Blog

  • ராத்திரியில் மனசுக்குள்ளே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (20)

     

    ராத்திரியில் மனசுக்குள்ளே
    (பாடல்)

    1900087_510462785753528_5400619279422432625_n

    ராத்திரியில் மனசுக்குள்ளே பூத்திருக்கும் கனவையெல்லாம்
    ரகசியமா மாலையாகக் கட்டினேன், அதெப்
    பாத்திருந்த வெண்ணிலவ பறிச்செடுத்துப் பதக்கமா, ஒன்
    நெஞ்சத்தொட்டுச் சூட்டிப் பாக்க வந்தேன்
    கண்சிமிட்டும் வெண்ணிலவா முன்னவந்து நிக்கும்போது
    கையிலுள்ள மாலைகொஞ்சம் நாணுதே! உன்
    செவந்த இதழ் சின்னதாகப் பிரியும்போது மின்னல்வீசி
    ஏழைமனசு பாவம்ரொம்பக் கூசுதே!

    காத்திருக்கும் நேரத்துல காலம்பாரு வக்கணையா
    காலநீட்டி நிம்மதியாத் தூங்குதே! ஒன்னெ[ப்
    பாத்திருக்கும் ஒருகணத்தில் பலயுகமும் பொலபொலன்னு
    பஞ்சப்போலக் காத்திலெங்கோ பறக்குதே!
    சேத்துவச்ச சிறுவாடு நேத்துவந்த கனவோடு
    சில்லரையும் மிஞ்சாம தீர்ந்ததே! ஒரு
    செறகில்லாம ஒம்முன்னே மொறெயில்லாம நிக்கும்போது
    பட்டாம்பூச்சிக்கண்ணு விரிஞ்சு சிரிக்குதே!

    காத்தடிச்சா மழவரலாம் கட்டோடு கலெஞ்சிடலாம்
    கடலுக்குள்ளே சிப்பியொண்ணு கலங்குதே
    மனசுக்குள்ளே மத்து ஒண்ணு மாறிமாறிச் சுத்துறப்போ
    பகலும் இரவும் கையைக்கொட்டிச் சிரிக்குதே
    சந்தனத்தைத் தடவிக்கிட்டு வந்துநின்ன காத்துக்குள்ளெ
    எம்மனசச் சேதியாக்கி வச்சேன், அது
    வந்துனக்கு சேந்துருச்சோ வழியில்வம்பு பண்ணிருச்சோ
    வானத்துல புள்ளிவச்சுச் சொல்லேன்

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “மஞ்சளில் நீராடி, மைவண்ணன் காத்திருக்கான்,
    வஞ்சிமகள் ராதை வரவுக்காய்;-செஞ்சரண்,
    சேவித்து, உண்டு, சரண்புகும், கோகுல,
    ஆவுக்(கு) அதனால்தான் லீவு”….கிரேசி மோகன்..

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 11, 2014

    இவ்வார வல்லமையாளர்கள்
    வல்லமைமிகு “வழிகாட்டும் ஒளி” குழுவினர்
    வல்லமைமிகு பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி ஆகியோர்

    வழிகாட்டும் ஒளிகள்
    பெண்களுக்கெதிரான கொடுமைகளில் இருந்து அவர்களைக் காக்கும் நோக்குடன் வழிகாட்டும் ஒளி’ நிறுவனத்தைத் துவக்கி வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா குழுவினர் மற்றும் அவர்களது சேவையை நமக்கு தனது கட்டுரையின் மூலம் அறிவித்த ‘குங்குமம் தோழி’யின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் இவ்வார வல்லமையாளர்களாக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்கள்.

    இவ்வார வல்லமையாளர் விருதிற்காக “வழிகாட்டும் ஒளி” குழுவினரைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்கள். வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காக ஒருங்கிணைந்து செயலாற்றும் இப்பெண்மணிகளை இவ்வாரத்தின் வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

    வழிகாட்டும் ஒளிகள்3

    நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து அமைதியான குடும்ப வாழ்வை எதிர்நோக்கும் பெண்களில் பலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக  வாழ்க்கை அமைந்துவிடுகிறது.  பலருக்குக் கிடைத்த துணையே துன்பத்திற்கு துவக்க விழாநடத்தும் வேலையைச் செவ்வனே செய்பவர்களாக அமைகிறார்கள்.  உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள்.  போதும் இந்த வாழ்க்கை என்று சலிப்படையும் பெண்கள் பலர்.  இவர்களில் ஒருவர் வழிகாட்டும் ஒளியின் தலைவி பிரேமா.

    இவர் காதலித்துக் கைபிடித்து பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவரால் அடைந்த துன்பங்கள் பல.  வேறுவழியின்றி கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருக்கு கணவராலும் சமூகத்தாலும் தொடர் தொல்லைகள்.  ஆதரவு தந்த அன்புள்ளங்களால் மீண்ட  இவருக்கு மீண்டும் சோதனையாக ஒரு விபத்து.  அதிலிருந்து உயிர் பிழைத்த இவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததன்  காரணம் பிறருக்கு உதவுவதற்காக என்ற முடிவெடுத்து ‘நேசம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, இயலாத மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார்.  அப்பொழுது பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சிக்கிக் கொண்ட தன்னைப் போன்ற பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கு ஆதரவுதர விரும்பி  ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டும், உறவுகளின்றியும்  தனித்துவிடப்பட்ட பெண்களுக்காக  தனது பணியைத் தொடங்கி இருக்கிறார்.  ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பின் வழியாக அந்தப் பெண்களின் தகுதிக்கேற்ற பணியில் அவர்களை அமர்த்தி, அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க உதவியிருக்கிறார்.  குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஓர் அமைப்பு  இவருடைய ‘வழிகாட்டும் ஒளி’.

    இந்த அமைப்பின் செயலாளர் ரேவதி, எம்.ஏ படித்தவர், பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கப்பட்டவர்.  இவரது கணவருக்குப் படித்த பெண்களின் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால்  இவரைச் சந்தேகித்து சித்திரவதை செய்திருக்கிறார்.  மனஉளைச்சல் தாள முடியாது தனது படிப்பை மட்டும் நம்பி மூன்று வயது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தனியாக உன்னால் வாழ்ந்து விட முடியுமா என்று கணவர் இட்ட சவாலைப் ஏற்று, ஆசிரியத் தொழில் புரிந்து தனது மகனை வளர்த்து எம்.பி.ஏ. வரை படிக்க வைத்துள்ளார்.  தனது அண்ணனுடன் பணிபுரியும் பிரேமாவின் தொடர்பு கிடைக்க, தன்னைப் போன்று துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உதவ ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்புடன் தன்னை  இணைத்துக் கொண்டுள்ளார்.

    சிறுவயதில் திருமணமான பொழுது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்திராதவர் பொருளாளர் சுஜாதா, வேலைவெட்டி இன்றி நாள்முழுவதும் குடிபோதையில் இருந்த அவரது கணவரால் குடும்பத்தில் அமைதி இன்றிப் புழுங்கியபடி வாழ்ந்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக, குடிபோதையில் சச்சரவு ஏற்பட்டு நடுஇரவில் கணவனால் துரத்தப்பட்டு நடுத்தெருவிற்கு இவர் வந்த பொழுது இவருடன் வெளியேற்றப்பட்டவர்கள் இவரது பத்து வயது மகளும், ஒன்றேகால் வயது கைக்குழந்தையான மகனும்.  நீ தற்கொலை செய்து கொள்ளும் வரை உன்னைத் துன்புறுத்துவேன் என்று அச்சுறுத்திய கணவனுக்கு எதிராக தனது குழந்தைகளுக்காக வாழவேண்டி, பள்ளித் தோழி உதவியுடன் வேலை பெற்று பணி செய்து கொண்டே படித்து எம்.ஏ. முடித்திருக்கிறார். தற்பொழுது பொதுமக்கள் தொடர்புப் பணியாளராக பணிபுரிகிறார். ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இவர் பிரேமாவை எதிர்கொள்ள, அவரது பணியால் ஈர்க்கப்பட்டு ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளராக அந்த அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

    வழக்கறிஞர், உளவியல் நிபுணர்கள் போன்றவர்களை தங்கள் அமைப்பில் கொண்டு முடிந்தவரை பெண்கள் தங்கள் நிலையைக் கையாள ஆலோசனைகள் வழங்கும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு, அவை உதவாத நிலையில் பெண்களுக்கு மாற்றுவழியாக அவர்களது திறனுக்கேற்ற பணியில் அமர்த்தி தன்னிறைவுடன் வாழ உதவி செய்து வருகிறது.  அல்லல்களில் இருந்து மீண்ட இந்த மூன்று பெண்மணிகளும் தங்களைப் போன்று வாழ்வில் அல்லலுறும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்களது கதைகளையும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு பற்றியும் குங்குமம் தோழி இதழில் கட்டுரை எழுதி மக்களுக்கு இவர்களது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி அவர்கள்.

    பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ‘லாட்லி ஊடக விருது’ என்று அழைக்கப்படும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை வெளிக்கொணரும் விழிப்புணர்வுச் செய்திக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’கள்  (Laadli Media and Advertising Awards for gender sensitivity) இந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.  குங்குமம் தோழி இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி, தாம் எழுதிய ‘வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்காக  தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான  லாட்லி ஊடக விருதினைப்  (ஃபார் பெஸ்ட் கேம்ப்பெயின்) பெற்றார். ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஏ.எல்.சாரதாவும் சென்ற 2013 டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதை வைதேகிக்கு வழங்கினார்கள்.

