படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 7

1

முனைவர் ச. சுப்பிரமணியன்

பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னலில்’ சில பாடுபொருள்கள்’

முன்னுரை

இலக்கியம் சமுதாயத்திற்கானது என்பதால் அதன் நோக்கம் சமுதாயத்தைச் செப்பனிடுவதாகவே இருக்க முடியும். சமுதாயத்தைச் செப்பனிடுவது என்பது எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் என்றாக்குவதோடு பொருளாதாரத்திலும் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதும் அடங்கும். இவை முழுமையாக நிறைவேற வேண்டுமானால் இலக்கியத்தின உள்ளடக்கம் இவற்றை நோக்கியதாக இருத்தல் வேண்டும். எனவே  தமிழிலக்கியத்தைப் பொருத்தவரையில் இலக்கியத்திற்கான கூறுகளுள் ‘உள்ளடக்கம்’ என்பது தலைமை சான்றது என்பது பெறப்படும். ‘இலக்கியத்தின் நோக்கம் இன்புறுத்துவது’ என்பதற்கு இது எதிரானதன்று. கூடுதலானது. ஏனைய கூறுகளை விட முதன்மை பெறுவது. மாபெரும் காப்பியங்கள் கூட சில குறிப்பிட்ட நீதிகளைத் தமது காப்பிய நோக்கங்களாகத் தொடக்கத்திலேயே வலியுறுத்துவதற்கு இதுதான் காரணம். இது பாடுபொருளைத் தெரிவு செய்வதில் படைப்பாளை நிதானிக்க வைக்கிறது. இளங்கோவடிகள் கண்ணகியைப் பாடியதற்கும் கம்பன் இராமனைப் பாடியதற்கும் பாரதி பாஞ்சாலியைப் பாடியதற்கும் இதுதான் காரணம். மூன்று வெவ்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய இந்த இலக்கியங்களை ஒரு முறை கற்றாரும் உணர்ந்து கொள்ளக் கூடிய உண்மை இது. இந்த அடிப்படையில் கவிஞர் திரு மீனாடசி சுந்தரம் அவர்கள் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னல்’ என்னும் கவிதைத் தொகுதியில் நான் கண்ட சில பாடுபொருள் பற்றிய திறனாய்வை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்க முயல்கிறது.

எண்ணம் பிற்நத மின்னல் – ஓர் அறிமுகம்

வஙகி மேலாளராகப் பெரும்பாலும் த்மிழகத்தைத் தவிர்த்த வெளி மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மீனாடசி சுந்தரம் அவர்கள் எழுதிய ‘எண்ணம் பிறந்த மின்னல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதை நூல் பல நூறு ‘பயிற்சிக் கவிதைகளைத்’ தனது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து பயிற்சிக் கவிதைகளே நூலாகும் ‘விந்தையை’ முதன்முதலாகக் காண்கிறேன். முயற்சியும் நமபிக்கையும் கலந்த கலவையின் முகப்போவியமாகத் திகழ்கிறது இந்த நூல். யாப்பமைக கவிதைகளை மரபுக்கவிதைகள் எனச் சொல்லி அச்சுறுத்துவோர் ஒரு பக்கம் தம் ‘பணி’யைச் செய்து கொண்டிருந்தாலும் பணி ஓய்வுக்குப் பின்னர் அதாவது தமது அறுபதாம் வயதில் தேமா புளிமா கற்று ஆசைபற்றிக் கவிதை எழுதிய கவிதைக் காதலர் இவர். இந்த நூலில் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார். எல்லாப் பாடல்களுமே விருத்தங்களாக அமைநதிருப்பதும் அவற்றுக்கான வாய்பாடுகளை அவராகவே வரையறுத்துச் சொல்லியிருப்பதுமாகும். இது எந்த அளவுக்குக் கவிதையின் வெற்றிக்குத் துணை நிற்கிறது என்பது தனி வினா!. புதுமை செய்து காட்ட வேண்டும் என்னும் அன்னார் நோக்கத்தில் பழுதிருப்பதாகத் தெரியவில்லை. இனி தொடக்கநிலைக் கவிஞர்கள் அதாவது பயிற்சிக் கவிஞர்கள் விருத்தங்களை எழுதிப் பழகுவது என்பது கவிமரபே! எனினும் சிந்துகளில் பயிற்சி எடுப்பது தொடைவிகற்பங்கள் வசப்பட ஏதுவாகலாம். மீயுயர் தகுதியை (DISTINCTION)  இந்தக் கவிதை நூல் பெறுகிறது என்று சொன்னால் எனக்கு நானே சிரித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஆனால் முதல்வகுப்பில் (FIRST CLASS) தேரியிருக்கிறது என்று நான் சொல்கிறபோது அதனை அவ்வளவு எளிதாக யாரும் மறுத்துவிட முடியாது. மறுப்பாரைக் களங்காண நான் காத்திருக்கிறேன். பயிற்சித் தேர்விலேயே முதல் வகுப்பில் தேரிய மாணவன் எழுதிய தேர்வுத் தாளாக இநதத் தொகுப்பு திகழ்கிறது. இந்த நூலின் முதல்வகுப்புத் தகுதிக்குக் கவிதைகளின் ஏனைய கூறுகளைவிட பாடுபொருள் தேர்வே முன்னிற்கிறது என்பதால் அவற்றில் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டுவதை  இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது.

