Blog

  • ரெண்டுங்கெட்டான் (சிறுகதை)

    ரெண்டுங்கெட்டான் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தனக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் என்று தாயிடம் புகார் செய்தபோது அவளுக்கு ஏழு வயது.

    அது ஏன் அம்மா சுகந்தி, என்றும் அப்பா `மலரு’ என்றும்,  பள்ளித்தோழிகள் சுகி என்றும் அழைக்கிறார்கள்?

    “எனக்கு ஏம்மா இவ்வளவு நீளமான பெயர் வெச்சீங்க?” என்று சிணுங்கினாள்.

    “அதவா கண்ணு? எனக்கு சுகந்திங்கிற பேரு பிடிச்சுது. அப்பாவோ, மலருன்னுதான் வைக்கணும்னு பிடிவாதம் பிடிச்சாரு!”

    புன்னகையால் விரிந்த இதழ்களை மூடிக்கொண்டாள் மகள்.

    “நாங்க ரெண்டு பேரும் விட்டுக்குடுக்கல. கடைசியில, `இதுக்கு என்ன சண்டை?’ன்னு சுகந்த மலர்னு வெச்சோம். அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? வாசனையுள்ள மலர்!”

    சமாதானம் மட்டுமல்ல, பெருமையும் ஏற்பட்டது சுகந்தாவிற்கு. தோட்டத்திலிருந்த மல்லிகையையும் ரோஜாவையும் விரும்பிச் சூடிக்கொண்டாள்.

    மலர் என்ற தான் எப்படி மாலாவாகிப்போனோம் என்று சற்றுப் பெரியவளானதும் புரிந்துகொண்டாள்.

    சீனர்களுக்கு ‘ர’ என்கிற எழுத்து தகராறு. அவர்கள் மொழியில் அது கிடையாதாம். சிலர் அதற்குப் பதில் லகரத்தைப் பயன்படுத்துவார்கள் — ராகவன் என்ற அவளுடைய மாமாவின் பெயர் `லகாவான்’ என்று மாறுபட்டுவிட்டதுபோல். சீன ஆசிரியைகளுக்கு அவள் மாலா.

    அடுத்த சில ஆண்டுகள் எவ்விதக் குழப்பமுமின்றி நகர்ந்தன.

    பன்னிரண்டு வயதில் அடையாளக்கார்டு எடுக்கவேண்டும்.

    “நீ எடுத்த பிள்ளையா? என்னடா, அப்பா அம்மா ரெண்டுபேர் சாயலும் இல்லியேன்னு பாத்தேன்!” என்று ஆசிரியை கூற, சுகந்தாவுக்கு எதுவும் புரியவில்லை.

    வீடு திரும்பியதும், “எடுத்த பிள்ளைன்னா என்னம்மா?” என்று கேட்டாள். அப்போது அவளுக்குத் தெரியவில்லை, தாயின் பதிலால் தன் வாழ்க்கையின் தடம் மாறிப்போகுமென்று.

    தாய் முதலில் பயந்தாள். பிறகு, `இதெல்லாம் மறைக்கக்கூடிய சமாசாரமா என்று உண்மையைச் சொன்னாள்: “மத்தவங்க குழந்தையை தன்னோட குழந்தையா வளக்கறது!”

    “ஏன் அப்படிச் செய்யணும்?”

    “பெத்தவங்களுக்கு ஏதோ அசௌகரியம்”.  வலிய வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன் கூறினாள்.

    “ஏழையா இருந்திருப்பாங்களா?”

    “அப்படியும் இருக்கலாம். ஏனோ அவங்களால குழந்தையை வளக்க முடியல. தத்து எடுக்கிறவங்களுக்குப் பிள்ளை பெறமுடியாம ஏதோ கோளாறு. இதனால இப்போ ரெண்டு பக்கத்திலேயும் நிம்மதி”.

    நிம்மதிதானா? மகிழ்ச்சி கிடையாதா?

    அதற்குமேல் எதுவும் கேட்காது, முகம் வாட அப்பால் நகர்ந்தாள் பெண்.

    `அம்மா’ என்று உயிரையே வைத்திருந்தோமே! அந்த அம்மா, மீனாம்பாள், தன்னைக் குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கியிருக்கிறாள் — சாமான் போட்டு வரும் பிளாஸ்டிக் பையைக்கூட ஒருமுறை உபயோகப்படுத்திவிட்டு, வேறு எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சுத்தப்படுத்தி வைப்பதுபோல!

    இந்தக் குடும்பத்தில் தானும் ஒரு குப்பை. என்றைக்காவது எதற்காகவாவது பயன்படும் என்று சோறு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

    அழுகை ஆத்திரமாக மாறியது. தனக்குச் சொந்தமில்லாதவளை எதற்காக `அம்மா’ என்று அழைப்பது?

    அப்போதிலிருந்து சுகந்தாவின் குணமே மாறிப்போயிற்று. பள்ளிக்கூடத்தில் அவளைப் போன்ற சில பெண்கள் தோழிகளாக அவளை ஏற்றுக்கொண்டபோது, `வாழ்க்கை அவ்வளவு மோசமில்லை!’ என்று தோன்றிப்போயிற்று.

    “நாம்ப சந்தோஷமா இருக்க கூடாதுன்னுதான் சாமி அம்மான்னு ஒருத்தரைப் படைச்சிருக்கிறாரு,” என்றாள் உமா. இத்தனைக்கும், அவளைச் சுமந்து பெற்ற தாய்!  இரவு நேரங்களில் மகள் தனியாகச் சற்றே பெரிய பையன்களுடன் ஊர்சுற்றுவதைக் கண்டித்ததால் எழுந்த கோபம் வெறுப்பாக மாறி இருந்தது.

    “சரியாச் சொன்னே, உமா,” என்று பாராட்டினாள் கமலி. “எங்கம்மாவை அவங்க வீட்டில அதிகம் படிக்கவைக்கல. அதனால, என்னை எப்பவும் `படி, படி’ன்னு பிராணனை வாங்கறாங்க,” என்று பொருமினாள். “போன பரீட்சையில நல்லா செய்யலேன்னு ரூமில போட்டுப் பூட்டிட்டாங்க. மூணு நாள்! அம்மாவாம் அம்மா!”

    தன்னையுமறியாது, அவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டாள் சுகந்தா. இப்படியெல்லாம் செய்து தன்னைத் துன்புறுத்தவில்லை அம்மா என்று தான் நம்பிய மீனாம்பாள்.

    இருந்தாலும், `இனிமே என்னை அம்மான்னு கூப்பிடவேமாட்டியா?’ என்ற ஏக்கம் பெருக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் குடிகொண்டிருப்பதைப் பார்த்து ஒரு குரூர திருப்தி எழுந்தது சுகந்தாவுக்கு. வளர்ப்புத்தாயை இன்னும் எப்படியெல்லாம் நோகடிக்கலாம் என்பதுபோல் நடந்துகொண்டாள், தன்னையுமறியாது.

    உமாவின் பிறந்தநாள் விழா என்று போனவள், அங்கு முன்பின் தெரியாத ஒருவனுடன் நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பும்போது நள்ளிரவு. அவன் அவளைவிட மூத்தவனாக இருந்தபோதும் அவளை மதித்துப் பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை. அவளுடைய அறிவையும் அழகையும் எப்படிப் புகழ்ந்தான்!

    வழக்கத்துக்கு விரோதமாக முன்ஹாலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அமைதியான முகத்துடன் மீனாம்பாள் உட்கார்ந்திருந்தாள்.

    அவளைக் கவனியாததுபோல உள்ளே செல்ல முற்பட்டாள் சுகந்தா.

    “இப்படி வந்து ஒக்காரு. ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.” வழக்கத்துக்கு விரோதமாக அவள் குரலில் இருந்த கண்டிப்பு சுகந்தாவைப் பணியவைத்தது.

    “நான் நல்லவிதமா வளத்தா, ஒன் பிறப்பை மாத்திடலாம்னு நினைச்சேன். அது தப்புன்னு இப்போ தோணுது”.

    சுகந்தா விழித்தாள். என்ன சொல்ல வருகிறாள்?

    “ஒனக்கு இப்போ ரெண்டுங்கெட்டான் வயசு. நீ குழந்தையுமில்லே, வளந்த பெரியவளும் இல்லே. ஒனக்கு இன்னும் ஒலகம் புரியல. அதான் ஒன்னைப் பெத்தவ செஞ்ச தப்பையே நீயும் பண்ணறே!”

    சுகந்தா நிமிர்ந்து உட்கார்ந்தாள். தான் கேட்க நினைத்ததைத் தானே சொல்கிறாள்.

    “அவளுக்கும் அப்போ பதினஞ்சு வயசுதான். கூடப் படிக்கிற பையனோட கண்ட கண்ட படங்களை ஒண்ணாப் பாத்துட்டு…! சுதந்திரம்னு நினைச்சு மனம்போனபடி நடந்துக்கிட்டா. அவ வயத்திலே நீ! படிப்பு பாதியில நின்னுபோச்சு.” பழைய சம்பவத்தில் மனம் நிலைக்க, சற்றே நிறுத்தினாள்.

    “மைனர் பொண்ணைக் கற்பழிச்ச குத்தத்துக்காக அந்தப் பையனைப் போலீஸ் பிடிச்சுக்கிட்டுப்போச்சு”.

    பிறக்குமுன்பே தாய் தந்தை இருவர் வாழ்க்கையையும் நாசமாக்கியிருக்கிறேன்!  சுகந்தா மெல்ல விசும்பினாள்.

    “அந்த அம்மா செஞ்ச தப்பை நீயும் செய்யக்கூடாது, சுகந்தி. அப்புறம் ஒனக்குப் பிறக்கப்போற குழந்தையும் நிம்மதி இல்லாமத் திண்டாடும்”.

    சுகந்தாவின் மனத்தில் பல கேள்விகள் எழுந்தன.

    அப்புறம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று?

    சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வெளியேறியதும் பையனுடைய வாழ்க்கை சீரடைந்ததா?

    அதெல்லாம் தெரிந்து இப்போது என்ன ஆகப்போகிறது!

    `யார் எப்படிப் போனால் எனக்கென்ன!’ என்று அவற்றை ஒதுக்கித் தள்ளியபோது, தானும் அப்படி ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோமே என்ற நிம்மதி பிறந்தது.

    ஓடி வந்து, “அம்மா!” என்று விம்மியபடி மீனாம்பாளை இறுக அணைத்துக்கொண்டாள் சுகந்தா.

    Share
  • தைப்பூசத் திருநாள்

    தைப்பூசத் திருநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன்
    தாயின்றி உருவான ஞான குருநாதன்
    வந்திக்கும் அடியார்க்கும் வரமருளும் நாதன்
    வள்ளிதெய்வ யானையுடன் காட்சிதரும் நாதன்

    ஆறுபடை வீடமர்ந்த ஆறுமுக நாதன்
    அருணகிரி தமிழ்பாட அருள்புரிந்த நாதன்
    வீறுடைய அசுரர்தமை வெற்றி கொண்டநாதன்
    வியந்துமே போற்றுகின்ற வெற்றிவேல் நாதன்

    தந்தைக்கு குருவான தயையுடைய நாதன்
    தைப்பூசத் திருநாளில் அவதாரம் செய்தார்
    சிந்தைக்குள் புகுந்திருக்கும் அகந்தையினை அகற்ற
    கந்தனாய் தைப்பூசம் வந்துதித்தார் காக்க

    சிதறிய பொறிகள் மலர்களில் வீழ்ந்தன
    அழகுடை குழந்தைகள் அறுவர் தோன்றினர்
    கார்த்திகைப் பெண்கள் கைகளில் எடுத்தனர்
    கனலது கந்தனாய் உருவினைப் பெற்றது

    ஆணவ அரக்கரை அழித்திட வேலினை
    அன்னை உமையவள் கொடுத்தனள் கையினில்
    வேலவன் வாகையைச்  சூடிய நாளதாய்
    பூசத் திருநாள் பொலிந்தது புவியினில்

    கந்தன் கோவில்கள் ஒளியினில்  மிதந்திடும்
    காவடி பலபல சன்னதி நிறைந்திடும்
    கற்பூர சட்டிகள் தலைகளில் அமர்ந்திடும்
    தைப்பூசத் திருநாள் சந்தோஷம் தந்திடும்

    ஒளியினில் இறைவனைக் கண்டிடும் திருநாள்
    உணர்வுகள் இறையுடன் கலந்திடும் திருநாள்
    பலபல இடங்களில் மிளிர்ந்திடும் திருநாள்
    பாங்குடை தைப்பூச திருநாள் ஆகும்

    மங்கல நிகழ்வுகள் தொடங்கிடும் திருநாள்
    மனைகளில் மகிழ்வுகள் நிறைந்திடும் திருநாள்
    பொங்கலைத் தொடர்ந்து அமைந்திடும் திருநாள்
    எங்களின் வாழ்வினில் தைப்பூசத் திருநாள்

    உழவர்கள் புதிரை எடுத்திடும் திருநாள்
    உணர்வுடன் அதனைப் பகிர்ந்துண்ணும் திருநாள்
    கற்றிட ஏட்டினைத் தொடங்கிடும் திருநாள்
    காதுகள் குத்தியே மகிழ்ந்திடும் நன்னாள்

    புதியன பலபல தொடங்கிடும் பொன்னாள்
    புலனெலாம் நன்னெறி புகுந்திடும் நன்னாள்
    இறையது ஒளியாய் எழுந்திடும் திருநாள்
    இகமதில் தைப்பூச திருநாள் ஆகும்

    Share
  • Mahatma Gandhi

    Mahatma Gandhi

    Baskar Seshadri

    It was an ordinary day for Mohandas.

    It was Friday and the life was usual for everyone. Mohandas got up at sharp 3.30 am in Birla house and he has been staying there since September of 1947.

    The peacemaking ceremony had happened in this place among many persons. Attendant Brij Krishna was ready as usual with his nieces Manu and Abha. The prayer started at sharp 3.45 am on the dot. He had a simple massage and corrected the draft proposal he already made. He had his lemon juice. Later little honey and orange juice since he underwent a long fast only a month ago which had deteriorated  his health.

    The completed document was almost his last will and testament in a way. He recollected about the Noakhali issue and the crisis of Rice in Madras to his secretary Pyarelal and then went to take a short nap. There were some heated speech by Shyam prasad Mukherjee only few days ago and he had threatened to kill congress men on this.

    Mohandas was upset at this hate speech. He met as a normal practice his visitors which included blind refugees. A delegation from Punjab and Sikh came to invite and he suggested Babu Rajendra Prasad to be the President. He also had a meeting with Nehru and Patel since he did his peace making process between them.

    On the other hand it was Nathuram Godse who was staying in the retiring room Number Six of the old railway station decided that he had a mission on his hand and he was among a big team who were in various points to execute in case of any failure from his end. Many may not be aware that there was an attempt on Jan 10 was later treated as a dry Run.

    Mohandas love to be punctual and sadly on this day he was late by ten minutes since his secretaries decided not to intervene a discussion which was going on already. His famous Ingersoll was not worn by him and that could be another reason for his being late that day.

    To make it quick he chose a short cut and was moving to the prayer hall in the first floor. There were normally twenty policemen to protect him which was arranged only few months ago after an attempt was made months ago.

    Well before five Pm Godse reached Birla Temple  and Apte and Karkare was there following him. He was in Khaki and engaged a tonga. The mission was on and they were all travelling towards the Birla House.

    Normally people used to form a passage track and on that fateful day it was not to be. Godse was getting ready with his Italian made Beretta pistol. Godse Pushed Manu aside and moved his way towards Mohandas. In the melee when the flower plates fell down she bent down to pick it. It was at this moment Godse picked his gun and shot Mohandas thrice one at the chest and two on the abdomen. It was a point blank range. Mohandas stood till third bullet was pumped on him and fell on the ground.

    The man who fought against the violence fell prey to his teaching and the age of close to eighty.

    All were over at 5.17 Sharp on the evening of January 30, 1948. The fragrance of flowers vanished and it became a smokey Gun Powder smell that filled the air.

    When Mohandas fell to the bullets he chanted just two times He Ram He ram and had his last breathe. That was his last prayer.

    There are versions to say that he did not say He Ram at all. His personal assistant Sri Kalyanam (He died Last year) says he fell and died and it was Manu and Abha who lifted him and kept his head on their laps.

    The whole world grieved. it was this man who preached non-violence and it was the same man who fell to the Beretta Bullets.

    Its shame on us that we killed him. Who also can be fondly called as Bapu and its our own Mahatma.

    Our salutes forever to this Messiah.

    Share
  • தாடண்டர் நகர் பொங்கல் விழா

    தாடண்டர் நகர் பொங்கல் விழா

    சென்னை, சைதை, தாடண்டர் நகரில் புத்தாண்டு, பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. கரகாட்டம், பறையிசை, சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு, குத்துச் சண்டை, கோலப் போட்டி எனத் தமிழர் கலைகளின் பெருவிழாவாக நடைபெற்றது.

    தாடண்டர் நகர் பொங்கல் விழாவில் சைதை சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார். மாரத்தான் வீரரான அவருக்கு வீர விளையாட்டுகள் மூலமாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பொங்கல் விழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் பத்தாம் ஆண்டு விழா

    நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் பத்தாம் ஆண்டு விழா

    நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டமாக ஐம்பெரும் விழா சேலம் சண்முக மருத்துவமனை கலையரங்கில் 29.1.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.

    நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் வரவேற்புரை ஆற்றினார்.

    சேலம் சண்முகா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பன்னீர்செல்வம் நிகழ்விற்குத் தலைமைத் தாங்க, விவசாயி திரு. பழனிச்சாமி, தாரை குழுமம் தலைவர் திரு.தாரை குமரவேல், இந்திய மாதர் சங்க செயலாளர் திருமதி குப்புரத்தினம் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பத்திரிகையாளர், பதிப்பாளர், கலைமாமணி முனைவர் லேனா தமிழ்வாணன் மற்றும் திரைப்பட நடிகை, தன்னம்பிக்கை பேச்சாளர் சசிலயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, “பத்திரிகைகள் பாராட்டும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட்” எனும் புத்தகத்தை வெளியிட்டனர்.

    நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பில் அயோத்தியாபட்டணத்தில் அமைந்துள்ள நம்பிக்கை முதியோர் இல்லத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய கலைமாமணி முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்கள், “நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பானது தன்னலம் பாராது பல நல்ல பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பை நடத்தி வருகிற கவிஞர் ஏகலைவன் தனியொரு மனிதராக ஊனமுற்றவராக இருந்தாலும், நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். கொரோனா காலகட்டத்திலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியி்ல் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் நற்பணிகள் தொடர்ந்து நடைபெற்று பல்வேறு பயனாளிகளுக்கு பயனளித்தது பெரிய சாதனை. உதவி தேவைப்படும் மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு சரியான உதவியை செய்து வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் சார்பாக நம்பிக்கை முதியோர் இல்லம் தொடங்கவிருப்பது இன்னும் பல பயனாளிகளுக்கு பேருதவியாக அமையும். இத்தகைய அமைப்பிற்கு தற்போது சொந்த நிலம் தேவைப்படுகின்ற ஒரு சூழலில், நல்ல உள்ளங்கள் முன்வந்து அந்த அமைப்பிற்கு இடம் கொடுத்து உதவி செய்தால், இந்த சமூகத்திற்கு செய்த நற்பணியாகவே அமையும். சின்னச் சின்ன உதவிகளைச் செய்துவிட்டு, பெரியளவில் விளம்பரப்படுத்துவோருக்கு மத்தியில், சரியான நபர்களுக்கு பேருதவிகளை செய்துவிட்டு எந்தவித விளம்பரமும் இன்றி செயல்பட்டு வரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பானது நம் எல்லோராலும் ஆதரிக்கப்பட வேண்டிய அமைப்பு” என்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகை தன்னம்பிக்கை பேச்சாளர் சசிலயா, “இந்த சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் தான் இன்றைய சூழலில் நம்பிக்கையின் ஆதாரமாக திகழ்கிறார்கள். அத்தகையோரில் கவிஞர் ஏகலைவன் அவர்களின் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பானது நல்ல பல பணிகளை செய்து வருகிறது. தனியொரு மனிதராக வாழ்வில் வளர்ச்சி அடையும் போதும், சமுதாயத்திற்கு நல்ல பணிகளை செய்யும்போதும், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து தொடர்ந்து நாம் செயல்பட வேண்டும். அதுவே வாழ்வில் வெற்றி தரும்” என்று பேசினார்.

    விழாவில் சமூகப் பணியாற்றும் பல்வேறு சாதனையாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

    அரசுப் பள்ளியின் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நிதி உதவி செய்யப்பட்டது.

    விழாவில் பங்கேற்ற பலரும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் நற்பணிகள் தொடர்ந்து நடைபெற நிதி வழங்கினர்.

    நம்பிக்கை வாசல் டிரஸ்டின் கௌரவ தலைவர் ஏ.ஆர். முத்துராமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

    கவிஞர் ச.கோபிநாத், கவிஞர் இரா. பூபதி ஆகியோர் விழாவினை தொகுத்து வழங்கிட, மதிய உணவோடு விழா இனிதே நடைபெற்றது.

    தொடர்புக்கு

    கவிஞர் ஏகலைவன்
    தலைவர்
    நம்பிக்கை வாசல் டிரஸ்ட், அயோத்தியா பட்டணம், சேலம்
    கைபேசி 9842974697, 8682994697

    Share
  • குறளின் கதிர்களாய்…(436)

    குறளின் கதிர்களாய்…(436)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(436)

    ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
    பேதையிற் பேதையா ரில்.

    -திருக்குறள் – 834 (பேதைமை)

    புதுக் கவிதையில்…

    அருமறை நூற்களை ஓதியும்,
    அடக்கத்தால் வரும் பயனறிந்தும்,
    அதனை மற்றவர்
    அறிய விளக்கிக் கூறியும்,
    அதன்படித் தான்
    அடங்கி ஒழுகாத
    அறிவிலி போல
    அறிவற்றவர் எவருமிலர்…!

    குறும்பாவில்…

    நூற்களோதியும் அடக்கத்தின் பயனறிந்தும்
    பிறர்க்கதை விளக்கியும், அதன்படி அடங்கியொழுகா
    அறிவிலிபோல் அறிவிலார் இல்லை…!

    மரபுக் கவிதையில்…

    மனமொழி மெய்தனை யெல்லாமே
    மாறிடா தடக்கிட உதவுகின்ற
    இனமதாம் நூற்களைக் கற்றறிந்தும்
    இயல்பதாம் அடக்கமே உயரறமே
    எனவதை அறிந்துபின் பிறர்க்குரைத்தும்
    என்றுமே யதன்படி யடங்கிவாழ
    மனமிலா அறிவிலி போன்றதொரு
    மட்டமாம் அறிவிலார் வேறிலரே…!

    லிமரைக்கூ…

    அறிந்தும் அடக்கத்தின் எல்லை,
    கற்றதைப் பிறர்க்குரைத்தும் அடங்கியொழுகா அறிவிலிபோல்
    அறிவில்லாதவர் வேறே இல்லை…!

    கிராமிய பாணியில்…

    இருக்காத இருக்காத
    அறிவில்லாம இருக்காத,
    ஒலக வாழ்க்கயில
    அறிவில்லாதவனா இருக்காத..

    மனச அடக்க ஒதவுற
    நூலுகளப் படிச்சியும்,
    அடக்கத்தால வருற நன்மகள
    அறிஞ்சிருந்தும்,
    அத மத்தவங்களுக்கு
    எடுத்துச் சொன்னபெறகும்,
    தான் அடங்கி
    ஒழுக்கமா நடக்காத
    கேடுகெட்டவனப் போல
    அறிவில்லாதவன் வேற இல்ல..

    அதால
    இருக்காத இருக்காத
    அறிவில்லாம இருக்காத,
    ஒலக வாழ்க்கயில
    அறிவில்லாதவனா இருக்காத…!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 61

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 61

    -மேகலா இராமமூர்த்தி

    இறந்த இராவணனுக்கு இறுதிக் கடன்களைச் செய்யும் பணியை வீடணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைக் கண்டு வாழ்த்தவந்தவர்களைக் காணச் சென்றான் இராமன்.

    வீழ்ந்துகிடந்த இராவணனின் உடலைக் கண்டு வருந்திய வீடணன், ”ஆற்றலின் உறைவிடமாயிருந்த அண்ணனே! அசுரர்களுக்குப் பிரளயமாய் உருவெடுத்தவனே!  தேவர்களுக்கு எமனாய் இருந்தவனே! எந்த நஞ்சும் உண்ணாவிட்டால் உயிரை உண்ணாது; ஆனால் சானகி எனும் நஞ்சு கண்ணால் கண்ட மாத்திரத்தில் உன் உயிரைப் போக்கியதே! நீயும் சாமானியன் போன்று படுகளப்பட்டு வீழ்ந்தாயே! எண்ணத் தெரியாதவனென்று உன்னால் கருதப்பட்ட நான் எண்ணி உரைத்த சொற்களை இந்த இறுதிக் காலத்தில்தான் எண்ணுகின்றாயா?

    கொல்லத் தகாத மைத்துனனை நீ கொன்றுவிட்டாய் என்று அக்கொடுமையை மனத்தில் குறித்துவைத்துக் கொண்டு கொடுமைசூழ்ந்து, உன்னைப் பழிவாங்குவதற்குச் சமயம் பார்த்துப் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டிருந்த கொடிய பாவியான சூர்ப்பனகை, தன் நெஞ்சையழுத்திக் கொண்டிருந்த நெடுநாள் பகையை இன்று தீர்த்துக்கொண்டாளோ?” என்று புலம்பினான்.

    இதன்மூலம் ஓர் உண்மை தெரியவருகின்றது. சூர்ப்பனகை இராமனோடு இராவணனை மோதவிட்டது தான் இராமனை அடையவேண்டும் என்பதற்காகவோ இராவணன் சீதையை அடையவேண்டும் என்பதற்காகவோ அல்ல. அவள் கணவனான வித்துருசிங்கன் என்பவனைத் திக்குவிசயம் செய்யச் சென்ற சமயத்தில், யாது காரணத்தாலோ, இராவணன் கொன்றுவிடுகின்றான். அதனால் அவன்மீது கடுங்கோபமும் தீராப்பகையும் கொண்டிருந்த சூர்ப்பனகை, அதற்குப் பழி தீர்க்கவே சீதை குறித்து அவனிடத்தில் கூறி காமத்தைத் தூண்டி அவன் அழிவுக்கு வித்திடுகின்றாள். இச்செய்தியை இங்கே வீடணன் மூலம் நமக்கு அறியத்தருகின்றார் கம்பர்.

    நீல மாமணிநிற நிருதர் வேந்தனை
    மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
    மேலைநாள் உயிரொடும் பிறந்துதான் விளை
    காலம் ஓர்ந்து உடன்உறை கடிய நோய் அனாள்.
      (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2836) என்று இராமகாதையில் சூர்ப்பனகையை அறிமுகப்படுத்தும்போதே அவள் உட்கிடையைக் கம்பர் இப்பாட்டில் வடித்துக் காட்டியமை இங்கே நினையத்தக்கது.

    அவ்வேளையில் தன் கணவன் இராவணன் மாண்ட செய்தியறிந்து களம்புகுந்த மண்டோதரி மண்ணில் கிடந்த அவன் உடல்மீது வீழ்ந்தாள். ”அந்தோ! அரக்கர் வேந்தன் இறந்த பின்னேயோ யான் இறப்பது? இராவணனார் வாழ்வு இவ்வாறா முடியவேண்டும்?” என வருந்தி, ”ஒப்பற்ற வீரனான இராமனின் அம்பு, வெள்ளெருக்கம் பூவைத் தன் சடையில் சூடும் சிவனின் கயிலை மலையைத் தூக்கிய இராவணனின் திருமேனியில் மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடத்தை ஆராய்ந்ததோ? கள்ளிருக்கும் மலர்க் கூந்தலாள் சானகியை மனச்சிறையில் அடைத்த காதல் இராவணனின் உள்ளே எங்கேனும் பதுங்கியிருக்கும் என்றெண்ணி உடல் முழுதும் நுழைந்து தடவிப் பார்த்ததோ? என்று வேதனையோடு உரைத்தாள்.

    வெள்எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
    திருமேனி மேலும் கீழும்
    எள்இருக்கும் இடனின்றி உயிர் இருக்கும்
    இடன்நாடி இழைத்தவாறோ
    கள்இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
    மனச் சிறையில் கரந்த காதல்
    உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
    தடவியதோ ஒருவன் வாளி.
    (கம்ப: இராவணன் வதைப் படலம் – 9940)

    இராவணனின் உடலை இராமனின் அம்பு துளைத்தது எனக்கூற விரும்பாத மண்டோதரி, ”தடவியதோ” எனக் கேட்பது, தன் கணவன்மேல் அவள் கொண்டிருந்த அளவற்ற அன்பைப் புலப்படுத்துகின்றது.

    ”யாருடைய கணைகளாலும் துளைக்கமுடியாத இராவணனின் தோள்வலிமை மாரனின் கரும்பு வில்லுக்கும் மலரம்புக்கும் இலக்காகி நைந்தழிந்ததே!” என்று ஏங்கியழுத மண்டோதரி, இராவணனின் மார்பினைத் தன் கரங்களால் தழுவி உயிர்நீத்தாள்.

    புலனடக்கமின்றிக் கழிகாமம் மிக்கோனாய்ப் பல பெண்டிரொடு வாழ்ந்தவன் இராவணன்; அவன் மனைவி மண்டோதரியோ, மாசுமறுவற்ற கற்புக்கரசியாய் வாழ்ந்து, கணவனின் மரணத்தைத் தாங்கவியலாது உயிர்விடுகின்றாள். இக்காட்சி நம் நெஞ்சை உருக்குகின்றது. அத்தோடு, சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் ”கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்றுரைத்து உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் செயலையும் நினைவுபடுத்துகின்றது.

    இறந்துபட்ட இராவணனுக்கும் மண்டோதரிக்கும் ஏனைய அரக்கர்கட்கும் வீடணன் ஈமக்கடன்கள் ஆற்றினான்; வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அவனை இராமன் அருள்மொழிகளால் தேற்றினான்.

    அதனைத் தொடர்ந்து இராமனின் விருப்பப்படி இலக்குவன் வீடணனுக்கு முடிசூட்டினான்; முடிசூடிக்கொண்ட வீடணன் இராமனைப் பணிந்தான். அவனை ஆரத்தழுவிய இராமன், ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகளை, முன்பு சுக்கிரீவனுக்கு உரைத்தது போலவே, வீடணனுக்கும் உரைத்தான்.

    அடுத்து, அனுமனை அருகில் அழைத்த இராமன் நடந்தவற்றைச் சீதைக்கு உரைத்துவருமாறு அவனைப் பணித்தான். அசோகவனம் சென்ற அனுமன், ”அன்னையே! உன்னைப் பணிகின்றேன்; மங்கலச் செய்தி கொணர்ந்துள்ளேன். இலங்கையில் மகளிரன்றி ஆடவர் அனைவரும் போரில் அழிந்துபட்டனர்” என்றான் சீதையிடம்.

    அதுகேட்டு மகிழ்ச்சி மீதூரப்பெற்ற சீதை, சொல்லுதற்கு வார்த்தைகளின்றி மௌனித்திருந்தாள். அவளின் மௌனத்திற்கான காரணத்தை அனுமன் வினவ, ”ஐய! நீ செய்திருக்கும் பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்றறியாது திகைத்திருக்கின்றேன்” என்றாள் சீதை.

    அப்போது அனுமன் சீதையிடம், ”தாயே! மலர்ந்த முகமுடையவளான திரிசடை நீங்கலாக அனைத்து அரக்கியரையும் நான் அழித்திட உம் அனுமதி வேண்டுகின்றேன்” என்றான். அதுகேட்டு அஞ்சி நடுங்கிய அசோகவனத்து அரக்கியர், ”அன்னையே எம்மைக் காத்திடு” என்று அச்சத்தோடு சீதையைச் சரணடைந்தனர். ”அஞ்சல்மின்” என்று அவர்களுக்குத் துணிவுரைத்த சீதை, ”தாயைக் காட்டிலும் என்பால் அன்புடையோனே! அறிவிற் சிறந்தவனே! எனக்கு ஏற்பட்ட துயர்களுக்கு என் தீவினையே காரணம்; இவ் அரக்கியர் இராவணன் சொன்னதைச் செய்தனர்; அவ்வளவே! இவர்கள் கூனியினும் கொடியோர் அல்லர்; ஆதலால், நடந்துமுடிந்தவற்றை மனத்தில் வைத்து இவர்களை வருத்த எண்ணாதே!” என்றாள் அனுமனிடம்.

    யான் இழைத்த வினையினின் இவ் இடர்
    தான் அடுத்தது தாயினும் அன்பினோய்
    கூனியின் கொடியார் அலரே இவர்
    போன அப்பொருள் போற்றலை புந்தியோய்.
    (கம்ப: மீட்சிப் படலம் – 9886)

    சீதையின் பெருந்தன்மை கண்டு நெஞ்சு நெகிழ்ந்தான் அனுமன்.

    இதற்கிடையில் இராமன் வீடணனிடம், ”வீடணா! நீ சென்று நம் தேவியைச் சீரொடும் தா!” என்றான். அதனையேற்றுச் சீதையைக் காணவந்த வீடணன், ”இறைவியே! இராமபிரான் உன்னைக் காண விரும்புகின்றான். அணியத்தக்க அணிகலன்களை விரைவாய் அணிவித்துச் சீதையை இங்கே அழைத்து வா” என்று எனக்குக் கட்டளையிட்டான்” என்றான்.

    இராமன், ”சீதையைச் சீரொடும் தா” அதாவது ”சிறப்பாக அழைத்து வா” எனும் பொருளில் சொன்னதைச் சீதை தன்னை அலங்கரித்துக்கொண்டு வரவேண்டும் என இராமன் சொல்வதாகப் புரிந்துகொண்ட வீடணன் அவ்வாறே சீதையிடம் செப்பினான். அதனை ஏற்க மறுத்த சீதை, ”வீரனே! நான் அசோகவனத்தில் எத்தகு கோலத்தில் இருந்தேனோ அக்கோலத்துடனேயே என் தலைவன் இராமனையும் ஏனையோரையும் காண்பதே சிறப்புடைத்து; கோலம் பூண்டு வருவது பீடன்று!” என்றாள்.

