Blog

  • குறளின் கதிர்களாய்…(517)

    குறளின் கதிர்களாய்…(517)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(517)

    யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.

    -திருக்குறள் -895(பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்…   

    ஆற்றல் மிக்க
    அரசனின் சினத்துக்கு
    ஆளானவர்
    அவனிடமிருந்து தப்பிக்க
    அவனியில்
    எங்கு சென்றாலும்
    ஆகிறார்
    உயிர் பிழைக்க
    இயலாதவராய்…!

    குறும்பாவில்…

    ஆளும் அரசனின் சினத்திற்கு
    ஆட்பபட்டோர் அதிலிருந்து தப்பிக்க எங்கு
    சென்றாலும் உயிபிழைக்க இயலாதவரே…!

    மரபுக் கவிதையில்…

    ஆற்ற லுடனே நாட்டினையே
    ஆளும் வல்ல அரசனவன்
    சீற்றம் கொள்ளும் வகையினிலே
    சீண்டி விட்ட ஒருவர்தான்,
    ஆற்றா அச்சம் கொண்டேதான்
    அதனில் நின்றும் தப்பிக்க
    மாற்ற மாக எங்குபோயும்
    மண்ணில் வாழ இயலாரே…!

    லிமரைக்கூ…

    ஆள்வான் சிறப்பாய் நாட்டை,
    அவ்வரசன் சினமுற வைத்தோர் எங்கொளித்தும்
    அடைவார் உயிரிழக்கும் கேட்டை…!

    கிராமிய பாணியில்…

    ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
    தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
    ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு..

    நல்ல மொறயில
    நாட்ட ஆளுற ராசாவே
    கோவிச்சிக்கிற அளவு நடந்தவன்,
    பயந்து
    தப்பிச்சி எங்க போனாலும்
    அவனால
    உயிரோட இருக்கமுடியாதே..

    அதுனால
    ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
    தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
    ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு…!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    அன்பான வாசகர்களுக்கு, அன்பு வணக்கங்களுடன் அடுத்தொரு மடலோடு உங்கள் மத்தியில் வருவதில் மகிழ்கிறேன்.

    அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலைகளிலும் தினமும் ஏதோவொரு நாடகம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது.

    இங்கிலாந்து மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன ?

    எனது கடந்த மாத மடலுக்கும் இந்த மடலுக்குமிடையில் பல அரசியல் அதிர்வுக் காட்சிகள் இங்கிலாந்து மேடையிலே அரங்கேறி விட்டன.

    அது என்ன அதிர்வுகள் ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுந்திருக்கும்.

    பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி எனும் அரசியல் கானகத்தில் அடைபட்டுக் கிடந்தது தொழிற்கட்சி.

    தொடர்ந்து  தேர்தல் வெற்றிகளை சந்தித்து அரச அதிகாரத்தில்  12 வருடங்களாக இருந்தது கன்சர்வேடிவ் கட்சி.

    அவர்களின் அரசியல் ஆணவம் மக்களின் வாழ்வாதாரச் சிக்கலைச் சிக்கும் வழிகளை கண்டறிய விடவில்லை.

    அவ்விரக்தி மக்கள் மனதிலே கொடுத்த மாற்றம் லேபர் கட்சியை அதீத பெரும்பான்மை பலத்துடன் அரச கட்டிலில் அமர்த்தியது.

    இதுவெல்லாம் நீங்கள் அறிந்ததே !

    ஆனால் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து தொழிற் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

    ஏனேனில் அதிரடியான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு ஏதுவான ஒரு பொருளாதார ஸ்திர நிலையை வெளியேறிய கன்சர்வேடிவ் கட்சி விட்டுச் செல்லவில்லை.

    விளைவு !

    பொருளாதார ஸ்திரத்தை ஏற்படுத்த  மக்களுக்கு அதிருப்தி அளிக்கக்கூடிய சில கடினமான பொருளாதார நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அரச அதிகாரத்திலுள்ள தொழிற்கட்சிக்கேற்பட்டது.

    அதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஒரு அரசின் பிரதமர்களில் மிக வேகமாக செல்வாக்கு சரிவைச் சந்தித்த முதலாவது பிரதமர் எனும் சாதனையை தனதாக்கிக் கொண்டார் நமது பிரதமர் கியர் ஸ்டாமர்.

    அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை எனது அரசின் பதவிக்காலமான 5 வருட முடிவில் என்னைப் பற்றியும் எனது அரசின் கொள்கைகள் பற்றியும் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் பிரதமர்.

    இதனிடையே பலகாலமாக இங்கிலாந்து அரசுக்கு தலையிடியாக இருந்துவருவது வெளிநாட்டவரின் அரசியல் தஞ்சம் கோரும் சட்டவிரோத குடியேற்றம்.

    குறிப்பாக பிரெஞ்சு நாட்டிலிருந்து கள்ளத்தோணியில் இங்கிலாந்துக் கால்வாய் வழியாக உள்ளே நுழையும் வெளிநாட்டுகாரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இங்கிலாந்தில் தீவிர வலதுசாரக் கொள்கையுடைய கட்சிகளின் கூக்குரல் இங்கிலாந்தின் பொருளாதர , வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய குடியேற்றமே காரணம் என்று கூவியது.

    மக்களின் கருத்துக் கணிப்புகளும் இங்கிலாந்தின் வெளிநாட்டவரின் குடியேற்றம் பற்றிய சர்ச்சையின் எதிரொலியாகவே இருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ப்ரசாரம் செய்து வெற்றி கண்டவர் நைஜல் வராஜ் .

    இப்போ இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக் கட்சி  Reform Party எனும் கட்சியின் தலைவராக கடந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டி பாரளுமன்ற எம்.பி ஆக உள்ளார்.

    இவர் அமேரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் ஆதரவாளர்.

    ட்ரம்ப் அவர்களின் பரிபூரண ஆதரவும் இவருக்கு உண்டு.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் சூழலில் கன்சர்வேடிவ் கட்சியையே இவர் இல்லாமல் ஆக்கி விடுவாரோ எனும் வகையில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    இந்த சூழலில் தான் இம்மாத ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் இடம் பெற்றது.

    இதுவரை இங்கிலாந்து அரசியல் மேடை கண்டிராத மிகபெரிய அதிர்வலைகளை இத்தேர்தல்கள் ஏற்படுத்தியது.

    ஆமாம் இதுவரை இங்கிலாந்து தேர்தல்களம் சந்தித்திராத ஒரு புதுவிதமான முடிவை அள்ளி வீசியது.

    காலகாலமாக இங்கிலாந்து தேர்தல் களத்தில் அதிமுக்கிய கட்சிகளாக விளங்கிய கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி இரண்டு கட்சிகளுமே அதிர்ந்து போகக்கூடிய வகையில் நைஜல் வராஜ் அவர்களது ரிபோர்ம் கட்சி Reform Party அதிக அளவிலான கவுன்சில்களையும், கவுன்சிலர்களையும் பெற்று பெருவெற்றி ஈட்டியுள்ளது.

    கன்சர்வேடிவ், லேபர் இரண்டு கட்சிகளுமே அத்திவாரத்தில் ஆட்டம்.கண்டுள்ளன.

    இங்கிலாந்தில் இதுவரை நடந்து வந்த இரு கட்சி ஆட்சிமுறை மாற்றம் காணப்போகிறதோ எனும் ஐயப்பாடு முதற்தடவையாக அரசியல்.அவதானிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

    இதன் பிரதிபலிப்பு இதுவரை லேபர் கட்சி பிரதமராக இருக்கும் ஒருவரிடமிருந்து எதைக் கேட்க முடியாது என்று எண்ணிருந்தார்களோ அதைக் கேட்கும்படியாகி அவர்களின் நம்பிககைக்கு ஒரு பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.

    இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களில் பெரும்பான்மையோர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்று ஆராயும் நிலைக்குக் கட்சிகளைத் தள்ளியுள்ளது.

    காலகாலமாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்வைக்கும் லேபர் கட்சியின் தலைவர் வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய வருகையால் இந்நாட்டு மக்கள் தம் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் எனும் தாழ்வு மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.

    இதுவே ஒரு லேபர் கட்சித் தலைவர் முதன்முறையாக வெளிநாட்டவரின் வருகைக்கு எதிராக பேசிய முதல் பேச்சு என்று அரசியல் மட்டத்தில் கருதப்படுகிறது.

    அதிரடியாக வெளிநாட்டவருக்கு கொடுக்கும் பணிகளுக்கான விசா , மற்றும் மாணவர்களுக்கான விசா ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன.

    இதைத்தான் கவியரசர் ” மாற்றம் ஒன்றே மாறாதது ” என்று கூறியிருந்தாரோ ?

    சரி இனி எமது பிரதமர் நாட்டின் பொருளாதாரச் சீரமைப்புக்காக எடுத்த நடவடிக்கைகளைப் பார்ப்போம்

    வெளிநாட்டு வர்த்தக உடன்பாடுகள் பலவற்றை பிரதமர் கியர் ஸ்டாமர் எட்டியுள்ளார்.

