Blog

  • கென்யா பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

    அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

    நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

    தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

    மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

    நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

    சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

    அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    தொடரும்

    நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    படங்கள்: மெல்லியல்

    Share
  • கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே

     

    நாகை வை. ராமஸ்வாமி    neelaiyadhakshi

     

    உள்ளின் உள்ளே உள்ளவளாய்

    உள்ளும் வெளியுமாகி நிற்கின்றாய்

    பள்ளம் அனைத்தும் நீக்குகிறாய்

    கள்ளம் எல்லாம் களைகின்றாய்

     

    என்னென்பேன் எவ்விதம் சொல்வேன் நின்னெழிலை

    என்னியதக் கமலமதில் என்றும் அமர்ந்தருளும்

    பொன்மயமானவளே புன்னகை பூத்தவளே

    எனதருமைத் தாயே நீலாயதாக்ஷியே

     

    கண்கள் கயலொத்த காரணமோ

    கண்காட்சி தந்தாய் அதிபக்தன் குளிர

    பண் பாடினான் மெய்மறந்து நின் புகழை

    எண்ணம் ஒன்றானானை நின்னடிக் கொண்டாயே

     

    மலர் வாசப் பந்தல் தோரண மாலையுடன்

    உலகாளும் உத்தமியே உன் பதம் போற்றி

    குளமாய்க் கண்கள் ஆனந்தமுற

    உளம் குளிர அலங்கார ஊஞ்சலிட்டோம்

     

    உல்லாசம் பொங்கிட ஒய்யார எழிலுடன்

    நலம் வளமாக பொன்னூஞ்சல் ஆடிடுவாய்

    சீலமிகு சிங்காரி சீர் பெற ஆடிடுவாய்

    வெள்ளமாய்க் கருணை பொழிந்திடுவாய்

     

    கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே!                               

     

    Share
  • வெளிநாட்டார் நாடாளுமன்றம்

    வே.ம.அருச்சுணன்

     

    இன்றைய நடப்புகள்
    நாளைய வரலாறு அல்லவா
    மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
    வியப்பில் நிழலாடுகின்றன சில
    செவிகளுக்குத் தேனாகவும் பல
    குளவிகளாய் காதில் புதுமனை புகுவிழாவை
    விமரிசையாகவும் நடத்துகின்றன……….!

    அருவியாய்த் தவழ்ந்த பூமி
    அன்னியரின் படையெடுப்பால்
    தடம்மாறிப் போனதேனோ……?

    மூவினமும் சேர்ந்து பெற்ற
    சுதந்திரத்தை நடுவீதியில்
    தாரைவார்த்தல் முறையா……?

    மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
    வானுர்ந்த சொகுசு வாழ்வு
    சீனருக்குத் தனிவழி
    எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
    தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?

    என்ன கொடுமை இது
    பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
    ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா……?

    ஆதியிலே வந்தகுடி
    காட்டையும் மேட்டையும் அழித்து
    தன்னையும் இலட்சம் இலட்சமாய்
    அழித்துக் கொண்ட தமிழனுக்குத் திருவோடு
    நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு……..!

    கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
    அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
    துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
    கணக்கில்லாக் கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
    வியாபாரம் தூள்பறக்கிறது
    வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
    தட்டிக்கேட்க ஆளில்லை
    தமிழனுக்கோ நாதியில்லை………!

    வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
    வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
    பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
    கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
    ஜாமினில் எடுக்க
    கர்பாலுக்கு அவசர அழைப்பு
    நாடாளுமன்றத்தில் தீர்மானம்
    குலசேகரன் தலைமையில்
    பலம் பொருந்தியக் குழுவமைப்பு…..!

    வெளிநாட்டார் தர்பார்
    விரைவில் முடியட்டும்! நாட்டில்
    மூவினத்தின் மாண்பு நாடெல்லாம்
    மீண்டும் ஜொலிக்கட்டும்! ஒன்றுபட்ட
    மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்!
    அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்!
    தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
    மறுபடியும் ஓங்கி வளரட்டும்………..!

    வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
    ‘நம்பிக்கை வை’ பிரதமரின் முதல்
    ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
    தமிழர் வாழ்வு சிறக்கட்டும்……!

     

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-3)

    ராமஸ்வாமி ஸம்பத்

    porus

     

    porus1

    அலெக்சாண்டரின் ஆணைமேல் கூடாரத்திற்கு வந்த ரொக்ஸானா, “மன்னர் மன்னா, தங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும்” என்று இனிமையான குரலில் கேட்டாள்.

    “பிரியமானவளே, அந்த மருந்துப் பெட்டியில் உள்ள களிம்பினை இந்த புண்கள்மீது தடவு. மழைத் தண்ணீர் வேறு பலமாகப் பட்டுவிட்ட்து.. வலி பொறுக்க முடியவில்லை.”

    ”அப்படியே அரசே!” என்று சொல்லிய அவள் அலெக்சாண்டரின் உடலில் உள்ள காயங்களின்மீது தனது மெல்லிய வலதுகை விரல்களால் களிம்பினை தடவிவிட்டாள். அந்த ஸ்பரிசம் இதமாக இருந்தாலும், வலி குறையாத நிலையில் அதனால் அவனுக்கு பூரண நிவாரணம் கிட்டவில்லை.

    “ஐயோ, இந்த எரிச்சலில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?” என்று அலறினான் அம்மன்னன். வேதனையைப் புரிந்துகொண்ட ரொக்ஸானா மாசிடோனியப் படைகளுடன் வந்திருந்த மருத்துவரை அழைத்துவரச் சென்றாள்.

    அச்சமயம் ’மாவீரர் அலெக்சாண்டருக்கு வெற்றி உண்டாவதாக!’ என்று கூறியவாறு அவன் படைத்தலைவர்களில் ஒருவன் கூடாரத்தில் நுழைந்தான். “மன்னர் மன்னரே! தங்களால் தோற்கடிக்கப்பட்ட பவுரவ நாட்டரசரை தங்கள்முன் நிறுத்த அனுமதி தேவை” என்றான். வலி வேதனையாலோ என்னவோ, அலெக்சாண்டர் மவுனமாக இருந்தான். அதையே ஒப்புதலாகக் கருதி புருஷோத்தமனை மாசிடோனிய மன்னனின் முன் நிறுத்தினான்.

    விலங்குச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த புருஷோத்தமனைக் கண்ட அலெக்சாண்டர் ஒரு முனகலோடு, “ஓ நீதான் போரஸோ?” என்று கேட்டான்.

    “என் பெயர் புருஷோத்தமன். அதனைக் கொச்சைப்படுத்தி போரஸ் என அழைக்க வேண்டாம்.”

    “மன்னிக்க வேண்டும். ஒருவர் பெயரை இன்னொருவர் தன் இச்சைப்படி மாற்றிச் சொல்வது அநாகரீகமே! ஆனால் என் செய்வது? உங்கள் நாட்டுப் பெயர்கள் எங்கள் நாக்கில் சரியாக புரள மாட்டோம் என்கின்றனவே.”

    ”அப்படியென்றால், எங்களுக்கும் உங்கள் பெயரை உச்சரிப்பது கடினமாக உள்ளது. அதற்காக  நாங்கள் உங்களை ‘சிகந்தர்’ என அழைப்பதை ஒப்புவீர்களா?”

    ”தாராளமாக சிகந்தர் என்றே அழையுங்கள். எனக்கும் அப்பெயர் பிடித்திருக்கிறது.”

    அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் வலி தாங்காமல், “ரொக்ஸானா, எங்கு சென்றுவிட்டாய்? என்னால் எரிச்சலைப் பொறுக்க முடியவில்லையே. அந்த களிம்பினை இன்னொரு முறை தடவு இப்புண்களின் மேல்” என்று புலம்பினான் அலெக்சாண்டர்.

    கூடாரத்திற்கு விரைந்து வந்த ரொக்ஸானா, ஒரு கணம் புருஷோத்தமனைக் கண்டு, “அண்ணா, தாங்களா இந்த நிலையில்?” என்று தழதழக்கும் குரலில் விளித்து, அவன் அடி பணிந்தாள்.

    அலெக்சாண்டருக்கு வியப்பு மேலிட்ட்து. “அண்ணாவா, இது என்ன புது உறவு?” என்று அவளை வினவினான்.

    ரொக்ஸானா அதற்கு பதில் அளிக்காமல், “அண்ணா, என் வருங்காலக் கணவர் விழுப்புண்களின் வலி தாங்காமல் தவிக்கிறார். எங்கள் மருத்துவர் கொண்டு வந்திருக்கும் களிம்பு பயனில்லாமல் போய்விட்டது. உங்கள் நாட்டு மருந்து ஏதேனும் உள்ளதா இப்பிணியைத் தீர்க்க?” என்று கேட்டாள்.

    “தங்காய், என்னுடன் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் என் மெய்க்காப்பாளனை விடுவித்து இங்கு அழைத்து வந்தால், நான் அவனை ஒரு நல்ல மருந்தினைக் கொண்டுவரச் சொல்கிறேன்.”