    வீடணனும் விடாமல், ”தாயே! நீ அணிபுனைந்து வரவேண்டும் என்பது ஐயன் இராமனின் கட்டளை” என்றுரைக்கவே வேறுவழியின்றி அதனையேற்றுக் கோலம்புனைந்தாள் அந்தக் கோதை; அவளை அரம்பையர் சூழ விமானத்திலேற்றி இராமன் இருக்குமிடம் அழைத்துவந்தான் வீடணன்.

    பச்சிலை வண்ணனாய், பவளச் செவ்வாயனாய் நின்றிருந்த இராமனைக் கண்டு உவந்தாள் சீதை; அண்ணலும் அவளை நோக்கினான். ஆனால், அப்பார்வையில் மகிழ்ச்சியின் மலர்ச்சியில்லை; மாறாக வெறுப்பே வெளிப்பட்டது; அதனை அனைவர்க்கும் புலப்படுத்தும் வகையில், ”நீ ஒருத்தி தோன்றியதால் பெண்மைக் குணங்களும் பெருமையும் நற்குடிப் பிறப்பும் கற்பும் ஒழுக்கமும் சத்தியமும், கொடைத்தன்மை இல்லாத அரசனின் புகழ் கெடுவதுபோல் அடியோடு அழிந்தன” என்றான் சீற்றத்தோடு.

    பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
    திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
    உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
    வண்மைஇல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்.
    (கம்ப: மீட்சிப் படலம் – 10017)

    தன் கொடுமொழிகளை மேலும் தொடர்ந்தவன், “உன்னை மீட்பதற்காக நான் இலங்கைக்கு வந்ததாகவா எண்ணுகின்றாய்? இல்லை! என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ளவே வந்தேன்; உன் செயல் என் உணர்வுகளை வெட்டிவிட்டது; உன் ஒழுக்கத்தை நீ சாதிப்பாயாக!” என்றான்.

    நஞ்சினும் கொடிய இராமனின் மொழிகள் பூங்கொடியன்ன சீதையை நிலைகுலையச் செய்தன; அவள் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தன. ”ஆடவர் திலகனே! நான் இத்தனை காலமும் செய்த தவமும், காத்த கற்பும் நீ சிந்தையில் உணராமற் போனதால் எனது பைத்தியக்காரச் செயல் எனும்படியாய்ப் பயனற்றுப் போயின.

    இனி நான் யாருக்கு என் குற்றமற்ற தவத்தை நிரூபித்துக் காட்டவேண்டும்? சாதலின் சிறந்தது எனக்கு வேறொன்றில்லை; அதுவே எனக்குத் தகுதியும் விதியும் ஆகும்” என்று வேதனையோடுரைத்து இராமனின் அருகில் நின்ற இலக்குவனை அழைத்துத் தனக்கு நெருப்பை உண்டாக்கித் தருமாறு வேண்டினாள். அதுகேட்டுக் கலக்கமுற்ற இலக்குவன், ”இதனைத் தான் ஏற்பதா தவிர்ப்பதா?” எனும் அச்சத்தோடு இராமனைப் பார்க்கவே, ”அவ்வாறு செய்க” என இராமன் தன் கண்ணினால் குறிப்புக் காட்டினான் இலக்குவனுக்கு.

    இவ்விடத்தில், சீதை தீயில் இறங்க விரும்பிய செயல் குறித்தும் அதற்கு இலக்குவனை உதவப் பணித்த இராமனின் எண்ணம் குறித்தும் இராமாயண ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைக் காண்போம்.

    ”அசோகவனத்திலிருந்து மீண்டுவந்த சீதை இராமனின் கடுஞ்சொற்களால் மனம்நொந்து தீயில் இறங்குவது என்று முடிவுசெய்தபோது தீமூட்டித் தருமாறு இலங்கையைச் சேர்ந்தவனான வீடணனிடந்தான் கேட்டிருக்க வேண்டும்; ஆனால், அவளோ அவ்வாறு செய்யாமல் இலங்கைக்குப் புதியவனான இலக்குவனிடம் கேட்கிறாள்; இதற்குக் காரணமென்ன?

    பஞ்சவடியில் இராமன் இலக்குவன் சீதை மூவரும் தங்கியிருந்தபோது மாய மானைத் துரத்திச்சென்ற இராமனின் அபயக் குரல் தொலைவினில் கேட்கவே, உடனே அங்குச்சென்று அண்ணனுக்கு உதவுமாறு இலக்குவனை வேண்டினாள் சீதை; அவனோ அதனையேற்க மறுத்து, ”அண்ணனுக்கு ஊறுசெய்வோர் அகிலத்தில் எவரும் இல்லை” என்று உறுதிபடத் தெரிவித்து ”அவளுக்குக் காவலாய் இருப்பதே அண்ணன் தனக்கிட்ட ஆணை” என்றுரைத்தபோது, மனக்கொதிப்படைந்து தகாத மொழிகளால் அவனைத் தீட்டினாள் சீதை. அதனையெண்ணி அவள் அசோகவனத்தில் சிறையிருந்தபோது பெரிதும் வருந்தினாள்.

    அவளின் அந்த வருத்தத்தைப் போக்குதற்கும், தூயவனான இலக்குவனைத் தீயவனாய் அடையாளப்படுத்திய தீச்செயலுக்கு அவள் கழுவாய் தேடிக்கொள்வதற்கும் வாய்ப்பாகவே சீதையை இராமன் கொடுமொழிகளால் திட்டி அவளே தீயில் இறங்கும் நிலைக்குக் கொண்டுவந்தான் எனவும் இலக்குவனைத் தீ உண்டாக்கித் தருமாறு சீதை கூறியமைக்குக் காரணம் அவனிடம் அன்று நடந்துகொண்ட விதம் குறித்த அவளின் குற்றவுணர்ச்சியே” எனவும் தெரிவிக்கின்றார்கள்.

    இவை ஏற்புடைய கருத்துக்கள் தாமா?

    தன் மனைவி சீதையிடம் இரக்கமின்றியும் மனச்சான்றின்றியும் நடந்துகொண்டு அவளை ’அக்னிப் பிரவேசம்’ செய்யும் நிலைக்குத் தள்ளிய இராமனின் முறையற்ற செய்கையை நியாயப்படுத்துவதற்குச் சொல்லப்பட்ட சமாதானங்களாகவே இவை தோன்றுகின்றன.

    சீதை இலக்குவனிடம் பேசிய வார்த்தைகள் தகாதவையே; அவளின் தகுதிக்குச் சிறிதும் பொருத்தமற்றவையே. எனினும், அதற்குக் கழுவாய் அவளைத் தீக்குளிக்க வைத்தலா? இல்லை!

    இலக்குவனிடம் தன் தவற்றுக்குச் சீதை மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இராமன், அவர்கள் மூவரும் தனித்திருக்கும் பொழுதொன்றில், சொல்லியிருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும்; ஏற்கனவே அதுகுறித்துக் குற்றவுணர்ச்சி கொண்டிருந்த சீதை அதனை மறுக்காது ஏற்றுச் செய்திருப்பாள். அதனைவிடுத்து, கற்புக்கனலியான அவள் நடத்தையை அருவருக்கத்தக்க வகையில் பலர் முன்னிலையில் இழித்துப் பேசியதும் அவளைத் தற்கொலைக்குத் தூண்டியதும் இராமன்செய்த மன்னிக்க முடியாத குற்றங்களே.

    இனி, அடுத்து நடந்தவற்றைக் காண்போம்.

    இலக்குவன் உண்டாக்கிய தீயில் இறங்கினாள் சீதை; கண்டோர் நடுங்கிநிற்க, தீக்கடவுள் அவளின் கற்புத் தீயில் வெந்தான்; வெம்மை பொறாது கதறியபடி எழுந்துவந்த அவன், அம்மை சீதையை ஊறின்றிக் கொண்டுவந்து இராமனிடம் சேர்ப்பித்து அவள் கற்பின் மேன்மையைச் சாற்றினான்; உயர்மொழிகளால் அதைப் போற்றினான். அதன்பின்னர் இராமன் சீதையை ஏற்றுக்கொண்டான்.

    உயிர்நீத்துத் துறக்கம் சென்ற தயரதன் அப்போது தன் மகன் இராமனைக் காண வருகின்றான்; வந்தவன், இராமனைத் தழுவி மகிழ்ந்தபின், சீதையைப் பார்த்து, ”நங்கையே! நின் கற்பினை உலகுக்கு நிலைநாட்டவே நெருப்பின்கண் புகும்படி உன்னை இராமன் கூறினான்; அதற்காக அவனை வெறுக்காதே! அவனுக்கு உன்மீது ஐயம் ஏதுமில்லை” எனக் கூறித் தன் மருமகளைத் தேற்றுகின்றான். இராமனின் அடாத செயலுக்கு நியாயம் கற்பிக்கவே விண்ணிலிருந்து இறங்கிவந்து தயரதன் இவ்விடத்தில் பேசுவதாய்ச் சாதுரியமாகக் காப்பியம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தயரதன் சொல்வதுபோல் உலகுக்குச் சீதையின் கற்பை நிரூபித்துக் காட்டும்பொருட்டு இராமன் சீதையைத் தீயில் இறங்கச் சொல்லியிருந்தாலும் அது குற்றமே. தன் மனைவி எப்படிப்பட்டவள் என்பதைக் கணவன் மட்டும் அறிந்தாலே போதுமானது; அதனை ஊருக்கும் உலகுக்கும் மெய்ப்பித்துக் காட்டவேண்டியது அவசியமற்றது!

    ’நடையின் நின்றுயர் நாயகனாக’ப் போற்றப்படும் இராமன் அதனின்று சறுக்கும் இடங்களாக இராமகாதையில் இரண்டைச் சொல்லலாம்; ஒன்று மறைந்திருந்து வாலிமீது அம்பெய்து அவனைக் கொன்றது; இரண்டாவது சீதையைத் தீயில் இறக்கியது.

    அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
    குறள்: 503) எனும் குறளை நினைவூட்டுகின்றன இராமனின் இச்செயல்கள்.

    தவக்கோலம் புனைந்து இராமன் மேற்கொண்டிருந்த பதினான்கு ஆண்டுக்கால வனவாசத்தின் பெரும்பகுதி இளவல் இலக்குவனோடும் மனைவி சீதையோடும் அமைதியாகக் கழிந்தது; ஆனால், இறுதிப்பகுதியோ சீதையைப் பிரிந்த துயரத்தோடும் அவளைச் சிறையெடுத்துச் சென்ற இலங்கையர்கோனிடமிருந்து மீட்பதற்காக நிகழ்த்திய பெரும்போர்களோடும் கழிந்து ஒரு முடிவுக்கு வந்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப்
    (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 2

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 2

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • மகாத்மா காந்தி மரண​ நினைவு நாள்

    மகாத்மா காந்தி மரண​ நினைவு நாள்

    சி. ஜெயபாரதன், கனடா

    [1869-1948]

    [சத்தியம், சுதந்திரம், சமத்துவம்]

    அறப் போர் புரிய மனிதர்
    ஆதர வில்லை யெனின்
    தனியே நடந்து செல் ! நீ
    தனியே நடந்து செல் !

    இரவீந்திரநாத் தாகூர்

    http://youtu.be/QT07wXDMvS8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

    பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

    மகாத்மா காந்தி

    Gandhi -1

    முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

    கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்!  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

    Hey Ram

    உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

    ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

    Gandhi's last journey -2

    அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

    மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்”  என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

    ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார்.  ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

    Nehru and Gandhi

    நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

    இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

    டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

    “முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

    Tagore and Gandhi

    காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

    காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

    Gandhi and Einstein

    40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

    காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

    Gandhi fasting and Indira

    மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

    பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

    சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

    Gandhi -9

    ‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

    மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

    கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

    Gandhi in UK 1931

    கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

    இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரிய தல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

    அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

    1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

    Gandhi -10

    காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

    இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

    Samarmathi Ashram

    ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

    பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

    வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார் களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மை யினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

    Einstein on Money

    காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

    ‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்பட வேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

    News

    இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

    ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

    Gandhi's last journey

    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

    பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறை களிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

    Gandhi with Ratinam

    இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.  அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

    Einstein qoutes

    அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

    மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்!  இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

    Gandhi -8

    கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

    Gandhi Memorial

    வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

    மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார்.   ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’  மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்!  ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது !  பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!

    Birla House Memorial

    w.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

    http://youtu.be/QT07wXDMvS8

    ***************************

    தகவல்:

    1.  Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

    2.  Gandhi His Life & Message for the World By:  Louis Fischer (1954)

    3.  The Life of Mahatma Gandhi By : Louis Fischer  (1950/1983)

    4.  http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

    5.  http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi

    6. http://www.mkgandhi.org/assassin.htm

    7.  http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahatma_Gandhi

    8. https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

    ++++++++++++++++++

    Mohandas Gandhi Timeline

    From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html

    https://mail.google.com/mail/?hl=en&shva=1#all/13465cd01bf5bf45

    Picture from Gandhi Movie with Ben Kingley as Gandhi [1982]

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2GgK_Nq9NLw

    [Mahatma Gandhi Interview]

    http://www.columbia.edu/cu/weai/exeas/asian-revolutions/pdf/gandhi-timeline.pdf

    https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

    Share
  • ஆலப்பாக்கம் தாயம்மா

    ஆலப்பாக்கம் தாயம்மா

    பாஸ்கர் சேஷாத்ரி

    சென்னையிலிருந்து தள்ளி உள்ள ஒரு கிராமப் பகுதிக்கு நேற்று சென்றிருந்தேன். அற்புதமான, அழகான ஒரு சிற்றூர். நகர வாசனை கொஞ்சம் கூட இல்லை. ஆனாலும் சிலர் கைப்பேசி வைத்திருந்தனர். தை மாதத்தின் ஆரம்ப வெப்பத்தில் கொஞ்சம் தகிப்பு தெரிந்தது. விடுமுறை நாள் என்பதனால் நிறையக் குழந்தைகள் சிறிய மரத்தின் மீது ஏறி நின்றுகொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். சுற்றி இரண்டு குட்டிக் கோவில்கள் திறந்தே இருந்தன.

    எல்லோர் பார்வையும் ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தது. சகஜமாகப் பேச தொடங்கியும் அவர்கள் தங்கள் நிலையில் இருந்து விலகாமல் தள்ளியே இருந்தார்கள். சிரிக்க யோசித்தாலும் சில நிமிடங்களில் இயல்பாகிவிட்டார்கள். எண்பது வயது அம்மா என் கன்னத்தை வருடி எங்கேந்து வரே எனக் கேட்டாள். மெட்ராஸ் என்றேன். எங்க அம்மா மாதிரி என்று அவர்களின் தலையைக் கோதினேன். இருந்த பல் மொத்தத்திலும் சிரித்தார்கள். பச்சை வைக்கோல் போர் வாசனையில் நகர வாசனை மறந்து போனேன்.

    ஒரு புறம் ஆட்டுக்குட்டிகள், மறுபக்கம் மழலை உலகம், இன்னொரு பக்கம் முதியவர் உலகம், எப்போதோ யாரோ ஏற்றின கற்பூரத்தின் வாசனை என எல்லாம் கலவையாக இருந்தது. கொஞ்சம் தள்ளி ஒரு குளம். தாமரை சுற்றிப் படர்ந்து நீர்நிலை வெப்பத்தைத் தடுத்தது. கொஞ்சம் கால்களை நனைத்தேன். சென்ற முறை வந்த போது இது வற்றி இருந்தது. அண்மையில் பெய்த மழை இந்த நீர்நிலையைக் குளிப்பாட்டி இருக்கிறது.

    என்ன தவம் செய்தனை? இந்த ஊருக்கு மட்டும் மழை பெய்தது போல நீர் தளும்பி நின்றது. நீர், காற்று, வெளி, வான், மண் எல்லாம் நமக்குக் கிடைத்த வரம். அந்த வரத்தை நுகரப் புலன்கள். நாம் தர்மத்திற்குப் படைக்கப்படவில்லை. என்னைப் பார் சிரி எனக் கழுதை சொல்லும் படம் போல, என்னைப் பார் ரசி என்கிறது இந்த இயற்கை.

    இன்னொரு பக்கம் பெரிய வயல் பிரதேசம். அதைப் பார்க்கும் போதே அதன் மேல் உறங்குவது போல நினைப்பு மனசுக்கு வந்தது. இயற்கையோடு நாம் இணைந்தால் வாழ்வு சுகம் பெறும். தள்ளிப் போதல் தவறு. அது படைப்புக்கு எதிரானது.

    இன்னும் இருட்டில் தான் அந்தக் கிராமம் வாழ்கிறது. வசதியானவர்கள் சிலர் வீட்டில் மின்சாரம் உண்டு. ஒன்றிண்டு தெரு விளக்குகள் உண்டு. அந்த இருட்டிற்கு அதுவே நிலவு போன்று இருக்கிறது .இந்தியாவின் இதயமே கிராமங்களில் தான் இருக்கிறது எனத் தெரியாமலா சொன்னார் மகாத்மா?

    செங்கல்பட்டுக்கு அப்பால் ஒரு பத்து காத தூரத்தில் இருக்கிறது ஆலப்பாக்கம். அங்கு எந்தத் தேநீர்க் கடையோ, உணவகமோ இல்லை. மனிதர்களும் மரங்களும் தவிர எந்தத் திட்டமும் இல்லாமல் முடிந்தால் அங்கு சென்று வாருங்கள். இயற்கையின் முழு வீச்சும் கிராமத்தின் முழுப் பேச்சும் அங்கு உண்டு. எங்கள் குடும்பத்தின் குல தெய்வ ஸ்தலம் அது. அந்த வயதான அம்மாவிடம் உங்க பெயர் என்ன எனக் கிளம்பும்போது கேட்டேன். ஆலப்பாக்கம் கன்னித்தாயம்மா என்றாள். அந்த மண்ணும் தாயம்மா தான்.