    அவரது இணக்கப்பாடுகள் இந்தியா , அமேரிக்கா , மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பனவற்றுடன் எட்டப்பட்டுள்ளன.

    இது எமது பிரதமரின் சர்வதேச அளவிலான நிலையினை ஸ்திரப்படுத்தியுள்ளது எனும் கருத்துக்கு வலுச் சேர்க்கிறது.

    குறிப்பாக அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் எமது பிரதமர் ஸ்டாமருக்கும் , அதிபர் ட்ரம்ப்புக்குமிடையிலான உறவைப்பற்றி  எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    ஆனால் பிரதமர் கியர் ஸ்டாமர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமேரிக்காவுடனும் , அதன் அதிபருடனும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.

    அடுத்து யூக்கிரேனுக்கும், ரஸ்யாவுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு கியர் ஸ்டாமர் பக்கபலமாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறது.

    சமீபத்தில்.பாலஸ்தீன)ன் பகுதியான காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகளைக் கண்டித்து மிகவும் காரசாரமான ஒரு செய்தியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து சார்பில் கியர் ஸ்டாமர் விடுத்துள்ளார்.

    இந்த ஒருமாத காலத்துக்குள் பல காட்சிகள் அரங்கேறியுள்ளன இவை இனிவரும் நாட்களில் எமது அரசியல் அரங்கில் மேடையேற்றப்போகும் காட்சிகளை அடுத்த மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    Share
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    அண்ணாகண்ணன்

    நள்ளிரவு 2.40 மணி. தாகத்தால் விழித்தேன். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தேன். அப்போது திடீரென இந்த வரி, நினைவுக்கு வந்தது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. இதில் முன்னிலை, படர்க்கை சார்ந்து ஒரு சிக்கல் இருப்பது போல் தோன்றியது.

    பாடல் முழுவதும் முன்னிலையில் இருக்க, ஒளித்து என்பது மட்டும் படர்க்கையில் இருக்கிறது. பிறந்து, வளர, பிழைப்பித்து, நெருப்பென்ன நின்று, உன்னை, பறைதருதி எனப் பெரும்பாலும் முன்னிலையாகவே இருக்கின்றன. ஒளித்து என்பது மட்டும் படர்க்கையாக இருக்கிறது. அதாவது, இந்த இடங்களில் எல்லாம் அவர் தாமாகவே செய்கிறார். ஒளித்து என்பதில் மட்டும் இன்னொருவர் வந்து ஒளித்து வைக்கிறார்.

    இங்கே, ஒளித்து வளர என்பது சரியாக ஒட்டவில்லை. ஒன்று, ஒளிந்து வளர என இருக்க வேண்டும். அல்லது, ஒளித்து வளர்க்க என இருக்க வேண்டும். ஒளித்து வளர என்கிற போது, வசுதேவர் வந்து ஒளித்து வைக்கிறார். ஆனால், கண்ணன் தானாகவே வளர்கிறான், யசோதை வளர்க்கவில்லை எனப் பொருள் தோன்றுகிறது.

    ஆண்டாள், ஒளித்து வளர என எழுதியது சரிதானா? உங்கள் கருத்து என்ன?

    Share
  • மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
    மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
    முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
    மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
    கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
    கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
    மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
    மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

    நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
    நலம்சேர் கோவைப் பதிவாழ்க
    முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
    முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
    பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
    புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
    அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
    அணிசேர் கோவைப் பதிவாழ்க

    வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
    வளம்சேர் கோவைப் பதிவாழ்க
    செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
    செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
    இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
    எழில்சேர் கோவைப் பதிவாழ்க
    குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
    குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

    – அண்ணாகண்ணன்

    Share
  • தண்ணீரும் காவிரியே!

    தண்ணீரும் காவிரியே!

    தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
    மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
    அம்பொற் சிலம்பி அரவிந்தத் -தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு!

    இது கம்பர் தொடங்கி, ஒளவையார் முடித்த பாடல். முதலிரண்டு அடிகளைக் கம்பரும் அடுத்த இரண்டு அடிகளை ஒளவையாரும் பாடினார்கள் எனக் குறிப்பு இருக்கிறது.

    தண்ணீர் என்றால் அது காவிரிதான். வேந்தன் என்றால் சோழன்தான் எனப் போற்றும் பாடல். அடுத்த அடியில், மண்ணாவதும் சோழ மண்டலமே என்பதற்கு மண் என்றால் அது சோழ மண்டலம்தான் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இதன் இன்னொரு பொருளை எண்ணித் துணுக்குற்றேன். மண்ணோடு மண்ணாவது என்றால் அது சோழ மண்டலம் என்ற பொருளும் இருக்கிறது. சோழன் மீது இருக்கும் காழ்ப்பில், பாண்டியர், சேரர் யாரேனும் இப்படி வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிவிட்டார்களா?

    Share
  • 16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    வல்லமை மின்னிதழ், 15 ஆண்டுகளை நிறைவுசெய்து 16ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தமிழின் முதல் மின்னிதழ். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. தொடர்ந்து நடுநிலையுடன் படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

    இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வல்லமை, 19,831 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,949 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    Share
  • வாழ்க்கை ஒரு வட்டம்  

     

    வாழ்க்கை முழுவதும் பணம், பதவி, செல்வாக்கு என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு தருணத்தில் சற்று நின்று மூச்சுவிட நேரம் கிடைத்தபோது அவர் மனதில் மிகப்பெரிய வினா ஒன்று எழுந்தது. என்னதான் நேர்மையாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் தம் இறுதிக்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் எவருக்கும் இருப்பது இயல்புதானே? அப்படித்தான் அவருக்கும் அப்படியொரு ஐயம் எழுந்துவிட்டது. அதாவது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு எதிலெல்லாம் அதிகம் ஈடுபாடு இருக்கும்? சொத்து, குடும்பம், ஆரோக்கியம் அல்லது சமுதாயம் – இவற்றில் எதன் மீது அதிக நேசம் ஏற்படும் என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது. யாரிடம் போய் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது என்று வெகு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அன்று தம் ஊருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சென்று சந்திக்கிறார். தன்னுடைய ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அந்த மகானிடம் சென்று தன்னுடைய வினாவை முன்வைக்கிறார்.

    அந்த மகானும் புன்னகையுடன், “உனக்கு குழந்தை இருக்கிறதல்லவா? அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைன்னு சொல் பார்க்கலாம் ” என்று அவரையே திருப்பிக் கேள்வி கேட்டார்.

    சற்று யோசித்தவர், வயிற்றுக்கு உணவு, பாதுகாப்பான தாயின் மடி அல்லது தந்தையின் தோள், அன்பு, பாசம், விளையாட்டு போன்றவையைத் தவிர பெரிதாக வேறு ஒன்றுமிருக்காதே என்றார்.

    உடனே அந்த மகான், வாழ்க்கை என்ற இந்த வட்டத்தில் முதலும், முடிவும் ஒன்றுதான். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் அந்த ஆரம்பக்கட்டத் தேவைகளைத் தவிர வேறு தேவைகள் ஏதுமிருக்காது. உணவு, தண்ணீர், மருந்துகள், வசதி, அன்பானவர்களின் பாசமும் அவர்களின் அருகாமையும் மட்டும்தான் அவர்களின் தேவையாக இருக்கும். ஆடம்பரம், பகட்டு, செல்வம், சொத்துபத்துகள், வங்கி இருப்பு, நகைகள், ஈகோ, ஆசைகள், சமூகம் போன்ற வெறும் மாயையாக இருந்த அனைத்தும் எண்ணங்களிலிருந்து மறைந்துவிடும் என்றார்.

    அப்படியானால் பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கும் எந்த வேறுபாடுமே இல்லையா சாமி’ என்று மீண்டும் கேட்டதற்கு அவர்,

    ‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யப்போகும் ஒருவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன தெரியுமா?

    அதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் தாம் பெற்ற அமைதியும், மன நிறைவும் தரும் ஒரு சில நேசத்துக்குரிய நினைவுகள் மட்டுமே பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளவருக்குமான வேறுபாடு’ என்றார்.

    அந்த மகான் சொன்னதைக் கேட்டவரின் மனதில் ஏதோ பொறிதட்ட ஊர், உலகம் ஆயிரம் சொல்லலாம், பெற்ற மனம் பித்தானாலும், பிள்ளை மனம் கல்லாகாது. தெளிவுபடுத்திய மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவர், தன் வாழ்க்கை வட்டத்தின் அடுத்த கட்டத்தை எண்ணியபடியே நகர்ந்தார்.

     

    Share
  • குழந்தையின் பெயர் (சிறுகதை)

    குழந்தையின் பெயர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”

    “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.

    முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.

    “கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.

    “அதேதான்!”

    “அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”

    அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?

    கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.

    “MGR வாத்தியாரா?”

    “இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.

    “எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.

    “ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.

    “சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”

    மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?

    “நடராஜன்?”

    “சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”

    `இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.

    அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.

    சுவாரசியமாக இருந்தது கதை.

    “எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.

    “ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.

    சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.

    “முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!

    “சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”

    அவன் மௌனமாக இருந்தான்.

    “வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.

    அவன் வாயே திறக்கவில்லை.

    அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”

    “சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?

    “ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”

    அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.

    மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.

    “ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.

    “எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.

    “அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”

    “எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.

    “அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    “அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.

    மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’

    Share
  • பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    அண்ணாகண்ணன்

    சென்னையிலிருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பலுசிஸ்தான். அங்குப் பேசப்படும் பிராகுய் (பிராஹுய்) என்ற மொழியை, அழியும் நிலையில் உள்ள மொழியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பிராகுய், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் நாம் சொல்லும் அரிசி, பால் போன்ற சொற்கள், இதே பொருளில் பிராகுய் மொழியிலும் உள்ளன. இங்கு நாம் வா என்பதை, அவர்கள் பா என்கிறார்கள். இங்கு நாம் ஊர் என்பதை அவர்கள் உரு என்கிறார்கள். நாம் இரண்டு, மூன்று என்று சொல்வதை அவர்கள் ஈரத், மூசித் என்கிறார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழ் நாகரிகம் என்ற கூற்றுக்கு இவை வலுச் சேர்க்கின்றன.

    பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலம், பலுசிஸ்தான். இங்கு சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கின்றனர். பலூச் விடுதலைப் படை, கடந்த 25 ஆண்டுகளாகத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறது. மனித உரிமை மீறல், அடக்குமுறை போன்ற காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறது. இப்போது, தங்களைப் புதிய நாடாக ஐ.நா. அமைப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ் வேர்களைக் கொண்ட பலுசிஸ்தான், தனி நாடு ஆவதை வரவேற்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, இந்தியாவின் நட்பு நாடாக, சுதந்திர பலுசிஸ்தான் மலரட்டும். சமூக, சமய நல்லிணக்கத்துடன், அமைதியும் வளமும் வளர்ச்சியும் செழிக்கும் நாடாக, தனித்த மொழி, மரபு, பண்பாட்டு அடையாளங்களைத் தக்க வைத்து, இந்துஸ்தானின் சகோதர நாடாக எழுக பலுசிஸ்தான்.

    #Balochistan #BLA #Pakistan #India #operationSindoor #Brahui #Brahvi #Brohi

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    அன்பினிய வல்லமை வாசக இதயங்களே !

    உங்களனைவருடனும் மீண்டும் ஒரு மடல் மூலம் இணைவதில் மகிழ்கிறேன்.

    இங்கிலாந்தின் நிகழ்வுகள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    எமது பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பது ஒருபுறமிருக்க சர்வதேச நாடுகளின் அரசியல் நகர்வுகளின் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில் இங்கிலாந்து நாடு இருக்கிறது.

    குறிப்பாக யூக்கிரேன் , ரஸ்ய நாட்டுப் போரும் அதன் முன்னெடுப்புகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் நிலைப்பாட்டின் பக்க விளைவுகள் இங்கிலாந்துப் பிரதமருக்கு சங்கடத்தை விளைவித்தது.

    ஆனால் சங்கடங்களில் சில சாதுரியங்களும் கிடைக்கும் சாத்தியக்கூறும் உள்ளதல்லவா ?

    அது என்ன என்கிறீர்களா ?

    இங்கிலாந்தின் உள்நாட்டு பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கும் பொருட்டு பல சிக்கலான பொருளாதார திட்டங்களை முன்வைத்ததால் செல்வக்கு சரியக் கண்டார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

    அந்நேரம்தான் அதிபர் ட்ரம்ப்பின் யூக்கிறேன் ரஸ்யப் போரின் மீதான திருப்பங்களின் தாக்கம் ஐரோப்பாவின் மீது விழுந்தது.

    ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், அமேரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலைச் சமாளிக்கும் பாலமாகச் செயற்படத் தலைப்பட்டார் கியர் ஸ்டாமர்.

    யூக்கிறேன் நாட்டிற்குச் சார்பாக செயற்பட்டு வந்த அமெரிக்க அரசியல் போக்கை மாற்றிய ட்ரெம்ப்பின் தாக்கம் ஏற்படுத்திய இடைவெளியை சமப்படுத்த இணக்கமுற்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் தலமைப் பொறுப்பை கியர் ஸ்டாமர் ஏற்றார்.

    சரிந்து கொண்டிருந்த அவரது அரசியல் செல்வாக்குக்கு முட்டுக் கொடுப்பது போல் அவர் மீது மக்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

    அதேநேரம் அமெரிக்க அதிபர் ஏற்படுத்திய இறக்குமதி வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட உலகச் சந்தையின் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய ஒரு அரசியல் அவசியம் ஏற்பட்டது.

    அந்த நிலையில் அமெரிக்க அதிபருடனான உறவினை மிகவும் மென்மையான ஒரு போக்கில் எமது பிரதமர் அணுகிய முறை அவரது கட்சியில் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகளிலும் அவருக்கு ஓரளவு ஆதரவை கொடுக்கும் ஒரு நிலையைத் தோற்றியுள்ளது.

    அடுத்து பிரித்தானிய இரும்பு ஆலையின் நிலை பெரிய செய்தியாகியது.

    பிரித்தானியாவின் தொழிற்சாலைகளில் பெயர் பெற்றிருந்த பிரித்தானிய இரும்பு ஆலை பிரித்தானிய தொழிலதிபர்களிடமிருந்து சீன முதலீட்டாளர்களின் கைவசத்திலிருந்தது.

    அவ்வாலை இலாபகரமானதாக இல்லாமல் நட்டத்தில் ஓடுகிறது என்பதால் அதனை மூடப்போவதாக அதன் சீன முதலீட்டாளர்கள் அறிவித்தார்கள்.

    பிரித்தானியாவின் அடையாளமாக கால காலமாக ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலை மூடப்பட்டால் அதனால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் கணக்கிலடங்கா

    அதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் அவசரச் சட்டத்தை அமுல் படுத்தி அவ்வாலையை தேசிய உடமையாக்கி அத்தொழிற்சாலையை உடனடி மூடுதலிலிருந்து காப்பாற்றியுள்ளது.

    பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையும் அனைவரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது.

    அதிகாரத்திலிருக்கும் பிரித்தானிய அரசுகளுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கும் பிரச்சனையாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரெஞ்சுக் கரையிலிருந்து நுழையும் “படகு அகதிகள்” இருந்து வருகிறார்கள்.

    இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்ப்பதற்கான பலவித நடவடிக்கைககை அரசு முடுக்கி விட்டாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

    அதற்கான லேபர் அரசின் முக்கிய நகர்வுகள் கொடுக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கியபடி அரசியல் அவதானிகள்.

    அடுத்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை பாரிய மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.

    சிலகாலமாகவே இங்கிலாந்தின் சுகாதார அமைச்சு பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

    மருத்துவர் பற்றாக்குறை , தாதிகள் பற்றாக்குறை, மனநோய் பிரிவுகளுக்கான சேவைகளின் பற்றாக்குறையென பல குறைபாடுககௌச் சந்தித்தது.

    சுகாதார அமைச்சர் பல மாதங்களாக நடாத்திய ஆய்வுகளின் பின்னர் தேசிய சுகாதார சேவையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

    தற்போதைய கட்டமைப்பின் கீழ் ஒரே நடவடிக்கைகள் பல பிரிவுகளினால் பல தடவைகள் மேற்கொள்ளப்படுவதால் தேவைக்கதிகமான உத்தியோகத்தர்களுடன் , அளவுக்கதிகமான நேரம் செலவிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

    நோயாளிகள் சிகிச்சை பெறுவது இலவசமாகவே நடைபெறுவது என்பதை இன்றுவரை கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது.

    ஆனால் இச்சேவையைபிதே கொள்கையில் தொடர்ந்தும் கடைப்பிடிக்க இத்தகைய மாற்றம் அவசியமானது என்கிறார் சுகாதார அமைச்சர்.

    மருத்துவசேவை பிரித்தானியவாசிகளுக்கு இலவசம் என்றாலும் உல்லாசப் பிரயாணிகளாக வருவோரும், பிரித்தானியவாசிகளாக அல்லாதோரும் கட்டணம் அறவிடப்படுவார்கள் என்பது சிலகாலங்களின் முன்னாலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

    கடந்த கன்சர்வேடிவ் கட்சி அரசிலிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தம் லேபர் கட்சி தேர்தல் வெற்றி பெற்று அரசமைத்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

    அங்கு மீண்டும் ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. மருத்துவ பதவிகளில் அதியுயர் பதவியான மருத்துவ விசேடத்துறை நிபுணர்கள் தமக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததினால் தாம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

    அந்த முனைப்பில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சி அரசுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

    அவர்கள் பொருளாதாரத்தைச் சீராக்கவென்று எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கப் போகிறதா இல்லையா என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கத் தொடங்கப் போகிறது.

    இந்த இடைவெளியை அரசியல் , பொருளாதார விமர்சகர்கள் , நிபுணர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    லேபர் அரசாங்கமும் , அக்கட்சியின் தலைமைத்துவமும் தம் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

    பொதுமக்களாகிய நாம் இப்புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி பதவிக்கு வந்தவ்ர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் நம் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்று அதை நோக்கிய கணிப்பிலிருக்கிறோம்.

    அதேநேரம் சர்வதேச அரங்கில் அமெரிக்க நாட்டின் தலைமைத்துவம் கொண்டுவரும் அதீத மாற்றங்கள் ஏற்படுத்தும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தப்போகும் மாற்றங்களின் விளைவு என்ன ?

    நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்களை தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று சூளுரைத்து பதவிக்கு வந்த அதிபர் ட்ரம்ப் நூறு நாட்களாகியும் எந்தப் போரையும் நிறுத்த முடியாமல் தவிக்கிறார்.

    அமெரிக்கா , சீனாவுக்கெதிரான வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டு பல நாடுகள் அல்லாடுகின்றன.

    மியான்மார் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இயற்கையின் சீற்றம் காவு கொண்ட உயிர்கள் ஆயிரமாயிரம்.

    ஆக மொத்தம் விடையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் சில வினாக்களின் விடைகளையாவது அடுத்த மடலில் பகிர முடியுமா பார்ப்போம்.

    Share
  • தொல்காப்பியம்

    தொல்காப்பியம் யாருடைய அவையில் யார் முன் அரங்கேறியது?

    தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு முதன்முதலில் மாற்றியவர் மழவை மகாலிங்க ஐயர்.

    நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்ற மன்னனது அவையில், அதங்கோட்டாசான் என்பவர் முன்னிலையில் அரங்கேறியதாக பாயிரம் கூறுகிறது. தொல்காப்பியர் பற்றி பனம்பரனார்,  ‘ஐந்திரம்’ என்ற நூலை நன்கு கற்ற புலவர் என்றும், பல்புகழ் நிறைத்த படிமையாளர் என்றும் புகழ்கிறார்.

    Share
  • பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

    “நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.

    “நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.

    கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”

    “பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”

    “என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.

    “நீ அப்படி என்ன பண்ணினே?”

    “நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.

    “`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”

    தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ,  “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”

    கங்கா மௌனம் சாதித்தாள்.

    அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”

    “அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..

    அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

    `அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!

    “இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.

    அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.

    G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?

    அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.

    படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?

    அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!

    “ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.

    `என்ன நடக்கிறது இங்கே?’

    ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.

    அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.

    “நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.

    அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”

    “நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”

    “அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”

    “யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.

    வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.

    “ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.

    அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.

    “ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.

    “ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”

    “கௌரிசங்கர்”.

    G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.

    இது என்ன பைத்தியக்காரத்தனம்?

    `வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன்  இருக்கிறாரோ!

    “மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.

    ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

    “மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.

    “எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.

    ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!

    தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.

    அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.

    “பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.

    `இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.

    “இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”

    அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.

    `நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?

    `எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.

    துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?

    இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?

    இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.

    சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.

    “என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”

    “எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.

    அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.

    தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.

    கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.

    வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.

    `அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.

    `அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’

    அம்மா என்ன சொல்வாள்?

    `கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.

    அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!

    வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.

    “எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.  `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    Share
  • தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து.
    விசுவ(வா)வசு

    சத்தியமணி 14 04 2025
    ராகம். ஆனந்த பைரவி

    பிறந்தாளே பிறந்தாளே சித்திரை பூமியில்
    விஸ்வவசு பெயரோடு தான்
    மலர்ந்தாளே தவழ்ந்தாளே நித்திரை எழுப்பியே
    விசுவாசம் மணம்வீசும் தான்

    திங்கட் கிழமை திவிதியை நன்னாளில்
    மங்களம் பொங்கிவர நம்வாசல் வந்தாள்
    அங்கம் மினுக்கும் தங்கம் அணிந்து
    சுவாதியில் சிற்றாடைப் பெண்ணாய் நுழைந்தாள்
    தெய்வங்களும் அருள் கூட்டுமே
    முன்னோர்களின் வரம் சேருமே
    இந்நாளும் எந்நாளும் இன்பங்களே

    வச்சிரம் யோகம் சைதுளைக் கரணமாய்
    அச்சிராப் பள்ளி பிள்ளையும்
    தடை போக்குவார்
    மெச்சிப் புகழும் உச்சி குளிரும்
    அன்போடு சுற்றமும்
    களிப் பூட்டுவார்
    மயிலோடு வேல் சிவனாருமே
    உமையோடு ஏழு மலையானுமே
    திருமகள் இல்லத்தில் அமர்ந்தார்களே

    Share
  • கூடா நட்பு

     

     

    கூடா நட்பு

     

    இந்த ஆண்டும் வழக்கம் போல பள்ளி ஆண்டு விழாவின் விளையாட்டுப் போட்டியை ஆசிரியர் அறிவித்துக் கொண்டிருந்தார். எல்லாப் போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு முதல் இரண்டு பரிசுகளையும் ஆளுக்கொன்றாக தட்டிச் செல்வதில் இணை பிரியாத் தோழிகளான கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும்  அடித்துக்கொள்ள வேறு எவரும் இல்லை என்பது அந்தப் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். இது பல மாணவர்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்த ஆண்டு இவர்கள் இருவரையும் தோற்று ஓடச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த அந்த வகுப்பு மாணவர்களில் சிலர் அதற்கான வேலையை தந்திரமாக செய்ய ஆரம்பித்தனர். அதன் முதல் படியாக கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும் பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

    “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்” என்றாள் மணிமொழி.

    “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச் செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது” என்றாள் கண்மணி.

    “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை விருது வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்” என்றாள் மணிமொழி

    இதற்கு 4 மாணவிகள் ஒத்து ஊதிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் கண்மணிக்கு ஆசை காட்டி தமிழ்ச்செல்வியை சண்டைக்கு இழுக்க வைக்க முயற்சி செய்தார்கள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல கண்மணியை தொடர்ந்து மூளைச் சலவை செய்தவர்கள், இறுதியாக,

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்” என்றபோது கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு மணிமொழி குழுவினர் அவளை மெல்ல தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி தலைக்கேற ஆரம்பிக்க புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் பல படிகள் அதிகமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

    புதிய நண்பர்கள் கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்.

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” என்றார்கள்.

    இதற்கு 4 நண்பர்களும் நான்கு விதமாக கண்மணியை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனாலும் கண்மணியின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டேதான் இருந்தது. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விடக்கூடாது என்று மனம் எச்சரிக்கை விடுத்தாலும் புதிய நண்பர்களின் ஆசை வார்த்தைகள் அவளை மதியிழக்கச் செய்தது.

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்” என்று கனிவுடன் கேட்டார்கள். அவளும் அவசர அவசரமாக, “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா” என்றபோதே அவள் அம்மா ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள். எப்படியோ நல்ல வார்த்தை சொல்லி மகளை அனுப்பி வைத்தாலும் அந்தத் தாய்க்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. அவரும் அதற்குமேல் மகளை தொல்லை கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தவர் போட்டி நடக்கும் மைதானத்திற்கு தானும் வந்து சேர்ந்தார்.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது. அவள் அம்மாவிற்கு மட்டும் ஒரு ஐயம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதற்கேற்றார்போல் சில மாணவிகள் வந்து அவளிடம் இரகசியம் பேசிச் சென்றதையும் கவனித்து விட்டார். போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவர் அதைத் தடுக்க ஆயத்தமாகவும் இருந்தார். குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள். தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாலும் கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டதில் பெருமிதம் கொண்டாள். அவள் அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்டவள் அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும், என்ற வள்ளுவரின் குறள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.

     

    காட்சி அறிமுகம்

    அனைவருக்கும் வணக்கம்.

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

    என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.

    இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

    ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .
    “உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…

    காட்சி – 1  பள்ளி வகுப்பறை

    ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகிறது. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?

    மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.

    ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..

    ஓ …..

    ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.

     

    காட்சி – 2

    கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”

    தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருகிறாயே? அப்புறம் எப்படி ?

    (தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)

    மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”

    கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”

    மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”

    மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.

    “கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”

    (கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.

    (புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).

    “கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”

    கண்மணி : “என்ன அது..  இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”

    தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .

    கண்மணி : (மனதிற்குள்)  மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …

     

    காட்சி – 3

    அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,

    அம்மா :  “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.

    கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”

    அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.

    போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.

    சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.

    அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.

     

    குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.

    “தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.

    கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

    கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”

    அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.

    இறுதிக் காட்சி

    “நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?”

     

    படத்திற்கு நன்றி

    Share
  • காப்புரிமை  (PATENT RIGHT)

    பொதுவாக நாம் சொத்துகள் என்று குறிப்பிடும்போது அது அசையும் சொத்து பற்றியும், அசையாச் சொத்து பற்றியும் மட்டுமே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அறிவுசார் சொத்துகளையும் அதைப்போன்றே உயர்வாகவே மதிப்பிடப்படவேண்டியுள்ளது. காரணம் மற்ற
    சொத்துகளைப்போன்று அறிவுசார் சொத்துகளையும் பரிமாற்றமும், பரிவர்த்தனையும் செய்ய இயலும். அதாவது ஒருவர் தமது அறிவைப் பயன்படுத்தி ஒன்றை கண்டுபிடித்தாலோ அல்லது தயாரிப்பைச் செய்தாலோ அது அவருடைய சொத்தாகிவிடுகிறது. அது எத்துணை சிறிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், சிறிய மாற்றங்கள் கொண்ட தயாரிப்புகளாக இருந்தாலும் அவை அறிவுசார் சொத்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன.

    பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் நிலம், மூலதனம் போன்றவைகளின் அடிப்படைகளில் மட்டுமே கணக்கிடப்படுவதில்லை. மாறாக அறிவுத் திறனே முக்கிய காரணி என்ற கருத்து, தற்போது உலகம் முழுவதும் வெகு விரைவாகப் பரவி வருவதைக்
    காணமுடிகின்றது.

    உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான “TRIPS” – Trade-Related Aspects of Intellectual Property Rights எனப்படும் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த குறைந்தபட்ச தரநிலைகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீனமயமான காலகட்டங்களில் அறிவுசார் சொத்துகளின் மதிப்புகள் கூடிக்கொண்டே வருவதால் அதற்குரிய விழிப்புணர்வும் அத்தியாவசியமாகிறது. நாம் நம் அறிவுசார் சொத்துகளை பதிவு செய்வதன் மூலம் அதனைப் பயன்படுத்துவதற்கான முழுமையானதும், முதன்மையானதுமான உரிமையைப் பெறுகின்றோம் என்பது முக்கியம். அதைவிட, நம்முடைய படைப்புகளைப் பதிவு செய்வதன் மூலம் நம்மை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு அதற்குண்டான அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் பெற முடிகின்றது. நம்முடைய அறிவு வளத்தைப் பயன்படுத்தி பொருள் வளத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலம் பொது மக்களுக்கும் அவர்தம் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான வழியமைக்க உதவுகிறோம். அறிவுசார் சொத்துகளை அவற்றின் தன்மைக்கேற்ப பல வகைகளாகப் பிரிக்கலாம். அதில் முக்கியமான முதல் வகையான காப்புரிமை அதாவது PATENT RIGHT என்பது பற்றித்தான் இன்று விவரமாக அறிய உள்ளோம்.

    காப்புரிமை என்றால் என்ன?

    காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமையின் உரிமையாளரின் சட்டப்பூர்வ உரிமையைக் குறிக்கிறது. ஒரு விளைபொருளை அல்லது கண்டுபிடிப்பை தயாரிப்பதற்கான, பயன்படுத்துவதற்கான அல்லது விற்பனை செய்வதற்கான தனி உரிமை தான் காப்புரிமை என்பது. எளிமையான சொற்களில், இதன் பொருள், தயாரிப்புகளின் அசல் படைப்பாளர்களுக்கும் அவர்கள் அங்கீகாரம் வழங்கும் எவருக்கும் மட்டுமே அந்த படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான தனிப்பட்ட உரிமை உள்ளது. பொருளுக்கு மட்டுமின்றி பொருள்களின் வடிவமைப்புக்கும் (டிசைன்) காப்புரிமை பெறலாம் என்பதும் முக்கியமான செய்தி. காப்புரிமை ஒரு கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்பட்டுவிட்டால் அதுபோன்ற பொருளை உற்பத்தி செய்யவோ, உபயோகப்படுத்தவோ, சந்தைப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை தொடர்பான முதன்மைச் சட்டம் இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 ஆகும். இந்தச் சட்டத்தின் விதிமுறைகள்படிதான் இன்றளவும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகள் செயல்படுகின்றன. 1970, 1999, 2002, 2005களில் இச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சொத்துரிமை பாதுகாக்கப்படுவது போன்று அறிவுசார் சொத்துரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்டத் திருத்தம் மிகப்பயனுள்ளது.

    புதியதொரு பொருட்களுக்கு அல்லது அவற்றின் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கு அதன் விண்ணப்பித்த நாளிலிருந்து 20 வருடங்களுக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தக் கண்டுபிடிப்பு பொது பயன்பாட்டிற்கு வந்துவிடும். கண்டுபிடிப்பாளர் தனியாகவோ, குழுவாகவோ அல்லது நிறுவனம் பெயரிலோ தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். இந்த முறையையே அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்றன. கண்டுபிடிப்பாளரை தவிர வேறு யாரும் இதில் உரிமை கொண்டாட முடியாது. வணிக நிறுவனங்கள் யாரேனும் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை தயாரித்து சந்தைப்படுத்தி இலாபம் ஈட்டும்பட்சத்தில் இலாபத்தில் ஒரு தொகையை கண்டுபிடிப்பாளர்களிடம் கொடுத்தே ஆகவேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சதவீதத்தில் ஆரம்பித்து 50 சதவீதம் வரை வணிக நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் கண்டுபிடிப்பாளருக்கு பங்குத்தொகை கொடுத்தே ஆக வேண்டும். ஒன்றிற்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒருவரே காப்புரிமை பெற முடியும். காப்புரிமைக்குத் தேவையான அடிப்படைக் காரணிகள் என்றால் அவை, கண்டுபிடிப்பு புதுமையானதாகவும், உலகில் வேறு யாரும் அறிந்திராத வகையிலும் இருக்க வேண்டும். கண்டுபிடிப்புத் தன்மையைப் பொறுத்தவரை, கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் அறிவைவிட கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடு கொண்டிருக்க வேண்டும். பொருளாதார முக்கியம் கொண்டிருக்க வேண்டும் அல்லது மேற்கூரிய இரண்டையும் கொண்டிருக்க வேண்டும். தொழில்துறைப் பயன்பாட்டைப் பொருத்தவரை, கண்டுபிடிப்பு தொழில்துறையால் உற்பத்தி செய்யக் கூடியதாகவும், அல்லது தொழில்துறையால் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

    முதல் பதிவு செய்யப்பட்ட காப்புரிமை ஒரு தொழில்துறை சார்ந்த கண்டுபிடிப்புக்காக 1421இல் புளோரன்ஸ் (Florence) நகர கட்டிடக் கலைஞரும் பொறியாளருமான பிலிப்போ ப்ரூனெல்லெஸ்ஸிக்கு (Filippo Brunelleschi) வழங்கப்பட்டது. பளிங்குக் கற்களை ஏற்றிச் செல்லப்
    பயன்படும் சக்கரங்களுடன் கூடிய ஒரு விசைப்படகு தயாரிப்பதற்கு அவருக்கு மூன்று வருட ஏகபோக உரிமை வழங்கப்பட்டது.

    உலகத்திலேயே அதிக காப்புரிமை கொண்டவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுன்பையமாசகி என்பவர். இவர் தனியாகவும், குழுவாகவும் இதுவரை 5,460 கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை பெற்றுள்ளார்.
    அமெரிக்காவை சார்ந்த அறிவியல் வல்லுனரான தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்து தொன்னூற்று மூன்று கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார்.

    நம் உரிமையை ஏன் காக்க வேண்டும் என்ற வினாவும் எழத்தானே செய்கின்றது. புதிய கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதாக இருப்பதோடு, அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. புதியவற்றைக் கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வம் அதைப்
    பதிவு செய்வதில் இருக்க வேண்டும் என்பதும் அவசியம். அதைப்போல பழைய உரிமைகளைப் புதுப்பிப்பதிலும் ஆர்வம் கொள்ள வேண்டியதும் அவசியம். புதிய பொருளில், புதிய கண்டுபிடிப்புகள் / புதிய உத்திகள் தங்களிடம் இருந்தால் அதற்கு அறிவுசார் சொத்துரிமைக்கோரி விண்ணப்பிப்பது அதைப் பாதுகாப்பதே நாம் நம் நாட்டிற்குச் செய்யும்
    முக்கிய கடமையாகவும் இருக்கும்.

    கோவை, ஈரோடு பகுதிகளின் நூற்பாலைகளில் பார்த்தீர்களானால் அன்றாடம் ஏதோவொரு சிறிய சிறிய அல்லது பெரிய கண்டுபிடிப்புகளை போகிற போக்கில் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் அனைத்திற்கும் காப்புரிமை பெற்றிருக்கிறார்களா என்பது ஐயமே.. பின்னலாடை என்கிற ஹொசைரி பல நேரங்களில் திரைப்பட வட்டாரங்களில் அடிக்கடி நாம் கேட்கும் வசனங்கள், “என் கதையை சுட்டுட்டாங்க .. என் பெயர் கூட குறிப்பிடப்படாமல் வேறு ஒருவர் பெயரைப் போட்டிருக்கிறார்கள். இதுவே ஒருவரின் புதிய அறிவியல் கண்டுபிடிப்பையோ அல்லது புதிய தொழில்நுட்பத்தையோ மற்றொருவர் எடுத்து தங்களுடையதைப் போன்று பயன்படுத்தினாலோ அல்லது வணிகம் செய்தாலோ எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் அறிவோம். இதுபோன்ற அறிவுத் திருட்டுகளைத் தடுப்பதற்காகவே பேடன்ட் எனப்படும் காப்புரிமை வசதி இருக்கிறது. ஆனாலும் அது பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகம் இல்லை என்பதும் உண்மை.

    டிரேட் மார்க் எனப்படும் வணிக முத்திரைகள், கண்டுபிடிப்புகளின் டிசைன் எனும் வடிவங்கள், புவிசார் குறியீடுகள், காப்பிரைட் எனப்படும் படைப்பாக்க உரிமை, பேடன்ட் எனப்படும் காப்புரிமை ஆகியவை அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும் முக்கியமான விடயங்கள். சென்னை அலுவலகம் காப்புரிமை, வணிக முத்திரைகள் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கானது.
    காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்புக்கு வழங்கப்படுகின்ற தனிப்பட்ட உரிமை ஆகும். இது சர்வதேச முறையிலும் தேசிய முறையிலும் என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.
    காப்புரிமை முக்கியமாக
    1. பயன்பாட்டு காப்புரிமை
    2. வடிவமைப்பு காப்புரிமை
    3. தாவர காப்புரிமை
    4.  மென்பொருள் காப்புரிமை
    என்று வகைப்படுத்தப் படுகின்றன.

    முதலில் காப்புரிமை ஒன்றை குறித்த கண்டுபிடிப்புக்காகப் பெற்றுக்கொள்ள முன்னர் குறித்த கண்டுபிடிப்பானது காப்புரிமைக்கு தகுதி உடையதா? ஏற்கனவே அவ்வாறன கண்டுபிடிப்பு சந்தையில் உள்ளதா? அதற்கு காப்புரிமை பெறப்பட்டதா போன்ற சில அடிப்படை பரிசோதனைகளை நிகழ்த்துவது அவசியம். பின்னர் சட்டத்தரணி ஒருவர் மூலமாக காப்புரிமை விதிகளுக்கேற்ப காப்புரிமை வழங்கும் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதனை பதிவு செய்துகொள்ள முடியும். சர்வதேச முறையில் காப்புரிமம் பெற்றுக்கொள்ள Switzerland இல்
    அமைந்துள்ள International Bureau of the World Intellectual Property Organization (WIPO)க்கு விண்ணப்பிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
    அண்ணாமலை பல்கலைகழகத்தில் காப்புரிமை பெறுவதற்கான பயிற்சி மையம் வைத்திருக்கிறார்கள். காப்புரிமை சட்ட மசோதா 1999-ம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது.

    காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. எந்த ஒரு பொருளுக்கும் 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமை பெற கண்டுபிடிப்பைப் பற்றிய இருவகையான குறிப்பேடுகள் வழங்கப்பட வேண்டும்.

    அவை:
    1. தற்காலிக குறிப்பேடுகள்
    2. முழுமையான குறிப்பேடுகள்

    1. தற்காலிக குறிப்பேடுகள்

    தற்காலிக குறிப்பேடுகள் என்பது முன்னுரிமைக்காக ஆராய்ச்சியை முடிக்கும் முன்னரே பதிவு செய்து வைப்பதாகும். இந்த ஆய்வு பற்றியும் கண்டுபிடிப்பு பற்றியும் முழுமையானத் தகவல் தரவேண்டியதில்லை. எனினும் தற்காலிக குறிப்பேடுகள் காப்புரிமை ஏதும் வழங்காது. இது ஒரு
    கண்டுபிடிப்புப் பற்றிய முன்னுரிமையைப் பெற மட்டுமே வழிவகுக்கிறது. தற்காலிகக் குறிப்பேடு பதிவு செய்த 12 மாதங்களுக்குள் முழுமையான குறிப்பேடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படும். ஒரு கண்டுபிடிப்பை முடித்துவிட்டால் நேரடியாக முழுமையான குறிப்பேட்டிலும் பதிந்து கொள்ளலாம். தற்காலிகக் குறிப்பேடு பெற்றிருத்தல் என்பது கட்டாயம் இல்லை.

    2. முழுமையான குறிப்பேடுகள்

    காப்புரிமை பெற கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் பற்றிய முழுமையான குறிப்பேடு காப்புரிமை அலுவலகத்தில் சமர்பிக்கப்படுதல் அவசியம். ஒரு முழுமையான குறிப்பேட்டில் கீழ்க்காணும் அம்சங்கள் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

    1. கண்டுபிடிப்பின் பெயர் / தலைப்பு
    2. அக்கண்டுபிடிப்பு எந்தத் துறையைச் சேர்ந்தது
    3. அக்கண்டுபிடிப்பு பற்றிய முழு வரலாறு. அத்துறையில் கண்டுபிடிப்புடன் தொடர்புடைய முந்தைய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரம்.

    4. கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி பற்றிய முழு ஆராய்ச்சி முடிவுகள்.
    5. கண்டுபிடிப்பை புரிந்து கொள்ள படங்கள்
    6. கோரப்படும் உரிமைகள் பற்றிய விவரம் தெளிவாக இருத்தல் அவசியம். என்னென்ன பண்புகளுக்குக் காப்புரிமை தேவைப்படுகிறது, காப்புரிமை விண்ணப்பதாரர் பெயரில் மட்டும்
    வழங்கப்பட்டால் போதுமா அல்லது வேறு நபருடன் சேர்த்துக் கோருகிறாரா என்பன போன்ற தகவல்கள் சரியாக இருத்தல் வேண்டும்.

    உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமை பெறுவது எவ்வாறு?

    இன்றைய நடைமுறை அளவில் உலக அளவில் காப்புரிமை பெற வழியில்லை.  பொதுவாக நாம் எந்த நாட்டில் பயன்படுத்துகிறோமோ அந்நாட்டில் உள்ள வழிமுறைப்படி காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது வட்ட அளவில் காப்புரிமை பெறுவதற்கான ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் அல்லது ஆப்ரிக்க வட்டார அறிவு சார்ந்த காப்புரிமை அலுவலகம் என்ற நிறுவனங்கள் ஆங்காங்கு தோன்றியுள்ளன. இவை அக்குறிப்பிட்ட நாடுகள் / பகுதிகளுக்கான காப்புரிமைகளை வழங்குகின்றன. கூட்டுறவுக் காப்புரிமை உடன்பாடு உலக அளவில் (சர்வதேச தரத்தில்) காப்புரிமைகளை வழங்குகிறது. எனினும் அவை ஒரு நாட்டு காப்புரிமை போலவே பயன்பாடு உடையவை. இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். உங்களுடைய தயாரிப்பைப் போல் மற்றவர்கள் அப்படியே செய்து விற்க முடியாது. வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் நாற்பதாயிரம் விண்ணப்பங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமை கோரி வருகின்றன. அதில் சென்னை அலுவலகத்துக்கு மட்டுமே சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் வருவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் இப்படி வரும் விண்ணப்பங்களில் சுமார் 85 சதவீதம் வெளிநாட்டினருடையவை என்ற வேதனையான செய்திகளும் வருகின்றன.
    பொதுவாக தாராளமயமாக்கல் வந்தபிறகு பல நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை அனுப்புவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் எளிதாகிவிட்டன. 1990-ம் ஆண்டிலிருந்தே இந்தியா தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், காப்புரிமைச் சட்ட மசோதா 1999-ம்
    ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டது. கடின உழைப்பினாலும், சீரான முயற்சியினாலும் உங்களுடைய தயாரிப்புகளை நீங்கள் தரமானதாகத் தயாரித்து விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

    உங்கள் பொருளுக்கு அதிக கிராக்கி நிலவும் இந்த நிலையில் அதை கவனம் கொள்ளும் மற்றவரும் அதே போல தயாரிக்க முற்படலாம். இதனால் உங்களது உழைப்பு வீணாவதோடு சந்தையில் இலாபமும் குறையக்கூடும். இதைத் தவிர்க்கவே காப்புரிமை பெறுவது அவசியமாகிறது. மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவிலும், அதன் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை, சென்னையிலும் உள்ளன. தமிழ் நாட்டில் இருப்பவர்கள் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும், ஏற்கனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு காப்புரிமை பெறலாம். ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படுகிறது என்றாலும் அப்பொருளை கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகக் கண்டுபிடிப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வுதான். இதுவரை யாராலும் முன்னெடுக்கப்படாத புதிய கண்டுபிடிப்புகளே காப்புரிமைக்குத் தகுதியானவை. அந்த வகையில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கு முன்பே அது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

    நீங்கள் தயாரித்த பொருளுக்கு காப்புரிமை பெறப்பட்டிருக்கிறதா என்பதை இணையதளத்தில் தேடி தகவல்களைப் பெறலாம். அதனைத் தெரிந்து கொள்வதற்கான இணையதளம் உள்ளது. (www.ipindia.nic.in) சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை chennai-patent@nic.in என்ற இணையதளத்திலும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் பெறலாம். wipo என்ற இணையதள தேடுதல் மூலம் பிற நாடுகளில் எந்தெந்த பொருள்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல்வேறு காப்புரிமை அலுவலகங்களின் இணையதளங்களும் காணக்கிடைக்கின்றன. பாரம்பரிய மருந்துகள் சார்ந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோருவோர், இந்திய அரசின், பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம், அதாவது டிரடிஷனல் நாலெட்ஜ் டிஜிட்டல் லைப்ரரி என்ற அமைப்பில் அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆனாலும்
    எந்த ஒரு கண்டுபிடிப்பும் மனித சமூகத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதாக இருக்க வேண்டியது அவசியம்.

    இந்தியர்களுக்கு படைப்பாற்றல் அதிகம் இருந்தாலும் அறிவுசார் சட்டத்தை பயன்படுத்துவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்தியா பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பாரம்பரிய முறைகளுக்கு மற்றொரு நாட்டில்
    காப்புரிமை வழங்கி இருப்பின் இந்திய நாடு தகுந்த ஆதாரங்களைக் காட்டி அங்கு கொடுக்கப்பட்ட காப்புரிமையை நிரந்தரமாக இரத்து செய்யலாம். ஒருமுறை இரு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மஞ்சள் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் வல்லமை படைத்தது எனக் கண்டுபிடித்துள்ளதாக கூறி காப்புரிமை பெற்றனர். இதை எதிர்த்து இந்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் “பழங்காலக்கலை” என்ற அடிப்படையில் ஆதாரங்களுடன் வாதிட்டதால் மஞ்சளுக்கான அமெரிக்க காப்புரிமை ரத்து செய்யப்பட்டது. இதன் கூற்றுப்படி மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக இந்திய மருத்துவக் கழகம் 1953 – ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகையையும் சமர்ப்பித்தது. பின்பு அமெரிக்க காப்புரிமை மஞ்சளுக்கான காப்புரிமையை இரத்து செய்தது. ஏனெனில் கண்டுபிடிப்பு என்பது,
    1. தனித்தன்மை உடையதாகவும், புதியதாகவும், பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
    ஆனால் மஞ்சள் வழக்கு தனித்தன்மை உடையதாகவும் புதியதாகவும் இல்லை என்பதால் இரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு, ஐக்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் (யுஎஸ்பிடிஓ) வழங்கிய மஞ்சள் மற்றும் பாசுமதி அரிசி  காப்புரிமைகளும் 1990களின் பிற்பகுதியில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் வழங்கிய வேம்பின் காப்புரிமையை இந்திய அரசு வெற்றிகரமாகப் போராடி இரத்து செய்தது நினைவு கூறத்தக்கது. ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்டிஏ என்ற உர நிறுவனத்திற்கு வேம்பின் கொட்டையிலிருந்து பூஞ்சாணக்கொல்லி தயாரிக்கும் முறைக்கு உரிமம் வழங்கியது. பாரம்பரிய முறையை ஆதாரங்களுடன் வாதிட்டதால் இந்திய அரசு இதிலும் வெற்றி கண்டது. இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தியாவில் உங்களுடைய தயாரிப்பைப் போலவே
    இன்னொருவர் தயார் செய்து விற்க முடியாது. அதே சமயம் உங்கள் தயாரிப்புகளை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு
    விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 40 ஆயிரம் பேர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பதற்காக இவர்கள் காப்புரிமை பெறுகின்றனர்.

    இந்தியாவில் காப்புரிமை செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்குக் காரணம் அது குறித்த விழிப்புணர்வு இங்கு அதிகம் இல்லாததே காரணம் என்கின்றனர் சென்னை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்புப் பிரிவு இணை ஆணையர் ஆர். தேவன் அவர்கள். இந்தியா உயர்கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடு. ஒரு வருடத்திற்கு பல இலட்சம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருக்கும் இந்திய அரசின் அறிவுசார் காப்புரிமை அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஏதோ ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி காப்புரிமை கோரினாலே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்காக பெருகும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
    தமிழகத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கண்டுபிடிப்புகளை தங்களது துறைகளில் மேற்கொள்கின்றனர். இவற்றை பதிவு செய்து காப்புரிமை பெற்றால், அந்த தயாரிப்பால் பயன் பெறும் நிறுவனங்கள் அதற்கு ராயல்டி தொகை அளிக்கும். இதன் மூலம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பயனைடையும். வெளிநாடுகளில் காப்புரிமை பெறும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவிலும் இந்த நடைமுறை வந்தால் காப்புரிமை பெறுவது அதிகரிக்கும். நமது தயாரிப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் எளிதில் கிடைக்கும். பொதுவாகவே, காப்புரிமை பெறுவதற்கும் அதற்கான விண்ணப்பம் செய்வதற்குமான கட்டணம் மிகவும் அதிகமாக இருக்குமோ என்ற ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதான். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அதற்குரிய கட்டணம் சொற்பம்தான்.  காப்புரிமைக்கு
    விண்ணப்பிக்க இந்திய அரசு தனிநபருக்கு ரூ. 700/-, குழுக்கள், நிறுவனங்கள், போன்றவைகளுக்கு ரூ.4000/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு விண்ணப்பதாரர் விண்ணப்பித்த 48 மாதங்களுக்குள் பரிசோதனைக்கு வருமாறு பரிசோதனைக் குழுவிற்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1000/- ம் நிறுவனங்களுக்கு  ரூ. 3000/- ம் செலுத்தப்பட வேண்டும். அதோடு பதிவுசெய்வதற்கென தனிநபர் ரூ. 1500/- ம் நிறுவனங்கள் ரூ. 5000/- ம்  காப்புரிமை பெறும் சமயத்தில் செலுத்த வேண்டும். ஆனால் திட்டப்பணி வரைவை எழுதி, தட்டச்சு செய்து அச்செடுத்து சமர்ப்பிப்பதுதான் சற்று சிரமமான காரியம் என்பதோடு செலவு சற்று அதிகம் பிடிப்பதும் அதற்குத்தான். ஒரு தனி நபரின் கண்டுபிடிப்புக்கான விண்ணப்பத்திற்கு சுமார் இரண்டாயிரத்திலிருந்து ஏழாயிரம் ரூபாய் வரை
    செலவாகும். ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு என்றால் அதற்கு இதைவிட நான்கு மடங்கு செலவாகும் என்கிறார்கள். அப்படி ஒரு கண்டுபிடிப்புக்காகப் பெற்ற காப்புரிமைக்கு 20 வருடம்தான் மதிப்பு இருக்கும். அதன்பின் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். உரிமையாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பையும் அதற்கான காப்புரிமையையும் எவருக்கு வேண்டுமானாலும் விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ செய்யலாம். வெளிநாடுகளில் கண்டுபிடிப்பாளர்களை பெரும்பாலான நிறுவனங்கள் ஆதரிக்கும் அளவிற்கு இங்கே இல்லையென்றாலும் அகமதாபாத்திலுள்ள ‘இண்டியன் இன்னொவேஷன் ஃபவுண்டேஷன்’
    போன்ற ஒரு சில அமைப்புகள் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
    தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்கொள்வோமானால் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 5 இலட்சம் பொறியாளர்களாவது உருவாகிறார்கள். அதேபோலபௌதிகம், நுண்ணுயிரியல் போன்ற அனைத்துத் துறை சார்ந்த மாணவர்களும் தங்கள் இறுதியாண்டு ப்ராஜெக்ட் எனும் திட்டப்பணி
    வரைவுகளில் பத்து சதவீதம் மட்டுமே கூட காப்புரிமை அலுவலகத்துக்கு வந்தாலே போதும், மிகக் குறைந்தபட்சமாக 50,000க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் தொழிலுக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் வெளிவரக்கூடும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் தங்கள்
    ப்ராஜெக்டுகளையே விலைக்கு வாங்கித்தான் சமர்ப்பிக்கிறார்கள் என்கிற வருத்தமான தகவல்களை மட்டுமே காப்புரிமை அளிக்கும் அதிகாரிகள் அளிக்கின்றனர். அந்த வகையில் இளைஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை சரியாகத் திட்டமிட்டு மேற்கொண்டு காப்புரிமை பெற்றால் பெரியளவில் சாதிக்கக்கூடும் என்பதையும் நினைவில் கொண்டு மாணவர்களுக்கு சரியான வழியில் பயிற்சி அளிக்கவேண்டியதும் ஆசிரியர்கள், பேராசிரியர்களின்
    முக்கிய கடமை. பொறியியல் மாணவர்கள் காப்பீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம். காப்புரிமை ஆய்வாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. காப்பீடு முகவர் போன்று இவர்கள் செயல்படலாம் என்றும் தேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதும் கவனம் கொள்ளத்தக்கது.
    காப்புரிமையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். முதலில் ஒரு கண்டுபிடிப்பின் முழுமையான திட்டப்பணி வரைவாக உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும். பின் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களது இணையவெளியில் அதுபற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படும். இந்த நேரத்தில் இந்தத் திட்டப்பணி தொடர்பாக மற்றவர்களுக்கு ஏதேனும்
    எதிர்ப்பு இருந்தால் தெரிவிப்பார்கள். ஒரு காப்புரிமைக்கு யாரேனும் எதிர்ப்புத் தெரிவிக்க விளைந்தால் 4 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு மாதம் நீட்டிக்கலாம். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பவர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அவர் எதற்காக, என்னென்ன பண்புகளை எதிர்க்கிறார் என்ற முறையான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். இந்த விளக்கம் எழுத்து வடிவத்தில் என்னென்ன குறிப்புகளை தெரிவிக்கிறார் என ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாட்டு அலுவலர் இவ்விளக்கம் மற்றும் ஆதாரங்களைப் பார்த்துக் காப்புரிமை அளிப்பு பற்றி முடிவு செய்வார். காப்புரிமை பெறுவதற்கு படிவம் -2 ஐ பூர்த்தி செய்ய வேண்டும். இது தவிர படிவம் -1 மற்றும் படிவம் -18-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி ஏதும் எதிர்ப்பு இல்லாத நிலையில்தான் அது காப்புரிமைக்குத் தகுதியானதாகக் கருதப்படும். ஆனாலும் காப்புரிமைக்குத் தகுதியானதுதான் என்று உறுதி செய்த பிறகும் அடுத்த கட்ட சோதனைக்குத் தயாராக வேண்டும். அதாவது காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கும் அந்த நபர்தான் இந்த கண்டுபிடிப்பைச் செய்தவரா, அல்லது வேறு எவருடையதாவது அபகரிக்கப்பட்டுள்ளதா என சோதிக்கப்படும். இதற்காக அந்த திட்டப்பணி தொடர்பான ஐயங்களையும், தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களையும் அதற்குரிய நிபுணர்கள் நேர்காணல் மூலம் கேட்டறிவார்கள். பின்னர் எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் சரிபார்த்து, அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே காப்புரிமை வழங்கப்படும்.

    காப்புரிமைக்குத் தகுதியில்லாத கண்டுபிடிப்புகள் என்று வரையறுக்கப்பட்டவை பலவும் உள்ளன என்றாலும், அதில் முக்கியமான சிலவற்றைக் காணலாம். இயற்கை விதிகளுக்கு முரணான கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் அமைதி, சுமுக நிலைமை போன்றவற்றைப் பாதிக்கும்
    கண்டுபிடிப்புகள். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அல்லது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு எதிரான கண்டுபிடிப்புகள். வேளாண்மை அல்லது தோட்டக்கலையின் முறைகள்
    மூளையின் செயல்பாடுகள் குறித்த திட்டம் மற்றும் முறைகள், விளையாட்டு முறைகள் தகவல்களை வழங்குதல் குறைக்கடத்தி ஒருங்கிணைந்த சுற்றுகள் பற்றிய வரைபட விளக்கம்
    பாரம்பரியமாக அறியப்பட்ட ஒன்றின் கூட்டமைப்புகள், அவற்றின் மறுபடிவங்கள் சார்ந்த கண்டுபிடிப்புகள் அணுசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகள் பொது நலன், மனிதநேயத்தின் கொள்கைகள் மற்றும் அறநெறிக்கு முரணான முடிவுகள். போன்றவைகள் உள்ளிட்டவைகள் காப்புரிமைக்கு தகுதியில்லாதவையாக கருதப்படுகின்றன. பல நாடுகளில், குளோனிங் துறையில் ஆராய்ச்சிக்கு காப்புரிமை பெறுவது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

    காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்கல் பற்றி பார்த்தால், காப்புரிமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் உற்பத்தியானது சந்தையில் மதிப்பளித்தால் மட்டுமே காப்புரிமை வணிகத்திற்கு உறுதியான பலனை அளிக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். காப்புரிமையிடப்பட்ட கண்டுபிடிப்பை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் எவை என்று பார்க்கலாம்.
    காப்புரிமையிடப்பட்ட கண்டுபிடிப்பினை நேரடியாக வர்த்தகமயமாக்கலாம்.
    காப்புரிமையை வேறொருவருக்கு விற்கலாம்.

    காப்புரிமையின் உரிமையை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
    இணைந்த உடன்பாட்டு வியாபாரத்தை, அதாவது கூட்டு சேர்ந்து வணிகம் மேற்கொள்ளலாம்.
    காப்புரிமை தலையீட்டிற்கான தீர்வு பற்றியும் அறியவேண்டும். அதாவது தங்களது காப்புரிமையில் மற்றவர்கள் தலையீடு செய்கின்றனர் என்று நம்பினால் முதலாவது நடவடிக்கையாகத் தலையீடு செய்பவர்களின் உற்பத்தி அல்லது படிமுறையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பின்பு அவர்களுக்கு, ‘நிறுத்து அத்துடன் தவிர் கடிதம் அனுப்ப வேண்டும். இதனால் தலையீட்டாளர் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவர் அல்லது உரிமமிடல் ஒப்பந்த பேச்சிற்கு இணங்கி வருவர். இவ்வாறு நடைபெறாத சமயத்தில் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடைச்சட்டத்தினைக் கேட்டுப் பெறலாம். பின்னர் தலையீட்டாளர் நடவடிக்கைகளைப் பொறுத்து நீதிமன்றம், தலையீட்டாளர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பணிக்கலாம். அல்லது காப்புரிமை உரிமையாளருக்கு நட்டஈட்டினை அளிக்க தீர்மானிக்கலாம்.

    இந்தியாவில் காப்புரிமையும் பதிப்புரிமை பதிவு முறை மிகவும் எளிமையாகி வருவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. வலிமையும் துடிப்பும் மிக்க அறிவுசார் சொத்துரிமை உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. காப்புரிமைகள், வடிவமைப்புகள், பதிப்புரிமைகள் மற்றும் வர்த்தகம் முத்திரைகளை ஆராய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து இந்த ஆய்வுகள் திருப்தி அளிக்கின்றன. புதுமைகளின் மையமாக இந்தியா உருவாவதற்கு வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் பெரிய அளவில் உதவும். புது நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கான கட்டணங்கள் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. அறிவுசார் சொத்துரிமை செயல்முறை முன்பை விட எளிமையாகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அலுவலர்கள் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தின் அலுவலர்கள், பதிவு செய்தல் மற்றும் சேவைகளை பெறுவதை எளிமைப்படுத்துவதற்காக முடிவெடுப்பதற்கான கால அளவையும் டிஜிட்டல் முறைக்கு மாறுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல்முறையும்
    மறுசீரமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.உதாரணத்திற்கு, வர்த்தக முத்திரை விதிகளின் கீழ் முன்பிருந்த 74 படிவங்கள் 8 ஒருங்கிணைந்த படிவங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிப்பது எளிதாகிறது. வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வழங்கும் உலகின் மிகச் சிறந்த முதலீட்டு மேம்பாடு விருது இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

    காப்புரிமை பெறுவதன் பயன்கள்

    1. காப்புரிமை உரிமையாளரின் கண்டுபிடிப்பிற்கு பாதுகாப்பளிக்கிறது.
    2. அதன் பயனை அவர் முழுமையாக அடைய உதவுகிறது.
    3. பிறர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
    4. உரிமையாளரின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

    காப்புரிமை பெறப்படாத பொருட்களை யார் வேண்டுமானாலும் வணிக முறையில் பயன்படுத்த முடியும்.
    1. கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்பால் பொருளாதார முறையில் பலன் பெறாவிடில், அவர் தமது கண்டுபிடிப்பை பிறர்க்குப் பயன்படும் வகையில் ஏதேனும் தனியார் நிறுவனத்திலோ அல்லது வேறொருவரிடமோ விற்று விட காப்புரிமையில் அனுமதியுண்டு.
    2. காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் தொழில்வளர்ச்சிக்கு அடிகோலுகிறது.
    3. காப்புரிமையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய அடிப்படையாக அமையும்.
    4. இந்த காப்புரிமையானது மேலும் பல ஆராய்ச்சிகள், முன்னேற்றக் கண்டுபிடிப்புகளை செய்யத் தூண்டுகோலாக அமையும்.
    5. காப்புரிமை வர்த்தகத் தொழில்துறைக்கு ஒரு சொத்தாக அமைகின்றது. அதிகக் காப்புரிமை பெற்ற நிறுவனங்கள் பொருளாதார அளவில் வசதி படைத்ததாக கருதப்படுகிறது.
    6. குறிப்பிட்ட காப்புரிமைக் காலம் முடிந்த உடன் அக்காப்புரிமை பெற்ற பொருள் அல்லது தொழில் நுட்பம் பொது உபயோகத்திற்கு வந்துவிடுகிறது.

    இவ்வளவு பயன்பாடுகள் உள்ள வகையில் எந்த ஒரு சிறு கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதற்குரிய காப்புரிமையை விரைவில் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நம் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    Share