    ரொக்ஸானா அலெக்சாண்டரை நோக்கிக் கூறினாள், “என் பிராண நாதரே! இவர் என் உடன்பிறவா சகோதரர். அந்த விவரங்களைப் பிறகு சொல்கிறேன். இப்போது இவருடைய மெய்க்காப்பளரை விடுவித்து இங்கு கொணர்ந்தால், உங்கள் தீராத வலிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.”

    வலி நீங்கினால் போதும் என்ற நிலையில் இருந்த யவன மன்னன், அதற்கு ஒப்புதல் அளித்தான்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த மெய்க்காப்பாளன் செவியில் புருஷோத்தமன் ஏதோ கூறினான். அவனும் விரைந்து சென்று ஒரு களிம்பினை எடுத்துவந்து ரொக்ஸானாவிடம் கொடுத்தான்.

    அக்களிம்பினைத் தடவ விழைந்த அவளை, “நில், ரொக்ஸானா! முதலில் அம்மருந்தினை போரஸ் தன் புண்களில் தடவிக் காட்டட்டும். ஏனெனில் விரோதிகள் தங்கள் வைரிகளை நஞ்சு கலந்த விருந்தின் மூலமோ மருந்தின் மூலமோ கொல்ல முயற்சிப்பர்” என்று தடுத்தான் அலெக்சாண்டர்.

    ரொக்ஸானா அவன் சொன்னதை புருஷோத்தமனிடம் கூறி தன் காதலனின் சந்தேகத்தை நீக்கக் கோரினாள். புன்னகை முகத்தோடு அவனும் அவ்வாறே செய்தாள்.

    ‘போரஸுக்கு ஒன்றும் நேரவில்லையே. ஒருவேளை இக்களிம்பு உண்மையிலேயே சிறந்தது போலும்’ என நினைத்த அலெக்சாண்டர் அக்களிம்பினை தடவுமாறு அவளைப் பணித்தான்.

    ரொக்ஸானா மீண்டும் அந்த சேவையில் ஈடுபட்டாள். சில நொடிகளில் அலெக்சாண்டர் வலி நீங்கி பூரண குணமடைந்தான். மலர்ந்த முகத்தோடு, ‘”போரஸ், மிக்க நன்றி. இக்களிம்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?” என்று கேட்டான்.

    “சிகந்தர் அவர்களே! இது கத்தாழை எனப்படும் மூலிகைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.”

    “அப்படியானால், அந்த மூலிகைச் செடியினை எனக்குக் கொடுங்கள். நான் அதனை எங்கள் நாட்டில் விளைவிக்க விரும்புகிறேன்.”

    “அது மிகவும் கடினம். எங்கள் பரத கண்டத்தின் தென்புலத்தில் உள்ள ‘திரமிள’ தேசத்தில்தான் இது விளையும். வேறு எங்கும் இதனை விளைவிப்பதற்கானச் சுற்றுச் சூழல் இல்லை. வேண்டுமென்றால் தாங்கள் இந்தக் களிம்பினை பெரிய அளவில் உங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.”

    “அப்படியா. ரொக்ஸானா இப்போது சொல். போரஸை எவ்வாறு நீ ‘அண்ணா’ என அழைக்கிறாய்?”

    அப்பாரசீகப் பேரழகி மலர்ந்த முகத்தோடு அந்த விருத்தாந்தத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

    ‘ திராவிட தேசத்தை’  அக்காலத்தினர் திரமிள தேசம் என்றே அழைத்தனர்.

    (தொடரும்)

    Share
  • பிரிவு ஒரு தொடர்கதையோ

    திவாகர்

    சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. விதம் விதமான அலங்காரத்தில் உதடு ஒட்டாமல் விரித்துக்கொண்டே உள்ளே செல்லும் விமானப் பணிப்பெண்கள்..தங்கத் தமிழ்நாட்டில் இந்தியில் கறாராகப் பேசி அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே விட மறுக்கும் காவலாளிகள்.. பலவிதமான எண்ணக் கலவைகளுடனே மனதில் ஆவல் பொங்க வந்திருக்கும் பிரயாணிகள்.. கனவு, இன்பம், பரபரப்பு, போராட்டம், துன்பம் கடமை என பலவித உணர்ச்சிக்கலவையைத் தாங்கி வரும் பிரயாணிகள் கூட்டம்

    அட, இந்த பிரயாணிகளுடன் கூடவே வரும் உறவுக்கார ஜனங்களைப் பார்க்கவேண்டுமே.. பிரயாணிகளில் முக்கால்வாசிப் பேர் துபாய் போன்ற அரபு நாடுகள் போலும்.. அப்படித்தான் அவர்கள் பேசும் விதத்தில் தெரிந்தது கூட..

    “இவங்கள்லாம் துபாய்’ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இங்கே குடும்பம் காப்பாத்தறாங்க இல்லே.. நன்றிக்கடனா அத்தனை உறவுகளும் வழியனுப்ப வந்திருக்கும்மா”

    அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைக் காண்பித்து தன் மகளிடமும் சொன்னான்.. அந்த மகள் இவனை ஏதோ மாதிரி பார்த்தாள். தன் அம்மாவிடம் கோள் மூட்டினாள்.

    ”அம்மா! என்னம்மா இப்படி பே’ன்னு அப்பா எல்லாரையும் அரக்கப் பரக்க பாத்துண்டிருக்கார்.. எப்படிம்மா இத்தனை வருஷமா தாங்கினே..”

    ”அது ஒரு சோகக்கதைதான்.. என்னாத்துக்கு இப்போ அதை ஞாபகமூட்டறே.. அவர் கிடக்கார்.. உன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் ஜாக்கிரதையா வெச்சுக்கோ”

    அந்த மகள் மறுபடியும் சலித்தாள். “ஐயோ உனக்கு அப்பாவே பரவாயில்லே.. எத்தனை தரம் சொல்வே.. பாஸ்போர்ட் டிக்கெட் இந்த கேட்’ல காட்டறதிலேருந்து கையிலேயே வெச்சுக்கணும்.. எனக்குத் தெரியாதா?

    ஆனாலும் இவர்கள் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர் “இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிக்கறது.. எனக்கு காலை வலிக்கறதும்மா! உள்ளே வுடுவானா’ன்னு கொஞ்சம் கேளும்மா”:

    ”போப்பா.. மூணுமணிநேரம் முன்னாடி அவன் உள்ளேயே விடமாட்டான்.. எதுக்கு அவன்கிட்டே போய் ஹிந்தி’ல திட்டு வாங்கணும்..”

    “அப்போ உன்னைத் தமிழ்லேயே நல்லா திட்டலாமா?”

    ”ஐய்யோ கடவுளே! நீங்க ஏன் இப்படி வெளில வந்தாலும் இவகிட்டே வாயைக் கொடுக்கறீங்க..” அம்மாவின் சொல் மகளை மேலும் கோபமாக்கியது.

    “அப்ப..நான் வாயாடின்னு பட்டம் கட்டறியா அம்மா!.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க!.”

    “இப்ப, என்னடி சொல்லிட்டேன் இவ்வளோ கோபம் வரது.. வெளியூர் போறே.. உனக்கு கோபம் கூடாது..”

    ”ஆமாம்.. கோபம் கூடாதுதான்” என்ற அப்பாவையும் கோபம் குறையாமல் பார்த்தாள். அப்பா உடனே சமாதானப் படுத்தினார்.

    ”சரி.. சரி.. நாம் இங்க இவ்வளோ தூரம் வந்து உன்னை சமத்தா வழி அனுப்பவேண்டாமா.. நம்மளை வுடு.. அதோ அங்கே பார்.. அந்தம்மா எப்படிக் கேவி கேவி அழறாங்க.. பாவம் இப்போ போற புருஷன் எப்போ வருவானோ.”.

    ”அதெல்லாம் சரிப்பா.. பட் எதுக்கு ஏர்போர்ட் வரை வந்துட்டு அழணும்.. ரெடிகுலஸ்.. இப்போ மாடர்ன் உலகத்துல அழுகை எல்லாம் ஒரு ஓல்ட் ஃபேஷன்..”

    அம்மாவுக்கு கோபம் குறையவில்லை. “அதுக்காக உன்னையும் உங்கப்பாவும் மாதிரி உணர்ச்சியே இல்லாம ஜனங்க எல்லா இடத்துலேயும் இருந்துடுவாங்களா..”

    அவள் உடனே சண்டைக்கு மறுபடியும் மல்லுக் கட்டினாள்.. “இப்போ நான் சொல்றதுல என்ன தப்பு பாக்கறே.. இதோ பார்.. இவங்க.. ஐ மீன்.. துபாய்க்கு இந்த ரெண்டு மூணு மணி நேர பிரயாணம்தான்.. கைல எப்பவுமே மொபைல் போன்.. சதா பேசிட்டே இருக்கறமாதிரி வசதி வந்தாச்சு.. இதுக்கே இப்படி சீன் காமிக்கறாங்களே.. நானெல்லாம் கிட்டத்தட்ட 30 மணிநேரம் பிரயாணம் பண்ணனும்.. மூணு ஏர்போர்ட் டிரான்சிட் பண்ணனும்.. நான் எவ்வளோ சீன் காமிக்கணும்.. என்னப்பா அங்கேயே பாக்கறியே நான் சொல்றதை சரின்னு சொல்லேன்”

    அப்பா சிரித்தான். “ஆமாமா.. ஆனா பாவம்மா.. புருஷன் பெண்ஜாதி இல்லையா.. அப்படித்தான் இருக்கும்.. அங்கே பாரு ஒரு கும்பலே கூட்டம் போட்டு கண்ணைக் கசக்கிண்டு இருக்கு.. இதெல்லாம் தமிழ்நாட்டுல சகஜம்மா.. அந்தக் கிழவன் கூட பாரேன் சந்தடி சாக்குல கண்ணைத் துடைச்சுக்குறான்..”