    (புகைப்பட உதவின் மகன் கார்த்திக்)

    Share
  • கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

    கல்வெட்டு வெளிப்படுத்தும் வரலாற்று உண்மை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தமிழகத்தில் சற்றொப்ப 60,000 கல்வெட்டுகள் உள்ளதாக அறியப்பட்டாலும் அவற்றின் பொருள் அறிந்து படிப்பவர் மிகக் குறைவு, தொல்லியலார் தவிர. அதனால் கல்வெட்டு தெரிவிக்கும் சமூக, வரலாற்று செய்திகளை இக்கால மக்கள் அறிய முடியாமல் போகிறது. அந்த குறையை போக்க தமிழ் பிராமி கல்வெட்டு 103 ம், இடைக்கால கல்வெட்டு 70 – 80 வரைக்கும் விளக்கம் அளித்துள்ளேன். இது அதில் ஒரு பகுதி. முதலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை படித்துவிட்டு பின் கல்வெட்டு  பாடத்தை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

    வரலாறு அறியாதவர் அரசியல் மேடையிலும் எழுத்திலும் சமூக ஏற்றத் தாழ்விற்கும் வேற்றுமைக்கும் மதம் தான், பிராமணர் தான் காரணம் என்று வெறுக்கத்தக்க முறையில் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டுள்ளனர். ஆனால் அதற்கு மாறாகத் தான் கல்வெட்டு தரும் உண்மைச் செய்தி உள்ளது. மன்னராட்சிக் கால ஆட்சியாளர்கள் விருப்பமுள்ள மக்கள் தமது வசதிக்கு தக்கவாறு நல்லது தீயது நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று பொதுப்பட வைக்காமல் சாதிக்கு தக்கவாறு சலுகைகளையும் உரிமைகளையும் (விருது) வழங்கியதால் பிணக்கு ஏற்பட்டது என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. மக்கள் தமது முன்னோரின் மெய்யான வரலாற்றை அறிவது மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் மேலும், பெருமை உணர்வை ஊட்டும். ஆனால் இன்று வரலாற்றை ஆய்வோர் தமது சாதி ஆண்ட பாரம்பரையா இல்லையா என்பதை நிறுவுவதற்கே கல்வெட்டை துழாவுகின்றனர் உண்மையை அறிவதற்கு அல்ல. மக்கள் அரசியலாளர் கூறும் பொய் வரலாற்றை புறக்கணித்து கல்வெட்டுச் செய்திகளையே முழுதாக நம்ப வேண்டும். அப்போது தான் பொய்மையும் வெறுப்பும் ஒழியும். இனி கீழே கல்வெட்டு விளக்கத்துடன்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மருதங்கிணறு கண்மாய் தூண் 10 வரிக் கல்வெட்டு.

    1. சோணாடு வ
    2. ழங்கியருளிய  சு
    3. ந்தர பாண்டி
    4. ய தேவற்கு யாண்டு 7 வது 
    5. வியாகக் கு
    6. டி ஊற் பறையரில் கண
    7. வதி பொதுவ
    8. னான காராண்மை பறையன் 
    9. நாட்டின அ 
    10. ணை (த)றி      

    காராண்மை – மழைநீர் சேமிப்பு மேலாண்மை; அணை- நீர்க்கரை; தறி – தூண்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 7 ஆம் ஆட்சி (பொ.ஆ. 13) ஆண்டில், 1223 இல் வெட்டப்பட்டுள்ளது. ஏரியில் மழைநீர் சேமிப்பு மேற்கொள்ளும் கணவதி பறையன் என்பவன் நீர் அளவை அறியும் பொருட்டு நீர்க்கரையில் தூண் ஒன்றை நாட்டினான் என்பதே செய்தி.

    பார்வை நூல்: ஆவணம் 30, 2019, பக். 30

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேலூரில் உள்ள வேடியப்பன் கோவிலில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ / மதிரை கொண்ட கோப்பர  / கேசரி பன்மற்கு யாண்டு பதினைந்தா / வது பராந்தகப் பல்லவரையனாள மீ / கொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பா  /  லை ஏரியில்லழிவு கண்டு கற்றூம்பி / டுவித்து  அதற்குத் தேவதானமு/ மேரிப்பட்டியு மூர்ப்புறமு / மூராரும் பாலைப் பறையன் சாத்தன்னு  /  மு(மா)க அட்டினார் . இது வழியப்பண்ணி / ணவர்  நரகத்துக்குக் கீழா நரகம் புகுவார்.

    அழிவு – உடைப்பு; கல் தூம்பு – கல்லில்ஆன மதக்குத் துளை; இடுவித்து – அமைத்து; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக கொடுத்த நிலம்; ஏரிப்பட்டி – ஏரியைப் பேண விட்ட நிலம்; ஊர்ப்புறம் – வெட்டவெளி நிலம்;

    விளக்கம்:  இக்கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 922 இல் பராந்தகப் பல்லவரையன் ஆளும் போது மீகொன்றை நாட்டின் பெருவேளூர் நாட்டுப் பிரிவில் அடங்கிய பாலை ஊர் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட போது அதற்கு கல்லில் மதகுத் துளை அமைத்து அதற்கு கொடையாக அங்கத்து கோவிலுக்கு நிலம், ஏரி பேண நிலம், வெட்ட வெளி நிலம் ஆகியவற்றை ஊராரும் பாலை ஊர் பறையன் சாத்தனும் நீர்வார்த்துக் கொடுத்தனர். இதை அழிப்பவர் நரகம் புகுவார் என்று சபித்து முடிகிறது கல்வெட்டு. இந்த மதகுத் துளை கட்டுமானத்தில் பறையன் சாத்தன் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்பதை அவன் பெயர் குறிப்பு காட்டுகிறது. அவனிடம் நன்கொடை அளிக்கும் அளவுக்கு சொந்தமாக நிலம் இருந்துள்ளது. அவர்ணரான பறையரிடமே நிலம் இருந்தது என்றால் நாலாம் வர்ண சூத்திரரிடமும் நிலம் இருந்திருக்க வேண்டும் அல்லோ!!!!  ஆனால் மனுஸ்மிருதி சொல்வதை மட்டுமே கருத்தில் கொண்டு அம்பேத்கர் சூத்திரருக்கு  சொத்து உரிமை இல்லை என்று சொன்னது பொய் அன்றோ?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 23, 2012    பக். 28

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ஸ்ரீ வாசிநாதர் கோவில் 3 வரிக்  கல்வெட்டு

    கீழைக்குறிச்சி ஊராளிகளில் / அழகன் கோனாட்டுப்  பரைய / ன் ஆதி  தன்மம். 

    விளக்கம்:  இக்கல்வெட்டு 16-17 ஆம் நூற்றாண்டினது. வாசிநாதர் கோவில் திருச்சுற்று (பிரகாரம்) வாயிலின் வலது புறம் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளும் ஒருவருடைய புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் கல்வெட்டு பொறிப்பு உள்ளது. கீழைக் குறிச்சி ஊரில் வாழும் அழகன் கோனாட்டு பறையன் ஆதி என்பான் தன் தலையை வெட்டி உயிர் பலி செய்ததைத் தான் தர்மம் என்கிறது கல்வெட்டு. எதற்காக தலையை வெட்டிக் கொண்டான் என்ற குறிப்பு மட்டும் அதில்  இல்லை. தனது முதலாளி உடல் நன்றாகும் பொருட்டு இது போல் தலையை வெட்டி உயிர் பலி கொடுக்கும் வழக்கம் பிற கல்வெட்டுகளில் காணப்படுவதில் இருந்து இதை அப்படியாக ஊகிக்கலாம்.

    இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் ஒரு பறையருடைய நடுகல் கோவில் திருச்சுற்றில் காணப்படுவது தான். தன் தலையை வெட்டிக் கொள்ளும் முன் பறையன் ஆதி கோவிலுள் சென்று சாமி கும்பிட்ட பின் இதை செய்தார் என்றால் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் பறையர் ஒடுக்கப்படவுமில்லை தீண்டாமைக்கு ஆட்படவுமில்லை என்றல்லவா உறுதி ஆகிறது? பறையர் தீண்டாமை கடந்த 300-350 ஆண்டுகளாக நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட சமூக பிரச்சனை தான். அதற்கு முன் பறையர் கோவிலுள் சென்று சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டு செய்திகள் சில உள. கடந்த 2,000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரில், கோவிலில் நுழையவிடாமல் தடுக்கப்பட்டனர் என்ற தலித்திய, திராவிடவியல் பொய் பரப்புரையை கிழித்தெறிவதாக உள்ளதன்றோ இக்கல்வெட்டு?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 22, 2011 பக்.128

    கிருஷ்ணகிரி மாவட்டம் கோடிப்பள்ளி பஞ்சாயத்து குட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள பெருமாளப்பன் கோவில் அருகே உள்ள 14 வரி சர்வ மானியக் கல்வெட்டு.

    சறுவதான்ய வருஷத்து மா / சி மாதம் பதின்னஞ்சாதி புதுப் / பற்று வல்லேரிபள்ளியில் / பறைஆண்டியேன், நாட்டு மாட்டை இராய நாயக்கர் பிடிச்சு போ / கையில் முத்தையூரிலே சென்று தலை / ப்பட்டு பூசலில் இராகுத்தனுட்டு குதி / ரையையூங் குத்தி தானும் பட்டா . இவனுக் /கு சறுவ மானியமாக பெரிய ஏரியி[ல்] / கீழ்ழேரிலே கல்ல_ _ _ தர்  கண்ட / க கழனியும் இருக்கை கொல்லை மு / பட்டிலே விட்டேன் மனைக்கு [மா]ட்டுக்கு / தலைக்கு. இவை சறுவ மானியமாக  விட்டோம். / நம் வர்க்கத்தாரும்  நம் மக்கள் அவன் மக்கள் மானியம். 

    புதுப்பற்று – புதிய உரிமை நிலம், புறவு நிலம்; உட்டு – உட்பட; தலைப்பட்டு – தடுத்து நிற்க, தோன்றி; பூசலில் – மீட்பு சண்டையில், skirmish; இராகுத்தன்  – குதிரை வீரன்; பட்டில் – வீராசாவில்;சறுவமானியம் – முழுமையும் வரி நீக்கி; கல்லதர் – பருக்கை கல்லிட்ட சிறுவழி; கண்டக – மண் தடுப்பு; கழனி – போரடிக்கும் களமுள்ள நிலம்;இருக்கை – குடியிருப்பு; கொல்லை – புதர் மண்டிய நிலம்; தலை – தரை.

    விளக்கம்:  சர்வதானிய ஆண்டு கி.பி. 1408 இல் மாசி மாதம் 15 ஆம் தேதியில் புதுப்பற்று வல்லேரிப்பள்ளியில் வாழும் பறைஆண்டியேன் நான் சொல்வது யாதெனில், “ஊர் மாட்டை இராய நாயக்கர் கவர்ந்து கொண்டு போன போது இந்த நடுகல் வீரன் அவரது வீரர்களை விரட்டிச் சென்று முத்தையூரில் தடுத்து நிறுத்தி அங்கு ஏற்பட்ட மீட்பு போரில் குதிரைவீரன் உட்பட குதிரையையும் குத்திக் கொன்று தானும் வீர சாவடைந்தான்.  இவனுக்கு முழுவதும் வரி நீக்கி பெரிய ஏரியின் கிழக்கு மேட்டில் தரையிட்ட சிறுவழியொடு மண் தடுப்பு கொண்ட போரடிக்கும் களம் உள்ள வயலும் குடியிருக்கக் கொல்லையும் இந்த வீராசாவிற்காக கொடுத்தேன். இந்த கொல்லையை வீடு கட்டவும், மாடு கட்டவும், வெறும் தரை இடமாகவும் பயன்படுத்தலாம். இதை என் உறவினரும் என் பிள்ளைகளும் அவன் பிள்ளைகளுக்கு அளித்த வரி நீக்கிய நிலம் என்று கருத வேண்டும் என்கிறார்.

    இந்த நடுகல் வீரன் பறைஆண்டியின் கட்டளைக்கு கட்டுப்பட்ட  வீரன் என்று தெரிகிறது. அப்படியானால் பறைஆண்டியை ஒரு படைத்தலைவர் என்றே கொள்ள வேண்டும். அதனால் பறைஆண்டியிடம் மிகுந்த சொத்து இருந்ததை அறிய முடிகிறது. ஆகையால் தான் நடுகல் வீரனுக்கு கொடை கொடுக்க முடிந்துள்ளது.

    பார்வை நூல்: ஆவணம் 32, 2021 பக். 117 & 118

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் விரையாச்சிலை மேல வயலில் பலகை கல்லில்  உள்ள 13 ஆம் நூற்றாண்டு 5 வரிக்  கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ வதையாத
    2.  கண்டப் பரையன் 
    3. செய்யுங் கிணறும். 
    4. செவ்வலூரார் பேரயர்
    5. கட கண்டன் வயக்கல் 

    வதை – கொல், துன்புறு; பேரயர் – படைத்தலைவர்; கட – பெரிய, மூத்த; வயக்கல் – எல்லை குறிப்பிட்டு பெயரிட்டு கொடையாக கொடுத்த வயல்.

    விளக்கம்:  போரில் கொல்லப்படாமல் தப்பிய கண்டப் பறையன் தான் தப்பிப் பிழைத்தமைக்கு அற உணர்வு மேலிட தனது வயலையும் கிணற்றையும் செவ்வலூராருக்கு கொடையாக கொடுத்தார். எல்லை குறிப்பிட்ட அந்த வயலுக்கு படைத்தலைவன் கட கண்டப் பறையன் வயக்கல் என்று பெயர் சூட்டினர் செவ்வலூரர். வயக்கல் புதுக்கோட்டை, இராமநாதபுரம் வட்டார வழக்குச் சொல்.

    கண்டப் பறையன் நன்கொடை வழங்கும் அளவிற்கு சொத்துகள் வைத்திருந்தது ஒன்றும் வியப்பல்ல ஏனெனில் அவன் படைத்தலைவன். அவர்ணரான பறையரே சொத்தும் பதவியும் பெற்றிருப்பது சூத்திரனுக்கு பதவியோ சொத்தோ இருக்கக் கூடாது என்ற அம்பேதுக்கரின் மனுஸ்மிருதி அடிப்படையிலான குற்றச்சாட்டை இக்கல்வெட்டு பொய் ஆக்கி இருக்கிறது அன்றோ?

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் வாய்விடாந் தாங்கல் கிராமத்தால் காட்டுப் பகுதியில் உள்ள 27 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ  சீறிமனு மகா மண்டலிசுர /  விபாடன் பாஷைக்குத்  தப்புவராய கண்டன் / ஸ்ரீ வீர பொக்கண்ண உடையார் குமாரர் ஸ்ரீ கம்பண்ண உடையார்க்கு பிரி / திவி ராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாற்த்தம் 1290 இதன் / மேல் செல்லா நின்ற பிரமாதி வருஷத்து சி[ம்ஹ] ஞாயிற்று அமரபக்ஷ / த்து  யேகாதெசியும் திங்கட்கிழமையும் பெற்ற புணர்பூசத்து நா / ள் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆடையூர் நாடு கீழ்ப்பற்றில் யணி அ(ண்) ணாமலை உடையார் – – –  யினார் தேவதானம் / வாயுளான் ஏந்தலில் யெல்லையிலே பொன்னப் பரையன் – – – / அணி அண்ணாமலை பரையன் ஏந்தலென்று  நத்தமும் கண்டு குடியும் ஏற்றி ஏரியும் / கண்டு கிணறு ஆழ – – – மான் தனைக் காடு / வெட்டி கழனி – – – பெருவிலையாகக் கொண்டு கணி / – – – அணி அண்ணாமலை உடைய / நயினார் திருப்பணிக்கு குடுத்த – – – நிலத்திலே நூறு குழி இறையிலியாக / கல்லுவெட்டி – – – குடுத்த யேந்தல் – – – நஞ்சை புன்சைக்கு / – – – ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கு கருங்கடி காட்டு வடக்குவெல்லை /  – – – அரசுடையான் ஏந்தல் பழைய வழிக்குத் தெற்கு – – –  இன்னான்கெல்லைக்கு உள்பட்ட / நஞ்சையும் புன்சையும்  நத்தமும் காணியாட்சியாக தந்த – – – /  யும் அணி – – – யித்துப் போகவும் – – – நஞ்சை புன்சை நிலம் / வெட்டிக் – – – கெல்லை தடுத்தாத கொல்லையும் நத்தமும் வடக்கு பனியம் தொண்டி புஞ்சல்லாக / ன்ற இவன் திருத்திய நத்தமும் ஏந்தலும் / ந – – – புன்சை நாற்பாற்கெல்லையும் /  ஏற்றப் பரிக்கிறமங்களும் தான தன்மங்களும் / உரித்திரத்தக்கதாகவும் பழைய ஏரில் நீர் தான கிணறு / நிலத்துக்கு பாக்கி கொள்ளவும். இப்படிக்கு கல்லு வெட்டிக் கு / டுத்தேன் ஆடை நாயனனேன். இவை நாற்பத்தெண்ணா / யிர நம்பி எழுத்து.