    வழிகாட்டும் ஒளிகள்2

    பெண்கொடுமைகளுக்கெதிராக பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவான செயல்களைப் புரிந்துவரும் இப்பெண்மணிகள் யாவருமே, தற்கால இளம்பெண்கள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டிகளாக இருப்பதற்காகப் பாரட்டப்பட வேண்டியவர்கள். இக்கருத்தை மிக அழகாக தனது பரிந்துரை மடலில் முன்வைத்துள்ளார் கவிஞர் காவிரிமைந்தன். இதோ  அவருடைய ஆக்கப்பூர்வமான பரிந்துரை:

    ”இல்லற வாழ்க்கை என்கிற ஒன்றை.. மரபு வழியில் தேர்ந்தெடுத்து .. அமைகின்ற துணை சரியில்லாமல் போய்விடும்போது இன்னலுறும் லட்சோபலட்சம் மக்கள்.. தங்கள் வாழ்க்கையை.. கண்ணீரால்தான் எழுதுகிறார்கள்.  விதி என்கிற ஒற்றை வார்த்தையால் சமூகம் அதை அலட்டிக்கொள்ளாமல் மேற்பார்வையிடுகிறது.  கதைகளிலும்.. திரைப்படங்களிலும் மட்டுமல்ல.. இதுபோன்ற சம்பவங்கள்.. கைவிடப்பட்ட அகலிகைகளாக ..  அடுத்த கட்டம் என்ன என்பதை தீர்மானிக்க முடியாதவர்களாக .. வாழ்க்கையே சூனியமாகிவிட்டதாக கருதும் சராசரி பெண்களின் வரிசையில் நின்றுவிடாமல்..  வாழ்ந்து காட்டுவோம் என்று தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்ததோடு..  இதுபோல் ஜீவிக்க முடியாமல் போராடும் பலருக்கும் “வழிகாட்டும் ஒளி ” என்கிற அமைப்பு ரீதியான உங்களின் மேலாண்மை.. வெறும் வார்த்தைகளால் பாராட்டி .. வாழ்த்துக்களால் நிறைவுபெறும் ஒன்றல்ல.

    நேர்மையற்ற நெஞ்சம் கொண்டோர்..  தேவையற்ற பழக்கங்களால் வாழ்வைக் கெடுத்துக்கொள்வதோடு தன்னைச் சார்ந்திருப்போர் வாழ்க்கையையும் பாழாக்கும் அவலங்கள் நிறைந்துவரும் இன்றைய சூழலில்..  வழிகாட்டும் ஒளி .. போன்ற அமைப்புகள் தேவையான ஒன்று என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரம்..  அரசாங்கம் .. மத்திய மாநில அரசுகள்.. இது போன்ற தூய தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி.. அங்கீகாரம் வழங்க வேண்டும்..”

     

     

    படங்கள் உதவி:  
    ஆர்.சந்திரசேகர்  &  http://tamilscreen.com/laadli-media-award-for-gender-sensitivity-r-vaidehi/

    தகவல் உதவி:   
    ஆர்.வைதேகி, குங்குமம் தோழி இதழ்

    நன்றி:
    குங்குமம் தோழி இதழ் வலைத்தளம்
    https://kungumamthozhi.wordpress.com/

    வழிகாட்டும் ஒளி!

    வழிகாட்டும் ஒளி!

    குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

    குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

    வழிகாட்டும் ஒளி!
    http://dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1210

    குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=72023

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 131

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    முன்னிலைப் பரவல்

    யானையின் தோலை மேலே போர்த்திக்கொண்டு
    புலியின் தோலை இடுப்பிலே உடுத்திக்கொண்டு
    காட்டு எருமை அதன்  தலைமேல் நின்றாய்;            arthanari
    தேவர் யாவரும் வணங்கிட
    வேதங்களுக்கும் அப்பாற்பட்ட
    புலப்படாது மறைந்த பொருளாய்
    அறிவின் கொழுந்தாகிச் சலிப்பில்லாமல்
    என்றும் நிலைத்து நிற்பாய்!
    இது என்ன மாயமோ!

    வரிகள் உடைய வளைகள் அணிந்த கையில்
    வாளை ஏந்திக் கொண்டு
    மாபெரும் மகிடாசுரனை அழித்து,
    கருமையாக முறுக்காக அமைந்த கொம்பினையுடைய
    கலைமானின் மீது நின்றாய்!
    இது என்ன மாயமோ!

    திருமால் சிவன் பிரம்மன் ஆகிய இவர்களின்
    தாமரை போன்ற உள்ளத்தில் தங்கியிருந்து
    விரிந்த கதிர்களையுடைய
    அழகிய ஜோதியாய் ஒளிவிடும்
    விளக்காகி நிற்பாய்!
    இது என்ன மாயமோ!

    சங்கினையும் சக்கரத்தினையும்
    தம் தாமரைக் கைகளில் ஏந்தி
    சிவந்த கண்களுடைய சிங்கத்தின் மீது நின்றாய்!
    கங்கையைத் தலைமுடியில் அணிந்த
    நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானின்
    இடப்பாகம் தன்னில் பெண்ணுருவத்தில்
    வேதங்கள் போற்றிட நிற்பாய்!
    இது என்ன மாயமோ!

    வென்றிக்கூத்து

    அவ்விடத்து,
    கொன்றைமலரும் துளசியும் ஒன்றாய்க் கட்டிய
    மாலையைத் தோள்மேல் சூடி,
    அசுரர் துன்பத்தால் வாடும் வண்ணம்
    அவர்தம் போர்முனையில்
    தேவர்க்கு வெற்றி உண்டாகும் வண்ணம்
    தான்கொண்ட குமரிக் கோலத்தில்
    வெற்றிக்கூத்தினை ஆடத் தொடங்குவாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 – 10
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://godphotosimages.blogspot.in/2013/01/blog-post_25.html

    Share
  • பாக்கு வெட்டியும் – பாதாள கரண்டியும்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    மனிதர்களைப் பற்றியும் மனங்களைப் பற்றியும் நிறைய எழுதியாயிற்று. இன்று நம்முடன் இருந்து நமக்கு மிகவும் உதவி செய்து இன்று நம்மால் புறக்கணிக்கப்பட்ட இரண்டு வஸ்துக்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த ஆசை. இளையதலைமுறைக்கு இதெல்லாம் படிக்க நேரம் இருக்குமா என்று தெரியாது. இன்றில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் அவர்கள் இந்தப் பக்கங்களைப் புரட்டக் கூடும். அந்த நாளுக்குகாக இப்போது எழுதி வைக்கிறேன். முதலில்  ‘வஸ்து’ என்றால் பொருள், சாமன், object என்ற பதவுரையையும் கொடுத்து விடுகிறேன்.

    ‘பதவுரை’ என்றால் சொல்லின் பொருள் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. வழக்கொழிந்த சொற்கள்  போலவே நம்மோடிருந்த பொருட்களும் மறைந்து போயின. அதில் என் மனதில் முதலாவதாக வந்தது இந்த பாக்கு வெட்டி.

    நவீன உலகம் நமக்கு பல வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. மனிதனின் கண்டுபிடிப்புக்கள் நம் உடல் உழைப்பை நேரத்தை மிச்சப்படுத்தும் கருவிகளை நமக்குத் தந்திருக்கிறது. இதனால் நம் முன்னோர்கள் வீட்டில் ஆண்டு முழுவதும் பட்டியலிட்டு செய்து கொண்டிருந்த பல வேலைகள் இன்று இல்லை. இருந்தாலும் செய்ய நம்மிடையே மனிதர்கள் இல்லை.

    எல்லாம் ஆயத்தமாக கடைகளில் கிடைக்கிறது. காசு விட்டெறிந்தால் நாம் கடைக்குக்குக் கூடப் போகத் தேவையில்லை. அவர்களே ‘டோர் டெலிவரி’ செய்து விடுவார்கள்.

    வெற்றிலைப் பாக்குஇரண்டாவது நம் வழக்கங்களும் பழக்கங்களும் மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘தாம்பூலம் தரிப்பது’ என்ற ஒரு வழக்கம் உண்டு. உண்ட பின் ஒவ்வொரு வீட்டிலும் தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கொண்டு வந்து கொடுப்பார்கள். கும்பகோணம் கொழுந்து வெற்றிலையை தளிராக எடுத்து, அதைத் தடவிக்கொடுத்து, காம்பு கிள்ளி, பின் பக்கம் சுண்ணாம்பு… அதை சுண்ணாம்பு என்று பெயர் சொல்லும் வழக்கம் இல்லை. ‘மூன்றாவது’ என்றுதான் கேட்பார்கள். அதன் பின் முனையும், முதுகு நரம்பும் கிள்ளி, களிப்பாக்காக இருந்தால் அப்படியே போட்டுக் கடித்து, கொட்டைப் பாக்காக இருந்தால் இந்த பாக்கு வெட்டியால் நறுக்கி அந்த சீவலை வாயில் அடக்கி, வெற்றிலையும் சேர்த்துக் குழப்ப வாய் சிவக்கும். அந்த காரம் உள்ளே போனவுடன் புத்துணர்ச்சி பெருகும். உண்ட உணவு செரிக்கும். பொதுவாக அந்தக் காலத்தில் ஆண் பெண் இருவரும் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

    எல்லா நல்ல பழக்கங்களோடு ஒரு சில தீய பழக்கங்களும் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி வந்ததுதான் இந்தப் புகையிலைப் பழக்கம். புகையிலைக் கட்டையை கொஞ்சமாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் மூன்றாவதையும்  சேர்த்து, வெற்றிலைப் பாக்கோடு வாயில் அடக்கி அந்த சாறு தரும் லாகிரியை அனுபவித்து அந்த சாற்றைத் துப்புவார்கள். அப்போதும் பாக்குவெட்டிக்கு இந்த புகையிலைக் கட்டையை வெட்டும் வேலை இருந்தது. அதன் பிறகு சீவலும், தூள் பாக்கும் கிடைக்க ஆரம்பித்தது. கடைகளில் பீடா வர ஆரம்பித்தது.