பாடுபொருளும் பாவலரும்

கவிதையின் கூறுகளில் கருத்து அல்லது பாடுபொருள் என்பது மிகச் சிறிய பங்களிப்பையே தரும். அதாவது கருத்தே கவிதையாகிவிடாது. ஒதுக்கப்பட்ட அல்லது பிறரால் புறக்கணிக்ப்பட்ட,நோக்கிற்கு ஆளாகாத பாடுபொருளைப் பாடுவதாலேயே அது சிறந்துவிடாது. அதனை வெளிப்படுத்தும் கற்பனை கலந்த உத்திகளே அவற்றின்  நிலைப்பேற்றுக்குக் காரணமாகும். ‘கற்பு’ என்னும் பாடுபொருள் பலராலும் பாடப்பட்டிருந்தாலும் சிலம்பும் இராமாயணமும் நிலைத்திருப்பதே இதனை உறுதி செய்யப் போதுமானதாகும். எனவே கவிதையின் சிறப்பு பாடுபொருளில்  மட்டும் இல்லை  வள்ளுவர் ஈரடியில் சொன்னவற்றைத்தான் பதினெண் கீழ்க்கணக்கு நான்கடிகளில் சொல்லுகிகின்றன. ஆனால் பயன்? வள்ளுவம் பெற்ற புகழை நு}ற்றில் ஒரு பங்கினைக் கூட பதினேழு  நூல்களில் எதுவும் பெறவியலவில்லை.

பாடுபொருள் வெற்றி பெறவது எப்போது?

குமரி முனையையும் பாடலாம் குண்டூசியையும் பாடலாம். முன்னதைப் பற்றிய கவிதை தோல்வியடையலாம். பின்னதைப் பற்றிய கவிதை வெற்றியையும் அடையலாம். நாங்கூழ் புழுவைப் பற்றிப் பேராசிரியர் சுந்தரனார் பாடி வெற்றி பெற்றிருக்கிறார். அற்பப் புழு எனக் கருதக்கூடாது என்பதை, நடராசனின் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது. எம்மண்ணையும் நன்மண்ணாக்கி எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங் கருத்துமாக உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான். மனிதர்க்கான வாழ்வியல் ரகசியத்தை உணர்த்தியதால் மண்புழு இலக்கியத் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

பார்ப்பது வேறு நோக்குவது வேறு

கவிதைப் படைப்பில் கவனிக்க வேண்டிய இரண்டு கூறுகள் இன்றியமையாதன. எல்லாரும் பார்க்கிறார்கள். போகிறார்கள். கவிஞன் நோக்குகிறான். சிந்திக்கிறான். மற்றவர; எல்லாம் பார்த்துச் செல்வதால் சிந்திப்பதில்லை., இவன் நோக்குவதால் சிந்திக்கிறான். ‘சென்று பார்த்தாலும் பார்த்துச் சென்றாலும் பயனும் இல்லை., பாடலும் வராது. ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். மலர்களின் சிவப்பை எல்லாரும் பார்த்தனர் ;. சென்றனர் பாரதிதாசனுக்குத்தான் அந்தச் சிவப்புக்குப் பின்னால் இருக்கும் உழைப்பாளியின் குருதி தெரிகிறது.எல்லாரும் பார்த்த் மலர்தான் அது. இதுதான் கவிஞனின் நோக்கு. மற்றவர்களுக்கெல்லாம் பூனைக்குட்டியாகத் தெரிவது பாரதிக்குத்தான் பூனையின் பிள்ளையாகத் தோன்றுகிறது.. காரணம் அவனுடைய பார்வை  பூனைக்குட்டிகளையே குழந்தைகளாக நோக்கியவருக்கு  இந்திய மக்களை ஒருதாய்ப் பிள்ளைகளாகக் கருதுவதில்; சங்கடம் இல்லை. இதனால் நாட்டின் ஒருமைப்பாடு பற்றிய சிந்தனை பாரதிக்கு எளிதாகக் கைவந்தது. இயற்கையாகவும் அமைந்து. அமைவது. மற்றவர்களிடமிருந்து கவிஞன் வேறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த வேறுபாடுதான் ஒருவனைக் கவிஞனாக்குகிறது.

