Blog

  • கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில்

    கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில்

    கோவையின் புகழ்பெற்ற ரேஸ்கோர்ஸ் சாலையில் இரவு நேரத்தில் எங்கள் நடைப்பயிற்சி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நல்ல கீரை எப்படி இருக்கும்? – கீரை வணிகர் பாலகிருஷ்ணன் நேர்காணல்

    நல்ல கீரை எப்படி இருக்கும்? – கீரை வணிகர் பாலகிருஷ்ணன் நேர்காணல்

    ‘கீரேஏஏஏஏய்’ என உரத்த குரல் முதலில் கேட்கும். இருசக்கர வாகனத்தில் அவர் வருவார். அவர் பெயர் பாலகிருஷ்ணன். தாம்பரம் வீதிகளில் தினந்தோறும் இவரைப் பார்க்கலாம். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி, பாலக் கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக் கீரை, பருப்புக் கீரை, பசலைக் கீரை, புளிச்ச கீரை, தூதுவளை, வல்லாரை, முடக்கத்தான் உள்ளிட்ட கீரைகளை இவரிடம் வாங்கலாம். நல்ல கீரை எப்படி இருக்கும்? எந்தப் பருவத்தில், யார் யார் எந்தெந்தக் கீரைகளை உண்ணலாம்? கீரை உண்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? அவரது பதில்களைப் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 47

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமச் சிகரம் சுரதா! 

    முன்னுரை

    உலகவழக்கில் பாக்கியலட்சுமியைப் ‘பாக்கி’ என்றும்  வெங்கடேசனை ‘வெங்கு’ என்றும் அழைப்பதுண்டு. ‘சுப்புரத்தினதாசன்’ என்னும் நீண்ட பெயரை எழுதுவதற்கு அஞ்சலட்டையில் இடமில்லாத காரணத்தால் ‘சுப்பு – ரத்தின – தாசன்’ என்னும் தனது புனைபெயரையே சுருக்கெழுத்துப்போல் ‘சுரதா’ எனச் சுருக்கிக் கொண்டார். ‘வேண்டாத ஆணிகள்’ என்ற தொடரை நமது நகைச்சுவைக் கலைஞர் திரு. வடிவேல் அவர்கள் சொல்லித்தான் பலருக்கும் தெரியும். உண்மையில் அந்தத் தொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர் மேற்கண்ட நேர்வில் உவமைக் கவிஞர் சுரதாவே. கவிதை பற்றியும் கவிஞராவது பற்றியும் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கும் நம்பிக்கைகளோடு முரண்படுவார் அவர். கவிதையைக் கணிதமாகவே கருத வேண்டும் என்பர். கவிஞராவது பயிற்சியினால் உருவாவது என்னும் கருத்தியல் நிலைப்பாட்டாளர் அத்தகைய சிந்தனையாளர்தம் கவிதைகளில் பயின்றுள்ள சில அசாதாரணமான உவமங்களை ஆராய்வதாக  இக்கட்டுரை அமைகிறது.

    சுரதா உவமங்கள் ஒரு பருந்துப் பார்வை

    “உழைகுலாம் நயனத்தார் மாட்டு ஒன்றொன்று விரும்பற் கொத்த  அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்?” என்று கம்பராமாயணத்தில் ஒரு தொடர் உண்டு. சுரதாவின் கவிதை உவமங்களுக்கு இது அப்படியே பொருந்தும். பாடுபொருளைப் பற்றிய சிந்தனைகளைப் புதுமையாகவே அமைத்துக் கொள்வதும் பொருட்களைக் கவிதையாகவே நோக்குவதுமே இதற்குக் காரணம். பொருத்தமான ஆழமான அழகியல் சார்ந்த உவமங்கள் அவர்தம் கவிதைப் படைப்புக்களில் அமர்வதற்கு இதுதான் காரணம். அல்லி நிலவு கண்டும் தாமரை கதிரவன் கண்டும் மலர்கிறபோது வானத்து மின்னலுக்கு ஏதாவது மலராமலா இருக்கும்? என்ற சிந்தனையின் விளைவாகத்தான் ‘சுடர் மின்னற் கண்டுதாழை மலர்வதுபோலே உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே’ எனவும் ‘அகிலம் யாவும் அழகின் வேலை! நீல ஆகாயம் செங்கதிர் செல்லும் சாலை!’ எனவும் அவரால் எழுத முடிந்ததற்கு விரிந்த வான் நிகழ்வுகள் மேல் அவர் செலுத்திய நுண்ணோக்கே காரணம். பழந்தமிழ் இலக்கியப் பதிவுகள், இலக்கண நுட்பங்கள், இயற்கைக் காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், சான்றோர் மொழிகள் என அனைத்திலும் அவருடைய இந்த நுண்ணோக்கு தனித்த ஆதிக்கம் செலுத்தியது. செலுத்தவே பொருண்மை விளக்கத்திற்கான உவமங்களும் புதிதாய் அவருக்குத் தோன்றியன. ‘அந்தக் காலத்து அரசன் பற்பலப் பெண்களைத் தழுவி மகிழ்ந்தாற்போல் வளைந்தும் நெளிந்தும் வருகின்ற பற்பல நதிகளைப் புணரும் தண்ணீர் நாயகன்’ என்று கடலை அக்கால மன்னர்களோடு ஒப்பிட்டுப் பாடுவதற்கு இந்த நுண்ணோக்கே காரணம்.

    நால்வரும் இவரும்

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களில் மக்களைப் பாதித்தவர் நால்வர். மகாகவி, பாவேந்தர், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர்களுடைய பாடல்கள் நிரல்நிரையாக விடுதலைப் போராட்டம் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை தமிழ்ச் சமுதாயத்தைப் பாதித்தே வந்திருக்கின்றன. அப்பாதிப்பு இன்றும் தொடர்கிறது. சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார் என்பது அவர்தம் கவிதைகளால் அறியப்படும்  ஆய்வுண்மையாகும். ஒட்டுமொத்த இந்தியாவின் சிக்கலைப் பாரதி பாடுபொருளாக்கியதுபோலவோ தமிழ் மொழி, இன, நாடு என்னும் இவற்றை இவற்றின் சுணக்கத்தைப் போக்கி எழுச்சியடையச் செய்ய வேண்டும் என்பனவற்றைப் பாரதிதாசன் பாடுபொருளாக்கியது போலவோ சுரதாவின் பாடல்களில் காண்பது அரிதாக இருக்கிறது. தனிமனித உளவியல் சிக்கல்கள் கண்ணதாசனின் பாடுபொருளாயின. உழைக்கும் வர்க்கத்தினரின் சிக்கல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடுபொருட்களாயின. இந்த நான்கு கவிஞர்களிடமிருந்தும் சுரதா வேறுபடுவதாகவே தெரிகிறது. சுருங்கச் சொன்னால் கவிதை கவிஞனுக்கானது என்பதுதான் சுரதாவின் ஒருவரிப் படைப்புக் கொள்கையாக அமைந்திருக்கிறது. அவருடைய கவிதைகளில் ஆண்மையின் வீரியத்தைவிடப் பெண்மையின் நளினமே தூக்கலாக இருக்கிறது. அதேபோல், உரைநடையைப் பற்றிக் கூறும்போது, ‘‘உரைநடை – பசிக்குச் சோறு’’ என்று பதிலளித்தாராம். இதனால் கவிதையை அவர் விருந்தாகத்தான் கருதியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.    சமுதாயச் சிக்கல்கள் பெரிதும் பாதிக்காத கவிஞராகவே சுரதா இருந்திருக்கிறார். இது அவர்தம் ஒட்டுமொத்த கவிதைகளை ஆராய்ந்தவழி அறியப்படும் ஆய்வுண்மையாகும்.

    உவமமாகும் இலக்கணக் குறியீடுகள்

    வேறுபட்ட புதுமையான உவமங்களைக் கூறுவதில் சுரதா வல்லாளர் என்பது உண்மையே. இருப்பினும் இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்திய நுண்ணியமே அந்தப் பெருமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இலக்கணக் குறியீடுகளின் உயிர்ப்புத் தன்மையை உள்ளத்தில் வாங்கி உட்கொண்டு, அதனை மாறுபட்ட கோணத்தில் உவமமாகக் கையாள்கிற கவிதைத் தொழில்நுட்பம் பெரும்பாலும் சுரதாவிடம் தொடங்கிச் சுரதாவிடமே நிறைவடைந்து விடுகிறது. அதற்குப் பின்னாலே வந்தவர்கள் ஏதோ பயன்படுத்தினார்கள். அவை வெற்றிபெறவில்லை. காரணம் இலக்கண உறவின்மை. இலக்கணப் புலமை என்பது வேறு. இலக்கணத்தைக் கவியுள்ளத்தோடு நோக்குவது என்பது வேறு. அந்த உள்ளத்தைச் சுரதா பயிற்சியினால் பெற்றிருந்தார்.