    அமரபக்ஷம் – தேய்பிறை; தேவதானம் – கோவிலுக்கு கொடையாக விட்ட நிலம்; ஏந்தல் – உட்கிடை சிற்றூர், பிடாகை, hamlet, தேக்கம்; நத்தம் – வீடு கட்ட விட்ட நிலம்;  தனை காடு –  ; காணியாட்சி – பரம்பரை நில உரிமை; தடுத்தாத  – தட்டி வேலியிடாத; பனியம் தொண்டி – பனியத் தாவரம் வளர்ந்த தோட்டம்; பாக்கி – பகிர்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் புக்கண்ண ராயரின் மகன் குமார கம்பண்ணரின் வெற்றியை அடுத்து 1368 ஆண்டு பிரமாதி வருடம் சிம்ம ராசி கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறையில் ஏகாதசியும் திங்கட்கிழமையும் கூடிய புனர் பூச நாளில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஆடையூர் நாட்டு கிழக்கு வயல் புற ஊரில் இறைவன் அணி அண்ணாமலையார்க்கு நிலக் கொடையாக வாயுளான் சிற்றூர் எல்லையில் வாழும் பொன்னப் பறையன் என்பான் அணி அண்ணாமலைப் பறையன் சிற்றூர் எனப் பெயரிட்டு ஒரு சிற்றூரை ஏற்படுத்தினான். அதில் வீட்டு மனையும் ஏற்படுத்தி மக்களையும் குடியேற்றி அங்கே ஏரியும் எழுப்பி கிணறு ஆழப்படுத்தி காடு வெட்டினான். பெருத்த விலைக்கு வயலை வாங்கி அணி அண்ணாமலை இறைவன் திருப்பணிக்கு கொடையாக கொடுத்த நிலத்தில் நூறு குழியை வரியற்ற நிலமாகக் கொடுத்து கல்வெட்டிக் கொடுத்துள்ளான். இந்த புதிய சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் ஆகியன _ _ _ ற்றுடையான் நிலத்துக்கு கிழக்கிலும் கருங்கடிக் காட்டை வட எல்லையாகவும் _ _ _  அரசுடையான் ஏந்தலுக்கு போகும் பழைய வழியை தெற்காகவும் உடைய நான்கு எல்லைகளை கொண்டது. இந்த அணி அண்ணாமலைச் சிற்றூரின் நஞ்செய் புஞ்செய் மற்றும் வீட்டு அடிமனை ஆகியவற்றை பரம்பரை நில உரிமையாக அனுபவித்துக் கொள்ளலாம் என்கிறான். இந்த நஞ்சை புஞ்சை நிலத்தை வெட்டி அதற்கு நான்கு எல்லையும் ஏற்படுத்தி தட்டி வேலியிடாத புதர் மண்டிய நிலமும் (கொல்லை) வீட்டு மனையும் கொடுத்தது எப்படியெனில் வடக்கில் பனியம் தோட்டம் புஞ்சல் ஆகியவற்றை அகற்றி இவன் ஏற்படுத்தியதாகும்.  வீட்டு மனையும் ஏரியும் நஞ்சை புஞ்சை நாற்பக்க எல்லையும் தக்க செய்முறைக்கும் தான தர்மங்களும் உரித்தாக்குக என்கிறான். பழைய ஏரியில் அமைந்த நீர் தானக் கிணற்றை நிலத்திற்கும் பகிர்ந்து கொள்க என்று இப்படி வழிகாட்டுநெறியை (பிடிபாடு) தந்தான். இதை நன்கொடையை பற்றி ஆடை நாயன் என்ற ஆசாரி கல்வெட்டில் வடித்தார். இக்கொடை  பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு பிராமணர்  நாற்பத்தெண்ணாயிர நம்பி ஒப்புதல் கையெழுத்திட்டார்.

    பொன்னப் பறையன் ஒரு சிறு  ஊரையே ஏற்படுத்தி அதில் மக்களை குடியேற்றி ஏரிஎழுப்பி நஞ்சை புஞ்சை நிலங்களை கொடை அளிக்கும் அளவிற்கு பெருஞ் செல்வராக இருந்துள்ளார் என்றால் அவர் ஒரு படைத் தலைவராகவோ அல்லது ஆடையூர் நாட்டின் கீழராகவோ இருந்திருத்தல் வேண்டும். அப்படி எனில் அவர் கல்வி கற்றவராகவும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. படைத்துறை சார்ந்தவர் மேலிடத்திற்கு அவ்வப்போது ஓலை எழுதி அனுப்ப வேண்டும் தனக்கு வந்த மேலிட ஆணை ஓலையை படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆக உயர் படைப் பொறுப்பில்  இருப்பவர் கட்டாயம் கல்வி கற்றவராக இருக்க வேண்டும்.

    [சூத்திரன் அறிவைப் பெறக்கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயல். ஒரு சூத்திரன்  சொத்து சேர்க்கக்  கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம். சூத்திரன் அரசாங்க பதவியில்  இருக்கக் கூடாது.  சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன்.

    (ஆதாரம். சூத்திரர் யார் ? அவர்கள் எவ்வாறு நான்காம் வர்ணத்தவராயினர், ஆசிரியர் டாக்டர். B.R. அம்பேத்கர்)]

    அம்பேத்காரின் மேற்கண்ட கூற்றுக்கு இக்கல்வெட்டு சிரிப்பாய் சிரிக்கிறது. ஏனெனில் அதில் உண்மை துளியும் இல்லை.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2020  பக். 64-65

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மதவீர விநாயகர் கோவில் முகப்பு மண்டப நடு உத்திரத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    விகுறுதி வருஷம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி கானனாட்டுப் படை பத்து இலம்பங்குடியில் பள்ளற்கும் பறையற்கும் விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப்  போய் கல்வெட்டுப் பாத்து வந்தபடி காஞ்சிபுர சுவாமி யேகாம்பரரைய்யன்  காமாட்சியம்மன் கோவில் தானம் மாயேசுரர் சகல / குண சம்பன்னரான பல்லவராயன் பண்டாரத்தின் மனிசர் வேங்கடம் நாயக்கர் இலம்பங்குடி ஊரவற்கும் சகல பாக்கியமும் உண்டாக வேனுமென்று ஆதரித்து வரவிட வேண்டின ஆசிறு பாகம். கானனாட்டு படைப்பற்று இலம்பங்குடியில் பறையற்கும் பள்ளற்கும் சண்டை வளக்குத்தாரமாக  முத்திரை மனுசன் திருவம் / பலய்யனையும் கூட்டி பறையன் உலகங்காத்த சாம்பானும் பள்ளன் ஞானிகாத்தானும் வராக்காட்டினா(ர்)கள். அப்படியே சாதனப்படி பறையர் வலங்கையா இருக்கும் பள்ளர் இடங்கையா யிருக்கும். அவடத்திலே / பறையர் வலங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் பள்ளர் இடங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் . பள்ளனுக்கு தவுலும் சேமக் / கலம் அஞ்சு பந்தக்காலும், பறையற்கு  கொட்டு மேழதாழம்  பறையருட்டுன கோயில் கிடாத்தரம் பறையருட்டுன மொந்தைக் கள்ளு பறையருட்டுன பன்னிரண்டு பந்தகால் பறையருட்டுனே _ _ _ தங்களை ஏகாம்பரய்யன் காமாட்சியம்மன் ஆதரித்துக் கொண்டருளவும் வேணும், ஆசிறுபாகம். / இப்படிக்கு பாண்டிதிராயர்  பச்சைப் பெருமா எளுத்து. இந்தக் கல்வெட்டு விசுவ முத்திக்காத்தவன் எழுத்து.  சதா சேர்வை  

    படைப்பற்று – படை வீரர்களின் ஊர் அல்லது நிலம், cantonment; விருது – பட்டம், சிறப்பு சலுகை, உரிமை; தானம் – பொறுப்பு அதிகாரி,  ஸ்தானம்; மாகேசுரர் – அறங்காவலர்; பண்டாரம் -கருவூலக் கணக்கு; (ஆசு + இறு) ஆசிறு பாகம் – குற்றம் நீங்கி பக்குவமடைக;  சதானப்படி/சாசனப்படி – எழுத்துச் சான்றுபடி; சேமக்கலம் – ஒரு தட்டை கட்டையால் அடித்து ஒளி எழுப்புதல்; கிடாத்தரம் – ஆட்டின் தலையாக இருக்கலாம்; சதா சேர்வை – எப்போதும் வணங்கி நிற்கும்.

    விளக்கம்:  இது 16 ஆம் நூற்றாண்டில் 1530 அல்லது 1590 இல் விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெட்டப்பட்ட  கல்வெட்டு. கானநாட்டுப் படை ஊரில் வாழும் பறையருக்கும் பள்ளருக்கும் சிறப்பு சலுகை, உரிமை (விருது) காரணமாக பிணக்கு ஏற்பட்டு சண்டை எழுந்தது. அதை தீர்க்க காஞ்சிபுரம் சென்று கல்வெட்டு பார்த்து தெளிந்து வந்தனர். அதை விவரிப்பதே இக்கல்வெட்டு. காஞ்சிபுரம் ஏகாம்பர ஈசுவரன், காமாட்சியம்மன் கோவில்களின் பொறுப்பு அதிகாரி எல்லா குணமும் நிரம்பிய பல்லவராயன் ஆவணக் கருவூல கணக்கர் வேங்கடம் நாயக்கர் இளம்பங்குடி ஊராருக்கு எல்லா நலமும் உண்டாக வேண்டும் என்று ஆசீர்வாத மொழி பேசி வரவழைத்து உமது குற்றம் நீங்கி பக்குவமடைவதாக என வாழ்த்தினார். கானநாட்டுப்  படை ஊர் பறையருக்கும் பள்ளருக்கும் ஏற்பட்ட சண்டை வழக்கு தொடர்பாக முத்திரை மனிதர் திருவம்பலய்யனையும் உடன் அழைத்து வந்து பறையன் உலகங்காத்த சாம்பனையும் பள்ளன் ஞானிகாத்தானையும் ஒருசேர வரவழைத்தார்கள். ஆவண எழுத்தின்படி பறையர் வலங்கையாய் இருப்பர்; பள்ளர் இடங்கையாய் இருப்பர். அப்படியான நிலையில் பறையர் வலங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம், பள்ளர் இடங்கைக்கு உண்டானதெல்லாம் நடத்திக் கொள்ளலாம். பள்ளர் தவிலும், சேமக்கலனும் முழக்கலாம், ஐந்து பந்தக்கால் நடலாம். பறையருக்கு கொட்டு மேளதாளம், பறையருக்கு உண்டான கோவிலில் பலியிடப்படும் ஆட்டின் தலை, மொந்தைக் கள், 12 பந்தக்கால் நடுதல் ஆகிய உரிமைகளை சலுகைகளை (விருது) அனுபவிக்கலாம் என்று சொல்லி உங்களை ஏகாம்பர ஈசனும் காமாட்சி அம்மனும் ஆசீர்வதித்து அருளவேண்டும், குற்றம் நீங்கி பக்குவமடைக என்று வாழ்த்தி அனுப்பினர். இப்படியாக நடந்து கொள்க என்று பாண்டித்திராயர் பச்சைப் பெருமாள் ஆணை ஓலை தந்தார். இதை விசுவ முத்திகாத்தவன் என்ற ஆசாரி கல்வெட்டாக வடித்தான். எப்போதும் வணங்கி நிற்கும் என முடிகிறது.

    பள்ளரும் பறையரும் போரில் ஈடுபட்டதால் தான் அவருக்கென்று தனிப் படைஊர் ஏற்படுத்தி அதில் குடியேற்றும் நடைமுறை இருந்துள்ளது என்பது இக்கல்வெட்டால் உறுதி ஆகிறது. பள்ளரைவிட பறையருக்கு அதிக சலுகையும் உரிமையும் இருந்ததால் அது பிடிக்காத பள்ளர் அதை எதிர்த்தனர், தடுத்தனர். இவ்வாறான பிணக்கு மன்னராட்சியில் அரசர்களின் ஒரு தலைச் சார்பான உரிமை வழங்கல் காரணமாகவே எழுந்தது என்று தெளிவாகிறது. ஆனால் எல்லா சமூக வேற்றுமைக்கும் ஏற்றத் தாழ்விற்கும் இந்து மதம் தான் காரணம், பிராமணர் தான் காரணம் என்று பொய் உரைக்கின்றனரே அறியா மூடர்? உண்மையில் இன்றைய சமூக வேற்றுமை, ஏற்றத் தாழ்விற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு எனில் அவர் வழிவந்த ஆண்ட பரம்பரை, அடக்கி ஆண்டவர், பார் ஆண்டவர், மண் ஆண்டவர் என மார்தட்டிக் கொள்ளும் நிலவுடைமைச் சாதிகளை தானே இன்றைய வேற்றுமைக்கு ஏற்றத் தாழ்விற்கு பொறுப்பாக்க வேண்டும்?

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 15, 2004  பக். 32

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கோவிலூர் சிவன் கோவிலில் உள்ள 3 வரிக் கல்வெட்டு

    1. கோனேரின்மை கொண்டான் தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்கநாடு உள்ளிட்ட பற்றில் கண்மாளர்க்கு பதினஞ்சாவது ஆடி மாதம் முதல் தங்களுக்கு 
    2. நன்மை தீமைக்கு இரட்டைச் சங்கும்  ஊதி பேரிகை யுள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்ளவும்  தாங்கள் புறப்பட வேண்டும் இடங்களுக்கு பாதரக்ஷை கோர்த்து கொள்ளவும் தாங்கள் வீடுகளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோ
    3. ம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு அசந்திராதித்தவத் செல்வதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க.  

    பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்

    விளக்கம்:  இக்கல்வெட்டு கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டில், 1222 இல் வெட்டப்பட்டது. தலையூர் நாடு, வெங்கால நாடு, அரைய நாடு, இடைபுளுகி நாடு, வடகரை நாடு, மணலூர் நாடு, தட்டையூர் நாடு, கிழங்க நாடு ஆகிய நாடுகளில் வாழும் ஐந்து தொழில் கம்மாளர்கள் தமது வீட்டு நல்லது, கேட்டது நிகழ்ச்சிகளுக்கு இதற்கு முன் இல்லாத உரிமையான (விருது) இரட்டை சங்கு ஊதுதல், பேரிகை கொட்டுதல் ஆகிய உரிமைகள் (privileges) ஆடி மாதம் முதல் வழங்கப்பட்டதுடன் வெளியே ஊர் செல்லும் போது கால்களில் செருப்பு அணியும் உரிமையும் தரப்பட்டது.  தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு சாந்து அடித்துக் கொள்ள அனுமதி இல்லாததை ரத்து செய்து புதிதாக வீர ராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் அதற்கு  அனுமதி தரப்பட்டது. இந்த ஓலை உரிமையை வழிகாட்டு நெறியாகக் கொண்டு சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை இது செல்வதாக உரிமை  தரப்பட்டது. சுதந்திரமாக மக்கள் தம் விருப்பப்படி, இயலுமைப்படி வாழ முடியாமல் சமூக ஏற்றத் தாழ்வுடன்  வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஆட்சியாளர்களே முழுக் காரணம் என்பதை இக்கல்வெட்டு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஆனால் இந்து மதம், பிராமணர் தான் சம உரிமை மறுப்பிற்கு காரணம் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய் பரப்பப்படுவது நோக்குக.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 19, 2008, பக். 8

    விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அபிராமீசுரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று திருகு சுவரில் உள்ள 11 வரிக் கல்வெட்டு .

    பரா(ப)வ ஆண்டு புரட்டாசி மாதம் 3 நாள் ஸ்ரீ மன் மகா மண்டலேசுரன்  சதாசிவ தேவ மகாராயர்  காரியத்துக்கு கத்தரான நாயகர் / சூரப்ப நாயக்கரய்யன் பார்வத்தம்மான திருவதி ராச்சி(ய)த்தில் கைக்கோளர் பூறுவத்தில் / திருவதி வில்லியநல்லூர் பூறுவத்தில் கல்வெட்டை நா(ட்)டில்  இலை வாணியர் அழிக்கயில் / எங்களை அவதாரமும் கொண்டு எங்கள் விருது பகடை ஒழிய / நாங்கள் இல்லாத விருது சொல்ல கடவோம்  அல்லாகவும் சொன்னதே / உண்டானால் ஆயக்கனையும்பட்டு ஆயிரத்து அஞ்நூறு பொன் இறுக்க (க)டவோம்  ஆக /  வும் . இப்படி சம்மதித்து கல்வெட்டி குடுத்தோம் நாட்டு கைக்கோள(ர்)க்கு  / நாட்டில் இலை வாணியர்  _ _ _ .  இப்படிக்கு கல்வெட்டு திருவதி சிராபட்ட ஆசாரி . இப்படி அறிவோம் ஆண்ட நாயக்க பட்டர்  / திருவதி சந்திரன்.  

    பூர்வம் – முன்னொரு காலம்; திருவதி – சிறப்பு அடைமொழி, ஊர்ப்பெயர்; அவதாரம் -கீழ்மைப்படுத்தி;  விருது – பட்டம், சிறப்பு சலுகை உரிமை; பகடை – பெருமை என்னும் பக(ட்)டு, ஆயக்கன் – வரி, தண்டனை ; இறுக்க – கட்ட, பொன் – வெள்ளிக் காசு.

