதற்காகவே புதுக்கவிதை தோன்றவில்லை. நிலப்பிரபுத்துவச் சமூக வாழக்கையிலிருந்து மாறிய தழிழ்ச் சமூகத்தின் வாழ்வின் அசைவுகளையும் தேவைகளையும் மதிப்பீடுகளையும் வெளியிடுவதற்குத் தேவை இருந்ததாலேயே புதிய கவிதை மரபு தோன்றியது. தமிழுக்குப் புதிய இலக்கணமும் இந்த மாதிரியான காலத் தேவையின் விளைவே.

    சுப்பிரமணியன், பாரதிதாசன், ரசம், புத்திரன் என்று எழுதுவதை முறையே ஸுப்ரமண்யன், பாரதிதாஸன், ரஸம், புத்ரன் என்று எழுதுவது தமிழை எழுதும் முறையின் மரபை முறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதுவதாகும்; சமூகத்தின், மொழியின் தேவையை நிறைவேற்ற எழுதுவது அல்ல. தமிழ்ச் சகரத்திற்கு வருமிடத்தைப் பொறுத்து ஸகர ஒலி உண்டு. அந்த இடங்களில் ஸகரத்தை எழுதுவது தமிழின் எந்தத் தேவையையும் நிறைவு செய்யவில்லை. தமிழில் வழங்கும் புதுவரவுச் சொற்களில் /ph, b/ என்னும் ஒலிகளையும் /ப/ ஆக எழுதுவது -பேதம் என்று எழுதுவதைப்போல- மரபைப் பின்பற்றி எழுதுவதே. இரசம் என்று எழுதுவது மரபைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது. இதைத் தவிர, தமிழின் எந்தத் தேவையையும் இகரம் நிறைவு செய்யவில்லை.

    ஒரு சொல்லை உச்சரிப்பது  போல் எழுதுவது, பொது இலக்கண விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, மொழிக்குத் தேவை இல்லாத நேரத்திலும் பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல. எழுத்து மரபு பேச்சு மரபின் அசலான நகலாக இருப்பது மொழிகளில் அபூர்வம். மொழியில் நிகழ்ந்த மாற்றத்தால் உச்சரிப்பு மாறினால், மாறிய உச்சரிப்பை எழுத்தில் பிரதிபலிக்க வேண்டிய தேவை எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தாது. இன்றைய தமிழில், றகரம் ரகரமாக உச்சரிக்கப்படுகிறது. ஆயினும், மரபைப் பின்பற்றி றகரத்தை எழுதுவது வேறு இலக்கண விதிகளின் எளிமைக்குத் தேவை. ஒலிப்பில் ஒன்றினாலும், றகரம் தன் வல்லொலித் தன்மையை இழக்கவில்லை. றகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்து வன்மையாக ஒலிக்கும், பிற வல்லெழுத்துக்குப்பின் வரும் வல்லெழுத்துக்களைப் போல. கற்பு என்னும் சொல்லில் /பு/, வேட்பு என்னும் சொல்லில் உள்ள /பு/ போலவே ஒலிக்கும். ரகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்துகள் மெலிந்து ஒலிக்கும் (எ-டு) சார்பு. றகரத்தை ரகரமாக எழுதினால் கற்பு என்ற சொல்லை கர்ப்பு என்று எழுத வேண்டியிருக்கும். சொல்லின் இடையில் வரும்போது தவிர மற்ற இடங்களில் வருமிடத்தை வைத்து எழுத்துக் கூட்டலில் றகரத்தையும் ரகரத்தையும், அவற்றின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், சரியாக எழுத முடியும். சொல்லின் இடையில் றகரம் தனித்து வருபோது ரகரத்திலிருந்து பிரித்து எழுதுவதில் உள்ள இடர்ப்பாடு, சொல்லின் இடையில் மெய்யோடு வரும்போது எழுத்துக் கூட்டலில் செய்ய வேண்டிய திருத்தங்களால் வரும் இடர்ப்பாடுகளை விடச் சிறியது. றகரத்தால் கிடைக்கும் மற்றொரு இலக்கண எளிமை இது. வேற்றுமை வடிவில் சொல்லின் இறுதியில் றகரம் இரட்டிக்கும்; ரகரம் இரட்டிக்காது. (எ-டு) ஆற்றில், ஊரில். ஆரு என்று எழுதினால் இந்தச் சந்தி விதி சொல்லைத் தெரிந்து செய்யும் விதியாகிச் சிக்கலான விதியாகிவிடும். ஆரில் என்று இந்த ஏழாம் வேற்றுமை வடிவத்தை எழுதினால் அது ஆற்று மணல் என்னும் ஆறாம் வேற்றுமை வடிவத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கும், பேச்சு மொழியில் இது ஆத்து(மணல்) என்றே உச்சரிக்கப்படுகிறது. ஆரு(மணல்) என்று எழுதினால் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஒன்றாமையை உருவாக்குகிறோம். சந்தி ஒலியின் அடிப்படையில் நிகழும்; அது சொல்லின் அடிப்படையில் நிகழ்வது அபூர்வம். ஆறு என்ற எண்ணுப்பெயர் ஆறில் என்று சேரும்; நதி என்னும் பொருளுடைய ஆறு என்ற சொல் ஆற்றில் என்று சேரும். இந்த விதிவிலக்கை றகர ஈற்றுச் சொற்கள் எல்லாவற்றுக்கும் நீட்டினால், சந்தி இலக்கணம் சிக்கலாகிவிடும். இதனால் றகர, ரகரத்தை வேறுபடுத்தி எழுதும் சொல்வடிவச் சிக்கலை இலக்கணம் அனுமதிக்கிறது, றகரத்தின் உச்சரிப்பு ரகரத்தின் உச்சரிப்போடு ஒன்றிப்போனாலும். இலக்கணத்தின் பகுதிகள் தங்களுக்கிடையே ஒரு சமன்பாட்டைக் காக்கின்றன.

    மேலே சொன்ன விபரங்கள்  ஒரு குறிப்பிட்ட இலக்கண மாற்றத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் இலக்கணத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்துச் செய்யும் செயல் என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பண்பு  பெரும்பான்மையோரின் வழக்கில் காணப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். பழைய இலக்கண விதிகளிலிருந்து விலகுபவர்கள் புதிய விதிகளின்படி மொழியை வழங்குவார்கள். பெரும்பான்மையினோரின வழக்கை இயக்கும் புது விதி எதுவும் இல்லையென்றால், அந்த வழக்கு தற்செயல் நிகழ்வு (random occurrence) என்றால், அது இலக்கணத் தகுதி பெறுவது கேள்விக்குரியது.

    பெரும்பான்மை வழக்கைக் கணிப்பதில் ஒரு சிக்கல்  இருக்கிறது. இது வெறும் எண்ணிக்கையைப்  பொறுத்த விஷயம் மட்டுமல்ல. இணையத்தில் வழங்கும் தமிழ் தமிழின் பல வகைகளில் ஒன்று மட்டுமே. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் வழங்கும் வகை. அதில் எழுதுபவர்கள் தாங்கள் எழுதியதைப் பெரும்பாலும் திருப்பிப் படித்துப்பார்த்து, பிழை என்று தங்களுக்குத் தோன்றுவதைக்கூடத் திருத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில்லை. இணையத்தில் உள்ள பல விவாதங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மொழியின் இலக்கணம் பெரும்பான்மை என்னும் மிருகபலத்தினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பான்மை வழக்கு இலக்கணத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. அவற்றில் சிலவோ பலவோ இலக்கணத்தில் இடம்பெற்றுப் புதிய இலக்கணத்திற்கு வழிவகுக்கும்.

    வாழும் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ் வாழும் மொழி. இதனால் அதன் இலக்கணம் மாறிக்கொண்டேயிருக்கிறது. மாற்றத்துக்கு அணைபோடும்  இலக்கண விதிகள், தரமானது என்று சொல்லப்படும் ஒரு மொழி வழக்கை மட்டுமே முன்னிறுத்தி, மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மக்களிடமிருந்து தூரப்படுத்துகின்றன. மொழியைத் தரப்படுத்தும் முயற்சியும் இயல்பான ஒன்றுதான்; எல்லாச் சமூகமும் மேற்கொள்ளும் செயல்தான். அது மொழியின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் செய்வது. அவர்கள் மக்களின் வழக்கு அனைத்தையும் பிழை வழக்கு என்று புறந்தள்ளிவிட்டால், வீட்டு மொழிக்கும் பள்ளி மொழிக்கும் தூரம் அதிகமாகிவிடும். தூரம் அதிகமானால், தமிழர்கள் தமிழைத் தூர இருந்து வணங்கலாம்; ஆனால் தயக்கமின்றி வழங்குவது குறையும். நமக்குத் தமிழோடு உள்ள உறவு பிள்ளையாருக்கு முன்னால் உக்கிபோடும் உறவாக இருக்கக் கூடாது!

    முந்தைய கேள்வியும், பதிலும்

     

    Share
  • தொல்லை காட்சி பெட்டி – அது இது எது- சச்சின் பற்றி கங்குலி

     மோகன் குமார்

    அது இது எது சொதப்பல்

    ஒரு நிகழ்ச்சியின் வெற்றி எதை பொறுத்து இருக்கும்? அநேகமாய் அந்த நிகழ்ச்சியின் பார்மட் /  Content இவற்றை பொறுத்து தானே இருக்கும் ! 

    ஆனால்  அது இது எது நிகழ்ச்சி என விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி முன்பு சிவகார்த்திகேயன் compere செய்தார். செம நக்கல், வந்திருப்போரை இவர் அடிக்கும் கிண்டலே நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்க வைக்கும். நான் மட்டுமல்ல பலரும் விரும்பி பார்த்த நிகழ்ச்சி அது.

    சிவகார்த்திகேயன் சினிமாவில் பிசி ஆகி விட, ………. இதனை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அவ்வளவு தான் ! நிகழ்ச்சி சுத்தமாக படுத்து விட்டது. ஓரிரு முறை பார்த்ததிலேயே வெறுத்து விட்டது ! TRP மிக இறங்கி, விஜய் டிவி இதனை அடியோடு தூக்கினாலும் ஆச்சரியப்பட வேண்டாம் !

     

    டிவியில் பார்த்த படம் : காந்தி 

    கலைஞர் டிவியில்   காந்தி ஜெயந்தி அன்று காந்தி தமிழ்ப் படம் ஒளிபரப்பினர். என்ன தான் ஆங்கிலப் படம் பார்த்தாலும் தமிழில் பார்க்கையில் முழுதாய் புரிந்து ரசிக்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் என் பெண் மிக ஆர்வமாய் படம் பார்த்தாள். அது தான் நிஜ மகிழ்ச்சி ! காந்தி படத்தை இம்முறை பார்த்த போது அதன் பல காட்சிகள் டில்லியில் உள்ள நேரு இல்லத்தில் படம் பிடித்திருப்பது தெரிந்தது. சிறைச் சாலை என காட்டப்படுவதும் சரி, ஆங்கிலேயர்கள் அலுவலகமானாலும் சரி நேரு இல்லத்தையே வெவ்வேறு ஆங்கிளில் காண்பித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நெகிழ வைக்கும் படம் – காந்தி  

     

    விஜய் டிவியில் அனுஷ்கா

    தாண்டவம் பற்றி பேச விக்ரமுடம் விஜய் டிவி வந்திருந்தார் அனுஷ்கா. திவ்ய தர்ஷினி அவரிடம் சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் அவருக்கு பதில் விக்ரம் பதில் சொல்ல, அதையே கிளி பிள்ளை போல ஒப்பித்தார் அனுஷ்கா. தனக்கென்று சுய புத்தியே இருக்காதா? என்ன தான் தலைவி என்றாலும் ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது ! ஜெயா, சன் என எல்லா பக்கமும் இவர்கள் வந்து ” தாண்டவம் வெற்றி விழாவை” கொண்டாடி மகிழ்ந்தனர்.

     

    காந்தி பிறந்த நாள் சிறப்பு நிகழ்சிகள்

    லாரன்சின் காஞ்சனா, சிம்பு நடித்த ஒஸ்தி, பாலாவின் அவன்- இவன் இவையெல்லாம் காந்தி கொள்கைகளை  விளக்க  பல்வேறு டிவிக்கள் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் ! ஹே ராம் மட்டுமே ஓரளவு இந்த நாளுக்கான சரியான படமாய் இருந்தது. 

    மெகா டிவியில் அரை மணி நிகழ்வாக காந்தி வாழ்க்கையை அழகாக காட்டினர். அவர் வாழ்விலிருந்து எடுத்த படங்கள், வீடியோவுடன் கூடிய இந்த நிகழ்ச்சி காந்தி பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லி மிக நிறைவாய் இருந்தது. 

    மற்றபடி வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் அன்று பார்க்கலை ( காந்தி படம்- கிரிக்கெட் மாட்ச்கள் இவை தான் இன்று ஆக்ரமித்தன)

    சீரியல் பக்கம் – மண்வாசனை 

    ராஜ் டிவியில் வெளிவரும் டப் ஆன  சீரியல் ! பத்து வயசுக்குள்ளயே கல்யாணம் ஆன ஒரு சிறுமியின் கதை. பெயர் தான் ஆனந்தி. ஆனால் அவள் காண்பதோ அனைத்தும் கஷ்டங்களே ! எல்லாருக்கும் மாமியார் கொடுமை என்றால் இவருக்கு கணவரின் பாட்டி கொடுமை ! 