    என் சின்ன வயதில் இந்த வெற்றிலை போடும் மனிதர்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்று கணக்கெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. சாப்பிட்ட பின், சாப்பிடுவதற்கு முன், சாப்பாடு இல்லாத போதும், இரவு படுப்பதற்கு முன், வேலைக்கு நடுவில், சீட்டாட்டத்தின் இடையில் என்று. அவர்கள் இருப்பிடமே திண்ணை அல்லது முற்றத்திற்குப் பக்கத்தில் என்று ஆகிவிடும்.

    என் மாமா ஒருவர் அந்த வெற்றிலைச் செல்லத்தை தன் தலை மாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பார். காலை கண்விழித்தவுடன் அதன் முகத்தில்தான் விழிப்பார். ஓர் அரை வெற்றிலை போட்டு குதப்பி பின் வாய் கொப்பளித்தவுடன் தான் அவருக்கு பொழுது விடியும்.

    வெற்றிலைச் செல்லம்2வெற்றிலைச் செல்லம்“வெற்றிலைச் செல்லம்” என்பது வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு இவை எல்லாம் இருக்கும் பெட்டி. இதில் செவ்வகமாக இருக்கும் பெட்டிகள் சகஜமாக இருக்கும். அவை பித்தளை, அலுமினியம், எவர்சிலவர் … பின்னாளில் பிளாஸ்டிக்கிலும் இருந்த்து.

    பாக்குவெட்டிஆலவேலி சேமங்கலம் ரமணி அய்யர் மாயவரம் துபாஷ் அக்ரஹாரத்தில் இருந்த போது, அவரிடம் இருந்த ஒரு எவர் சில்வர் வெற்றிலைச் செல்வம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அது ஒரு வாத்து வடிவத்தில் இருக்கும். அதன் வயிற்றுப்பகுதியில் ஒரு பக்க அறையைத் திருப்பினால் அதில் வெற்றிலை…. இன்னுமொரு சிறகைத் திருப்பினால் பாக்கு, பாக்குவெட்டி… கழுத்துப்பகுதியைத் திருப்பினால் சுண்ணாம்பு …அதற்கும் கீழ் புகையிலை. ஊஞ்சலில் உட்கார்ந்தோ, வாசலில் மர சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தோ வாயில் வெற்றிலை போடும் ரமணி அய்யரின் கழுத்தில் தொங்கும் தங்க காப்பு போட்ட ருத்ராட்ஷத்தையும், தோளில் இருந்த சிவப்புக் காசித்துண்டையும் என்னால் மறக்க முடியாது.

    வெற்றிலை போட்டு அவர்கள் பேசும் பேச்சு ஒரு தனி ஸ்டைல்.  அடிக்கடி தொண்டையைக் கனைத்துக் கொண்டு முகத்தை எப்போதும் மேலே தூக்கியபடியே (வாயின் வெற்றிலைச்சாறு சிந்தாமல் இருக்க) பேசும் அழகே அழகு.

    பாக்குவெட்டி2பாக்கு வெட்டி தன் வேலையை இழந்தது. சில ஆபீஸ்களில் பழைய மிஷின்களின் உபயோகம் தீர்ந்த பிறகு புது மாதிரி மிஷின் கொண்டு புதிய பொறியாளர்களை உபயோகப்படுத்துவார்கள். அந்தப் பழையத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் வேறு டிபார்ட்மெண்டில் போட்டு சம்பளம் கொடுப்பார்கள். அது போல, பாவம் போனால் போகிறதென்று பாக்கு வெட்டிக்கு வெற்றிலைப் பெட்டியிலிருந்து மாற்றல் ஆகி, அம்மாவின் அடுக்களையில் அவள் அன்றாடம் பயன்படுத்தும் அஞ்சறைப் பெட்டியில் ஒரு இடம் கொடுக்கப் பட்டது.

    பாக்கு வெட்டிக்குச் சந்தோஷம். முன்னளவுக்கு வேலை இல்லை. எப்போதாவது அம்மா கெட்டிப் பெருங்காயம் நறுக்க பாக்கு வெட்டியின் உதவியை நாடுவாள். மற்றபடி அஞ்சறைப் பெட்டியின் மேல் தளத்தில் மிளகாயோடு கெட்டிப் பெருங்காய வாசனையோடு வாசம்.

    அதுவும் சில வருடம்தான் அதன் பிறகு வந்தது தூள் பெருங்காயம். டப்பாக்களில் தனி இடம். பாக்கு வெட்டியால்  இனி பயனில்லை என்று ஆகிவிட்டது. அதன் உற்பத்தி நிறுத்தப் பட்டது. அது வரை இருந்தவை உபயோகமில்லாமல் துருப்பிடித்து குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகி நம் அன்றாட வாழ்விலும், நினைவிலும் இருந்தே அகன்று போனது.

    பாக்கு வெட்டியின் கால் கெட்டிச்சுண்ணாம்பைப் பெயர்க்க உதவி செய்யும்.  அந்த நாள் பௌதீகப் பாடத்தில் சிம்பிள் மெஷின் என்பதில் நெம்பு கோல், இடுக்கி, கத்திரி மற்றும் பாக்குவெட்டி இருக்கும். தமிழில் பளு திறன் என்று படம் போட்டு விளக்குவோம். இப்போது அதற்கு அஞ்சலி செலுத்துவோம்.

    ***

    பாதாளக்கரண்டி2அடுத்தது பாதாளக்கரண்டி. கிராமத்தில் டவுனில் எல்லார் வீட்டிலும் பாதாளக்கரண்டி ஆபத்துக்குதவும். இது ஒரு சிலர் வீட்டில் மட்டுமே இருக்கும். கம்பி வளைவுகளால் ஆன இது தன்னகத்தே பல விதங்களில் கொக்கிகளைக் கொண்டு ஒரு கொத்துக் கிண்ணம் போல் இருந்து அதன் மேல் எல்லா வளைவுகளும் ஒன்று சேர்ந்து ஒரு ஓட்டை இருக்கும். அதில் ஒரு இரும்பு வளையம் இருக்கும்.

    இதன் உபயோகம் தினம் நமக்கு இருக்காது. அதனால் இதை எல்லாரும் வாங்கி வைக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் எல்லார் வீட்டிலும் கிணறு இருக்கும். அதில் ஜகடை போட்டு, அதில் தாம்புக்கயிறு கட்டி அதன் ஒரு முனையில் ஒரு பக்கெட் கட்டப்பட்டிருக்கும். இன்னொரு முனையில் ஒரு சுருக்கு போடப்பட்டிருக்கும்.

    imagesதாம்புக்கயிறு என்பது தேங்காய் நாரை ஊறவைத்து கயிறு திரித்து அதை பல கயிறுகளுடன் ஒன்று சேர்த்து முறுக்கிய கயிறு. அந்த காலத்தில் கழுத்தில் போடும் தங்க சங்கிலியில் கூட தாம்புக்கயிறு டிசைன் என்று ஒன்று உண்டு என்பது  என்னைப் போன்ற தாத்தா பாட்டிகள் நினைவில் இருக்கும். கோபால்தாஸ், ஏ.ஆர்.சி, ரேவதி ஜுவல்லரியில் கண்ணாடி பீரோவிலும், மேளக்காரர்கள், நாதஸ்வர வித்வான்கள், பெரிய பணக்காரர்கள் கழுத்திலும் அலங்கரிக்கும்.

    கிணற்றடிக்கு வருவோம். அந்த தாம்புக்கயிற்றின் முனையில் கட்டிய பக்கெட் சில சமயம் கயிற்றிற்கும் தனக்கும் உறவு வேண்டாம் என்று தண்ணீரில்  இருந்து விடும். இழுக்கும் போது வெறும் கயிறு மட்டும் வந்து சேரும். வீட்டில் பரபரப்பு ஏற்படும்.

    கிணறுஅதேபோல் இன்னொரு பக்கம் உள்ள முடிச்சை குடத்தின் கழுத்தில் இறுக்கி சமையலுக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் எடுத்து சமையலறைக்கு இடுப்பில் பெண்கள் சுமந்து போவார்கள். சமையலறை தொட்டியில் பைப் வைத்திருக்கும், pure it R.O ஹேமமாலினி விளம்பரப்படுத்தும் வசதிகளை குடி தண்ணீருக்காக கொண்டவர்களுக்கு இடுப்பும் தெரியாது குடமும் தெரியாது. அதனால் தான் அவர்கள் இடுப்பு பெரிதாக தெரிகிறது.

    அந்தக் குடமும் சில சமயம் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்து விடும். சொம்பு விழும், தூக்கு வாளி கிணற்று மேடையில் வைத்தது சில சமயம் தவறிக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விடும்.  இந்தச் சமயங்களில் நமக்குப் பேருதவி செய்வதுதான் இந்தப் பாதாளக்கரண்டி. தெருவில் யாராவது ஒருவர் வீட்டில்தான் இருக்கும். எங்கள் தெருவில் காப்பிஸ்ட் ராகவேந்திர தாத்தா வீட்டில் இருக்கும்.

    அம்மா ஒரு செம்பை கொடுத்து அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு பாதாள கரண்டியை வாங்கி வரச்சொல்வார்கள். ஈடு வைத்து பாதாள கரண்டி வாங்குவது வழக்கம். எப்போதாவது உபயோகப்படும் அதை வாங்கிப் போனவர்கள் கொடுக்க மறந்தால் யார் வீட்டில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க இந்த சொம்பு ஈடு வைக்கும் பழக்கம்.

    அந்த நாளில் மனிதர்கள், குறிப்பாக பெண்கள் தற்கொலை செய்து கொள்ள இந்தக் கிணறுகள் ரொம்ப உபயோகமாக இருந்தன. இவரை கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு இவளை பாழுங்கிணற்றில் தள்ளியிருக்கலாம் என்று புக்கத்தில் கஷ்டப்படும் பெண்ணின் அம்மா புலம்புவதும் வழக்கம். ஆனால் கிணற்றில் விழுந்தவர்களை எடுக்க பாதாளக்கரண்டி பயன்படாது.

