எம்.ரிஷான் ஷெரீபுக்கு இலங்கை அரச இலக்கிய விருதுகள்

இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவரது மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் பதிப்பகம் மூலமாக வெளிவந்த ‘தரணி’ நாவல் மற்றும் வம்சி பதிப்பகம் ஊடாக வெளிவந்த ‘அயல் பெண்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகியவையே 2019, 2020 ஆகிய வருடங்களில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவரது ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பானது ஏற்கெனவே இந்தியா வாசகசாலை விருதினை வென்றுள்ளதோடு, ‘தரணி’ நாவலானது கொடகே சாகித்ய விருதினை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.