    நம் வீட்டில் இதை பார்க்கிறாங்க. வீட்டுக்கு வரும்போது இந்த சீரியல் நடந்துகிட்டு இருக்கும். ஒரே அழுகை சத்தமா இருக்கும் ! நான் அங்கிருந்து ஓடிடுவேன் 🙂

    சச்சின் பற்றி கங்குலி 

    இரண்டாம் செமி பைனல் முடிந்ததும் ஸ்டூடியோவில் கங்குலி, பீட்டர்சன், அக்ரம் ஆகியோர் பேசும் போது கங்குலி ஒரு விஷயம் சொன்னார். ” நான் ஒரு வீரருடன் இருநூறு மேட்சுக்கு மேல் துவக்க ஆட்ட காரரா இறங்கியிருக்கேன். எப்பவும் என்னை தான் முதல் பந்து எதிர்கொள்ள சொல்வார். எனது ஆட்டம் சரியாக இல்லாத சில நேரம் “முதல் பந்தை நீங்கள் விளையாடுங்கள்” என்றாலும் அவர் நோ என்றே சொல்லுவார். கேப்டனாக இருந்த போதும் சில முறை கேட்டுள்ளேன் ( என்னது ? கேப்டன் சொன்னதையும் அவர் கேட்கலியா?-அதிர்ச்சியுடன் அக்ரம் கேள்வி)”

    “சில தடவை நான் கேட்டு பார்த்துட்டு கிரீஸ் அருகே போயிட்டு யார் முதலில் ஆடுறதுன்னு பார்த்துக்கலாம்” என சொல்லிடுவேன் அப்புறம் கிரீஸ் அருகே சென்றதும், நான் போய் நான் ஸ்ட்ரைக்கர்  இடத்தில நின்று கொள்வேன்; அங்கு வந்து அவர் ஆர்கியூ செய்ய மாட்டார்.  பேசாமல் முதல் பந்தை எதிர்கொள்ள போயிடுவார். அந்த நேரம் நான் ஸ்ட்ரைக்கர் ஆக நிற்கும் நான் அவரை பார்க்கவே மாட்டேன். வேறு எங்கோ பார்த்து கொண்டு நிற்பேன்; இப்படி ஓரிரு முறை அவர் முதல் பந்தை எதிர் கொண்டார்”

    இப்படி சச்சின் பேரை சொல்லாமலே சச்சின் பற்றி அவர் பேசியது செம காமெடியா இருந்தது. அதுவும் சின்ன குழந்தை மாதிரி கிரீஸ் அருகே வந்த பின் சச்சினை ஏமாற்றியது பற்றி அவர் சொன்னது செம !

    Share
  • கூவமும் கங்கைதான்

    தமிழ்த்தேனீ

     

    சாணக்கியரின் வாக்கு :–

    “நேர்மையான, அறிவாளியான  மக்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மக்களின்றி நாடில்லை, நாடின்றி ராஜ்ஜியமில்லை. ஒரு இடத்தின் மதிப்பே அந்த இடத்தில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே. நாட்டின் மேன்மையை விரும்பும் மன்னன் அந்த நாட்டு மக்களை  நல்ல முறையில் அறிவாளிகளாக உருவாக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் ஏற்படாவண்ணம் தடுத்து  வருவாயைப் பெருக்க வேண்டும்”-   சாணக்கியர்

    ஒரு மனிதனின் மரியாதை, ஒரு மனதின் வலி, ஒரு வார்த்தையின் கனம், ஒரு அன்பின் அருமை, ஒரு பாசத்தின் பெருமை, ஒரு தியாகத்தின் விலை, ஒரு மண்ணின் பெருமை, ஒரு தேசத்தின் உயர்வு, ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், மக்களின் அருமை புரியாதவனுக்கு மனசாட்சியின் குரல் கேட்காது. அப்படிப்பட்டவன் நாட்டையாளத் தகுதி இல்லாதவன். –  தமிழ்த்தேனீ

     **************************

    யா, நான் உள்ளே வரலாங்களா  என்று கேட்டபடியே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்த  கிருஷ்ணன் வாப்பா  தாராளமா வரலாம் என்றார்.

    தயங்கித் தயங்கி உள்ளே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி அவர் காலைப் பிடித்துக்கொண்டு  கொண்டு, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார்” என்று கெஞ்சும் அவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

    சரி யாரென்று பிறகு பார்த்துக்கொள்ளலாம், “நல்லா இருப்பா” என்று  அவனை வாழ்த்திவிட்டு, “எழுந்திருப்பா” என்று வாஞ்சையோடு தோள் தொட்டுத் தூக்கி அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் கிருஷ்ணன். நேருக்கு நேர் அவனைப் பார்த்த போது அவருக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.

    சில நேரங்களில் நம்மை விட நம் உள் மனதுக்கு  சக்தி அதிகம் என்று உணரும் தருணங்கள் வரும். நம்மைவிட நம் உள் மனது மிகச்சரியாக எடைபோடும் விந்தையை அனுபவித்திருக்கிறார் அவர்.

    நல்ல தீர்க்கமான நாசி, ஆண்பிள்ளைக்கு அடையாளமாக வாளிப்பான உடல்வாகு, பரந்து விரிந்த மார்பகம், திண்ணென்ற தோள்கள், நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசும் திடம், தீர்க்கம், அறிவு விசாலத்துக்கு அடையாளமாக ஒளிரும் கண்கள். அவரையறியாமல் அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது   கிருஷ்ணனுக்கு.

    “வாப்பா இங்கே உக்காரு” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார் கிருஷ்ணன். “இல்லே சார், பரவாயில்லை நான் நிக்கறேன்” என்றான் அவன்.

    “அனாவசியமான மரியாதையை நான் எதிர்பார்க்கறதில்லே, எப்போ என் கால்லே விழுந்து நீ வணங்கினியோ நீயும் என்னோட பையன் மாதிரிதான். பரவாயில்லே உக்காரு” என்றார் கிருஷ்ணன். தயங்கியபடியே உட்கார்ந்தான் அவன்.

    “அம்மா நல்லா இருக்காங்களா? அவங்க உள்ள இருக்காங்களா ?”.

    அவன் கண்கள் ஆவலுடன் காமாக்ஷியைத் தேடின.

    “இல்லேப்பா அவ கோயில் வரைக்கும் போயிருக்கா. இப்போ வர்ற நேரம்தான்”, சொல்லும்போதே வாயிலில் நிழலாடியது  காமாக்ஷி வந்துவிட்டாள்.

    “சொல்லுப்பா உன் பேரென்ன? நீ யாரு ,எதுக்கு என் கால்லே விழுந்து வணங்கறே?” என்றார் கிருஷ்ணன்.

    “சார்.. நான்..என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான்தான் சார்  குமரன். என்னை என்னோட பத்து வயசிலே ஒரு ஹாஸ்டல்லே சேத்துட்டு, எனக்கு படிக்கறதுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செஞ்சு குடுத்து, நான் எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படிக்கலாம்ன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சு குடுத்தீங்க”. 

    அங்கே வந்த காமாக்ஷி “ஏங்க இவன் நம்ம குமரனுங்க, இவனை அடையாளம் தெரியலையா?”  என்றாள்.

    “அம்மா என்னை ஆசீர்வாதம் செய்யுங்க” என்றபடி அவள் காலிலும் விழுந்தான் குமரன். “நல்லா இருப்பா” என்று ஆசிகூறினாள் காமாக்ஷி. அதிர்ந்தார் கிருஷ்ணன். “நீ இவனை எப்பிடி நியாபகம் வெச்சிருக்கே ?” என்றார் ஆச்சரியத்துடன்.

    புன்னகைத்தாள் காமாக்ஷி. எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் தாய் மனம் கொண்டவர்களுக்கு  குழந்தையை அடையாளம் தெரியும் என்று நிரூபிப்பது போல  புன்னகை புரிந்தாள் காமாக்ஷி.

    இன்னிக்கு நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிலே  இஞ்சினீயரா இருக்கேன். உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நாள் நெனைச்சிருக்கேன். ஆனா படிப்பை முடிக்காமே உங்களை வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அதுனாலே மனசைக் கட்டுப்படுத்திண்டு இவ்ளோ வருஷமா படிப்பே குறிக்கோளா இருந்து படிச்சிட்டேன் சார். என்னோட கனவு ஓரளவு நிறைவேறி இருக்குன்னா அதுக்கு நீங்கதான் சார் காரணம் என்றான் குமரன்.

    அவன் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பரம திருப்தியுடன் அவனை உச்சி மோர்ந்தார் கிருஷ்ணன். இந்த மாதிரி உன்னைப் பாக்கணும்னு நானும் மனசைக் கல்லாக்கிகிட்டு  உன்னைப் பார்க்க வரல்லே, ஆனா எப்பவும் விசாரிச்சிகிட்டே இருந்தேன்  நீ நல்லாப் படிக்கிறியான்னு. ஒன்னோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சவன் நான். 

    “காலம் என்னோட தோற்றத்திலே பெரிய மாறுதலைச் செய்யலை, அதுனாலே நீ என்னை கண்டு பிடிச்சிட்டே. ஆனா உங்கிட்ட எவ்ளோ மாற்றம்! என்னாலே  கண்டு பிடிக்க முடியலை.  இங்கே இல்லைப்பா வெளிநாடு போயிட்டேன், இப்போதான் திரும்பி வந்தேன் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு, உன்னைப் பாக்க” என்ற  கிருஷ்ணன், அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

    அவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

    புதியதாக குடிபெயர்ந்திருந்த இடத்தில் என்னென்ன கடைகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம், அதன் காரணமாக ஒரு சின்ன நடைப்பயிற்சியும் மேற்கொண்டாற்போல் இருக்கும் என்று நினைத்து கடை வீதியில் வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

    அவர் மனைவி ஏங்க இங்கே பச்சைஅம்மன் மளிகைக் கடைன்னு ஒண்ணு இருக்காம், நாம வேண்டிய பொருட்களோட பட்டியலைக் குடுத்துட்டா வீட்டிற்கே வந்து குடுத்துடறாங்களாம் என்று கூறியது நினைவுக்கு வந்தது. எதிரே அந்த பச்சைஅம்மன் மளிகைக் கடை தென்பட்டது. அதன் உள்ளே நுழையலாம் என்று எண்ணிக் காலை வைத்தார். சேறும் சகதியுமாக இருந்த அந்த இடம் அவரை வழுக்கிவிட்டு கீழே தள்ளியது தலைகீழாய். நல்லவேளை கையில் கிடைத்த எதையோ பற்றிக்கொண்டு ஒருவாறு கீழே விழாமல் தப்பித்து நிமிர்ந்தார்.         

    பக்கத்தில் ஒரு பையன் அவரை பிடித்துக்கொண்டு  “என்னா பெரியவரே, பாத்து வரக் கூடாதா” என்றான். அவன் கண்களில் வெறுப்பு மண்டிக்கிடந்ததைக் கண்ட கிருஷ்ணன், “மன்னிச்சிக்கோப்பா பாக்காம காலை வெச்சிட்டேன், ரொம்ப நன்றிப்பா” என்றார்.

    “நன்றியெல்லாம் இருக்கட்டும், என் தோளை விடுங்க நான் போவணும், எனக்கு வேலை இருக்கு” என்று கூறியபடியே அவர் கையை தள்ளிவிட்டுவிட்டு நகர்ந்தான் அந்தப் பையன்.

    ஒருவாறு சமாளித்துக்கொண்டு கடைக்குச் சென்று  அங்கே இருந்தவரிடம், “நான் இந்த பகுதிக்கு புதுசா வந்திருக்கேன். மளிகை லிஸ்டைக் கொடுத்தா  வீட்டுக்கு பொருளை அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன், அனுப்புவீங்களா?” என்றார்.

    கடைக்காரர், “ஆமாம் சார் அப்பிடிதான் அனுப்பிகிட்டு இருந்தேன், வரவர வேலை செய்ய சரியான ஆட்களே கிடைக்க மாட்டேங்கறாங்க, அப்பிடியே கிடைச்சாலும் நாலு நாளைக்கு வேலை செய்யறாங்க, அதுக்குப் பிறகு ஓடிப் போயிர்றாங்க என்னா செய்யிறது. எதுக்கும் நீங்க லிஸ்டைக் குடுத்துட்டுப் போங்க முடிஞ்சா அனுப்பறேன்” என்றார்.

    பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணன் மேலே ஒரு கொத்துக் குப்பை வந்து விழுந்தது. கையால் அந்தக் குப்பையை தள்ளிவிட்டுவிட்டு  “என்னாப்பா கடையைப் பெருக்கும்போது யாராவது நிக்கிறாங்களான்னு கவனிச்சு பெருக்கக் கூடாதா” என்றார் ஆதங்கமான குரலில். ஒரு தலை நிமிர்ந்து “நான்தான் பெருக்கினேன், வேணும்னுட்டா உங்க மேலே போடுவாங்க? போவீங்களா! என்னாமோ பெரிசா குரல் விடுறீங்களே” என்று ஒரு குரலும்.

    அந்தக் குரலுக்கு சொந்தமான வெறுப்பு நிறைந்த கண்களும் கோவமான முகமும் தென்பட்டன.  இவரைத் தாங்கிப் பிடித்த அதே பையன்தான்.

    “என்னாங்க இது இப்பிடிப் பேசறான் இந்தப் பையன்” என்றார் கடைக்காரரிடம் கிருஷ்ணன்.

    “டேய் ஏண்டா இப்பிடி வர கஸ்டமரையெல்லாம் வெரட்டறதிலேயே இருக்கே, அவர்கிட்டே மன்னிப்பு கேளுடா முதல்லே” என்றார் கடைக்காரர்.