    அப்பாவின் சிரிப்புக்கு மகளும் பதில் சொல்வது போல சிரித்தாள். “நிஜம்மா இந்த ஏர்போர்ட் ஒரு சினிமா தியேட்டர்தான்பா.. சினிமா’ல சோகக் காட்சியெல்லாம் வரச்சே நம்ம ஜனங்க அழுவாங்க இல்லே அதே மாதிரிதான்..”

    ”அதேதான்.. ஒருத்தர் ஊருக்குப் போறார்னா டீசெண்டா வழி அனுப்பி வெக்கணும்.. ஒரு பூங்கொத்து அப்படி இப்படி கொடுத்து” அப்பா சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.

    ”ஐய்யோ போதுமே அப்பாவும் மகளும் இங்கே சிரிச்சது.. அப்பறம் இங்கே ஏதோ காமெடி சீன் நடக்கறது’ன்னு நினைச்சு ஜனங்க எல்லாம் நம்மளை சினிமா பார்ப்பாங்க.. வுடுங்க.. டைம் ஆயிடுத்து.. உள்ளே வுடுவான் போல அந்த கடங்காரன்.. உங்க ஏர்போர்ட் டிக்கெட்டையும் அவளோட டிக்கெட்டையும் அவன் மூஞ்சி நேரா காமிங்க.. அப்பதான் உடனே உள்ள வுடுவான்.”

    உள்ளே சென்றவர்கள் மகளை மட்டும் கவுண்டருக்கு அனுப்பி வைத்தார்கள். அவள்: அங்கிருந்து தன் கைபேசியில் ‘அப்பா ஒரு கிலோ ஜாஸ்தியா யிருக்கு.. எதை எடுக்கறது..”

    அவன் உடனடியாக மனைவியைத் திட்டினான். “இதுக்குதான் நான் அப்பவே தலையாலே அடிச்சுகிட்டேன்.. கண்ட கண்டதையெல்லாம் பேக் பண்ணாதே’ன்னு.. பாரு இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. மறுபடியும் பாக்கேஜ் எல்லார் முன்னாடியும் ஓபன் பண்ணனும்”

    அதற்குள் மறுபடியும் அவள் கைபேசியில் பேசினாள். “அப்பா.. டோண்ட் வொர்ரி, அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்..” அப்பா மௌனமாய் கையை ஆட்டினான். “என்னவாம்” மனைவி அதட்டினாள்.

    அவன் அசடு வழிந்தான்.. “இல்லே ஒரு கிலோல்லாம் பரவாயில்லையாம்”.

    மனைவி உடனே சண்டையைத் துவங்கிவிட்டாள். “அவசரபுத்தி உங்களை விட்டுப் போகவே மாட்டேங்குதே.. ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் என்னைத் திட்டிப்புட்டீங்க.. நான் இதை அவ்வளோ ஈஸியா விடப்போறதில்லே.. எனக்குத் தெரியாதா யார் யார் எந்தந்த ஏர்லைன்ஸ் எவ்வளோ அக்செப்ட் பண்ணிப்பாங்க’ன்னு..”

    “இரு.. இரு” இந்த சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தாதே.. இதோ பார் உன் மகள் வராள். சிரிச்சமூஞ்சியோட வழியனுப்பி வையேன்..”

    “ஆஹா.. எனக்கு சிரிச்ச மூஞ்சியில்லே’ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அதைக் கூட உங்க மகளுக்கு நீங்களே செஞ்சுடுங்க.”.

    ”என்னம்மா.. இன்னும் ஏதாவது சண்டை போடறீங்களா.. இப்போ சினிமால ஃபைட் சீனாக்கும்.. ஒண்ணு தெரியுமா.. வெளிலே இருக்கற கூட்டம் மாதிரி உள்ளே இல்லே.. ஸோ.. ஆடியன்ஸ் உங்க ஃபைட் சீனுக்கு ரொம்ப குறைவுதான்….

    ”’நல்லா சொன்னே போ’..என்று சொல்லிவிட்டு ஹஹ என்று கொஞ்சம் கத்தி சிரித்த அப்பாவை விசித்திரமாகப் பார்த்தாள் மகள்.

    “அப்பா.. நான் போகறச்சே ஏன் இப்படி சிரிச்சு பயமுறுத்தறே.. அப்புறம் ப்ளேன்’ல தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் நீ இப்ப சிரிச்சயே ஒரு சிரிப்பு, அது என்னை தூங்க வுடாதுப்பா”

    அம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். ”ஜாக்கிரதையா போயிட்டு வாடா தங்கம்..”

    “இம்மிகிரேஷன முடிந்ததும் ஒரு கால் கொடுத்தாள். பாதுகாப்பு முறைகள் முடிந்ததும் இன்னொரு கால் கொடுத்தாள்.

    ”சரிப்பா! நீங்க கிளம்புங்க! இரண்டு மணிநேரம் போல ஆகும்.. நான் பாத்துக்கறேன்..”

    ”பரவாயில்லேம்மா..விமானத்துல ஏறி உட்கார்ந்ததும் சொல்லு, அப்பவே போறோமே. வீட்டில போயி என்ன பண்ணப்போறோம். உங்கம்மா வேற கர்புர்’னு இருக்கா.. அதுக்கு இங்கயே இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவளும் கொஞ்சம் சத்தமாக சிரித்ததாக காதில் கேட்டது.

    இவர்களைப் போல ஒரு சிலர் உள்ளே வந்து வழி அனுப்பினாலும் அவர்கள் கண்களில் துக்கமும் ஒரு சேர இருந்ததை கவனிக்கவே செய்தான்.. ’உலகம் ரொம்ப சிறுசு.. என்பதை எப்போதுதான் இவர்கள் உணரப்போகிறார்களோ’ என்று மனைவியிடம் சொல்லி வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்தான். அவள் இவனைச் சீண்டாமல் ஏர்போர்ட் முழுதும் பார்த்துக் கொண்டு கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டுமே என்பதாகக் கவலைப் பட்டாளோ என்னவோ..

    இரண்டு மணிநேரமும் கழிந்தது. மகள் கைபேசியும் ஒலித்தது. “என்னம்மா.. ப்ளைட்’ல உக்காந்திட்டியா?”

    “இதோ போகணும்பா.. ஆமாம்ப்பா.. நான் எதுக்காக இவ்வளோ தூரம் பிரயாணம் செஞ்சு என்ன சாதிக்கணும்னு போறேன்’னு இவ்வளோ நேரம் நினைச்சுப் பார்த்தேன்..பா.. ஒண்ணுமே விளங்கலே.. எதுக்காகப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் இப்படி தனியா போகணும்.. அப்பா எனக்கு இப்போ மனசெல்லாம் உங்க ரெண்டு பேரோடயே இருந்துடலாம்’னு தோணறது..” அவள் குரல் உடைந்திருந்ததைக் கவனித்ததும் இவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது..

    “ஆமாம்மா.. நாங்க எதுக்கு உன்னை இப்படி கம்பெல் பண்ணி அனுப்பணும்.. நாம் இப்படியே அப்பப்ப சண்டை போட்டுண்டு ஜாலியா கமெண்ட அடிச்சுண்டு இருக்கவேண்டாமா.. நீ எதுக்காக போகணும்..” அவன் குரலும் கம்மியது..

    “அப்பா…” அவள் அழுதது போல அவனுக்குக் கேட்டது..

    “என்னம்மா..”

    “நான் போகலேப்பா.. நான் உங்களோடயே வந்துடறேன்பா..” என்றவளின் கேவி அழும் சப்தம் கேட்டு அப்பாவுக்கு கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்து விட்டது. இதைக் கவனித்த அம்மா அந்த போனை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். மகள் அம்மாவிடமும் அதையேதான் கேட்டாளோ.. அந்த அழுகைக் குரல் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.

    “நீ வந்துடுறா செல்லம்..அழாதே அழாதே.. அம்மா நான் இருக்கேன்.. பரவாயில்லே.. என்ன பெரிய படிப்பு வேண்டிக்கிடக்கு.. அங்க போய் படிக்கறதை இங்கேயே படிக்கமுடியாதா என்ன?..நீ முதல்ல அழுகையை நிறுத்தும்மா”

    “இல்லேம்மா.. நான் இப்போ உள்ளே இருக்கேன்மா.. எல்லாத்தையும் உதறிவிட்டு வரமுடியாது..”:

    “அப்ப ஒண்ணு பண்ணு.. போனவுடனே அங்கே நிலைமையைப் பாரு.. பிடிக்கலேன்னு வெச்சுக்க, உடனே புறப்பட்டு வந்துடு, என்னடா செல்லம்..”