    விளக்கம்:  இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் சதாசிவ தேவ மகாராயரின் ஆட்சியில் பிரபவ ஆண்டு 1547 இல் புரட்டாசி மாதம் 3 ஆம் நாளில் வெட்டப்பட்டது. சதாசிவ தேவ மகாராயரின் செயல் அலுவலர் சூரப்ப நாயக்கரய்யன் மேற்பார்வையில் உள்ள திருவதி ராச்சியத்தில் கைக்கோளர் (செங்குந்தர்) முன்னொரு காலத்தில் அவர் வாழ்ந்த வில்லியநல்லூரில் முன்னொரு காலத்தில் அவ்வூரில் இருந்த கல்வெட்டை இலை வாணியர் அழித்து, எம்மை தரக்குறைவாகத் திட்டி, எமது சலுகை, உரிமை, பெருமை அழிய “நாங்கள் இல்லாத சலுகையை உரிமையை (விருது) கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர். அப்படி அல்லாமல் நாங்கள் சொன்னதே உண்மையாகுமானால் தண்டனைப்பட்டு அதற்கு 1,500 வெள்ளி காசு கட்டுவோம்” என்று இலை வாணியர் ஊர் கைக்கோளர்க்கு கல்வெட்டு பொறிக்க ஒப்புதல் கொடுத்தனர். இதை கல்லில் வெட்டியவர் திருவதி வாழ் சிராபட்ட  ஆசாரி. இதற்கு திருவதி வாழ் ஆண்ட நாயக்க பட்டர் சந்திரன் சாட்சியாக ஒப்பம் இட்டார்.

    கைக்கோளருக்கு இருந்த சலுகையும் உரிமையும் தமக்கு இல்லாமையால் தான் பொறாமை கொண்ட இலை வாணியர் சிலர் வில்லியநல்லூர் கைக்கோளர் கல்வெட்டை முன்பு சிதைத்துவிட்டார். இது கடந்த கால மன்னர்கள் சமத்துவப்  பார்வை இன்றி செய்த செயலின் எதிர்வினை ஆகும். ஏனெனில் கைக்கோளர், சேனைக்கு கடையார், வாணியர் என்போர் முன்பு போர்த் தொழில் செய்யும் பட்டடைக் குடியாக, இதாவது போர்க் குடியாக இருந்தவர். இரண்டாம்  குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராணம் தொகுக்கப் பெற்று அதனால் ஏற்பட்ட சைவ சமய எழுச்சியால் இந்த போர்க் குடிகளுக்கு போர்த் தொழில் கொலைத்தொழில் என்று கருத்தேற்றப்பட்டு அதை விட்டு நீங்க வணிகத் தொழில் உரிமை வழங்கப்பட்டது. அதன்படி கைக்கோளர் தறித் துணி விற்கவும், வாணியர் வெற்றிலை,கயிறு விற்கவும், சேனைக் கடையார் செக்கு எண்ணெய் விற்கவும் உரிமை தரப்பட்டது. அதன் விளைவு போர் புரியும் குடிகள் வெகுவாக குறைந்ததால் சோழப் பேரரசு அடுத்த ஒரே நூற்றாண்டில் விழுந்தது. அதுமுதல் தமிழகம் 650 ஆண்டுகளாக அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. இன்று வரை அதிலிருந்து மீளவே இல்லை. வந்தேறிய அயலவர் விளைநிலத்தை கவர்ந்து கொண்டனர் அதனால் தமிழர் வாழ்வுரிமை இழந்து ஒடுக்கப்பட்டனர். இது சைவர் தமிழகத்திற்கு ஆற்றிய திருத்தொண்டு என்று நகையாட்டாக சொல்ல வேண்டியுள்ளது.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி III, பக். 191&192, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரமலை ஊர் பாறை 4 வரிக் கல்வெட்டு

    1. சாகாத்தம் 1469 மேல் செல்லா நின்ற ஆனந்த வருஷம் சித்திரை 5 நாள் அரச மீகாமன் நிலை ஊராக அ
    2. மைந்த  ஊரவரோம் . மேற்படியூர் வலவற்கு நின்றையும் இட்டபடிக்கு சவம் அடக்கிறதும் துறை ஆற்றுகிறதும் 
    3. மியானக் கரைக்கு சுழுந்து இடவேண்டாம் என்று சட்டன் இட்டுக்குடுத்தபடிக்கு அரச மீகா
    4. மன் நிலை ஊரவர் சொற்படிக்கு வாழைக்குறிச்சி தொண்டைமானார் _ _ _ பெருமாள் எழுத்து.

    மீகாமன் – கப்பல் செலுத்துபவன், படையை வழிநடத்துபவன், guide; நிலை – தங்குமிடம்; வலவர் – முத்தரைய வலைஞர், மீனவர்; நின்றை – தீர்மானம், நிலையான அறிவுறுத்தல், standing instruction; துறைஆற்று – இடம் ஏற்பாடு செய்தல், proper  arrangement; சுழுந்து – சுளுந்து எனும் பிணஎரி விறகு  மேடை,சட்டன்  – சட்டம்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு 1547 இல் நாயக்கர் ஆட்சி காலத்தில் சித்திரை 5 ஆம் நாள் வெட்டப்பட்டது. “அரச படையை  வழிநடுத்துபவன் நிலைத்து தங்கும் அரமலை ஊரவரோம்; இவ்வூரில் வாழும் முத்தரைய மீனவர்க்கு நிலையான அறிவுறுத்தல் வைத்தது யாதெனில் இவ்வூரில் பிணஅடக்கம், அதற்கான இட ஏற்பாடு, பிண எரிமேடைக்கு விறகு இடுதல் ஆகிய மூன்று வேலைகளை செய்யக்கூடாது” என்ற கட்டளையை சட்டமாக ஆக்கி வாழைக்குறிச்சி தொண்டைமான் _ _ பெருமாள் அரச படையை வழிநடுத்துபவன் நிலைத்து தங்குகின்ற அரமலை ஊரார் கேட்டுக் கொண்டபடி ஆணை ஓலையை எழுதிக் கொடுத்தார்.

    மீனவ முத்தரையர் சிலர் பிழைப்பிற்கு வேறு வழியின்றி இடுகாட்டில் பிணம் கையாளும் தொழிலை மேற் கொள்ளத் தொடங்கினர். இத்தொழிலின் இழிவு கருதி இதனால் வரும் குல இழிவு கருதி அதே மீனவ வகுப்பினர் இந்த இழிவை முளையிலேயே கிள்ளி எறியும் பொருட்டு நாடாளும் வாழைக்குறிச்சி தொண்டைமானிடம் தடை சட்டம் பெற்றது ஒரு வகைஒடுக்குமுறை ஆகும். இதே போன்ற தடை ஆணை, கட்டுப்பாடு மூலம் தான் இன்றைய ஒடுக்கப்பட்ட, தீண்டாமை சாதிகள் 17 ஆம் நூற்றாண்டில் உருவாயின. அதற்கு முன் அவர்கள் படை வீரர்கள்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 8, 1997, பக். 4

    முற்றும் 

    Share
  • பாலிவுட் டான்ஸ் (சிறுகதை)

    பாலிவுட் டான்ஸ் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    தான் தினமும் ஆபீஸ், வேலை என்று உயிரை விட, கிடைத்த நேரத்திலெல்லாம் மனைவி ஹாயாக சோபாவில் படுத்தபடி புத்தகங்கள் படிக்கிறாளே என்ற எரிச்சல்  பிறந்தது சிவாவிற்கு.

    “எதுக்கு எப்ப பாத்தாலும் துப்பறியும் நாவலே படிச்சுக்கிட்டிருக்கே?” முகத்தைச் சுளிக்காது கேட்டாலும், குரலும் தொனியும் அவளை மட்டம் தட்டுவது போலிருந்தது.

    தனக்குப் பிடித்ததைச் செய்ய ஏன் இவ்வளவு தடை?

    முகம் மாறாது, “நாலு பக்கத்துக்கு ஒரு கொலை! யார் குத்தவாளின்னு யோசிக்கிறப்போ சுவாரசியமா இருக்கு. அதோட, நாம்ப அப்படியெல்லாம் கஷ்டப்படலியேன்னு ஒரு நிம்மதி!” என்று அடுக்கினாள் அலமேலு.

    அவளுடைய விளக்கம் அவனிடம் எடுபடவில்லை. “உருப்படியா எதையாவது படி. படிக்க விஷயமா இல்லே?” என்றபடி நகர்ந்தான்.

    அன்று வேலை முடிந்து வீடுதிரும்பும்போது, சிவாவின் கையில் ஒரு பை. “இந்தா, அலமு! ஒனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். ஒனக்குத்தான் படிக்கப் பிடிக்குமே!” என்று குத்தலாகக் கூறியபடி, ஒரு பையை மனைவியிடம் நீட்டியவன், “அதுக்காக வீட்டையும் குழந்தையையும் கவனிக்காம இருந்துடாதே!” என்று கேலிவேறு செய்தான்.

    பையைப் பிடுங்காத குறையாக வாங்கினாள் அலமேலு. உள்ளே பார்த்தவள் முகம் சுருங்கியது. அறுபது வயதுக்குமேல் ஆன கிழடுகள், `போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே!’ என்ற நப்பாசையுடன் படிக்கும் புத்தகங்கள்!

    அவளுடைய தாத்தாதான் இதையெல்லாம் படிப்பார்.

    அவளோ, `பெரியவங்க கதையெல்லாம் நீ படிக்கக்கூடாது!’ என்று அம்மா ஓயாது கண்டித்ததால், `அப்படி அதில் என்னதான் இருக்கிறது?” என்ற ஆர்வத்துடன் எட்டு வயதிலிருந்தே காதல் நவீனங்களையும், பத்திரிகைகளையும் படித்தவள். படித்தது எல்லாம் புரியாவிட்டாலும், ஏதோ ரகசியக்குற்றத்தில் ஈடுபட்டதுபோன்ற த்ரில் ஏற்பட்டது.

    ஒரு வழியாகப் பதின்ம வயதை அடைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. `அம்மா பார்த்துவிடுவார்களோ!’ என்று பயந்து, பயந்து இனி படிக்கவேண்டாம்.

    ஒரு தலைமுறைக்குமுன், `நான் டான்ஸ் கத்துக்கட்டுமாம்மா?’ என்று தாயிடம் கேட்டதும், அவளுடைய பதிலும் மறக்குமா!

    `அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ எப்படி ஆடினாலும், எல்லா ஆம்பளையும் ஒன்னோட ஒடம்பைத்தான் உத்து உத்துப் பாப்பான்!’

    அன்று அம்மா. இன்று கட்டியவரா!

    அப்போதுதான் இனிமேல் பிறர் சொல்வது எதையும் கேட்டு நடக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

    *                                               *                                                    *

    “ரேகாவை டான்ஸ் கிளாசில சேர்க்கப்போறேன்”. உத்தரவு கேட்டாற்போல் இல்லை. தகவல் தெரிவிக்க நினைத்தாள். அவ்வளவுதான்.

    “ம்!” தூக்கக்கலக்கத்தில் பதில் வந்தது.

    மறுநாள், “கிளாசில கொண்டுவிடுன்னு என்னை இதுக்கெல்லாம் இழுக்காதே!” என்று அவன் கறாராகச் சொன்னபோது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

    “சேச்சே!” தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை மகளுக்கு அளிக்கப்போகும் பெருமையுடன் மறுத்தாள்.

    எந்த நாட்டிய வகுப்பில் சேர்ப்பது என்று ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த குழப்பம் கணவன் வாங்கிவந்த ஆன்மிகப் புத்தகத்தில் ஒன்றைப் புரட்டியபோது அகன்றது.

    பரமசிவனுக்கும் பார்வதிக்கும் போட்டி நடந்தது என்று ஆரம்பித்தது கதை.

    `ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டியப்போட்டியா! பலே!’ சுவாரசியம் மேலிட, மேலே படித்தாள்.

    முடிவு அவளுக்குப் பிடிக்கவில்லை. `ஊர்த்துவத் தாண்டவம்’ என்று, சிவன் காலைத் தலைக்குமேல் தூக்க, சக்தி தன் தோல்வியை ஒப்புக்கொண்டாளாம்.

    சிவகாமி நாணினாள், களிப்புடன் சிரித்தாள், அதிர்ந்தாள் என்றெல்லாம் விதவிதமாக விமரிசனங்கள் எழுந்திருந்தாலும், கடவுள் செய்ததை முன்னுதாரணமாகக் கொண்டுவிட்டார்கள்.

    ஒரு பெண் தன் காலைக் கண்டபடி தூக்கக்கூடாது — இது ஆண்கள் விதித்த விதி.

    `எங்களுக்கு மட்டும் என்ன, காலிலே பலம் கிடையாதா? எத்தனை பாலிவுட் சினிமாவிலேயும், தொலைகாட்சியிலேயும் பார்க்கிறோம்!’ அலமேலுவுக்கு ஆத்திரம் பொங்கியது. `இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே பெண்களை அடக்கி வைக்கிறது நம் சமுதாயம்!’

    பரதநாட்டியம் வேண்டாம் என்று முடிவெடுத்தாள். பெண்கள் இடுப்பை ஆட்டக்கூடாது, காலைத் தலைக்குமேல் தூக்கக்கூடாது என்று காலத்துக்கு ஒவ்வாத எதையெதையோ கடைப்பிடிக்கச் சொல்வார்கள்.

    *                                               *                                                    *

    அந்த நடன நிகழ்ச்சிக்கு இரு மாதங்கள் இருந்தன.

    வகுப்பில் சேர்ந்த ஒரு வருடத்துக்குள் மகள் மேடையில் ஆடப்போகிறாள்! அலமேலுவுக்குத் தலைகால் புரியவில்லை.

    “இதிலே பைஜாமா காஸ்ட்யூம் தைக்கணும். உடம்போட ஒட்டினாப்போல இருக்கணும்”. என்று தான் கையோடு கொண்டுவந்திருந்த புடவையைக் காட்டினாள். “மயில்கழுத்து கலர்! கிழிச்சுத் தைச்சா அழகா இருக்கும்”.

    “கொஞ்சம் பழசு போல இருக்கே!” என்று தயங்கினார் தையற்காரர்.

    “நான் சொல்றபடி செய்யுங்க. புடவையை அப்படியே, மடிப்பு கலையாம, புதுசாவே வெச்சிருக்கேன்,” லேசான அதட்டலும் பெருமிதமாகவும் வந்தது குரல்.

    அவளுடைய கல்யாணத்திற்கு அம்மா அதை வாங்கி வந்தபோது, `என்னைக் கேட்காமலேயே, எனக்குப் பிடிக்காத பச்சை கலரிலே ஒரு புடவை வாங்கிட்டு வரணுமா!’ என்று ஏற்பட்ட கொந்தளிப்பில், ஒருமுறைக்குப்பின் அதை உடுத்தவேயில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அந்தப் புடவைக்கு விமோசனம்.

    ஒரு சிறு தயக்கமும் ஏற்பட்டது. “அதெல்லாம் தெச்சுடலாம்மா. ஆனா லூசா தைக்கலாமே! சின்னப்பிள்ளை! ஒரே வருஷத்திலே போட்டுக்க முடியாம போயிடும்”.

    “தொளதொன்னு வேண்டாம். காலைப் பிடிக்கப் பிடிக்க இருக்கட்டும்”.

    இவளுடன் பேசிப் பயனில்லை என்று மேலே எதுவும் பேசாது அதை வாங்கிக்கொண்டார். வரும் வியாபாரத்தை விடுவதாவது!

    அருமை மகளுடைய உணவில் சில மாற்றங்களைச் செய்தாள் அலமேலு. ஆடத் தெம்பு வேண்டாமா!  தினமும் உருளைக்கிழங்கு, வெண்ணைபோன்ற `சத்துணவு’ வகையறா.

    எதிர்பார்த்திருந்த அந்த முக்கியமான தினம் ஒருவழியாக வந்தது.

    “எவ்வளவு அழகா இருக்கு, பாரு!” மயில் கழுத்து வண்ண பைஜாமாவைத் தடவிக்கொடுத்தாள் தாய். “போட்டுக்கோ, வா!”

    “ரொம்ப டைட்டா இருக்கும்மா!” என்று சிணுங்கினாள் பதின்மூன்று வயது மகள் ரேகா. அம்மாவின் போஷாக்கில் அந்தச் சில மாதங்களிலேயே உடலளவு மாறிப்போயிருந்தது.

    “இதுதான் இப்போ ஸ்டைல்! திருஷ்டி படறமாதிரி அழகா இருக்கேடி. ஹிந்தி சினிமா டைரக்டர் எவனாவது ஒன்னைப் பாத்தா, அப்படியே கொத்திட்டுப் போயிடுவான்!”

    சினிமா நடிகைமாதிரி இருக்கிறோமாமே? கர்வத்துடன் மேடை ஏறி, வளைந்து, நெளிந்து ஆடினாள் சிறுமி.

    அம்மா சொல்லியிருந்த சிவன்-பார்வதி கதை அப்பெண்ணின் நினைவிலேயே நிலைத்திருந்தது. `நான் அந்தக்காலத்துப் பெண்ணில்லை,’ என்று சற்றே கோபத்துடன் காலைத் தலைமேல் தூக்க, `டர்’ என்ற ஓசையுடன் தொடையருகே ஆடை கிழிந்தது. காற்றே படாது, உள்ளேயே அமுக்கி வைத்திருந்ததால் புடவை நைந்து போயிருந்ததால் வந்த வினை! உள்ளாடை எட்டிப்பார்த்தது.

