Blog

  • தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49

    பேராசிரியர் இ. அண்ணாமலை

    தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று கேட்கிறது என்று வெளிப்படையாகச் தெரியப்படுத்தவில்லை. இது நிச்சயமாகக் காதல் செய்வது பற்றிக் கேட்கவில்லை; இலக்கியம் செய்வது பற்றிக் கேட்கவில்லை; திரைப்படம் எடுப்பது பற்றிக் கேட்கவில்லை; உழவுத்தொழில் செய்வது பற்றிக் கேட்கவில்லை; வணிகம் செய்வது பற்றிக் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பலவேறு துறைகளில் தமிழில் இயங்கமுடியுமா என்று இந்தக் கேள்வி கேட்கவில்லை. இந்தக் தமிழால் நாட்டை ஆட்சி செய்வதைப் பற்றியது; நீதிமன்றங்களில் வழக்காடுவது பற்றியது; கல்லூரிகளில் கல்வி கொடுப்பதைப் பற்றியது. அதாவது, தமிழ் அதிகார மொழியாக, அறிவு மொழியாகச் செயல்பட முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரம்.

    மொழிக்கென்று உள்ளார்ந்த தனித்திறன் எதுவும் இல்லை. ஒரு மொழி செய்வதை இன்னொரு மொழி அதன் தன்மை வேறுபாட்டால், இலக்கண வேறுபாட்டால் செய்ய முடியாது என்பதில்லை. எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு வேண்டும். வாய்ப்பைத் தர அந்த மொழியைப் பேசுபவர்கள் விரும்ப வேண்டும்; விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பலம் வேண்டும். இந்த பலம் ஆட்சி பலம், பண பலம் மட்டுமல்ல; அறிவு பலமும் ஆகும். ஆட்சி பலமும், பண பலமும் பெறுவது வரலாற்றுக் காரணங்களைப் பொறுத்தது; அறிவு பலம் பெறுவது சமூகத்தின் கையில் இருக்கிறது; செய்யவேண்டும் என்ற சமூகத்தின் முனைப்பில் இருக்கிறது. தமிழர்களின் அறிவு பலம் –அறிவியல் பலம், சட்டவியல் பலம், வணிக மேலாண்மை பலம் முதலானவை எல்லாம்- ஆங்கிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பலத்தின் கனம் தமிழர்களின் காலைத் தமிழ் அறிவு உலகில் ஓடவிடாமல் கட்டிப்போடுகிறது; தங்களால் முடியாது என்ற மனநிலையையும் உருவாக்குகிறது. இந்த மனநிலைதான் தமிழ் அறிவுத்துறைகளில் மேலே செல்லாமல் தடுக்கும் கால்கட்டு; தமிழ் மொழி அல்ல. தங்களால் முடியாது என்னும் மனநிலை தமிழால் முடியாது என்னும் சமாதானத்தில் மறைக்கப்படுகிறது.

    அறிவுத் தமிழ் தான்தோன்றி அல்ல. இது அறிவியல் தமிழ் மட்டுமே அல்ல.; அதை விடப் பரந்துபட்டது இந்தத் தமிழ் உருவாவது அறிவுத்துறைகளில் புலமை பெற்றவர்களின் கையில் உள்ளது. தங்கள் புலமையைப் பிற மொழிகளின் வழியே பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தித் தமிழில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எழுத வேண்டும். பிற அறிவுத்துறைகளைச் சாரந்த புலவர்களுக்கும் தங்கள் துறை அறிவைத் தமிழில் எழுதவேண்டும். இந்த எழுத்தியக்கத்தைத் துவங்க அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவை இல்லை; அரசின் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை மாற்றாமல் செய்ய முடியாது என்று கையைப் பிசையத் தேவை இல்லை.; பழியை மற்றவர்களின் மேல்போடத் தேவை இல்லை.  பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்க இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தமிழ்வழியே பல துறை அறிவை வளர்க்க எழுதுவதை, உலகமயமாதலின் விளைவாகத் தோன்றும் பொருளாதார, சமூக, கலாச்சாரக் கேள்விகளுக்குப் பதில் தேடி எழுதுவதை வலைப்பூக்களில், மின்னிதழ்களில், இணையதள விவாதக்குழுக்களில் ஆரம்பிக்கலாம். இங்கும் அரைத்த மாவையே அரைக்கத் தேவை இல்லை. எந்தத் துறையறிவைப் பற்றியும் தமிழில் எழுதினால், தமிழ்த்துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும் என்னும் நியதி மாற வேண்டும்.

    அறிவுத்தமிழ் எழுதப் தமிழ்ப் புலமை தேவை என்பது தடுக்கும் சுவராக, விலங்காக அமையக் கூடாது. கலப்பற்ற தமிழில்தான் இந்தத் தமிழை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது. புதிய துறையில் ஒரு மொழியின் வளர்ச்சியும் இப்படியே.

    எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

    Share
  • சுயநலம்

    jay

    சுயநலம்

    சி. ஜெயபாரதன், கனடா

     

    சுயநலம் நமது பிறப்புரிமை !
    குருதியில் கலந்தது !
    கூடப் பிறந்தது !
    மனித ஆணிவேர் ஆவது !
    சுதந்திரம் மனிதர் இறப்புரிமை !
    பறி போவது ! மரிப்பது !
    பற்றியும் பற்றாமல் குறைவது !
    புலி அதோ வருகுது !
    புலிக்குப் பயந்தவர் என்மேல்
    தலை வைப்பீர் !

     

    கடவுள் படைப்பிலே
    பெண் சுயநலம் !
    ஆண் பொது நலம் !
    ஆயினும் சுயநலம் இல்லையேல்
    பொது நலம் இல்லை !
    அன்னை தெரேசாவின்
    காப்பில்லம் பொது நலமா ?
    ஆத்மீகச் சுயநலம்,
    மனச் சாந்தி !

     

    சுயநலம் வளர்பிறை !
    பொது நலம் தேய்பிறை !
    வளர்பிறை, தேய்பிறை ஒருவித
    ஒளிச் சுழற்சி மாயை !
    நீர்க் குமிழியாய்
    மேல் மிதக்கும் பொது நலம் !
    நுனி மட்டும் தெரிய
    பனிப் பாறைப் பெருங்குடல்
    மூழ்கிடும் சுயநலமாய் !
    முதல் மந்திரி போட்ட மாலைக்கு
    தையல் மெஷின் அளிப்பார்
    தன் பயணம் தொடர !

     

    பொது நலத்தைப் பிளந்துள்ளே
    பார்த்தேன்
    பதுங்கி விழித்திருந்தது
    சுயநலச் சிங்கம் !
    பொது நலம் விரியும் ஆல‌மரம்
    சுயநலம் விழுது !
    மேடையில்
    தன் வாடை மணக்க
    பொன்னாடை போர்த்துவார்
    முன்னோடி மனிதர் !
    சுயநலம் ஒரு செங்கல் !
    பொதுநலம் கட்டிய கோபுரம் !
    புவி வியப்பான
    தாஜ்மகாலைக் கட்டியது
    ஷாஜஹானின் சுய நலமா ?
    பொது நலமா ?

    ++++++++++++

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தனுசுnew yearimages

    கண்களை மூடி
    கடவுளை நினைத்தால்
    அவன்
    பிரகாசிக்கிறான் உள்ளத்தில்

    அதே கண்களை மூடி
    தோழமையை நினைத்தால்
    உள்ளே சிலாகிப்பதோ நீங்கள்

    நட்புக்கு நல்லதோர் தேரானாது
    இந்த சின்ன உவமை
    என் வலை நட்பில்
    அழகானது நம் வல்லமை

    முன்னேற வேண்டுமா
    முன் மாதிரியாக வேண்டுமா
    அதற்கு
    மாற்றி யோசி  எனும் முழக்கம்
    முழுமையைடைந்திருக்கும் இவ்வேளையில்
    அதையும் மாற்றி யோசித்து
    இனி
    யோசித்து மாறு எனும் மந்திரம்
    உங்கள் முன் வைத்து

    வாழ்த்துகிறேன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://www.newhdwallpapers.in/happy-new-year/happy-new-years-2014-6/

    Share
  • 2014 வருக….

    விசாலம்    2new yearimages

    “யார் அஙகே?  நுழைகிறாய் ?
    யாருக்கும் அஞ்சாமல்   நுழைந்தும் விட்டாயா?
    பார்க்க அழகாகத்தான் இருப்பாய்.
    பார்க்க முடியவில்லையே உன்னை
    இனி .புரிந்து விட்டது எனக்கு
    இனிய புத்தாணடு நீதானோ ?
    ,நீதான்” இரண்டாயிரத்து பதினாலோ?”
    நீ வர என் வயது குறைகிறதே!

    “நான் தான்  காலதேவன்
    காலம் என் கையில் .
    ஒருவருக்கும் நிற்பதில்லை
    ஒருவர்  சொல்லையும் கேட்பதில்லை
    ஓயாமல் கடமையைச் செய்கிறேன்
    ஒடிக்கொண்டே இருக்கிறேன் ,
    எத்தனை விடிவுகள்
    எத்தனை வீழ்ச்சிகள்.
    எத்தனை மலர்ச்சி
    எத்தனை  இகழ்ச்சி ”

    ” இனிய வரவேற்பு , காலதேவா,
    இந்த  வருட கணிப்பு என்னவோ?
    என் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி
    எத்தனை சாம்ராஜ்ய கனவுகள் !
    என் கனவுகள் நினைவாகுமா?
    என் உழைப்புக்கு பலன் கிட்டுமா?.
    மழைப்பொழிய காட்டு கருணை
    மாநிலங்களில் நிரப்பு மகிழ்ச்சி
    பசுமை விரிப்பில்  என் மகிழ்ச்சி
    பஞ்சம் நீக்கி வளமாக்கு நாட்டை.
    கொடுப்பாயா எங்கும் சுகம்
    கொட்டுவாயா எங்கும் இன்பம்  ?”

    “இன்பம் அளிக்கவே வந்துள்ளேன் .
    இதை  துன்பம் ஆக்குவது நீங்களே!
    எங்கும்  இயற்கையின் எதிர்ப்பு
    எங்கும் மரங்களின் ஒழிப்பு
    பல காடுகளின்  அழிவு
    பிராணவாயு முறிவு
    எங்கும் கான்கிரீட் கட்டடங்கள்.
    எட்டி ஆகாயம் வரை எழுப்ப
    அங்கே மாரி எப்படி பெய்யும் ?
    அங்கே  பசுமை எப்படி அமையும் ?”

    2014  காலதேவனே
    மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க
    மங்கலப்பொங்கலில்  அனைவரும் களிக்க
    பஞ்சபூதங்களுடன் கலந்த நீ
    பாரினில் முக்காலங்களில் தவழும் நீ
    எங்களைப் பூரிக்க வைப்பாயா?”
    எங்கள் உடல் நலம் காப்பயா?

    “சந்தோஷம் என்பது உங்கள் கையில்
    சற்றே  இன்று  சிந்தியுங்கள்
    இன்பம் துன்பம்  உங்கள் மனதில்
    இனி வேண்டாம் இந்த மதபேதம்
    பழிக்குப்பழி   அகலட்டும்
    பட்டென்று அகற்றுங்கள் சாதி வெறி
    அருமையான போதனைகள் கண்டு
    அன்பின் வழி நடப்பதுவே   முறை
    இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கைக் கரும்பு
    மனித நேயம் வளர ,மலரும் அங்கு  அரும்பு ”

    படத்துக்கு நன்றி

    http://www.hdwallpapersinn.com/happy-new-year-2014-cards.html

    Share
  • தென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய  தவத்திரு ஐயா மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள்! இன்னும் பல நூறு ஆண்டுகள் தங்களுடைய இந்த அரிய தமிழ்ப்பணி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்!!

    அன்புடன்

    பவள சங்கரி

    2014 மார்கழி முதல் நாள் (16. 12. 2013)

    மதி நிறை நன்னாள். முழுநிலா நாள் கலைவிழா. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் தென்மராட்சிக் கல்வி வலையத்தினரின் விழா.

    இலங்கையின் வடமாகாணத்தின் 12 கல்வி வலையங்களில் தென்மராட்சிக் கல்வி வலையம் ஒன்று.

    ஆசிரியர், தொடக்க, இடைநிலை, மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் முதல்வர்களும் இணைந்து நடத்திய, பெரும் எண்ணிக்கையில் கூடி மகிழ்ந்த விழா.

    தென்மராட்சியில் ஒருவரைப் பாராட்டிப் போற்றி மகிழ்வது அவர் கடமை. யாவரும் கல்வியாளர்கள். எனவே கல்வி சார்ந்த ஒருவரை, என்றும் மாணவனாக உள்ள என்னைப் பாராட்ட எண்ணினர். விழா நாளன்று யாழ்ப்பாணத்தில் இருப்பேன் என்பதை உறுதி செய்தனர். எனக்கும் தெரிவித்தனர்.

    விழாவின் நெடிய நிகழ்ச்சிகளில் நான் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் காணொலியாக்கினேன். பார்க்க, பகிர்க. http://youtu.be/EHGsS4bSAIU

    வணக்கம் தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் 30 ஆண்டுகள் பதிப்புத் துறையில் இருந்தவர்களை 10.1.14 சென்னைப் புத்தகக் காட்சித் தொடக்கவிழாவில் விருது வழங்கிப் பாராட்டுகிறது.

    1952 தொடக்கம் என் தந்தையாரிடம் யாழ்ப்பாணத்தில் அச்சுத்தொழில், புத்தகப் பதிப்புத் தொழில் புத்தக விற்பனைத் தொழில் ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன்.

    1977 தொடக்கம் யாழ்ப்பாணத்திலும் 1980 தொடக்கம் சென்னையிலும் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபட்டேன்.

    இன்றுவரை யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் புத்தகப் பதிப்பாளனாக, விற்பனையாளனாகத் தொடர்கிறேன்.

    1. சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாளருக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது (கிஆபெ விசுவநாதம் கையால் பெற்றேன்) 2. சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளருக்கான மர்ரே ராசம் விருது (நீதிபதி இஸ்மயில் கையால் பெற்றேன்) 3. மதுரை திருவள்ளுவர் சங்கம் சிறந்த பதிப்பாளருக்கான விருது (பழ. நெடுமாறன் கையால் பெற்றேன்) 4. அறவாணன் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (குன்றக்குடி அடிகளார் கையால் பெற்றேன்) 5. மணிவாசகர் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (சிலம்பொலி செல்லப்பனார் கையால் பெற்றேன்)

    இப்பொழுது தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் பாராட்டி விருது வழங்குகிறது.

    Share
  • நம்மாழ்வார்

    அண்ணாகண்ணன்

    படிமம்:Nammalvaar.jpg

    வேகமாக அறுவடை செய்யப்
    பலரும் துடித்தபோது,
    துடிப்புடன் விதைத்தாய்.

    தங்க வாத்தை அறுக்கப்
    பலரும் முயன்றபோது
    நல்ல வார்த்தை பகர்ந்தாய்.

    அஞ்சிப் பலர்
    பின்தங்கியபோது,
    நெஞ்சை நிமிர்த்தி
    முன்வந்தாய்.

    அலட்சியமாய்ப் பலர்
    மறந்தவற்றை
    இலட்சியமாய் ஏந்தி
    உழைத்தாய்.

    பசுமை காக்கப்
    போராட்டக் களம் புகுந்தாய்.
    எம் உளம் முழுதும்
    பசுமையாய் நிறைந்தாய்.

    நீயும் எங்கள் தாய்.

    நீ இறந்தாய் என்கிறது செய்தி.
    ஆனால், இருக்கின்றாய் என்றே சொல்லும்
    ஒவ்வொரு துளி நீரும்
    மலரும் ஒவ்வொரு துளிரும்
    ஊற்றும் தென்றல் காற்றும்
    இன்றும் என்றென்றும்.

    =============================
    படத்துக்கு நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
    Share
  • தாயகம் கடந்த தமிழ் 2014

    தாயகம் கடந்த தமிழ் 2014

    கோயம்புத்தூர், இந்தியா

                                                                                              ஜனவரி 20, 21,22             

     

    தமிழ்ப் பண்பாட்டு மையம்,

    டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம்,

    டாக்டர் என். ஜி.பி. நகர், காளப்பட்டி சாலை,

    கோயம்புத்தூர் – 641 048

    தொடர்பு எண்:   0422 2369132

    மின்னஞ்சல்:     ctc@kmch.ac.in

                                                                                                                         

     

    நிகழ்ச்சி நிரல்

     

    20 ஜனவரி 2013 திங்கள்

    மாலை 6 மணி

    துவக்க விழா

     

    21 ஜனவரி 2013, செவ்வாய்

    காலை 9:30 மணி-11-30 மணி வரை

    .அமர்வு 1

    தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம்

    தலைமை: முனைவர்.ரெ.கார்த்திகேசு

    பேரா. கிருஷ்ணன் மணியம்: மலேசியத் தமிழ் இலக்கியம்

    முனைவர்: சீதாலட்சுமி: சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்

    திரு.நாகரத்தினம் கிருஷ்ணா: ஐரோப்பிய அமெரிக்க தமிழ் இலக்கியம்

    முனைவர். ப. மருதநாயகம்: தாயகம் கடந்த தமிழ் ஓர் பார்வை

    காலை 11:30-11:40

    தேநீர்

    காலை 11:40- மதியம்1:00

    அமர்வு2

     

    தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்

    தலைமை: திரு.மாலன்

    திரு.அ.முத்துலிங்கம் (கனடா)

    திரு.எஸ்.பொன்னுதுரை (ஆஸ்திரேலியா)

    டாக்டர்.சண்முக சிவா (மலேசியா)

    திரு.பாரதி கிருஷ்ண குமார் (இந்தியா)

    மதியம்1:00 முதல் 2:00

    பகல் உணவு

    மதியம்: 2:00 முதல் 3:20 வரை

    அமர்வு 3

    புதிய சிறகுகள்

    தலைமை: முனைவர்.சிற்பி பாலசுப்ரமணியம்

    முனைவர். சேரன் (கனடா)

    திருமதி. அனார். (இலங்கை)

    பேரா: பெருந்தேவி (அமெரிக்கா)

    திருமதி. இரா. மீனாட்சி (இந்தியா)

    மதியம் 3:20முதல் 3:30 வரை

    தேநீர்

    மதியம் 3:30 முதல் மாலை 5:00 வரை

    அம்ர்வு 4.

    தமிழ் கூறும் ஊடக உலகம்

    தலைமை: திரு.நாகரத்தினம் கிருஷ்ணா

    திரு.இளைய அப்துல்லா (இங்கிலாந்து)

    செல்வி. கலைமகள் (சீனம்)

    திரு. அழகிய பாண்டியன் (சிங்கப்பூர்)

    முனைவர். திருப்பூர் கிருஷ்ணன்(இந்தியா)

    மாலை: 6:00 மணி

     

    கலைநிகழ்ச்சிகள்

     

     

    ஜனவரி 22 2013 புதன்கிழமை

    காலை 9:30 முதல் 11:00 வரை

    அமர்வு 5.

    தொழில் நுட்பம் தரும் வாய்ப்புக்கள்

    தலைமை:முனைவர் சேரன்

    மின்னுலக இலக்கியம் : முனைவர். பொன்னவைக்கோ (இந்தியா)

    கைபேசியில் தமிழ்: முத்து நெடுமாறன் (மலேசியா)

    மின் அச்சு: டாக்டர் பத்ரி சேஷாத்ரி (இந்தியா)

    மின்நூல் பதிப்பு: திரு. திருமூர்த்தி ரங்கநாதன் (அமெரிக்கா)

    11:00 முதல் 11:10 வரை

    தேநீர்

    11:10 முதல் 1:00 வரை

    அமர்வு 6

    மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில்

    தலைமை: முனைவர்.கா. செல்லப்பன்

    திரு.மா.லெனின் தங்கப்பா(இந்தியா)

    முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்(இந்தியா)

    கவிஞர் புவியரசு(இந்தியா)

    திரு. இந்திரன் (இந்தியா)

    மதியம்10:00மணி-2:00 மணி

    பகல் உணவு

    மதியம்2:00 மணி முதல்மாலை4:00 மணி வரை

    அமர்வு 7

    தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி

    தலைமை: முனைவர் ப.க. பொன்னுசாமி

    பேரா. உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி)

    திருமதி. வெற்றிச் செல்வி (அமெரிக்கா)

    பேரா. வீரமணி (ஜப்பான்)

    திரு. அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா)

    டாக்டர்.ந. சுப்ரமணியம் (அமெரிக்கா)

     

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

                                                                                                                                             நிறைவு விழா 

    தமிழ்ப் பண்பாட்டு மையம்:

    கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ என்னும் இலக்கோடு 19.03.2013 அன்று கோவையில் தொடங்கிய தொண்டு நிறுவனம் தமிழ்ப் பண்பாட்டு மையம்.

    தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கங்கள்:

    • 01. இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துதல்.
    • 02. தமிழ் வளம் பெருக்கும் நூல்களை வெளியிடுதல்.
    • 03. ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு முறையே ஒரு இலட்சம் பொற்கிழியும், விருதும் வழங்குதல்.

    தொடர்பு கொள்ள:

    தமிழ்ப் பண்பாட்டு மையம்,

    டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம்,

    டாக்டர் என். ஜி.பி. நகர், காளப்பட்டி சாலை,

    கோயம்புத்தூர் – 641 048

    தொடர்பு எண்:   0422 2369132

    மின்னஞ்சல்:     ctc@kmch.ac.in

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    திரைப்படப் பாடல்கள் எனும்போதே உடனடியாக நம் கவனத்தில் வருபவர்கள் கவியரசு கண்ணதாசனும் கவிஞர் வாலியும்தான். கவியரசை நாம் எல்லோருமே உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறோம் என்பது வாஸ்தவம்தான் என்றாலும் வாலியார் கூட எந்தவிதக் குறைவுமில்லாமல் நம் மனதில் நிறைந்தவர் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. பொதுவாக மக்களை நல்வழிப்படுத்தும் பாடல்களை எழுதுவதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வாலியாரும் சற்று அதிகமாகவே பிரபலமடைந்திருந்தார்கள். அதிலும் வாலியார் மக்கள் நலப் பாடல்களை எழுதிய விதமும், அதைத் திரைப்படம் மூலமாக சொல்லும் விதமும் அந்தத் தமிழானது தமிழர்கள் நெஞ்சத்தில் எந்நாளும் பதியும் விதமும் எத்துணை சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. தமிழை வாலி அவர்கள் கையாண்ட விதமும், அதே விகிதத்தில் செம்மொழியான தமிழ் அவருக்கு வளைந்து கொடுத்துச் சென்றதும் மிகவும் சுவையானவைதான்.

    கவிஞர் வாலியின் ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களில் அதுவும் மக்கள் நலனுக்காக எழுதிய பாடல்களில் அவருக்கென தனியிடத்தைக் கொடுத்த பாடல்கள் பல உண்டு. எண்ணிலடாங்கதவை. அவைகளில் ஒன்றுதான் ‘ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்’ பாடல். இதைப் பற்றி இந்த வார வல்லமை இதழில் கவிஞர் காவிரி மைந்தன் மிக அழகாக வர்ணித்திருக்கிறார். அதைச் சற்று பார்ப்போம். http://www.vallamai.com/?p=40993

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

    வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

    photoகோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

    கவிஞர் வாலி அவர்களின் ஒரு அருமையான பாடலை முன் வைத்து அழகான முன்மாதிரியையும் தந்து வாழ்க்கைப் பாடமாக எடுத்தெழுதி மகிழ்வித்த கவிஞர் காவிரி மைந்தன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: தஞ்சை திரு வெ. கோபாலன் அவர்களின் ‘நாற்பது வருஷ வாழ்வும் தாழ்வும்’ என்பதிலிருந்து

    இந்த பிரம்மச்சரியத்துக்குச் சில அரிய சக்தி உண்டு என்கின்றனர் பெரியோர். பன்னிரெண்டு வருடங்கள் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் இடும் சாபம் பலிக்கும் என்பர். அதைப் போல மற்றுமொரு பன்னிரெண்டாண்டுகள் கழிந்தபின் அவன் வாழ்த்தினால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற முடியுமாம். முப்பத்தியாறு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவன் வழங்கும் ஆசி பிறரது பாவங்களையும் நீக்கி அவனுக்கு நல்வாழ்வு தரமுடியும் என்பது பெரியோர் வாக்கு.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (3)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மனநிறைவோடு அயோத்தி திரும்பினான் தசரத மன்னன். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் தசரதன் நன்கு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். ‘வானில் கிரஹங்களின் நிலை தற்போது சரியில்லை. ஒருவேளை என் இறுதி காலம் நெருங்குகிறதோ என்னவோ? அதற்குள் என் தவப்புதல்வனை ராஜாராமனாகப் பார்க்கவேண்டும். அதற்கான ஆயத்தங்களை ஆரம்பிக்க வேண்டும். என் நிர்ணயத்தை யாரும் எதிர்க்கமாட்டார்கள். ஒருவேளை என் மாமன் கேகய நாட்டு மன்னன் நான் கைகேயியை மணக்கும்போது அவனுக்குக் கொடுத்த வாக்கினால் சற்று எதிர்க்கலாம். அவளுக்குப் பிறக்கும் புத்திரனே ஆட்சி செய்வான் என்று நான் அப்போது சொன்னதை நினைவூட்டலாம். அப்போதைய நிலை வேறு. புத்திர பாக்கியம் இல்லாத சமயத்தில் நான் ஏதேதோ கூறியிருக்கலாம். ஆனால் இப்போதைய நிலை வேறு. பட்டத்து அரசியான கெளசலையின் புதல்வன் தான் அரியணை ஏறவேண்டும். இதுவே இக்ஷ்வாகு குலத்தில் வாழையடி வாழையாக நடக்கும் நியதி. ஆகவே உடனே பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். பரதன் இல்லாதபோது ராமனுக்கு முடிசூட்டிவிட்டால் கேகயன் ஒன்றும் செய்ய முடியாது. கைகேயி பற்றி கவலை இல்லை. அவள் கெளசலையைவிட ராமன்மீது உயிரையே வைத்திருக்கிறாள்….’  என்றெல்லாம் எண்ணியவாறு அயோத்தி மன்னன் தன் இளைய மனைவியுடன் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்தான். ‘அவளுக்குப் பிடித்தது போர்க்காலத்திலும் வேட்டைக்குச் செல்லும் போதும் எனக்குத் தேர் ஓட்டுவதல்லவா? இப்போதே அவளுடன் அடவிக்குச் செல்வோம். வேட்டை முடிந்ததும் ஏகாந்தத்தில் அவள் ஒப்புதலைப் பெற்றுவிடலாம்’  என நினைந்து அவளுடன் வனத்திற்குப் புறப்பட்டான்.

    வேட்டை நன்றாக நடந்தேறியது. ஆனால் வயோதிகனான தசரதன் களைப்புற்று ஒரு மரத்தின் கீழ் அவள் மடிமீது தலை வைத்து உறங்கி விட்டான். கைகேயி தசரதனின் உறங்கும் அழகை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அச்சமயம் அம்மரக்கிளையில் வீற்றிருந்த ஒரு ஜோடிப் பறவைகள் பேசிக் கொண்டிருந்தன. கைகேயிக்கு அப்பட்சிகளின் மொழி தெரியும். பொழுது போக்காக அப்பறவைகள் பேசுவதைக் கேட்டாள்.

    ஆண் பறவை தன் பெட்டையிடம், “என்னுயிரே, கீழே மனைவியின் மடியில் படுத்துக் கொண்டிருப்பது யார் தெரியுமா? அவன் அயோத்தி மன்னன் தசரதன். அவள் அவனது இளைய மனைவி கைகேயி. இம்மன்னன் தன் பிரியமான மூத்த மகனுக்கு அவசர அவசரமாக முடிசூட்ட உள்ளான். பாபம்! இவனுக்கு வரப்போவது தெரிய வாய்ப்பு இல்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு பதினான்கு ஆண்டுகளுக்கு அயோத்தி சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் அவர் மரணிப்பது உறுதி. இந்நிலையில் அவன் மகன் அரியணை ஏறினால் என்ன ஆகும்?”

    பெண் பறவை, “ஆருயிரே! சாதாரண பட்சியான உமக்கு இதெல்லாம் எப்படி தெரிகிறது?”  என்றது.

    “அண்மையில் இவ்வரண்யத்தில் வேடன் ஒருவன் தன் அம்பை ஒரு பருந்தின்மீது எய்தான். அது குறிதவறி ஒரு முனிவர் மீது பாயவிருந்தது. அப்போது நான் அவர்முன் பறந்து அந்த அம்பினை என்மீது வாங்கிக்கொண்டு அவரைக் காப்பாற்றினேன். அவர் மனம் மகிழ்ந்து காயப்பட்ட என்னைத் தூக்கி பரிவோடு தடவிக் கொடுத்தார். உடனே என் காயம் ஆறிவிட்டது. மேலும் தன் தவ மகிமையால் எனக்கு வரப்போகும் நிகழ்வுகளை அறியும் சக்தியைக் கொடுத்தார்” என்றது ஆண் பட்சி.

    இதற்குமேல் கைகேயிக்கு அப்பறவைகளின் உரையாடலில் பிடிப்பில்லாமல் போயிற்று. ஒரு கணம் தன் இதயத்துடிப்பு நின்றுவிட்டதுபோல் உணர்ந்தாள். ‘என் இனிய ராமன் உயிருக்கு ஆபத்தா? அதனை என்னால் தாங்க முடியாது. எப்பாடுபட்டாகிலும் ராமன் தற்சமயம் ஆட்சிப் பட்டம் பெறுவதைத் தடுத்தே ஆக வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தாள். ’அயோத்தி அரியணையே, இன்னும் பதினான்கு ஆண்டுகள் கடந்து, ராமன் வரும் வரை காத்திரு‘ என மானசீகமாக அதற்கு ஆணையிட்டாள்.

    ’ஆனால் மன்னர் இதற்கு ஒப்புவாரா? பறவையின் கூற்றினை நம்புவாரா?’ என்னும் ஐயம் அவளுக்கு ஏற்பட்டது. ‘அதனாலென்ன? என்னுயிர்ச் சேடி மந்திரை இதற்கு ஒரு நல்ல யோசனை சொல்வாள். அது வரை இதனை யாருக்கும் சொல்லவேண்டாம்’ என சமாதானம் செய்து கொண்டாள்.

    உறக்கம் நீங்கி கண் விழித்த தசரதன் “கைகேயி உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசவேண்டும்” என்றான். “நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். மாலை வந்துவிட்ட்து. இப்போது நாம் ராஜதானி திரும்புவோம். இன்னொரு நாள் விவரமாக பேசுவோம்” என்று சொல்லி தசரதனை ரதத்தில் ஏற்றிக்கொண்டு அயோத்திக்கு விரைந்தாள்.

    அடுத்தநாள் காலை தசரதன் குலகுரு வசிஷ்டரிடம் சென்று ”நாளை ராமனுக்கு முடிசூட்ட வேண்டும். அதற்கான ஆயத்தங்களை தாங்கள் செய்ய வேண்டும்” என்றான். “அரசனின் ஆணைப்படியே” என்றார் முக்காலமும் அறிந்த அம்முனிவர் சுருக்கமாக. அதன்பின் புயல் வேகத்தில் செயற்பாடுகள் தொடர்ந்தன.

    ராமனை தன் மாளிகைக்கு அழைத்து, “குழந்தாய், நாளைக்கு உனக்கு பட்டாபிஷேகம் செய்யப் போகிறேன். நீ மைதிலியை (மிதிலையில் கண்டெடுக்கப்பட்ட ஸீதை) அழைத்துக்கொண்டு குலகுரு வசிஷ்டரிடம் சென்று அதற்கான நோன்பினை அனுஷ்டிக்க வேண்டும்” என்றான் தசரதன். ராமபட்டாபிஷேகம் எனும் செய்தி காட்டுத்தீபோல் பரவி அயோத்தி மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

    மாநகரின் கோலாகலம் கண்டு மந்திரை கோபத்தோடு கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தாள். “அசட்டுப் பெண்ணே, குடி முழுகிவிட்டதடி. இனி உன் சகஇல்லத்தி கெளசலைக்கு நீ கொத்தடிமை செய்யவேண்டும்”  என்று அரற்றினாள் மந்திரை.

    “என்ன சொல்கிறாய் மந்திரா” என்று வினவிய கைகேயியை நோக்கி, “ராமனுக்கு நாளை முடிசூட்டப் போகிறானடி உன் மன்னன். உன் மகன் பரதனை கேகய நாட்டுக்கு அனுப்பிய போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உன் கணவன் ஒரு பெரிய சதிகாரன். இனி நீ ஒரு பொருட்டல்ல அயோத்தி மன்னனுக்கு” என்றாள் அவள் சேடி.

    ‘இப்போது மந்திரை என்ன உபாயம் சொல்லப்போகிறாள் என்று பார்ப்போம்’ என நினைத்த கைகேயி சொன்னாள்: “அதெல்லாம் போகட்டும். இப்போது முடிசூட்டலை எவ்வாறு நிறுத்துவது என்று சொல்.”

    “உனக்கு உன் மணாளன் பண்டொருநாள் சம்பராசுரனுடன் நடந்த யுத்தத்தின் போது உன் தேரோட்டும் திறனைப் பாராட்டி இரண்டு வரங்களை அளித்தான் அல்லவா? அது நினைவிருக்கிறதா?”

    “உம்….”

    “இப்போது அந்த வரங்களைப் பயன்படுத்தி பரதனுக்குப் முடிசூட்டவேண்டும் என்றும் ராமன் நீண்டகாலம் வனவாசம் செய்யவேண்டும் என்றும் அரசனிடம் கேள்.”

    கைகேயியின் உள்ளம் உவகை கொண்டது. ‘இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! என்ன இருந்தாலும் மந்திரை மந்திரைதான். ராமனைக் காப்பாற்ற எவ்வளவு எளிதான உபாயம். ஆனால் பரதனுயிருக்கு ஆபத்தாயிற்றே’ என நினைத்து,  பிறகு ‘பரதன் ஒரு நாளும் முடிசூட்டிக்கொள்ள ஒப்புதல் அளிக்கமாட்டான்’ என்று ஆறுதல் கொண்டாள்.

    பின்னர் மாளிகைக்கு வந்த தசரதனிடம் இவ்விரு வரங்களைக் கேட்டு அவனை மூர்ச்சை அடையச் செய்தாள். மூர்ச்சை தெளிந்தபின் தசரதன் பலவாறாக அவளிடம் கெஞ்சிப்பார்த்தான். எவ்வாறு பலன் இருக்கும்? கைகேயிக்கு ராமனை எப்படியாவது காக்க வேண்டும் என்னும் வெறி கொழுந்துவிட்டு எரியும்போது அவள் பணிந்து போவாளா? மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு ராமன் பதினான்கு ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ”இல்லையேல் உயிர் விடுவேன்”  என்றாள். மீண்டும் மூர்ச்சை அடைந்தான் மன்னன்.

    உடனே ராமனைத் தருவித்து தான் பெற்ற வரங்கள் பற்றியும், அதன்படி ராமன் காட்டுக்குச் செல்லவேண்டிய அவசியத்தையும் விளக்கினாள். ’முதல் நாள் அரியணை அடுத்த நாள் அரண்யம்’ என்ற நிலை ராமனை எவ்வாறு பாதித்தது என்பதனை கம்பர் கவிதையில் கேட்போம்:

    இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே ஆகும்

    செப்ப அருங்குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்

    ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட

    அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

    [வர்ணிக்கும் வல்லமை பெற்ற எவராலும் எடுத்துச்சொல்ல முடியாத அரும் பெருங்குணங்களைப் பெற்றுள்ள இராமனது திருமுகத்தின் பேரழகுச் சிறப்பை இப்போது பார்த்தால், அது எம்மைப் போன்றவர்களால் சொல்வதற்குரிய எளிமை பெற்றதோ? ஏனெனில் இதற்கு முன்பு அத்திருமுகம் செந்தாமரை மலரை ஒத்திருந்தது. கைகேயி கூறிய சொற்களை அவற்றின் பொருள் உணரக்கேட்ட பின்பு, அப்போதுதான் அலர்ந்துள்ள புத்தம் புதிய செந்தாமரை மலரை அத்திருமுகம் வென்றுவிட்ட்து]

    சிறிதளவு மாற்றமும் வதனத்தில் இல்லாமல், ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனப்பகர்ந்து சிறிய தாயாரை வணங்கி ராமன் புறப்பட்டான்.

    கோபாவேசம் கொண்ட இளவல் லக்ஷ்மணனை சீற்றமில்லாதானும் ஸீதைமணாளனுமான ராமன் இவ்வாறு சமாதானப்படுத்தினான்:

    “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே

     பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்

     மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த!

     விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டது”

    [இளையவனே! நல்ல நீர் இல்லாமல் வற்றிப்போதல்  அந்நதியின் தவறு அன்று. அதைப்போலவே எனக்கு இப்போது நேர்ந்துள்ள நிலைக்குக் காரணம் தந்தையின் தவறு அன்று. நம்மைப் பெற்றவள் போலப் பேணி வளர்த்த அன்னை கைகேயி பெற்றுள்ள அறிவின் தவறும் அன்று. அவளுடைய மகனான பரதனின் தவறும் அன்று. பின்பு யாருடைய தவறு எனக்கேட்பின், இது ஊழ்வினை செய்த தவறாகும். இதற்காக நீ கோபம் கொண்டது ஏன்?]

    பின்னர் அவனையும் தன் கூட வருமாறு பணித்தான். ஸீதையிடம் விடைபெற விழைந்தபோது, அவள் கணவனுடன் காட்டுக்குச் செல்வதே தன் தருமம் என்று பிடிவாதம் செய்து ராமனை தன் வழிக்குக் கொணர்ந்தாள். மூவரும் அன்னைமார் கெளசலை சுமித்திரை இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு அமைச்சர் சுமந்திரன் தேரோட்ட வனத்திற்கு ஏகினர். திடீர் திருப்பத்தால் திடுக்கிட்ட அயோத்திவாழ் மக்கள் ஒரு படைபோல் திரண்டு அவர்களைத் தொடர்ந்தனர்.

    ’கங்கையிரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான்’ எனப்புகழ் பெற்ற படகோட்டி அரசனான குஹன் உதவியோடு தொடரும் மக்கள் யாரும் அறியாமல் மூவரும் இரவோடு இரவாக நதியினைக் கடந்து சித்திரகூடம் சேர்ந்தனர்.

    இதற்கிடையில், புத்திரனின் பிரிவை தாங்கமுடியாமல் தசரதன் வானுலகம் எய்தினான். பரதனுக்கும் சத்ருக்கினனுக்கும் செய்தி அனுப்பி வரவழைத்தனர். நடந்தவற்றை அறிந்த பரதன் கடுஞ்சினமுற்று இத்தகைய களங்கத்தைத் தனக்கு ஏற்படுத்திய அன்னையை பல்வகையாலும் சாடினான். கைகேயி பொறுமையாக அவற்றைத் தாங்கி, தன் மகனின் உன்னதமான உள்ளத்தை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொண்டாள்.

    அயோத்தி அரசனின் ஈமச்சடங்குகள் நடந்தேறியபின் வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்டினார். அவன் அதனை மறுத்து காட்டிற்குச் சென்று அண்ணனை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கப்போவதாக பறை சாற்றினான். அனைவரும் புடைசூழ பரதன் காடு நோக்கிச் சென்றான். குஹன் உதவியோடு அனைவரும் சித்திரகூடம் சேர்ந்தனர்.

    அயோத்தி நிகழ்வுகளை அறிந்த ராமன் தன்பொருட்டு தந்தை இயற்கை எய்த  நேர்ந்ததை எண்ணி வருந்தினான். பரதன் அண்ணனை நாடு திரும்பி ஆட்சி பொறுப்பினை ஏற்குமாறு வேண்ட, ராமன் தந்தையின் ஆணையை மீறுதல் தகாது என்று சொல்லி பரதனையே ஆளுமாறு பணித்தான்.

    குலகுரு வசிஷ்டர்முன் சகோதரர்களின் வாக்குவாதங்கள் தீவிரமாக நடந்தன. அவர் பெருமிதத்தோடு பரதனை நோக்கி, “உன் போற்றத்தக்க நடப்பினால் ரகுகுலத்திற்கே திலகமெனத் திகழ்கிறாய். ராமன் தன் தருமத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டான். நீதான் சற்று தழைந்து போகவேண்டும்”  என்றார்.

    இறுதியில் பரதன் அண்ணனின் ஆணைப்படி நாடு திரும்புவதாகக் கூறி, பதினான்கு ஆண்டுகளுக்கு ராமனின் பிரதிநிதியாகவே செயல்படுவதாக உறுதி அளித்து, அவன் பாதுகைகளைப் பவ்யமாகப் பெற்று தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டான். ”அண்ணலே! நீங்கள் அன்புடன் ஈந்த உமது புனித அடிநிலையே இனி இந்நாட்டை ஆளப்போகிறது. சரியாக பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் நீங்கள் அயோத்தி அரியணை ஏறவேண்டும். அதுவரை நகர்ப்புறமான நந்திகிராமத்தில்தான் நான் ஒரு துறவிபோல் வசிப்பேன். குறிப்பிட்ட கெடு கடந்து தாங்கள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன்” என்று கண்ணீர் மல்கக் கூறிய பரதனை ராமன் அணைத்துக் கொண்டு ”உன்போன்ற தம்பியைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ” என்று சொல்லி விடைகொடுத்தான்.

    ‘அப்பாடா, என் மகனும் உயிர் பிழைத்தான். எங்கே ராமன் சொல்படி பரதன் அரியணை ஏறிவிடுவானோ என பயந்து கொண்டிருந்தேன்’ என்று கைகேயி பெருமூச்சு விட்டாள். ‘ஆருயிர்க் கணவனை இழந்ததோடு எவ்வளவு மகத்தான நிந்தனைக்கு ஆளாகிவிட்டோம். அதனாலென்ன, என் மனத்துக்கினிய ராமனுக்காக இந்த அபவாதத்தைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதற்குப் பரிசாக என் மைந்தன் ”படியிற் குணத்து பரத நம்பி” ஆகிவிட்டான்’  என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் நெகிழ்ந்தாள் அந்த அன்னை.

    பாதுகா பட்டாபிஷேகம் நடந்தபின், நந்திகிராமத்தில் வசித்த பரதனும் சத்ருக்கினனும் தவக்கோலம் பூண்டு தங்கள் கடமைகளை, வசிஷ்ட மாமுனியின் அறிவுரைப்படி நிறைவேற்றி வந்தனர்.

    Share
  • பாவம் ஏன் பரிதாபப்படவில்லை?

    ​தேவா

     
    பெண்ணே!!

     

    உன் உடம்பு மட்டுமே

    உல்லாச ஊஞ்சலாகிவிட்டது,

    ஜாதி பேதமின்றி,

    வயது வரம்பின்றி, அனைவரும் ஆடிமகிழ்கின்றனர்,

     

    உன் ஆபரணத்தைத்தான் அபகரிக்கிறார்கள் என்றால்,

    உன் அழகு பெட்டகத்தில், கற்பு கூட சூறையாடப்படுகிறது,

    அமிலத்தில் அபிஷேகம் உனக்கு மட்டுமே செய்யப்படுகிறது,

    வெறி நாய்களின்  இச்சைக்கு உன் சதைகள் சிதைக்கப்படுகிறது,

     

    பாவம் கூட உனக்காக பரிதாபப்படவில்லையே!

     

    பிரம்மன் உன் படைப்பில் வஞ்சனை செய்து விட்டானடி,

    அழகைத் தந்தவன் ஆபத்தையும் தந்துவிட்டான்,

    என் செய்வது,

     

    ஆண்களின் பசிக்கு பெண்கள் இ​ரையாவது,

    என்றோ ஆரம்பமாகிவிட்டது,

    அடுத்தவன் பெஞ்சாதியை,

    ஆண் ஜாதிதானே துகில் உரித்தது,

    அன்று கண்ணன் சேலை தந்தான்,

    இன்று உன் சடலத்திற்கு மட்டுமே போர்த்தப்படுகிறது,

     

    ஆனாலும் ஆச்சரியம்!

    எத்தனை நடந்தாலும் உன் பொறுமையின் பெருமைதான்

    ஆச்சரியம், அதிசயம், நீ மட்டுமே அற்புதம்,

    மற்றவை அப்புறம்,

     

    போதுமம்மா போதும்,

    பட்டது போதும், உன்னை தொட்டது போதும்,

    நீ ​கெட்டது போதும்,

     

    கவலைப்படாதே!

    இனியொரு உலகு படைப்போம்,

    உனக்கொரு விதி செய்வோம்…

    அங்கு உன் சுதந்திரக்கொடியை மட்டுமே பறக்கவிடுவோம்…

     

    Share
  • பெற்​றோருக்கு மரியா​தை

    பர்வத வர்தினி

    அந்த நாள் அவளுக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.

    சங்கீதாவின் தந்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனத்தில் சந்தேகம் எனும்​ பேய் புகுந்துவிட்டிருந்தது. ஒரு​வே​ளை நம் மக​ளே நம்மிடம் பொய் சொல்கிறாளோ? இத்தனை நாளும் சுதந்திரம் கொடுத்து வளர்த்ததே நம் தவறுதானோ! தன் உறவினர்கள், நண்பர்க​ளை​யெல்லாம் விட மகளுக்கு அதிகமாகவே சலு​கைகள் வழங்கியவர். சிறு வயதிலிருந்தே மிகுந்த அக்கறையுடன் அவளுக்கு அ​னைத்​தையும் கற்றுத் தந்தவர். ஒழுக்கமுள்ள​ பெண்ணாக வளர்த்திருக்கி​றோம் என்று தனக்குத்தானே இறுமாந்திருந்தவர். இன்​றோ அவர் மனம் படாதபாடுபட்டுக் ​கொண்டிருந்தது. கோ எட் பள்ளியில் தன் மகளை படிக்க ​வைத்திருந்தார். அப்போதெல்லாம் எந்த தொந்தரவும் அவருக்கில்லை. சந்தேகம் தோன்றியதில்லை. கம்ப்யூட்டர் கிளாசும் ஒரு வருடம் ​சென்று வந்தாளே, அப்போதும் ஏதும் தோன்றியதில்லை. எத்தனையோ நண்பர்கள் அவளுக்கு. ஆனால் அனைவரைப் பற்றியும் வீட்டில் சொல்லியிருக்கிறாள். தினம் தினம் எங்கு​செல்கிறாள் என்ன ​செய்கிறாள் என்று ம​றைத்ததேயில்லை. தன் மகளைப் பற்றி எத்தனை கர்வம் அவருக்கு! படிப்பிலும் சுட்டி, ஒழுக்கத்திலும்​ கெட்டி! இப்படி நினைத்திருந்த அவர் மனத்தில் ஒரு மாயத்தி​ரை விழுந்திருந்தது. ஒருவேளை நமக்குப் போக்குக்காட்டி கொண்டிருக்கிறாளா என்ன?!

    சங்கீதாவின் ஆண் நண்பர்களை கூட வீட்டிற்கு அழைத்திருந்தாளே! அப்போதுகூட நாம் ஏதும் தடை சொல்லவில்லையே! எல்லாரிடமும் சகஜமாக இருந்ததாகத் தான் தோன்றியது. ஆனால் இப்​போ​​தெல்லாம் தொலை​​பேசியில் உ​ரையாடுவது அதிகரித்திருக்கிறது. அதுவும் நானோ, அவளது அம்மாவோ அந்த அறையில் இருந்தால் குரல் மிகவும் குறைவாக ரகசியம் ​​பேசுவது ​போல் ​பேசுகிறா​ளே! யாரிடம் அப்படி ​பேசுகிறாள்? ​கேட்டால் தன் ​தோழிகளில் யார் பெய​ரையாவது குறிப்பிடுகிறாள். ​தோழியுடன்​பேசுவதற்கு குரல் சன்னமாக ​வேண்டிய அவசியம் என்ன?

    தற்சமயம் அவள் படித்த கம்ப்யூட்டர் ​சென்டரில் மா​லை​ நேரத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறாள். இவளது ​வே​லை என்ன​மோ 4 மணி முதல் 8 மணி வரைதான். அதன் பின் கம்ப்யூட்டர் ​சென்டரை மூடி விடுவார்கள். இங்கிருந்து 3 கிமீ ​தொ​லைவிலிருக்கும் இடத்திற்கு செல்வதற்கும் திரும்ப வருவதற்கும் எவ்வளவு ​நேரம் ​தே​வைப்படும்? 4 மணி​ வே​லைக்குச் ​செல்ல 2.30 மணிக்​கே கிளம்பி விடுகிறாள். திரும்பவும் இரவில் வீடு திரும்ப தினமும் 10 மணி ஆகிறது. என்ன தான் ​வே​லையிருந்தாலும் 2 மணி​ நேரம் தாமதமாக வர ​வேண்டிய அவசியம் தான் என்ன?

    அப்படியும் மனம் ​பொறுக்காமல் ​ஒருநாள் ​கேட்ட​போது இப்​போ எக்ஸாம் வரப்​போகிறது அப்பா; அதற்கான ஏற்பாடுகள் ​​செய்வதில் தாமதமாகிறது; இன்னும் நி​றைய ​வே​லை பாக்கியிருக்கிறது என்கிறாள்.

    ‘இல்​லை, எனக்கு நம்பிக்​கையில்​லை. அவளுடன் ​வே​லை பார்க்கும் அந்த​​லெனின் மீது தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.’ அவரது மனம் மீண்டும் அவரது சந்​தேகத்​தை கிளறியது. ​

    லெனின் பற்றி சங்கீதா ஏற்கன​வே​ சொல்லியிருக்கிறாள். தன்னு​டைய நண்பனாக வீட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறாள்.

    ‘அப்படி ஏதும் இருந்தால் நம்மிடம் ​தைரியமாக நண்பன் என்று அறிமுகம் செய்திருப்பாளா?’ மனம் குழம்பியது.

    ‘இதுவும் இந்த ​பெண் பிள்​ளைகளின் வித்​தைதான்’ மனத்தின் மூலையிலிருந்து குரல் எழும்பியது. ‘ஏற்கனவே அறிமுகம்​ செய்து விட்டால் அவர்க​ளைப் பற்றி நமக்கு ​தெரியப்படுத்திவிட்டால், பிற்பாடு மிக எளிதாக நம் சம்மதம் வாங்கி விடலாம் என்று நி​னைக்கிறா​ளோ?’

    ‘அப்படி​யொன்றும் இருக்காது! அவள் என் மகள் இல்​லையா? அவ​ளை நான் சந்​தேகிக்கலாமா?’ மனத்திற்குள்​ளே​யே ​பெரிய ​​போராட்டம் எழுந்தது.

    ஆனால் இத்த​னை நாளும் இந்த விஷயங்க​ளெல்லாம் அவர் மனத்தில் சந்தேகத்​தை வி​தைக்கவில்​லை. ஆனால் இன்று வந்த ​போன்கால்… அது அல்லவா மனத்​தை இந்தப் பாடுபடுத்துகிறது!

    சங்கீதாவின் தந்​தை கமலக்கண்ணன்​ சொந்தமாக ஒரு சிறிய டிபார்ட்​மெண்ட் ஸ்​டோர் வைத்திருந்தார். சிறிய ​பெட்டிக்க​டையாக​ தொடங்கி வாழ்க்​கையில் நி​றைய கஷ்டப்பட்டு படிப்படியாக முன்​னேறி தற்போதுள்ள நி​லைக்கு உயர்ந்திருந்தார். அவருக்கு பல்​வேறு இடங்களில் வணிகத் ​தொடர்புகள் இருந்தன. அவர்களில் ஒருவரான ​கோபாலன்தான் சங்கீதாவின் மீது சந்தேகம் வரக் காரணம்.

    கா​லையில் ​போன் ​செய்த ​கோபாலன்​ கொஞ்சம் தயக்கத்துடன் “கண்ணன்! நீங்க பல காலமா என்​னோட நண்பர். வியாபாரத்​தையும் தாண்டி நாம நல்ல நண்பர்களா இருக்​கோங்கற எண்ணத்துலயும் உங்க ​மேல உள்ள அக்கறையிலயும் ​சொல்​றேன். நீங்க வியாபாரத்துல காட்டுற அக்க​றையில ​கொஞ்சம் குடும்பத்துலயும் காட்டணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

    “என்ன விஷயம் ​கோபால்! ஒரு ​பெரிய பீடி​கை​யே ​​​போடறீங்க? என்ன விஷயம்?” என்று சிரித்துக்​கொண்டே ​கேட்ட கமலக்கண்ணனுக்கு அதற்குப்பின் ​பேசிய ​கோபாலனின் ஒவ்வொரு வார்த்தையும் அதிர்ச்சியளித்தன.

    “நேத்து ராத்திரி ஒரு 9 மணி வாக்கில உங்க ​பொண்ணு சங்கீதா​வைப் பார்த்தேன்; அதுவும் ஒரு ​பைய​னோட ​தெருவில நின்னு ​பேசிக்​கிட்டிருந்தா. சரி ஏ​தோ ​தெரிஞ்சவங்க ​போலிருக்குன்னு என் ​வே​லை​யைப் பார்க்க போயிட்டேன். என் ​வே​லை முடிஞ்சி ஒரு 9.45 மணிக்கு திரும்பி ​போ​றேன், அப்​போவும் அ​தே எடத்துல நின்னு அ​தே ​பைய​னோட​ பேசிக்கிட்டிருந்தா. ராத்திரி ​நேரத்துல ​தெருவுல நின்னு ஒரு ​பைய​னோட பேசிக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கு? எனக்கென்ன​மோ அவங்க ​ரெண்டு ​பேரு ​மேலயும் சந்தேகமா இருந்துது! இந்தக் காலத்துப் பசங்கதான் தடுக்கி விழுந்தா காதல்,  கத்திரிக்காய்னு நம்ம உசிரை வாங்குறாங்க​ளே! எதுக்கும் உங்க காதுல​போட்டு ​வெச்சா முன்​னெச்சரிக்​கையா நடந்துக்குவீங்கன்னு தான்​ சொல்லி​வெச்​சேன். பார்த்துக்​கோங்க… ​பொண்​ண வளத்தி​யோ கண்ண வளத்தியோன்னு எங்கம்மா அடிக்கடி ​சொல்லுவாங்க” என்று ​சொல்லி போனை ​வைத்துவிட்டார்.

    அவருடன் ​பேசியதிலிருந்து கமலக்கண்ணனுக்கு ​வே​லை சரியாக ஓடவில்லை. மனப் போராட்டத்திலிருந்து தப்பிக்க முடியவில்​லை. முதலில் இ​தைப் பற்றி சரியாக ​​தெரிந்து​கொள்ள​வேண்டும் என்று ​தோன்றியது. கால்​சென்டரில் ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த மகன் ​வெற்றிச்​​செல்வனுக்கு​ போன்​​ செய்து விஷயத்​தைத் தெரிவித்தார்.

    ​வெற்றி உட​னே, “கவ​லைப்படாதீங்கப்பா! என் நண்பன் மூலமாக நான் விசாரிக்க​றேன்” என்று கூறினான்.

    என்னதான் விசாரிப்பதாக மகன் கூறியிருந்தாலும் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்​கொள்ள முடியவில்​லை. சீக்கிர​மே தன் ​வே​லைக​ளை முடித்துவிட்டு க​டையில் இருந்த உதவியாள​னை க​டை​யை பூட்டி விட்டு​ செல்லும்படி ​சொல்லிவிட்டு வீட்டிற்கு வி​ரைந்தார். மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இன்னும் சங்கீதா வீட்டிற்கு வரவில்​லை. ஆனால் அடுத்த10 நிமிடங்களில் சங்கீதாவும் வீட்டினுள் நு​ழைந்தாள். உள்ளே நுழையும்​ போதே அப்பா​வைப் பார்த்தவளுக்கு அவர் ஏ​தோ​ கோபமாக இருக்கிறார் என்று ​தோன்றியது.

    அதற்​கேற்றார் ​போல் அவள் உள்​ளே நு​ழைந்த மறுகண​மே கமலக்கண்ணன்​கோபமாக “மணி என்ன ஆகுது ​தெரியுமா? இது தான் வீட்டுக்கு வர்ற ​நேரமா? எங்க ​போய் ஊர் சுத்திட்டு வர்​றே?” என்று சரமாரியாகக் ​கேள்வி​க​ளை கேட்டார்.

    சப்தம் ​கேட்டு உள்ளிருந்து சங்கீதாவின் தாய் மணி​மேக​லையும்​ வெளி​யே வந்தாள். “ஏங்க ​பொண்ணு உள்ளே வந்ததும் வராததுமா கத்தறீங்க? என்னாச்சு?” என்றாள்.

    அத்த​னைக் ​கோபமும் ம​னைவி மீது திரும்ப, அவர் எரிம​லையானார். “எல்லாம் நீ புள்​ளைங்கள வளக்கற லட்சணம்தான். அவ எங்​கே ​போறா, என்ன பண்றா, எப்​போ வீட்டுக்கு வர்றா எதுவு​மே நீ கவனிக்கறதில்லை. அதான் நான் ​கேக்க ​வேண்டியிருக்கு. ​சொல்லுடி, உன்​னைத் தான்​ கேட்​டேன்… எங்கே போயிட்டு வர்​றே?” என்றார்.

    சங்கீதா தன் தந்​தை​யை இத்த​னைக் ​கோபத்தில் கண்டதில்​லை. “எப்​போதும்​போல ​​வே​லைக்குத்தான்பா ​போயிட்டு வ​ரேன். ​வே​றெங்கியும் ​போக​லை”  என்றாள்.

    “8 மணிக்கு முடியற ​வே​லைக்கு நீ ​தெனம் வீட்டுக்கு 10 மணிக்கு ​வர்​றே. என்ன நி​னைச்சிருக்​கே மனசுல?” என்றார் பதிலுக்கு.

    “இல்லப்பா ​​வே​லை முடிய 9.15 ஆச்சு. எல்லாம் ஏறக்கட்டிட்டு ​சென்டரை பூட்டிட்டு ​லெனின் கூட​ பேசிக்கிட்டே வந்​தேன். ​அவ்​ளோ தான்பா… நீங்க ஏன் இன்னிக்கு இவ்வ​ளோ​ கோவமா இருக்கீங்க?”

    “நி​னைச்​சேன், அந்த ​லெனின் பய கூட ​பேசி கும்மாளம் அடிச்சிட்டுதான் லேட்டா வர்​றேன்னு… ஊர்ல போறவன் வர்றவன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணிட்டுப் ​போறான், ​பொண்​ணை ஒழுங்கா வளக்கத் தெரியலைன்னு… ​தெருவில நின்னு நீ மணிக்கணக்கா​ பேசறது ஊ​​ரேப் பாக்குது. அப்டி​யென்னதான் பேசுவீங்க ராத்திரி​ நேரத்துல? அதுவும்​ தெருவுல நின்னுக்கிட்டு?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் அவர்.

    “அ​தெல்லாம் இல்லப்பா! யா​ரோ தப்பா​ சொல்லியிருக்காங்க. ஏ​​தோ ஒரு 10 நிமிஷம் ​பேசியிருப்​போம். அவ்ளோதான்” என்றாள் சங்கீதா.

    ​கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர் “என்ன நி​னைச்சிருக்​கே? அப்பனை ஏமாத்திபுடலாம்னா? அவ​னோட காதல் கண்றாவின்னு ஏதாவது பண்ணித்​தொலைக்கறியா? அப்டி ஏதுமிருந்தா இப்​போ​வே ​இந்த நிமிஷ​மே அந்த எண்ணத்​தை மறந்துடு… புரிஞ்சுதா? இனி ஒரு தரம் உன்​னை அங்கப் பார்த்தேன் இங்கப் பார்த்தேன்னு ​கேள்விப்பட்​டேன்; நடக்கற​தே ​வேற! ஜாக்கிர​தை!!” என்று உறுமிவிட்டு உள்​ளே ​சென்றார்.

    சங்கீதா மிகவும் உ​டைந்து ​போனாள். கண்களில் கண்ணீர் தா​ரைத் தாரையாக வழிந்தது. ​வேண்டா வெறுப்புடன் உணவருந்திவிட்டு​ சென்று படுத்தாள்.

    ‘ஏன் நம் அப்பா நம்​மை நம்பவில்​லை. நான் ஏதும் ​பொய் சொல்லவில்லையே. ​லெனின் மிகவும் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. அவனுடன் ​பேசுவதில் ​பொழுது ​போவதும்​ தெரியாது. கிண்டல், ​கேலி எல்லாம் ​செய்வான். இருப்பினும் ​கேலி என்கிற ​பெயரில் மனதைப் புண்படுத்தமாட்டான். ஆனால் தா​னோ, அவ​னோ ஒருமு​றை கூட​ நட்​பைத் தவிர ​வே​றெந்த எண்ணத்துடனும் பழகியதில்​லை என்பதை எப்படி அப்பாவிற்கு புரிய ​வைப்பது?’ குழப்பமான மனநி​லையுடனும் அழுத கண்களுடனும் சங்கீதா தூங்கிப்​ போனாள்.

    வீட்டில் நடந்த எதுவும் அறியாத அவளது ச​கோதரன் ​வெற்றிச்​செல்வன் அலுவலகத்திலிருந்து தன் நண்பன் விக்​னே​ஷைத் ​தொ​லை​பேசியில் தொடர்பு​கொண்டான். அவனிடம் சுருக்கமாக நடந்த​தைக் கூறினான்​.

    “டேய் நீதான் எனக்கு உதவி பண்ணனும். உனக்கு சங்கீதா​வோட ஃப்ரெண்ட் லதா​வை ​தெரியும்ல. அவங்க ​ரெண்டு ​பேரும் ​ரொம்ப கி​ளோஸ். சங்கீதா தன்​னோட எல்லா ​பெர்சனல் விஷயமும் கண்டிப்பா லதா கிட்ட சொல்லியிருப்பா. லதா உனக்கும் ஃப்​ரெண்ட்ங்கறதால அவ மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட​ சொல்லு. உண்மையிலேயே எதுவும் விஷயம் இல்லாம இருந்து நம்ம அவசரப்பட்​டோம்னு இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் சொல்​றேன்” என்றான்.

    “கவ​லைப்படா​தேடா! நான் லதாகிட்ட ​பேசிட்டு உன்​னை நா​ளைக்குக் கூப்படறேன்” என்றான் விக்​னேஷ்.

    மறுநாள் கா​லை இன்னமும் தணியாத ​கோபத்துடன் சங்கீதாவிடம் முகம்​கொடுத்து ​பேசாமல் வேலைக்குக் கிளம்பிச் ​சென்றார் கமலக்கண்ணன். கவலை ​தோய்ந்த முகத்துட​னே​யே தன் ​​வே​லைக​ளைச் ​செய்தாள் சங்கீதா.

    மதியம் வீட்டிலிருந்த ​தொ​லை​பேசி அலறியது. சங்கீதா எடுத்துப்​பேசினாள். மறுமு​னையில் லதா.

    “சங்கீ, எப்படிடி இருக்​கே? உன்கிட்​டே ​பேசி ​ரொம்ப நாள் ஆச்​சேன்னு கூப்டேன்” என்றாள்.

    சங்கீதாவிற்கு சந்​தோஷமானது. என்ன இருந்தாலும் எந்த பிரச்சினையிருந்தாலும், நண்பர்களுடன்​ பேசினா​லே ஒரு ஆறுதல் தான் என்று எண்ணிக் கொண்டாள். இருவரும் சிறிது ​நேரம் ​பேசிக்​கொண்டிருந்தார்கள். சங்கீதாவிற்கு மனம் ​லேசானது​ போலிருந்தது. லதாவிடம் ​நேற்று நடந்த​தைச் சொல்லலாமா என்று நி​னைத்தாள் சங்கீதா. பிறகு அடுத்த நிமிட​மே ‘அவ​ளே ​ரொம்ப நாள் கழிச்சு ​பேசறா… எதுக்கு அவளையும் சங்கடப்படுத்தணும். பிறகு ​சொல்லிக்கலாம்’ என்று மனம்​சொன்னது.

    இப்படி நி​னைத்துக் ​கொண்டிருக்கும்​போ​தே லதா​ கேட்டாள், “ஆமாம்… உன்​  வே​லை எப்படி போயிட்டிருக்கு​? வேற ​வே​லை எதுவும் ​தேடறியா?”

    “​வே​லை நல்லாப் ​போகுதுடி. ஆனா இது பார்ட் ​டைம் தா​னே. நானும் ​வேற வேலைக்கு முயற்சி பண்ணிட்டுதான் இருக்​கேன். கி​டைச்சா மாறிடு​வேன். இங்கே இப்​போ எக்ஸாம், அது இதுன்னு லேட்டாகுது. ​ரொம்ப டயர்டாகிடுது” என்றாள்.

    “ம்ம்… ஆனா, எதுவாயிருந்தாலும் நீ எதுக்கும் சீக்கிர​மே வீட்டுக்கு வந்துடுடி. நம்ம நி​னைக்கற மாதிரி எல்லாரும் நம்​மைப் பத்தி நினைக்கமாட்டாங்க. அநாவசிய ​பேச்சு வார்த்​தைக்​கெல்லாம் நாம இடம் ​வெச்சுக்கக்கூடாது. ​நம்ம​செய்யாத தப்புக்கு பழி ​சொல்ல ஊ​ரே தயாரா இருக்கும். அதனாலதான் சொல்றேன். நீ அதிக ​டைம் எடுத்து அங்​கே ​வே​லை ​செஞ்சு உனக்கு ஒண்ணும் ஆகப் ​போறதில்​லை” என்றாள் லதா.

    சங்கீதாவிற்கு குழப்பம் அதிகமானது. ‘என்ன ​சொல்ல வருகிறாள்? ​நேற்று வீட்டில் நடந்ததற்கும் இவள் இன்று​ பேசுவதற்கும் ஏ​தோ சம்பந்தம் இருப்பது​போலிருக்கிற​தே. ஏ​தோ பட்டும் படாமலும் ​சொல்ல முயற்சி ​செய்கிறாள்​போல ​தோன்றுகிறது.

    சங்கீதா சட்​டென சுதாரித்துக் ​கொண்டு “என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு சம்பந்தமில்லாம் அட்​வைஸ் பண்றே… என்ன விஷயம்?” என்று​கேட்டாள்.

    “இல்ல இல்ல… அப்டி​யெல்லாம் ஒண்ணும் இல்​லை. ஜஸ்ட் மனசுல தோணின​தை ​சொன்​னேன்” என்று மழுப்பினாள் லதா.

    சங்கீதா விடுவதாக இல்​லை. ”இல்​லை, நான் நம்ப மாட்​டேன். என்ன விஷயமோ அ​தைத் ​தெளிவா சொல்லு. இல்​லைன்னா இதுக்கப்பறம் உன்கிட்ட​ பேசவே மாட்​டேன்” என்றாள்.

    லதா சற்று அ​மைதியானாள். பிறகு கூறினாள் “தப்பா​ எடுத்துக்கா​தேடி! இன்னிக்கு விக்​னேஷ் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. உன்​னைப் பத்தி ​ரொம்ப விசாரிச்சாரு. அப்படி​யே உன் ஃப்​ரெண்ட் ​லெனினும் நீயும்…” என்று இழுத்தாள்.

    “ம்ம்…​சொல்லு” என்றாள் சங்கீதா.

    “இல்​லை… நீங்க ​ரெண்டு ​பேரும் லவ் பண்றீங்களான்னு என்கிட்​டே​ கேட்டாரு. அப்படி​யெல்லாம் ஒண்ணும் இல்​லைன்னு நான் ​​தெளிவா​ சொல்லிட்​டேன். பட், ஏன் இ​தெல்லாம்​ கேக்கறீங்கன்னு அவர்கிட்டே விசாரிச்சேன். அப்​போ தான் ​தெரிஞ்சுது உங்க அண்ணன் தான் விசாரிக்க​ சொன்னாராம். நீ தினமும் லேட்டா வர்றியாம். உன்​னை ​​​லெனின் கூட யாரோ பார்த்தாங்களாம். உன் வீட்ல உன்​னை ஏ​தோ சந்தேகப்படறாங்க​ போலிருக்கு. விக்​னேஷ் வந்து போனதிலிருந்து எனக்கு மனசு ​​கேக்கலை. உன்​னை முன்​னெச்சரிக்​கைப் பண்ணலாம்னுதான் ​போன் பண்​ணேன். நீ இதுல இன்வால்வ் ஆக​லைன்னு எனக்கு நிச்சயமா​ தெரியும். ஆனா​ தேவையில்லாத பழி உன் ​மேல விழக் கூடா​தேன்னுதான்​ சொன்னேன்” என்று முடித்தாள் லதா.

    சங்கீதாவிற்கு த​லையில் இடி விழுந்தது ​போலிருந்தது. ‘என் மீது சந்​தேகம் வந்த​தே எனக்கு கஷ்டமாயிருந்தது. ​போதா​தென்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் என்​னைப் பற்றி விசாரிக்கிறார்க​ளே’ என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.

    “சரி லதா! நான் பாத்துக்க​றேன்… ​பை” என்று கூறி ​போ​னை​ வைத்தாள் சங்கீதா.

    அன்று மா​லை வழக்கம் ​போல்​ வே​லைக்குச் ​சென்றாள். ​வே​லையில் மனம் சரியாக ஒப்பவில்​லை. தலைவலி என்று கூறிவிட்டு 7 மணிக்​கெல்லாம் கிளம்பினாள். அங்கிருந்து பக்கத்திலிருந்த ​​கோவிலுக்குச் சென்று மனம் அமைதிய​டைய அமர்ந்திருந்தாள். பிறகு கிளம்பி ​நே​​​ரே வீடு வந்து​ சேர்ந்தாள். சாப்பிட்டு முடித்து விட்டு சீக்கிர​மே உறங்கச் ​சென்றாள். மனம் மிகவும்​சோர்வாக இருந்தது. நா​ளை​யே அப்பாவிடம் ​தெளிவாகப் ​பேசி விட​வேண்டும். வீணான சந்​தேகம் வாழ்க்​கை​யை ​பெரும் பிரச்சி​னையாக்கிவிடும். அதற்கு ஒரு முற்றுப் புள்ளி ​வைக்க ​வேண்டும் என்று முடிவு ​செய்து​கொண்டாள்.

    ​யோசித்துக்​ கொண்​டே எப்​போது உறங்கினா​ளோ ​தெரியாது. சில தடமுட சத்தங்களினால் பாதியில் விழித்துக்​ கொண்டாள். ச​மையல​றையில் சாப்பிட்டுக்​ கொண்​டே அவளது அப்பா, அம்மாவிடம் ​​பேசியது காதில் விழுந்தது.

    “அவ​னைப் பார்த்துட்டுதான் வ​ரேன் இப்​போ”

    “யா​​ரைங்க?”

    “அதான் அந்த ​லெனின்”

    “ஏங்க, குடிச்சிருக்கீங்க ​போலிருக்கு. அப்படி​யேவா அங்​கேப் ​போனீங்க? ஏங்க இப்டி பண்றீங்க?”

    “அடிப்​போடி! அவ என் ​பொண்ணுடீ. அவ​ளை எப்டி​யெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்​தோம். அவ நல்லாயிருக்கணும்னு நி​னைக்கறது தப்பா? ​ அந்தப் பையன்கிட்ட​யே ​போய் ​நேருக்கு ​நேரா ​​கேட்டுட்டேன். ஆனா அவனும் அப்படி எதுவும் இல்​லைன்னு ​சொன்னான். நல்லா ஏறுஏறுன்னு ஏறிட்​டேன்… கடைசியா அவன் ஒரு வாக்குக் ​கொடுத்தான். அதுக்கப்பறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. கிளம்பி வந்​தேன்”

    “என்ன வாக்கு?”

    “’கவ​லைப்படாதீங்க சார்! எனக்கு அப்படி​யொரு எண்ணம் இதுவரையிலும் இல்​லை. ஒரு ​வே​ளை உங்கப் பொண்​ணே வந்து என்​னை விரும்பறதா​சொன்னாலும் நான் அ​தை ஏத்துக்க மாட்​டேன். இது நான் கும்பிடற தெய்வத்து​மேல சத்தியம். சரியா? நீங்க என்​னைப் பூரணமா நம்பலாம்’ அப்டின்னு சொன்னான். அவன் வார்த்​தை​யை நம்பி நான் திரும்பி வந்துட்டேன்”

    “ஏங்க உங்க புத்தி இப்டி ​போகுது? யார் என்ன ​சொன்னா என்ன? நம்ம பொண்ணை நாம நம்ப​ வேண்டாமா? எதுவாயிருந்தாலும் கண்டிப்பா நம்மகிட்ட சொல்லிடுவாங்க. அவ​ளைப் ​போய் ​தே​வையில்லாம கஷ்டப்படுத்திட்டீங்க​ளே?”

    “ஆமா மணி! உண்​மைதான். இது வ​ரை அவ​ளை நான் ஒண்ணு​மே​சொன்னதில்​ல. ஆனா, ​நேத்து அவ​ளை கன்னாபின்னான்னு ​பேசிட்​டேன். எனக்​கே கஷ்டமா இருக்கு. அவளுக்கு என் ​பேர்ல ​கோவம்கூட இருக்கலாம். ஆனா ஒரு​ பொண்​ணைப் ​பெத்தவனுக்குத்தான் அந்த பயம் புரியும். நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணுங்கற​தைத் தவிர எந்தப் ​பெத்தவங்களும் வேறெதுவும் நி​னைக்கமாட்டாங்க. இன்னிக்கு அவளுக்கு என் ​பேர்ல கோவம் இருக்கலாம் ஆனா பின்னாடி நாம ஏன் இப்படி நடந்​தோம்னு அவளுக்கே புரியும்” என்று ​​வேத​னை​யோடு கூறினார்.

    father_daughter (1)இ​தைக் ​கேட்டுக் ​கொண்டிருந்த சங்கீதாவிற்கு மனம் விம்மியது. ஓடி வந்து தன் தந்​தை​யைக் கட்டிக்​கொண்டாள். அவள் தூங்கிக்​கொண்டிருந்ததாக நினைத்துப் பேசியவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சுதாரித்துக் ​கொண்டார். “நீ இன்னும் தூங்கலியாம்மா?” என்றார் ஆதரவாக.

    “அப்பா! எது ​வேணா இருக்கட்டும். ஆனா என் மேல நம்பிக்​கையில்​லைன்னு  மட்டும் சொல்லாதீங்கப்பா. எனக்கு அது ​ரொம்ப கஷ்டமாயிருக்கு. என்மேல சந்தேகப்படாதீங்கப்பா” என்று அழுதாள்.

    “சாரிடா! நான் ​கொஞ்சம் அவசரப்பட்டுட்​டேன். உன்​னை ​ரொம்ப கஷ்டப்படுத்திட்​டேன்” என்று சமாதானம் ​செய்தார்.

    இ​வை நடந்து 2 வருடங்கள் இருக்கும். அந்த சம்பவத்திற்கு பிறகு சங்கீதா வேறு ​வே​லைக்குச் ​சென்ற​போதும் ​லெனினுடன் கூடிய நட்பு ​தொடர்ந்தது.

    ஆனால் சில தினங்களாக அவளது மனதிற்குள் ஒரு ​போராட்டம்.​லெனினுடனான நட்பு​ அந்த எல்​லை​யைத் தாண்டி காதலாக மாறிவிட்டதோ என்கிற எண்ணம். இப்​போ​தெல்லாம் ​லெனினுடன்​ பேசாமல் இருக்க முடிவதில்​லை. எந்​நேரமும் அவன் நி​னைப்பாகவே இருந்தது. அவனுடன் சேர்ந்து ​நேரம் செலவிடுவதில் மனம் மகிழ்ச்சியில் தி​ளைத்தது. ஒரு ​வே​ளை இப்​போது அப்பாவிடம் ​பேசினால் தன் காதலுக்கு சம்மதிப்பாரா? ஆனால் முதலில் லெனினிடம் ​பேச​ வேண்டும். அவனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்​றே​ தெரியவில்​லை​யே.

    இந்த மனம்தான் எத்த​னை விந்​தையானது. ஒரு நாள் சந்​தோஷத்தின் உச்சியில் இருக்கிறது. மறுநா​ளே சோகத்தின் ஆழத்திற்கு ​சென்று விடுகிறது. மனத்தை குரங்கு என்று சரியாகத்தான் வர்ணித்திருக்கிறார்கள்.

    ‘இப்​போது என்ன ​செய்ய? குழப்ப​மோ குழப்பம். நம் மனதிற்குள் குழப்ப​த்​தை​வைத்துக் ​கொண்டு ​லெனினிடம் ​என்ன ​பேச? நான் விரும்புவது சரி தானா என்று எனக்​கே இன்னும் சரியாகத் ​தெரியவில்​லை​யே. ஒரு​வே​ளை இப்படியொரு நாள் வந்துவிடும் என்று பயந்துதான் அன்​றைக்கு அப்பா அப்படி நடந்து​கொண்டா​​ரோ? என்ன​மோ இத்தனை நடந்தும் நான் காதல் வழியில் விழலாமா?’ மனம் ஏகப்பட்ட​ ​கேள்விக​ளைக் ​கேட்டது. ‘இந்த நிலையிலே​யே இருந்தால் ​பைத்தியம்தான் பிடிக்கும்.’

    ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் அ​லை​பேசி​யை எடுத்தாள். ​லெனினுக்கு​போன் ​செய்தாள். “லெனின் எனக்கு உங்ககூட ​​கொஞ்சம் ​பேசணும். மீட் பண்ணலாமா?” என்றாள்.

    “ஓ ​பேசலா​மே! எங்​கே வரணும்?” என்று ​கேட்டான் ​லெனின்.

    “சாயந்திரம் 6 மணிக்கு ​மெ​ரீனா பீச்சுக்கு வர முடியுமா?”

    “சரி வ​ரேன்”

    கடற்க​ரைக்கு வருவ​தே ஒரு சுகம் தான். பகலில் எத்​த​னை​வெயில் இருந்தாலும் மா​லையில் கடற்க​ரையின் குளிர்ந்த காற்று அத்தனையையும் மறக்கடித்துவிடும். ஓயாமல் சப்தமிட்டுக் ​கொண்டு க​ரையில் விழும் அலைகளைப் பார்த்துக்​கொண்டிருந்தால் ​நேரம் ​போவ​தே ​தெரியாது. சிறியதும் பெரியதுமாய் பாயும் அ​லையில் கா​லை ந​னைத்​துக்​கொண்​டே நடப்பதும் ஒரு தனி சுகம்தான்.

    சங்கீதாவின்மனதிலும் இப்​போது அ​லையடித்துக்​கொண்டிருந்தது

    ​லெனின் வந்து அமர்ந்தான். ஏ​தோ சிந்த​னையில் தூரத் ​தெரியும் கப்ப​லை​நோக்கியபடியிருந்தாள் சங்கீதா.

    “என்ன? ஏ​தோ பலமான ​யோச​னை ​போல?” என்று அவள் அ​மைதி​யைக் கலைத்தான் ​லெனின்.

    ​லெனின் குர​லைக்​ கேட்டு திரும்பியவள் “ஓ! வந்துட்டீங்களா? சாரி. நான் கவனிக்க​லை” என்றாள்.

    “ம்ம்… ஏ​தோ குழப்பத்துல இருக்கற மாதிரி ​தெரியுது? குரல் ஒண்ணும் சரியா இல்​லை​யே?” என்றான்.

    “ஆமாம். ஒரு குழப்பம்தான். அதுக்கு உங்ககிட்டதான் தீர்வு கிடைக்கும்னு நம்பி உங்க​ளை வரச் சொன்னேன்” என்றாள்.

    “அப்படியா! என்ன விஷயம்? முடிஞ்சவ​ரை ​ஹெல்ப் பண்​றேன்”

    சங்கீதா சற்று​ நேரம் தயங்கினாள்.

    பிறகு “நாம இத்த​னை நாள் நண்பர்களா பழகியிருக்​கோம். ஆனால் சில காலமா எனக்குள்​ளே நம்மு​டைய நட்​பைப் பத்தி ஒரு குழப்பம். ஒரு இனம் புரியாத உணர்வு. ஒரு​வே​ளை நான் உங்க​ளை லவ் பண்​றே​னோன்னு தோணுது. நீங்களும் அ​தே​போல ஃபீல் பண்றீங்களான்னு எனக்குத் தெரியலை. நான் நினைக்கறது சரியா தப்பான்னும் புரியலை. அதான் உங்ககிட்ட​யே டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்​தேன்” என்றாள் ​தெளிவாக.

    ​லெனின் ஒரு விநாடி பிரமித்து நின்றான்.

    சற்று சுதாரித்துக்​கொண்டு “சங்கீதா! நீ நி​னைக்கறது சரியா தப்பான்னு என்னால சரியா ​சொல்ல முடியாது. ஃபீலிங்கறது ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட விஷயம். ஆனா நானும் அ​தே ​போல நி​னைக்க​றேனாங்கறதுக்கு​வேண்ணா பதில் ​சொல்ல முடியும். இ​தே வார்த்​தை​யை ஒரு​வேளை நீ 2 வருஷத்துக்கு முன்னாடி​யே ​சொல்லியிருந்தா, நான் எப்படி ரியாக்ட் பண்ணியிருப்​பே​னோ​ தெரியாது. ஆனால் இன்னிக்கு என்னால அ​தை ஏத்துக்க முடியாது. நான் உங்கப்பாவுக்கு வாக்குக் ​கொடுத்திருக்​கேன். உன்​மேல நான் ஆசைப்பட்ட காலமும் உண்டு. ஆனால் இப்​போ அதையெல்லாம் தாண்டி வந்துட்​டேன். உங்கப்பா அன்னிக்கு என்கிட்ட வந்து ​பேசினப்போ அவருக்கு உன் ​மேல இருந்த அதீத அன்புதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது. அதனாலதான் அவர்கிட்ட என்னிக்கு​மே நமக்குள்ள காதல்ங்கற உணர்​வோ உற​வோ இருக்காதுன்னு சத்தியம் பண்ணிக்​கொடுத்​தேன். என் வாக்​கை நம்பித்தான் இன்னிக்கு வரைக்கும் உங்கப்பா நம்ம நட்புக்கு குறுக்​கே வர​லை. என்னிக்கு​மே நீ என் ஃப்​ரெண்ட். அதுல சந்​தேகம் இல்​​லை. உனக்கு எந்த நேரத்துலயும் உதவி​ செய்யத் தயாரா இருப்​பேன். ஆனா நட்புக்கு அடையாளமா தா​னே தவிர, காதலுக்கு அ​டையாளமா இல்​லை. நீ சில காலமா இருக்கற இந்த உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடுக்கற​தை விட நீ பிறந்ததி​லேர்ந்து உன்​னைப் பத்தியும் உன் வாழ்க்கை பத்தியும் கனவு காணற அவங்க​ளோட உணர்வுகளுக்கு மதிப்பு ​கொடு. நிச்சயம் நமக்கு நல்லதைத் தான் அவங்க ​செய்வாங்க. மன​சை கலங்க விடாம சந்​தோஷமா இரு.”

    அவனது தீர்க்கமான​ தெளிவான ​பேச்சு சங்கீதாவின் மனதில் பதிந்தது​. முதலில் ஏமாற்றமாகத் தோன்றினாலும்  அவன் கூறிய வார்த்​தைகள் அனைத்தும் சரி​யென்று புத்தி ​அறிவுறுத்தியது.

    “தேங்க்ஸ் ​லெனின். நீங்க சரியான முடிவு தான் ​சொல்லுவீங்கங்கற நம்பிக்கைல தான் என் குழப்பத்தின் ஆரம்பத்தி​லே​யே உங்ககிட்ட வந்தேன். இனி என் மனசு அ​லைபாய விட மாட்​டேன். ​தேங்க்ஸ் அ​கைன்!”  என்று கூறி புன்ன​கைத்தாள் சங்கீதா.

    படத்திற்கு நன்றி: http://reallyducksoup.blogspot.com/2011/04/sacred-child.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 20

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (20) தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

    பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

    இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

    இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

    இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

    இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

    இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

    பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

    தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

    தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.

    suba_mus3

    இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

    இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

    இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

    பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?

    suba_mus1

    விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

    தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

    புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

    கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

    ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

    தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.

    suba_mus2

    சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட புத்த விகாரை வாசலில் (டிசம்பர் 2013)

    சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 103

    மலர் சபா

    *புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*

    அறுகம் புல்லையும் குவளை மலர்களையும்
    ஒருங்கே சேர்த்து
    பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து
    ஏரிலே சூட்டி
    போற்றுவோர் வணங்கி நிற்க
    நிலத்தையே பிளக்கும் வண்ணம்
    உழவர் இசைத்த ஏர்மங்கலப்
    பாடலின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    நெல்லை அறுத்து
    ஓரிடத்தில் குவித்து
    அதனைக் கடாவிட்டு மிதித்து
    உதிர்ந்த நெல்லை
    முறத்தில் எடுத்துத் தூற்றும்போது
    இசைக்கின்ற முகவைப் பாட்டின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    தெளிந்த ஓசையுடைய
    தடாரியைக் கையில் கொண்டு
    கள்ளுண்டு செருக்கில் பொருநர்கள்
    கரிய சாந்து பூசப்பட்ட
    திர்ண்ட முழவிலே தோற்றுவித்த
    இனிய ஆரவார ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    இவ்வாறு மருதநிலத்தில்
    பல்வேறு ஓசைகளைக் கேட்டு
    வருத்தம் கொள்ளாதவராய்
    மகிழ்ச்சி கொண்டவராய்
    இன்னும் மேலும் ஒலிகள் கேட்கின்ற
    ஆர்வமுடையவராய் ஆற்றின் கரையில்
    நடந்து சென்றனர் அம்மூவரும்.

    Share
  • ஓட மதவிலே…

    செண்பக ஜெகதீசன்peacock-images

    ஓட மதவிலே

    ஒத்தயில காத்திருக்கும் கொக்கே கொக்கே- நானும்

    அத்தமவன் வருவானுண்ணு

    ஒத்தக்காலுல நிக்கேன் நிக்கேன்..

     

    வாடக்காத்துல

    ஓடக்கரயில

    ஆடக் காத்திருக்கும் மயிலே மயிலே

    பாடாப்படுத்துறானே பாவிமவன்,

    தேடவெச்சிட்டானே- அப்பன்

    கூடப்பொறந்தவா பெத்தபுள்ள..

     

    அரிசிபோட்டா

    அருகவரும் மைனா மைனா

    உருகிப்போயி நிக்கிறனே,

    தெருவிலபோன மச்சானத்தான்

    தேடிப்பாத்து வரச்சொல்லு- நான்

    வாடுறதப் போய்ச்சொல்லு..

     

    சொல்லச்சொல்லத்

    திருப்பிச்சொல்லும் கிளியே கிளியே

    பாலும்பழமும் ஒனக்குத்தந்தேன்- எம்

    மேலக்கொஞ்சம் எரக்கம்காட்டு,

    வேலதேடிப் போனமச்சான்

    வெபரந்தெரிஞ்சி எனக்குச்சொல்லு- என்

    வேதனயக் கொறச்சித்தள்ளு..

     

    துள்ளிஓடும் கண்ணுக்குட்டி

    மொள்ளவாயேன் கிட்டகொஞ்சம்,

    எள்ளளவும் பயமில்லாமத்

    துள்ளுறியே- நானும்

    எம்மச்சான் பேரச்சொல்லி

    ஏங்குறனே..

     

    சோறுபோட்டா

    சேந்துவரும் காக்கா காக்கா

    சேதிஒண்ணு தெரிஞ்சிக்கிட்டேன்,

    காலயில ஒங்கொரலக்

    கேட்டுப்புட்டேன்-

    கட்டாயம் வந்துடுவான்

    எம்மச்சான்,

    கறியுஞ்சோறும் ஒனக்குத்தான்

    கட்டாயம் நாந்தருவேன் காக்கா காக்கா…!

    படத்துக்கு நன்றி

        http://fengshui.about.com/od/fengshuicures/qt/feng-shui-birds.htm            

     

    Share
  • வார ராசி பலன்கள் 30-12-2013-05-01-2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.

    ரிஷபம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.    , தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் ந்டிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

    மிதுனம்: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.

    கடகம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டு பெற வேண்டியிருக்கும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடா மல் இருந்தாலே , பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும்.

    சிம்மம்: சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்கு கடினமான முயற்சிக்குப்பின் சில காரியங்கள் பலிதமாகும். எனவே வாக்குறுதிகளை கொடுக்கும் முன் யோசனை செய்யுங்கள். கலைஞர்கள் மேற்கொள் ளும் வெளி நாட்டு பயணம் அவர்களின் தகுதிக்கான பரிசாய் இருக்கும்.மாணவர்கள் வீண் புரளிகளை நம்பி செயல்பட வேண்டாம்.

    கன்னி: பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையை சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசிய மாகும்.மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும் .

    துலாம்: இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியை சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும்.வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங் ள்.வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம்.

    விருச்சிகம்: இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால்,உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க்க  எதிலும் நிதானமாகசெயல்படுவது அவசியம்.

    தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டுவந்தால், அதற்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், அநாவசியத் தொந்தரவுகள் அருகே வாராது. வியாபாரிகள் வாகனங்களுக்குரிய காப்பீடு முதலியவைகளை உரிய கெடுவுக்குள் செலுத்தி விட்டால், தண்டம் கட்ட வேண்டியதிலிருந்து தப்பிவிடலாம். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். உயர்பதவியில் இருப்போர்கள் அதிக மரியாதை காண்பிப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் மனதுக்கு பிடித்த மாற்றங்களை செய்ய சிறிது காலம் காத்திருக்கும் நிலை நிலவும்.

    மகரம்: வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. மேலும் உங்களின் சரக்குகளுக்குத் தேவையான பாதுகாப்பைப் பலப்படுத்துவது அவசியம்.. பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.

    கும்பம்: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக் கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.அதிகாரி ளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

    மீனம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்

    Share