சோப்புப் பெட்டி கூட்டணி அமைத்த பொன்னடியான்

பல்வகைச் சோப்புக்களைப் பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சோப்பு வைக்கும் பெட்டியைப் பற்றிய சிந்தனை பொன்னடியாருக்குத்தான் வந்திருக்கிறது. சோப்புப் பெட்டியைப் பாப்பதும் பயன்படுத்துவதும் எல்லாருக்கும் பொதுவானவையே. ஆனால் உடம்பைத் தூய்மைப்படுத்தும் சோப்புப் பெட்டி அழுக்காய் இருப்பதைப் பொன்னடியாரால்தான் நோக்க முடிகிறது. இந்த முரணே கற்பனையைச் சிறக்கச் செய்கிறது. இத்தகைய கற்பனையின் பரிணாமம் கவிஞனே சோப்புப் பெட்டியாவதில் சென்று முடிந்திருக்கிறது.

“தங்கள் தூய்மையும் எங்கள் தூய்மையும்
ஒன்றே என்பதை உணர மறுத்தால்………….
இந்தக் குளியல் அறையில் என்போல்
ஓரமாக ஒதுங்கிக் கிடக்கும்
வாளி குவளை அனைத்தையும் சேர்த்து
அரசியல் வாதிகள் அமைப்பதைப் போல
பொருந்தாக் கூட்டணி புதிதாய் அமைப்பேன்!
…………………………………………….
எங்களைப் பற்றியே கவலை கொள்ளாரை
மருத்துவர்களிடம் அலைய வைத்து
அவர் உடல் நலத்தை, சோ;த்த பணத்தை
இருக்கும் அமைதியை இழக்க வைப்பேன்!
என்று முழங்கிய சோப்புப் பெட்டியின்
எழுச்சியால் குளியல் அறையே கொதித்தது!”

என்னும் பகுதி பொன்னடியாரின் கற்பனையின் உச்சத்தைக் காட்டுவதாக உள்ளது. அஃறிணையைப் பேசவைப்பது மரபு சார்ந்த கவித்திறன். அதற்குக் கவிஞன் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருளும், மானுடம் சார்ந்த உரிமை முழக்கத்தைச் சோப்புப் பெட்டிக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கும் பாங்கும் இறுதியாக குளிர்ச்சியாக இருக்கும் குளியல் அறையையே கொதிக்க வைத்துச் சமுதாயப் புரட்சியை ஒரு குறியீடாகக் காட்டியிருக்கும் படைப்புத் திறனும் பெரிதும் போற்றத்தக்கனவாக உள்ளன. கோலமாவு விற்பவளின் அலங்கோல வாழ்வைப் பாடியிருக்கிறார் பொன்னடியான்.    கொசுவைப் பாடியிருக்கிறார். பூசணிக்காயைப் பாடிய பாரதிதாசன்  . அதன் கைவண்ணத்தையும் கறிவண்ணத்தையும் பாடி எதனையும் பாடுபொருளாக்க முடியும் என்பதை நிறுவியிருக்கிறார்;. கவிமணி மாட்டையும் கன்றையும் பாடிக் குழந்தைகள் மனத்தில் மாறாத இடம் பெற்றிருக்கிறார். பசும்புல்லை உண்டு வெண்மையாகப் பாலைக் கறக்கும் விந்தையைப் பாடியிருக்கிறார் படைப்பாளுமை விஞ்சி நிற்கிறபோது கண்ணில் படும் எதுவும் மனத்தில் தோன்றும் எதுவும் கவிதையாகப் பாpணமிக்க இயலும். கவிஞர; மேத்தா அரளிப்பூவைப் பாட வைத்திருக்கிறார்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வெள்ளாட்டைக் கவிஞர் பொன்னடியானும்  பாடியிருக்கிறார். துணிந்து சேவலையே தூதுவிட்டவர் பட்டுக்கோட்டையார். சிரங்கைச் ‘சித்தன் சிரங்கப்பராயன் என்று பாடினார் கவிமணி.