    “மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. வேணும்னா வேலைக்கு வெச்சிக்கோங்க இல்லேன்னா நானு இப்பவே போறேன். எங்கூருக்கு, ரெயிலேத்தி அனுப்பிருங்க”  என்றான் பையன்.

    “எப்பிடிப் பேசறான் பாத்தீங்களா சார், இவங்க அம்மா கஷ்டப் படறாங்களேன்னு அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி  இவனை கூட்டி கிட்டு வந்து பத்திரமா பாத்துப்பாத்து வெச்சிக்கறேன். தொழில் சொல்லிக் குடுக்கறேன். இவன் சம்பாரிச்சா அந்த அம்மாவோட மத்த  புள்ளைங்கல்லாம் ஒருவேளை கஞ்சி குடிக்கும் அப்பிடீன்னு அந்த அம்மாகிட்ட கெஞ்சி, பணம் செலவழிச்சு ரெயில் டிக்கட்டு எடுத்து கூட்டிவந்து,  இங்கே வெச்சு சாப்பாடு போட்டு தங்க இடம் குடுத்து,  வெச்சிருக்கேன். கொஞ்சமாவது நன்னி இருக்கா பாருங்க, இவன் இப்பிடி நடந்துக்கறான்” என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

    “இதோ பாருங்க முதலாளி,  நான் உங்களை ஒண்ணும் குறை சொல்லலையே! எனக்கு வேணாம், நான் போறேன்னு சொல்றேன். என்னைய அனுப்பிருங்கன்னு சொல்றேன், கேக்கமாட்டேங்கறீங்க. என்னைய விட்ருங்க, அனுப்பிருங்க” என்று தன் துணி மணிகளை எடுத்து வைத்துக்கொண்டு “நீங்க என்னா அனுப்பறது, நானே போயிக்கறேன்” என்றபடி வெளியே சென்று நடக்கத் தொடங்கினான்.

    இந்தச் சிறு வயதில் இவனுக்கு எங்கே இருந்து இவ்வளவு வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது  என்று யோசித்தார் கிருஷ்ணன். “சரி மளிகை பொருட்களை நானே வாங்கிட்டு போயிடறேன் நீங்க குடுங்க” என்று சொல்லிவிட்டு  நின்று வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.  இரவு சப்பிட்டுவிட்டு படுத்தார். அவர் மனதில் ஏனோ மீண்டும் மீண்டும் அந்தப் பையனின் நியாபகமே வந்துகொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் ஏதோ சப்தம் கேட்டு  எழுந்தார். 

    வாசலில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்போர் கூடியிருந்தனர். “ஒரு திருடன் வகையா மாட்டிகிட்டான், கட்டி வெச்சிட்டு  போலீசுக்கு சொல்லி இருக்கோம்” என்று ஒரே குரலில் சொன்னார்கள். அந்தத் திருடனை எழுப்பி  ஓங்கி ஒரு அறைவிட்டார் கீழே போய் விழுந்தான் அவன். இன்னமும் அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இந்தச் சின்னஞ்சிறு வயசிலே திருட்டா  நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

    மீண்டும் அவனை எழுப்பி அவர் பக்கமாகத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆமாம் காலையில் சந்தித்த அதே கடைக்காரப் பையன். ஆத்திரமாக வந்தது அவருக்கு. “ஏண்டா நியாயமா வேலை செஞ்சு  சம்பாதிக்க முடியலே, இந்தச் சின்ன வயசிலே  திருட மட்டும் முடியுதா ?  உன்னையெல்லா கட்டி வெச்சு உதைக்கணும். தப்பே இல்லே”  என்றார் ஆக்ரோஷமான குரலில்.   

    கண்களில் கண்ணீருடன்  இவரைப் பார்த்து  “என்னை அடிங்க சார், எவ்ளோவேணா அடிங்க சார் ஆனா திருடன்னு மட்டும் சொல்லாதீங்க, சார் நான் திருட வரல்லெ சார், ஊருக்கு போக டிக்கட் எடுக்கப் பணம் இல்லே. பசிவேற குடலைப் புடுங்குது அப்பிடியே மயக்கத்திலே  இங்க படுத்திருந்தேன். அதோ அந்தப் பெரிய நாயி என் பையை எடுத்துகிட்டு ஓடிடிச்சு, அதைத் துரத்திகிட்டு வந்தேன். அந்தப் பையிலேதான் சார் எங்க அம்மாவோட  படம் வெச்சிருக்கேன். அதைத் துரத்திகிட்டுவந்தேன் சார். அந்தப் பையை வாங்கிக் குடுங்க சார்  எங்கம்மா படம் இருக்குது அதிலே என்று கதறினான். எங்க அம்மாவை படத்திலேதான் சார் தினோம் பாக்கறேன். அவங்களோட சேந்து இருக்க எனக்கு குடுத்து வைக்கலே. அந்தப் பையை வாங்கிக் குடுத்திருங்க சார்.”

    கிருஷ்ணனுக்கு  இவன் ஒரு புண்யாத்மா, திருடனில்லை என்று உள்மனம் சொல்லியது. அவர்களிடமிருந்து அந்தப்பையை வாங்கி இவனிடம் கொடுத்துவிட்டு, “சரி நீங்கள்ளாம் போங்க நான் இவனைப் பாத்துக்கறேன்” என்று  கூறிவிட்டு உடனடியாக காவல் நிலையத்துக்கு  போன் செய்து, “சார் தப்பா சொல்லிட்டாங்க. இங்கே திருட யாரும் வரலை, அந்தப் பையன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான். வழிதெரியாம தடுமாறும் போது திருடன்னு நெனைச்சிகிட்டாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க  அந்தப் பையனை நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு, “நீ வாப்பா போகலாம்”, என்று அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

    “வாப்பா நீ இங்கே உக்காரு, காமாக்ஷி  இவனுக்கு வயித்துக்கு  ஏதாவது குடு” என்றார். காமாக்ஷி ஒரு தட்டில் உணவு எடுத்துவந்து அவனிடம் வைத்தாள். “சாப்புடுப்பா”  என்றார்.  அள்ளி அள்ளி விழுங்கிவிட்டு, “தட்டை எஙக சார் கழுவணும்”  என்றான். “அதோ அங்கே போயி வாஷ் பேசின்லே சுத்தம் செஞ்சு கொண்டு வா”  என்றார் கிருஷ்ணன்.

    அவனுக்கு துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்துவிட்டு, கையை துடைத்துக்கொண்டு  வந்த அவனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “ஆமாம், உனக்கு ஏன் இவ்ளோ சின்ன வயசிலே இவ்வளவு ஆத்திரமும், கோவமும் வருது ?” என்றார்.

    “அந்த மளிகைக் கடைக்காரர்  உன்னை சரியா நடத்தலையா. கொடுமைப் படுத்தறாரா? என்கிட்ட சொல்லு  அவனை ஒரு வழி பண்றேன்”  என்றார்.

    “அவரு பாவம் சார், நல்ல மனுஷன்  அவருமேலே தப்பில்லே, துட்டுக்கு ஆசைப்பட்டு எங்க ஊர்லேருந்து நிறையா பேரு  படிக்கணும்னு ஆசைப்படுற  சின்னப் புள்ளைங்களையெல்லாம்  மெட்ராசுக்கு அனுப்பறாங்க. இவரு கூட்டியாந்து கடையிலே வேலைகுடுத்து  நல்லாத்தான் வெச்சிக்கறாரு.

    முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை சார் என்னோடது.  என் அம்மா என்னைப் படிக்க வைக்க முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க. எங்க அப்பா தினோம் குடிச்சிட்டு வந்து அம்மாவைப் போட்டு அடிக்கறாரு, தம்பி தங்கையெல்லாம் கஷ்டப்படுது, ராத்திரி குடிச்சிட்டு வந்து எல்லாரையும் அடிக்கறாரு. காலையிலே  மன்னிப்பு கேக்கறாரு, மறுபடியும் ராவிக்கு  குடிச்சிட்டு வந்து நிக்கறாரு.

     சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம அம்மா கஷ்டப்படுது. எங்கம்மா என்னா செய்வாங்க? ஆனா  ஒரு நாளுகூட  எங்கப்பனை திட்டாது எங்கம்மா. இதமா அவரு வாயைத் துடைச்சு விட்டு படுக்க வெச்சு விசிறியாலே வீசறாங்க . அவரு தூங்கறாரு,  ஏம்மா ஒரு நாளைக்காவது  நீ கேள்வி கேட்டாதானே அவரு திருந்துவாரு அப்பிடீன்னு நான் கேட்டா, “அடப் போடா  அவரு நல்ல மனுஷன்டா. ஏதோ போறாத காலம் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு, நீ அவரு பெத்த மகன்டா  என் முன்னாலே அவரை எது சொன்னாலும் நான் ஒப்புக்க மாட்டேன்”னு எங்கிட்ட  சண்டை பிடிக்குது. இத்துப்போன கயிறாலே இறுக்கிக் கட்ட முடியாது, உறவு நல்லா இருக்கணும்னா  உண்மையான பாசமும் நேசமும், அன்பும், கருணையும், நடிப்பு கலக்காத நேர்மையும் அவங்கவங்களுக்கா  வரணும், சொல்லிக்குடுத்து வரவைக்க முடியாது,  அப்பிடீன்னு ஏதேதோ சொல்றாங்க.   எனக்கு புரியமாட்டேங்குது.

    உனக்கென்னா நான் கூலி வேலை செய்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன் அப்பிடீங்குது. எனக்குன்னு ஒரு மனசு இருக்குதில்லே.  எனக்கு மனசு வரலே. அதுனாலே எங்க அம்மாவை நல்லபடியா வெச்சிக்க, நான் சம்பாரிக்கணும், என் குடும்பம் என்னாலே முன்னுக்கு வரணும், அதுக்காகத்தாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

    ஆனா இங்கே வேலைக்கு வந்தபெறகுதான் தெரியுது, எவ்ளோபேரு  படிக்க வழியில்லாமே எங்களை மாதிரி கஷ்டப்படறாங்கன்னு. நாங்கள்ளாம் குழந்தைங்க.  ஆனா விளையாடணும்னுகூடத் தோணலீங்க, பாடுபட்டு முன்னுக்கு வரணும்னு தோணுது. அது தப்பாங்க? ஆனா அதுக்குகூட வழியில்லையே ? காலம் காலமா  நாங்க இப்பிடி  கஷ்டப்பட்டுகிட்டேதான் இருக்கணுமா? எங்களோட எதிர்காலமே விணாகுதே நாங்க படிக்க முடியலையே. எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா ன்னு யோசிச்சேனுங்க, கோவம் கோவமா வருது.

    குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டம் மட்டும் போட்டுட்டா போதுமா சார்?  அந்தக் குழந்தைங்களோட வயித்துப் பசியையும்   அதுங்க எதிர்காலத்தையும் யாரு சார் பாக்கறாங்க? எங்களை மாதிரி சின்னப் பசங்களைப் படம்பிடிச்சு வருங்காலத் தூண்கள்னு போஸ்டர் அடிச்சு ஒட்றாங்க சார், ஓட்டு வாங்கறதுக்காக. 

    ஆனா என்னா சார் செய்யறாங்க எங்களுக்கு? எங்க அப்பனெல்லாம் குடிச்சு அழியறதுக்கு  நாட்டுலே நிறைய சாராயக் கடை திறக்கறாங்க, ஏன் சார் சாராயம் விக்காம நம்ம நாட்டை  முன்னுக்கு கொண்டு வரமுடியாதா  ?

    ஏன் சார் இந்த அரசியல்வாதிங்க  இப்பிடி செய்யறாங்க? அந்தக் கோவம்தான் சார். இவ்ளோ வெறுப்பை வெச்சுகிட்டு எப்பிடி சார் நான் சிரிக்க முடியும்? எப்பிடி கோவப்படாம இருக்க முடியும்? நான் எப்பிடிங்க வேலை செய்வேன்.” மூச்சு வாங்கியது குமரனுக்கு…..

    “தூங்க முடியலைங்க  பாடமெல்லாம் கனவா வருதுங்க திடுக்கிட்டு எழுந்துக்கறேன்.  மளிகைக் கடையிலே ஒவ்வொரு மூட்டையைப் பாக்கும்போதும்  ஒவ்வொரு பாடபுத்தகம் நினைவுக்கு வருதுங்க.

    எங்க வாழ்க்கை இப்பிடி சிதறிப் போனக் கடுகு மூட்டை மாதிரி ஆயிப்போச்சுங்க”, என்றபடியே குமுறிக் குமுறி  அழ ஆரம்பித்த குமரன் உணர்ச்சியின் வேகம் தாங்காமல் அப்படியே மயங்கினான்.

    காமாக்ஷி அவனை மடியில் கிடத்திக்கொண்டு  இதமாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.  கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடிப்போய்  ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் கொண்டு வந்தார் கிருஷ்ணன்.  அந்தத் தண்ணீரை வாங்கி குமரன் கண்களைத் துடைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாயில் ஊற்றினாள் காமாக்ஷி.

    உணர்வுக்கு வந்த குமரன் திடுக்கிட்டு எழுந்தான்.

    “அம்மா அய்யா என்னை மன்னிச்சிருங்க. ஒழுங்கா படிக்கக் கூட வக்கில்லாத  ஏழைங்க நானு என்னைப் போயி  உங்க மடியிலே. என்னை மன்னிச்சிருங்க, தெரியாம நான் உங்க மடியிலே படுத்துகிட்டேன், என்று நடுங்கினான் குமரன். அவனை இழுத்து அணைத்து மீண்டும் தன் மடியில் கிடத்திக்கொண்டு   அவன் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தபடியே,  நானும் உங்க அம்மா மாதிரிதான் படுத்துக்கோப்பா என்றாள். அவள் கைகள் அவனை தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தன.