    மணமக்களை இரட்டைக் கிளவியாக்கியவர்

    பொதுவாகத் திருமண வாழ்த்துரை என்பது சடங்காக முடியும் ஒரு நிகழ்வு. மலரும் மணமும் போல, வீணையும் நாதமும் போல, அன்றில் பறவை போல’ என்றவாறே வாழ்த்துக்கள் அமைந்த காலம் அது. ஒரு திருமண விழாவில் மணமக்களை ‘இரட்டைக் கிளவிபோல்’ வாழுங்கள் என்று வாழத்தினார் சுரதா. இரண்டாகவே அமையும் என்பதும் பிரித்தால் பொருள் தராது என்பதும் இலக்கண உண்மை. கணவன்-மனைவி இருவராகவே வாழ்தல் வேண்டும் என்பதும் பிரிந்தால் இல்லறம் கடைபோகாது என்பதும் வாழ்வியல் நுண்ணியம். இந்த வாழ்வியல் நுண்ணியத்தை ஒரு இலக்கணக் குறியீட்டில் கண்டறிகிற திறன் அவருக்கு மட்டுமே இருந்தது. மணமக்களுக்கு இரட்டைக் கிளவியை உவமமாக்கியதில் சுரதாவின் தமிழ்ப்பண்பாடு பற்றிய கருத்தும் பார்வையும் மற்றொரு நுண்ணியமாக அமைந்திருக்கிறது. அது என்ன? தமிழ்ப் பண்பாட்டியலில் களவு மணம் என்பது விதிவசமானது. விதிக்கப்படுவது விதி. அதாவது இயற்கை. இதனை ‘ஊழ்’ என்பார் திருவள்ளுவர். ‘ஊழ்’ என்பதற்குச் சொற்பொருள் விரித்த பரிமேலழகர்,  ஊழ், பால், முறை, உண்மை, வைப்பு, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி என்கிறார். ‘பாலது ஆணையின்’ என்பது தொல்காப்பியம்! இறையனார் அகப்பொருள் களவியலின் சாரமும் இதுவே. இன்றைக்கும் தமிழகச் சிற்றூர்களில் பெண்பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் சொல்கிற சொலவடை ‘இனிமேலா உனக்கு ஒருவன் பிறக்கப் போகிறான்?’ என்பதுதான். ‘ஏற்கனவே பிறந்திருக்கிறான்’ என்பது பொருள். எனவே தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது இயற்கை நெறிக்குட்பட்டது. அதனை விதியென்றும் சொல்லலாம். அதாவது இயற்கையாகவே நிகழ்கின்ற நிகழ்வு. ‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’ என்பதனால் அது பிறக்கிறபோது இரட்டையாகத்தான் பிறக்கும் என்பது பெறப்படும், படவே மணமக்களின் பிறப்பும் மணமும் ஒன்றை மற்றொன்று நோக்கியது என்பதும் புலப்படும். ‘இறைவன் உறுதி செய்ததை மனிதர்கள் பிரிக்காதிருக்கட்டும்’ என்னும் விவிலியத்தின் சாரமும் இதுவே. மணமக்கள் இரட்டைக் கிளவிபோல் வாழ்க என்றால் தோற்றம், வாழ்வு, நிறைவு என எல்லாத் திறங்களிலும் ஒற்றுமையாக வாழ்க என்பது பொருள்.

    உயிர்ப்புணர்ச்சியும் உடம்படு மெய்யும்

    தமிழ்ப் புணர்ச்சியிலக்கணத்தில் அமைந்துள்ள நுண்ணியங்களில் ‘உடம்படுமெய்’ என்பது தனித்துவம் மிக்கது. மெய்யோடு உயிர் சேர்தல் என்பது இயல்பு. மெய்யோடு மெய் சேராது, இணையாது. அப்படிச் சேர்ந்தால் அதற்கு மெய்ம்மயக்கம் என்று பெயர். அதனைப் போன்றே உயிரோடு உயிர் இணையாது. சில நேர்வுகளில் அவ்வாறு இணையும். இரண்டு உயிர்கள் இணையும் போது அவற்றை இணைக்கும் பற்றாசிட்டாகப் பயன்படுவது மெய். அதற்குத்தான் ‘உடம்படு மெய்’ என்று பெயர். உலகத்தில் உயிரால்தான் மெய்க்குப் பெருமை. தமிழிலக்கணத்தில் மெய்யால்தான் உயிருக்கு வாழ்வு! மெய்தான் இரண்டு உயிர்களையே இணைக்கிறது! இந்த இலக்கணப் பின்புலத்தில் சில செய்திகளைக் காணலாம்.

    சிலப்பதிகாரம் காட்டும் புணர்ச்சி

    சிலப்பதிகாரத்தில் ஆர்வம் காட்டப்படாத பகுதிகள் எனச் சில உண்டு. அவற்றுள் கண்ணகி கோவலன் இல்லறம் பற்றியது. கண்ணகியின் இல்லறம் பற்றி அடிகள் முழுமையாகக் கூறவில்லை என்பாரும் கண்ணகியைவிட மாதவி கோவலனுக்குப் பொருத்தமானவள் எனப் புகார்நகரத்தில் மாதவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் அப்போது வாழ்ந்தவர் போலவும் இங்கே கதை விடுவார் பலர். அடிகள் எழுதுகிறார்,

    “வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
    கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்,
    தாரும் மாலையும் மயங்கிக், கையற்று”

    என்று. இது கதைப்போக்கில் கண்ணகியும் கோவலனும் முதல் நாள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு. மனையறம்படுத்த காதையின் இறுதியில் ஆசிரியர் இளங்கோவடிகள் தன் கூற்றாகக் கூறுகிறார்.

    “தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
    காமர் மனைவி எனக் கைகலந்து, நாமம்
    தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
    நிலையாமை கண்டவர் போல் நின்று!”

    சிற்றூர்களில் பல நேர்வுகளில் பாம்புப் புணர்ச்சியைக் காணலாம்.  நாகமும் சாரையும் என்பார்கள். உண்மையில் நாகமும் நாகமுமே புணரும். அவ்வாறு புணருங்கால் இரண்டு பாம்புகளின் வால்களின் நுனி மட்டுமே தரையில் நிற்கும். மற்ற பகுதிகள் உச்சித் தலைவரை இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்கும். ஆடாது, அசையாது. பிறகு ஒன்றினை ஒன்று தழுவிக்கொண்டு தரையில் புரண்டு விளையாடும். அப்போதும் உடல் பிரியாது. கண்ணகியையும் கோவலனையும் மன்மதனோடும் ரதியோடும்   உயர்திணையில் இணைத்துக் கூறிப் புணர்ச்சியைப் பாம்புகள் மேல்வைத்துக் கூறிப் பண்பாடு காத்தவர் அடிகள்.

    சுரதாவின் கவிதையில் இலக்கணப் புணர்ச்சி

    பாவேந்தர் இந்த இல்லறப் புணர்ச்சியைத் தமிழ்நாட்டுப் பெண்களின் நாட்கடமையில் வைத்துக் கூறியிருக்கிறார். பாவேந்தர் எழுதிய குடும்ப விளக்கு ஒரு நாள் நிகழ்ச்சி படுக்கையறையில் நிறைவு பெறுகிறது.

    “சொல்லரிதாய் மிகஇனிதாய் நாழி கைபோம்!
    சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
    புல்லிதழில் போயொடுங்கும் தமை மறந்து
    பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்!”

    என்று அந்த இரவைத் தமிழ்ப் பண்பாட்டுக் குறிப்போடு நிறைவு செய்திருப்பார் பாவேந்தர்.

    “கச்சிதமாய் உறங்கிக் கொண்டிருப்பேன் வீட்டில்;
    கண்கலந்த என் கணவர் அருகில் வந்தே
    நச்சரிப்பார்; நயமாகப் பேசி, சற்றே
    நகரென்பார்; நான்மறுப்பேன்; ஊடல் தீர்ப்பார்!

    “இச்சமயம் ஒளியிலையே அத்தான்” என்பேன்;

    “இருள்தானே பூனைக்கு வேண்டும்!” என்பார்;
    உச்சரிப்பு நின்றுவிடும்; தொடுவார்; ஈர
    உடைபோல்நான் அவருடலில் ஒட்டிக் கொள்வேன்.”

    நீர்நிலைகளில் குளித்து வரும் பெண்கள் ஈர உடையை அணிந்து இல்லம் திரும்புவது தமிழகத்துப் பெண்டிரின் நாட்கடமை. படுக்கையறையில் உவமம் சொல்கிற பெண், தனக்கு நாளும் பழக்கமான ஒன்றினையே உவமமாக்குகிறாள் என்பதுதான் உவமச் சிறப்பு. அவள் அறிந்தது குற்றாலம்! அதனால் உவமமாக்குகிறாள். அவள் நயாகராவைச் சொல்லியிருந்தால் உவமப்பூ ஊமத்தம்பூ ஆகியிருக்கும்! பாவேந்தர், சுரதா ஆகியோர் பாடல்களுக்குத்,

    “தனியாகக் காணவருவார் – இவள்
    தளிர்போலத் தாவி அணைவாள்
    கண்போலச் சேர்ந்து மகிழ்வாள் – இரு
    கண்மூடிமார்பில் துயில்வாள்

    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ

    மலராத பெண்மை மலரும் முன்பு
    தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும் – முன்பு

    விளங்காத கேள்வி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ”

    என ஒரு திரையிசைப் பாடலில் பதவுரை, விளக்கவுரை, சிறப்புரை ஆகிய அனைத்தையும் எழுதியிருப்பார் கண்ணதாசன். பாவேந்தர் பாடியது அப்படி! சுரதா பாடியது அப்படி! கண்ணதாசன் உரையெழுதியது இப்படி! இவை எல்லாவற்றையும் ஒரே ஒரு இலக்கணக் குறியீட்டில் அடக்கிவிடுகிறார் சுரதா!

    “பூவெல்லாம் பொன்னே உன் உடலின் மீது
    பூத்திருக்க நீயவற்றைப் பார்த்திருந்தும்
    காவெல்லாம் சென்று சென்று நின்று நின்று
    கால்நோவப் பூப்பறித்துச்சூடும் பெண்ணே!
    நாவில் நீ! நெஞ்சில்நீ! அஞ்சன் ஆட்சி
    நல்லதமிழ்ப் பாடல் நீ! அன்றோ என்றான்!
    ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்!
    உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!”

    பூ+அழகு என்பது ‘பூவழகு’ என்று இணையும். இச்சொல்லில் நிலைமொழி ஈற்று ஊகாரமும் வருமொழி முதல் அகரமும் உயிர். உடம்பொடு உயிர் வந்து ஒன்றுவதுதான் இயல்பு. இங்கே உயிரல்லாத வேறொரு மெய் (வ்) தோன்றி இணையாத உயிர்களை இணைப்பதைக் காணலாம். உடல் பிணைப்பை உடம்படுமெய்யாக்கி உவமித்ததன்மூலம் உயிர்ப்பிணிப்பின்  துடிப்பைக் கேட்க வைத்திருக்கிறார் சுரதா!

    எதுகையும் மோனையும்

    நாற்பத்து மூன்றுவகை தொடை விகற்பங்களில் பாட்டுக்கு அழகூட்டி அதனைச் நிலைக்கச் செய்வன எதுகையும் மோனையும். இதற்கு அடுத்த படியாக முரண் அமையலாம். தொடைவிகற்பங்களை அளவடிக்கு மட்டுமே கணக்கிட இயலும். பொதுவாக ஆண் முன்னாலே செல்வதும் பெண் அவனைத் தொடர்ந்து பின்னாலே செல்வதும் உலக வழக்கு. ‘எங்கெங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட’ என்பது புலமைப்பித்தன் கண்ட பெண்மை. ‘நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்’ என்பதும் வழக்கு. ஆதிமந்தி – ஆட்டனத்தி இருவரும் வருகிறார்கள்.

    “மதிமதுரப் புலவரெல்லாம் மகிழ்ந்து பாட
    வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
    எதுகைவரல் போல் அடுத்து வந்தாள் அத்தி
    என்பானோ மோனையைப்போல் முன்னே வந்தான்!”

    தமது கவிதைப் படைப்புக்களில் ஒவ்வொரு அசையிலும் மரபையன்றி வேறு எதனையும் பதியம் போடாத சுரதா, இங்கே ‘முன்னாலே’ வந்த அத்தியை மோனையாக்கினார். ‘அடுத்து’ வந்த ஆதிமந்தியை எதுகையாக்கினார். ‘எழுவாய் எழுத்தொன்றின் மோனை…………இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை’ என்னும் தொடையிலக்கணத்தை உயர்திணை வரவுக்கு உவமமாக்கியிருக்கிறார்.

    பரிசும் விருதும் பகுதி போன்றது

    பதமாகிய சொல் பகுபதம், பகாப்பதம் என இருவகைப்படும். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களைப் பெற்று வருவது பகுபதம். இவற்றுள் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சந்தி. விகுதிக்கும் இடைநிலைக்கும் இடைநிற்பது சாரியை. பகுதி தவிர ஏனைய மாற்றத்திற்குரியன. தொட்டான், தொட்டாள், தொட்டனர், தொட்டது, தொட்டன என்னும் ஐம்பால் வினைச்சொற்களில் பால்காட்டும் விகுதிகள் மாறி நிற்பதும் ‘தொடு’ என்னும் பகுதியாகிய ஏவல் நிலைத்து நிற்பதும் காண்க. இதிலிருந்து ஒரு பகுபதம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டாலும் அதன் உயிராகிய பகுதி மாறவே மாறாது. நிலைத்து நிற்கும். பாரதிதாசனுக்குப் புரட்சிக்கவிஞர் என்பதைத் தவிர வேறு எந்தப் பட்டமும் பொருந்தாமற்போனது. நம் சுரதாவிற்குப் பொருந்திய ‘உவமைக் கவிஞர்’ என்னும் பட்டம் வேறு எவருக்குமே பொருந்தாமற் போனது.  தற்காலக்கவிஞர் சிலர் போட்டுக் கொள்கிற பட்டம் மொட்டைத் தலையில் பூ தைப்பது போலப் பொருந்தாமற் போய்விடுகிறது. அவர்கள் ஒரு நாளைக்கு நாலைந்து முறை பட்டங்களை மாற்றிப் போட்டாலும் அவை நிலைப்பதில்லை. காரணம் பெற்றவருக்கும் தகுதியில்லை. கொடுத்தவர்க்கும் தகுதியில்லை. விளம்பர உலகில் இது வெகு சாதாரணம். இதனைச் சொல்கிறார் சுரதா.

    “தகுதி மிக்கோர் தருகின்ற பட்டம்
    பகுதி போன்று நிலைத்து நிற்கும்”

    வினைச்சொல்லுக்கும் வினையாலணையும் பெயருக்கும் மட்டுமே பகுதி உண்டு. தகுதி உடையவர் தருகின்ற பட்டங்கள்தாம் நிலைத்து நிற்கும். வி.சி.கணேசனுக்குச் ‘சிவாஜி’ என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். மோகன்தாஸ் காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் தாகூர். தகுதியுடையவர் தந்த பட்டங்கள் அவை. நிலைத்து நிற்கும் என்ற உண்மையை வினைச்சொல்லில் பகுதி நிலைத்து நிற்கும் என்னும் உறுப்பிலக்கண உண்மையோடு உவமமாக்கி விளக்கியவர் சுரதா.

    உவமப் பந்தி

    திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை பற்றிய கட்டுரை இந்தத் தொடரின் ஐம்பதாவது இறுதிக் கட்டுரையாக அமையும். திருக்குறளில் ஒரு கருத்தினை விளக்கத் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினையே உவமமாக்குவார். உவமமாகும் அந்தக் கருத்து வேறொரு அதிகாரத்திற்கு உரியதாகவும் இருக்கும். வேறொரு உண்மையை உணர்த்துவதாகவும் இருக்கும். விரிப்பின் பெருகும். அந்த நெறியில் வந்த சுரதா தற்காலத் தமிழர்களின் நிலையைப் பாடவருகிறார். பாரதியைப் போல் இவருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. என்ன சொல்கிறார்? தமிழர்கள் மேல்நாட்டாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் கதைவிடவில்லை.

    “இன்றுள்ள தமிழரெல்லாம் அந்த நாளில்
    இருந்தவர்போல் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
    என்றென்றும் செந்தமிழைக்காத்தல் வேண்டும்!
    ஏமாற்றும் மனப்பான்மை மறைதல் வேண்டும்!”

    என நறுக்குத் தெறித்தாற் போல் பதிவிடுகிறார். தமிழினத்திற்கு இணையானதொரு இனம் அன்றைக்கும் இல்லை. என்றைக்கும் இல்லை. இவனை விளக்க உவமம் ஏதுமில்லை. இவனுக்கு இவனே உவமம் என்று கருதிய சுரதா அக்காலத் தமிழனைத் தற்காலத் தமிழனுக்கு உவமமாக்கினார். இதுவரையில் தமிழ்க்கவிதைகளில் கண்டிராத உவமக் கோட்பாடு!

    “மணமாலை தனைசூடி உறவாடுவார்! மனம்
    மாறாமல் பலகாலம் உறவாடுவார்!
    ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா! இதை
    உன்காலத் தமிழ்நாடு அறியாதடா”

    என்னும் கண்ணதாசன் பாடல் இங்கே நினைக்கத்தகும்.

    கணிதமும் உவமமாகும்

    உயிரெழுத்து பன்னிரண்டு. மெய் பதினெட்டு. குற்றியலுகரம் ஆறு, தளை ஏழு, தொடைவிகற்பங்கள் நாற்பத்து மூன்று, கலிப்பா மூன்று,  கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறு எனக் கணிதத்தோடு தொடர்புடையது தமிழ். ‘ஏரம்பம்’ என்பது அந்நாளில் மக்கள் வழக்கில் இருந்த கணித நூல். சுரதா எதனையும் கவிதையாக நோக்கும் பேராற்றலுடையவர்.

    “உயரத்தைப் படுக்க வைத்தால் நீட்டமாகும்
    உள்ளத்தைப் பழுக்கவைத்தால் புதுமை தோன்றும்”

    உயரத்தை ஆணவத்தின் குறியீடாகவும் நீட்டத்தைப் பணிவின் குறியீடாகவும் பயன்படுத்தியிருக்கிறார். பக்குவம் பணிவைத் தரும்.  முதிர்ச்சியைப் பழம் என்பது மரபு. ‘ஞானப்பழம்’ என்பது முருகனுக்கான திருநாமங்களில் ஒன்று. அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களைப் ‘பழுத்த பழம்’ என்பது உலகியல்.  ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்பது பெரியாரைப் பற்றிய பாவேந்தரின் உருவகம். ‘தேனாய்த் தீம்பழமாய்’ என்பது திருவருட்பா. ‘பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்’ என்பது பூவை செங்குட்டுவன் வரி!

    பூவை செங்குட்டுவனும் சுரதாவும்

    “கெடலெங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க” என்பார் பாவேந்தர். பிறரை ஊக்குவிக்கும் பேருள்ளம் படைத்தவர் சுரதா. வறுமையின் உச்சத்தில் வாடியவர் செங்குட்டுவன். வாடகை சைக்கிள் கடைவைத்துப் பிழைப்பு நடத்தியவர். ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பூவையின் பாடலைப் பிலிம்சேம்பர் விழாவில் இயக்குநர் ஏ.பி. நாகராசன் அவர்களோடு அமர்ந்து கேட்ட கண்ணதாசன் வியந்து போயிருக்கிறார். ‘தான் எழுதியிருந்தாலும் அவ்வளவு சிறப்பாக எழுதியிருக்க முடியாது’ என்று மனந்திறந்து பாராட்டி, அந்தப் பாடலைக் ‘கந்தன் கருணை’ என்ற படத்தில் இணைக்கச் சொன்னார். கவிஞர்களுக்கு இந்தப் பேருள்ளம் மிகவும் இன்றியமையாது இருக்க வேண்டிய பண்பு. பலரிடம் இல்லை என்பது உண்மை. இந்தப் பாடலைப் பற்றி அன்றைக்குச் சென்னை நூலகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் ‘வில்லிப்புத்தன்’ என்னும் நபர் ‘திருப்பரங்குன்றத்தில் சிரித்துத் திருத்தணியில் எதிரொலித்தால் முருகன் என்ன வில்லன் சிரிப்பா சிரித்தான்?’ என்று ஏளனமாகக் கேட்டிருக்கிறார். கூட்டத்தில் அமர்ந்திருந்த சுரதா வெகுண்டெழுந்தார். “ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைவெளி குறைவாக இருந்தால் இடையில் பேசுவதால், பாடுவதால் ஏற்படும் ஒலி மிகுந்து ஒலிக்கும். பள்ளத்தாக்கு உட்பட்ட இடைவெளியில் மிகுந்து ஒலிப்பதற்குக் காரணமாக இருப்பதால் மலைக்குச் ‘சிலம்பு’ என்பது காரணப்பெயர். ‘சிலம்பு என்பதற்கு ‘ஒலித்தல்’ என்பதும் ‘மலை’ என்பதும் பொருள். காலில் அணிகிற சிலம்பின் பரல்கள் ஒலிப்பதால்தான் அதற்குச் சிலம்பு என்பது பெயர். செங்குட்டுவன் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதனையும் தெரிந்து பேச வேண்டும். தெரியாமல் உளறக் கூடாது’ என்று கண்டித்திருக்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் உதவுகின்ற பேருள்ளத்தையும் ஒருங்கே பெற்றவர் சுரதா. கட்டுரைப் பொருளுக்குத் தொடர்பில்லாவிடினும் ஒரு மாபெரும் கவிஞனைப் பற்றிய வரலாற்று நிகழ்விலிருந்து அவனுடைய பண்பாட்டை அறிந்து கொள்வதற்காகச் செய்யப்பட்ட பதிவு இது.

    உவமத்திற்கும் உவமம் சொன்ன சுரதா

    எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் உவமம் சொன்ன சுரதா உவமம் எதனைப் போல் இருக்க வேண்டும் என்று உவமத்திற்கே உவமம் சொல்லியிருக்கிறார்.

    “கவிதையில் கருத்து வேண்டும்!
    கட்டாயம் உவமை வேண்டும்!
    உவமைதான் கவிதைகட்கு
    உயிர்நாடி பெருமை சேர்க்கும்!
    உவமை யிலாத பாடல்
    உப்பு சேராத பண்டம்!
    அவிழ்ந்திடா தாமரைப்பூ!
    அழகில் லாத மங்கை!”

