தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-14)

0

முகில் தினகரன்

அவள் செல்வதையே விரக்திப் பார்வை பார்த்தபடி நின்றவன். “ஹூம்.. நியாயப்படி பார்த்தா.. எப்ப என் மைதிலி என்னைத் தூக்கியெறிஞ்சுட்டுப் போனாளோ.. அன்னிக்கே நான் உசுரை விட்டிருக்கணும்!.. ஏதோ இந்தத் தேவிக்காகத்தான் இன்னமும் உசுரோடவே இருக்கேன்!.. ப்ச்.. போகட்டுமே.. இந்த மீதி வாழ்க்கையும் அவ நன்மைக்காகவே போகட்டுமே!” தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.

அவன் முதுகுக்குப் பின்னால் வந்து நின்ற லட்சுமி, “சுந்தர்.. என்னடா நீ பாட்டுக்கு அந்தக் கிறுக்குப் பொண்ணைக் கட்டிக்கறேன்னு சம்மதம் சொல்லி அனுப்பிச்சிட்டே!.. எனக்கென்னமோ.. அவங்க பொய் சொல்றாங்கன்னு தோணுதுடா!.. சத்தியமா எந்த டாக்டரும் கல்யாணம் பண்ணி வெச்சா கிறுக்குத்தனம் போய்டும்ன்னு சொல்லியிருக்க மாட்டான்.. இவங்களா ஒரு கதை விட்டு அந்தப் பைத்தியத்தை யாராவது தலைல கட்டிவிடப் பார்க்கறாங்க!.. அதுக்கு என் பையன்தானா கெடைச்சான்?.. வேண்டாம்டா.. அநியாயமா உன் வாழ்க்கைய நீயே தொலைச்சுக்காதடா!”

“அம்மா!.. நெனைச்சது கெடைக்கலேன்னா.. கெடைச்சதை நெனச்சதா ஏத்துக்கனும்” தத்துவம் பேசினான்.

ஆற்றாமையுடன் அவனை ஏறிட்ட லட்சுமி, “ஹூம்.. எந்த நேரத்துல இவன் ஜென்மம் எடுத்தானோ?.. வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இன்னிக்கு வரைக்கும் கஷ்டங்களை மட்டுமே பார்த்திட்டிருக்கான்!.. படிக்கற வயசுல அப்பன்காரன் செத்ததினால படிப்பை விட்டுட்டுத் தறிக்குப் போனான்!.. தறில உழைச்சு உழைச்சு ஓடாய்த் தேய்ஞ்சான்!.. கூடப் பொறந்தவ கல்யாணத்துக்காக அந்தத் தறிகளையும் வித்துட்டு கூலிக்குப் போனான்!.. போதாக்குறைக்கு ஆசைப்பட்ட அத்தை பொண்ணும்..ஏமாத்திட்டுப் போயிட்டா!.. இப்பக் கடைசியா ஒரு கிறுக்கியக் கட்டிட்டுக் காலம் பூராவும் சீரழியப் போறான்!.. கடவுளே!.. இதுக்காகவா இவனுக்கு இந்தப் பிறவியைக் குடுத்தே?”

தேவியின் அண்ணன் ரேணுகாவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டான், என்கிற செய்தியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களால் நம்பவே முடியவில்லை.

“நெஜம்மாவா?.. நெஜம்மாவா?” என்று ஆளாளுக்கு தேவியைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் துளைத்தெடுத்தனர்.

“டேய்.. ரத்னம்.. எதுக்கும் நீயே ஒரு தடவை அவரைப் பார்த்துக் கேட்டுட்டு வந்திடுடா!..” என்று தேவியின் மாமியார் மகனிடம் சொல்லியனுப்ப,

அவனும் நேரில் வந்து கேட்டு விட்டுப் போனான்.

தேவியின் திருமணத்தின் போது அந்தத் திருமணத்தை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்து தாங்கள் கேட்டிருந்த தொகை பைசாக் குறையாமல் கைக்கு வந்த பிறகே நடத்தி முடித்த அதே குடும்பத்தினர் இன்று இந்தக் கல்யாணத்தை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நடத்தி முடிக்க வேண்டுமென்கிற வெறியோடு செயல் பட்டனர்.

அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே நாள் குறித்து, அவசர அவசரமாய் பத்திரிக்கையடித்து, அழைப்பு வைத்து, சுந்தரின் தலையில் அந்தக் கிறுக்குப் பெண்ணைக் கட்டி வைத்து விட்டுத்தான் ஓய்ந்தனர்.

“அடேங்கப்பா.. இவ்வளவு சடுதில ஒரு கண்ணாலத்தைப் பேசி..நடத்தி முடிச்சிட்டாங்கன்னா.. சாதனைதான்!” சிலர் வியந்து பேச,

“அது செரி.. எங்க மாப்பிள்ளை மனசு மாறி வேண்டாம்னுடுவாரோங்கற பயத்துல புயல் வேகத்துல முடிச்சிட்டாங்கப்பா!” என்றும. சிலர் கிசுகிசுப்பாய்ப் பேசினர்.

