Blog

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 7

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 7

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னலில்’ சில பாடுபொருள்கள்’

    முன்னுரை

    இலக்கியம் சமுதாயத்திற்கானது என்பதால் அதன் நோக்கம் சமுதாயத்தைச் செப்பனிடுவதாகவே இருக்க முடியும். சமுதாயத்தைச் செப்பனிடுவது என்பது எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் என்றாக்குவதோடு பொருளாதாரத்திலும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதும் அடங்கும். இவை முழுமையாக நிறைவேற வேண்டுமானால் இலக்கியத்தின உள்ளடக்கம் இவற்றை நோக்கியதாக இருத்தல் வேண்டும். எனவே  தமிழிலக்கியத்தைப் பொருத்தவரையில் இலக்கியத்திற்கான கூறுகளுள் ‘உள்ளடக்கம்’ என்பது தலைமை சான்றது என்பது பெறப்படும். ‘இலக்கியத்தின் நோக்கம் இன்புறுத்துவது’ என்பதற்கு இது எதிரானதன்று. கூடுதலானது. ஏனைய கூறுகளை விட முதன்மை பெறுவது. மாபெரும் காப்பியங்கள் கூட சில குறிப்பிட்ட நீதிகளைத் தமது காப்பிய நோக்கங்களாகத் தொடக்கத்திலேயே வலியுறுத்துவதற்கு இதுதான் காரணம். இது பாடுபொருளைத் தெரிவு செய்வதில் படைப்பாளை நிதானிக்க வைக்கிறது. இளங்கோவடிகள் கண்ணகியைப் பாடியதற்கும் கம்பன் இராமனைப் பாடியதற்கும் பாரதி பாஞ்சாலியைப் பாடியதற்கும் இதுதான் காரணம். மூன்று வெவ்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய இந்த இலக்கியங்களை ஒரு முறை கற்றாரும் உணர்ந்து கொள்ளக் கூடிய உண்மை இது. இந்த அடிப்படையில் கவிஞர் திரு மீனாடசி சுந்தரம் அவர்கள் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னல்’ என்னும் கவிதைத் தொகுதியில் நான் கண்ட சில பாடுபொருள் பற்றிய திறனாய்வை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்க முயல்கிறது.

    எண்ணம் பிற்நத மின்னல் – ஓர் அறிமுகம்

    வஙகி மேலாளராகப் பெரும்பாலும் த்மிழகத்தைத் தவிர்த்த வெளி மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மீனாடசி சுந்தரம் அவர்கள் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதை நூல் பல நூறு ‘பயிற்சிக் கவிதைகளைத்’ தனது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து பயிற்சிக் கவிதைகளே நூலாகும் ‘விந்தையை’ முதன்முதலாகக் காண்கிறேன். முயற்சியும் நமபிக்கையும் கலந்த கலவையின் முகப்போவியமாகத் திகழ்கிறது இந்த நூல். யாப்பமைக கவிதைகளை மரபுக்கவிதைகள் எனச் சொல்லி அச்சுறுத்துவோர் ஒரு பக்கம் தம் ‘பணி’யைச் செய்து கொண்டிருந்தாலும் பணி ஓய்வுக்குப் பின்னர் அதாவது தமது அறுபதாம் வயதில் தேமா புளிமா கற்று ஆசைபற்றிக் கவிதை எழுதிய கவிதைக் காதலர் இவர். இந்த நூலில் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். எல்லாப் பாடல்களுமே விருத்தங்களாக அமைநதிருப்பதும் அவற்றுக்கான வாய்பாடுகளை அவராகவே வரையறுத்துச் சொல்லியிருப்பதுமாகும். இது எந்த அளவுக்குக் கவிதையின் வெற்றிக்குத் துணை நிற்கிறது என்பது தனி வினா!. புதுமை செய்து காட்ட வேண்டும் என்னும் அன்னார் நோக்கத்தில் பழுதிருப்பதாகத் தெரியவில்லை. இனி தொடக்கநிலைக் கவிஞர்கள் அதாவது பயிற்சிக் கவிஞர்கள் விருத்தங்களை எழுதிப் பழகுவது என்பது கவிமரபே! எனினும் சிந்துகளில் பயிற்சி எடுப்பது தொடைவிகற்பங்கள் வசப்பட ஏதுவாகலாம். மீயுயர் தகுதியை (DISTINCTION)  இந்தக் கவிதை நூல் பெறுகிறது என்று சொன்னால் எனக்கு நானே சிரித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் முதல்வகுப்பில் (FIRST CLASS) தேரியிருக்கிறது என்று நான் சொல்கிறபோது அதனை அவ்வளவு எளிதாக யாரும் மறுத்துவிட முடியாது. மறுப்பாரைக் களங்காண நான் காத்திருக்கிறேன். பயிற்சித் தேர்விலேயே முதல் வகுப்பில் தேரிய மாணவன் எழுதிய தேர்வுத் தாளாக இநதத் தொகுப்பு திகழ்கிறது. இந்த நூலின் முதல்வகுப்புத் தகுதிக்குக் கவிதைகளின் ஏனைய கூறுகளைவிட பாடுபொருள் தேர்வே முன்னிற்கிறது என்பதால் அவற்றில் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டுவதை  இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது.

    பாடுபொருளும் பாவலரும்

    கவிதையின் கூறுகளில் கருத்து அல்லது பாடுபொருள் என்பது மிகச் சிறிய பங்களிப்பையே தரும். அதாவது கருத்தே கவிதையாகிவிடாது. ஒதுக்கப்பட்ட அல்லது பிறரால் புறக்கணிக்ப்பட்ட,நோக்கிற்கு ஆளாகாத பாடுபொருளைப் பாடுவதாலேயே அது சிறந்துவிடாது. அதனை வெளிப்படுத்தும் கற்பனை கலந்த உத்திகளே அவற்றின்  நிலைப்பேற்றுக்குக் காரணமாகும். ‘கற்பு’ என்னும் பாடுபொருள் பலராலும் பாடப்பட்டிருந்தாலும் சிலம்பும் இராமாயணமும் நிலைத்திருப்பதே இதனை உறுதி செய்யப் போதுமானதாகும். எனவே கவிதையின் சிறப்பு பாடுபொருளில்  மட்டும் இல்லை  வள்ளுவர் ஈரடியில் சொன்னவற்றைத்தான் பதினெண் கீழ்க்கணக்கு நான்கடிகளில் சொல்லுகிகின்றன. ஆனால் பயன்? வள்ளுவம் பெற்ற புகழை நு}ற்றில் ஒரு பங்கினைக் கூட பதினேழு  நூல்களில் எதுவும் பெறவியலவில்லை.

    பாடுபொருள் வெற்றி பெறவது எப்போது?

    குமரி முனையையும் பாடலாம் குண்டூசியையும் பாடலாம். முன்னதைப் பற்றிய கவிதை தோல்வியடையலாம். பின்னதைப் பற்றிய கவிதை வெற்றியையும் அடையலாம். நாங்கூழ் புழுவைப் பற்றிப் பேராசிரியர் சுந்தரனார் பாடி வெற்றி பெற்றிருக்கிறார். அற்பப் புழு எனக் கருதக்கூடாது என்பதை, நடராசனின் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது. எம்மண்ணையும் நன்மண்ணாக்கி எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங் கருத்துமாக உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான். மனிதர்க்கான வாழ்வியல் ரகசியத்தை உணர்த்தியதால் மண்புழு இலக்கியத் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

    பார்ப்பது வேறு நோக்குவது வேறு

    கவிதைப் படைப்பில் கவனிக்க வேண்டிய இரண்டு கூறுகள் இன்றியமையாதன. எல்லாரும் பார்க்கிறார்கள். போகிறார்கள். கவிஞன் நோக்குகிறான். சிந்திக்கிறான். மற்றவர; எல்லாம் பார்த்துச் செல்வதால் சிந்திப்பதில்லை., இவன் நோக்குவதால் சிந்திக்கிறான். ‘சென்று பார்த்தாலும் பார்த்துச் சென்றாலும் பயனும் இல்லை., பாடலும் வராது. ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். மலர்களின் சிவப்பை எல்லாரும் பார்த்தனர் ;. சென்றனர் பாரதிதாசனுக்குத்தான் அந்தச் சிவப்புக்குப் பின்னால் இருக்கும் உழைப்பாளியின் குருதி தெரிகிறது.எல்லாரும் பார்த்த் மலர்தான் அது. இதுதான் கவிஞனின் நோக்கு. மற்றவர்களுக்கெல்லாம் பூனைக்குட்டியாகத் தெரிவது பாரதிக்குத்தான் பூனையின் பிள்ளையாகத் தோன்றுகிறது.. காரணம் அவனுடைய பார்வை  பூனைக்குட்டிகளையே குழந்தைகளாக நோக்கியவருக்கு  இந்திய மக்களை ஒருதாய்ப் பிள்ளைகளாகக் கருதுவதில்; சங்கடம் இல்லை. இதனால் நாட்டின் ஒருமைப்பாடு பற்றிய சிந்தனை பாரதிக்கு எளிதாகக் கைவந்தது. இயற்கையாகவும் அமைந்து. அமைவது. மற்றவர்களிடமிருந்து கவிஞன் வேறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த வேறுபாடுதான் ஒருவனைக் கவிஞனாக்குகிறது.

    சோப்புப் பெட்டி கூட்டணி அமைத்த பொன்னடியான்

    பல்வகைச் சோப்புக்களைப் பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சோப்பு வைக்கும் பெட்டியைப் பற்றிய சிந்தனை பொன்னடியாருக்குத்தான் வந்திருக்கிறது. சோப்புப் பெட்டியைப் பாப்பதும் பயன்படுத்துவதும் எல்லாருக்கும் பொதுவானவையே. ஆனால் உடம்பைத் தூய்மைப்படுத்தும் சோப்புப் பெட்டி அழுக்காய் இருப்பதைப் பொன்னடியாரால்தான் நோக்க முடிகிறது. இந்த முரணே கற்பனையைச் சிறக்கச் செய்கிறது. இத்தகைய கற்பனையின் பரிணாமம் கவிஞனே சோப்புப் பெட்டியாவதில் சென்று முடிந்திருக்கிறது.