    பாதாளக்கரண்டிபாதாளக்கரண்டியை உபயோகப்படுத்த சாமர்த்தியமும் பொறுமையும் வேண்டும். வெயில் இருக்கும்போதுதான் அது சாத்தியம். இரண்டாவது இந்த பாதாளக்கரண்டியை கயிற்றில் கட்டி மெதுவாக இறக்க வேண்டும். கிணற்றில் விழுந்த பொருள் இந்த கொக்கியில் மாட்ட வேண்டும். சில சமயம் வாளியோ சொம்போ அதன் கொக்கியில் மாட்டி தண்ணீர் மட்டம் வரை வந்து விடும், அதற்கு மேல் இழுக்கும்போது பிடி கிடைக்காமல் மறுபடியும் விழுந்து விடும். குனிந்து பார்த்துப் பார்த்து கழுத்து வலிக்கும்.

    குழந்தைகள் விளையாடி வீசும் ஸ்பூன், டபரா, டம்ளர், சோப்பு டப்பாவுடன் விழும். உடம்புக்கு போடும் சோப் விழுந்தால் பாதாள கரண்டி உபயோகமாகாது. சோப்பு கரைந்து தண்ணீரில் வாசனை வந்து விடும். அந்த சமயம் மத்தியான வெயில் வேளையில் தெருவில் வரும் மரமேறியைத்தான் கூப்பிட வேண்டும். மரமேறி ஒரு பிரம்மா விஷ்ணு. மேலே மரமும் ஏறுவார். நிலத்துக்குக் கீழே தண்ணீரிலும் குதிப்பார். நாம் சொம்பு விழுந்ததாகச் சொல்வோம். அவர் இறங்கி எடுக்கும்போது நமக்குத் தெரியாமல் விழுந்த பல பொருட்கள் வரும் சாத்தியமும் உண்டு.

    கிணற்றின் உரையில் கால் வைத்து இறங்கி நானும், சில சமயம் மனதில் பயம் இருந்தாலும், அம்மா கொடுத்த தைரியத்தில் இறங்கி வாளி குடம் போன்றவற்றை மூச்சடக்கி எடுத்திருக்கிறேன்.

    வாங்கிவந்த அவசரம் பாதாளக்கரண்டியைத்  திருப்பிக் கொடுப்பதில் இருக்காது. அம்மா ஒவ்வொரு நாளும் ஞாபகப்படுத்துவாள். சில சமயம் கொடுத்தவர்கள்  பார்க்கும்போது பாதாளக்கரண்டி பற்றி கேட்பார்கள். சில சமயங்களில் வேறொருவர் வீட்டில் கிணற்றில் ஏதாவது விழ, அவர்கள் அங்கு போக, அவர்கள் நம் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப் படுவார்கள். நான் அவர்களோடு காப்பிஸ்ட் தாத்தாவீட்டுக்குச் சென்று அதை அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுச் சொம்பை எடுத்து வருவேன்.

    கிணறே இல்லாத நம் வாழ்க்கையில் பாதாளக்கரண்டிக்கும் இடம் இல்லாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் என் மனக்கேணியில் மூழ்கிக்கிடந்த இந்த செய்திகளை என் நினைவு என்னும் பாதாளக்கரண்டியால் வெளிக்கொண்டுவந்து உங்களுக்கு அளிப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. உங்களுக்கும் மகிழ்வைத் தரும் என்று நினைக்கிறேன்.

    படங்கள் உதவி:  இணையத்தின் பல தளங்கள்

    Share
  • காற்று வாங்கப் போனேன் (31)

    கே.ரவி

    குருநாதர் நித்யானந்தம்
    குருநாதர் நித்யானந்தம்

    1989-90 என்று ஞாபகம். என் குருநாதர் டாக்டர் நித்யானந்தம் ஒரு பழைய நூலை என்னிடம் தந்து அதைப் படித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றார். அதில் மாணிக்க வாசகப் பெருமான் அருளிய ‘ஞானத் தாழிசை‘ மூலமும் அதற்குத் தமிழில் ஒரு பெரியவர் எழுதிய உரையும் இருந்தன. படித்தேன். தோய்ந்தேன். நான் ஏதோ அனுபவத் தெளிவு பெறுவதற்காகவே அந்த மூலநூல் எழுதப்பட்டதோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அதற்காக பாடல்களுக்குத் தரப்பட்டிருந்த பழைய உரை எனக்கு நிறைவு தரவில்லை. இதை டாக்டரிடம் சொன்னேன். என் குருநாதரை நானும், என் சக சீடர்களும் டாக்டர் என்றுதான் அழைப்போம். உனக்கு என்ன தோன்றுகிறதோ, எப்படித் தோன்றுகிறதோ அப்படியே எழுது என்று அவர் கட்டளையிட்டார்.

    தமிழ் இலக்கணத்தில், விருத்தம், துறை, தாழிசை என மூன்று பாவினங்கள் சொல்லப் படுகின்றன. ‘ஞானத் தாழிசை’ நூல், பன்னிரண்டு ஆசிரிய விருத்தங்கள் கொண்ட நூல். ஆனால் அதற்கு ‘ஞான விருத்தம்’ என்று பெயர் தராமல், ‘ஞானத் தாழிசை’ என்ற பெயர் ஏன் வழங்கப் பட்டது என்பது முதலில் புரியவில்லை. முழுதும் படித்து, ஆங்கிலத்தில் உரை எழுதும் போதுதான் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது.

    நாம் எவ்வளவுதான் ஞானத்தைத் தேடியலைந்தாலும், எவ்வளவு உயர, உயரப் பறந்தாலும் ஞானம் கிட்டாது; ஞானமே இசைந்து, தாழ்ந்து வந்து, நம்மை வரவேற்று, நம்முள் இசையாகக் கலந்தாலன்றி. அப்படித்தான் என் குருநாதரும் என்னைத் தேடி வந்து ஆற்றுப் படுத்தினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இறைவனே ஒரு மனித வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இறங்கி வந்து குருநாதனாக ஆற்றுப் படுத்துவான். இதை ஆங்கிலத்தில் ‘டிஸென்டென்ஸ்’ (descendance) என்று சொல்வார்கள். ஞானம் தமக்குள் இறங்கி வந்த அனுபூதியை மாணிக்கவாசகப் பெருமான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கள் என்பதைக் குறிக்கவே விருத்தங்கள் கொண்ட நூலுக்கு, ‘ஞானத் தாழிசை’ என்று பெயர் தரப்பட்டதாகத் தோன்றியது. தாழிசை என்ற பாவகையிலேயே அந்த நூலின் பாடல்கள் அமைந்திருந்தால் அதன் பெயர்க் காரணம் பற்றிய சர்ச்சையே எழுந்திருக்காது, இந்தக் குறிப்பை உணர வாய்ப்பின்றிப் போயிருக்கும். எனவே, காரணத்துடன்தான், ‘தாழிசை’ என்று பெயர் சூட்டிவிட்டு, விருத்தங்களில் அந்தப் பாக்கள் எழுதப்பட்டன என்று தோன்றியது.

    இந்தப் பாக்களை மாணிக்கவாசகப் பெருமான் பாடினார் என்பதைப் பண்டிதர்கள், அதுவும் சைவநெறியில் தோய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதன் நடையும் திருவாசக ஆசிரியர் நடையை ஒத்ததாக இல்லை. ஆனாலும் இந்தப் பாக்கள் மாணிக்கவாசகர் அருளிய பாக்களே. இது என்ன புதிர்?

    இந்தப் பாடல்களுக்கான உரை எழுதும் போது ஒரு செய்தி இந்தப் பாடல்களில் இருந்து பெறப்பட்டது. அது என்ன? திருவாசகத்தில், சிவபுராணம் பகுதியில், மாணிக்கவாசகரே சொல்கிறார்:

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்ad

    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

    இதில் ஒன்று கவனிக்க வேண்டும். மனிதப் பிறவி எடுக்கும் முன்பு பல பிறவிகளும், மனிதப் பிறவிக்குப் பிறகு பல பிறவிகளும் எடுத்ததாக அவர் சொல்கிறார். மனிதனாக வாழ்ந்து மரணம் அடைந்த பின்பு, பேயாகவும், அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் பிறக்கும் வாய்ப்பைச் சுட்டிக் காட்டுகிறார். இப்படி எல்லாப் பிறப்பும் எடுத்து விட்டாலும், பிறவாநிலையாகிய வீடுபேற்றை அடைய வேண்டுமானால், கந்தர்வனாகவும், தேவனாகவும், தவ முனிவனாகவும், மேல் படிகளில் சஞ்சாரம் செய்த பிறகு மீண்டும் நிறைவாக ஒருமுறை மனிதப் பிறவி எடுத்த பிறகே முக்தி கிட்டும் என்ற ஒரு நுட்பத்தை ஞானத் தாழிசை நூலின் பாடல்கள் எனக்குக் குறிப்பாக உணர்த்தின.