    உயிர்நாடி, உப்பு, அவிழ்ந்த தாமரைப்பூ, அழகுடைய மங்கை என்னும் உவமங்களை ஒரு முழுக்கவிதையோடு ஒப்பிட்டு நோக்கினால் உவமத்தின் அருமை புரியக் கூடும்.

    சுழிக்குள் சிக்கிய சுரதா

    தனது வழிகாட்டி பாவேந்தரைப் பாடுகிறார் சுரதா. அது ஒரு கையறு நிலைப்பாடல். கையறுநிலைப் பாடலில் பாடப்படும் இரக்கத்திற்குரிய தலைமகனின் பெருமைகள் மட்டுமே சுட்டப்படல் வேண்டும் என்பது இலக்கிய மரபு. ஒரு பாட்டில் ஒரு உவமம்தான் சொல்லப்பட வேண்டும் என்பதும் உவமத்திற்கு உவமம் புணர்த்தல் ஆகாது என்பதும் பழந்தமிழ் உவமமரபு. சுரதா பாடுகிறார்,

    “திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்
    தீர்ப்பளித்து வெற்றி பெற்றான் கரிகாற்சோழன்
    நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்டனத்தி
    நிதியளித்து வெற்றி பெற்றான் பாரிவள்ளல்
    வருத்தத்தில் வெற்றிபெற்றான் வடலூர் வள்ளல்
    வாளேந்தி வெற்றிபெற்றான் சேரலாதன்
    விருத்தத்தில் வெற்றி பெற்றான் கம்பன் அந்த
    வெற்றியினை இவர்பெற்றால் என்னைப் போல”

    என்று. இந்தப் பாட்டைப் படிக்கின்ற அன்பர்கள் பலரும் இதனை உவம அணியாகக் கொண்டு பாராட்டி மகிழ்கின்றனர். அது சரியே. ஆனால் உவம இலக்கண வரையறைக்குள் இது அடங்குமா என்பது சிந்தனைக்குரியது.

    உவம அணியும் எடுத்துக்காட்டு உவமமும்

    எடுத்துக்காட்டு (EXAMPLE) என்பது வேறு. ஒப்பீடு (SIMILE) என்பது வேறு. எடுத்துக்காட்டே ஒப்பீடானால் அது எடுத்துக்காட்டு உவமம். இந்த நுட்பத்தை அறியாமல் எடுத்துக்காட்டு உவமையின் வெளித்தோற்றத்தை மட்டும் கண்டவர்கள் பொருளையும் உவமத்தையும் தனித்தனியே கூறி உவம உருபைக் கூறாது விடுதல் எடுத்துக்காட்டு உவமம் என்றே சொல்லிவருகிறார்கள். இது பாடத்திட்டக் குழுவின் பாடநூலில் சொல்லப்பட்ட வரையறைக்குட்பட்ட மதிப்பெண் மயக்கம். இலக்கிய ஆராய்ச்சியில் உவமத்திற்கான ஆய்வுப் பார்வையைக் கல்வி நிலையங்கள் எதிரொளிப்பதில்லை. ஆனால் உவம அணி அத்தகையதன்று, உவமமும் பொருளும் ஒவ்வொரு துகளும் ஒத்திருத்தல் வேண்டும். ஒருபுடை என்ற பேச்சுக்கே இடமில்லை.

    உயர்ந்ததன் மேற்றே உள்ளுதல் வேண்டும்

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் தனித்தனியாகப் பாடுபொருளாகும்போது உவமங்களும் தனித்தே இயங்க வேண்டுமேயன்றி மயங்குதல் கூடா. இந்தப் பாட்டில் மூன்று செய்திகளை நிரல்படுத்துகிறார் சுரதா!

    1. வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்.
    2. பாவேந்தர் பெற்ற வெற்றி
    3. சுரதா தன்னை உவமமாக்கிப் பாவேந்தரைப் பொருளாக்கியது

    இந்த வகைபாடுகளில் முதலில் வெற்றிபெற்றவர்கள் பல்வினை நாயகர்கள். அவர்கள் அடைந்த வெற்றிதான் ஒப்புமையே தவிர, அது எவற்றால் எல்லாம் பெற்றார்கள் என்பது ஒப்புமை ஆகாது. வெற்றி ஒரு காட்டலாகாப் பொருள். அது தொழிற்பெயர் என்றால் அதற்கான காரணங்கள் ஒன்றாக இல்லை.

    1. திருத்துவதில் ஒட்டக் கூத்தர்
    2. தீர்ப்பளிப்பதில் கரிகாற்சோழன்
    3. நாட்டியத்தில் ஆட்டனத்தி
    4. நிதியளிப்பதில் பாரி
    5. வருத்தத்தில் வள்ளலார்
    6. வாளேந்துவதில் சேரலாதன்

    தனித்தனி தன்மை கொண்ட ஆறு வினைகளை நிரல்படுத்தி எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் எங்கே இருக்கிறது உவமம்? இவர்கள் பெற்ற வெற்றியைத்தான் மற்றொரு வெற்றியோடு ஒப்பிடுகிறார். அது கம்பன் விருத்தத்தில் அதாவது விருத்த யாப்பில் பெற்ற வெற்றி. கம்பன் பெற்ற வெற்றியைச் சுரதா பெற்றிருக்கிறார். சுரதாவைப்போல் பாவேந்தரும் பெற்றிருக்கிறார். யாரை உயர்த்திப் பாட வந்தாரோ அவரைப் பொருளாக்கினால் அவருக்கான உவமம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். இது ஆய்வு. ஆனால் வெளிப்பாட்டு உத்தியில் பொருளான பாவேந்தர் உவமமாகிய சுரதாவினும் குறைந்திருக்கிறார். சுரதா தன்னையே உவமமாக்கியதால் இதனை உணரலாம். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ என்னும் விதியின் அடிப்படையில் நோக்கினால் பாவேந்தரினும் சுரதா உயர்ந்துவிடுகிறார். இதனால் பாடுபொருள் மயக்கத்திற்கும் தடுமாற்றத்திற்கும் ஆளாகிறது என்பதோடு கவிச்செருக்கின் காரணமாகப் பாட்டு மாசடைகிறது. விடுதலைப் போராட்டத்திற்குப் போர்ப்பரணி பாடிய பாரதி, வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்புக் கவிதை அளித்ததைக் கல்வியாளர் கா.திரவியம் ஒரு சுருதிபேதமாகவே தமது ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூலில் கூறுகிறார். பாரதிதாசனைப் பற்றிய சுரதாவின் இந்தப் பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு கரும்புள்ளியாகவே தெரியும்.

    நிறைவுரை

    சுரதா அவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை இயல்பான நீச்சல் குளம். பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அவர் பாரதிதாசன் மட்டுமே. ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்கிறார் சுரதா அடக்கமாக. ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான்.

    “தண்ணீரின் ஏப்பந்தான் அலைகள்,

    “பறக்கும் நாவற்பழம் வண்டு”

    “கரும்புக்குப் பூத்த வெறும்பூ”

    “உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும்”

    “கனவில் கூடச் சோரம் போகாத நானா விலைமகள்?”

    “இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான்”

    “நீ தொட்டால் விஷம் கூடச் செத்துவிடும்”

    என்றெல்லாம் உரைநடையைக் கவிதையாக்கிக் கவிதையை உரைநடையாக்கி இரண்டிற்கும் கலப்புமணம் செய்து வைத்தவர் சுரதா! ‘‘அவன் உரைக்காத உவமையில்லை. அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்பார் திரைப்படப் பாடலாசிரியர் வாலி. சுரதாவைக் கொஞ்சம் படித்த பிறகு “சுரதாவைப் போல யாராவது எழுத மாட்டார்களா? என்று ஒரு நாள் என் தந்தையைக் கேட்டேன்! தந்தை திருப்பிக் கேட்டார்! “உன் ஆசைக்கு அளவேயில்லையா?” தந்தை சொன்னால் தமிழ் சொன்னது மாதிரி!

    (தொடரும்…)

    Share
  • அனுமனைப் போற்றுவோம் – சுதா மாதவன் உரை

    அனுமனைப் போற்றுவோம் – சுதா மாதவன் உரை

    அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, அனுமனைப் போற்றுவோம் என்ற தலைப்பில் சுதா மாதவன் வழங்கிய உரை இதோ. அனுமனின் சிறப்புகளுடன் அனுமனுக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? வடை மாலை சாத்துவது ஏன்? செந்தூரம் வைப்பது ஏன்? எனப் பலவற்றுக்கும் விளக்கம் அளித்துள்ளார். கேட்டு மகிழுங்கள். அனுமனை வணங்கி அருள் பெறுங்கள். சஞ்சீவி மலையை ஏந்தி வந்து உயிர்ப்பித்தது போல், இந்தப் பெருந்தொற்றுக்கும் உரிய தீர்வினை அனுமன் அருளட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(383)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(383)

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
    னெண்ணுவ மென்ப திழுக்கு.

    – திருக்குறள் – 467 (தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்

    தகுந்த செயலைத் தேர்ந்தெடுத்து
    தக்க வழிவகைக் கண்டறிந்து
    தொடங்கிட வேண்டும்
    செயல்படுத்த..

    தொடங்கிய பின்னே
    தேடுவோம் என்பது
    தவறான வழிமுறையாய்த்
    தந்திடும் பெரும் இழுக்கே…!

    குறும்பாவில்

    செயலைத் தொடங்கிடு
    செய்யும் வழியறிந்து,தொடங்கியபின் எண்ணுதல்
    என்பது இழுக்கே…!

    மரபுக் கவிதையில்

    செய்யத் தகுந்த செயலென்றைச்
    செய்திடத் தொடங்கிடு முன்னதனைச்
    செய்து முடிக்கும் வழியெல்லாம்
    சேர்த்தே அறிந்து தொடங்கவேண்டும்,
    செய்யத் தொடங்கிப் பின்னரதன்
    செயல்படும் வழியைத் தேடிடுதல்
    உய்யும் வகையா யமையாதே
    உறுதியாய்த் தவறென முடிந்திடுமே…!

    லிமரைக்கூ

    செய்யும் வழிவகையறிந்து முன்னே
    செயலைத் தொடங்கிடு, இல்லையெனில் இழுக்காகும்
    பார்க்கலாமெனில் தொடங்கிய பின்னே…!

    கிராமிய பாணியில்

    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    செய்யப்போற செயலப்பத்தி
    நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்..