    “தங்கள் தூய்மையும் எங்கள் தூய்மையும்
    ஒன்றே என்பதை உணர மறுத்தால்………….
    இந்தக் குளியல் அறையில் என்போல்
    ஓரமாக ஒதுங்கிக் கிடக்கும்
    வாளி குவளை அனைத்தையும் சேர்த்து
    அரசியல் வாதிகள் அமைப்பதைப் போல
    பொருந்தாக் கூட்டணி புதிதாய் அமைப்பேன்!
    …………………………………………….
    எங்களைப் பற்றியே கவலை கொள்ளாரை
    மருத்துவர்களிடம் அலைய வைத்து
    அவர் உடல் நலத்தை, சோ;த்த பணத்தை
    இருக்கும் அமைதியை இழக்க வைப்பேன்!
    என்று முழங்கிய சோப்புப் பெட்டியின்
    எழுச்சியால் குளியல் அறையே கொதித்தது!”

    என்னும் பகுதி பொன்னடியாரின் கற்பனையின் உச்சத்தைக் காட்டுவதாக உள்ளது. அஃறிணையைப் பேசவைப்பது மரபு சார்ந்த கவித்திறன். அதற்குக் கவிஞன் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருளும், மானுடம் சார்ந்த உரிமை முழக்கத்தைச் சோப்புப் பெட்டிக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கும் பாங்கும் இறுதியாக குளிர்ச்சியாக இருக்கும் குளியல் அறையையே கொதிக்க வைத்துச் சமுதாயப் புரட்சியை ஒரு குறியீடாகக் காட்டியிருக்கும் படைப்புத் திறனும் பெரிதும் போற்றத்தக்கனவாக உள்ளன. கோலமாவு விற்பவளின் அலங்கோல வாழ்வைப் பாடியிருக்கிறார் பொன்னடியான்.    கொசுவைப் பாடியிருக்கிறார். பூசணிக்காயைப் பாடிய பாரதிதாசன்  . அதன் கைவண்ணத்தையும் கறிவண்ணத்தையும் பாடி எதனையும் பாடுபொருளாக்க முடியும் என்பதை நிறுவியிருக்கிறார்;. கவிமணி மாட்டையும் கன்றையும் பாடிக் குழந்தைகள் மனத்தில் மாறாத இடம் பெற்றிருக்கிறார். பசும்புல்லை உண்டு வெண்மையாகப் பாலைக் கறக்கும் விந்தையைப் பாடியிருக்கிறார் படைப்பாளுமை விஞ்சி நிற்கிறபோது கண்ணில் படும் எதுவும் மனத்தில் தோன்றும் எதுவும் கவிதையாகப் பாpணமிக்க இயலும். கவிஞர; மேத்தா அரளிப்பூவைப் பாட வைத்திருக்கிறார்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வெள்ளாட்டைக் கவிஞர் பொன்னடியானும்  பாடியிருக்கிறார். துணிந்து சேவலையே தூதுவிட்டவர் பட்டுக்கோட்டையார். சிரங்கைச் ‘சித்தன் சிரங்கப்பராயன் என்று பாடினார் கவிமணி.

    நாயைப் பாடிய சுந்தரம்

    பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை

    “யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
    கேன்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
    மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் 213)

    என்பன நாலடியார் வரிகள். இனி சிலேடைக் கவிஞர் காளமேகம் தமது சிலேடை வெண்பாவில் நாயைப்பயன்படுததியிருக்கிறார்

    ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
    நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
    தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
    தேங்காயும் நாயுமெனச் செப்பு .

    நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காண முடிகிறது,

    “வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி”   (பொரு. 42)

    “உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
    வயங்கு இழை உலறிய அடியின்”  (சிறு. 17)

    “மதம் தபு ஞமலி நாவின் அன்ன
    துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி”  (மலை.42)

    என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம் தூதாகச் சென்ற அங்கதனைத் தன் வலைக்குள் சிக்கவைக்கு முயன்ற இராவணன் அவனுக்குக் கிட்கிந்தாவிற்குத் தலைவன் பதவி தர முனைகிறான். அப்போது அங்கதன் கூறுகிறான்

    “நீ தரக் கொள்வேன் யானே
    இதற்கு இனி நிகர் வேறுஎண்ணின்
    நாய்தரக் கொள்ளும் சீயம்
    நல்அரசு என்று நக்கான்”

    வறுமையினால் தாழ்வுற்ற காலத்து ஒருவனுக்குச் செய்யும் உதவிபோல் நாயை உயர்த்த நல்ல தமிழைப் பயன்படுத்துகிறார் சுந்தரனார். இது மரபுவழிச்சிந்தனையை மீட்டெடுத்தல் என்றும் கருத முடியும். அவர் பாடுகிறார்.

    “சிவப்புடன் பச்சை வண்ணம்
    சீர்பிரித்தறியா கண்ணில்
    உவப்புடன் அனபு மட்டும்
    உறைந்திடும் வண்ணம் கொண்டேன்
    செவித்திறன் கூர்மை கொண்டு
    சிற்றொலி உணர்ந் தறிந்தேன்
    புவியெலாம் புகழும் என்றன்
    புதிர் எனும் முகரும் தன்மை”

    பங்குச் சந்தையில் உயர்ச்சியும் தாழ்ச்சியும் இருப்பதுபோல தமிழிலக்கியத்தில் உயர்ச்சியில் இருந்த நாய் மணிவாசகர் முதலிய அடியவர்களால் தாழ்ச்சியை அடைந்து மீண்டும் உயர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது நாயைத் தவிசேற்ற முயன்றவரில் நமது செல்வ மீனாட்சி சுந்தரனார் முன்களக் கவிஞராகவும் திகழகிறார்.

    சிரிப்பைப் பாடும் செல்வ மீனாடசி

    நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று மெய்பாடுகளின் நிரலில் நகையை முன்வைத்துத் தொடங்கினார் தொல்காபபியர். உயிரினங்களுள் மனிதனை அடையாளப்படுத்தும் தலையாய காரணி அதுதான் என்பது அவர் உள்ளடக்கிடக்கை. சினம் நகையைக் கொல்லும எனவே நகையின் எதிரியாகச் சினத்தைக் கொண்டார் திருவள்ளுவர். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ என்று வள்ளுவர் கண்ட தலைவன் அனுமானித்தான. பெண்ணின் சிரிப்பு ஆணைக் கைதியாக்கும் என்பதைக் கண்ணதாசன் சிரித்துச் சிரித்து என்னைச சிறையிலிட்டாள்” என்பதனால் உணர்த்தினர்.

    நகைக்கு நகை என்று பெயர் வந்தது ஏன்?

    திருவள்ளுவர் நகையைக் கொல்லுவது சினம் (304) என்று நகைக்கு எதிராக்கியதை மீனாட்சி ‘வெகுளிக்கு எதிரானது நகை’ என அளவையியல் நுட்பத்துடன் பதிவு செய்கிறார். எபப்டி? நகைக்கு வெகுளி பகையானால் வெகுளிக்கு நகை பகைதானே? இந்தச் சிந்தனையை இந்தக் கவிதையில் காணலாம். இது ஒரு உத்தி. ஆனால் சிந்தனையின் படிநிலை வளர்ச்சி. உரைநடையில் இது எடுபடாது. ஆனால் கவிதையில் சிறக்கும். எதுபோல? ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு’ எனறால் எல்லாரும் சரிப்பார்கள். ஆனால் ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு’ என்றால் எல்லாரும் ரசிப்பார்கள். அது போன்றது இது.

    தற்குறிப்பேற்ற அணிக்காகவே மதுரையில் இல்லாத மதிலில் இன்னும் அந்த சாயம் போன மீன் கொடி பறந்து கொண்டிருப்பதாகத் தமிழாசிரியர்கள் நம்புகிறார்கள்.  செல்வமோ தொல்காப்பியர் நகையைத் தலைமை மெய்ப்பாடாக வைத்த காரணத்தைக் கவிதையில் சிந்திக்கிறார். நகைக்கான வேர்ச்சொல் ‘நகு’ இந்த வேர் நகுதல் அல்லது நகைத்தல் என்பதற்கானது.நகைக்கு அது வேர்ச்சொல்லாகுமா என்பதுபற்றிச் சொல்ல வேண்டியவர் மொழியாராய்ச்சி வித்தகர்களே. அணிகலன் என்பதே தமிழ். செய்யுளணி என்பதே வழக்கு. இருந்தாலும் நம்முடைய செல்வமீனாட்சி

    “கவர்ந்திடும் எழிலாள் கனிச்சுவைத் திரளாள்
    கனிந்திடும் சினநதனின் எதிராள்!
    உவப்பதின் மகளாள்! உருகிடும் மெழுகாய்
    உணர்வினில் விழுந்திடும் மழையாய்
    தவழ்ந்திட இதழில் பொலிவுறும் முகமும்
    தண்மதி வந்ததோ எனவாய்
    தவறுதல் இன்றி அணிந்திட வேண்டித்
    தமிழரும் நகையெனச் சொன்னார்!”