    “சரிம்மா.. நீ அழாதே.. போனை அப்பாகிட்டே கொடு”

    ”என்னம்மா”

    “அப்பா! அம்மாகிட்டே நான் இல்லாத சமயத்துல சண்டை போடாதேப்பா..”

    ”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”

    சட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

    Share
  • இந்த வார ராசிபலன்!

    காயத்ரி பாலசுப்பிரமனியன்

    மேஷம்:பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியும், பரபரப்பும் நிறைந்திரு க்கும்.மாணவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங் கள் பணியில் விழிப்பாய் இருங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்கள் மூலம் புதிய உறவுப் பாலம் உருவாகும். உங்களுக்கு நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரம், தொழிலிடங்களில் உங்களின் சொல்லுக்கு தனி மதிப்பிரு க்கும்.

    ரிஷபம்: உங்கள் ,வாகனங்களை தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் விழிப்புணர்வோடு இருந்தால், வீண் சஞ்சலங்களிலிருந்து தப்பிக்கலாம்.வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணி புரியும் இடத்தில் அவ்வப்போது எழும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொண்டால், நிம்மதியாக வேலை செய்ய முடியும். கலைஞர்கள் திறமை என்பதுடன் பொறுமையும் உடனிருக்குமாறு பார்த்துக் கொண்டால், எளிதில் பணிகள் முடியும்.முதியவர்கள் உணவில் கவனமாக இருக்கவும்.

    மிதுனம்;மாணவர்கள் யோசித்து நிதானமாகச் செயல்பட்டால், எல்லா விஷயங்களும் ஏற்றமாகவே முடியும். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், பெற்றோரின் பெருமை உயரும். கர்ப்பிணிப் பெண்கள் அதிக அலைச்சல்,அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். வியாபாரிகள் கணக்கு வழக்குக்களில் நேர்மையான போக்கைக் கையாள்வது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் தர்க்கங்கள் எழாதவாறு பேசி வந்தால்,மனதில் அமைதி நிலவும்.அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பார்கள்.

    கடகம்: மாணவர்கள் படிப்பில் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. சேமிக்கும் வகையில் பண வரவு தாராளமாய் இருக்கும். உறவினர் இடையே சிறு பிரச்னைகள் எழக்கூடும். எனவே சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது. சிலர் குடும்பத்தோடு இனிய சுற்றுலா சென்று வருவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து விடும். பணியில் இருப்பவர்கள் விலைஉயர்ந்த பொருள்களை கையாளுவதில் கவனம் தேவை. பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது.

    சிம்மம்: இந்த வாரம் நண்பர்களிடையே வேண்டாத விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது விவேகத்தைக் கடைபிடித்து வந்தால், பயணங்கள் இனிமை யாய் இருக்கும் . பெண்கள் ,பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களும் கட்டுக்குள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் சீற்றத்தித்திலிருந்து தப்பிக்க இயலும். வியாபாரிகள் பங்குதாரரின் எண்ண ஓட்டங் களை அறிந்து கொண்டு செயல்பட்டால், லாபம் குறையாது. கலைஞர்கள் ,நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .

    கன்னி: வீடு, நிலம் வாங்குகையில், பத்திரத்தை சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்தால், இல்லறம் நல்லறமாகத் திகழும். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது புத்திசாலித் தனம்.மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறர் மனம் புண்படாமல் பேசுவதை மேற்கொண்டால், அதிக நன்மை பெறலாம்.பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பக்குவமாக நடப்பது அவசியம்.

    துலாம்: பெண்கள் உறவுகளிடம் இன்முகம் காட்டினால், அவர்களின் அன்பும் குறையாமலிருக்கும். மாணவர்கள் கவனத்தை திசை திருப்பும் இடங் களுக்கு போவதைத் தவிர்த்து விடவும். வியாபாரிகள் சமயோசிதமாக செயல்பட்டால், எதனையும் சாதிக்க முடியும் . பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோபமே பல சமயம் உங்களுக்கு வர வேண்டிய நன்மை க்குத் தடை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து விட்டால், அவசியமான செயல்கள் நல்ல முறையில் நடைபெறும். பொறுப்பில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் உங்கள் கோப தாபங்களை பிரதிபலிக்க வேண்டாம்.

    விருச்சிகம்: பெண்கள் நிதிநிலைமைக்கேற்றவாறு செலவுகளை மேற்கொண்டால், கடன் தொல்லை இராது. அனுசரித்து நடந்து கொண்டால், கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படாமல் இருக்கும்.வியாபாரிகள் இந்த வாரம் வாகன பயணங்கள் மற்றும் பராமரிப்பிற்கென கணிசமாக பணம் செலவு செய்யும் நிலை இருக்கும்.முதியவர்களின் உடல் நலம் சீராக இருப்பதால், உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களோடு செலவு செய்யும் நேரம் இனிமையாகவும், மனதுக்கு இதமாகவும் அமையும்.

    தனுசு: கலைஞர்கள் தொல்லை தந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நலம். . நம்பிக்கையுடன் செயல்படும் குணத்தால்மாணவர்கள் , தொட்ட காரியம் யாவிலும் எளிதான் வெற்றி கிடைக்கும். பெண்கள் பக்குவமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தானே நீங்கும். அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தை பிறர் தவறாகப் பயன்படு த்த அனுமதிக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எளிமையாய் இருத்தல், இனிமை யாய் பேசுதல் இரண்டையும் கடை பிடித்தால், அனைவரும் உங்கள் பக்கமே இருப்பார்கள்.

    மகரம்: உங்கள் வரவு செலவுகள் கட்டு க்குள் இருந்தால், பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இடமிராது. கலைஞர்கள் வாழ்க்கையில் உயர, வரும் வாய்ப்பு நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில், கூட்டு முயற்சி முலம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதிக லாபம் பெறலாம். கல்வியில் மேற்படிப்பு க்கான வாய்ப்புகளுக்கு மாணவர்கள் எதிர்பார்த்த வங்கி உதவி கிட்டும். வேலைக்குப் போகும் பெண்கள் இல்ல வேலை , அலுவலக பொறுப்பு இரண்டும் மோதாமல் பார்த்துக் கொண்டால், மன அமைதி குலையாமலிருக்கும்.

    கும்பம்: பெண்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் காட்ட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத ,செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைந்து முடியும். வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக்கால் வைப்பதை தவிர்த்தால், செலவுப் பட்டியல் குறையும். கலைஞர்களின் வாழ்க்கை வளம் பெற்று விளங்க, உடன் இருப்பவர்களிடம் இதமாக நடந்து கொள்ளுங்கள்.

    மீனம்: இந்த வாரம் வியாபாரிகள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம். சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடை பிடிப்பது அவசியம். பெற்றோர்கள் பிள்ளைக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். உற்சாகம் குறையாமலிருக்கமுதியவர்கள் உணவு , உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது பணியிடங்களில் கவனமாக நடந்து கொண்டால், சிறு பிரச்னைகளால் சிந்தனை சிதறாமலிருக்கும். தொந்தரவுகள் புதிதாக முளைக்காமலிருக்க, பொது வாழ்வில் உள்ளவர்கள் இடம், பொருள் ஏவலறிந்து நடந்து கொள்வது நல்லது.

    Share
  • திருப்பாவை தந்த திருப்பாவை

     

    -கவிநயா

    கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசியம் வேறு பேசுகிறான்! பொல்லாத கண்ணன் என்பது சரியாகத்தான் இருக்கிறது!

    இந்தக் கோபியர்களின் பாவனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை துள்ளல்! உலகமே இவர்கள் காலடியில் கிடப்பது போல் அப்படி ஒரு பெருமிதம், இவர்கள் முகத்தில்! பூமியில் கால் பாவாமல், எங்கோ ஆகாயத்தில், கவலைகளே அற்ற ஒரு உலகத்தில் இருப்பது போன்ற எண்ணம் போலும்! வீடு என்று ஒன்று இருப்பதும், அங்கு பெற்றோர் இவர்களுக்காகக் காத்திருப்பதும், இவர்கள் நினைவிலிருந்தே மறைந்து விட்டது! கண்ணன்… கண்ணன்… கண்ணன்…மட்டும்தான் அவர்களின் கண்களுக்குத் தெரிகிறான். எங்கெங்கும் அவனுடைய குறும்புப் பார்வையும் கனிந்த புன்னகையும் மட்டும்தான் தெரிகிறது. அப்படி இருக்க, அவர்களுக்கென்ன பகலும், இரவும், பசியும், தாகமுமா தெரியப் போகிறது!

    அவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிரேமைக்கு அளவே இல்லை. கண்ணா, கண்ணா, என்று இவர்கள் அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டாடிக் கூத்தாடுவதும், இவனும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு அத்தனை பெண்களையும் சமாளிப்பதும்! எப்படித்தான் இவனால் முடிகிறதோ! ‘கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தம்; என்னிடம்தான் அவன் அதிகப் பிரியம் வைத்திருக்கிறான்’, என்று ஒவ்வொருத்தியும் எண்ணும்படியல்லவா நடந்து கொள்கிறான்!

    “கண்ணா! என்னைப் பாரேன்… என்னைப் பாராமல் ஏன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”, ஒருத்தி அவன் முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்புகிறாள்.