    செய்யப்போற செயலத்
    செய்யத் தொடங்குமுன்னால
    அதப்பத்தி
    நல்லாத் தெரிஞ்சிக்கிட்டு
    செய்யிற வழிமொறகளயும் அறிஞ்சி
    அப்புறமா செய்யத் தொடங்கணும்..

    தொடங்கின பொறவு பாத்துக்கலாமுண்ணு
    செயலுல எறங்குனா
    சேதாரந்தான்..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    செய்யப்போற செயலப்பத்தி
    நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்…!

    Share
  • 2022 புத்தாண்டுக் கோலங்கள்

    2022 புத்தாண்டுக் கோலங்கள்

    வல்லமை நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    புத்தாண்டைத் தமிழர்கள் வரவேற்கும் விதமே தனி தான். 2022 ஜனவரி 1 அன்று காலையில் காணக் கிடைத்த புத்தாண்டுக் கோலங்களின் அணிவகுப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலங்கள் – 5

    மார்கழிக் கோலங்கள் – 5

    மார்கழிப் பனியும் இசையும் வண்ண வண்ணக் கோலங்களும் தமிழ் மண்ணின் அற்புதங்கள், நம் அர்த்தமுள்ள மரபின் அடையாளங்கள். உன்னத மகளிரின் உளத்தோவியங்கள். இதோ இந்த ஆண்டுக் கோலங்களின் அணிவகுப்பு.

    தொகுப்பு – சுதா மாதவன்

    இசை – தவிலிசைத் தென்றல் தெள்ளாறு எம்.ரங்கராஜன் குழுவினர்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2021 ஒரு பார்வை

    2021 ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    2021 !

    கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கிறது.

    உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை.

    இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!

    முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் மீதிருந்த மாபெரும் குற்றச்சாட்டு, அவரின் உலகை நோக்கிய பார்வையாகும். அமேரிக்கா அமேரிக்கர்களுக்கு மட்டும் எனும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்ததே அதற்குக் காரணம் என்றார்கள் அனுபவமிகுந்த அரசியல் அவதானிகள். அத்தோடு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் உலக சமாதானத்துக்கு குந்தகம் விளைவிப்பவை எனும் கருத்தும் வலிமையாக நிலவி வந்தது.

    ஆனால் இன்று மாற்று எதிர்பார்ப்புகளோடு ஐனாதிபதியான பைடன் அவர்களின் செயற்பாடுகள் அக்கருத்துகளில் எத்தகைய மாற்றங்களை விளைவித்திருக்கின்றது என்பதும் கேள்விக்குறியே! விடையை 2022 நல்குமா? என்பதற்குக் காலம்தான் விடை பகர வேண்டும்.

    சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் நிலையைப் பார்ப்போமா?

    2020ம் ஆன்டு டிசம்பர் 31ம் திகதியோடு பிரெக்ஸிட் எனும் கத்தி கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான 40 வருட உறவென்னும் தொடர்பை முற்றாக அறுத்தது ஐக்கிய இராச்சியம். இருப்பினும் இதன் முக்கியத்துவம் கோவிட் எனும் நுண்கிருமியின் முக்கியத்துவத்தினுள் புதைந்து போயிற்று என்பதே உண்மையாயிற்று. வழமையாக இந்நிகழ்வினை அறுத்து உருத்துப் புரட்டி எடுக்கும் ஊடகங்கள் தமது முழுக்கவனத்தையும் இதன்பால் திருப்ப முடியாமல் போனதுக்கு பிரதமர் பொரிஸ் ஜான்சன் கோவிட்டுக்கு நன்றி சொல்லியிருப்பாரோ?

    கோவிட் தாக்கத்தினால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிய நிலைமையைச் சமாளிக்க ஒரு முழு லாக்டவுனை அமுலாக்கி ஐக்கிய இராச்சிய மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 2020 கிறிஸ்மஸ் நிகழ்வையே இரத்தாக்கிய பெருமைக்குரியராகினார் பிரதமர் பொரிஸ் ஜான்சன், பாவம் பொதுமக்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதைப் பெரிதாக என்ணுவார்களா? இல்லை பொருலாதாரச் சிக்கலை உருவாக்கப் போகும் பிரெக்ஸிட்டின் தாக்கத்தை எதிர்நோக்குவார்களா?

    பிரெக்ஸிட்டினால் உருவாகிய பொருளாதாரப் பின்னடைவுகள் அனைத்தும் கோவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருலாதாரப் பின்னடைவு எனும் போர்வைக்குள் அமுங்கிப் போய் விட்டது.

    ஐரோப்பிய ஒன்றியத்தினரின் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதற்கு உருவாகிய புதிய கட்டுப்பாடுகள் ஐக்கிய இராச்சியத்தின் பல துறைகளில் பணியாளர்களின் தட்டுப்பாட்டைத் தோற்றுவித்தது.

    அதேநேரம் மகத்தான ஒரு பெரிய நன்மை விழைந்ததும் 2021இலேதான். ஆம் 2020 அக்டோபர்/ நவம்பர் மாதங்களில் வைத்தியத்துறையின் சாதனையால் உருவாக்கப்பட்ட கோவிட்டுக்கான தடுப்பூசி மக்களின் பரவலான பாவனைக்கு கொண்டு வரப்பட்டது 2021இலேதான். பலமுனைகளில் விமர்சிக்கப்பட்ட பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களதும், அவரது மந்திரிசபையினதும் மாபெரும் வெற்றியாக இந்தத் தடுப்பூசி நடைமுறையாக்கம் ஊடகங்களினால் விமர்சிக்கப் பட்டது.

    ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையில் அரைப்புங்குக்கும் அதிகமாக மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதால் ஜீலை மாதம் 19 தேதி முதல் ஐக்கிய இராச்சியம் லாக்டவுனிலிருந்து விடுபட்டு மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது. எந்தவொரு எதிர்மறையான விமர்சனங்களாலும் பாதிக்கப்படமுடியாதவர் எனும் நிலையிலிருந்த பொரிஸ் ஜான்சனது செல்வாக்கு கொஞ்சம், கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியது. ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாதவர் , நாட்டின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர் எனும் வகையிலான கருத்துகள் அவர் மீது எழ அடுத்தடுத்து அவருக்குப் பாதகமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளது.

    2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது பிரதமருக்கான பணிமனையிலேயே அவருக்கு கீழியங்கும் சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அந்தப் பணிமனையிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தினார்கள் எனும் செய்திகள் புகைப்பட ஆதாரங்களுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது பிரதமர் மீதும், அவரது மந்திரிசபை மீதும் மக்களுக்கான நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது எனலாம். அதைத்தவிர அவரின் இருப்பிடத்தினை சீரமைப்பதற்கான நிதி அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளரின் தயவால் கிடைத்தது என்பதும் அவரது நிலையை மேசங்கடத்துள்ளாக்கியுள்ளது.

    இப்போது இக்கொரோனா நுண்கிருமியின் திரிபடைந்த தோற்றமான ஒமிக்குரோன் எனும் வகை உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடற்ற முறையில் பரவத் தொடங்கியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தினமும் 120000 க்கும் மேற்பட்டவர்கள் இப்புதிய தொற்றால் பீடிக்கப்படுகிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் பகுதிகளான ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் இங்கிலாந்தில் எதுவிதமான சட்டபூர்வமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தொற்றுக்கள் அதிகரிப்பினும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவிற்கு இது பாரதூரமானதல்ல எனும் கருத்தின் அடிப்படையில் செயற்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்,

    இதன் தாக்கம் இனிவரும் நாட்களிளேயே தெரியவரும். இது சரிந்து வரும் பிரதமரின் செல்வாக்கை தூக்கி நிறுத்துமா? இல்லை அவரது செல்வாக்கை அதாள பாதாளாத்தை நோக்கித் தள்ளி விடுமா என்பதனை இனிவரும் நாட்களே முடிவு செய்யப்போகிறது. இதுதவிர ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தின் மீதான பிரக்ஸிட்+ கோவிட் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவுகள் கூட 2022இல் மேலும் வெளிப்படையாகத் தெரியும்.

    இனி சர்வதேச அளவிலான சில முக்கிய பாதிப்புகளை பார்ப்போமா?

    கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் அமைந்தது எனலாம். சர்வதேச பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நாடு ஆப்கானிஸ்தான் எனும் குற்றச்சாட்டின் பிரகாரம் அன்றைய ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கலைத்து தலிபான்களுடன் போரிட்டு ஆப்கானிஸ்தானைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர போரிட்ட சர்வதேச நாடுகளின் முன்னனியில் அமேரிக்காவும், இங்கிலாந்தும் இருந்ததை அனைவரும் அறிவோம்.

    ஆப்கானிஸ்தானில் ஐனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என்று அமேரிக்காவும், இங்கிலாந்தும் முன்னெடுத்த நடவடிக்கையில் இருநாடுகளும் பலநூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களைப் பலிகொடுத்துள்ளார்கள். இதைத் தமது நாட்டு மக்களுக்கு சர்வதேசப் பயங்கரவாதத்தை ஒலிப்பதன் மூலம் தத்தமது நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கலாம் எனும் வாதத்தையே இவர்கள் முன் வைத்தார்கள்.

    தலிபான் இயக்கத்தை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் ஒரு நிரந்தர ஐனநாயக அரசை அமைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார்கள் என்பதே உண்மை. அமேரிக்க முன்னாள் அதிபர் பதவிக்கு வரும்போது அமேரிக்கா இனி வெளிநாட்டுப் பிரச்சனைகளில் ஈடுபடாது எனும் கொள்கையை முன்வைத்தார். அவரது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் 2021 இல் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமேரிக்க இராணுவத்தினர் அனைவரையும் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் கையளிக்க இரு பகுதியினருக்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின.

    பைடன் அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்நிலையில் மாற்றம் ஏற்படுமா? எனும் எதிர்பார்ப்புகள் பல பகுதிகளில் இருந்து எழுந்தன. ஆனால் அதிபர் பைடனோ, ட்ரம்ப் அவர்களின் காலக்கெடுவையே தானும் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அமேரிக்க இராணுவத்தின் ஆதாரத்தில் தங்கியிருந்த எஞ்சிய ஐக்கிய இராச்சிய இராணுவமும் வெளியேறும் என்று ஐக்கிய இராச்சிய பிரதமரும் அறிவித்தார்.