    எங்கும் இருப்பான் நாராயணன் என்று கூறிய ப்ரகலாதனின், தன் பக்தனின்,  வாக்கைக் காப்பாற்ற ஜகமெங்கும் நிறைந்து, அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்று ஆழ்வார்கள் பாடும்படியாக  சர்வ வியாபியாக நிறைந்து  தூணிலிருந்து வெளிப்போந்து நரசிம்மமாக வந்து ஹிரணியனின்  வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொண்ட நாராயணன், அதன் பிறகு  ஹிரணியனுடைய மார்பில் கையை விட்டுத்  துழாவி அவனுடைய ஹிருதயத்தை தன்னுடைய கைகளால் தடவிக் கொடுத்தானாம்.

    ஏனென்றால் அவன் சொன்னதைக் கேட்டுக் காவல் புரிந்து,  அதன் காரணமாக முனிவரால் சபிக்கப்பட்டு ஹிரணியனாகப் பிறந்து உள்ளே பக்தி இருந்தாலும் பிறப்பின் காரணமாக நாத்திகன் போல் நடித்து, மகனைக் கொடுமைப்படுத்தி எல்லோரிடமும் கெட்ட பெயரெடுத்து, அசுரன் என்று ஏசப்பட்டு, ஹிரணியன் தன்னை அடைய  எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று உணர்ந்து மனம் இரங்கி அவனுடைய ஹிருதயத்தை இதமாகத் தடவிக் கொடுத்த நாராயணனைப் போல என்று பௌராணிகர்  சொன்னது நினைவுக்கு வந்தது. 

    இந்தச் சின்னஞ்சிறு வயதில்  எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறான்  குழந்தை,  என்றுணர்ந்து இதமாக தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்  காமாக்ஷி . இந்தக் குழந்தைகளைக் கூட முறையாகக் காப்பாற்றாமல் இருக்கும் ஹிரண்யர்களை சம்ஹாரம் செய்ய எப்போது நாராயணுனுக்கு மனம் வருமோ என்ற எண்ணம் வந்தது காமாக்ஷிக்கு.

    சுதாரித்துக்கொண்டு எழுந்த குமரன், “அம்மா நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் உங்களை மாதிரி இன்னொரு அம்மா அப்பா கிடைச்சது.  ஐயா  உங்ககிட்டகூட மரியாதை இல்லாம நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்பறேன் எப்பிடியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவேன் சார்  ஆனா உங்க ரெண்டு பேரையும் மறக்க மாட்டேன்.  நான் வரேன்”, என்று கிளம்பினான்.

    “கொஞ்சம் நில்லுப்பா.   நீ படிக்கறதுக்கு நான் உதவறேன், நல்லா படிச்சு முன்னுக்கு வருவியா ?” என்றார். கிருஷ்ணன். “சத்தியமா படிச்சு முன்னுக்கு வருவேனுங்க   இது எங்க அம்மா மேலே  சத்தியம்” என்றான் குமரன்.

    அத்தனையும் மனக்கண்ணில் படமாக ஓடியது  கிருஷ்ணனுக்கு.

    “ஐயா குப்பையை தூக்கி உங்க மேலே நான் போட்டேன், ஆனா நீங்க என்னைக் கோபுரத்தில் ஏத்தி வெக்கறீங்க. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன் நானு.”, என்ற குமரன் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தான் .  

    சுதாரித்துக்கொண்டு  “குமரா நீ ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளந்துட்ட”, என்றவர் அவனைத் அணைத்துக்கொண்டு, “உன்னைய மாதிரி பசங்க இந்த நாட்டுக்கே வழிகாட்டிப்பா. உங்க அம்மா நல்லா இருக்காங்களா என்றார். கூச்சப்பட்டுக்கிட்டு   வெளியிலே நிக்கறாங்க சார்” என்றான் குமரன். 

    “அப்பா எங்கே இருக்காரு ?”  என்றார் கிருஷ்ணன்.

    “அப்பா இல்லீங்க  அவரு குடல் வெந்து  எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு  இறந்து போயிட்டாரு” என்றான் குமரன்.

    “வருத்தமா இருக்குப்பா  ஆனா எங்களை மாதிரி இருக்கறவங்க வருத்தப் படறதைத் தவிற வேறொண்ணும் செய்ய முடியலை.”

    “நீங்க உள்ளே வாங்கம்மா. பிள்ளையைப் படிக்கவைக்கணும்னு நெனைக்கிற உங்களை மாதிரி  அம்மாக்கள்தான்  இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த மாதிரி பிள்ளையைப் பெத்ததுக்கு  தலைநிமிர்ந்து நடக்கணும். நீங்க கூச்சப்படக் கூடாது.

    இந்த நாட்டிலே  சுதந்திரம் வாங்கி 65 வருஷம் ஆகியும் உங்க நெலைமைய இதே மாதிரி வெச்சிட்டிருக்கோமே.  நாங்கதான் கூச்சப்படணும். கூவத்தையெல்லாம் கங்கையாக்கணும்னு நெனைக்காம கங்கையையுயும் கூவமாக்கிட்டு இருக்கோமே நாங்கதான் கூச்சப்படணும்”  என்றார் கிருஷ்ணன்.

    குமரனின் அம்மா கையைக் கூப்பிக்கொண்டு, “நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கணுங்க”  என்றாள் கண்ணில் நீருடன்.  

    எல்லாப் பெண்மணிகளிலும் உள்ளே அம்மா இருக்கிறாள். தாய்மை ப்ரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளில் கூட சர்வ வியாபியாய் இருக்கிறது என்று எண்ணம் ஓடியது கிருஷ்ணனுக்கு அவருடைய அம்மாவே அவரை  ஆசீர்வதித்தது போல் ஒரு உணர்வு வந்தது.  கிருஷ்ணனும் கையைக் கூப்பினார் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு.

                             சுபம்

    Share
  • நோ-பால் – No Ball

    மணி ராமலிங்கம்

     

    டிசம்பர் 27ந் தேதி. அந்த மேட்சில்தான் அம்பயர் – ரமணி சரியாக மாட்டிக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

    ரயில்வே அணிக்கு எதிரான மேட்சு அது.

    ஆறு அணிகள் விளையாடும் டோரணமெண்டில், இந்த மேட்சில் ஜெயித்தால் தான் அடுத்த கட்டம். எடுக்க வேண்டியது சொற்ப ரன்கள் என்றாலும் விக்கெட்டுகள் சரிந்தது பயத்தை ஏற்படுத்தியது. குமார் அன்று பந்தால் துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

    இருக்கிற ஓரே நல்ல விக்கெட் சீனிவாசன் அண்ணா. அவர் நின்று விளையாட வேண்டும். போன ஓவரில் ரன்னராய் வந்த போது கிளவுசை கழட்டினார் அண்ணா. நிறைய வேர்த்திருந்தது. கொஞ்சம் கை நடுக்கமாய் இருந்தது. பயந்திருக்கிறார்.

    பக்கத்து ரன்னரோடு பேசுவது போல சொன்னார் .. “ அடுத்த ஓவர் அவனுக்கு கடைசி பாத்துக்கடே.. நா வெளிய வந்து எல்லாத்தையும் கால்ல தான் வாஙக போறேன்.. நோ பால்ன்னு அழுத்திடுடே. “  ரமணிக்கு  மட்டும் கேட்குமாறு சொல்லிப் போனார்.

    அவுட்டானவுடன் நோபால் கொடுப்பது அம்பயரின் பொறுப்பு. நல்ல பாலை நோபாலாக காட்ட வேண்டும். நோபால் – பேட்ஸீமேனுக்கு புனர்ஜென்மம். இரண்டாம் வாய்ப்பு. அநுபவங்கள் மிகுந்த இரண்டாம் வாய்ப்பு. அடுத்த வாழ்க்கை.

    எதிர்முனையில் சுழலும் காலச்சக்கரம். உடலின் ஓவ்வொரு செல்லும், படிப்பினை கற்று கொண்டு விட்ட பின்பு, வரும் வாரணம் ஆயிரம் பலம்.  நோபால் அவுட்டில் தப்பிக்கிற பேட்ஸ்மேன், வாதம் வந்து பிழைத்த வயோதிகன் போல. அவ்வளவு எளிதாய் அடுத்த முறை சாவதில்லை. இறப்பை கடந்து வந்த முனிவன் மனநிலை.

    முதல் இரண்டு பந்துகள் குமார் வெளியே ஸ்விங் செய்தான். சீனிவாசன் அண்ணா, அதை அப்படியே விட, மூன்றாவது பந்து மிகச் சரியாக உள்ளே திரும்பி வந்த போது அண்ணா அதை சமாளிக்க பிட்சில் இறங்கினான். பந்து கால்வழியாய் நுழைந்து குச்சியை கழட்டியது. அண்ணா இறங்கிய கணமே ரமணிக்குத் தெரிந்தது விக்கெட் வீழப்போகிறதென்று.

    பந்து கால்வழியே நுழைந்த அந்த கணத்தில் கத்தினான்.

    “ நோ-பால் “

    கத்தினதெல்லாம் சரிதான். அந்த பதட்ட்த்தில் ’பொய்த்தடம்’ வைக்க மறந்ததுதான் துரதிர்ஸ்டம்.

    மைதானத்தின் ஓரத்தில் பசியோடு காத்திருந்த சண்டை யட்சி காற்றாய் உள்ளே வந்தது. ரமணிக்கு தன் தவறு புரிந்தது.

    “ யே உளத்துறாண்டா.. “ என்று கத்திய வார்த்தைக்கு பின்னான எதுவும் ரமணிக்கு செவி தாண்டவில்லை. அந்த காட்சிகள் வார்த்தையற்ற பிம்பமாய் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் எதுவோ சுரந்து சுரணையைத் தின்று கொண்டிருந்தது. ஒரு சிலந்தி உடம்பெல்லாம் தவழ்ந்து தனது பிரஞ்ஞையை உறிஞ்சிக்கொண்டிருந்தது போல தோன்றிற்று. தொண்டை கமிறி வரும் கண்ணீரை உள்ளே அனுப்ப வேண்டியிருந்தது. இருந்த இடத்திலே நின்று கொண்டு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

    “நோ- பால்னா, நோ-பால்தான், சொல்லியாச்சுல்ல.. நோ-பால் தான்.. காட்டெல்லாம் முடியாது.. ஒன்ஸ் டோல்டு நோ-பால்.. தட் இஸ்.. நோ-பால்.. நா பாத்தது.. நான் சொன்னது.. சொன்னது தான்.“ அவன் சொல், மனம், சில இந்திரியங்கள் அவன் முழுக்கட்டுப்பாட்டிலில்லை.

    செந்தில் உள்ளே குதித்து ஓடிவருவது சந்தோசமாய் இருந்தது. சண்டை ஒரு பத்து நிமிடங்கள் நீடித்தது. ரமணி அம்பயராக நிற்க கூடாது என்று சொல்லி வெளியேற்றி விடப்பட்டு அச்சுவை உள்ளே வர இருதரப்பினரும் சம்மதித்தனர்.

    மைதானத்திலிருந்து விளிம்பு வரை நடந்து வந்த போது, உலகத்தின் எந்த சத்தங்களும் மொன்னையாக்கப்பட்டு பெரிய அமைதி நிலவியது. வெளி மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் அந்த மாபெரும் அமைதி சத்தம்.

    நோபால் – பிழைத்தலுக்கு பின், அதிகமான அநுபவத்தோடும், காற்றில்லாதவிட்த்தில் வைக்கப்பட்ட தீபம் போலவும் மனம் குவிய நம்பிக்கையோடு வருவதை எதிர்கொள்வது ஆயிரம் யானை பலம். நிகழ்கால அநுபவச் செறிவோடு இறந்தகால நிகழ்வுகளை எதிர்கொள்ளுதல், ஆபிஸில் வேலை பார்ப்பவனுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்வு போல்தானே.

    சீனி அண்ணாவுக்கு இரண்டாவது வாழ்க்கை. வாரண பலத்தோடு விளையாடினான். சீனி அண்ணா தனி ஆளாய் நின்று விளையாடி அந்த மேட்சு ஜெயித்தான்.

    இருட்டிய பின் வெளிச்சமற்ற அந்த தெருவில் வெற்றிவிழா. ஆட்டுக்கால் சூப்பு குடித்து அணி வெற்றியை கொண்டாடியது. ரமணிக்கு தனியாய் தனது ஈரமற்ற வெதுவெதுப்பான கைகோர்த்து அணைத்து நன்றி சொன்னான் சீனி அண்ணா.

    “ஸ்டார்டிங் ட்ரபிள்மா.. கொஞசம் பதட்டமா இருந்த டயத்தில காப்பாத்தினம்மா.. அந்த நோபால் மட்டும் இல்லைன்னா நம்ம கவிந்துருப்போம். தேங்க்ஸ்ம்மா. ”

    ரமணி அதற்குப் பின் அம்பயரிங்கிற்கும், மறைந்து குடிக்கும் ஆட்டுக்கால் சூப்பிற்கும் போவதேயில்லை. பொய்த்தடம் அவனிடமிருந்து குமாரின் கால்வழியே நுழைந்து கழன்ற குச்சி போல விழுந்து விட்டது.

    *

    ம்பயரிங் காலத்திற்கு முன்பான காலத்தில்,  சண்டையில்லாமல் முடியாத திருநெல்வேலி கல்யாணம் போல, மேட்சில் ஒரு சண்டையாவது  இருக்கும். தெருக் கிரிக்கெட்டுகள் கூட சண்டையோடுதான் நடந்திருக்கின்றன. அல்லது முடிந்திருக்கின்றன. சண்டைகள் அவசியம். கொஞ்சம் கிரிக்கெட். நிறைய சண்டை.