    இப்படி இரண்டாவது முறை மனிதப் பிறவி எடுப்பவர்களே ‘இருபிறப்பாளர்கள்’ என்று பழைய மறைநூல்களில் குறிக்கப் பட்டனர். அடுத்தடுத்துப் பல மனிதப் பிறவிகள் எடுப்பவர்கள் இந்தப் பட்டியலில் சேர மாட்டார்கள். மனிதப் பிறவிக்குப் பிறகு, சில காரணங்களால், பேயாய், கணங்களாய், வல்லசுரர்களாய் இருந்து விட்டு மீண்டும் மனிதப் பிறவி எடுப்பவர்களும் இந்தப் பட்டியலில் சேர முடியாது. மனிதப் பிறவியில் இருந்து உயர் தளங்களுக்குப் பதவி உயர்வு பெற்று, உயர் பதவிகள் எல்லாம் வகித்த பிறகு, பணி ஓய்வாகிய மோட்சம் அல்லது வீடுபேறு அடைவதற்கு முன்பு, மீண்டும் கர்மபூமியில், மிச்சமுள்ள கர்ம பலன்களைக் கழிக்க மனிதப் பிறவி எடுப்பவரே இருபிறப்பாளர்கள். ஒருவன் இந்தப் பொருளில் இருபிறப்பாளன் என்பதை அவனுக்குத் தக்க தருணத்தில் நினைவுறுத்தவே அப்படிப்பட்டவனுக்கு தக்க குருநாதரால் பிரம்மோபதேசம் செய்து வைத்துப் புனித நூல் அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பவர்கள் எல்லாரும் இருபிறப்பாளர்கள் என்பதாகவும், மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எவரும் இருபிறப்பாளராக இருக்க முடியாது என்பது போலவும் ஒரு தப்புக் கணக்கு எப்படியோ மதத்தின் பெயரால் நம்மிடையே பரவிவிட்ட ஒரு நச்சுக் கருத்து. பாரதி சொன்னது போல்:

    கலகத்து அரக்கர் பலர் எங்க முத்து மாரியம்மா

    கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்க முத்து மாரியம்மா.

    பறையடியத்துக் கொண்டு சேரி மக்கள் பாடும் பாட்டாக இதை அமைத்து, பல நூற்றாண்டுப் பிழையைத் திருத்த முன்வந்த பாரதியின் துணிவும், தெளிவும் நினைந்து, நினைந்து போற்றுதற்குரியது.

    மாணிக்கவாசகராகத் ‘திருவாசகம்’ போன்ற பக்திச் சுவைசொட்டும் பாக்கள் எழுதி முடித்த பிறகு, உயர்நிலைகளில் பல நூற்றாண்டுகள் இருந்துவிட்டு வந்து மீண்டும் ஒரு மனிதனாகப் பிறந்து அவர் முக்தி அடையுமுன் தந்த அனுபூதிச் செய்யுள்களே ஞானத் தாழிசையின் பன்னிரண்டு பாக்களும் என்று கொள்ளலாமா?

    அல்லது, அவர் சூக்கும நிலையில் இருந்து வேறொரு புலவனை ஆட்கொண்டு அவனுள் தாழ்ந்து, இறங்கி வந்து அவன் மூலம் பாடிய செய்யுள்கள் என்று சொல்லலாமா?

    இப்படிப் பல நுட்பங்களைப் பெயரிலேயே கொண்ட ஞானத் தாழிசையின் பன்னிரண்டு பாக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவற்றுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதும் போது, சில சமயம், நான் ஏதேனும் வலிந்து பொருள் சொல்கிறேனோ என்று சந்தேகம் எழும். உடனேயே, அடுத்த வரி அல்லது அடுத்த பாட்டில் அதற்குத் தீர்வு கிட்டும். உடனே, உட்குரல் ஒலிக்கும்: ‘அட சந்தேகப் பிராணியே, நீ சொன்ன பொருள் சரிதான். அதை நீயா சொல்கிறாய். உன் மூலம் அது சொல்லப் படுகிறது. நம்பு.’ ஒருமுறை டாக்டரிடம் இது பற்றிச் சொன்ன போது, அவர் சொன்னார்: “அந்த நூல் ஒரு பொற்குவியல் பெட்டி (treasure box); உன் அறிவு அதைத் திறக்கும் சாவி என்று ஒரு நோக்கில் தோன்றலாம். உண்மையில், உன் ஆழ்மனமே ஒரு பொற்குவியல் நிறைந்த பெட்டி. அதன் “தாழ்” அல்லது தாழ்ப்பாளைத் திறக்கும் சாவிதான் “ஞானத் தாழிசை”.

    கூச்சப் படுவது கூட கர்வமாகி விடும் என்று பட்டது. ஞானத் தாழைத் திறக்கும் சாவியாகிய இசை என்ற பொருளும் அந்த நூலின் தலைப்புக்குப் பொருந்துவதை எண்ணி வியந்தேன். “தாழ்” என்ற சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா! அது ஒரு மந்திரச் சொல் என்று புரிந்து கொண்டேன்.

    இப்போதாவது பஞ்ச பூத வாதத்துக்கு வாப்பா! சிகாமணி பொறுமை இழந்து விட்டான். மனோன்மணியும் முனகுகிறாள். இனியும் காலம் கடத்துவது சரியில்லை. பஞ்ச பூதங்கள் பற்றிய ஒரு விளக்கம் ஞானத் தாழிசைக்கு நான் எழுதிய உரையில் பளிச்சிட்டது. அது அறிவியலோடு முரண்படாத விளக்கம். அது என்ன?

    சாதாரணமாக, நம் புலப்பாட்டுக்கு உள்ளாகும் பொருட்கள் மூன்று நிலைகளில் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. திடப்பொருள் நிலை, திரவப் பொருள் நிலை, வாயு அல்லது ஆவி நிலை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ஸாலிட், லிக்விட், கேஸ் (நான் கோர்ட்டில் வாதாடும் வழக்கில்லை ஓய், சமையலுக்குப் பயன்படுத்துகிறோமே அந்த சிலிண்டரில் வரும் ஆவி)!

    advoஇன்னும் சற்று நுட்பமாக ஆராய்ந்தால், இந்த மூன்று விதமாகவும் இல்லாத சில விஷயங்கள் அறிவியல் புலப்பாட்டிற்கு உட்படுவது தெரிகிறது. இந்த மூன்று நிலைகளில் ஒன்று இன்னொன்றாகச் சில சூழ்நிலைகளில் மாறும். எடுத்துக்காட்டாக, திடப் பொருளாக இருக்கும் பனிக்கட்டி, உருகினால், திரவமாகி விடும். நீரைக் கொதிக்க வைத்தால் அது ஆவியாகி விடும். விஞ்ஞானிகள், சோதனைக் கூடத்தில் செய்த சில பரிசோதனைகளில், சில பொருள்கள் இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் மறைந்தே போய்விடுவதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், பொருண்மை அழிவதே இல்லை என்ற விதியின்படி அவை மறைவதில்லை என்று சொல்லி, அவை ‘ப்யூர் என்ர்ஜி’ என்ற ஆற்றல் நிலைக்கு ஏகி விட்டன என்று அமைதி செய்தார்கள். அணுகுண்டின் சூக்குமமே அதுதான். எந்தப் பொருண்மை நிலைக்கும் அடிப்படைப் பொருண்மையான அணுவுக்குள் ஆற்றல் பொட்டலமாக ஓர் உட்கரு, மையம்கொண்டு இருப்பதை ரதர்ஃபோர்ட் என்ற அறிவியல் மேதை கண்டுபிடித்துச் சொன்னார். அவரைத் தொடர்ந்து, அவருடைய சீடர்கள், சாட்விக் போன்றவர்கள், அந்த ஆற்றல் பொட்டலத்தைப் பிரித்து, அவிழ்த்து அதற்குள் இருந்து மிகப் பெரிய அளவு ஆற்றல் வெளிப்படக்கூடிய வாய்ப்பை முன்மொழிந்த பிறகே, ஓப்பன்ஹைமர் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு குழு, அணுகுண்டை உருவாக்க முடிந்தது. திடநிலை, திரவநிலை, ஆவிநிலை, ஆற்றல்நிலை ஆகிய நான்கு நிலைகளில் பொருண்மை இருக்க முடியும் என்பது தெளிவாகியது. ஆனால், இன்னும் நுட்பமாக விஞ்ஞானம் வளர, வளர வெட்டவெளி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வெளியில் உண்மையிலேயே, பாரதி வியந்து சொன்னதுபோல் கணம்தோறும் சிற்றணுத் துகள்கள் கோடிக்கோடித் தோன்றி, நொடிப் பொழுதில் மறையும் தீராத விளையாட்டு, அல்லது கம்பர் சொன்னதுபோல் “அலகிலா விளையாட்டு”, நடைபெற்றுக் கொண்டே இருப்பது தெளிவாகியது. எனவே, ஆற்றலாக உருவெடுத்து, அதிலிருந்து சிற்றணுக்களாக உருவெடுத்து, உடனே மறைந்து, மீண்டும் தோன்றி, ஓர் ஓயாத சக்தி நடனத்தை வெட்டவெளி நடத்திக் கொண்டிருக்கும் வியப்பை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது.

    இப்பொழுது சொல்லுங்கள், திடப் பொருள், திரவப் பொருள், ஆவிப்பொருள் ஆகிய மூன்று நிலைகள், அவற்றைக் கடந்த ஆற்றல்நிலை என்ற நாலாவது நிலை, நான்கு நிலைகளுக்கும் நிலைக்களமாக விளங்கும் வெட்டவெளியாக விரிந்து கொண்டே இருக்கும் ஐந்தாம் நிலை. இப்படி ஐந்து நிலைகளை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த ஐந்து நிலைகளே, திடப்பொருள் நிலையைக் குறிக்கும் நிலம்; திரவப் பொருள் நிலையைக் குறிக்கும் நீர்; ஆவிப்பொருள் நிலையைக் குறிக்கும் காற்று; ஆற்றல் நிலையைக் குறிக்கும் நெருப்பு; வெட்டவெளி நிலையைக் குறிக்கும் ஆகாசம் அல்லது வெளி. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்கள்! சரிதானே!