    “உன்னைப் பார்க்கப் பயந்துதான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்கிறான் அந்தக் கள்வன்.

    “என்னைப் பார்க்க பயமா?” செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாள், அவள். “நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?”

    “அடடா. உன்னைப் பார்த்துக் குருடன் கூட அப்படிச் சொல்ல மாட்டானே. அப்படியிருக்க நான் சொல்வேனா என்ன? உன் கரிய பெரிய விழிகளைப் பார்த்தால், என் வசமிழந்து நான் அவற்றில் தொலைந்து விடுவேனோ என்று அஞ்சித்தான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்றானே பார்க்க வேண்டும்! அவள் முகத்தில் பெருமை பிடிபடவில்லை!

    “அப்படியானால்… நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது?” என்று இன்னொருத்தி சிணுங்குகிறாள், இப்போது!

    “உன் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல்தானே திணறிக் கொண்டிருந்தேன்…”, என்கிறான் அந்த திருடன்!

    இது மட்டுமா? கோபியர்கள் யமுனையில் நீராடப் போகையில் கண்ணனும் பின்னாலேயே போகிறான்… அவர்கள் ஆடைகளை மெதுவாக எடுத்து ஒளித்து வைத்து விடுகிறான்! அவனுடைய புல்லாங்குழல் இசையில் மயங்கி அனைவரும் இன்புற்று கிறங்கிக் கிடக்கும் போது, கோபிகளின் பின்னல்களை ஒன்றோடொன்றாக முடிந்து வைத்து விடுகிறான்! புத்தம் புது ஆடைகளை அவர்கள் உடுத்தி வந்தால், அவற்றில் மண்ணை வாரி இறைக்கிறான்!

    வீடுகளில் சிரமப்பட்டு எடுத்து வைத்த வெண்ணை எல்லாவற்றையும், கூட்டாளிகளோடு களவாடித் தின்று விடுகிறான்! வெண்ணை, தயிர், மோர், என்று இதெல்லாம் உண்டது போறாதென்று, மண்ணை வேறு உண்டு வைக்கிறான்!

    ஆனால், அவன் என்ன செய்தாலும், அவனை யாராலும் கோபித்துக் கொள்ளவே முடியவில்லை! மேலும் மேலும் அன்பைத்தான் பொழிகிறார்கள். மாயக் கண்ணன் என்பது சரியாகத்தானே இருக்கிறது!

    ஆயர்பாடியினரின், கோபியரின், அன்பையும், பக்தியையும், பிரேமையையும், பார்த்துக் கொண்டே இருந்த பிராட்டிக்கு ஒரு ஆசை வந்து விட்டது! தானும் கண்ணன் மேல் உருகி உருகி பிரேமை கொள்ள வேண்டும், அன்பு செய்ய வேண்டும், பக்தி செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும், என்று!

    அதோ… விஷ்ணுவை மட்டுமே தன் சித்தத்தில் நிறுத்திய விஷ்ணு சித்தர், தன் நந்தவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். களை எடுத்து, வாடிய இலைகளையும், உதிர்ந்து விட்ட பூக்களையும் அப்புறப்படுத்துகிறார். மலர்ச் செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சுகிறார்…. துளசி, எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது. அதைப் பார்க்கும் போதே அவருக்கு அவன் நினைவு வந்து விடும், உருகி விடுவார்…அந்தத் துளசிச் செடியின் அருகில்… அது என்ன?

    வித விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பூந்தோட்டத்தில், சற்றே பெரியதொரு தாமரை மலர் போல, தன்னுடைய சின்னக் கைகளையும், தண்டைக் கால்களையும், உதைத்துக் கொண்டு, பொக்கை வாயைத் திறந்து’களுக்’கென்று சிரிக்கிறது, பேரழகான ஒரு பெண் குழந்தை!

    திருவாடிப் பூரத்து நாயகி, ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே, சரணம்!

     

    படத்திற்கு நன்றி: http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8&publish=3079

    Share
  • மூன்றெழுத்துக்களின் போர்

    க.பிரபு தமிழன்friendshipindex

    உரிமை
    நம்பிக்கை
    எதிர்பார்ப்பின்மை
    இன்ப துன்ப பகிர்வு
    தோளோடு தோள் ,,,,,, இவைகளனைத்தும்
    அக்கால நட்பின் அணிகலன்களாகும்
    அன்று மூவாயிரம் சொற்கோவைகள்
    கொண்டது நட்பெனும் மூன்றெழுத்துச் சொல்
    இன்றோ “பணம்” என்ற மூன்றெழுத்துச் சொல்லுக்கு
    அடிமையாயுள்ளதடா

    இன்பமோ துன்பமோ
    தோழமையின் பலமொன்றே அன்று
    இன்றோ இன்பத்தின் பலமே
    ஆதிக்கத்திலுள்ளது பணத்திற்காக

    அன்றோ அடேய்
    உன் வறுமையும் என் வறுமையே
    என்றான்
    இன்றோ,  தோழா வறுமையா உனக்கு
    நான் பின்வருகிறேன்………………..

    நட்பின் பொருளறியா மூடர்களே
    நட்புக்காக உயிர்துறந்தவரின்
    மரபில் வந்தவன் நான்
    உன்  பணத்திற்கு நான் அடிமையாக மாட்டேன்
    பணம் கொண்ட உயிருள்ள உன் நட்பைவிட
    பேசாத தனிமையின் நட்பே
    எனக்கு போதுமடா

    படத்திற்கு நன்றி

    http://www.tumblr.com/explore

    Share
  • பட்டமங்கலம்

     

    திருசிற்றம்பலம்

    பட்ட மங்கலம்

    ஓர் பாண்டிய நாட்டு திருவாசக தலம்

    pttmngklm2raja

    நூ.த.முத்துமுதலி மயிலை

    தி.ஆ.2044/விஜய ஆடி 12 ஞாயிறு

     

    தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பெருமறையாம் பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில் போற்றப்பட்ட 600க்கும் மேலுள்ள சிவவழிபாட்டிடங்கள் 1350 ஆண்டுகள் வரை பழமை உடையன எனும் மாண் பினால் இறை வழிபாட்டில் ஊக்கமுடையோர் வாழ்நாளில் ஒர் முறை சிலவற்றிற்காவது நேரடி வழிபடுதல் மரபெனக் கொண்டமை காண்கின்றோம். இக்கருத்தினிலேயே தென் இந்தியாவில் வாழ்வோர் வடகிழக்கு எல்லை இமயமலையில் உள்ள கயிலாயம் முதல் காசி போன்ற தலங்கள், ஈழத்திலுள்ள கேதீச்சரம் திரிகோணமலை எனும் தலங்களுக்கும் வடஇந்தியர் தென்கோடி இராமேசுவரம் வரை தீர்த்தங்கள் ஆட தெற்கே வருவதும் கண்கூடு.

    தேவாரப் பாடல் பெற்றத்தலங்களாவன திருநாவுக்கரசர், திஞானசம்பந்தர் சுந்தரர் எனும் மூவர்முதலிகளால் இயற்றப் பெற்று தே-வாரம் எனும் இனிமைமிகு பண்ணிசை அமைக்கப்படவை முதல் ஏழு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள 8274 பாடல்களில் குறைந்தது ஓர் பதிகமாவது பெற்றவை 276ஆகும். முழுபதிகம் ஏதும் கிடைக்கப் பெறாமல் இத்தேவாரப் பாடல்களின் ஊடே சிவனுறை கோயில் என குறிக்கப்படுவன, வைப்புத் தலங்கள் எனவும் அறியப்படுவன, 325 க்கும் மேலாகும் ஓர் வளர்தொடர் என ஆய்வாளர் வகுத்து வருவது

    தேவாரக் காலத்து அடுத்து 1150 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்று எட்டாம் திருமுறையாக வைக்கப் பட்டுள்ள மாணிக்கவாசகரின் திருவாசகம்/திருக்கோவையார், தேவாரம் குறித்த சிலவற்றுடன் காட்டாத சில தலஙகளை போற்றியது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கல்லாடம், கவைத்தலை, குவைப்பதி, கொடிமங்கை, கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்தூர், பட்டமங்கலம், பஞ்சப்பள்ளி, பாண்டூர், புன்னைத்துறை, பூந்துறை, பூவலம், பெருந்துறை, மணற்குன்று, வேலம்புத்தூர் என்பன அவை.

    நாம் இங்கு காணவந்தது இதனில் ஒன்று பட்டமங்கலம். திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் குறிக்கும் ஓர் தலம், பாண்டி நாட்டு பாடல்பெற்றத் தலமாம் திருப்பத்தூருக்கு தெற்கில் காளையார்கோயில் என இந்நாள் வழங்கப்படும் மற்றோர் பாடல்பெற்றத் தலமாம் கானப்பேருக்கு இடையே கற்சாலையில்5 மற்றும் 20 கி மீ தூரத்தே நல்ல பேருந்து தடத்தினில் இந்நாள் தட்சணாமூர்த்தி கோயில் என வியாழன் எனும் கோள்சிறப்பு வழிபாட்டுக் கோயிலாக அப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. தமிழக வைணவரின் பெருமறையாம் ஆழ்வார்கள் இயற்றிய 3892 பாசுரங்களிலுள்ள 108 இல்ஓர் திவ்யதேசமாம் திருக்கோட்டியூர் இதனுக்கு 5. கிமீ மேற்கே அமைந்துள்ளது.