    இவ்விரு இராணுவத்தினரும் ஆப்கானிஸ்தானை தலிபான் அவர்களின் வார்த்தைகளின் அடிப்படையில் அவர்களிடம் கையளித்தார்கள். இவ்விரு இராணுவத்தினருக்கு பல வழிகளில் உதவி புரிந்து வந்த ஆப்கானிஸ்தானியரைத் தத்தமது நாடுகளுக்கு கொண்டு செல்ல தலிபான்களிடம் அனுமதி பெற்ற இவ்விரு நாடுகளும் பலரைத் தமது நாடுகளுக்குக் கொண்டு சென்றாலும் விடுபட்டுப் போன பலரின் கதை அம்போ என ஆகி விட்டது.

    ஆப்கானிஸ்தான் ஒரு மாபெரும் பஞ்சத்தில் உழல்கிறது என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கைகள் கூறுகின்றன. 20221இன் ஒரு மிகப்பெரிய இடரினை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தித்துள்ளனர் என்பதுவே உண்மை.

    என் தாய்நாடான சிறீலங்கா மாபெரும் பொருளாதாரச் சிக்கலுக்குள் தன்னை சிக்க விட்டுள்ளது. அரசியல் சூதாட்டக்களத்தில் பகடைக்காயாக இன்று உருட்டப்பட்டுக் கொன்டிருக்கின்றது. தமது எதிர்காலத்தை அச்ச உணர்வுடன் அந்நாட்டு மக்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கான தீர்வை 2022வது கொண்டு வருமா? என்று போர்ச்சூழலில் இருந்து வெளிவந்தும் இன்னும் வாழ்வாதார அடிப்படை உரிமைகளுக்காக ஏங்கும் ஈழத்தமிழ் உறவுகள் எதிர்பார்த்தபடி காத்திருக்கிறார்கள்.

    பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து கொண்டிருந்த இந்தியாவுக்கு கோவிட்டின் வரவு சில சிக்கல்களைத் தோற்றுவித்தும் அவற்றிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் ௹தென்படுகின்றன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. டெல்டா எனும் கொரோனாவின் தாக்கத்தினை அதிக அளவில் எதிர்கொண்ட இந்தியா அந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒமிக்குரோனின் தாக்கத்தினை மட்டுப்படுத்துமா? எனும் கேள்விக்கு 2022 இன் ஆரம்ப மாதங்கள் விடையளிக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    கொரோனாவின் ஆரம்ப நிலைகளிலேயே தமது எல்லைகளை முற்றாக அடைத்து விட்ட அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மற்றைய நாடுகளின் அளவுக்கு பாதிக்கப் படவில்லை என்பதுவே உண்மை. ஏறத்தாழ இரண்டு வருடங்களின் பின்னால் தமது எல்லைகளை அவுஸ்திரேலியப் பிரஜைகளுக்கும், நியூசிலாந்துப் பிரஜைகளுக்கும் திறந்து விட்ட அவுஸ்திரேலியா ஒமிக்குரோனின் வரவினை எவ்வகையில் எதிர்கொள்ளப் போகிறது? என்பதற்கும் விடை 2022 இலேயே கிடைக்கும்.

    கோவிட்டின் தாக்கம் ஒருபுறமிருக்க குளோபல் வோமிங் எனும் உலக வெப்பமயப்படல் எனும் தாக்கத்தினால் காலநிலைச் சீரழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளையும் 2021இல் கண்கூடாகப் பார்த்துள்ளோம். வெப்ப மிகுதியால் ஏற்படும் பாரிய தீ விபத்துகள், அசாத்திய மழைப் பெருக்கினால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள்,அசாதரணமான சூறாவளிகள் எனப் பல்வேறு வகையிலான பாதிப்புகள் ஆசியா, ஐரோப்பா, அமேரிக்கா எனும் அனைத்துப் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை.

    ஆக மொத்தம் 2021 இல் மனித நடவடிக்கைகளினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும், கொரோனா எனும் கொடிய கிருமியால் ஏற்படும் நோயின் விளைவுகள் என்பன காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை எத்தனையோ கோடி எனலாம். இத்தனை எமக்கு அப்பாற்பட்ட சக்திகளை எதிர்க்க வேண்டிய சூழலில் இருக்கும் எம் மத்தியில் இன்னமும் இனம், மதம், மொழி, நாடு எனும் பாகுபாட்டினை முதன்மைப் படுத்தி பழிஉணர்வுகளால் வீணே சக மனிதர்களை அழிக்கும் செயல்களும் நடந்தேறிக் கொண்டிருப்பது உள்ளத்தை வருத்துகிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒற்றுமை எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்து உலக மக்கள் அனைவரும்

    ஒன்று எங்கள் ஜாதியே
    ஒன்று எங்கள் நீதியே
    உலக மக்கள் யாவரும்
    ஒருவர் பெற்ற மக்களே

    என்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே எமது எதிர்காலச் சந்ததிக்காக இவ்வுலகைக் காப்பாற்றுவர்களாவோம்.

    2022 இத்தகைய ஒரு அற்புதத்தைக் கொண்டு தருமா?

    Share
  • புத்தாண்டு பிறந்தது!

    புத்தாண்டு பிறந்தது!

    சி. ஜெயபாரதன், கனடா

    புத்தாண்டு பிறந்தது! நமக்கு
    புத்தாண்டு பிறந்தது!
    கடந்த ஆண்டு மறையுது, கரோனா
    கடும் நோய்
    தடம் இன்னும் விரியுது!
    உயிரிழந்த சடலங்கள் குவிப்பு
    வேலை இல்லா மக்கள் தவிப்பு
    உணவின்றி எளியோர் மரிப்பு
    சாவோலம் எங்கும்
    நாள்தோறும் கேட்கும்!
    ஈராண்டுப் போராட்டம்
    தீரவில்லை இன்னும்!

    அத்துடன்
    பூகோளம் சூடேறி
    பேரழிவுகள் நேர்ந்துவிட்டன!
    பேரரசுகள்
    போகும் திசை தெரியாது
    ஆரவாரம் எங்கும்!
    பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,,
    பிரளயக் காட்சிகள்!

    புத்தாண்டு பிறந்தது!
    புவி மக்களுக்குப் புத்துணர்ச்சி
    புத்துயிர் அளிக்கட்டும்!
    வித்தைகள் சிறந்து ஓங்கட்டும்!
    விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும்!
    வேலைகள் பெருகட்டும்!
    ஊதியம் கூடட்டும்!
    சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும்!
    யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.
    ஜாதிச் சண்டைகள் குறைந்து,
    ஜாதிகள் சேர்ந்து வாழட்டும்!
    சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கட்டும்!
    பொரி உருண்டை ஆச்சு
    பூத உலகு!
    உலக நாடுகள் ஒருமைப்பாட்டில்
    வாணிபம் வலுக்கட்டும்,
    செல்வீக நாடுகள்,
    வல்லரசுகள்
    வறுமை நாடுகட்கு
    எல்லா உகவியும் செய்யட்டும்.
    வறுமை குன்றி, வாழ்வு தழைக்கட்டும்.
    மின்சக்தி பெருகி யந்திரங்கள் ஓடட்டும்.
    வேளாண்மை விருத்தி ஆகட்டும்!
    லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும்!
    நீர்வளம், நிலவளம், சூழ்வெளி
    ஊர் மக்கள் கூடி
    துப்புரவு செய்யணும்!
    விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
    குடிமக்கள் தம்தம் கடமை
    முடிக்கணும்;
    நாட்டுப் பொறுப்புகள் ஏற்கணும்!
    தேசப் பற்று ஊறணும்!
    தேச விருத்தி ஒன்றே குறிக்கோள் ஆகணும்!
    தேச மக்கள் நேசம் பெருகணும்!

    Share
  • நல்லதொரு புத்தாண்டை நாடு காணட்டும்!

    நல்லதொரு புத்தாண்டை நாடு காணட்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    புத்தாண்டு என்றதும் புத்துணர்வு பிறந்துவிடும்
    புறப்பட்டு பலவிடங்கள் போகவே மனமெண்ணும்
    மொத்தமுள்ள உறவுகளைப் பார்த்திடவே ஆசைவரும்
    முழுமையாய் அனுபவிக்க பெருவிருப்பம் எழுந்துவிடும்

    எல்லோரும் எண்ணங்களை எத்தனையோ வைத்துள்ளார்
    அத்தனையும் நிறைவேற்ற அமைந்திடுமா புத்தாண்டு
    புற்றிருந்து புறப்பட்டு வருகின்ற ஈசல்கள்போல்
    புதுப்பெயரில் வைரசும் வந்தபடி இருக்கிறதே

    சீனாவின் சீதனத்தால் சீரழிவு ஓயவில்லை
    சிறகடித்து ஒமிக்கிரோன் வட்டமிட்டுப் பறக்கிறது
    ஆபிரிக்கா தந்தகொடை ஆட்டியிப்போ வைக்கிறது
    அனைவருக்கும் புத்தாண்டில் இதுபரிசாய் ஆயிருக்கு

    ஒமிக்கிரோன் அரசாட்சி இப்போது தொடங்கிருக்கு
    உலகமெலாம் ஓலமிட ஒமிக்கிரோன் வைத்திருக்கு
    உலக சுகாதார மையமோ ஓடியோடித் திரிகையிலே
    உலகிடையே புத்தாண்டு உயிர்த்துடிப்பாய் அமைந்திடுமா

    வைரசோ விதம்விதமாய் வடிவெடுத்து வருகிறது
    வைத்தியமோ புதுமருந்தைக் கொடுத்தபடி இருக்கிறது
    விஞ்ஞானம் தனைவருத்தி ஆராய்ச்சி செய்கிறது
    விடமாட்டேன் எனவுரைத்து வைரசும் எழுகிறது

    வளர்ந்த நாடெல்லாமே விழிபிதுங்கி நிற்கிறது
    வளர்நிலை நாடுகளோ வகையின்றித் திகைக்கிறது
    வைரசோ தன்பாட்டில் பயணத்தைத் தொடர்கிறது
    வரவிருக்கும் புத்தாண்டு வெளிச்சத்தைத் தொட்டிடுமா

    முடக்கநிலை போட்டால் முடங்கிவிடும் செயலனைத்தும்
    முடக்கநிலை அகன்றால் முடங்கிவிடும் மக்கள்நலம்
    அடக்கமுடன் இருக்கவென அரசுரைத்து நிற்கிறது
    அடக்கமதை உடைப்பதற்கும் ஆரவம்பலர் கொண்டுள்ளார்

    விலைவாசி உயர்கிறது வீட்டுக்கஷ்டம் பெருகிறது
    பலதொழில்கள் போகிறது பஞ்சமெட்டிப் பார்க்கிறது
    நிலைதளர்ந்து பலநாடு நெருக்கடியில் தவிக்கிறது
    நிலையுணரா நிலையினிலும் சிலநாடு சிரிக்கிறது