    கண்களில் நீர் வழிய, பாதி நடனத்திலேயே அவசரமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, உள்ளே ஓடினாள் நடனமணி.

    முதல் வரிசையில் அமர்ந்து, `என் பொண்ணு!’ என்று பக்கத்திலிருந்தவர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்த அலமேலு அதிர்ச்சியில் திறந்த வாயை இரு கரங்களாலும் பொத்தினாள். உடல் பின்னோக்கிச் சரிந்தது.

    ஈராண்டுகளாக வெளியில் எங்கும் போகமுடியாது வீட்டிலேயே அடைந்து கிடந்து அலுத்த மக்கள், `நாட்டியத்தை ரசிக்க முடிகிறதோ, இல்லையோ, நாலுபேரைப் பார்த்துப் பேசலாமே!’ என்று திரளாக வந்திருந்தார்கள்.

    “பாவம்!” என்ற சில குரல்கள் அவளுக்கும் கேட்டன.

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

    (Peer Reviewed) தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்

    டாக்டர். வே. விக்னேசு,
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர்641014.
    vignesh@psgcas.ac.in
    9597203214.

    தோற்றுவாய் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குப் பழையவுரைகளென  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம். இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் சொல்லதிகாரத்திற்கு விருத்தியுரைகண்ட கல்லாடனார்தம் உரைப்போக்கு, அவர் மேற்கொண்ட உரைமரபுகள், அவருரையின் தனிச்சிறப்புக்கள் என்றின்னவற்றை ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.

    சொல்லுரைகண்ட கல்லாடனார் :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குக் கிட்டியுள்ள உரைகளுள் கல்லாடனார் விருத்தியுரையும் ஒன்றாம்.  அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா வரையிலேயே கிட்டியுளது.

    பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பன், பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உள்ள உரைகளையெல்லாம் தொகுத்து, தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கோவை என்னும் பெயரில் வெளியிட்ட சொல்லதிகார உரைவளப் பதிப்பில் இவ்வுரை முதன்முதலில் வெளிப்போந்தது. இவ்வுரைவளப் பதிப்பிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துள்ளதாகலின், இவ்வுரையும் அந்நான்கு இயல்கள் மட்டுமே கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து, இவ்வுரை பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1964 -ஆம் ஆண்டில் கழகவழி வெளிவந்தது. பின்னர், குருதேவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பதிப்பித்துத் தமிழ்நாடு அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலக வெளியீடாகத் தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – கல்லாடனார் விருத்தி என்னுந் தலைப்பில் இவ்வுரை 1971 -இல் வெளிவந்தது. இந்நூல் தெ.பொ. மீ. அவர்களின் விரிவான ஆராய்ச்சி முன்னுரையுடன் கூடியதாம்.

    உரைப்போக்கு :

    கல்லாடனார் உரை விருத்தியுரை என்று வழங்கப்படுகிறது. இவருரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன. இயல்களின் முறைவைப்பினை இவர் விரிவாக ஆராய்கின்றார். அங்ஙனமே, இவர்தம் நடை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் நடையை ஒட்டிச் செல்கின்றது. அன்றியும், விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்கள் இவருரையில் காணப்படுகின்றன.

    உரைநலன் :

              இவர்தம் உரைநலத்திற்குச் சான்றுகள் சிலவற்றைக் காட்டுதும் :-

    • சொல்லதிகார அதிகார விளக்கம் நுவலுங்கால், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரினுஞ் சற்று விரிவாகக் கல்லாடனார், இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக்குறி. என்னை காரணம் எனின், சொல் உணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் ஆராய்ந்தான் எனக் கொள்க (சொல். கல். நூ.1) என்று விரிவான விளக்கந் தருகின்றார். மாணாக்கர் நன்கு உளங்கொண்டு விளங்குதற் பொருட்டே இவர் இங்ஙனம் விரித்துரைக்கிறார்.
    • சொல் என்பதற்குப் பொருள் ஓசை எனக்கொள்ளும் கல்லாடனார், ஓசை என்று கூறியதால் கடலொலியும், காரொலியும், சங்கொலியும், விண்ணொலியும் சொல்லாகுமா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு, ஓசையெனினும், அரவம் எனினும், இசையெனினும், ஒலியெனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்து அல் ஓசைக்கும் பொது. கிளவியெனினும், மாற்றம் எனினும் மொழியெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும் (சொல். கல். நூ. 1) என்று விடை கூறுகின்றார். அங்ஙனமே, எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ வெனின்? என வினவிக்கொண்டு, உள. அவை முற்கும் வீளையும், இலதையும், அணுகரணமும் என்றித் தொடக்கத்தன. அவை சொல் எனப்படா. பொருளறிவுறுக்கும் எழுத்தொடு புணராவோசை மேலதன்றாராச்சி (சொல். கல். நூ. 1) என விடையிறுக்கும் இவர், எழுத்தல் ஓசையும், எழுத்தொடு புணராது பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளையறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளையறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி என்றாற்போல் வரும் ஓசையும் (சொல். கல். நூ. 1) என ஓசையை நான்கு வகைப்படுத்தி, இந்நான்கனுள்ளும் பின்னின்ற இரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்றன என விரிவான விளக்கந்தருகின்றார். அன்றியும், ஏனைய ஓசைகள் சொல்லாகா என்று நச்சினார்க்கினியர் கூறியதனை உட்கொண்டே இவர் இங்ஙனம் விரிவாக உரைத்துள்ளார்.
    • ‘வினைப்பெயர் இடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஏனைய பொருட் பெயரிடமாகத் தோன்றும் பாலறிவிக்கும் சொற்களும் ஒன்றனொடு ஒன்று தொடரும்பொழுது மயங்குதல் கூடாது; அவை தத்தம் இலக்கணத்தவேயாம்’ என்னுங் கருத்துடைய,

    “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
    பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்
    மயங்கல் கூடா தம்மரபினவே(சொல். கிளவி. நூ. 11)

    எனவரும் நூற்பாவிற்கு உரைபகரும் இவர், எழுவகை வழுக்களுடைய பெயரும் முறையும் தொகையும் தனிமுறையில் ஆசிரியர் எச்சூத்திரத்திலும் கூறவில்லை; உரைகளிலேயே கூறப்பட்டுள்ளன என்றுரைத்து, ”எழுவகை வினாவிற்கும் இஃதோர் பொது விதி கூறியது” எனவும், சிறப்பு விதி வேறு வேறு கூறிற்று எனவும் உரைத்து, ஏனைய வழுக்களும் அவ்வவ்சூத்திரத்திற்குரிய இடங்களில் விளக்கம் பெறுகின்றன என்றும் கூறி, ஒழிந்த திணைபால் இடங்கட்கு விதி னஃகான் ஒற்று முதலிய சூத்திரங்களால் கூறிற்றெனவுணர்க. இவ்வாறு நூல் நயமாதல் இச்சூத்திரத்துரையிட் கண்டுகொள்க (சொல். கல். நூ. 11) என்பதனால் தொல்காப்பிய நூன் நயத்தைத் தெளிவிக்கின்றார்.

    • முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே(சொல். கிளவி. நூ. 39)

    என்ற நூற்பா, ’சுட்டுப்பெயரை முற்படக் கூறுதல் செய்யுளுள் உரித்தாகும்’ என, மேற்சூத்திரத்தில் கூறிய விதிக்குப் பிறிதொரு விதி வகுக்கிறது. இந்நூற்பாவிற்கு, அவனணங்கு நோய் செய்தான் ஆயிழாய்! வேலன் எனத் தொடங்கும் பாடலொன்றை உரையாளர் யாவரும் மேற்கோளாகக்காட்டி, இதனுள் ’சேந்தன்’ என்பது இயற்பெயர்; அவன் என்பது சுட்டு என்பதால் இயற்பெயருக்கு முன் விரவுப்பெயர் கூறப்படினும் இது செய்யுளென்பதால் ஏற்கப்படும் என்று உரையாளர் யாவரும் ஒருமுகமாக உரைக்கின்றனர். கல்லாடனார் மட்டும் முன்கூறல்…நேர்ந்தவாறு ஆயிற்று… (சொல். கல். நூ. 39) என்பதால் முற்படக் கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர் செய்யுளில் முற்படக்  கூறப்படினும் மொழிமாற்றிப் பொருள் கொள்ளப்படும். ஆகலின், செய்யுளில் முற்படக்கூறல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சிறப்புப் பொருள் உரைத்துள்ளமை ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    • கிளவியாக்கத்திற்குப் பின் வேற்றுமையியல் வைக்கப்பட்டதற்கான முறைவைப்பைக் கூறுங்கால், இளம்பூரணர் கருத்தைத் தழுவி இவ்வியலின் இயைபு கூறும் கல்லாடனார், மேலோத்தினோடு இவ்வோத்து இயைபு என்னையோவெனின் என வினவிக்கொண்டு, “மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருள்கண்மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலாவது பெயர்ச்சொல் அதற்கிலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்த்தினாரோவெனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகியப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், காலந்தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற்பொருளொடு கூறியக்கால் காலந்தோன்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சிலபெயர் விளியேலாது நிற்றலும் இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணம் எனவுணர்த்தினாரென்பது (சொல். கல். நூ. 63) எனப் பெயரின் இலக்கணம் ஆசிரியரான் உணர்த்தப்பட்ட பான்மையை நன்கு தெளிவித்ததுடன் “பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரால் எனின், அவ்வாராய்ச்சியும் பெயரது இலக்கணமாய் விடுதலுடைமையின் அமையுமென்பது என்று நுண்ணிதின் விளக்கியுள்ளமை ஏனையுரையாளரினும் வேறுபட்டதாம்.
    • ’வேற்றுமை மயங்கியல்’ என அவ்வியல் பெயர் பெற்றதற்குக் கல்லாடனார் கூறும் காரண விளக்கம் சிறப்புடையதாம். அவர் கூறுவதைக் கேண்மின் :-

    ”இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின் உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி யுருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே யுரியதாகாது பலவற்றோடு மயங்குதலும், ஓர் உருபு பலவுருபோடு மயங்குதலும், ஒன்றனது ஒரு  பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்குரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்றதன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழிக்குள்வழி மயங்குதலும், இலக்கண மல்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், சொல்லுதல் வகையான் மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையால் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும் என்று இன்னோரன்ன பல மயக்கங்கள் கூறலின் வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று (சொல். கல். நூ. 86) என்பது இவர் கூறும் விரிவான விளக்கமாகும்.

    • இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் என்பவற்றைக் ’கள்’ விகுதி சேர்த்துப் பன்மையாற் கூறல் வேண்டும். ஆயின், தொல்காப்பியனார் ஒருமையாற் கூறியது என்னை? என்பதை விளக்கும் கல்லாடனார், இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன (சொல்.  கல். நூ.177) என்பதனான், ஞாபகப்படுத்தல் என்னும் உத்தியால் ஒருமையிற் கூறினார் என அமைதி காட்டி ஆசிரியர் கருத்தே வலியுடைத்து என நிறுவும் பகுதி ஏனைய உரைகளிற் காணாத்தாம்.
    • ’அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம்’ என்பதனை விளக்கும்,

    ”அ ஆ வவென  வரூஉ மிறுதி
    அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை(சொல். வினை. நூ. 18)

    எனவரும் சூத்திரத்திற்கு உரைபகரும் கல்லாடனார், அஃறிணை வினைதான் ஒருமைவினையும் பன்மைவினையும் என இருவகைத்து; அவற்றுள் பன்மை வினையை இந்நூற்பாவான் உணர்த்துகிறார் ஆசிரியர் எனக் கூறி, ஒருமையே முன்னையது. எனில், அஃறிணைப் பன்மை வினைமுற்று ஒருமை வினைமுற்றின் முன் கூறப்பட்டதன் ஏது என்னை? என்பதனை விளக்கும் வகையில், யாண்டும் ஒருமையை முன்கூறின் அதற்கோர் சிறப்புண்டுகொல் என்பது படும் என்று முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்பதோர் தந்திரவுத்தியும் உண்டாதலான் இவ்வாறு கூறினான் என்க (சொல். கல். நூ.218) எனக் காரணங்கூறுகிறார். அஃதாவது, ஒருமையையே யாண்டும் முற்கூறுவதனால் அதற்குத் தனிச்சிறப்புண்டு  எனக் கருதப்படுமாகலான் அஃறிணைப் பன்மை வினைமுற்று முற்கூறப்பட்டது என்பதாம். அங்ஙனமே, இதனை, இவர் முந்து மொழிந்ததன் தலை தடுமாற்று என்னுந் தந்திரவுத்தியுளடக்குகின்றார் இவர் என்பதும் சுட்டத்தக்கதாம்.

    • ”இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்

    நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே” (சொல். இடை. நூ. 1)

    எனவரும் நூற்பாவிற்குக் கல்லாடனார் வழங்கிய சிறப்புரை ஈண்டு நோக்கத்தக்கதாம். அவ்வுரை வருமாறு :

    ”இச்சூத்திரத்தின் பொருண்மையும் இலேசின் பொருண்மையும் இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்என்ற சூத்திரத்துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரல் நிறை வாய்பாட்டதாக பாற் பெயரெனப்பட்டு வரும் என்றும் வினையொடு உரிவரும் என்றும் கொள்ளக் கிடந்தமையின், இடையும் இரண்டொடும் வரும் என்றற்குக் கூறினார் என்பது (சொல். கல். நூ.251) மேலுங்கூறுவாராய், இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்த தாகலாற் புறத்து வழி வருதல் இடைச்சொற்காகவும் உள்வழி வருதல் உரிச்சொற்காகவும் கொள்ளக் கிடக்கும் என்பது கருதி, ஈண்டும் இருவகையானும் இடைவரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும் என நன்கு துணிதற்கியலாது ஐயுற்றுரைக்கின்றார்.

    போலும் வாய்பாடு :

    முன்னைய உரையாளர்கள் குறிப்பிடாத பல ஆய்வுகளை ஆராய்தற்கு எடுத்துக்கொண்ட இவர், அங்ஙனம் ஆராயுங்கால் உறுதியாக இன்னது என்று துணிதற்கியலாதவற்றை; ஐயப்பாடுடையனவற்றைப் போலும் என்னும் வாய்பாட்டால் குறிப்பிடுகின்றார். இங்ஙனம், இவர் துணிதற்கியலாது கூறிய இடங்களாக இவருரையில் ஏறத்தாழ 40 இடங்கள் உள. இப்பகுதிகளான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
    இன்னும், இவர் இரு கருத்துக்களைக் கூறி, இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க(சொல். 210) என்றும், தமக்கு உறுதியாகத் தெரிந்த காரணத்தை மட்டும் உரைத்துப் பிறிதுகாரணம் உண்டாயினும் அறிந்திலம் (சொல். 222) என்றும் அருகி உரைத்தலும் உண்டு என்பதும் ஈங்குக் குறிப்பிடற்பாலதாம்.

    முடிபுகள் :

              இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
    • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
    • இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாய் கல்லாடனாருரை தோன்றிடினும் அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய பல அரிய கருத்துக்கள் இவருரையில் காணலாகின்றன.
    • விருத்தியுரை என்பதற்கு ஏற்ப பல புதிய விளக்கங்களை இவ்வுரை கொண்டுள்ளது.
    • தாம் ஆராயப்புக்க இடங்களிற் நன்கு துணிதற்கியலாதனவற்றை போலும் என்னும் வாய்பாட்டால் இவர் குறிப்பிடுமாற்றான் இவர்தம் சால்பு ஒருவாற்றான் வெளிப்படுகின்றது.
    • இவருரையால் முன்னைய உரையாளர்களின் கருத்துக்கள் நன்கு தெளிவுறுகின்றனவாம்.
    • அன்றியும், இடையியல் பத்தாம் நூற்பாவிற்குப் பின்னுள்ள பகுதிகட்கு இவ்வுரைதானும் கிட்டாமற் போயினமை தொல்காப்பிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பேயாம்.

    என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

    துணை நின்ற நூல்கள்:

    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.

    2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.

    3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.

    4. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.

    5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.

    6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.

    7. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.

    8. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.

    9. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.

    10. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1), தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.

    11. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.