    ‘என்னப்பா, ஆவி, பூதம் என்று அச்சுறுத்துகிறாய்?’ என்ற குரல் கேட்கிறது. ‘ஆவி’ என்பது வாயு நிலை. அவ்வளவுதான். ‘பூதம்’ என்ற சொல்லுக்கு வடமொழியில் தோற்றம் என்று பொருள். பூத உடல் என்றால் புலப்பாட்டுக்குத் தோன்றும் உடல். சூட்சுமம் என்பதன் எதிர்ப்பதமே பெளதிகம். பெளதிகம் என்ற சொல்லில் இருந்து வருவது பூதம். பூச்சாண்டி காட்டவில்லை. தோற்றங்களால் ஆன உலகத்தில் தோன்றும் பொருள்கள் இந்த ஐந்து விதமாகத்தான் தோன்ற முடியும் என்ற விஞ்ஞான உண்மையைக் குறிப்பதே, ‘பஞ்ச பூதங்கள்’ என்ற சொற்றொடர். பஞ்ச பூதங்கள் இன்றி உலகம் இல்லை. பஞ்ச பூதங்களை நுகரும் பொருட்டே அவற்றுக்கு ஏற்ப ஐந்து பொறிகளும், அவற்றின் மூலம் புலப்பாடாகின்ற ஐந்து புலன்களும். எப்படி ஒரு கச்சிதமான அமைப்புமுறை! இந்தப் பஞ்ச பூத அமைப்புமுறை பஞ்சர் ஆனால் சூனியம்தான். அடாடா, என்ன பஞ்ச் டயலாக்!

    சிகாமணி விசிலடிக்கிறான், அதுவும் ஒரு திரைப்படப் பாடலை. என்ன பாடல்? “கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று”. சரியான கேள்வி கேட்பதே தீர்வின் முதற்படி. இல்லையா? ஒளவை நடராஜன் அவர்கள் 1986-ல் கேட்ட கேள்வியால், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ஞானத் தாழிசை’ மூலம் ஒரு தீர்வு கிடைத்த வரலாறு இதுதான் ஐயா! அவருக்கு என்றும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

    குருவாகத் தேடி வந்து என்னை ஆற்றுப் படுத்திய டாக்டர் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமில்லை. ஞானத் தாழிசைக்கு உரை எழுதக் கட்டளை இட்டதற்கு முன் அவர் தந்த உள்ளூக்கத்தால், ஏதோ ஓர் உயர்ந்த களத்தோடு என் ஆழ்மனம் தொடர்பு கொண்டதாகத் தோன்றியது. திருமூலருக்கு எப்படித் திருமந்திரம் பாடல்கள் உருவாகின என்று சொல்லப் படுகிறதோ, கிட்டத்தட்ட அப்படியொரு நிலையில் சில அதிசயச் செய்யுள்கள் என் அகத்தில் உதித்தன. அப்படி வந்த 101 செய்யுள்களை என் கவிதைத் தொகுப்பான “உன்னோடு நான்” என்ற நூலில் ‘குருமந்திரம்’ என்ற துணைத் தலைப்பிட்டுத் தந்துள்ளேன். அதில் கூட பஞ்ச பூதங்களைப் பற்றிய விளக்கம் பொதிந்து கிடப்பதை நான் உணர்ந்தேன். குருமந்திரத்திலிருந்து, மாதிரிக்கு ஒரு செய்யுள் மட்டும் இங்கே தருகிறேன்:

    நெருப்புக்கு நீர்தந் தணைக்கலாம் அன்றி

    நெருப்பை வளியால் பெருக்கலாம் உள்ளே

    நெருப்பை விதைக்க நிலம்தரலாம் தீயில்

    உருவாரம் செய்துவெளி ஊதலாம் அன்றே

    சரி, சரி. அந்தக் கதைகளை அப்புறம் கேட்கலாம். நாம் பாட்டுக்கு ஏதேதோ பேசிக் கொண்டே, கால பைரவன் துணையோடு கடகடவென்று பத்துப் பதினைந்து ஆண்டுகள் தாண்டி வந்து விட்டோமே. அந்தக் காலக் கட்டத்தில் என்னவெல்லாம் நடந்தனவோ? அவற்றைத் தவற விடலாமா?

    திருமணம் ஆன பிறகு, முன்பே சொன்னது போல், அவ்வப்போது நானும் ஷோபனாவும் சேர்ந்து அமர்ந்து சில இசைப்பாடல்கள் உருவாக்கினோம் என்றாலும், ‘கவிதை கவிதை’ என்று வெறி கொண்டு பாடிய தாகம் குறைந்து விட்டது போல் ஆனது. திருமணம் ஆகிச் சில ஆண்டுகளாக நான் பாரதி கலைக் கழகக் கவியரங்கத்திற்குச் சரிவரப் போகாமல் இருந்த நிலையில், திடீரென்று, 1977-ஆம் ஆண்டில், மீண்டும் அந்தக் கலைக் கழகத்தோடு தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள, மீண்டும் என்னுள் மின்னிக் கொண்டிருந்த கவிதைக் கனலை ஊதி வளர்க்க, மந்தைவெளி, நார்ட்டன் லேனில் அப்போது நான் வசித்து வந்த வீட்டில் பாரதி கலைக் கழகத்தின் கவியரங்கம் நடைபெற அழைப்பு விடுத்தேன். எல்லாரும் வந்து கவிதை பாடினார்கள். என்னைப் பாட அழைப்பார்கள் என்று தெரியும். அதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே அந்தக் கவியரங்கத்துக்காக ஏதாவது கவிதை எழுத முனைந்து, முயன்று முடியாமல் தோற்றுப் போய்க் கடைசியாக ஒரு கவிதை எழுதினேன். அதைத்தான் படித்தேன். என் கவிதை நண்பர்கள் இன்றும் அந்தக் கவிதை வரிகளைச் சொல்லி வருகிறார்கள். அதன் ஆரம்ப வரிகள்:

    எனக்குக் கவிதை எழுத வராது

    ஏக்கம் இல்லாமல் இலக்கியம் ஏது

    அந்தக் கவிதை அந்த அரங்கத்தில் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அந்த அரங்கத்தில் என் கவனம் வேறு திசையில் சென்றது. அந்த அரங்கத்தில் புதிதாக எனக்கு அறிமுகமான ஒரு கவிஞரும், அவருடன் வந்திருந்த இன்னொரு நண்பரும் என் கவனத்தைக் கவர்ந்தார்கள். அவர்கள் இருவருமே நெற்றி நிறைய குங்குமம் நீட்டியிட்டிருந்தார்கள். தீட்டியிருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். அந்த அரங்கத்துக்கு வந்திருந்த என் நண்பன் கண்ணன், ” என்னடா ஒரே சாக்தர் கூட்டமா இருக்கே” என்று சத்தமாகக் கேட்டுவிட்டான். அந்தக் குங்குமக் கவிஞர்கள் இருவரும் வேறு யாருமில்லை, நம்ம இசைக்கவி ரமணனும், திராவிட மாயை சுப்புவும்தான். அவர்களைச் சந்தித்தது என் வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.

    ரமணனின் கவிதாவேசமும், சுப்புவின் அடக்கமான எதேச்சாதிகாரமும் என்னை எப்படியோ கவர்ந்ததோடு, எனக்குள்ளும் தொற்றிக் கொண்டன. சீன தத்துவத்தில் ‘யின் அண்ட் யாங்’ (yin and yang) இரட்டை நிலைக்கு இந்த இரட்டையரை உதாரணம் காட்டலாம். அவர்களுக்குள் அப்படியோர் முரண்பட்ட இணைவு, இணைபிரியாத தொலைவு!

    அன்று முதல் அவர்கள் என் வீட்டுக்கு வருவதும், நானும் ஷோபனாவும் பெஸண்ட் நகரில் ரமணன் குடியிருந்த வீட்டுக்குப் போவதும் அன்றாட வழக்கமாகி விட்டது. சுப்புவுக்கு ஷோபனாவின் மேல் ஒருவித பக்தி கலந்த மரியாதை. முதலில் பார்த்த போது ‘இந்தப் பெண்ணுக்கு கவிதை சமாச்சாரம் எல்லாம் எதற்கு” என்பதுபோல் பார்த்தவன் தன் அபிப்ராயத்தைப் பிறகு மாற்றிக் கொண்டான். ‘உனக்கு என்ன பாடல் பிடிக்கும்?’ என்று சுப்பு அவளிடம் கேட்டதும், பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு பாடல்’ என்று அவள் விடை சொன்னாளாம். அதனால், அவனுடைய அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டதாம். இதை அவனே சொல்லியிருக்கிறான்.

    ரமணன் என்ன எழுதினாலும் அந்தத் தாளின் முகப்பில், “சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை” என்று எழுதியிருப்பான். அது அவனுடைய தாரக மந்திரமாகவே இருந்தது. ஒருநாள், மாலை பெஸண்ட் நகர் ரமணன் வீட்டில் கவிதைக் கச்சேரி, ரமணனுடைய அப்பா சேஷு மாமாவின் கிண்டல், ரமணன் அம்மா தந்த பாயசம் என்று எல்லா கலாட்டாவும் முடிந்த பிறகு, ரமணன் அன்று இரவு ரயிலில் ஏதோ ஊருக்குக் கிளம்பினான். அவனுடைய பெட்டி, மூட்டை முடிச்சுகளை எல்லாம் சுப்புவும், இன்னொரு தாசானுதாசனான நண்பன் கெளரிசங்கரும் எடுத்துக் கொண்டனர். “என்னப்பா, இப்படியே நடைபயணமாகச் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை, “சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை” என்று கோஷம் போட்டுக் கொண்டே போவதாக உத்தேசமா?”. இப்படி நான் கேட்டதும் எல்லாரும் சிரித்தார்கள். சுப்பு மட்டும் விரைப்பாக, ரமணனை வழியனுப்பப் போவது ஏதோ சபரிமலை யாத்திரை மாதிரி ஒரு பரவச உணர்வுடன், நடை கட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

    நான் அந்த சாக்தர் கூட்டத்தில் வகையாக மாட்டிக் கொண்டு விட்டேன். அப்போது கடவுள் என்றெல்லாம் ஒரு தீவிர நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி ஒருவரோ, ஒருத்தியோ, ஒன்றோ இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற ஒரு கர்வத்தோடு நான் இருந்த காலம் அது. உடைந்து தவிடுபொடி ஆவதற்குத்தானே கர்வம்! அது உடைந்த கதையைப் பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(34)

    -செண்பக ஜெகதீசன்

    ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
    பேரறி வாளன் றிரு. (திருக்குறள் – 215: ஒப்புரவறிதல்)

    புதுக் கவிதையில்…

    குளம்நிறை நீரும்
    குறைவின்றி உதவும் பலர்க்கும்,                  Pond
    குடிப்பதற்கே.