     

    வடக்கு வாயில்

    pttmngklm1

     

    இந்நாள் புதுமையாக மிகமிக நேர்த்தியான கருங்கற்சிற்பங்கள் மிளிறும் நல்கற்றளியாக நாட்டுக்கோட்டை சமூகத்தினரால் கிழக்கு நோக்கிய 5 நிலை கோபுரத்துடன் காணப்பட்டாலும் முன் ஓர் பழமையான கோவில் ஆகும் எனலாம். இங்குள்ள ஏழேழ் விழுதுகள் கொண்ட தென்முகக் கடவுளாம் தட்சணாமூர்த்தி எங்கும் அமரும் ஓர்ஆலமரம் சிறப்பானதாக போற்றப்படுவதைக் காணலாம். அதான்று பெரியதான தெப்பக் குளமும் மேற்காக உள்ளது. மிகத்தூய்மையாக தனியாரர் மேற்பார்வையில் பேணப்படும் இக்கோயில் தமிழ்மக்கள் தம் வாழ்நாளில் தவறாமல் ஒர் நாள் சென்று வழிபட வேண்டிய ஒன்றே என்றால் மிகையாகாது.

    சிற்றூர் ஆனாலும் பல பேருந்து தடங்கள் திருப்பத்தூர், திருக்கோட்டியூர், கல்லல், ஆலங்குடி, என பல ஊர் களிலிருந்தும் செல்ல வாய்ப்புகள் மிகஎளிதாக உள்ளன. காரைக்குடி அருகுள்ள ரயிலடியாகும்.

     

    பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு

    அட்டமா சித்திகள் அருளிய அதுவும்

    திருவாசக கீர்த்தித் திருஅகவல் (வரி 62-63)

    தமிழகத்தே பட்டமங்கலம் என சில ஊர்ப் பெயர்கள் இருப்பதாக காணினும் இவற்றில் பாண்டிநாட்டில் அமைந்த மதுரைக்கு அருகு அமைந்த பட்டமங்கலமே பல திருவாசக வரிகள் காட்டும் திருவிளையாடல் தொடர்பினால் நன்கு பொருந்தும். மேலும் அருகுள்ள வாதவூரார் என வழங்கிய மாணிக்கவாசகரின் மதுரைப் பிணைப்பு நன்கே அறிந்த புராண வரலாறு. மணிவாசகரின் தொடர்புடைய மற்றொரு பெயர்பெற்ற தலம் ஆவுடையார்கோயில் என அறியப்படும் திருப்பெருந்துறையும் பாண்டிய நாட்டிலேயே அருகு அமைந்துள்ளது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கொடிமங்கை, என்பனவும் பாண்டிநாட்டில் அமைந்தவையே பல மதுரைத் திருவிளையாடல்கள் திருவாசக கீர்தித் திருவகவல் வரிகளிலேயே குறித்தல் காண்க.

     

    “பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு
    அட்ட மாசித்தி அருளிய அதுவும்” 8.2.62 – அட்டமா சித்திகள் செய்த படலம்

    “கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்” 8.2.17 – வலை வீசிய படலம்

    “பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்
    தூவண மேனி காட்டிய தொன்மையும்” 8.2.51 – மெய்காட்டிட்ட படலம்

    “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்” 8.2.36 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று” 8.2.392 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
    குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்” 8.2.45 – நரியைக் குதிரை ஆக்கிய படலம்

    பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்” 8.2.47 – பிட்டுக்கு மண்சுமந்த படலம்

    “தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 8.2.58 – தண்ணீர்பந்தல் வைத்த படலம்

    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்”
    “ஓரியூரில் உகந்(து) இனி(து) அருளி
    பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்” 8.2.68 – விருத்த குமார பாலனாகிய படலம்

     

     

    ஏழேழ்ழேழ் விழுது ஆல்

    pttmngklm2alam

    தெப்பக்குளம்

    theppakkulam

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (22)

    பவள சங்கரி

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!

    live-your-life

    அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊரின் மத்திய பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு புறம் சிரிப்பொலி அதிர்ந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக அங்கு கண்கள் சென்றபோது, ஒரு கூட்டமாக சில முதியவர்கள் அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பது போல கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைத்தனமான அந்த நடவடிக்கை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது அருகில் என்னைப் போலவே பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் அவர்கள் அருகில் சென்று அதே உற்சாகத்துடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலில் பெயரையும், ஊரையும் கேட்டவர், அடுத்தது வயதையும் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். உடனே அனைவரின் முகத்திலும் உற்சாகம் குறைந்ததோடு, லேசான கலக்கமும் தெரிந்தது. அதில் ஒருவர், கோபமாக ‘என்பது வயசு ஆவுது.. இப்ப என்ன அதுக்கு?’ என்றார். மிக யதார்த்தமாக, நட்புடன் கேட்ட கேள்வியாக இருப்பினும் அது அவர்களுடைய மகிழ்ச்சியை மொத்தமாய் சீர்குலைத்துவிட்டது. அனைவரும் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். சற்று நேரம் முன்பு அத்துனை கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்து, தங்களின் வயதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென்று அவர்களின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் ஆச்சரியம் ஊட்டக்கூடியது. சுயபச்சாதாபத்தில், வேதனையோடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நடையில் முன்பிருந்த உறுதியும் குறைந்திருந்தது. உலகில் பிறந்தவர் அனைவரும் இது போன்ற மாற்றங்களுக்கு ஒரு நாள் தயாராகத்தான் இருக்க வேண்டிவரும். ஒரு சிலர் அந்த முதுமையையே தங்களுக்குக் கிடைத்த மரியாதைக்குரிய காலமாகக் கருதி நிம்மதி கொள்பவரும் இருக்கின்றனர்.

    imagesஉண்மையிலேயே இது மிகவும் வேடிக்கையான விசயம்தான். நம்மில் பலர் நம் இளமைக் காலங்களில் வளர வேண்டி பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருந்துவிட்டு, முதுமைக் காலத்தில் இழந்த இளமையைத் தேடி வேதனைப்படுகிறோம். எந்த வயதாக இருந்தாலும் நாம் திருப்தியற்ற ஒரு வாழ்க்கையை வாழ முற்படுவதன் வினைதான் இது. எத்தனை கோடி செலவு செய்தாலும் இழந்த நம்முடைய இளமையையோ அல்லது வயது ஏறிக்கொண்டே போவதையோ நம்மால் ஒருக்காலும் தடை செய்ய இயலாது. சிலர் இதையறிந்தும் அதற்காகத் தேவையில்லாமல் பல வழிகளை முயற்சி செய்துவிட்டு இறுதியில் ஏமாற்றத்தில் மேலும் வேதனையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம். நம்முடைய ஆன்மாவின் தற்காலிக இருப்பிடமான நம் உடலை, அக்கறையுடன், கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை காரணம் அது இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசு அல்லவா! ஆம், நாம் ஒரு உடலுக்குள் நுழைந்து நம்முடைய மனித வாழ்க்கையை வாழ்கிறோம். அது முடியும் தருணம் வந்தவுடன் அந்த உடலை விட்டு வெளியே வந்துவிடுகிறோம். இந்த இடத்தில் ‘நான்’ என்பது அந்த உடல் அல்ல. எதை நம்மால் எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது தவிர்க்கவோ இயலாதோ அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதே நிம்மதிக்கான சிறந்த வழி அல்லவா? அப்படி ஏற்றுக்கொள்ளும்போதுதான் நம் உடலுக்கேற்ற, வயதுக்கேற்ற உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு என அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் உற்சாகமாக வளைய வர முடியும். நம் எண்ணங்களின் சக்தியே நம் வயதை வெளிப்படுத்துகிறது. எந்த நொடியில் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்பட ஆரம்பிக்கிறோமோ அந்த நொடியிலிருந்துதான் முதுமை நம்மை நெருங்க ஆரம்பிக்கிறது. தவிர்க்க முடியாத அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதே அதனிலிருந்து விடுபட சிறந்த வழி. சோம்பலாக முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனுக்கும், தன்னுடைய முதுமையிலும் ஏதேனும் சாதிக்கத் துடிக்கும் அந்த உற்சாகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இந்த இடத்தில் அந்த இளைஞனைக்காட்டிலும், அந்த முதியவரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவராக இருப்பார் என்பதே சத்தியம்!  அந்த வகையில் அவரவர் எண்ணங்களே தங்களின் வயதை நிர்ணயிக்கிறது என்பதே நிதர்சனம்.

    கழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்!

    http://www.slideshare.net/ardraja/rebirth-of-the-eagle-presentation

    பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் கழுகின் மறு பிறவி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 70 ஆண்டுகள்வரை வாழக்கூடியது கழுகு. ஆனால் தன்னுடைய 40வது வயதில் அதற்கு முதுமைக் கோலம் வந்துவிடுகிறது. அதாவது தன் உணவைக் கொத்தித் தின்னும் அலகின் கூர்மையையும், கால் நகங்களின் மூலம் தன் உணவைக் கவ்வி எடுக்கும் சக்தியையும் மற்றும் கனத்துப்போய் தன் மார்போடு ஒட்டிக்கொள்ளும் சிறகுகளால் பறக்கும் வல்லமையையும் இழக்கிறது. இந்த நேரத்தில் அந்தக் கழுகு வாழ்வா அல்லது சாவா என்ற ஒரு கட்டாய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியே விட்டுவிட்டால் உணவின்றி இறந்து போக வேண்டியதுதான். ஆனால் கழுகுகள் தாம் எடுக்கும் துணிச்சலான முடிவினால் மறு பிறவி எடுத்து மீண்டும் 30 ஆண்டுகள் வாழுகின்றன. 40 வயதைக் கடந்தவுடன் அது மலை உச்சியில் உள்ள தன் கூட்டிற்குச் செல்கிறது. அன்றிலிருந்து 5 மாதங்கள் போராட்டமான வாழ்க்கைதான் அதற்கு. ஆம், முதலில் ஒரு பாறையின்மீது அமர்ந்து தன்னால் ஆனமட்டும் அந்த அலகு தேய்ந்து அறுந்து உதிரும்வரை அந்தப் பாறையில் உராயும். பிறகு அந்த அலகு புதிதாய் முளைக்கக் காத்திருக்கும். புதிய கூரிய அலகு முளைத்தவுடன், வலுவிழந்த தன் கால் நகங்களை பிய்த்து எரிந்துவிடும். புதிய நகங்கள் முளைக்கும் வரை காத்திருந்து, முளைத்தவுடன், பின் கனத்துப்போன தன் சிறகுகளை உதிர்த்துவிடும். அடுத்து புத்தம் புதிய சிறகுகளும் முளைக்க அன்றிலிருந்து புது பிறவி எடுக்கும் அந்த கழுகு மேலும் 30 ஆண்டுகள் சுகமாக இளமையுடன் வாழும்!

    முதுமையை விரட்ட நமக்கும் இப்படி சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு மாற்றுத்திட்டம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் கழுகின் நைந்துபோன சிறகுகளைப் போன்ற நம்முடைய பழைய நினைவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் பழைய மரபுகள் என அனைத்தையும் உதிர்த்துவிடத்தான் வேண்டும். பழஞ்சுமைகளிலிருந்து விடுபட்டால்தான் , நிகழ்காலத்தின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்!

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி :

    http://www.google.co.in/imgres?imgurl=http://rishikajain.com/wp-content/uploads/2012/09/live-your-life.jpg&imgrefurl=http://rishikajain.com/2012/09/10/live-your-life-and-forget-your-age/&h=338&w=510&sz=22&tbnid=Uvb-MclZ5m6C8M:&tbnh=83&tbnw=125&zoom=1&usg=__-KzbLUfXpOoogPFogBVgnP6bp-k=&docid=E9U2febtOrX48M&sa=X&ei=rN0DUtucIMn4rQfGl4C4BQ&ved=0CDUQ9QEwAQ&dur=114

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (69)

     

    -சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களோடு இணைகிறேன்.

    அரசியல் எனும் அஸ்திரம் பொதுநலத்திற்காகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். ஆனால் அதே அரசியல் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கைப் பலப்படுத்தும் ஆயுதமாகப் பாவிக்கப்படும் போது ஏற்படும் தாக்கங்கள் மிகவும் சிந்திக்கப்பட வேண்டியவை.

    இங்கிலாந்தைப் பொறுத்தவரை யார் விரும்பினாலோ , விரும்பாமல் விட்டாலோ இங்கு பல்கலாசார அடிப்படையே சமூகங்களில் நிலவுகிறது.

    அதிகமான எண்ணிக்கை வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து கிளம்பினாலும் இந்நாடு பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் இணைந்து வாழும் நாடு என்பது அனைவராலும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

    இங்கிலாந்தின் கூட்டரசாங்கம் இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கையைச் சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் பலமாக செல்வாக்கை இழந்து கொண்டு வந்தது.

    பொருளாதாரக் கொள்கையின் வெற்றியின் அடிப்படையில் தமது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியாது தவித்தன இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கன்சர்ட்வேடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும்.

    இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு ஒரேவழியாக வெளிநாட்டுக்காரரின் குடியேற்றம் அதாவது immigration ஒரு பெரிய பிரச்சனையாக்கப்பட்டது.

    இதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஜரோப்பிய யூனியன் நாடுகளின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்பட்டு முன்னைய கம்யூனிசக் கூட்டமைப்பில் இருந்த கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் பல இவ்வொன்றியத்தில் இணைந்ததால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இலகுவாக இங்கிலாந்துக்குள் நுழைந்து இந்நாட்டின் சமூக நலனின் அடைப்படையில் இவ்வரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது.

    இதனால் இக்கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்கள். இவர்கள் தமது வேலைகளைப் பறித்துக் கொள்வதான உணர்ச்சி இங்கிலாந்து நாட்டின் மக்கள் மனதில் எண்ணம் மேலோங்கியது இதனால் இவ்வெளிநாட்டுக் காரரின் வருகையையும், ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்தின் அங்கத்துவமும் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டது.

    இக்கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கடையத் தொடங்கியது.

    இக்கட்சிகளின் செல்வாக்கின் முன்னேற்றத்தைக் கண்ணுற்ற கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்சியில் தாம் எங்கே அடுத்த தேர்தலில் தோற்று விடுவோமோ எனும் பயம் ஏற்பட்டது.

    விளைவு,

    மக்கள் மத்தியில் தாம் வெளிநாட்டுமக்களின் குடியேற்றக் கொள்கையில் மிகவும் கடினமானவர்கள் எனும் தோற்றத்தைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

    அதன் நிமித்தம் சமீபத்தில் அவர்கள் எடுத்த ஓர் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    அது என்ன என்கிறீர்களா?

    எந்தெந்த நகர்களில் வெளிநாட்டு மக்களின் குடியேற்றம் அதிகளவில் காணப்படுகிறதோ அந்த இடத்தில் ஓர் வாகனத்தில் கட்ட வலம் வரச் செய்யப்பட்ட ஒரு விளம்பரப் பலகையே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    ஆமாம் அவ்விளம்பரத்தில், “நீங்கள் இந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறீர்களா? நீங்களாகவே எம்மைத் தொடர்பு கொண்டால் நாம் உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல ஆவன செய்வோம், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள். ஏற்கனவே உங்கள் இடத்தில் பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டவிரோதமாக வசிப்பவர்கள் இந்த நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்” எனும் விளம்பரப் பலகையத் தாங்கிய வாகனம் வலம் வருவதே சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ளது.

    இதற்கான எதிர்ப்பலைகளின் விரிவாக்கத்தை அடுத்த வார மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • புதிய குறட்பாக்கள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    அண்ணலார் காந்தி அறவழிக் கொள்கை
    அகிம்சையைப் போற்றி நட.

    ஆய்ந்தறி யாமல் பழகும்தீ நட்பதனால்
    ஓயாத தொல்லை வரும்.

    இளமையில் கற்றிடும் நற்பண் பதுவே
    வளமான வாழ்வைத் தரும்.

    ஈட்டும் பொருளில் ஒருசிறி தாவது
    நாட்டின் நலத்திற்கே நல்கு.

    உழைப்பினை மூல தனமெனக் கொண்டால்
    தழைக்கும் தமிழர் குடி.

    ஊனம் ஒருவர் குறையன்றே அஃதறிந்(து)
    ஊக்கம் அளித்தல் கடன்.

    எண்ணம் உயர்வாக என்றும் இருந்திட்டால்
    திண்ணமாய் வெற்றி வரும்.

    ஏற்றத்தை எந்நாளும் வாழ்வினிலே பெற்றிடவே
    போற்றிடுக கல்வி தனை.

    ஐயம் அகற்றிடு ஆற்றல் பெருக்கிடு
    வையகம் வாழ்த்தும் உனை.

    ஒற்றுமை என்றும் பலமாம் அதனையே
    கற்கநல் கொள்கையா இன்று.

    ஓயா துரைக்கின்ற பொய்ம்மையைப் போக்கியே
    வாய்மையால் வென்றிடு வோம்.

    ஔவியம் பேசாமல் அன்போடு வாழ்ந்திடுநீ
    ஔவைதான் சொன்ன படி.

    Share
  • வேண்டும்! வேண்டும்!

     

    -சு.கோபாலன்

     
    மனித வாழ்வின் அல்லல்களை, தொல்லைகளைக் கண்டு மனம் நொந்து
    இனிய இயற்கையின் ஒரு அங்கமாகவே மாறி வாழ்ந்தால் எப்படியிருக்குமென
    கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விட்டேன் எண்ணிப் பார்த்திட
    உற்பத்தி ஆனது ஒரு பெரிய வேண்டுகோள் பட்டியல் ஆண்டவனுக்கு அளித்திட!