    தொலைதூரம் என்பதே தொலைதூரம் ஆகிறது
    தொலைவிருத்தல் நலமென்றும் மனமெண்ணி நிற்கிறது
    வைரசை மனமெண்ணி மகிழ்வோடி ஒழிகிறது
    வரவிருக்கும் புத்தாண்டு மனப்பயத்தைப் போக்கிடுமா

    பட்டங்கள் கொடுப்பதற்குப் பலரிப்போ வந்துள்ளார்
    பட்டங்கள் பெறுவதற்குப் பலரிப்போ காத்துள்ளார்
    மாநாடு நடத்துதற்கும் மாத்திட்டம் வகுத்துள்ளார்
    மாவெழுச்சி கொள்வதற்கு வைரசும் பார்த்திருக்கு

    திட்டமிட்டுத் திட்டமிட்டு திட்டமிடல் திகைத்திறது
    நட்டமெலாம் குவிந்தபடி நாளுமே போகிறது
    திட்டமிடும் மனமிப்போ புத்தாண்டைப் பார்க்கிறது
    புத்தாண்டு புதுத்திட்டம் கொண்டெமக்கு வந்திடுமா

    நலம்பெருக வேண்டுமென்று நாமிறையை வேண்டிடுவோம்
    நாநிலத்தின் துயரகல நாளுமே வேண்டிடுவோம்
    நவநவமாய் பெரிகிவரும் நோயகல வேண்டிடுவோம்
    நல்லதொரு புத்தாண்டை நாடுகாண வேண்டிடுவோம்

    Share
  • கோவையிலிருந்து வெள்ளியங்கிரி

    கோவையிலிருந்து வெள்ளியங்கிரி

    கோவையிலிருந்து  வெள்ளியங்கிரி அடிவாரம் வரைக்கும் அண்மையில் நாங்கள் சென்று வந்தோம். வழியெங்கும் அருமையான இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம். தென்னந்தோப்புகள், வாழைத் தோப்புகள், பாக்குத் தோப்புகள், நெல் வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், மஞ்சள், சோளம், காலிபிளவர்…. என விதவிதமான பயிர்கள் விளைந்து நிற்கக் கண்டோம். கூடவே புதுப் பொலிவுடன் காட்சி தரும் கோவில்கள், கல்லூரிகள், சாலைகள், பழைமை மாறாத வீடுகள், கடைகள் எனப் பலவும் கண்ணுக்கு விருந்து. கொங்கு மண்ணின் வளத்தையும் சிறப்பையும் ஒருசேரக் கண்டோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேலைக்காக (சிறுகதை)

    வேலைக்காக (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச்  சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர் – 613 010.
    கைபேசி: 6381629365

    சென்னை செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர். மாநகரின் பரபரப்பு அதிகம் இல்லை. அருகருகே இரண்டு தனியார் பள்ளிக் கூடங்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தனவே தவிர வேறு பரபரப்பு எதுவும் தென்படவில்லை.

    மாநகரப் பேருந்தில் இருந்து இறங்கி கையில் ஃபைல்லோடு நடந்து வந்த பெண் ஒரு பள்ளியினுள் நுழைந்தாள். காவலர் கேட்டார், “என்ன விசயம்”?

    “டீச்சர் வேலைக்காக… வாய்ப்பு இருக்குமானு கேட்க…”

    “அதோ அந்த ரூம்தான் கரஸ்பான்டன்ட் ரூம் போய் பாருங்க”

    குளிரூட்டப்பட்ட நாகரீக அறையின் முன் சென்று நின்றாள். அங்கிருந்த தாளாளரின் உதவியாளரிடம் தகவல் சொன்னாள். அவன் அமரச் சொன்னான். சிறிது நேரத்தில் தாளாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.

    மெதுவாக உள்நுழைந்த அவளை உற்றுப்பார்த்தப்படி அமர்ந்திருந்தார் தாளாளர்.

    “குட்மாணிங்சார். மே ஐ கம் இன் சார்..”

    “வாம்மா… உட்காரு”

    அமர்ந்த அவள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் “சார் என்னுடைய பயோடேட்டா” என்று தன்விவரக் குறிப்பை நீட்டினாள். பொறுமையாகப் பார்த்த அவர் சான்றிதழ்களைக் கேட்டார். ஃபைலோடு கொடுத்தாள். பார்த்துவிட்டு தாளாளர், “அம்மா எம்.ஏ., பி.எட்., நல்ல கிரேடுல பாஸ் பண்ணிருக்கீங்க… அனுபவமும் இருக்கு, உங்க தகுதிக்கு… அதிகமா சம்பளம் தரலாம். ஆனா எங்களால மாதம் ஏழாயிரம் ரூபாய்தான் தரமுடியும். ஓகேனா அடுத்த வாரம் மண்டே ஜாய்ன் பண்ணலாம். மற்ற ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் ஃபிரின்ஸ்பால் சொல்வாங்க” என்றார்.

    “சார் ஹவுஸ் ரென்ட் மட்டுமே செவன் தவுசன்ட் …”

    “எங்களுக்கும் கூடுதலாதர ஆசைதான். உங்க நாலட்ஜ்க்கும், ஃபெர்சனாலிட்டிக்கும் கண்டிப்பா கூடுதலா தரலாம். ஆனா இப்ப வாய்ப்பில்லமா… ஆமா பயோ டேட்டா பார்க்கும் போது ஆறு மாசமா வேலையில்லாம இருந்தது தெரியுது எப்படி சமாளிச்சீங்க…”

    “வீட்ல நான் மட்டும்தான் ஏனிங் பெர்சன் சார். ஹவுஸ் ஓனர் ரெண்ட்ட அட்வான்ஸ்ல கழிச்சிகிட்டுவரார். பக்கத்துல உள்ள பிள்ளைங்களுக்கு டியூசன் எடுக்கிறதுல கொஞ்சம் கிடைக்கும். ரேசன்ல அரிசியும், உப்பும் ஃப்ரியா கிடைக்குது… சமாளிக்கிறோம் சார்..”

    “ஏழாயிரம் ரூபாய்தான் முடியும்மா” அவரின் கண்டிப்பான பதிலால் அவளின் சோகம்கூட ஒரு நொடி  விலகி மீண்டும் ஒட்டியது,

    “சர்டிபிக்கேட் ஃபைலைக் கொடுங்க சார் வீட்டுக்குப் போயிட்டு பதில் சொல்றேன்…”

    ஃபைலை வாங்கியபடி வெளியே வந்த அவளின் துக்கம் அவளுக்கே அவமானமாக இருந்தது. சாப்பாட்டுகே போராடும் நிலை என்றாவது மாறுமா? அவள் உள்ளம் பதைத்துக் கொண்டிருந்தது.

    சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

    “பார்க்க டீசன்டா இருக்கிற… கவனமா பிளாட்ஃபாம்ல போம்மா” என்று பைக்கில் சென்றவர் சொல்லும் போதுதான் இயல்பாகி பக்கத்துப் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளையும் மீறி கண்ணில் திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த பள்ளியின்  தாளாளர் அறையை அடைந்தாள். அங்கிருந்த உதவியாளரிடம் தன் விவரக் குறிப்பைக் கொடுத்தனுப்பினாள். வரச்சொன்னார். வலியும், சோகமும் அவள் அழகைக் கொன்று கொண்டிருந்தாலும் அவள் நடையின் கம்பீரத்தையும், நாகரீகத்தையும் வைத்து எடைபோட்ட தாளாளர் ஏதேதோ கேள்விகள் கேட்டார். பழகிய கேள்விகளுக்கு அவள் உதடுகள் யதார்த்தமாய் பதிலளித்தன. கடைசியாக விசயத்துக்கு வந்தார்.

    “அம்மா மாசம் நான்காயிரம் ரூபாய்தான் சம்பளம்… சரி வேறு எங்கெல்லாம் பயோ டேட்டா குடுத்து இருக்கீங்க?”

    “சார் உங்க ஸ்கூல வாய்ப்பு கேட்டுதான் வந்திருக்கேன். இந்த சேலரி போதாது சார்” என்றபடி ஏனோ வேகமாக எழுந்தாள்.  நீட்டிய அவள் கைகளுள் ஃபைலை திணித்தார் தாளாளர். வெளியேறிய அவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் மனதில் பயமும் சோகமும் படர ஆரம்பித்தது,

    திடீரென திரும்பி முதலில் சென்ற பள்ளியை நோக்கி நடந்தாள். தாளாளர் அவர் அறையின் வெளியே நின்றுகொண்டு இருந்தார்.

    “குட்மாணிங் சார்… ஜாய்ன் பண்ணலாம்னு…”

    “ஓகே.. ஓகே.. வாழ்த்துகள். பியூன் இவங்கள ஃபிரின்ஸ்பால்கிட்ட கூட்டிக்கிட்டுபோ”

    அழுதுவிடகூடாது என்பதில் உறுதியாக இருந்த அவள் முதல்வர் அறையை நோக்கி நடந்தாள்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 98

    பழகத் தெரிய வேணும் – 98

    நிர்மலா ராகவன்

    உணர்வும் முதிர்ச்சியும்

    “இதை நான் செய்யவில்லை. அவள்தான் இப்படிச் செய்யச்சொன்னாள்”.

    “அவள் குறுக்கிட்டதால்தான் நான் செய்ய ஆரம்பித்த காரியத்தில் தவறு நேர்ந்துவிட்டது”.

    இப்படிக் கூறுகிறவர்கள் சிறுவயதினர் மட்டுமில்லை. வயது ஏறியிருந்தாலும், உணர்ச்சிபூர்வமாக முதிர்ச்சி அடையாதவர்கள் பலர் உண்டு.

    கதை

    யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஆசிரியை கமலம். அவளைப் பிறர் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமோ?

    தான் எப்போது குறுக்கிடலாம் என்றே காத்திருப்பாள், தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள.

    `நீ எப்போது காரோட்டப் பழகினாய்?’

    `நீ எப்போது தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டாய்?’

    கமலத்தை நோக்கிக் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இப்படித்தான் ஆரம்பிக்கும் :“நான் பம்பாயில் M.SC பண்ணிக்கொண்டிருந்தபோது..!”

    இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு முறையால் வதைக்கப்பட்டிருக்கலாம். தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொள்ள பிறரைச் சாடுவார்கள். அப்போதுதானே தாம் உயர்ந்துவிட்டதைப்போல் தோன்றிவிடும்!

    (ஆங்கிலமோ, மலாயோ, கமலத்தின் உச்சரிப்பு வேற்றுமொழியின் வாடையுடன், வித்தியாசமாக இருக்கும். `அவள் பேசுவது யாருக்குப் புரிகிறது!’ என்று பிறர் கேலி செய்வது அவளுக்குத் தெரியாமல் போயிருக்குமா!)

    அவளைப்போல், உடல் வளர்ந்திருந்தாலும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்குப் புதியனவற்றை அறியும் ஆர்வம் இருக்காது. அது பிறரைப் பற்றிய வம்பாக இருந்தால் மட்டும் சுவாரசியமாகப் பங்கெடுப்பார்கள்!

    கதை

    என் பள்ளித் தலைமை ஆசிரியை தன்கீழ் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தினாள். பள்ளி முழுவதும் கேட்கும்படி எந்த ஆசிரியர் பெயரையாவது சொல்லி, அவர் செய்த தவற்றையும் பிரகடனப்படுத்துவாள்.

    இதுபோன்ற செய்யக்கூடாத பலவற்றைச் செய்தாள்.

    பொறுக்கமுடியாது, நான் அவள் செய்த அட்டூழியங்களையெல்லாம் பட்டியலிட்டு, தினசரிக்கு அனுப்பினேன். (அவள் பெயரைப் போடவில்லை. ஆசிரியருக்கு மட்டும் எந்தப் பள்ளி என்று குறிப்பு அனுப்பியிருந்தேன்).

    அது வெளியானதும், நானடைந்த பிரபலத்தைப் பொறுக்கமுடியாது, “இதனால் உனக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று தெரியுமா?” என்றாள் கமலம், சவாலாக.

    “எழுதி அனுப்புமுன்னரே எல்லாவற்றையும் யோசித்துவிட்டேன்,” என்றேன் அலட்சியமாக.

    என்னை அதிர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்று அவள் கேட்டிருப்பாள். நான் அடையாத அதிர்ச்சி அவளிடமே திரும்பியது.

    உணர்ச்சி முதிர்ச்சி கொண்டவர்கள்

    ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராது, எல்லோரையும் ஒரேமாதிரி நடத்துவதால், மதிக்கப்படுகிறார்கள்.

    ஆனால், அவர்களை துச்சமாக நடத்துகிறவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவார்கள்.

    கதை

    செடிகளை விற்பனை செய்யும் நர்சரி அது.

    வேறு நாட்டைச் சேர்ந்த இளம் தொழிலாளி செடிகளை விற்றுக்கொண்டிருந்தான், தன் முதலாளியின் சார்பில்.

    “ஏய்! இது என்ன விலை?” என்று அதிகாரமாகக் கேட்டாள் ஒரு பெண்மணி. பெரிய காரில் வந்திருந்தாள். `இவனையெல்லாம் மதிப்பதாவது!’ என்ற அகம்பாவம் அவள் கேள்வியில் தொனித்தது.

    தான் தாழ்த்தப்படுவதை யாரால்தான் பொறுக்கமுடியும்!

    நான் வாங்கியதைப்போல் இரு மடங்கு விலையைச் சொல்லிவிட்டு, அந்த இளைஞன் என்னைப் பார்த்து, ரகசியமாகச் சிரித்தான்.

    தாம்பத்தியத்தில் உணர்ச்சி வேறுபாடு

    கதை

    ராமனுக்கும் சீதாவுக்கும் பெயரில் மட்டும்தான் பொருத்தம்.

    இருவரும் காரில் போகும்போது ஏதாவது தவறு செய்துவிட்டால், “உன்னோடு பேசியதால்தான் இப்படி!” என்று மனைவிமேல் பாய்வான் ராமன்.

    பேசியது அவன். தவறு செய்ததும் அவன். ஆனால், நடந்தது அவள் குற்றம்.

    தன் துணையாகவே இருந்தாலும், மனைவி வெற்றி அடையும்போது சிறுமையாக உணர்வார்கள் சில ஆண்கள். அதை மறைக்க, சமயம் கிட்டியபோதெல்லாம் அவளை மட்டம் தட்டுவார்கள் – பொது இடங்களில்கூட.

    அவர்களது குழப்பம் புரிந்து, அவ்வப்போது புகழ்ந்து, `எனக்கு நீங்களும் முக்கியம்தான்!’ என்பதுபோல் ஆதரவாக நடந்துகொண்டால், நாளடைவில் சற்றே மாறும் சாத்தியக்கூறு உண்டு.

    கதை

    திருமணத்திற்குப்பின் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள் மூர்னி. அவள் படிப்பை ஒட்டி, பெண்ணியத்தைப்பற்றி என்னைப் பேட்டி காண வந்திருந்தாள்.

    மலாய், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த தேர்ச்சி இருந்ததால், பிரபலமானவர்கள் சிலரைப் பேட்டி கண்டு, தினசரிகளுக்கு அனுப்பியிருந்தாள்.

    ஆங்கிலத்தில் சிலமுறை வெளியானதும், `இவள் தன்னை மிஞ்சிவிடுவாள் போலிருக்கிறதே!’ என்ற பயம் ஏற்பட்டது அவள் கணவனுக்கு.

    “அதன்பின், மூன்று நாட்கள் என்னுடன் பேசவேயில்லை,” என்று என்னிடம் தெரிவித்தாள். “நீங்கள் கூறிய கருத்துகளை எழுதி அனுப்ப தயக்கமாக இருக்கிறது. என் கணவர் மீண்டும் கோபித்தால் என்ன செய்வது?” என்று குழம்பினாள்.

    பல பெண்கள் திருமணத்திற்குமுன் கதை, கட்டுரை என்றெழுதி, பத்திரிகைகளில் அவை பிரசுரமும் ஆகியிருக்கும்.

    கல்யாணத்திற்குப்பிறகு அவர்களில் பெரும்பாலோர் காணாமல் போய்விடுகிறார்களே, ஏன்?

    `வீட்டு வேலை, குழந்தைகள்,’ என்று ஏதேதோ காரணம் காட்டினாலும், கணவரது பொறாமையைத் தூண்டிவிடுவானேன், இல்லறத்தில் குழப்பம் ஏற்படச் செய்வானேன் என்றுதான் யோசித்திருப்பார்கள்.

    `முன்பெல்லாம் நிறைய எழுவாயே! இப்போது ஏன் விட்டுவிட்டாய்?’ என்று அப்படியொரு மனைவியைக் கேட்கும் கணவன் தன் சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்கக்கூடும் என்பதை உணராதவன்.

    பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கக்கூடும் என்பது அப்படிப்பட்டவர்களுக்குப் புரிவதில்லை. தம் உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதால், தாக்கப்படும்போது குறுகிவிடுவார்கள்.

    தொடர்ந்து எழுதும் பெண்கள்?

    இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன.

    ஒன்று, கணவர் ஊக்குவிக்கிறார், இல்லையேல், மனைவி எழுதுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    (பிறரை ஊக்குவிப்பவர்கள் உணர்வு முதிர்ச்சி கொண்டவர்கள். எவ்விதத்திலும் பிறரைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். அதேபோல், பிறர் தம்மைக் கட்டுப்படுத்துவதையும் விரும்பாதவர்கள்).

    இரண்டு, எந்த எதிர்ப்பையும் லட்சியம் செய்யாது, எழுத்தே உயிர்மூச்சு என்றிருக்கும் பெண்கள்.

    எத்துறையில் பீடுநடை போடும் பெண்களுக்கும் இவை பொருந்தும்.

    அவர்களது ஆர்வத்தைத் தடைபோடுவதுடன் நில்லாது, கண்டபடி பழிக்கும் கணவன்மார்களைப் பொறுக்க முடியாததால்தான் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள் நடிகைகள்.

    பழி என்னவோ, பெண்களுக்கு.

    குடும்பத்தில் பாரபட்சம்

    ஒரே குடும்பத்தில் குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டால், தாழ்த்தப்பட்ட குழந்தையின் ஆத்திரம் பிறரையும் துன்புறுத்தவேண்டும் என்ற ஆத்திரமாக மாறலாம். அல்லது மன இறுக்கத்தில் கொண்டுவிடும்.

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகும்போது, உயர்ந்தவர்களாக உணர்வோம். மேலான நிலையில் இருப்பவர்களுடன் பழக நேரும்போதோ, அவர்களுக்குச் சமமாக நடிக்க வேண்டியிருக்கும்.

    இப்பழக்கத்தால், சந்திப்பவர்கள் எல்லாரையும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தத் தவறிவிடுவோமே!

    குறையை நமக்குள் வைத்துக்கொண்டு, “ஏனோ, யாருமே என்னை மரியாதையாக நடத்துவதில்லை!” என்று வருந்துவதால் என்ன பயன்?

    கதை

    ஆசிரிய மேற்பயிற்சியின்போது, எங்கள் வகுப்பில் ஒருவர் கூறியது: “நான் என்ன செய்தாலும் என் தந்தையின் அன்பைப் பெற முடியவில்லை. என்னிடம் குறை கண்டுகொண்டே இருக்கிறார்!”

    அவர் முகத்தில் தாங்கமுடியாத வருத்தம். தங்கையிடம் மட்டும் அன்பைப் பொழிகிறாரே என்ற குழப்பம்.

    அவருக்குச் சித்திரம் வரைவதில்தான் ஆர்வம் என்று பிறகு கேட்டறிந்தேன். தந்தையோ, `விஞ்ஞானத்தில் பட்டம் வாங்கு,’ என்ற வற்புறுத்தியிருந்தார்.

    பிடிக்காத துறையில் அரைமனதுடன் ஈடுபட்டவர் அதில் சிறக்கவில்லையென்று, தந்தை ஓயாது தம் வார்த்தைகளாலேயே அவரை வதைத்தார் – பிறர் எதிரிலேயே.

    தந்தை அதிகம் படிக்காதவர். நிறைவேறாதுபோன கனவை மகன்மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.

    மகனுக்கு என்ன பிடிக்கும், எது உகந்தது என்று புரிந்துகொள்ள விரும்பாது, தன் அதிகாரத்தை அவன்மேல் செலுத்த ஆரம்பித்தார். நாளடைவில், அதிகாரமே போதையாக ஏறியது. அதற்குப் பலி மகன்.

    நம்மை வருத்துகிறவர்கள் தம்மைத்தாமே ஏற்க முடியாதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்கள்மீது கோபம் வராது. பரிதாபம்தான் எழும்.

    Share