    பின்பு சண்டைகள் குறைய, பெரிய மேட்சுகளில் பேட்டிங் டீமிலிருந்து ஒரு அம்பயர் என்ற வழக்கம். அந்த நபர் எதிர் டீமால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சில நபர்களை அம்பயராக்குவதற்கு எந்த டீமும் ஓத்துக் கொள்ளாது.

    அப்படிப்பட்ட ஒரு நபர்தான் எங்கள் அணியின் செந்தில்.

    கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாதவன் செந்தில். எங்களூர் ரயில்வே கிரவுண்டு, மேட்டுப்பாளையம் கிரவுண்டு, எம்ஸ்பி திடல், மேலத்தெரு, வடக்கு மற்றும் தேர்த்தெரு, மொட்டை மாடி, பாப்பாத்தி மைதானம், ஆகியவற்றில் – விளையாடப்படும் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேமாக இருக்க முடியாது என்று ஆழமாக எண்ணுபவன். கால்பந்தோ, பம்பரமோ, நொண்டிசிங்கியோ எதுவும் அவன் விளையாடாத வரைக்கும் அது ஜெண்டில்மேன் கேமாகா இருப்பதில் அவனுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.

    அம்பயர் பதவியின் பலத்தை அவன் உணர்ந்திருந்தான். உணரவைத்தான். அவனால் எத்தனையோ மேட்சுகளில் எங்களுக்கு ஜெயம்.

    கொட்டை, கொட்டையாய் நடுக்குச்சி கழன்று விழும் எத்தனையோ பந்துகளை கூட அவன் நோபால் கொடுத்திருக்கிறான். எப்போதும் இந்த அழுகூணித்தனம் தேவையில்லை. சில பந்துவீச்சாளர்களிடமிருந்து, சில முக்கியமான விக்கெட்டுகளை மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும், ஆட்ட்த்தின் போக்கு மாறிவிடும்.

    இடம், பொருள், ஏவல் அறிந்து தனது அம்பயர் அட்டூழியங்களை, சாம, தான பேதமின்றி, தண்டத்தோடு செய்து எங்களது வெற்றிக்கு அருள்பாலித்தான்.

    அவனது கருத்த திருமேனியையும், வாயில் வரும் வண்டை வண்டையான திருவாய் மொழியையும் நம்பியே நாங்கள் நிறைய மேட்சில் ஜெயித்திருக்கிறோம். சில பெட்டிங் மேட்சிலும் பணம் சம்பாதித்திருக்கிறோம். ஆட்டுக்கால் சூப்பு, முட்டை போண்டா, சைவர்களுக்கு மசாலா தோசா, ஒரு படம் என மிக அதிகமான சம்பாத்தியத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது.

    அவனது முடிவை எதிர்த்து கேட்க வருபவர்களிடம் ஒரு கட்டத்திற்கு மேல் செந்தில் சட்டை அவிழ்த்து விட்டான் என்றால் அவ்வளவுதான், எதிர்த்த டீம் நேச நாடுகளுக்கு தூது அனுப்பி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி வரும். அதற்கு மேலும் அதிகமாக பேசுபவர்களை நோக்கி கத்தியபடியே முதலில் ரன்னர் ஸ்டெம்பை பிடுங்குபவன் அவனாகத்தானிருக்கும். அவன் அழிச்சாட்டியத்திற்கு மெல்ல மெல்ல எதிர்ப்பு கிளம்பியது. அவனது அழுகுணி அம்பயரிங்கிற்கு எதிராக மெல்ல புகை கிளம்பியது. நிறைய புகார்கள் வந்தன.

    மற்றவர்களை விட எங்கள் டீமே அவனை கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவனுக்கு எதிராக சில சமயம் நியாயம் சொல்லி எங்கள் அணியிலேயே நிறைய பேர் மூக்குடைப்பட்டார்கள். விரிவாக சொன்னால், இரண்டு பேருக்கு மூக்கும், ஒருவனுக்கு முதுகில் கீறலும், கபீருக்கு நகமும் பெயர்ந்தது, கொஞ்ச பேருக்கு பரம்பரை திட்டும் விழுந்தது.

    யாராயிருந்தாலும் தன்னைப் பற்றி பேசியவர்களை செந்தில் மைதானத்திற்குள்ளாகவோ, வெளியிலோ – நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கிக் கொண்டேயிருந்தான்.

    இலட்சுமணன் மைதானத்தில் விளையாடும் போதும் முதல் ஸ்லிப்பிங்கில் நின்றபடி செந்தில் சொன்னது.  ’வெங்காயம் வாடையடிக்குதேடே.. வெங்காய சோப்பு போட்டு குளிப்பாங்களாடா..  வெங்காய நாற வாயோட குத்தம் வேற சொல்லறாங்கப்பா..’ –  இலட்சுமணன் அப்பா வெங்காய தரகு மண்டி வச்சிருந்தார். மறைமுகம்.

    ’என்னடே.. நீ பேர்ல மட்டும் குஞ்சா மணி இல்லடே.. பேருக்கு ஏத்த மாதிரி டாண்டான்னு வத்தி வைக்கேல்ல.. ஊரெல்லாம் போயி செந்தில் கள்ளன்னு மணியடிச்சிட்டு வந்திருக்கியேடே.. சரியான குஞசா மணிதாண்டே.. இன்னும் நிறைய ஆட்டுடே..’ – நேர்முகம். செந்திலுக்கு எதிராக எல்லா அணியிடமும் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த குஞ்சா மணி டென்சானாகி அந்த மேட்சில் பதினாலு வொயிடு பால்கள் போட்டான்.

    ‘அறுத்த பயல்கிட்ட என்னடே பேச்சு’ என்று அழூகுணி அம்பயரிங்கின் போது வார்த்தை சொல்லிவிட கிட்டதட்ட மேலைத்தெரு முழுவதும் குவிந்து செந்திலை கும்மத் தயாராகின. மேலைத்தெரு பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள். எப்படியோ எதோ சொல்லி ச்மாதானமாகி வெளிவந்தாலும் செந்தில் மன்னிப்பு கேட்கவேயில்லை. ’அறுத்த பயன்னு சொன்ன என்னடே தப்பு’ன்னு சண்டையின்போதே ஒரு இருபது தடவை சொல்லிவிட்டான்.

    நிறைய முறை சொல்லிவிட்ட்தாலோ என்னவோ ஒரு கட்ட்த்திற்கு மேல், அவர்களது காதிற்கு அது பழகிப் போய்விட்ட்து. வார்த்தை அதன் அர்த்தம் அறுந்து போய் உருகிப் போயிற்று. ரொம்ப நாளைக்கு அது ’அறுத்த பயக’ டீமாகத்தானிருந்த்து.

    இவ்வாறான நிறைய திருவிளையாடல்களுக்கு பிறகு, எங்களது அணியோடு எந்த அணியும், செந்தில் நடுவராயிருந்தால் விளையாடமாட்டோம் என்று சொல்லுமளவிற்கு வந்தது. எப்படியோ செந்திலை சமாதானம் செய்து அம்பயரிங்கிலிருந்து வெளியேற்றுவதற்குள் நாக்கு வெளியே வந்துவிட்ட்து.

    சதா கொந்தளிப்பும், துடிப்பும் அதனடியில் ஓடும் ஒரு பதைபதைப்புமாய் அவன் உலவிக்கொண்டிருந்தது ஏதோ ஒரு மெகா கூண்டுக்குள் சுடப்பட்ட காயத்தோடு திரியும் கழுகு போலிருந்தது.

    *

    ப்படிப்பட்ட செந்திலின் காலியிடத்தை அச்சு பூர்த்தி செய்ததை இயற்கையின் வரப்பிரசாதமாகத்தான் எங்களின் கிரிக்கெட் புலம் நோக்கியது. மைக்கேல் சார் கொடுத்த வெங்கட்ராகவன் தொப்பியா, சரியாக வராத பேட்டிங்கா, போட்டியற்ற ஒரு நாற்காலியில் தான் பிணைந்ததால் வந்த அதிசயமா.. எதுவோ ஓன்று அவனை ஒரு சுயம்புவான அம்பயராய் பிரகாசிக்க செய்தது.

    அம்பயர் என்பது அற வெளிப்பாடு. எப்போதும் நம்மை பார்க்க்கும் நீதி தேவதை போல. கண்ணைக் கட்டிக்கொண்டு தராசு சுமக்கும் தேவதைக்கும் அம்பயருக்கும் அதிக வித்தியாசமில்லை. ’என்னா சொன்னாலும் பெரிசு ஓழுங்காத்தான் சொல்லும்’ என்று நடந்து போகும் ஒரு பெரியவரின் வெளியை ஊர் எப்படி பார்க்கிறதோ அப்படியானது தான் அம்பயரிங்க். – அச்சு அப்படித்தான் இருந்தான்.

    அச்சுவிடம் ஏதோ எழுத்தில் சொல்ல முடியாத அறம் இருந்தது போல. ஒரு சில நாட்களுக்குப்பின் அவன் தனக்கு இடப்பட்ட கட்டளையாய் அம்பயரிங்கை அரவணைத்துக் கொண்டான். ஏதாவது ஒரு தேவதையோ, யட்சியோ அவன் கனவில் வந்து காதில் சொல்லிவிட்டு போயிருக்கலாம். ‘ நீ அம்பயராக கடவது என்று ‘

    சோதனை, விரிந்த கண், களத்திலிருந்தாலும் விழிப்புடன் இருத்தல், முடிவுகள் தன்னை தொடாத தூரத்தில் செயல், பிரபஞ்ச ஓழுங்கு. அவனே மைதானத்தின், பிரபஞ்சத்தின் மையம். அவனே ஆக்கமும் அழித்தலும்

    அச்சு அவன் ஊரிலிருந்த இறுதி கால கட்டங்களில் ரொம்ப பிசியான அம்பயராகியிருந்தான். எப்போதும் ஹிண்டு பேப்பர் மற்றும் விளையாட்டு பத்திரிக்கைகளின் சில கட்டுரைகளோடு திரிந்தான். சில மேட்சுகளுக்கு முன்னால் இரண்டு டீமையும் கூப்பிட்டு புது ரூல் சொல்லி க்ளாஸ் எடுக்கும் அளவுக்கு அவனது மரியாதை வளர்ந்திருந்தது.

    விடுமுறைக்கு சென்னைக்கு போகும்போதெல்லாம் சேப்பாக்கம் வளாகத்தை பார்த்த கதையை ஓவ்வொரு டீமுக்கும் சொல்லிவருவான். ஸ்கோர் கார்டு புதுமாதிரி என்ன வந்திருக்கிறது என்பதை அவன் தான் எங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.

    யானை, கடல், ரயில், கல்யாண மாமாவின் கர்ண மோட்சம் போல, அச்சுவின் கிரிக்கெட் கதையும் அலுப்பூட்டாதது. அடிவயிற்றில் அட்ரீனல் சுரக்க வைப்பது. எப்போதும் மனத்துள்ளல் அளிப்பது.  

    *

    ம்பயர் அச்சு அந்த ஊரிலிருந்து மாற்றாலாகி போனது எங்களூர் கிரிக்கெட் புலத்திற்கு ஈடுகட்ட் முடியாத இழப்பு.

    அச்சு போன சில தினங்களுக்கு – கூட்டணி காலத்தில் இடைப்பட்ட பிரதமர்கள் போல கொஞ்ச நாள் அம்பயரிங் செய்தார் நாராயணன். டீம் பெரிசுகள் அண்ணா என்றும், சிறுசுகள் மாம என்றும் அவரை அழைத்தனர்.  அது அவருக்கு முற்பெயர், அதாவது முன்னே சொல்வது, பிற்பெயர் [ பின்னால் சொல்வது]  ’தொடை சொறிஞ்சி  நானா ‘

    ’தொடை சொறிஞ்சி நாராயணன்’ பதவிக்காலம் அவ்வளவு பெரியதாக இல்லை. காதில் மர்பி ட்ரான்ஸ்பார்மரொடு திரியும் நாராயணன், எங்களூர் திவ்ய செளந்திர்ராச பெருமாள் போல அலங்காரமும்,  திரிநேகஸ்வர சிவன்போல தனிவாழ்க்கையும் வாழ்பவர்.

    தெருக்கடைசி திண்ணையில் உட்கார்ந்து வயதான கிழங்களோடு அவர்கள் கூட்ட்த்தில் இளைய பெருமாளாய் வீட்டிருந்து கிரிக்கெட் கேட்பதே (கிரிக்கெட் இல்லாத காலத்தில் ரேடியோ) நாராயணன் நம்பியின் முழுநேர வேலை.

    அரசு ஓய்வுபெற்ற அம்மா, அப்பா. ஊட்டி வளர்த்த பிள்ளைக்கு எப்போதும் ஓய்வு. உட்கார்ந்து திங்க வீடு, இலையில் நிரம்ப விழுமளவிற்கு ஒத்திகை நிலம்.

    வேலைக்கு போவது எவ்வளவு பெரிய பாபம், அதுவும் ஊர் தாண்டி வேலைக்கு போக்க் கூடாதென்று நிறைய சாஸ்திரங்களே சொல்லியிருக்கும்போது அதை உதாசீனப்படுத்துவது ஊருக்கே நல்லதல்ல என்கிற தத்துவத்தை சிரமேற்கொண்டு தன் கால அட்டவணையை தயார்படுத்திக் கொண்டவர்.

    திருப்பள்ளி எழுச்சி, காலைக்கடன்கள் ( நேரமிருந்தால் மட்டும்), காலைச்சாப்பாடு, திண்ணையடைதல், மதியச்சாப்பாடு, திண்ணையடைதல், அங்கயே பொன்னாமாமி கேண்டினிலிருந்து வரும் பஞ்சி மற்றும் சுக்கு காபி, சாயரட்சை கோவில் தரிசனம் (மாமிகளிடம் பேச்சு, குறை தீர்க்கும் படலம்) வீட்டைதல், இரவுச்சாப்பாடு, ரேடியோ கேட்டபடி தூங்கல், வாரமிரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், அதற்கு முன் துரிய ஸ்கலிதம், மாதமிரு முறை சினிமா, எப்போதும் ரேடியோ, அவ்வப்போது ஹிண்டு பேப்பர், எப்போதும் பேசத்தயாராயிருக்கும் கிரிக்கெட்.

    நேரத்தை கொல்வது எவ்வளவு பெரிய வேலை. அதை மிக இலகுவாய், எளிதாய் செய்து கொண்டிருந்த நாராயணன் நம்பியின் அம்ப்யர் காலம் – எங்களூர் கிரிக்கெட்டின் ஒரு கற்காலமாய் போனது துரதிருஸ்டம்தான்.

    தூக்கிக்கட்டிய கைலியோடு, தொடை சொறிஞ்சுகொண்டே நாராயணன் நம்பி செய்யும் அம்பயரிங் ஏன் பிரபலமாகவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம். அவரால் ஒரு முழு மேட்சுக்கு நிற்க முடியாது. அவர் திடீரென்று கிளம்பி விட்டால் இன்னொரு அம்பயர் அமையும் வரை மேட்சு நிற்க வேண்டும். அவரால் பேசாமலும் நிற்க முடியாது.

    ரேடியோ கேட்டு கமெண்ட்ரி சொல்வது போல அவரே பேசிக்கொண்டிருப்பார்.

    அவர் அம்பயரிங் செய்த்தை விட வர்ணனையாளராகவே வாழ்ந்தார். ரேடியோ போல ஏதோ குரல் அவருக்கு கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லை அவர் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். மேட்சு முழுக்க குத்தல் பேச்சு, கமெண்ட்ரி என்று பேசிக்கொண்டேயிருப்பார் நானா.

    ’ஏ சரவணா இந்த ஸ்பீடு போடறதுக்கு ஏண்டா இவ்வளவு தூரம் ஓடி வர்ற.. என் பின்னாடி நின்னே போடேண்டா.. இன்னிக்கு ஆத்தில பொங்கலா.. தூங்கி வழியறயேடா.. ஒரு ஜமக்காளம் போடவா.. ‘

    ‘ ஏலே ரமணி மட்டை போடலாம்.. கட்டை போடலாம்.. டீமுக்கு மொட்டை போடதலா..’

    ‘ கிரிக்கெட் ஆடச் சொன்னா டேன்ஸ் ஆடறயேடா..’ 

    அழகான ஓவல் வடிவத்தில் குவிந்து நல்ல கட்டாந்தரையும், சிலயிடங்களில் உட்கார்ந்து மக்கள் பார்க்கும் வசதியும் கொண்ட ரயில்வே மைதானத்தை லாட்ர்ஸ் மைதானம் என்பார். பச்சை பசேலென தென்னை மரங்களோடு கூடி எப்போதும் காற்று வீசிக் கொண்டிருக்கும் எம்ஸ்பி திடலை சிட்னி மைதானம் என்பார். தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் அதைப் பார்க்கும்போதே நாராயணன் நம்பியின் பெயர் பொருத்தம் மெய்சிலிரிக்க வைக்கிறது.

    சின்ன பசங்களை கண்டால் அவர் பேசும் மொழியே வித்தியாசமடைந்து விடும். பச்சை, பச்சையாய் பேசுவது. ரன்னருக்கு நிற்கிற பையன்களின் அக்கா, தங்கை, அம்மாக்களின் குசலம் விசாரிப்பது, வெள்ளையாய் கொழுக் மொழுக்கென்று நிற்கிற எல்லா பையன்களையும், அளவுக்கதிகமாய் அரவணைத்து ஊக்குவிப்பது போன்ற செயல்களால் ரன்னர்கள் அம்பயரை தாண்டி பாதுகாப்பான தூரத்திலே நிற்க வேண்டியிருந்த்து.

    எல்லாவற்றிற்கும் உச்சமாய் வில்லியம் விளையாட்டாய் கேட்ட கேள்வி வினையாய் முடிந்தது.

    “ஏந் அண்ணாத்த, இப்படி சாரம் போட்டு அவஸ்தைப்படறதுக்கு ஒரு பேண்டு மாட்டலாம்ல.. “

    “ ஆமாண்டே.. பேண்டுக்கு பதிலா ஒரு ஃபாதர் (பாதிரியார்) அங்கி வாங்கி கொடுத்திடுடே.. வாங்கி மாட்டிகிட்டா ஊரு உலகத்துக்கு தெரியுமா, அங்கிகுள்ள கைவிட்டு நோண்டிக்கலாம் பாரு.. இப்படி லோகமே பாக்கற மாதிரி தொடை தடவ வேண்டாம்ல.. “

    ஏற்கனவே தோற்றுப் போகும் நிலையிலிருந்த மேட்டுப்பட்டி அன்பர்கள், இதை சாக்காய் வைத்து துள்ளிக் குதித்து கெட்ட வார்த்தைகள் சொல்லி நானாவின் பரம்பரையையே நாறடித்துவிட்டார்கள். நானாவின் தகப்பனார் விடும் தில தர்ப்பணத்தில் மூன்று தலைமுறைகளும் மூக்கை பிடித்திருக்கும்.

    ”ஏல. நானா.. தா??. “ என்று ஆரம்பிக்கும் அந்த ஸகஸ்ரநாம அர்ச்சனையோடு தொடை சொறிஞ்சு நானாவின் உன்னதமான அம்பயரிங் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    *

    ல்லோராலும் நிராகரிக்கப்பட்ட செந்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அச்சு, துரத்தப்பட்ட நானாவிற்கு பின்பு ரமணிக்கு அந்த மூட்கீரிடம் வந்த்து. ஸ்பின்னிற்கு பதிலாக வெயிடாகவும், இரண்டு ரன்களை கப்பையின் வழியே நாலாகவும் மாற்றிக்கொண்டிருந்த ரமணிக்கு அந்த பொறுப்பை கொடுத்து, ஊக்கம் கொடுத்து அவன் பின்னால் செயல்பட்டான் செந்தில்.

    கழுகின் முகமாய் கோழி களத்தில்.

    ரமணிக்கு செந்தில் நிறைய டிப்ஸீகளை சொல்லிக் கொடுத்தான். அம்பயரின் முக்கியமான வேலை –  நல்ல பாலை நோபாலாக்குவது. செந்தில் ரமணிக்கு அதில் குரு தீட்சை அளித்தான்.

    ரயில்வே டீமில் குமார், ரமணன் பந்துகள் அதி பயங்கரமாய் சுழலும். அதை இறங்கி ஆடாவிட்டால் ரொம்ப ஆபத்து. இறங்கி ஆடினாலும் ஸ்டெம்பிங்கோ, எல்பிக்கோ கண்டிப்பான வாய்ப்புகள் உண்டு. மிக கவனமாய் ஆன் – டிரைவ் செய்ய வேண்டிய பந்துகள் அவை. அவன் பந்தின் வேகத்தையும், உயரத்தையும் மாற்றி மாற்றி போடுவான். பில்டர்களையும் லாவாகமாய் நிற்க வைத்து பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி விடுவான். புதுசாய் வந்த பேட்ஸ்மேன் ஒரு சில பந்துகளை தாக்கு பிடித்தபின்பு தான் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.

    மேலத்தெரு மஜீத்தின் பந்துகள் வெளியே போவது மாதிரி தலை காட்டிவிட்டு, டுபுக்கென பின் காலால் பாயும் நாய் போல ஸ்டெம்பை நோக்கி திரும்பும். கடைசி நிமிட்த்தில் வேகமாய் திரும்பும் பந்துகளை பதட்ட்த்தோடு தொடும் பேட்ஸ்மேனின் ஆயுட்காலம் அங்கே நிற்கிற அப்துலால் முடித்து வைக்கப்படும். விழுந்து, விழுந்து எப்படியாவது கேட்ச் பிடித்து விடுகிற அவனை திட்டுக்கொண்டே வரும் பேட்ஸ்மேன்கள் சொல்வது .. “ சரியான ரப்பர் தா..டே.. அம்மை இவனை குரங்குக்கு பெத்தாளொ.. “

    மேட்டுப்பட்டி கிற்ஸ்டோபரின் புல்டாஸ் பந்தை,  காற்றிலே சுழற்றி வீசப்படும் பந்தை, விக்கெட் கீப்பர் கைக்கு போகும் என்று நினைத்து பேட்ஸ்மேன் அதற்கு ஸ்டைலாய் வழிவிடும் போது, அது ஸ்டெம்பின் பைல்ஸை  கழற்றும். அந்த ஒரு நல்ல ப்ந்துக்காக அவன் நிறைய வொயிட் பால்கள் போடுவான். எந்த பந்து குச்சியை கழற்றும் என தெரியாது.

    இப்படியான நல்ல, அபாயமான பந்தின் தருணங்களில் ’நோ-பால் என்று கத்தியபடி ஒரு தட்த்தை காட்ட வேண்டும். அந்த தட்த்தை அவன் கேட்கும் முன்னரே யாருக்கும் தெரியாமலோ அல்லது அவன் கேட்கும் போது போட்டுக்காட்டியோ உருவாக்கிவிட வேண்டும். சொன்னதை எதாவது சொல்லி சாதித்துவிட வேண்டும். இடம், பொருள், ஏவல் முக்கியம். அந்த ’பொய்த்தடம்’ பற்றி கேள்விகள் சூழ எதிரிகள் வந்தால் உள்ளே குதிப்பான் செந்தில், சூர சம்காரத்திற்காக.

    ரமணியின் பொய்த்தடம் அந்த டிசம்பர் 7ம் தேதி மேட்சில் கழன்று விழுந்தது. அணிக்கு வெற்றிதான். அழிச்சாட்டியம் பண்ணி சாதித்த்திற்கு அணி நண்பர்கள் எல்லோரும் பாராட்ட்த்தான் செய்தார்கள். மதிப்பு கூட்த்தான் செய்த்து.

    சடக்கென்று ஏதோ ஒரு பூதம் தன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தியதாய் மனக்கிலேசம்.

    எல்லோரும் தன்னை கையும், களவுமாய் பிடித்த்தால் வந்த அவமானமா. இது எல்லா அணிகளிலும் தெரிந்தே நடக்கிற உளத்தல்தான் எனினும், தன்னை ஏன் அதிகம் பாதித்த்து என்பதை பார்க்க, அதில் தனக்கு முன்பிருந்தே அந்த செயலில் அக ஓட்டுதல் இல்லை என்பது தெரிந்தது.

    ’நாம இல்லைன்னா இன்னொருத்தன் இருந்து இந்த நோபாலை கொடுத்திருப்பான், இதெல்லாம் சகஜம் ‘ என்று எத்தனையோ சாந்தி யஞ்ஞங்கள் செய்தாலும்  – ஓயாத மன அலையின் பேரிரைச்சல்.

    ‘ப்ச. செய்திருக்க வேண்டாம் தானே. வேறு யாரேனும் செய்யட்டுமே உனக்கென்ன.. வெற்றியை விட உனக்கு உன் அகம் முக்கியமல்லவா.. ’  அதே அலைவரிசையில் மனக்குரல் சலிக்காமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.

    பொய்த்தடம் விழுந்த இட்த்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் குழி போல தனக்குள் அமைதி ஏற்பட்டிருந்தது. புயலின் மையத்தின் அமைதி போல, பொய்யின் மையத்தில் சுழலில் சுருண்டுவிடுவதுண்டு. ரமணியால் அந்த நோபாலுக்கு பிறகு எங்குமே பொய் சொல்ல முடியவில்லை.

    *

    சீனி அண்ணாவிற்கு நிறைய முடி கொட்டிருந்தது. எந்த உணர்ச்சியையும் மிகைப்படுத்தாத அண்ணா, என்னை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாகவேயிருந்தான். சொந்த ஊரிலே வாழ்க்கை அமைத்துக் கொண்ட பாக்கியவான்களில் அவனும் ஓருவன்.

    அதுவும் ரயில்வே கிரிக்கெட் மைதானத்திலே. ஆமாம். இப்போது அந்த மைதானத்தின் பெரும்பகுதியில் கான்கீரீட் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. மெட்ரோ போல் இல்லாமல் வெறும் இரண்டு அடுக்கு கட்டிடங்களாகவே நின்றது கொஞ்சம் ஆசுவாசம். மைதானத்திற்கு பக்கத்திலிருந்த சுடுகாடும் இப்போது ரொம்பவே தள்ளிப்போயிருந்தது. மனித வாழ்க்கை பெருக்கும்போது பிணங்கள் எரிக்கும் நிலங்களின் மதிப்பும் கூட்த்தானே செய்யும்.

    அண்ணாவிற்கு ஏதோ அரசாங்க உத்தியோகம். ஒரு டூவீலர். சூ தேவையில்லாது  செருப்பு மட்டுமே கொண்டு நடத்தி முடித்துவிடுகிற ஒரு சிறு நகர வாழ்க்கை. ஆச்சிக்கு நிறையவே கூன் விழுந்திருந்தது.