    பிறர்க்குதவும் பேரறிவாளன்
    பெற்ற பெருஞ்செல்வமும்
    பேருதவியாயிருக்கும்
    பலருக்கும் – குளத்துநீர் போல…!

    குறும்பாவில்…

    உதவிடும் குணமுடையோன் செல்வம்,
    குடிநீர் நிறைந்த
    குளம் போன்றதே…!

    மரபுக் கவிதையில்…

    குடிநீர் குளத்தில் நிறைந்திருந்தால்
    குடித்துப் பலரும் பயன்பெறுவர்,
    அடுத்து வந்திடும் மாந்தரவர்
    அல்லல் அகற்றிட மனம்போலக்
    கொடுத்தே உதவிடும் உளமுடைய
    கொள்கை யாளர் கைப்பொருளும்,
    எடுத்துக் குடிக்கும் நீர்நிறைந்தே
    எல்லார்க் குதவும் குளமாமே…!

    லிமரைக்கூ…

    பலர்க்கும் உதவியாயிருக்கும் குடிநீருடன் குளம்,
    இதற்கு ஒப்பாரே
    பணமுடையோர், கொண்டிருந்தால் பிறர்க்குதவும் உளம்…!

    கிராமிய பாணியில்…

    கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
    நல்லதண்ணி கொளத்தப்பாரு,
    நமக்கு ஒதவும் கொளத்தப்பாரு…

    தண்ணி நெறஞ்ச கொளத்தப்பாரு
    தாகந் தீக்கும் கொளத்தப்பாரு
    தாயா ஒதவுங் கொளத்தப்பாரு…

    கொளம் நெறஞ்ச தண்ணிபோல
    கொணம் நெறஞ்ச மனுசன்பணம்
    கெடச்சிடுமே எல்லாருக்கும்
    ஒதவிடுமே ஊருக்கெல்லாம்!

    கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
    மனுசன்
    கொணத்தப்பாரு கொணத்தப்பாரு…!   

    Share
  • ஏன் இந்த பாரபட்சம்?

    — நாகேஸ்வரி அண்ணாமலை.

    மே மாதம் 16-ஆம் தேதி லோக்சபா தேர்தல்களுக்கான முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்தன.  அமெரிக்காவில் இரவு வெகுநேரமாகிவிட்டதால் படுக்கச் சென்றுவிட்டோம்.  மறு நாள் காலையில் முடிவுகள் வெளிவந்து பா.ஜ.க. தனிப்பெருன்பான்மை பெற்றதாக அறிந்தோம்.  அன்று சாயங்காலம் முஸ்லீம் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர், ‘காலை ஐந்து மணிக்கு எழுந்து என்னுடைய ஐபோனில் தேர்தல் முடிவுகளைப் பார்த்தேன்.  பா.ஜ.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்ததை அறிந்து மிகவும் அசந்துவிட்டேன்.  படுக்கையை விட்டு எழுந்திருக்கவே விரும்பவில்லை’ என்றார்.  இந்தியாவில் இருக்கும் உறவினர்களை போனில் அழைத்துப் பேசினாராம்.  அவர்கள், ‘நீங்கள் அங்கு இருக்கிறீர்கள்.  உங்களுக்குக் கவலை இல்லை.  இந்தியாவில் இருக்கும் எங்களைப் போன்றோருக்குத்தான் கஷ்டம்’ என்றார்களாம்.  கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது போல் 69 சதவிகித இந்தியர்கள் மோடியின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை; அதனால் பா.ஜ.க.வுக்கு ஒட்டுப் போடவில்லை.

    இவர்கள் எல்லாரும் பயந்தபடியே மோடி ஆரம்பத்திலேயே நடந்துகொள்கிறாரோ என்று பயமாக இருக்கிறது.  முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஈத் பண்டிகையன்று இந்திய முஸ்லீம்கள் அனைவரையும் மனமார வாழ்த்தி முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் மதத் தலைவர்களுக்கும் பிரதம மந்திரி விருந்து கொடுக்கும் பழக்கம் நெடுநாளாக இருந்து வருகிறது.  பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது.  பதவி ஏற்ற புதிதிலேயே ஏன் இந்த வழக்கத்தை மோடி கைவிட்டார் என்று தெரியவில்லை.  அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் முஸ்லீம்களை வாழ்த்தத் தவறவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.  டி.வி.யிலோ ரேடியோவிலோ அல்லது பத்திரிக்கை மூலமோ அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்குச் சமமாகுமா இது?

    modi-offers-2-500-kg-of-sandalwoodஈத்தின் மறுநாளே நேபாளத்திற்குச் சென்ற மோடி அங்குள்ள பழமையான இந்துக் கோவில் ஒன்றிற்கு 2,500 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளும் 2,400 கிலோ எடையுள்ள நெய்யும் அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.  இவை இரண்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?  முப்பது கோடி ரூபாய்.  இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?  அவ்வளவும் இந்திய மக்களின் வரிப் பணம்.

    மோடி காவி உடை தரித்து ருத்திராட்ச மாலை அணிந்து கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.  மேலும் தன்னோடு அதிகாரிகள் யாரையும் அழைத்துச் செல்லவில்லையாம்.  மோடி ஒரு பெரிய இந்து மத பக்திமானாக இருக்கலாம்.  அதற்காக இந்தியாவின் பிரதம மந்திரியாகச் சென்றபோது ஒரு தனி மனிதன் செல்லும்போது நடந்துகொள்வது போல் நடந்துகொள்ளவேண்டுமா?  அப்படித் தனி மனிதனாகச் சென்றால் இந்திய அரசின் நன்கொடை எதற்கு?  இந்திய மக்கள் அனைவரின் நலன்களையும் பேண வேண்டிய இந்தியப் பிரதமர் இந்திய முஸ்லீம்களை பெயருக்கு வாழ்த்திவிட்டு வெளிநாட்டில் இருக்கும் ஒரு இந்துக் கோவிலுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிவழங்கியிருப்பது எல்லோர் கண்களையும் உறுத்துகிறதே.

    அவருடைய ஆதரவாளர்கள் சிலர் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை போவதற்கு இந்திய அரசு எவ்வளவு பணம் செலவழிக்கிறது என்று கணக்குக் கொடுக்கிறார்கள்.  அதுவும் இதுவும் ஒன்றா?  இவர்கள் இந்தியக் குடிமக்கள்.  இவர்களுக்குத் தங்கள் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட இந்திய அரசு பணம் கொடுத்து உதவக் கடமைப்பட்டிருக்கிறது.  இன்னொரு நாட்டின் கோவிலுக்கு –  அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கூட இல்லை – முப்பது கோடி ரூபாய் வழங்கியிருப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி?

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் அங்கு தயாரித்த உணவு நன்றாக இல்லை என்று புகார் செய்து அங்கிருந்த சமையல் ஊழியர் வாயில் அந்த உணவை வலுக்கட்டாயமாகத் திணித்திருக்கிறார்கள்.  அவர் ஒரு முஸ்லீம்; நோன்பு இருந்துவந்தார்.  அவரை இப்படித் துன்புறுத்தலாமா?  இதைப் பற்றி பிரதமர் மோடி எதுவும் சொல்லவில்லை.  இந்த நிகழ்ச்சியைக் கண்டித்து அவர் ஏதாவது சொல்லியிருந்தாலல்லவா இனி இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்கும்.

    ஏற்கனவே கிறிஸ்தவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கும் இந்தியர்களை பா.ஜ.க. மகளிர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் திரும்பவும் இந்து மதத்திற்குக் கொண்டுவரப் போகிறார்களாம்.  ஏன் இந்த வேண்டாத வேலை?  பல தலைமுறைகளுக்கு முன்பே இவர்கள் மதம் மாறியவர்கள்.  அப்போது ஒரு வேளை அவர்களில் சிலர் இஷ்டத்திற்கு மாறாக மதம் மாற்றப்பட்டிருக்கலாம்.  ஆனால் பல தலைமுறைகளாக அவர்கள் இந்த மதங்களைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.  அவர்களை இப்போது மறுபடி மதம் மாறச் சொல்வது சரியா?  அப்போது நடந்த அநியாயத்தை மறுபடி நடத்த வேண்டுமா?  அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்காக இப்போது நாமும் செய்ய வேண்டுமா?

    மோடி அவர்களே, இந்திய முஸ்லீம்களைப் புறக்கணித்துவிட்டு  நேபாளத்தில் உள்ள ஒரு இந்துக் கோவிலை இவ்வளவு தூரம் ஆதரிப்பது சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?  தாங்கள் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்த முஸ்லீம்கள் நினைத்தது சரிதான் என்பது போல் நடந்து கொள்ளலாமா?  ‘நீங்கள் பயந்தது போல் எல்லாம் நடக்காது.  நான் இந்தியப் பிரதம மந்திரி என்ற முறையில் எல்லோரின் நண்பன்’ என்று காட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமா?

    படம் உதவிக்கு நன்றி: http://www.business-standard.com/photo-gallery/current-affairs/modi-s-nepal-visit-1087.htm

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 16

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 16

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 61

    Mukkonakkilikal - 62

    Mukkonakkilikal - 63

    Mukkonakkilikal - 64

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

     

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

    Share
  • இரு இமயங்கள்

    வணக்கம்,வாழிய நலம்

    1.ஸர் ஐஸக் நியூட்டன் ( 1643-1727)

    issac

    வரலாற்றில் சொல்வோமே- “இன்னார் உலகத்தை ஒருகுடையின் கீழ் ஆண்டார்” என்று, அதுபோல விஞ்ஞானம் குறிப்பாக இயல்பியல் மற்றும் கணிதத் துறைகளில் தன்னிகரில்லாமல் கோலோச்சிய ஒரு சக்கரவர்த்தி உண்டென்றால் அது ஸர்.ஐஸக் ந்யூட்டன் மட்டுமே!