கல்யாணத்தின் போது அந்தக் கிறுக்கி பண்ணிய அட்டகாசத்தில் மண்டபமே சிரித்தது.

எந்த வித பிரதிபலிப்பும் காட்டாமல் சிலையாய் அமர்ந்திருந்த சுந்தரைப் பார்த்து விதி சிரித்தது.

அந்தக் கட்டாயக் கல்யாணம் ஒரு கலாட்டாக் கல்யாணம் போலானது.

ஆயிரம் இரவுகள் வந்து போனாலும் முதல் இரவின் முதல் அனுபவம் மட்டும் எல்லோர் மன நாக்கிலும் இறுதி வரை ஒட்டிக் கொண்டிருக்கும்.. முதல் முத்தம் போல்.. முதல் காதல் போல்!

சுந்தருக்கும் அந்த முதல் அனுபவம் வந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. ஆனால், இனிப்பாய் அல்ல!.. வெறுப்பாய்!

தாம்பத்யத்தைப் பற்றி யாரோ எதையோ அரையும் குறையுமாய்ச் சொல்லிக் கொடுத்து புத்தி சுவாதீனமில்லாத ரேணுகாவை முதலிரவு அறைக்குள் அனுப்பியிருக்க,

அவள் வந்ததும் வராததுமாய் பால் சொம்பை மேசை மேல் வைத்து விட்டு, அவன் காலடியில் அமர்ந்து ரெண்டு கால்களையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டேயிருந்தாள்.

சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த சுந்தர், தாள முடியாமல், “போதும் எந்திரிம்மா!” என்றான்.

“ம்..அதெப்படி?.. நீங்கதான் என் தோளைத் தொட்டுத் தூக்கி விடுவீங்களாம்.. ம்.. தொடுங்க.. தூக்கி விடுங்க!” என்று சொல்லி விட்டுத் தரையில் சப்பணமிட்டு அமர்ந்து “கெக்கே.. கெக்கே!” என்று சிரித்தாள்.

சுந்தர் அதை விநோதமாய்ப் பார்த்தவாறே தோளைத் தொட்டுத் தூக்கினான்.

“ம்ம்ம்.. மொதல்ல காலைத் தொட்டுக் கும்பிடணும்னு நீலவேணி அத்தை சொல்லிச்சு.. கும்பிட்டாச்சு!.. அடுத்தது என்ன?.. மறந்திடுச்சே!” தலையை “வறட்.. வறட்”டென்று சொறிந்தபடியே யோசித்த ரேணுகா,

“ஆங்!.. ஞாபகம் வந்திடுச்சு!.. பால் குடுக்கணும்!..” என்றவாறு ஓடிச் சென்று பால் சொம்பை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கி அவன் குடிக்கக் குடிக்க பாதியில் “படக்”கென்று பிடுங்கி, “மீதியை நான் குடிக்கணுமாம்.. நீலவேணி அத்தை சொல்லியிருக்கு!” என்றபடியே அவசர அவசரமாய் மார்புச் சேலையிலெல்லாம் சிந்திக் கொண்டு குடித்து விட்டு.

மீண்டும் “கெக்கே.. கெக்கே!” என்று சிரித்தாள்.

வெறுத்துப் பொனான் சுந்தா;. “கடவுளே!.. காலம் பூராவும் இது கூட எப்படி நான் காலந் தள்ளப் போறேனோ?”

குதித்து கட்டிலின் மீது ஏறி நின்று, “தொபீர்”ரென்று சப்பணமிட்டு அமர்ந்தவள், “அய்ய்யோ.. .அப்புறம் என்ன சொன்னாங்க.. மறந்து போச்சே!.. .ம்ம்ம்.. ஏங்க மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா?.. தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிக் குடுக்கறீங்களா?”

“தெரியாது” என்று சொல்லி விட்டுத் திரும்பி தலையிலடித்துக் கொண்டான் சுந்தர்.

“அப்படின்னா.. நான் போயி நீலவேணி அத்தைகிட்ட நல்லாக் கேட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டு கட்டிலிலிருந்து குதித்திறங்கி, கதவருகே சென்றவளை ஓடிப் போய்த் தடுத்தான் சுந்தர்.

“ஏய்..ஏய்..என்ன இது?.. வெளியில போகாதே!.. அவங்கெல்லாம் இன்னேரம் தூங்கியிருப்பாங்க!” என்றபடி சுந்தர் அவள் தொளைத் தொட்டு திருப்பிய போது,

“அய்.. ஞாபகம் வந்திடுச்சே!.. ”என்றவள் அவன் எதிர்பார்க்காத விநாடியில் அவன் கன்னத்தில்.. மூக்கில்.. வாயில்.. தாடையில்.. .என மாறி.. மாறி முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

“அய்யய்யோ.. யாரந்த நீலவேணி அத்தை.. அவ இன்னும் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்து அனுப்பியிருக்காளோ தெரியலையே!.” சுந்தர் தர்ம சங்கடத்தில் நெளிந்த போதுதான் அது நடந்தது.

 

(தொடரும்)

படத்திற்கு நன்றி: http://www.tamilnow.com/gallery/tamil-nadu/dakshina-chitra/tamil-marriage.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *