நோபெல் திருவிழா ~1
இன்ன்ம்பூரான்
2012 வருட நோபெல் பரிசு திருவிழா இன்று தொடங்கியது. இனி சில நாட்களுக்கு, நாள்தோறும் களைகட்டும். வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இவ்வருட பரிசுகளிலிருந்து ஆரம்பித்து, நோபெல் மஹாத்மியத்தை, சுருக்கமாக, கூறுவதாக உத்தேசம். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்கு விஷயம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று ஒரு அசரீரி கூறுகிறது. வாசகரோ ரக்ஷது.
இவ்வருட மருத்துவ/உடலியல்(Physiology or Medicine) பரிசு இருவருக்கு: டாக்டர் ஸர் ஜான் பி.கார்டன் (கேம்ப்ரிட்ஜ்: இங்கிலாந்து) & டாக்டர் ஷின்யா யாமானகா (க்யோட்டோ: ஜப்பான் & க்ளாட்ஸ்டன் நிறுவனம், சான் ஃப்ரான்சிஸ்கோ) மூன்றாவது பங்கு கொடுக்கப்படவில்லை. முன்னோடிகளான ஜேமி தாம்சனையும், ரூடி ஜேய்னிஸ்சையும் ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வரும் முன் காப்போன் சிக்கனமாக இருக்கலாம். காலம் கெட்டுக்கிடக்கிறது அல்லவா! இந்த பரிசுகளிலேயே ஐந்தில் ஒரு பங்கு குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். வட்டி வருமானம் மிகவும் குறைந்து விட்டதாம். பரவாயில்லை. அப்படி குறைந்தாலும், பரிசின் மதிப்பு $ 1.2 மிலியன்.
ஸர் ஜான் தான் செயற்கையாக உயிரூட்டும் வித்தையின் தந்தை. முதல் படைப்பு ஒரு தவளை. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு, (1962: டாக்டர். யாமனாகா பிறந்த வருடம்) இப்போது பரிசு. அவர் இன்றைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.
ஸர் ஜானின் தவளை வந்த விதம் விந்தை. அவர் போட்டது ‘தூபம்’. தாந்தோன்றியாக வளர்ந்தது, தவளை, சுருக்கமாக சொன்னால். அது எப்படி நேர்ந்தது என்பது புரிய 44 ஆண்டுகள் பிடித்தன. 2006ல், டாக்டர் யாமானகா எலிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு, அந்த தவளை வளர்ந்த விதத்தின் சூட்சுமத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அந்த நான்கு மரபணுக் கண்ட்ரோல் புரதங்கள் (Myc, Oct4, Sox2 and Klf4.). அவை வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றும் பணியை செய்தன. இது ஒரு விஞ்ஞானப் புரட்சி.
ஒரு வேடிக்கையான கொசுறு தகவல்: ஸர் ஜானின் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் அவருக்கு சுட்டுப்போட்டாலும் விஞ்ஞானம் வராது என்று கொளுத்திப் போட்டார்! அந்த ஜான் சிறுவனும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ஆழ்ந்து விட்டான். இருந்தாலும், வண்ணத்துப் பூச்சிகளின் வண்ண அழகில் மனதை பறி கொடுத்து,1956ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புழு, பூச்சி ஆராய்ச்சியில் புகுந்தார். விஞ்ஞானத்தின் அறைகூவல் அவ்வாறு அவரை பிடித்திழுத்து வைத்துக்கொண்டது.
டாக்டர் யாமனாகோ ஒரு எலும்பு டாக்டர். டாக்டர் வேலை தனக்கு ஒவ்வாது என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்ட அவர் தன் திறனை இந்தப்பக்கம் திருப்பினார். அமெரிக்கா வந்தார். சாதனை படைத்தார். அவரை ஊக்குவித்தது, டாக்டர் சுசுமு டோனெகவா என்ற மற்றொரு நோபலர் (1987). அவரைப் பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. நோபெல் பரிசு வந்த விதமே ஒரு காதை. இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
ஸர் ஜான் கர்டனுக்கும், டாக்டர் யாமனாகோ அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.
(தொடரும்)
இன்னம்பூரான்