    விழுகின்ற ஆப்பிள் தொடங்கி, வியனுலகெங்கிலும் வியாபித்த ஈர்ப்புவிசை, ஓளித்துகளின் இயல்பு ,’ கால்குலஸ் என்ற கணிதத் துறை, நிலை மற்றும் இயக்கத்திற்கான விதிகள் என ந்யூட்டனின் காலடிச் சுவடுகள் பதியாத துறை கிடையாது.1685 ஆம் ஆண்டு இவர் பதிப்பித்த ” Principia Mathematitia” என்ற ஆய்வுத் தொகுப்பே அறிவியல் வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த முழு அறிவியல் நூல் எனலாம்.

    2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    albert

    நியூட்டன் போலவே, இவரது இளமைக் காலமும் சொல்லிக் கொள்ளும் படி பிரமாதமாக இல்லை.

    ஒரு சாதாரண மாணவனாகவே இருந்த ஐன்ஸ்டைன், எந்த உபகரணங்களோ, சோதனைச் சாலையின் உதவியோ இன்றி, 1905 ஆம் ஆண்டு, தனது மூன்று ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறிவியல் உலகைப் புரட்டிப் போட்டார்.

    ” Max Plank இன் Quantum கொள்கையின் அடிப்படையில் Photo electric effect பற்றிய கட்டுரை அவருக்கு நொபெல் பரிசைப் பெற்றுத்தந்தது.

    இரண்டாவது கட்டுரை Brownian Movement என்றநிகழ்வின் அடிப்படையில், அணுக்களின் அளவு குறித்தது;
    மூன்றாவது உலகைப் புரட்டிப் போட்ட சார்புக்கொள்கை.( முதலில் சிறப்பு சார்புக் கொள்கையும், பின்னர் பொதுச் சார்புக் கொள்கையும் வெளியிட்டார்).

    இந்த இரு இமயங்களையும் வரைவதில் பெருமை அடைகிறேன்.

    பி.கு:

    1. “PHYSICS” என்ற வார்த்தையைத் தவறாக “இயற்பியல்” என்று மொழிபெயர்ப்போருக்கிடையே ” இயல்பியல்” என்ற சரியான பதப் பிரயோகம் செய்த என் இனிய நண்பன் க.ரவிக்கு இப்ப்படங்கள் காணிக்கை).

    2. இடம் பற்றாது என விரிவஞ்சி, மேற்படி குறிப்புகள் சுருக்கமாகத் தரப் பெற்றன. முழுமையாக அறிய ந்ண்பன் க.ரவியின் ” இருபதாம் நூற்றாண்டில் இயல்பியல்” ( வானவில் பதிப்பகம்) புத்தகத்தைப் படிக்கவும்

    சு.ரவி

     

    Share
  • மழைத்துளிகள்!

    – தாரமங்கலம் வளவன்

    மனிதன் மமதையில்
    ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்                      raindrops
    என்கிறான் ’

    பூமியிலிருக்கும் மனிதன்
    வானத்தைத் தொட்டுவிட நினைக்க,
    நீ பூமியைத் தொட்டுவிட
    ஓடி வருகிறாய்…!

    வந்து பார்த்து,
    மனிதனும், பூமியும்
    பிடிக்கவில்லை என்று
    பூமிக்கு வருவதை மட்டும்
    நிறுத்தி விடாதே…!

    நீ வருவதை நிறுத்தி விட்டால்,
    மனிதக் கூட்டம் ஒட்டு மொத்தமாய்
    உன் இருப்பிடத்திற்கு
    ஆமாம்-
    வானத்திற்கு வந்து விடுவார்கள்!

    Share
  • பெளர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    kannipen

    கன்னிப்பெண் திரைப்படத்திற்காக நடிகர் சிவக்குமார் வெண்ணிற ஆடை நிர்மலா இணைசேர.. கவிஞர் வாலி எழுதிய பாடலுக்கு மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி பாடியிருக்கிறார்கள்.  முழுமையான மெல்லிசைப் பாடலிது என்று முழங்குகிறது இசை!

       vaaalimsvpadumnilasj

    அழகிய கவிதைக்கு ஆபரணம் பூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர்!  சொல் இனிதா.. இசைச் சுவை இனிதா என்று தரம்பிரிக்க முடியாத அளவு சுகம் சேர்த்திருக்கிறார்கள் பாடிய இருவரும்!

    திரைப்படம் வந்து ஓடிய பின்னரும் திரைப்பாடல் மக்கள் மனதில் ரீ்ங்காரமிடுவதற்கு காரணம் என்ன என்று கேட்டால்.. இதுபோன்ற பாடல்களை எவர்தான் கேட்க மறுப்பார்?  இசையால் இதயம் ஈர்த்து தமிழ்ச் சொற்களால் சொக்க வைக்கும் அற்புதம் திரைத்துறையில் அமைதியாக நடந்து கொண்டே இருக்கிறது.  அதற்கு கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் பாடக பாடகியரும் பெரிதும் காரணமாகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்ய தக்கதொரு பாடலிது என்பேன்!

    சுகம் சுகமாய் பயணம் செல்ல.. வாழ்க்கை முழுவதும் இதுபோன்ற பாடல்களை கேட்டுக்  கொண்டே தூரத்தை மறக்கலாம்!  இன்பஸ்வரங்களை எழுதிக்காட்டும் கவிஞர்கள்.. நம் இதயம் மீட்டும் இசையமைப்பாளர்கள்.. தமி்ழ்த்திரையில் கொடிகட்டிப்பறந்ததற்கு இப்பாடல் ஒரு சாட்சியாகும்!

    http://www.youtube.com/watch?v=psge_FCFjVA
    காணொளி: http://www.youtube.com/watch?v=psge_FCFjVA

    பாடல்: வாலி
    படம்: கன்னிப்பெண்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

    பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்
    கடற்கரை மணலில் இருப்போமா
    மெளனத்தின் மொழியில் மயக்கதின் நிலையில்
    கதை கதையாக படிப்போமா..

    கம்பன் தமிழோ பாட்டினிலே
    சங்கத் தமிழோ மதுரையிலே
    பிள்ளைத் தமிழோ மழலையிலே – நீ
    பேசும் தமிழோ விழிகளிலே..

    நெஞ்சம் முழுதும் கவிதையெழுது
    கொஞ்சும் இசையில் பழகும்பொழுது
    துள்ளும் இளமை பருவம் நமது
    தொட்டுத் தழுவும் சுகமோ புதிது
    கண்பார்வையே உன் புதுப்பாடலோ
    பெண் வீணையே உன் பூமேனியோ

    பிள்ளைப் பருவம் தாய் மடியில்
    பேசும் பருவம் தமிழ் மடியில்
    கன்னிப் பருவம் என் வடிவில்
    காலம் முழுதும் உன் மடியில்..

    பன்னீர் மழைதான் விழிமேல் பொழிய
    தண்ணீர் அலைபோல் குழல்தான் நெளிய
    தன்னந் தனிமை தணல்போல் கொதிக்க
    தஞ்சம் புகுந்தாள் உனைத்தான் அணைக்க
    பொன்னோவியம் என் மன மேடையில்
    சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “ஆவணிஆ விட்டமாச்சு, ஆடி கழிஞ்சாச்சு,
    தாவணி கட்டிராதை தேமேன்னு, -தேவனுன்,
    தீவனமாய்க் காத்துள்ளாள், தின்றவள் தாபத்திற்(கு),
    ஆவனசெய் ஆரா அமுது”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “மாமணக் கூந்தலாள், மாற்றான்தாய் முன்னமவன்,
    வாமனனாய் வந்து வளர்ந்ததை, -ஸ்யாமளன்,
    காட்டுகின்ற சாக்கிட்டு, காலால் உறிப்பானை,
    போட்டுடைக்கப் பார்க்கிறானென் பேன்”….

    “என்னதவம் செய்தாய், யசோதை குமாரனே,
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே,
    கோவிலுக்கு லீவுவிட்டு, கேசவ்இல்ல வாயிலின்,
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….

    Share
  • வருவாயா?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (19)

    வருவாயா?

    {கேட்டு மகிழ}

    10486783_299956013508635_266905490165609309_n

    என்றோ பெய்யும் மழையின்

    ஏதோ ஒரு சிறு துளி

    எப்படியோ மண்ணில் நுழைந்து

    விதையின் கதவைத் தட்டி

    விழியோடு விழி பேசலாம்

    பரந்து விரியும் சோலைக்குப்

    பரிசம் போடலாம்

     

    விலக்க முடியாத இருளில்

    விழிக்க முடியாத விழிகள்

    வெறித்துக் கிடக்கும்போது

    ஏதோ ஒரு கரம் கூந்தலை விலக்க

    நெற்றி தெரிவதுபோல்

    நேருக்கு நேரே நேர்ந்து விடலாம் விடியல்

     

    ஊமையின் நெஞ்சுக்குள்

    ஊசியாய் மின்னலொன்று

    உயிர்சிலிர்க்க நுழைந்தபின்னும்

    உதடு பிரிக்க முடியாமல் துயருறும் போது

    வானம், என்றோ கேட்ட

    கானத்தை நினைத்துக்கொண்டு

    சற்றே சிலிர்க்க

    வயிரங்களெல்லாம் வார்த்தைகளாகலாம்

     

    இப்படித்தான்

    இப்படியேதான் நானும்……..

     

    வந்துவிடுவாய்தானே?

     

     

    Share