     

    மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
    தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
    பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
    காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

    மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
    மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
    வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
    உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

    மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
    ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
    குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
    துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

    கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
    வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
    சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
    அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

    பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
    காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
    தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
    பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

    மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
    நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
    அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
    மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

    பச்சைக் கம்பளம் போர்த்திய வயலில் ஒரு நெல் பயிராக வேண்டும்
    இச்சைப்படி காற்றுடன் இசைந்து தலை அசைக்க வேண்டும்
    விண்வெளியில் கண் சிமிட்டும் தாரகையாய் ஜொலிக்க வேண்டும்
    கண்குளிர வண்ண ஓவியமாய் காட்சி தரும் வானவில்லாக வேண்டும்

    இயற்கையோடு ஒன்றி வாழ்வதை கற்பனை செய்தாலே கரும்பாய் இனிக்கிறதே!

     

    Share
  • குறவன் பாட்டு – 5

    சச்சிதானந்தம்
    
    காட்டுப் பன்றிகளும் முரட்டுக் குறவனும்

     

    கால்கள் சிறுத்து முகமது நீண்ட,

    காட்டுப் பன்றிக் கூட்டம் ஓன்று,

    சுத்தியில் தலையின் வடிவுடை மூக்கால்,

    குத்திப் பெயர்த்தன நிலத்தடிக் கிழங்கை!                                                                                                39

     

    பூண்டும் புழுவும் வேரும் கிழங்கும்,

    கூம்பிய முகம்கொண்ட பன்றியின் உணவுகள்!

    தோண்டும் நிலத்தைக் கூம்பிய மூக்கால்,

    வேண்டும் உணவை நுகரும் வரை!                                                                                                            40

     

    கறுநொச்சி இலைபோல உடல் எங்கும்,

    வரிகொண்ட புலி ஓன்று பதுங்கி,

    கறுத்தி ருக்கும் உடல் கொண்ட,

    காட்டுப் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தது!                                                                                                   41

     

    காத்துத் தன்னுயிர் ஓம்பிக் கொள்ள

    காக்கும் கடவுளை மனதில் வேண்டி,

    காற்றில் வாலைக் கொடிபோல் உயர்த்தி

    காட்டுப் பன்றிகள் ஓட்டம் பிடித்தன!                                                                                                       42

     

    புலியைத் தொடர்ந்து பூனை போல,

    ஒலி செய்யாமல் நடந்த குறவனின்,

    வலிமை மிகுந்த கைகளில் சிக்கி,

    உயிரை இழந்தது பன்றி யொன்று!                                                                                                           43

     

    கட்டுச் சேவலின் கணுக்கால் போன்ற,

    முரட்டு விரல்களில் இறுக்கிப் பிடித்து,

    முட்டப் பாய்ந்த காட்டுப் பன்றியின்,

    மூர்க்கக் கொம்பை முறித்து எடுத்தான்!                                                                                                44

    
    
    Share
  • வாழ்க்கை நலம் – 21

    குன்றக்குடி அடிகள்

    21.  அடக்கமுடைமை ஆக்கம் தரும்

    மனித வாழ்க்கைக்குச் சிறந்த அடக்கம் தேவை. பழங்காலத்தில் அடக்கம் என்ற ஒரே சொல் பல ஒழுகலாறுகளையும் வற்புறுத்தியது. இன்று அடக்கம் என்ற பண்பு விரிந்து தனித்தனியே குறியிட்டுச் சொல்கிற வகையில் அமைந்துள்ளது. பொதுவாக மற்றவர்களிடம் அகந்தையின்றி அடக்கமுடையவராக நடந்து கொள்ளும் பண்பு. ‘பணிவு’ என்ற பிறிதொரு சொல்லால் உணர்த்தப்படுகிறது. திருக்குறள்படி பணிவுடமையும் அடக்கமுடைமையிலேயே அடங்கியிருக்கிறது. அடுத்துத் தன்னடக்கம், நாவடக்கம், பொறிகள் அடக்கம், புலனடக்கம் என்றெல்லாம் சொல்லப் பெறுகின்றன.

    மனிதன் அடைந்து ஒழுக வேண்டிய நற்பண்புகள் பலப்பல. அவற்றுள் தலையாயது தன்னல மறுப்பு. நீதியின்பால் வேட்கை, ஈகைக்குணம், அன்புடைமை இவையெல்லாம் சிறந்தனவாயினும் தன்னடக்கமில்லாது போனால், இந்தப் பண்புகள் சிறக்கா. ஆதலால் ஒழுக்கங்களுள் சிறந்தது, தலையாயது தன்னடக்கம். கிரேக்கச் சிந்தனையாளன் சாக்ரட்டீஸ் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முதல்நிலைப் பண்புகளாகத் தன்னடக்கத்தையும் புலனடக்கத்தையும் கூறினான்.

    தன்னடக்கம் என்ற சிறந்த பண்பினைப் பெற வேண்டுமாயின் மற்றவர்களிடம் குறை காணும் தீமை அறவே கூடாது. ஒரோ வழி குறை கண்டாலும் அதை இரகசியமாகக் கொண்டு பிறரிடம் கூறக்கூடாது. வீணான விவாதங்கள் அறவே கூடாது. கட்சி –  பிரதி கட்சிச் சுழியில் சிக்கித் தவிக்காமல் என்றும் எப்பொழுதும் பொதுநிலை வகிக்க வேண்டும். தன்னைப் பற்றிய உயர்வு நினைவுகளை விட்டொழித்து விட்டால் அடக்கப்பண்பு வந்து விடும்.

    பொதுவாகத் திருக்குறள் அடக்கமுடைமையையும் அதன் பயனையும் முதல் நான்கு குறள்களில் வகுத்து கூறுகின்றது. அடுத்து மற்றவர்களிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய பண்பை எடுத்துக் கூறுகிறது. செல்வமுடைமை அகந்தையை வளர்க்கும்.  ஆதலால், செல்வம் உடையார் பணிவுடையாராகவும் இருப்பின் இரண்டு மடங்கு செல்வம் பெற்றது போன்றது என்பது திருக்குறள் கருத்து.

    அடுத்து, ஐம்பொறிகள், ஐம்புலன்களின் அடக்கத்தை எடுத்துக் கூறுகிறது. அடக்கமுடைமை என்ற பண்பின் தோற்றதிற்குரிய ஒழுகலாற்றை எடுத்துக் காட்டுகிறது, புலன்கள், ஆசைகள் தோன்றும் களம்.  ஆசைகள் தோன்றி வளர்ந்தால் அடக்கமுடைமையைப் பெறுதல் இயலாது. புலன்களில் ஆசைகள் தலைப்படின் அந்த ஆசைகளை அடையப் பொறிகளை இயக்கம் ஆன்மா, அப்போது பொறிகள் மதம் பிடித்தக் களிறுகளைப்போல் கட்டுப்பாடின்றிச் செயற்படும். இது தவறு. பெரும்பாலும் இச்சை, பொறி வாயிலாகச் செய்திகளாக, பொருள்களாகப் புலன்களுக்குச் செல்லும். புலன்கள், தாம் பொறி வாயிலாகப் பெற்ற செய்திகளை, பொருள்களை இச்சையாக மாற்றி மீண்டும் பொறிகளைத் தூண்டும் அவற்றை அடைந்து அனுபவிப்பதற்காக! ஆதலால், பொறிகளை கண்டபடி சுற்றவிடாமல் பாதுகாத்தல் பொறியடக்கம் புலனடக்கம் இரண்டும் ஒருங்கே வந்தணையும். இந்த உயரிய ஒழுகலாறு அமைய வேண்டுமானால் அழகுடையான எல்லாம் ஆராதனைக்கே உரியன, அனுபவிப்பதற்கு அல்ல என்ற கருத்தும் நல்லனவெல்லாம் மற்றவர்களுக்கே என்ற எண்ணமும் தோன்றிடின் பொறியடக்கம் தானே வந்தமையும்; புலனடக்கமும் வந்தமையும். பொறிகள் அடக்கதிற்குத் திருக்குறள் அற்புதமான ஓர் ஆலோசனை கூறுகிறது. ஆமையை உதாரணமாக வைத்துக் கூறுகிறது.

    ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம். கேள்விகளை கேட்டு அனுபவிக்கலாம், சுவையானவைகளை உண்டு அனுபவிக்கலாம். நம்முடைய ஆன்ம நலனுக்குப் பயன் தராத செய்திகளில் நம்முடைய பொறிகளை ஈடுபட அனுமதிக்காமல் இழுத்து அப்புறப்படுத்தி விடவேண்டும்.  ஆமையின் பொறிகளைப் போல் மனிதனின் பொறிகள் ஒடுக்ககூடியான அல்ல. பின் என்ன செய்யலாம்? நமது பொறிகளுக்கு நாமே நலம் பயக்கக்கூடிய அனுபவங்களைப் படைத்துக் கொடுக்க வேணும்.

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப்பு  உடைத்து.
    குறள் – 126

    அடுத்து நாவடக்கம் பற்றியும் மூன்று குறள்களில் பேசுகிறது.  தீய சொற்களை அறவே விலக்கும்படி திருக்குறள் ஆணையிடுகிறது. இத்தகு அடக்கமுடைமையைச் சார்ந்த பண்புகள் வாழ்க்கையில் தங்கினால் வாழ்வு அறவாழ்வாக வளரும்.

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share