    “ என்னது.. ரமாக்குட்டி பிள்ளையா.. பாத்து பல நாளாச்சுதேப்பா.. அம்மை நல்லாயிருக்காளா..“ ஆச்சி கேட்டுக்கொண்டே போனாள். நான் சொல்கிற பதில்கள் எதுவும் தேவையற்ற உலகத்தில் அவளிருந்தாள். அண்ணா அவளுக்கு மிசின் எடுத்து கொடுத்து காதில் வைத்துக் கொள்ள சைகையால் சொன்னான்.

    மறுபடியும் கேட்ட கேள்விகளையே கேட்டு பதில் வாங்கிக்கொண்டாள்.

    “ கல்யாணத்துக்கு கூட பத்திரிக்கை அனுப்பாம பண்ணிட்டேகளேப்பா.. “ குறை பட்டுக்கொண்டாள்.

    ” ஆச்சி.. சொல்ற நிலமையிலே கல்யாணமாகல பாத்துக்க.. வடக்கு பொண்ணு.. அம்மைக்கு முழுசா சம்மதிமில்லைல்லா.. சுருக்கமா.. பண்ணவேண்டி.. அண்ணமாருங்க செஞ்சு வைச்சது.. “

    ”என்னயிருந்தா.. என்னப்பா.. மனுசாளுக்குத்தானப்பா வாக்கபடுதோம்.. சீக்கிரம் குழந்தை ஓண்ண பெத்துக் கொடுப்பா.. உங்கம்மை பாவம்பா.. அதுக்கு பீ, மூத்திரமள்ள முத ஆளா நிப்பாப்பா.. கூறுகெட்ட குப்பச்சி.. வாய்தான் அதுக்கு பெரிசு.. குழந்தையை மடில எறிஞ்சா  சிரிச்சிட்டேல்ல நாங்க அழுவோம்.. “

    அதை சொல்லியபடியே ஆச்சி தனக்குள்ளே அழ் ஆரம்பித்தாள். சத்தம் வராத அழுகை. தாரை தாரையாய் கண்ணீர் வர ஆரம்பித்தது. சீனி அண்ணாவிற்கு ரொம்ப சங்கடமாயிருந்திருக்க வேண்டும்.

    “ யே.. அம்மா.. ரொம்ப நாள் கழிச்சு வந்தவண்ட்டயும் ஒப்பாரி ஆரம்பிசிட்டயா.. “ அவன் இயல்பை மீறிய சத்தம். கத்தல். பதட்டம். இயலாமை.. இருவருக்கும் ரொம்ப நாள் தொடர்ந்து கொண்டிருக்கிற ஆதங்கத்தில், உரையாடலின் தொடர்ச்சியான குரல்.

    சண்டை  யட்சி வீட்டிக்குள்ளே மூலையில் உட்கார்ந்திருப்பது போலயிருந்தது.

    ஆச்சியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த போது, அண்ணா மனைவியின் குரல் மேல்மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அண்ணா மனைவி மல்லிகா அக்கா டீச்சர். அரசாங்க பள்ளியில் டீச்சர். பெருத்த சரீரம். டியுசன் வகுப்பில் மட்டும் பெருத்த சாரீரம். கண்டிப்பான டீச்சர். இருபது வருட தாம்பத்தியம். மழலை சொல் கேளாத இல்லம். ஆச்சியின் கண்ணீராய்.

    “அண்ணே, அக்காகிட்ட சொல்லியிருங்க.. நான் இன்னிக்கு ராவே கிளம்பறேன்.. சென்னைல செந்தில, அச்சுவா பாத்துட்டு போலாம்னு ஒரு ஐடியா.. இருக்கு.. “

    அண்ணா பேசாமல் கூடவே நடந்து வந்தான். எல்லாயிடமும் கட்டிடங்களான அந்த பகுதியின் நடுவிலும் சின்னதாய் ஒரு கிரவுண்டு இருந்தது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, சின்னதான கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அண்ணா அந்த மைதானத்தின் நடுவில் நின்று மறுபடியும் சுத்தி பார்த்தான். அவன் தன்னை பின் நோக்கி சுழற்றிக் கொள்கிறானா, காலச்சக்கிரத்தில். அந்த இடம் பழைய மைதானத்தின் எந்த இடமாக இருந்திருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அண்ணாவிற்கு அது தெரிந்திருக்கலாம்.

    ரமணியை பார்த்து சிரித்தான். ரமணியும் அவனைப் பார்த்து சிரித்தான். அந்தக் கேள்வி அவனுக்குள்ளே குதித்துக் கொண்டெயிருந்தது. கேட்கலாமா ? கூடாதா ? அவனை அறியாமலே கேள்வி ஒரு இன் – சுவிங்கர் பெளன்சர் போல எழும்பி வந்தது .

    “ ஏண்ணே, என்னன்னே பிரச்சனை ? “

    அண்ணாவிற்கு புரிந்தது. பதில் சொல்ல விருப்பமின்றி தன்னை காலச்சக்கரத்திற்குள் புகுத்திக் கொண்டான் போல. நான் கேட்டிருக்க கூடாதோ ?

    ஒரு சில தப்படிகள் மெளனமாக நகர்ந்தபின், தலையை உயர்த்தி அண்ணா சொன்னான்..

    “  நோ-பால் கொடுக்கறதுக்கு யாருமேயில்லடா.. “

    சொல்லிவிட்டு என் கைகளை இறுக்கி அணைத்து கொண்டார். நான் எதிர்பார்க்காத சிரிப்பை, அவனே இதுவரை சிரிக்காத சிரிப்பை சத்தமிட்டான்.

    கிளவுசில்லாமலே அவன் கை நிறைய வேர்த்திருந்தது.

    புகைப்படத்துக்கு நன்றி:

     http://www.leadersquest.org/cms/wp-content/uploads/Ruralvisit3.jpg#.UG1mHphhwqw

    Share
  • நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    விசாகை மனோகரன்

    சென்னை வரும் லுப்தாஸா பிளைட் துபாயிலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில் நித்திராதேவியின் மடியில் தவழ ஆரம்பித்து விட்டான் அரவிந்த். ஆனால் நிம்மதியான தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதிற்குள். அந்த எண்ண ஓட்டத்தை ‘ தாகத்திற்க்கு ஏதாவது வேண்டுமா’ என்று ஒயிலாக வந்த ஏர் ஹோஸ்டஸ் கேட்டு தடுத்துவிட்டாள்.

    இங்கு நான் கட்டாயம் அரவிந்த் பற்றி சொல்ல வேண்டும். நான் எதற்கு உங்கள் நடுவே. அவன் வாயாலேயே கேளுங்க அவன் கதையை.

    என் வயது இருபத்தேழு. பெத்தவங்களுக்கு ஒரே மகன். ஒரு சாதாரன கம்பெனியில் சாதாரண குமாஸ்தா எங்கப்பா. வீட்டைத் தவிர வேறு உலகம் தெரியாத அம்மா. மாதம் 3ம் தேதி சம்பளம். 5ம் தேதி தட்டுப்பாடு ஆரம்பம். கீழ் நடுத்தர வர்க்கம். படிப்பில கெட்டிக்காரன். விளையாட்டுகளிலும் அப்படியே. ஆனா நான் காரணமில்லாத ஒரு தப்பால வாழ்க்கையில அவதிப்பட்டவன். அந்த தப்பு நான் மேல்ஜாதின்னு சொல்லப்படற குலத்தைச் சேர்ந்தவன் என்பது தான். எந்த ஸ்காலர்ஷ்ப்பும் கிடைக்கல. ஆனா படிக்கணும்கிற வெறி மட்டும் இருந்தது. அந்த கஷ்டத்திலேயும் என்னை படிக்க வைச்சாங்க. 10ம் கிளாஸ் தேறினேன். +2வும் முடித்தவுடன் வீட்டின் நிலைமை புரிந்து எனது ஆசைகளை புதைத்து விட்டு படித்தது போதும் எங்காவது வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தேன்.

    ஒரு நாள் ‘அம்மா! நான் படிச்சது போதும்மா. ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிச்சா கொஞ்சம் கஷ்டம் குறையும்’ அப்படின்னேன்.

    ‘டேய் அரவிந்தா! நீ நல்லா படிக்கற பிள்ள. ஏண்டா நிப்பாட்டனும். நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போடா. என் உயிரகொடுத்தாவது நான் படிக்கவெக்கறேண்டா.’

    ‘சரிம்மா. இனிமே என் லட்சியமே படிப்பு படிப்பு படிப்பு தான்மா.’

    அப்ப ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளா அடமானம் வெச்சு அதத் திருப்ப முடியாம வித்து என் படிப்பு தொடர்ந்திச்சு. M.Tech கடைசி வருஷம். Project Work பண்ண எங்க அப்பாவோட பழைய ஸ்கூட்டரையும் வித்தாச்சு. கடைசியா பரிட்சைக்கு பணம் கட்டனும். வெக்கவும் ஒண்ணுமில்ல விக்கவும் ஒண்ணுமில்ல. பணம் கட்ட கடைசி நாள் அம்மா என் கையில பணத்த கொடுத்தாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

    ‘அம்மா! ஏதும்மா பணம்?’

    பதில் இல்ல.

    ‘அம்மா உன்னத்தான் கேட்டேன் ஏது பணம். சொல்லலேன்னா நான் அத தொடமாட்டேன்’. அப்பத்தான் அம்மா கண்ல நான் எந்த கஷ்டத்திலயும் பாக்காத கண்ணீர பாத்தேன்.

    டேய் போய் பணத்த கட்டிட்டு வாடா அப்பறமா பேசிக்கலாம்ன்னு சொன்ன அம்மாவ உத்துப் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா புதுசா தெரிஞ்சிச்சு. சட்னு பொறி தட்டிச்சு. புதுசா தெரிஞ்சது அம்மா கழுத்துல மஞ்ச கிழங்கு தாலிக்கு பதிலா. கட்டிபிடிச்சிட்டு அழுதேன்.

    அம்மா சொன்ன ஒரே வார்த்தை ‘சீக்கிரம் போய் பணத்த கட்டு’

    எனக்கு வேற வழி தெரியல. போய் கட்டிட்டு வந்து அசுரத்தனமா படிச்சு ஒரு அமேரிக்க சாப்ட்வேர் கன்பெனில வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் கழிச்சு இப்ப வரேன் பெத்தவங்கள பாக்க. இதோ இன்னும் ஒருமணி நேரத்தில சிங்காரச் சென்னை. அங்கேந்து ரெண்டுமணி நேரப் பயணம்.

    சொன்னபடி 3மணி நேரத்தில் வீட்டில் இருந்தேன். அப்பா அம்மா ரெண்டு பேர் கண்லேயும் கண்ணீர். ஆனா இது ஆனந்தக் கண்ணீர். கட்டிபிடிச்சு கால்ல விழுந்து வணங்கியபின். ரெண்டு பேரையும் உட்காரவெச்சு அவங்க காலடில நான் வாங்கி வந்திருந்த ஒரு பெட்டிய வெச்சுட்டு ‘அம்மாஇ இதுல நீ எனக்காக கடைசியா கழட்டிக் கொடுத்தியே தாலி அதுவும் மிச்சம் நகையும் இருக்கும்மா. மொதல்ல அப்பாவ அந்த தாலிய கட்டச் சொல்லும்மா’

    அரவிந்த் நீ நல்லா இருந்தா போதும்பா. தங்கத் தாலி கட்டிக்கிட்டாத்தான் பொண்டாட்டியா? தங்கத்தவிட மஞ்சளுக்கு மகிமை ஜாஸ்திப்பா.

    அம்மா சும்மா சினிமா டைலாக் பேசாதம்மா. கட்டிக்கம்மா

    சரிடா நாளைக்கு வெள்ளிக்கிழமை நீயும் நல்லபடியா திரும்பி வந்திருக்கே. கோயிலுக்கு போய் சாமி முன்னாடி கட்டிக்கலாம்.

    ராத்திரி சூப்பர் விருந்து. சாப்டுட்டு 12மணி வரைக்கும் பேசிக்கிடிருந்துட்டு படுத்துட்டோம் காலேல சீக்கிரம் எழுந்திரிச்சு கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு.

    சூரியன் முகத்தில பட்டு எழுந்திரிச்சு உக்காந்தேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு கோயிலுக்கு போகணுமேன்னு. அம்மா ஏன் எழுப்பல? இப்படியா தூங்க விடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே போய் கை கால் கழுவிட்டு உள்ள போய் அம்மான்னு கூப்பிட்டா பதில் இல்ல. எங்க போனாங்க? ஒரு வேள பிள்ள அசதியா தூங்குதுன்னு எழுப்பாம கோயிலுக்கு போய்ட்டாங்களா? நினச்சிக்கிட்டே அவங்க ரூம தாண்டும்போது அம்மா படுத்திருந்தது தெரிஞ்சிச்சு. அம்மா இந்நேரத்துல படுத்திருக்காங்கன்னா ஏதாதவது உடம்பு சரியில்லயான்னு யோசிச்சிக்கிட்டே கதவ தெறந்தேன்.

    அங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் படுத்திருக்க, நடுவில நான் வாங்கி வந்திருந்த நகைங்க கிடக்க, அந்த தாலிய மட்டும் கையில பிடிச்சிட்டு அம்மாவும் அம்மாவ பிடிச்சிட்டு அப்பாவும் அவங்க கடமை முடிஞ்சிருச்சின்னு நிம்மதியா நிரந்தரமா துங்கிட்டிருந்தாங்க.