    12. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    “தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடனாருரையின் உரைப்போக்கும் உரைநலனும்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    • ஆசிரியர் கல்லாடனார் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக் கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி ஆய்வுநெறிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
    • சொல்லதிகார முதல் நான்கு இயல்களுக்கே அன்னார் உரை கிட்டியிருப்பதால் ஆய்வுத் திறனை நன்கு வெளிப்படுத்தற்கு ஏதுவாக ஆய்வுக்களத்தைச் சுருக்கமாகவும் ஆழமாகும் அமைத்துக் கொள்கிறார்.
    • வேற்றுமை மயக்கம் என்பதற்கு உரையாசிரியர் தரும் மயக்கங்களை உள்ளவாறே நிரல்படுத்திக் காட்டியிருப்பது கட்டுரையைக் கற்பாருக்கு ஓர் இலக்கியச் சுவையை நல்குவதாக அமைந்திருக்கிறது.
    • இடைச்சொல் இலக்கணத்தை நூற்பா ஒன்றின் இலேசினால் பெறவிருக்க, பின்னும் கூறியதற்கு உரையாசிரியர் கூறும் காரணமும், பன்மையை ஆசிரியர் தொல்காப்பியர் முன்னெடுத்ததற்கு உரையாசிரியர் கூறும் காரணமும் கட்டுரையாசிரியரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
    • ”முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே” என்னும் நூற்பாவிற்கு ஏனைய உரையாசிரியர்களிடமிருந்து தாம்  மாறுபடுவதற்கான சூழலைக் கல்லாடனார் விளக்கியுரைத்ததை நயம்பட எடுத்துக் கூறுகிறார்.
    • ‘ஓசை’ என்பதற்கான நால்வகை விளக்கங்களையும் தானும் புரிந்து, பிறரையும் புரிந்துகொள்ள வைக்கும் கட்டுரையாசிரியரின் தனித்திறன் போற்றுதற்குரியது.
    • ‘ஆய்தலே இக்கட்டுரை ஆராயக்கொண்ட ஆய்பொருளாம்.’ என்னும் தொடரில் ஆய்தல் என்னும் தொழிற்பெயர், பொருளாம் என்னும் பெயரோடு இயையாமை நோக்குதற்குரியது.
    • ‘எழுவாயாகியப் பயனிலை கோடலும், “ஏனைய உரைகளிற் காணாத்தாம்’ எனத் தொடர்களில் அமைந்துள்ள அச்சுப் பிழைகள் நீக்குதற்குரியன. கணிப்பொறி காலத்தில் தட்டச்சுப்பிழை ‘தலைப்பிழை’ என்பதை உணர்தல் வேண்டும். ஆய்வில் சகித்துக்கொள்ள முடியாதது எழுத்துப்பிழை.
    • ”இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும் ஞாபக வகையான் ஒன்றெனப்பட்டன” என்னும் பகுதியில் ‘ஞாபகம்’ என்னும் உத்தி எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
    • உரைப்போக்கும் உரைநலனும் என்பதே கட்டுரையின் மையப்பொருளாயினும் ஒப்பீட்டு முறைத் திறனாய்வே இத்தகைய கட்டுரைகளின் பொருள் விளக்கத்திற்கு ஏற்றது என்பதை அறிதல் வேண்டும். பொதுவாக ‘மாறுபடுகிறார்’ என்பதனின் குறிப்பிட்டுச் சொல்வது கட்டுரைக்கு வலுச்சேர்க்கக் கூடும்.
    • “இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச் செல்வதாகும். எனினும், அவ்விருவர் உரைகளிலும் சேனாவரையர் உரையிலும் காணப்படாதனவாகிய  பல அரிய கருத்துகள் இவருரையில் காணலாகின்றன. என்பதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டாமா?
    • விளக்கப்படும் நூற்பாக்களின் பொருண்மைக்கேற்ப கட்டுரையில்  துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருந்தால்  ஆய்வுப் பொருண்மையும் அளவும் இன்னும் தெளிவாகியிருக்கக்கூடும்.
    • இலக்கிய ஆய்வு என்றால் நாளேடுகளின் மொழிநடை’ என்றும் ‘கிழமை இதழ்களின் நான்கு வரிக் கவிதைகள்’ என்றும் ஆகிவிட்ட தமிழாய்வு பெரும்பரப்பில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. இவை கட்டுரையாசிரியரின் தனிப்போக்கு என்பதும் தனிச்சிந்தனை என்பதும் தெளிவாகத் தெரிகின்றன. .
    • ‘என்வழி தனிவழி’ எனத் தற்காலத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் செவ்வியல் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் தடம் பதிக்க முயல்கிறார் என்பது இக்கட்டுரையால் தெளிவாகிறது. வாழ்த்துகள்!

    Share
  • ஸ்ராவணி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்


    மரணம். . . . .

    இரண்டாவது  நாளும் மருத்துவமனை  படுக்கையில் கிடக்கும் ஸ்ராவணியைத் தேடிவரவில்லை. ஆனால் வந்ததோ ஒரு தனியார் தொலைக்காட்சியின் மேக்கப்மேனும் ஒரு பெண் நிருபரும். இரண்டு கேமரா அசிஸ்டென்டுகளும் உடன் இருந்தனர். மருத்துவ அதிகாரிகளின் அனுமதி அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்திருந்தது.

    “இல்ல நாங்க ஒருவிதத்திலும் சிறுமியை  தொல்லை  செய்யமாட்டோம்.”

    நிருபரான ரேணுகா இரண்டாவது நாளும் மரணம் தேடிவராத மாணவியின் பெற்றோரிடம் நயமாகக் கூறினாள். மேக்கப் மேன் சுனில் பட் அதிகம் பேசாத குணம் உடையவனாதலால் தலையை மட்டும் ஆட்டி ரேணுகாவிற்குத் துணைநின்றான். எப்படியிருந்தாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு கொஞ்சம் அவசரம்ங்கற தோரணை அவனது முகத்தில் ஓடியது.

    ”சொல்லப்போனா நேத்தே நாங்க வந்திருக்க வேண்டியது. எங்க துரதிர்ஷ்டம் என்ன நடந்துச்சுனு இன்னைக்குக் காலைலதா ஆபீஸ்க்கே தெரியுது. உடனே  நாங்க இங்க வர்றோம்.”

    ரேணுகா விளக்கினாள். அதற்குமேல் அவளுக்கொன்றும் சொல்வதற்கில்லை. தனது படபடக்கின்ற மனதுக்கு ஓய்வு கொடுக்கலாம் என நினைத்து தனது பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தாள். ஆனால் மருத்துவமனைக்குள் புகைக்கலாமா என்ற சந்தேகத்தில் மீண்டும்  அதை பைக்குள்ளேயே வைத்தாள்.

    “டோன்ட் கெட் எக்ஸைட்டடு. டேக் இட் ஈஸி” சுனில் மெல்லிய குரலில் கூறினான்.

    ”ஐ ஆம் ஆல்ரைட்” அவள் சிரிக்க முயற்சித்தாள்

    சென்ட் தேரேசாஸ் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாவது மாடியிலிருந்து ஸ்ராவணி குதித்தது மிகக்கொடுமையான விஷயம் என்றாலும் இரண்டாவது நாளாகியும் மரணம் அவளைத்தேடி வரவில்லை. ஃபினோயில் வாசமுள்ள வழிகள், படிக்கட்டுகள் வராந்தா, மொட்டைமாடி என எங்காவது மரணம் பதுங்கி நின்றுகொண்டிருக்கும். இல்லை நிறம் மங்கின ஜன்னலுக்கருகில் நிலத்தைத்தொடாமல் வாயுவில் கலந்து ஜன்னல் கம்பிகள் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டிருக்கும். விழுந்து நொறுங்கிய பல பாகங்களையும் சேர்த்து வைத்துத் துணியால் மூடப்பட்ட ஒரு மண்பொம்மை போல கிடக்கிறாள்.

    பளீரென  ஓர்  ஒளி கண்களில்  பட்டபோது அவள் நெளிந்துகொண்டு கண்களைத் திறந்தாள். ஆனால் பாதி திறந்த கண்கள்  வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல்  மூடவேண்டியிருந்தது.

    “கட்”- ரேணுகா கூறினாள்.

    சென்ட் தேரேசாஸ் ஹைஸ்கூலின் தரைத்தளத்தில் உள்ள ஆபீஸ் அறையிலிருந்து சிஸ்டர் மெர்சிலின் மிருதுவான இருக்கையிலிருந்து மேக்கப்மேன் சுனில்பட்டைப்  பார்த்தார்.

    ”ஓ.கே”- சுனில் கூறினான்

    ரேணுகா கேமராவின் ஒரு பக்கத்தில் குனிந்து நின்றுகொண்டு சிஸ்டர் மெர்சிலினிடம் பேசத்தொடங்குமாறு கை அசைத்துக் கூறினாள்.

    “ஸ்ராவணி, யெஸ் ஐ ரிமம்பர்…… அவள் மார்க்ஷீட் வாங்க தனியாகத்தான் வந்தாள். சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பினும்  இங்க  எம்முன்னாடி உட்கார்ந்து சில ரெஜிஸ்டர்கள சரி செய்திட்டிருந்தாங்க. அப்போதுதான் ஸ்ராவணி வந்தா”

    ஸ்ராவணி அறைக்குள் ஏறிவந்தபோது சிஸ்டர் இடாவும், சிஸ்டர் க்ரிஸ்பனும் ஒரு நிமிடம் முகமுயர்த்தி அவளைப் பார்த்தனர். சிஸ்டர் இடா அவளுக்கு பௌதீக ஆசிரியர். வரலாற்று ஆசிரியர் க்ரிஸ்பின். முகபாவத்தில் எந்த மாற்றமும்  இல்லாமல் அவளைப் பார்த்தனர். இருவரும் தங்களின் வேலையைத் தொடர்ந்தனர். அவள் சிஸ்டர் மெர்சிலினுக்கு அருகில் நின்றாள். அவளுடைய முகத்தில் தயக்கம் தெளிவாகத்  தென்பட்டது.

    ”நீ இந்த முறையும் பாஸ் பண்ணல. இந்த மார்க்ஷீட்ட எடுத்திட்டுப்போய் பேரன்ஸ்கிட்ட காட்டு. அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.” சிஸ்டர் மெர்சிலின் கூறினாள்

    சிஸ்டர் இடாவும் சிஸ்டர் க்ரிஸ்பினும் வேலைக்கிடையில் மெதுவாக  சிரித்தனர்.

    ’யூனிஃபாமும் புத்தகமும், ஷூஸும் எல்லாம் வாங்கி இங்க அனுப்பும்போது  மனசில என்ன நெனச்சீங்கனு அவங்ககிட்ட கேட்கணும். சிஸ்டர் மெர்சிலின்  மார்க் சீட்டை ஸ்ராவணிக்கு நேராக நீட்டினாள். அவள் மார்க் சீட்டை வாங்கிய உடனே சிஸ்டர்  காலிங் பெல்லில் விரல் அமர்த்தினார்.

    ஸ்ராவணி வெளியேறினாள். அடுத்த சுற்று தெல்மா ஜோர்ஜினுடையது. பிறகு மேகாஜெயின். அதுக்கப்புறம் பவ்யலட்சுமி, அவளுக்குப்பிறகு ராகேஸ்வரி. அடுத்தது நேஹா மைத்ரா. பிறகு அனுஸ்ரீ கிட்வானி  பிறகு டெல்னாஸ்  ஒரே மாதிரி சீருடை அணிந்த சிறுமிகளின் நீண்ட வரிசை அவர்களுக்கு பக்கத்து வழியாக ஸ்ராவணி நடந்தாள்.

    ”இதுதான்  ஸ்ராவணியோட மார்க் சீட் ” ரேணுகா கேமராவின் நேராக அதை உயர்த்திப்பிடித்தாள். அடுத்தடுத்து கீழ்கீழாக குறிக்கப்பட்ட எண்களின் மேல் கேமராவின் நுண்ணியக்காட்சிப் படர்ந்தது. ரேணுகா மார்க் சீட்டின் மறுபக்கத்தைக் காட்டினாள். அங்கே எண்களில்லை. சில வார்த்தைகள். வித்தியாசமான ஒரு மன்னிப்புக்கடிதம். அதற்குக்கீழ் ’உங்களுக்கு சொந்தமான ஸ்ராவணி’

    ”நா  அவளோட அப்பா…….”

    அவர் ரேணுகாவின் முகத்தைப்பார்த்துக் கூறினார். கூட்டமான ஒரு தெரு வழியாக அவர் மூச்சு வாங்க ஓடினார். பலரும் இடித்துக்கொண்டு ஓடியதால் அவருடைய ஓட்டம் தடைபட்டது. சில வாகனங்கள் அவருக்கு அருகில் வந்து திடீரென பிரேக்கிட்டு நின்றன.  ஃபோன் சத்தங்கள் முழங்கின. வித்தியாசமான ஒரு போட்டிக்கிடையில்  மதம் பிடித்த குதிரையைப்போல அவர் பாய்ந்தார்.

    ’வித்யா மந்திர் ஹயர் செகன்ட்ரி’ பள்ளியில் பிரின்ஸிபல் அருணா தேசாய் ரிஸீவரைக் கீழேவைத்துத் தனக்கு முன்னால் உள்ள ஆங்கில ஆசிரியரான சாகரிடம் கூறினார்.

    ”சென் தேரேசாசில் ஒரு சிறுமி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டாள். அந்த குண்டு சிஸ்டரோட அகம்பாவம் இனி  கொஞ்சம் குறையும். அவ வெளியில என்ன  சமாதானம்  சொல்லுவாள்

    ”நம்மை தோற்கடிக்கக் கிடைக்கற ஒரு வாய்ப்பையும் சென்ட் தரேசாஸ் வீணாக்கனதில்ல” சாகர் ஞாபகப்படுத்தினான்.

    ஆ……….மா……….

    ”இத நமக்கு பெரிசு பண்ணனும்”

    ”இப்ப நாம இதைப் பெரிசாக்கணும்”

    ”நம்ம சிஸ்டர் மேர்சிலினை இப்பவே போய் பாக்கலாம்”

    சில நிமிடங்கள் கழிந்து அருணா  தேசாவும், சாகரும் கிளம்பினர். அருணாதான் கார் ஓட்டினாள். சாகர் இடதுபக்கம் உட்கார்ந்தான். கார் சென்ட்தெரேசஸை இலட்சியமிட்டு அதிவேகமாகச் சென்றது.

    சிஸ்டர் மேர்சிலினாவின் முகம் திடீரென இனம் புரியாமல் இருண்டது. பார்க்க வந்தவர்கள் கதவுக்கருகில் நின்றனர்.

    அருணாதேசாவும் சாகரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஒரு வரவேற்பை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற சிந்தையைப் பங்கிட்டு அறைக்குள் நுழைந்தனர்.

    ”ரொம்ப சங்கடமா இருக்கு சிஸ்டர் மேர்சலின்” – அருணா தேசாயி கூறினாள்

    சிஸ்டர் மேர்சிலின் மனதில் ஒரு முணுமுணுப்பு மேலிட்டது. ’தேவிடிச்சி சங்கடமா இருக்குதாமா’

    ”உட்காருங்க!…….”. மனதின் முணுமுணுப்பை அடக்கிக்கொண்டு உபச்சாரப்பூர்வமாக சிஸ்டர் மேர்சிலின் கூறினாள்.

    ”அருணாவும்  சாகரும் திடீர்னு இங்கெ!!!!!……”

    ”குழந்தைங்க இப்படி அவங்களப்பத்தி ஓர் உணர்வில்லாமப்  பழகினா நாம என்ன செய்யமுடியும்? சமூகம் நம்மைத்தானே  குத்தஞ்சொல்லும்.”

    சிஸ்டர் மேர்சிலானாவின் மனது மறுபடியும் சகிக்கமுடியாமல் புலம்பியது. ’காமப்பிசாசு. அழுக்கு   டிச்சிலிருக்கற புழு, மூதேவி.’

    ’ஆமா’- சிஸ்டர் மேர்சிலினா  ஆழ்ந்த சிந்தனையிலிருந்து வெளிவந்தவளாய் கூறினாள்.

    ”இனி இப்போ  பேப்பர்காரங்க இத ஊதி பெரிசு பண்ணுவாங்களே அதுதா பிரச்சனை”.  சாகர்  சுட்டினான்.

    ”டி.வி.காரங்க சும்மா இருப்பாங்களா? ”அருணா கேட்டாள்.

    ரேணுகா, சுனில் பட்டின் காதுகளில் ஏதோ கூறினாள். சுனில் கேமரா ஆஃப் செய்தான். அந்த நிகழ்வின் இறுதியில் ஸ்ராவணி கண்கள் மூடிக்கிடந்தாள்.

    ஒரு முழக்கம் கேட்கிறதே அவள் செவிமடுத்தாள். கடல் அலைகள். கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு நேராக உயர்ந்து வீசி பலவகை நீர்க்கைகளாக அவை வாயுவில் கலந்தன. எல்லைக்கருகில் நிற்கிறவர்கள் ஆரவாரம் செய்தனர். மின்சார விளக்குகளின் ஒளியில் நீர்க்கரங்கள் மின்னியது. ஸ்ராவணி தம்பியின் கையைப்பிடித்துக்கொண்டு  பின்னால் நகர்ந்தாள்.

    அப்போது கறுப்பு நிறக் கோட்டும் பெரிய தொப்பியும் வைத்த ஒருவன் இருட்டிலிருந்து அவளுடைய முன்னால் வந்தான். தோளில் மாட்டின பையிலிருந்து ஒரு கத்தி எடுத்து அவன் தனது கழுத்தில் குத்தினான். ஸ்ராவணி பயந்து சத்தமிடத்தொடங்கினாள். அவனின் கை அசைந்தது. கைப்பிடிவரைத் தாழ்ந்து இறங்கிய கத்தி மறுபடியும் வெளியில் நீண்டு வந்தது. அவன் சிரித்தான். இரண்டு பன்றிகள் போல இருந்தது. ட்ராகுலாவின் முகமாயிருந்தது அவனுக்கு. ஸ்ராவணி அடக்கிப்பிடித்த சத்தத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் தனது செயற்கைப் பற்களை கைகளில் உமிழ்ந்துவிட்டு சத்தமாக சிரித்தான்

    . ஹ……..ஹ….ஹ….ஹ…….

    ”ஸ்டார்ட்” ரேணுகா கூறினாள்

    சுனில் கேமரா ஆன் செய்தான்.

    மாறுவேடக்காரனுடைய சிரிப்பு ஸ்ராவணியின் காதுகளில் முழங்கிக்கொண்டிருந்தது.

    Share