    என்று பாடுகிறார் பொறுமையென்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள் என்பது அந்தக் காலத்தில் கொடுமுடி கோகிலம் அன்னை கே.பி.சுந்தாராம்பாள் பாடிய பாட்டு. பொறுமையை நகையாச் சொன்னார் அவர். நம் செல்வமீனாட்சியார் நகையை நகையாக அணிந்து கொள்ளுங்கள் என்கிறார். இது ஒரு மரபுவழிச் சிந்தனை என்றால் பலருக்கும வியப்பாக இருக்கும். பணக்காரனுக்குப் புத்தி சொல்கிறபோது பணத்தைத் தொடர்புபடுத்தவேண்டும் என்பது திருவள்ளுவருக்குத் தெரியும். அதனால்தான்

    “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து”

    என்று பணிவை ஓர் செல்வமாக்கினார். தற்காலத்தில் நடமாடும் நகைக்கடைகளாக ஆண்கள் சிலரும் வலம்வருவதை வலைத்தளங்களால் அறிய முடிகிறது. நகையை விரும்பும் அத்தகைய ஆண் பெண் இருபாலாருக்கும் சிரிப்பின் சிறப்பை ‘நகை’ என்ற சொல்லால் புலப்படுத்துகிறார். என்ன ஒரு சங்கடம்?  இந்த நகைகக்கு வங்கிகள் கடன் தராதே என நினைக்கலாம்! வங்கிகளால் இதனை மதிப்பிட இயலாது என்பதே உண்மை!  சிரிக்கத் தெரிந்தவனுக்கு கடன் வராது. அது மட்டுமன்று ஒரு நல்ல ஆண்மகனுக்கு மற்ற திறன்களைவிட புன்னகைதான் நற்றிறன் ஆகும்.  இந்த விஷயத்தில் கம்பன் ஒரு புரட்சி செய்திருக்கிறான் ஆணின் விரிமார்பும், மலைத்தோளும் தாழ்ந்த தடக்கையுமே ஒரு பெண்ணைக் கவரும். ஆனால் இத்தனையும் இருந்தாலும் இராமனுடைய புன்னகைதான் சீதையைத் தடுமாறச் செய்தது என்று பாடுகிறான்

    “இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
    சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
    சுந்தர மணி வரைத் தோளுமே அல
    முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே “!

    என்பது கம்பன் பாட்டு. இராமபிரானின் கருத்த முடியோ, சந்திரமுகமோ, தாழ்ந்த தடக்கையோ மாணிக்கத்தோளோ சீதையைக் கவரவில்லயாம். இவற்றையெல்லாம் தான் காண்பதற்கு முன்பே தன்னுயிரை இராமபிரானின் புன்னகை கொள்ளை கொண்டதாம். கம்பன் அப்படிப் பாடியதைச் செல்வ மீனாட்சி இப்படிப் பாடியிருக்கிறார். எழில்நங்கையாக உருவகத்திருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை?’ எனச் சந்தைப் படுத்தியவர்களும் உண்டு.

    கோடுகளும் குடைக்கம்பிகளும்

    ஒன்றைப் பிறிதொன்றாக நோக்கி மயங்குதல் இலக்கியத்தில் இயல்பு. இராமனிடம் மயங்கியவள் சூர்ப்பனகை சீதையிடம் மயங்கியவன் இராவணன். எனவே இராவணன் சூர்ப்பனகையின் கண்களுக்கு இராமனாகத் தெரிகிறான். இராவணன் கண்களுக்குச் சூர்பபநகை சீதையாகத் தெரிகிறாள். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய கவிஞர்கள் இது போன்ற வெறும் கற்பனைகளுக்கு இடம் தராமல் தங்கள் உள்ளத்துக் கவலையை, தங்கள் பக்குவத்தைக் கவிதைப் பதிவில் காட்டிவிடுவார்கள். மகாகவி ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்று பாடியவன். உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று பாடியவன். பாட்டுக்காகப் பாடாமல் தான் பாவீத்ததைப் பாடியவன். பிறரெல்லாம் பூனையையும் அதன் குட்டியையைபும் பார்த்தார்கள். மகாகவி பாரதி இயல்பிலேயே உயிர்களை நேசித்தவராதலின் வெள்ளை நிறத்தொரு பூனை ஏங்கள் வீட்டில் வளருது கண்டீர்! பிள்ளைகள் பெற்றதப்பூனை’ என்று குட்டிகளைப் பிள்ளையாகத்தான அவரால் நோக்க முடிந்திருக்கிறது. தேசப்பற்றுடைய கவிஞர் மேத்தா இந்திய வரைபடத்தைப பார்ககிறார்.  அதிலே நெளியும் மாநிலங்களின் எல்லைக் கோடுகள்,ள நதிகளைக் குறிக்கும் கோடுகள் முதலியவற்றைக் கோடுகளாகக் கொள்ள அவரால முடியவில்லை. அவர் எழுதுகிறார

    “தேசப்படத்திலுள்ள கோடுகள்
    விடுதலப் போராடிய வீரித் தியாகிகளின்
    விலா எலும்புக்கூடுகள்” மு.மேத்தா

    மேத்தாவினால்தான் இப்படி நோக்கமுடியும். அதுபோல செல்வமீனாட்சி சுந்தரனார் குடை தன் வரலாற்றைக் கூற செய்திருக்கிறார். எப்படி? கம்பிகளுக்கு மேல் பின்னப்பட்டிருக்கும் கறுப்புத் துணியைத் தோல் என்கிறார். எனவே கம்பிகள் எலும்பாம்.

    “எலும்பும் தோலும் மட்டும்
    இணைத்தே கொண்டேன் என்னுடம்பை
    அழுகும் தசையைக் கொள்ளேன்
    அழகாய் மெலிந்த எழில்கொண்டேன்
    நழுவும் உடைகொள் கைபோல்
    நட்பில் இணைந்தோர் நலங்காத்தேன்
    தழுவிக் கக்கம் கொள்வார்
    தவமாய்ப் பெற்ற பிள்ளையென!

    எலும்பும் தோலுமாய் என்னும் உலக வழக்கைக் கவிதைக்குள் கொண்டு வருகிற உத்தி இது. இந்த உத்தி இன்னும் சிறக்க இன்னொரு படிமத்தையும் காடசிப்படுத்துகிறார். நாமெல்லாம் கைத்தடியைத்தான் மூன்றாவது காலாகச் சொல்லுவோம். ஐயா பெரியார் கைத்தடிக்கும் இது பொருந்தும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை மடக்கி ஊன்றி அதனைத் தாங்கிய குடையை  மூனறாங்கால் என்று பாடியவர் நமது செல்வமாகத்தான் இருக்க முடியும்.

    “நிலத்தில் என்னை ஊன்றி நிமிர்ந்தோர் கொண்ட மூன்றாங்கால்”

    வெயிலுக்கு நிழல்தரும் குடையை ஒற்கத்தின் ஊன்றுகோலாகப் பார்த்ததும் சிறப்பு! பாடியதும் சிறப்பு! கருப்பு களங்கம் என்பாரும் கூட கருப்புச் சேலைபோர்த்திய குடையைத்தாங்கி நடக்கிறாராம்!,

    ‘கட்டிக் கொள்ள முன்னம் கருப்புச் சேலை கொண்டோனே’

    என்று பாடி தமது கொள்கையை மிக இலாவகமாகப் பதிவு செய்திருக்கிறார் செல்வம்.

    கைக்கிளையில் தொடங்குவதுதான் காதல்

    ஆடியைத் தவிர வேறு எந்தப் பொருளும் ஒரே நேரத்தில் செயல்படாது. தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’ என்பது குறுந்தொகை. கைக்கிளை என்பதை ஒருதலைக் காதல் என்பது பிழைநோக்கு. அது காதலின் தொடக்கம். தலைவன்தான் முதலில் நோக்குவான். அந்த நோக்குதான் கைக்கிளை எனப்படும். ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை’ என்பது தொல்காப்பியம். எனவே கைக்கிளையே காதலின் தொடக்கம். இந்தத் தொடக்கத்தை நிகழத்த வேண்டியவன் ஆண். இது மரபு.  ஒரு பெண் தன் உள்ளத்துக் காதலையும் செயலையும் முனனெடுப்பது கருத்தியல் வளர்ச்சி. இலக்கியப் புரட்சி. இந்தப் புரடசியை நிகழ்த்திக்காட்டியவர் பாவேந்தர்.

    “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
    எண்ணுங்காலை கிழததிக்கு இலலை”

    எனத் தன் உள்ளத்துக் காதலை வாய்விட்டுச் சொல்லவே முடியாத இலக்கியத் தலைவியை முதலில் சமுதாயத் தலைவியாக்கினார் பாவேந்தர். சொல்வதென்ன?  செயலையும் நீயே தொடங்கு என்று வினைப்புரட்சி செய்தவர் பாவேநதர்.

    “…………………………………………………..அடி
    கோதை தொடங்கடி என்று சொன்னான் இன்பம்
    கொள்ளை கொள்ளை அந்த மாந்தோப்பில்”

    என்று தலைவியை வினைத்தொடக்கம் செயய்ச் சொனனார் பாவேந்தர் இல்லற வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை என்பது பாவேந்தர் கருத்து. வினையைத் தொடங்கி முடித்த தலைவிகளின் பட்டியலை நீளச் செய்கிறார் செல்வம். பாவேந்தரை வழிமொழிகிறார். ஆனால் அஞ்சுகிறார். பாவேந்தர் செயல் தொடக்கத்திற்கே அனுமதியளித்த பின் ‘காதலை மங்கை சொன்னால்’ என்ற நிலையிலேயே சிந்தனை வளர்ச்சியைக் காட்டுமா?

    “ஊதலால் நடுங்கும் தேகம்
    உலர்த்திடும் வெம்மை தேடி
    காதலாள் பக்கம் நின்று
    கனிவுடன் கொஞ்ச ஏங்கும்!
    மீதமாய் வைத்த லின்றி
    மேகமாய் பொழியும் அன்பால்
    காதலை மங்கை சொன்னால்
    கோதெலாம் கன்னல் சாறே!

    பழம் என்றாலே கனிந்ததுதான். கனிந்த பழம் என்றால்? மழலை என்றாலே கனிந்த சொல்தான். மழலையே கனீந்தால் எப்படி இருக்கும்? இப்படிச் சிந்தித்தவர் கண்ணதாசன். ‘கனியக் கனிய மழலை பேசும் கண்மணி’ என்பது அவர் சுவைத்த காதல். அப்புறம் இங்கே மீனாட்சி சுவைப்பதைப் பார்க்கிறோம். இவர் என்ன சொல்கிறார்? ‘கனிவுடன் கொஞ்ச’ என்கிறார். கொஞ்சுதல் என்றாலே கனிவுடன்தான் கொஞ்ச முடியும். கோபமாகவா கொஞ்சுவார்கள்? பி.எஸ். வீரப்பாவும் சி.டி.ராஜகாந்தமும் காதல் பாட்டில் வந்தால் என்ன ;ஆகும்? இவர் சொல்கிறார் கனிவுடன் கொஞ்ச வேண்டுமாம். அவர் அனுபவம். அவர் கொடுத்து வைத்தவர். கொஞ்சப்பட்டவர். தான் பெற்ற இன்பத்தை வையகமும் பெற வெண்டும் என்று விரும்புகிறவர். எல்லாரும் செல்வம் ஆக இயலுமா என்ன? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ‘தேன்வந்து பாயுது என்கிறார் பாரதியார். இவருக்குத் தன் காதலி தனது காதலைத்தனது மொழியில் தானே சொன்னால் காதெல்லாம் கன்னல் சாறாம். பாரதியாவது ‘வந்து பாயுது’ என்றார். இவருக்கு வந்து  பாய்ந்ததா? வராமல் பாயந்ததா என்பது தெரியவில்லை.

    நல்லினமா? புல்லினமா?

    தன்னுடைய குறிப்பை ஏற்றி உரைப்பதற்குத் தற்குறிப்பேற்றம் என்பது அணியிலக்கணப் புலவர்கள் அடிக்கடிச் சொல்லும் தனி மந்திரமான அணிமந்திரம். ஆனால் அந்தத் தற்குறிப்பேற்றத்தை வெளிப்படுத்துவதில் பல முறைகள் இருக்கின்றன என்பதைச சில கவிதைகளால் அறிந்து கொள்ள முடியும். அதாவது தற்குறிப்பேற்றத்தை  வினாவடிவிலும் அமைத்துக் காடட இயலும். அது ஒரு வகையான படைபபாளுமை.

    “பசுமையாம் புல்லைத் தின்றே
    பசுவதும் பால் கொடுக்கும்!
    பசுவது பொழியும் பாலைப்
    பச்சிளங்குழந்தை உண்ணும்!
    சிசுவதன் தாய்ப்பால் என்றே
    செப்பினால் தவறு முண்டோ?
    பசுமையாம் புல்லினந்தான்
    பார் இதின் உணவுக்கூடம்!

    அருகெனும் புல்ல ரைத்து
    அதில்வரும் சாற்றைக் அள்ளிப்
    பருகிட வாதம் பித்தம்
    பறக்குமே உடலை விட்டு!
    மருந்துடன் உணவும ஈந்து
    மனிதரின உயிரைக் காக்கும்
    இருந்தும் ஏன் புல்லினத்தை
    இழிகுலம் என்றே சொன்னார்?”

    ‘விசும்பின் துளிவீழின்அல்லால் பசும்புல் தலைகாண்பதும் அரிது என்பார் திருவள்ளுவர்.’ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்’ என்று உரைகாண்பார் பரிமேலழகர். ‘புல்’ என்பது தமிழறிஞர் இளங்குமரனார் எழுதிய தன் வரலாற்று நூலுக்குப் பெயர். அவர் தன்னைப் புல்லாக்கிக் கொண்டவர். கவிஞர் காமராசன் பனித்துளியின படுக்கையறையாகவும் குசேலரின் உணவுக் களஞ்சியமாகவும் புல்லை நோக்கியதைக் கறுப்புமலர்களில் காணலாம். காலனைத் தன் காலடியில் வரச்சொல்லி அவனைப் புல்லெனவே மிதிப்பதற்கு எத்தனித்தவர் மகாகவி. ‘நெல்லுக்கு இரைதத நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும பொசியுமாம்’ என்று நெல்லை உயர்த்தியும் புல்லையும் தாழ்த்திப் பாடியவர் ஔவையார். ‘புல்லாகிப் பூடாகிப் புழுவாய மரமாகி’ என மணிவாசகப் பெருமானும தன் பிறவிகளைப் புல்லென்னும் கீழ் நிலையிலிருநதே தொடங்கிப் பாடுகிறார். இப்படி புலலைத் தாழ்த்தியே பாடி வந்த கவிஞர்கள் நடுவில் புல்லை உயர்த்திப் பாடிய கவிஞர் நம்முடைய செல்வம்!

    மருந்துடன் உணவும ஈந்து
    மனிதரின உயிரைக் காக்கும்
    இருந்தும் ஏன் புல்லினத்தை
    இழிகுலம் என்றே சொன்னார்?”

    மழலையிலிருந்து மண்ணுக்குப் போகிறவரை உதவுகிற ஒரு தாவரத்தை இழிவாக நோக்குவதும் பாடுவதும் இயற்கைக்கு முரண் என்பது கவிஞர் கருத்து. இது பாடுபொருளை வேறுபட்ட கோணத்தில் பார்க்கத் துணியும் கவித்துவத்தின் மாற்றுநிலை எனக் கருதலாம்.

    செருப்புக்குள் பிரிவுண்டா? பேதமுண்டா?

    செருப்போடு ஒரு நேர்காணல் நிகழ்த்தியவர மேத்தா. காலுக்கொரு செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமிலலை என்று ஏழைகளுக்காகப் பாடியவர ஜீவா.

    “திங்களின்மேல் முதன்முதலாய்த் தடம்பதித்தேன் என்னுருவை
    செருப்பே நானே!
    உங்களைநான் ஆண்டேனே! உயிரிருக்கை மேலமர்ந்தே
    உலகின் வேந்தாய்!
    எங்கனுமே துணையுடனே வாழ்ந்தோமே பெருமிதமாய்
    இருந்தோம் ஒன்றாய்
    பங்கமதே இணைபிரிதல் எமைப்போலே இணைபிரியாப்
    பாடம் கற்றே!

    கவிதையைப் பற்றிய என்னுடைய திறனாய்வுக் கட்டுரைகளில் ஒரு கருத்தினைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். ஒரு கவிஞனின் அத்தனைப் படைப்புக்களும் கவிதைகளாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது கவிதை பாடல்களின் எண்ணிக்கையையோ வெளியிடப்படும் நூல்களையோ பொருத்தது அன்று. ஒரே கவிதையாக இருந்தாலும அக்கவிதையின் எல்லா வரிகளும் அடிகளும் கவிதையாக இருக்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது. கவிதை முழுமையான சீர்களிலோ அடிகளிலோதான் அமைதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் வரையறுக்கவில்லை. ஓரசையே போதும்! இரண்டசையே போதும்! பொருளற்ற அசைச்சொற்களே கவிதையாக மாறும் ஒரு வியப்பிடைச் சொல் கவிதையாக மாறும்.  ‘ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியாக அழகுடையான்’ என்னும் கம்பன் அடியில் ‘ஐயோ’ என்னும் ஒரு வியப்பிடைச் சொல் கவிதையானது காண்க. ஒண்ணுதற் ‘கோஒ’ என்ற தொடரில் ‘ஓஒ’ என்னும் நேரசையிரண்டு மட்டும் நின்று கவிதையானது காண்க.  அவைபோல இந்தப் பாட்டில் நிலவின் மீது நீல் ஆம்ஸ்ட்ராங்கின் காலணியே முதலில் பட்டதும் அயோத்தியை  அது ஆண்டதும் தெரிந்த சேதிகளே. ஆனால் உங்களால் ஒதுக்கப்படுகிற நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நீங்கள் எங்களைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளக் கூடாதா? என்று இணைச்செருப்பு ஏங்குவது செல்வ மீனாட்சியாரின் சமுதாயப் பார்வை. பாடுபொருள் புதுமை! பொருண்மை ஆழம்! செருப்புக்கள் பிரிவதில்லை அவற்றுள் பேதமில்லை. ஆனால் மனிதர்க்குள்? அதுவும கணவன் மனைவிக்குள்?  அச்சாணியை வைத்து நீதிசொல்வார் வள்ளுவர். அடிச்செருப்பை வைத்து நீதி சொல்கிறார் செல்வம்!. இநத ஒரு சேதி போதும் இது கவிதை என்பதற்கு! சரியா

    நிறைவுரை

    “ஒரு சிறந்த எழுத்தாளருக்கு ஓரளவு சக்தி வாய்ந்த உள்ள இயல்பும் உணர்ச்சி நிறைந்த வளமும் இன்றியமையாதனவாகும்” மேற்கண்ட கருத்துரையில் அமைந்துள்ள ‘சக்திவாய்ந்த உள்ளம்’ உணர்ச்சி நிறைந்த வளம்’ ஆகிய இரண்டும் கற்பனைக்கும் பொருந்தும். அதனால்தான் பிறரால் நோக்கப்படாத பொருட்கள் செல்வம் மீனாட்சி சுந்தரனாரால் நோக்கப் பட்டிருக்கின்றன.  நாய்,, குடை, விளக்குமாறு, புல், கைக்கிளை, சிரிப்பு,  எனப் புதுமையாகப் பாடுபொருள்களைத் தெரிவு செய்து, அவற்றைக் கற்பனை கலந்து கவிதையாக்குவதற்குரிய இதயத்தைச் செல்வ மீனாட்சியார்  பெற்றிருக்கிறார். “பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தைக் கண்டறிவதுபோல சொற்களைக் கொண்டு” அஃறிணையை கவிதைகளால் உயர்திணையாக்கிருக்கிறார். பட்டறிவும், பாசமும் நேசமும் கற்பனையும் கவித்துவமும் இழையோடும் இந்தக் கவிதைகளைப் பயிற்சிக்கவிதைகள் என்று அவர் சொல்கிறார்!  நம்ப முடியவில்லை!)

    நூலாசிரியர் திரு செல்வ மீனாட்சி அவர்களைப் பற்றி

    வணிகவியல் முதுகலைப் பட்டதாரியாகி, வங்கியின் எழுத்தர் பணியில் தொடங்கிய இவரது பணிக்காலம பொதுமேலாளராக நிறைவடைந்தது. கொங்கு மண்டலத்தில் தொடங்கிய தன் வங்கிப் பயணததைக் கர்நாடக மாநிலம் மங்களூரில் தானாகவே நிறைவு செய்து கொண்டார். தற்போது சென்னை வேளச்சேரி இராமநகரில் வாழ்ந்து வரும் இவர் பிறந்தது மதுரை அனுப்பானடியில். அனுப்பானடியில் பிறந்ததால்  இவருக்கு குறளடி உள்ளிட்ட அத்தனை அடிகளும் அறிமுகம். வாய்பாடுகளை முன்னெழுதி அதற்கான கவிதைகளைத் தொடுப்பது இவரது தனிப்பாணி முகநூலில் இந்தக் குயிலின குரல் கேட்டதனால் இவருடைய முழுக் கச்சேரியையும் கேட்க விரும்பி நான் இவரிடம் கேட்டுப் பெற்ற நூல்தான் எண்ணம் பிறந்த மின்னல்’ ஐந்நூறு கவிதைகளில் உள்ள பாடுபொருள்களில் சிலவற்றைப் பற்றியே இந்தக் கடடுரை பேசுகிறது.  இவர்தம் கவித்துவம் பின்னர் பிறிதொருவரால் பேசப்படலாம். பேசப்படும்!

    (தொடரும்)

    Share
  • ஜிம்னாஸ்டிக் செய்யும் ஊசித் தட்டான்

    ஜிம்னாஸ்டிக் செய்யும் ஊசித் தட்டான்

    ஜிம்னாஸ்டிக் செய்யும் ஊசித் தட்டான்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நா.கண்ணனின் கவிதைகள் குறித்து அண்ணாகண்ணன்

    நா.கண்ணனின் கவிதைகள் குறித்து அண்ணாகண்ணன்

    முனைவர் நா.கண்ணனின் மிசித்ர கவிதைகள் குறித்த எனது கருத்துரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொக்கி நடை | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல்

    கொக்கி நடை | எழுத்தாளர் கே.ஜி.ஜவர்லால் நேர்காணல்

    சுஜாதா நடையில், ஓ.ஹென்றி பாணியில், வெகுஜன எழுத்தில் முத்திரை பதித்து வருகிறார், கே.ஜி.ஜவர்லால். எந்தத் தலைப்பில், எவ்வளவு பக்கம் எழுதினாலும் வாசகர்களை முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படிக்க வைக்கிறார். விறுவிறுப்பான நடையின் மூலம் வாசகர்களைக் கொக்கி போட்டு இழுத்து படிக்க வைப்பது எப்படி? சூட்சுமத்தைச் சொல்லித் தருகிறார் கே.ஜி.ஜவர்லால். பார்த்துப் பயன்பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 151 (பரிவுறு)

    சேக்கிழார் பாடல் நயம் – 151 (பரிவுறு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.

    வரலாறு

    சாய்க்கடையில்  அமுது வீழ்ந்தது கண்ட தாயனார், என்னை ஆட்கொள்ளும் பிரான் அமுது செய்யக் காணும் பேற்றைப் பெற்றிலேன் என்றெண்ணி அரிவாளைக் கழுத்தில் பூட்டி, ஊட்டியையும் அரிந்து கொண்டார். அப்போது இறைவன் திருக்கரம்,‘’ சாய்க்கடையில் விடாதே’’ என்றபடி அவரளித்த மாவடுவைக் கடிக்கும் ஒலியுடன் அடியாரின்  கையைத் தடுத்து  எழுந்தது! உடனே அடியாரின் கை ஆண்டவன்  திருக்கரத்தின்  தொடர்பால் அவரது உடலின் காயம் நீங்கி, வணங்கிய கரமாயிற்று.

    ‘’அடியேனின் அறியாமை கண்ட பின்னும் என் அடிமைத்திறம் விரும்பி  இந்தச்  சாய்க்கடையிலும் தோன்றி  அடியேன் அளித்த உணவை அமுது செய்த , பரனே  போற்றுகின்றேன்! என்னைத் தடுத்த இடக்கரத்தை யுடைய அம்பிகை பாகனே, போற்றுகின்றேன்! நீறணி மேனியனே போற்றுகின்றேன்’’

    என்று வணங்கினார். அப்போது , தம் இடப வாகனத்தில் எழுந்தருளி, ‘’நீ புரிந்த தொண்டு நன்று! உன் மனைவியுடன் இப்போதே நம் திருக்கயிலாயம் அடைந்து வாழ்வாய்!’’ என்று கூறி விடையேறி மறைந்தார். இதனைச் சேக்கிழார்,

    பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.

    என்று பாடினார்.

    பாடல்

    பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.

    பொருள்

    அன்பு பொருந்திய சிந்தையினையுடைய அன்பராகிய தாயனார், “பரம்பொருளாகியுள்ள பெரியவராகிய சிவபெருமான் இங்கு அமுது செய்யும் பேறு பெற்றிலேன்” என்று கொண்டு வரியினையுடைய மாவடுவினது “விடேல்” என்ற ஓசையினை அவர் கேட்பிக்கு முன்பு, தம் வன் கழுத்தினை அரிவாளினைப் பூட்டி அரிதலினாலே அரிவாட்டாயர் என்ற தூய பெயரினை உடையர் ஆயினர்.

    விளக்கம்

    இப்பாட்டுக் கவிக்கூற்று. பரிவுறு சிந்தை என்ற தொடர்  பரிவு – அன்பு. மாசறு சிந்தை உடைய  அன்பர் என்பதைகள் குறித்தது. பரம்பொருளாகியுள்ளபெரியவர்  என்ற தொடர்,  எல்லாப் பொருள்களுக்கும்

    அப்பாற்பட்ட – கடந்த – எல்லையாயுள்ள பரம்பொருளைக் குறித்தது.

    அமுது செய்யப்பெற்றிலேன் என்பது உண்ணுதலைக் காணும் பேறு பெற்றிலேன்  என்று பொருள் படும்.

    வரிவடு என்பது  நிறமுடைய மாவடுவைக் குறித்தது.

    வன்கழுத்து என்பது,  அரிந்தும் அரியுண்ணாமலும், பின்னர் அருளால் ஊறுநீங்கியும், இறைவனதுகழுத்துப்போல என்று நிலைத்த வாழ்வுபெற்றும் விளங்கிய தன்மை குறிக்க வன்மை என்ற அடைமொழி தந்து கூறியதைக் காட்டும்.

    நாமம் – தாயன் என்பது அவரது பெயர்.  அவருடைய தாயன்பைக் காட்டியது. அர் – உயர்வு குறித்த பன்மை விகுதி.  தாயனார் .

    தூய நாமம் அரிவாட்டாயர் ஆயினார் என்க. தூய – தூய்மையைத் தரத்தக்க. திருத்  தொண்டத்தொகையுள் ஆளுடைய நம்பிகள் இக்கருத்துப்பற்றியே

    “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்” என்று துதிக்க நின்றமையும், அதனைத் துதித்து உலகம் தீமை நீங்கித் தூய்மை பெற்று உய்கின்றமையும் குறிக்கத் தூய என்றார். அடியார் திருநாமங்கள் தூய்மை செய்வனவாம் என,

    “அடியிணைகள்,
    சிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவையினை,
    மந்திரமாக் கொண்டு மயிர் சிலிர்த்து – நைந்துருகி,
    மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்,
    கைதவமும் புல்லறிவுங் கற்பனையும் – மையலுந் தீர்ந்,
    தத்துவிதா னந்த வகண்டபரி்பூரணத்தில்,
    நித்தியமாய் வாழ்வார் நிசம்”

    என்று திருத்தொண்டர் திருநாமக் கோவையினுள் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் போற்றி அருளியிருப்பது காண்க.

    “திருஞான சம்பந்தர்” என்ற நாமமந்திரம் சொல்லக் கேட்டலும் பாண்டியர் அயர்ச்சியை நீங்கினார் என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்க.

    இப்பாடலில் தாய் அன்னாராகிய தாயனார், தம்  அன்புத்தொண்டு பழுதாகக் கண்டு தாமே தண்டித்துக் கொள்ள முயன்ற செயலும், இறைவன் அந்த இடத்தில் தாமே தோன்றி  தாயானார் ஊறு  நீக்கியதும்,  கமரில் சிந்திய உணவை  நிவேதனமாக  அங்கேயே மாவடு கடிக்கும் ஓசையுடன் இறைவன் அமுதுசெய்த கருணைத் திறத்தையும், அரிவாளை எடுத்து  ஊட்டியை அரிந்து  கொண்ட அடியாரின்  செயற்கரிய செயலையும்  உணர்த்தி, நாயனாரின்  திருப்பெயர் ‘அரிவாள் தாயனார்‘ என்று அழைக்கப் பெற்ற  சிறப்பும் விளங்குகிறது! அதற்கும் மேலாக அரிவாள் ஏந்திய தாய்அன்னார் என்ற பொருள்படும் அரிவாட்டாயனார் என்ற முரண்பட்ட தொடர், புதிய நகை முரண்  கொண்டு விளங்குவதையும்  குறிப்பாக அறிந்து கொள்கிறோம்!

    Share
  • இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்

    இங்கிலாந்தின் கடலுயிர் அருங்காட்சியகம்

    இங்கிலாந்தின் சவுத் எண்ட் என்ற பகுதியில், கடலுயிர்கள் – காட்டுயிர்கள் ஆகியவை இணைந்த புதுமையான அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக, ஏராளமான கடலுயிர்களை, எளிதில் காணக் கிடைக்காத அரிய உயிரினங்களை இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள்.

    வகை வகையாக, வண்ண வண்ணமாக வலம் வரும் மீன்களும் இதர உயிரினங்களும் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக் கூடியவை. முக்கியமாக, இவற்றை உங்கள் பிள்ளைகளுக்கும் மாணவர்களுக்கும் காட்டுங்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப் பார்க்கலாம். அத்துடன், உற்சாகமாகக் கல்வியும் கற்கலாம்.

    படப்பதிவு – நவ்யா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 43

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமத் திருவாசகம் – 2

    முன்னுரை

    காதல் பேசும் அகத்திணை இலக்கியங்கள், அதுவல்லாத புறத்திணை இலக்கியங்கள் ஆக இவற்றில் எல்லாம் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமங்களுக்கும் இயல்பாகவே வேற்றுமை நிலவுவதை அறிய முடியும்.  ‘மாறிபுக்கு இதயம் எய்தும் காதல் வெளிப்பாட்டுக்கும்’, ‘பகை முடித்து நகை முழக்கும்’ புறவெளிப்பாட்டுக்குமான உவமங்கள் பெரும்பாலும் அழகியல் நோக்குடையவை. எடுத்துக்காட்டாக இராமன் கான் செல்கிறபோது இருந்த அவனுடைய முகத்தினைக் கம்பர் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையோடு’ ஒப்பிடுகிறார். இறைவனை வழிபடுகிற காலத்துப் புற உறுப்புக்களின் நிலையைக் கூறும் மணிவாசகப் பெருமான் ‘கரமலர் மொட்டித்து இருதயம் மலர’ என நிரல்படுத்துகிறார். முரண்படுத்துவார். இரண்டிடத்திலும் உவமமாக வந்தது மலரேயெனினும் இரண்டின் தாக்கமும் வெவ்வேறாக இருப்பதைக் கற்பார் உணரலாம்.

    உவமங்களோடு உறவாடும் உள்ளம்

    முன்னுரையில் பக்தியுணர்வுக்கான வெளிப்பாட்டில் அமையும் உவமப்பாங்கு அகப்புறப்பொருள்களை விளக்கும் உவமங்களின் வேறாகி நிற்கும் எனச் சொன்னோம். அதனை உறுதி செய்வதுபோல மணிவாசகப் பெருமான் பாடுகிறார்.

    “தழலது கண்ட மெழுகதுபோலத் (1)
    தொழுது உளமுருகி அழுது உடல் கம்பித்து
    ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
    கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
    படியே (2) ஆகி நல் இடையறா அன்பிற்
    பசுமரத்தாணி அறைந்தாற் போலக் (3)
    கசிவது பெருகிக் கடலென (4) மறுகி”

    எழுவரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நான்கு உவமங்களும் தொழுதும் உள்ளம் உருகியும் அழுதும் நடுங்கியும் ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் என்னும் மெய்ப்பாடுகளுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும்.

    “சிறுமையென்று இகழாது திருவடி இணையைப்
    பிறிவினை அறியா நிழலது போல (1)
    முன்பின்னாகி முனியாது அத்திசை
    என்பு நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
    அன்பெனும் ஆறு கரையது புரள (2)
    நன்புலன் ஒற்றி நாத என்று அரற்றி
    உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
    கரமலர் (3) மொட்டித்து இருதயம் மலரக்
    கண்களி கூர நுன் துளி அரும்பச்
    சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர்
    தாயே யாகி (4) வளர்த்தனை போற்றி”

    என்னும் வரிகளிலும் உணர்ச்சிப் பெருக்கிற்கு ஏற்ப உவமங்கள் அமைந்துள்ள பாங்கினை அறியலாம். முகத்தை ‘மலர்’ என்பதற்கும் கரத்தை ‘மலர்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. முன்னது மலர்ச்சியைக் குறித்தது. பின்னது மென்மையைக் குறித்தது. இது சாயா அன்பின் விளைந்த பக்தியாதலின் நிகழாத ஒன்றினை உவமமாக்குகிறார் மணிவாசகப் பெருமான். அதாவது மொட்டு மலருமேயன்றி மலர் மொட்டாகாது, மலர் மொட்டாகி என்பதனால் மெய்வணக்கமும் மொட்டாகிய இதயம் மலர்வதால் உள்நெகிழ்ச்சியும் பெறப்பட்டன. ‘அகம் நக’ என்னும் வள்ளுவத்திற்கு மணிவாசகர் எழுதிய விரிவுரையாகவும் இதனைக் கருத முடியும். ஒன்று மலர வேண்டும். மற்றொன்று குவிதல் வேண்டும். இரண்டும் இணையானது அன்று. ஆனாலும் இதய மலர்ச்சியின் குறியீடாகக் கரமலர் குவிவதைக் கொள்ளலாம்.

    புளியம் பழமான மணிவாசகப் பெருமான்

    சொற்களுக்கான நேரடிப்பொருள் வேறு. இலக்கிய நயம் பக்தியுணர்வு தோன்றுமாறு உள்ளீடாக நிலவும் பொருள் வேறு. நெருஞ்சிச் செடியில் பழமும் இருக்கும் முள்ளும் இருக்கும். தலைவியின் பாதத்தின் மென்மையைக் கூறவரும் தலைவன் அனிச்சப்பூவும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் என்கிறான். இங்கே நெருஞ்சிப் பழம் என்றது பழத்தைக் குறிக்காது முள்ளைக் குறித்தது காண்க. இந்த நுட்பத்தை மணிவாசகப் பெருமான் கையாள்கிறார்.

    “அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
    புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
    எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
    அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.”

    என்று ஒரு பாட்டு ‘ஆசைப்பத்து’ என்னும் பகுதியில் வருகிறது. “ஆன்மாவும் உடம்பும் வேறு வேறு என்று எண்ணாது இரண்டும் ஒன்றுதான் என்று எண்ணியிருந்தவன் நான். அத்தகைய அறியாமையில் நான் உழன்ற நேரத்திலும் எளிவந்து என்னை ஆண்ட பிரான் நீ! அவ்வருமை கூறி உன்னையழைக்க நான் விரும்பினேன்’ என்கிறார் மணிவாசகர்.  புண்ணிறைந்த உடம்பின் இழிவை முதலடியில் பேசி, இழிவான உடம்பினிடத்துப் பற்றுக் கொண்டு இருந்ததாகக் கூறுகிறார். அந்தப் பற்றுக்கூட, ஆன்மா என்றும் உடம்பு என்றும் தனித்தனியே பிரித்துக்காண முடியாதபடி ஒன்றியிருந்து விட்டது. அதனையே ‘புளியம்பழம் ஒத்திருந்தேன்’ என்கிறார். ஆனால் உண்மையில் அவர் கூறவந்தது புளியங்காய் ஒத்திருந்தேன் என்பதுதான். பழம் என்ற சொல் இங்குக் காய் என்ற பொருளில் அமைந்துள்ளது. ‘பழம்’ என்ற சொல்லையே வைத்துக்கொண்டு பொருள் செய்தால், இந்த உடம்போடு எவ்விதத் தொடர்பும் பற்றுமில்லாமல், ஓட்டில் ஒட்டாத புளியம்பழத்தைப் போல் இருந்தேன் என்று அழகாக பொருள் கூறலாம். ஆனால், இவ்வாறு பொருள் கூற முடியாமல் தடுப்பது அடுத்துவரும் இருந்தும் என்ற சொல்லாகும். புளியம் காயைப்போல, உடம்பு, ஆன்மா என்ற வேறுபாடின்றி நான் ஒட்டிக்கொண்டிருந்தும்கூட அதுபற்றிக் கவலைப்படாமல் எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என்ஆர் அமுதே’ என்கிறார். ‘நீ ஆட்கொண்ட பின்பும், இந்த உடம்பை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கின்ற நான், பெரிதும் இரக்கத்திற் குரியவன் என்று நீ சொல்ல வேண்டும். அச்சொல்லை நான் கேட்க ஆசைப்பட்டேன்’ என்கிறார்.

    அழல்சேர் மெழுகு

    அன்பு உள்ளத்தின் இயல்பு. அறிவு மூளையின் தேடல். முன்னது உருக்கத்திற்கு உரியது. பின்னது சிந்தனைக்கு உரியது. மானுடம் உள்ளத்தின் வழி இயங்குவது. பாசம், துடிப்பு, ஆதங்கம், அன்பு, அருள், நேயம் என்பனவெல்லாம் அறிவு சார்ந்தன அல்ல. அவை மனம் சார்ந்தவை. ஆதலின் மணிவாசகர் உள்ளிட்ட அருளாளர்கள் பாடும் பாடல்களில் இத்தகைய உணர்வுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் நோக்கக் கூடிய உவமங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.

    “அழலுறு மெழுகாம் என்பராய் நினைவார்”

    “அழல்சேர் மெழுகொப்ப ஐயா வென்றன் வாயாலரற்றி”

    “அன்பா மனமா யழல்சேர்ந்த மெழுகே யன்னார்” 92

    அழல் கண்டு உருகும் மெழுகாய் ஆண்டவனை எண்ணி உருகும் அடியார்கள் என்பதாம்.  இத்தகைய உருக்கத்திற்கு வெப்பத்திற்கு உருகும் பாறை வெண்ணெய் பொருந்தாமல் போய்விடும். மெழுகின் உருக்கம் நெருப்போடு கலந்துவிடும். செருக்கழிந்த உருக்கத்தின் அத்வைத நிலை இது. அவன் அன்பை வேண்டி நிற்பார் அடையும் நிலையும் இதுவே.

    திருவாசகத்தில் கடல்

    ‘நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரளவின்று’ எனக் காதலின் ஆழத்திற்குக் கடலைச் சொன்னவர் உண்டு. திருவள்ளுவர் ‘அடங்கியான் தோற்றத்தினை மலைக்கும், பயன்தூக்காது உதவி  செய்தவரை கடலுக்கும் காலத்தினால் உதவியவருக்கு நிலத்தையும்’ ஒப்பிடுகிறார். இவைகளெல்லாம் அறிவுசார்ந்த அளவைகள் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும். இவற்றுள் கடலை அளப்பரிய உருவகமாகக் கொள்கிறார் மணிவாசகர்.

    “கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விட லரியேன்”

    “கடலின் திரையது போல்வரு கலக்கம்”

    “கடலே யனைய ஆனந்தம்”
    இங்கே சுட்டப்பட்ட உவமங்களுள் ‘கடலை நாய் நக்க முயன்றதுபோல’ என்பது மரபு சார்ந்த உவமம். கம்பன் சொன்ன அது அவையடக்கத்திற்குச் சொல்லப்பட்டது. இங்கே பெருமானின் அருளை முழுமையாக ஏற்க இயலாமைக்குச் சொல்லப்பட்டது. இனித், துன்பத்திற்கும் இன்பத்திற்கும் கடலையே உருவகப்படுத்துவது தமிழ்க்கவிதைக் கொள்கை.  ‘துன்பக்கடல்’ என்பதும் ‘இன்பக்கடல்’ என்பதும் இலக்கிய வழக்கு. ‘பிறவிப் பெருங்கடல்’ என்பது  திருவள்ளுவர் செய்த உருவகம்.

    திருவாசகத்தில் தாயும் பசுவும்

    இறைவன் தாயும் ஆனவனாக இருப்பதாலே அடியார் அனைவர்தம் பாட்டிலும் தாய் மகவு என்னும் உறவை முன்னிலைப்படுத்தி அதற்கு இணையாகத் தாய்ப்பசுவையும் கன்றினையும் உவமவாக்கம் செய்வது பெருவழக்கு. ‘கற்றா’ என்னும் சொல் ‘கன்றையுடைய ஆ’ என்றே பொருள்படும். ஏனைய விலங்குகளை இவ்வாறு அதன் கன்றோடு சேர்த்து வழங்குவது உண்டா என்பது சிந்திக்கத்தக்கது.

    “ஆவாகி ஆவினில் ஐந்துமாகி
    அறிவாகிஅழலாகி அவியுமாகி
    நாவாகி நாவுக்கோர் உரையுமாகி
    நாதனாய்வேதத்தினுள்ளோனாகி
    பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்
    புக்குளால்வாசமாய் நின்றானாகித்
    தேவாதி தேவர் முதலுமாகிச்
    செழுஞ்சுடராய் சென்றடிகள் நின்றவாறே”

    பசுவும், பசுவினிடத்தில் தோன்றும் ஐந்து பொருட்களாகவும் (பால், தயிர், நெய், கோசலம், கோமியம்), வேள்வித் தீயாகவும், வேள்விகளைச் செய்வதற்குரிய அறிவாகவும், அந்த வேள்வியினில் இடப்படும் பொருட்களாகவும், வேள்விக்கான மந்திரங்களைச் சொல்லும் நாவாகவும், சொல்லப்படும் மந்திரங்களாகவும், மந்திரங்களின் பொருளாகவும், பயன்படுத்தப்படும் பூக்களாகவும், பூக்களின் மணமாகவும் மணமாக மலர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையாகவும், வேள்விகளால் தொழப்படும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் செழுஞ்சுடராய் எம்பெருமான் எங்கும் பரவி நிற்கிறார் என்ற பொருளமைந்த இந்தப் பாட்டில் தலைமையாகப் பாடப்பட்டிருக்கும் பொருள் பசு என்பதைக் காணலாம். அடியவர்களின் உள்ளம் இறையருள் வேண்டும் ஏக்கம் நிறைந்தது. உயிர்கள் பரபிரம்மம் ஆதலின் அவனிடமிருந்து பிரிந்து வந்த இவை மீண்டும் அவனிடமே சேர்வதற்கான முயற்சியே மானுட வாழ்வு. கன்றின் பிரிவு எல்லாத் தாய்மையையும் கலங்கிக் கதறச் செய்யும்  எனினும் பசு பெரிதும் கலங்கி நிற்கும்.

    “கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
    கன்றை நினைந்தெழு தாயென வந்தகணக்கது வாகாதே”

    “கற்றா மனம் போல் கதறியும் பதறியும்”

    பதி, பசு, பாசம் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படை. பசுவாகிய உயிர், தன்னை மூடியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மாசு நீங்கிப் பதியாகிய பரம்பொருளை அடைவதே மானுடப் படைப்பின் நோக்கம் என்பதைச் சுருங்க உரைக்கும் சிவஞான போதம் அது. பாசத்தின் நீங்குவதற்கும் இறைவன் அருள் தேவைப்படுமாதலின் அதனை வேண்டுவதும் வேண்டிப் பெறுவதுமே பன்னிரு திருமுறைகளின் உள்ளடக்கம். வேண்டுவதைக் கொடுப்பவர்களில் தாயே முன்னிற்பாள் என்பது உலகியலாதலின் மணிவாசகப்பெருமான் தமது திருவாசகத்தில்,

    “நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!”

    என்று இறைவனைத் தாயாக்கிப் பாடுகிறார். ‘பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’ என்று பிறிதொரு இடத்திலும் கூறுவார். தாயின் சிந்தை செயல் அனைத்தும் தன் குழந்தையைப் பற்றியே இருத்தலின், அக்குழந்தைக்குப் பால் ஊட்டும் காலமும் அவள் கருத்திலிருக்க, அக்காலமறிந்து ஊட்டுவாள் என்பதனால் ‘பால் நினைந்தூட்டும்’ என்றார். ஈண்டு இறைவனை அத்தாயினும் என உறழ்ந்து கூறுவதால் இறைவனின் மேன்மை புலப்படும். ‘வேண்டத்தக்கது அறிவோய’’ என இறைவனைப் பரவியதும்  அவன் தாயினும் மேம்பட்டுத் திகழ்வது நோக்கியே!. இவ்வாறு இறைவனைத் தாயாகவும் தன்னைக் குழந்தையாகவும் உவமித்துப் பாடும் இடங்கள் திருவாசகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

    “உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
    கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”

    என்னும் பாடலில் கற்றாவை உவமமாக்கியிருக்கிறார் மணிவாசகர். ஆவிற்கு மனம் உண்டு என்பதும் அதுவும் கசிந்து உருகும் இயல்பினை உடையது என்பதும் மணிவாசகர் கண்ட நுண்ணியம். மூளையை வளர்க்கும் வெறுங்கல்வியைவிட மூலத்தை உணரும் அனுபவக் கல்வியையே மணிவாசகர் முன்னெடுக்கிறார். கற்றாரை யான் வேண்டேன் என்பதன் பொருள் அதுதான். அனுபவக்கல்வி கிட்டிவிடுமாயின் கற்பன தானே  அமையும் என்பதாம். அந்த அனுபவம் அறிவினால் வராது. அழுதால் வரும். ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என்பதும் அது.

    “கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம்
    காணக் காட்டும்
    என்றுடைய நாயகனே! எல்லாம் செய்வல்லவனே!
    இலங்கும் சோதி
    மன்றுடைய மணவாளா!மன்னவனே! என்னிருகண்
    மணியே! நின்னை
    அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணை உன் மேல் ஆணை உன்மேல்
    ஆணை ஐயா!

    என்று அருட்பிரகாச வள்ளலாரும் பசுவை  உவமித்திருப்பது காண்க.

    மணிவாசகர் கண்ட மாற்றுத் திறனாளி

    நாய்க்கு அடுத்தபடியாக, வாதவூரடிகள் மிகுதியாகப் பயன்படுத்தும் உவமை -விலங்கு பசுவாகும். தமிழ் மக்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப் பிணைந்து இருப்பதல்லவா பசு! அமைச்சராக இருந்தபோதும், அக்காலச் சூழலுக்கு ஏற்ப, அவரது வீட்டில் நிறைய பசுக்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவற்றை அவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்பதும் அவரது உவமைகளிலிருந்து தெரிகிறது.

    ஒரு பசு மந்தை மேய்ந்துவிட்டு வீடு திரும்புகின்றது. அவற்றில் ஒன்று குருடு. மற்ற பசுக்களோடு அதுவும் நடந்து வருகிறது. வீட்டை நெருங்கியதும் பகல் முழுவதும் கன்றைப் பிரிந்திருந்த பசுக்கள் தத்தம் கன்றைக் கண்டவுடன் பெருங் குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இந்தக் குருட்டுப் பசு தன் கன்றைக் காணமுடியாவிட்டாலும் மற்ற பசுக்கள் மிலைப்பதால் (கத்துவதால்) தானும் அவற்றுடன் சேர்ந்து மிலைக்கிறதாம்.

    மெய்யடியார்கள் சிவபெருமானின் பக்தியில் தோய்ந்து ஆனந்தமடைந்து அவன் புகழைப் பாடுகின்றனர். மணிவாசகரோ தனக்கு உண்மையான பக்தி இல்லை என்று கூறிக்கொள்கிறார். (யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்) ஆனால் மற்ற மெய்யடியார்கள் சிவன் புகழ் பாடும்போது, குருட்டுப் பசு மிலைப்பது போலத், தானும் பாடுவதாகக் கூறிக்கொள்கிறார்.

    “ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
    உன் தாளிணை அன்புக்கு
    ஆரா அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே.”

    பக்தி மலையின் உச்சியில் நின்றுகொண்டு அவர் இவ்வாறு தன் அன்பு பொய் என்று கூறிக்கொள்வது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இலக்கியங்களுள் பக்தி இலக்கியத்தைப் பற்றிய மதிப்பீடு எவ்வாறிருப்பினும் இந்த உவமத்திற்கு எந்த இலக்கிய உவமமும் ஈடாகுமா என்பதைக் கற்பார் சிந்திக்க வேண்டும்.

    “சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட
    ஊரேறாய் இங்கு உழல்வேனோ?”

    என்று பின்னும் கூறுவார் மணிவாசகர்.

    ஆள்வார் இலா மாடும் நுந்து மாடும்

    திருவாசகம் முழுவதும் ஊடுருவி நிற்பது பக்தியுணர்ச்சி ஒன்றே. இறைவனின் பெருமையையும் தன் சிறுமையையும் ஒருங்கே காட்டி, அத்தகைய பெரியோன் இவ்வளவு அற்பனான தன்னையாண்டுகொண்ட கருணைத் திறத்தினை வியந்து, அச்சிவானந்தத் தேனை மீண்டும் பருகத் துடிக்கும் ஆவலே  திருவாசகமாகப் பரிணமித்தது. நெகிழ்ச்சியும் பாசமும் துடிப்பும் கண்ணீரும் ஆகிய அகப்புற மெய்ப்பாடுகளுக்கேற்பவே உவமங்களும் அமைந்திருக்கின்றன.

    நோயுற்ற பசுங்கன்று நடக்கமுடியாமல் தடுமாறினால் மாட்டுக்காரர் அதை ஆதரவுடன் தாங்கி, மெதுவாகத் தள்ளிக் கொண்டோ தூக்கிக் கொண்டோ போவார். இத்தகைய கன்றுக்கு ‘நுந்து கன்று’ என்று பெயர். சொந்த முயற்சியால் இறைவனை அடைய முடியாத தான் நுந்து கன்றைப் போல் இருப்பதாகவும் இறைவன் தன்னைத் தேடிவந்து தாங்கிச் சென்றதாகவும் கூறி அந்தக் கருணையை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

    “நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கிருந்து
    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

    மாடு சில நேர்வுகளில் தன் மந்தையிலிருந்து பிரிந்துவிடும். கால் போனவாக்கில் அது வேற்றூர் போய்ச்சேரும். அங்கு அதனைக் கவனிப்பார் இருக்கமாட்டார்கள். அதுவாக, கிடைத்ததை உண்டு, கண்ட இடத்தில் படுத்துறங்கி, தானும் மகிழ்ச்சியாக இல்லாமல், மற்றவர்க்கும் பயன்படாமல் வறிதே பொழுது போக்கும். இது ‘ஆள்வாரிலி மாடு’ என்றும் ஊரேறு என்றும் கூறப்படும். மெய்யடியார் கூட்டத்தில் சேர்ந்திராமல் பிரிந்து நின்று தன் மனம் போன போக்கில் ஆள்வார் இல்லாத மாடு போலத் தான் வாழ்வதாக மணிவாசகர் கூறுகிறார். இப்படிப்பட்ட தன்னையும் எதிர்பாராத விதத்தில் இறைவன் ஆட்கொண்டதை நினைத்து மகிழ்கிறார்.

    “……………………….ஆள்வார் இலி மாடாவேனோ?
    நெருங்குமடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடு
    மருங்கே சார்ந்து வரவெங்கள் வாழ்வே வாவென்றருளாயே”

    மாடுகளில் மாற்றுத் திறனாளிகளைப் பாடியவர் மாணிக்கவாசகர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும் சமுதாயத்தின் எல்லா நிலைகளையும் அவர் ஊடுருவி நோக்கியிருக்கிறார் என்பது மாடுகளின் வகைப்பாட்டை அவர் உவமமாக்கிய திறத்தால் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

    திருவாசகத்தில் தொடர்ந்து மேயும் எறும்பு

    சென்ற கிழமை கட்டுரையில் ‘இருதலைக் கொள்ளி உள்ளெறும்பை’ உவமமாகச் சொன்ன சதுரப்பாட்டைக் கண்டோம். இந்தக் கட்டுரையில் நெய்க்குடத்து எறும்பை உவமமாக்கும் திறனைக் காணலாம். ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களை’ உடையார், நெய்சேர்த்து வைக்கும் குடங்கள் இல்லம் நிறைந்து காணப்படும். நெய்வாசம் கண்ட எறும்புகள் அக்குடங்களின் உள்ளே இறங்கி உறைந்துபோன நெய்யின் பரப்பில் கால்கள் சிக்கிக் கொள்ள மீளத் தெரியாமல் மாளும்.

    “உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
    வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
    பொள்ளனல் வேழத்துரியாய் புலனின் கட் போதவொட்டா
    மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடம் தனை எறும்பெனவே”

    என்று பாடிய வாதவூரார் தொடர்ந்து செய்யும் விண்ணப்பம் அந்தாதியாதலின் எறும்பிலேயே  தொடங்கிப் பாடுகிறார். எறும்பு என்ற சொல் தொடக்கமாக இருந்தாலும் இது நெய்க்குடத்து எறும்பன்று. புழுவரிக்கும் எறும்பு.

    “எறும்பிடை நாங்கூழ் வெனப்புல னால்அரிப் புண்டு அலந்த
    வெறுந்தமியேனை விடுதி கண்டாய்!”

    என்று பாடுகிறார். முந்தைய பாட்டில் நெய்க்குடத்து எறும்புகள் ஐம்புலன்களும் உயிரைச் சூழ்வதற்கு உவமம் இந்தப் பாட்டில் உயிர் புலன்களால் அரிக்கப்படுவதற்கு அதாவது ஈர்த்து அலைக்கழிக்கப்படுவதற்கு உவமம்.

    நிறைவுரை

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அதன் பெருமை. பாடுபொருளாகிய பக்தியுணர்வுக்கும் அதனை வெளிப்படுத்திய பாங்கிற்கும் உத்திகளுக்கும் உரியதே. ஆனால் அதில் காணப்படும் உவமங்களுக்கும் அந்தப் பெருமையில் செம்பாதி பங்குண்டு என்பது இவ்விரண்டு கட்டுரைகளால் ஓரளவு புலப்படலாம். பன்னூறு பாடல்களில் காணப்படும் உவமங்களைத் தொகுத்து ஆராய்ந்தால் மணிவாசகரின் உவமங்களே பக்தியுணர்ச்சி என்னும் பொருண்மை கற்பார் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்துக் கண்ணீர் வரவழைக்கின்றன என்பதை அறிந்து கொள்ள இயலும். உருக்கம் உள்ளடக்கத்தில் மட்டுமன்று. உவமங்களிலும் உண்டு.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(379)

    குறளின் கதிர்களாய்…(379)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(379)

    கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாஞ் சொல்.

    – திருக்குறள் – 643 (சொல்வன்மை)

    புதுக் கவிதையில்

    சொல்லும் போது
    கேட்டவரைப் பிரிந்து
    செல்லாதவாறு
    தன்வயப்படுத்தும்
    தன்மையுடனும்,
    கேட்காதவரும் பகைமறந்து
    நட்புடன்
    கேட்க விரும்பும் வகையிலும்
    பேசுவதுதான் சொல்வன்மை,
    அமைச்சருக்கு இது
    அமையவேண்டியதாகும்…!

    குறும்பாவில்

    கேட்டவரைத் தன்வயப்படுத்தும் தன்மையுடன்
    கேளாதவரைப் பகைமறந்து கேட்கச்செய்யும் வகையில்
    பேசுவதே சிறந்த சொல்வன்மையாகும்…!

    மரபுக் கவிதையில்

    சொல்லும் சொல்லைக் கேட்டவர்கள்
    சொல்லின் ஈர்ப்பால் பிரிந்தேதான்
    செல்லா வகையில் சொல்லுவதும்,
    சேதி யதனைக் கேளாத
    பொல்லாப் பகையைக் கொண்டோரும்
    பொருந்தாப் பகையை மறந்துகேட்க
    நல்ல வகையில் பேசுவதும்
    நன்றாம் சொல்லின் வன்மைதானே…!

    லிமரைக்கூ

    பேசிடும் பேச்சினைக் கேட்டு
    ஈர்ப்புடன் இணைந்திருக்கவும், கேளாதோர் கேட்க
    ஆசைப்படும் நல்சொல்வன்மை காட்டு…!

    கிராமிய பாணியில்

    தெரியணும் தெரியணும்
    நல்லாத் தெரியணும்,
    எல்லாத்தையும் தெறமயா
    எடுத்துச் சொல்லத் தெரியணும்..

    மந்திரி சொல்லுறதக் கேட்டவுங்க
    பேச்சில மயங்கி மாறாமக்
    கூடவே இருக்கிற மாதிரியும்,
    கேக்காதவுங்க பகய மறந்து
    கேக்க ஆசப்படுற மாதிரியும்
    பேசுறதுதான்
    நல்ல சொல்லு தெறம..

    அதால
    தெரியணும் தெரியணும்
    நல்லாத் தெரியணும்,
    எல்லாத்தையும் தெறமயா
    எடுத்துச் சொல்லத் தெரியணும்…!

    Share
  • எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்

    எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்

    இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

    அவரது மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் பதிப்பகம் மூலமாக வெளிவந்த ‘தரணி’ நாவல் மற்றும் வம்சி பதிப்பகம் ஊடாக வெளிவந்த ‘அயல் பெண்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகியவையே 2019, 2020 ஆகிய வருடங்களில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    அவரது ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பானது ஏற்கெனவே இந்தியா வாசகசாலை விருதினை வென்றுள்ளதோடு, ‘தரணி’ நாவலானது கொடகே சாகித்ய விருதினை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)

    பாரதி – பஞ்சபூதம் (நாட்டிய நிகழ்ச்சி)

    வணக்கம்.

    ‘பாரதி – பஞ்சபூதம்’ என்ற தலைப்பில் நான் தொகுத்து வழங்கிய குறிப்புகளின் அடிப்படையில் இந்த நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அறிமுக உரை செய்கிறேன்.

    வாருங்கள்!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • பாரெங்கும் பாரதி

    பாரெங்கும் பாரதி

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை “பாரதமெங்கும் பாரதி? என்னும் நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில் YACD Trust, அமைப்புடன் இணைந்து இப்போது “பாரெங்கும் பாரதி” என்னும் உலகளாவிய நிகழ்ச்சியை நடத்த முன்வந்துள்ளார்கள்.

    அதன் முதல் நிகழ்ச்சி, டிசம்பர் 5, இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு, Singapore Lisha Literary Clubஉடன் இணைந்து நடத்தப்படுகிறது – இணைய வெளியில்.

    இந்த நிகழ்ச்சியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் யூடியூபில் நேரலையாகக் காணலாம்:
    https://youtu.be/ldPj1Ljm4SE

    நானும் இதில் பேசுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • 13 வாத்துகள்

    13 வாத்துகள்

    13 வாத்துகள் நீந்தி விளையாடுவதும் நீரில் தலையை அமிழ்த்துவதும் சிறகடிப்பதும் சிறகைக் கோதுவதுமாக அதகளம் செய்வதைப் பாருங்கள்.

    இடம்: சென்னை, தாம்பரம், லெட்சுமிபுரம் குளம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மீள்வதா?  மாள்வதா?

    மீள்வதா? மாள்வதா?

    சி. ஜெயபாரதன், கனடா.

    வாழ்வின் தொடுவானில்
    கால் வைத்தவன்,
    திரும்பிப் பார்த்தால்
    எங்கும்
    இருள்மயம்!
    மீள்வது சிரமம்.
    நீண்ட நாள்
    தீரா நோயில், வலியில்
    தினம் தினம்
    மனம் நொந்து போனவன்
    மீளாப் பயணம்.
    அணைந்து போகும்
    மெழுகு வர்த்தி
    சுடர்விடும்!
    மீண்டும் எரியாது!
    தொடுவானம்
    ஒரு போக்கு
    இறுதிப்
    புதைக்குழி!

    Share
  • 2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்

    2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்

    2022 உங்களுக்கு எப்படி இருக்கும்? வாக்குப் பலிதமும் சரஸ்வதி கடாட்சமும் நிறைந்த மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share