    அந்த மஞ்சகிழங்கு அம்மா கழுத்தில தங்கத்தவிட அதிகமா ஜொலிக்குது.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன். டாக்டர்லாம் வந்தாங்க. ஏதோதோ சொன்னாங்க ரெண்டு பேருக்குமே இதயம் வீக் ரொம்ப ரேர் இப்படி வர்ரது அது இதுன்னு. கொடுத்துவச்சவங்கன்னு சில பேர் சொன்னாங்க. ஆனந்த அதிர்ச்சில போய்ட்டாங்கன்னு சில பேர் சொன்னாங்க.

    ஆனா போனவங்க போனவங்க தானே.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன்

    எங்கேயோ பாட்டு கேட்குது

    ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’. 

    Share
  • நாக்பூருக்குப் போ!

    முகில் தினகரன்

    பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

    தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

    ‘வாட் எ கிரேட் மேன்?அவரும்…அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்…அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி..இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்…..’

    யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

    இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்….ஒரு மழை இரவில்…மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்…என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன். காரணம்,? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி…அறிவு ஜீவி…இளம் ஜீனியஸ்.

    ‘நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா….உடனே உன் காதலைத் தூக்கிப் போடு..கேவலம் அற்ப காதலுக்காக..அற்பத வாழ்க்கையை இழந்திடாதே…உன் கிட்ட படிப்பிருக்கு…திறமை இருக்கு…எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு…அதை உழைப்புல காட்டு…என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு…நான் போன்ல சொல்லிடறேன்…உடனே கிளம்பு…உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு…உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு….இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே…நாக்பூருக்குப் போ…விடியல் ரெடியா இருக்கு’

    ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

    கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்….ப்ச்…தப்புப் பண்ணிட்டேன்…’உயரணும்..உயரணும்…’ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு…ஆனா..ஊர்…உலகம்…உறவு…நட்பு…எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே…என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது. ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…’ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்…பெத்தவங்களை…நண்பர்களை…உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு..சார்’

    கண்டிப்பான ஒரே பதில்தான் வரும் ‘வேண்டாம் தியாகு…அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை…எப்ப நீ வருவேன்னு காத்திட்டிருக்கான்…நீ வந்தே…அவ்வளவுதான்…இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்….எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே..அதுவும் நல்லா இருக்கறே…அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே’

    அவர் சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

    தீர்மானித்து விட்டேன்.

    அவரது சாவக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

    விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன். ‘எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்’

    நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது. ‘கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு’.

    முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். ‘எப்பேர்ப்பட்ட மனிதர்….எப்படி முடிந்தது இவரால் மட்டும்….எப்போதும்….எல்லோருக்கும்…நல்லது மட்டுமே நினைக்க…நல்லது மட்டுமே செய்ய…,’

    அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை. ‘இதில் பேராசிரியரின் மனைவி யார்?…துக்கம் விசாரிக்க வேண்டுமே…எப்படிக் கண்டுபிடிப்பது?’

    பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

    ‘மிஸஸ் சிவஞானம் தானே?..அதோ அந்த….கறுப்பு ஸாரி…’

    அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

    இது…இது…

    நான் காதலித்த….

    மந்திரி சண்முகநாதனின்…மகள்…அல்லவா?

    இவளா…பேராசிரியரின் மனைவி?

    எனக்கு எதுவுமே புரியவுமில்லை…தோணவுமில்லை. ‘எப்படி?.’

    என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

    ‘சார்….உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?…வருவேன் சார்…கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்’

    ‘ப்ளீஸ்…தியாகு புரிஞ்சுக்கப்பா…உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?…உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான்…நீ வரணும்’ என்பதற்;காக அல்ல…..நீ வரக்கூடாது…அங்கிருந்தே வாழ்த்து அது போதும்’

    (முற்றும்)

     

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    நம் நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருவதுண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை ஏராளமாக உண்டு. இது மிகப் பெரிய குறைதான். பல மேலை நாடுகளில் ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படும்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் ஏன் இந்த ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றால் பொதுவான காரணமாக அரசியல்வாதிகளையும், ஆட்சி செய்யும் அதிகாரிகளையும் அவர்களை ஆதரித்து வ்ரும் சமூகக் கூட்டத்தையும் உதாரணமாகக் காட்டுவார்கள். நம்மால் இந்த ஒழுங்கான இந்த ‘வரைமுறைக்குள்’ செயல்படமுடியாதா என்ற பயம் அவ்வப்போது நடுநிலைப் பார்வையாளருக்கு எழத்தான் செய்யும்.

    இந்த சிஸ்டம் என்கிற வரைமுறை இந்தியாவில் முழுவதுமாக செயலழிந்து போனால் நாசம்தான் ஏற்படும். ஆனால் ஆண்டவன் கருணையால் இந்த நாசம் நம்மை நாசமாக்கும்போதெல்லால், இந்தியாவின் நீதித் துறை விழிப்போடு செயல்பட்டு நம்மை மறுபடியும் சமநிலைக்குக் கொண்டு வருகின்றது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காண்பிக்கலாம்

    நீதிபதிகள் என வரும்போது சில கடமைகள் அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன என்பதும் விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வாத விஷயம் என்பதும் நம் நாட்டு நீதிபதிகளுக்கு நன்றாகத் தெரியும். ஓ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீதிபதிகள் எல்லோருமே ஒழுங்கானவர்கள்தானா என்ற கேள்விகள் கூட எழ்லாம். ஆனால் எங்கோ ஓரிரண்டு விஷயங்களை நாம் தவிர்த்துப் பார்க்கும்போதெல்லாம் நம் நாட்டு நீதிபதிகள் தங்கள் பணிக்ளைச் செவ்வனே செய்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

    ஒரு கால கட்டத்தில் பல கொள்ளை கொலை செய்தவர்களுக்கு வாதாடி இருக்கும் வக்கீல்கள் எல்லாம் கூட நீதிபதியாக வந்தவுடன் அந்த நியாயஸ்தானத்தில் அமரும்போது தான் நீதிக்கு மட்டுமே தலை வணங்க வேண்டியவர்கள் என்பதை அறிவார்கள். ஒரு சினிமாவில் வசனம் கூட வந்தது. கிரிமினல் குற்றவாளிகளின் வக்கீல் காலப்போக்கில் நீதிபதியாகிறார். அவர் வாதம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பொய்யான வழக்கில் கதாநாயகன் ஜோடிக்கப்பட்டு சாட்சியாதாரத்தினால் சிறைக்குச் சென்று வருகிறான். வெளியில் வந்த பிறகு அவன் எதேச்சையாகப் பார்க்கும்போது தன்னை எதிர்த்து அநியாயமாக வாதாடிய வக்கீல் நீதிபதியாக நியமனம் ஆகிறார். இது என்ன நியாயம் என்பது அவன் கேள்வி, ஏனெனில் அந்த இருவருக்குமே தெரியும் நாயகன் அப்பாவி என்பது. அதனால் தைரியமாகக் கேட்கிறான் – அநியாயத்துக்குத் துணை போனவனிடம் நியாயத்துக்கான நீதி கிடைக்குமா?, அதற்கு அந்தப் புதிய நீதிபதி அவனைக் கருண்யோடு பார்த்துச் சொல்வார் – ‘நண்பா.. நான் வக்கீலாக இருக்கும்போது வெறும் கல்லாக இருந்தேன்.. கல் யார் கையில் கிடைத்தாலும் என்னைக் கையாளலாம். அது கல்லான வக்கீலின் தர்ம்ம கூட, ஆனால் இப்போது கல்லால் செதுக்கப்பட்ட சிலையாக, நீதிக்கு நாயகனாக எல்லோரும் மதிக்கும்படியான நிலையில் இருக்கிறேன். என்னிடம் நியாயம் கேட்டு வரும் எல்லோருக்கும் நியாயமான முறையில் நீதி கிடைக்கச் செய்ய வேண்டியதுதான் என்னுடைய தர்மம், என்பார் – (படம் – ரிக்‌ஷாக்காரன், எம்ஜீயார், மேஜர் சுந்தர்ராஜன்)

    உண்மைதான் தெய்வத்துக்கு சமானமாகத்தான் நீதிபதிகளை மக்களும் மதிக்கிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதியாக ஒருவரைத் தன் முடிவின் மறுபக்கம்’எனும் கதையில் இந்த வாரம் கொண்டு வந்துள்ளார் ஸ்ரீமதி ஸ்ரீஜா வெங்கடேஷ். நீதிபதியானவர் எப்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் விளக்குகிறார். ஒரு ‘சிஸ்டம்’ வேலை செய்யாத இந்த ஜனநாயகத் திருநாட்டில் இப்படியெல்லாம் இந்தக் கால நீதிபதிகள் சிந்தனை செய்கிறார்களே என்ற ஒரு எண்ணமும், அந்தப் பாத்திரத்தைப் படைத்த ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களைப் பாராட்டியும் இந்த வார வல்லமை விருதினை அவர்களுக்கு வல்லமைக் குழு சார்பில் வழங்கப்படுகிறது. ஸ்ரீஜா அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா::ஹ்ரிகி அவர்களின் பாஞ்சாலி சபதம் உரை வல்லமையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளை இது. நம் பாண்டியன் பாரதத்தில் வரும் கட்டத்தை பாண்டியதேசத்தில் பிறந்த பாரதி நெஞ்சை நிமிர்த்தி உரைக்கும் வரிகள்.

    பொற்கொடி சேதியர் கோமகன் வந்துதொடுத்ததும்
    உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் –

    சேதியர்கோன் (சேதிநாட்டு அரசன்) சிசுபாலன் கண்ணனுக்கு உறவு, தென்னவனோ நமக்கு உறவு,,
    தொடர்ந்து பாரதியின் அமுதத் துளிகளை அள்ளி வழங்கி வரும் ஹரிகி அவர்களுக்கு நன்றி!!

    Share
  • ஒய்யாரம்!

     பாகம்பிரியாள்
    வெளியே!
    கொட்டிலில் இருக்கும் மாட்டிற்கு
    இரு கையால் தவிட்டை அள்ளிப்போட்டு     
    அவசரமாய் போகிறான் மகன்.
    அனைத்தையும் மாடு அசை போடுகிறது!

    உள்ளே!
    நோயும், உணவு கட்டுப்பாடும்  இருப்பதால்,
    வாயைக்கட்டும் வழி வகையில்  தேடியதில்
    வந்து விழுந்தது ஓர் சிறு தட்டில்,
    வட்ட வடிவமான நாலு தவிட்டு பிஸ்கட்!

    அதை உண்ணும்  முன் நேரம் குறித்து,  
     எண்ணிக்கைகளையும்  ஓர் குறிப்பாக
    அழகாய் எழுதி வைத்ததுடன்,  கணியை
    அலசியதில் தெரிந்தது அதில் உள்ள சக்தியின் அளவு!

    ஓ!  இதுதான் தவிடு தின்பதில் ஒய்யாரமோ?
     
    படத்திற்கு நன்றி

    http://www.charlestoncitypaper.com/charleston/DishCasualFineDining/Page

    Share
  • நன்றி

        
    செழியன்

    என்
    புன்னகைக்காக   காதலித்தேன்
    என்றாய்  முதலில் .
    என்னிடத்தில் ……
    பொன் நகை
    இல்லை  என்றதும் ….என்னை
    கை விட்டாய் .
    கேட்டேன் ……..
    கஷ்டம்  என்றால்
    பொன் நகையை   அடகு வைக்கலாம்
    புன்னகையை  வைக்கமுடியாது ….என்றாய் .
    நன்றி…
    உன்னை  அடையாளம்  காட்டியதற்கு .
    நாளை ..
    நகையும்  தீர்ந்தால்
    என்னையே
    அடகு  வைக்க
    தயங்க  மாட்டாய்  என்பது
    என்ன  நிச்சயம் .
     
    படத்துக்கு நன்றி

    http://www.vectorjunky.com/praying-hands—realistic…/71175583.html

    Share
  • சங்கரா தொலைக்காட்சி – குலதெய்வங்கள்

     

    குலதெய்வங்கள்

    ஒரு கிராமத்து மக்களின் வாழ்வியலை  அறிய வேண்டுமானால், அக்க்ராமத்தில் உள்ள கோவில்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  தம் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, வழிமுறைகள் சீர் குலையாமல் இருப்பதுற்காக அமைந்ததுதான் குல தெய்வம். 

     

    தம் முன்னோரை தெய்வமாக கொண்டு கல் நட்டு  போற்றிய மனிதனின் வழிபாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு, வீட்டுக்கு என்று, காட்டுக்கு என்று தெய்வ வழிபாடு பெருகி வீட்டுத் தெய்வமாய், உயிர்த தெய்வமாய் வளர்ந்த வரலாற்றை கூறும் நிகழ்ச்சியிது.

     

    நாட்டுபுற  தெயுவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய நிகழ்ச்சி.  கள ஆய்வு மேற்கொண்டு வழிபடும் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், குல தெய்வங்கள் பற்றிய தொகுப்பு.  நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டு சடங்குகள் குறித்தும், வழிபாட்டு பாடல்களையும், தெய்வங்களின் பெயர்களையும் இணைத்து வழங்கும் நிகழ்ச்சியிது.

     

    படித்தவரை விட பாமரர் இடத்துச் செல்வாக்கு பெற்றது  குல தெய்வங்கள்.  இது அவர்கள் தொழிலோடும், ஒழுக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு

    கொண்டது.

    குல தெய்வம் பற்றிய புதுமையான நிகழ்ச்சி சங்கரா தொலைகாட்சியில் ஒளிபரப்பவிருக்கிறது .

    இந்நிகழ்ச்சியில் உங்கள் குல தெய்வமும் இடம் பெற வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டியது – mariappan@srisankaratv.net (o) 95000 52250. 

     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    tweet to @selvaragupro

    Share