நாயைப் பாடிய சுந்தரம்

பொதுவாக நன்றியுணர்ச்சியின் குறியீடாகவே நாய் பயன்படுத்தப்படுகிறது. நட்பினை மறவாது அன்புகாட்டும் ஒருவரது நட்பே கொள்ளத்தக்கதாகும் என்னும் கருத்தினை

“யானை அனையவர் நண்பொரீஇ, நாயனையார்
கேன்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா, வால்குழைக்கும் நாய்”. (நாலடியார் 213)

என்பன நாலடியார் வரிகள். இனி சிலேடைக் கவிஞர் காளமேகம் தமது சிலேடை வெண்பாவில் நாயைப்பயன்படுததியிருக்கிறார்

ஓடு மிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .

நாய்க்கும் தேங்காய் மூடிக்கும் பாடிய சிலேடை இப்படி அமைந்திருக்கிறது என்றால் பத்துப்பாட்டு இலக்கியங்களில் பாடிணியின் பாதத்து அழகிற்கு நாயின் நாக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ளதையும் காண முடிகிறது,

“வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி”   (பொரு. 42)

“உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின்”  (சிறு. 17)

“மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி”  (மலை.42)

என்றெல்லாம் சங்க கால இலக்கியங்களில் நாயின் நாக்கு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம் தூதாகச் சென்ற அங்கதனைத் தன் வலைக்குள் சிக்கவைக்கு முயன்ற இராவணன் அவனுக்குக் கிட்கிந்தாவிற்குத் தலைவன் பதவி தர முனைகிறான். அப்போது அங்கதன் கூறுகிறான்

“நீ தரக் கொள்வேன் யானே
இதற்கு இனி நிகர் வேறுஎண்ணின்
நாய்தரக் கொள்ளும் சீயம்
நல்அரசு என்று நக்கான்”

வறுமையினால் தாழ்வுற்ற காலத்து ஒருவனுக்குச் செய்யும் உதவிபோல் நாயை உயர்த்த நல்ல தமிழைப் பயன்படுத்துகிறார் சுந்தரனார். இது மரபுவழிச்சிந்தனையை மீட்டெடுத்தல் என்றும் கருத முடியும். அவர் பாடுகிறார்.

“சிவப்புடன் பச்சை வண்ணம்
சீர்பிரித்தறியா கண்ணில்
உவப்புடன் அனபு மட்டும்
உறைந்திடும் வண்ணம் கொண்டேன்
செவித்திறன் கூர்மை கொண்டு
சிற்றொலி உணர்ந் தறிந்தேன்
புவியெலாம் புகழும் என்றன்
புதிர் எனும் முகரும் தன்மை”

பங்குச் சந்தையில் உயர்ச்சியும் தாழ்ச்சியும் இருப்பதுபோல தமிழிலக்கியத்தில் உயர்ச்சியில் இருந்த நாய் மணிவாசகர் முதலிய அடியவர்களால் தாழ்ச்சியை அடைந்து மீண்டும் உயர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது நாயைத் தவிசேற்ற முயன்றவரில் நமது செல்வ மீனாட்சி சுந்தரனார் முன்களக் கவிஞராகவும் திகழகிறார்.

சிரிப்பைப் பாடும் செல்வ மீனாடசி

நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று மெய்பாடுகளின் நிரலில் நகையை முன்வைத்துத் தொடங்கினார் தொல்காபபியர். உயிரினங்களுள் மனிதனை அடையாளப்படுத்தும் தலையாய காரணி அதுதான் என்பது அவர் உள்ளடக்கிடக்கை. சினம் நகையைக் கொல்லும எனவே நகையின் எதிரியாகச் சினத்தைக் கொண்டார் திருவள்ளுவர். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ என்று வள்ளுவர் கண்ட தலைவன் அனுமானித்தான. பெண்ணின் சிரிப்பு ஆணைக் கைதியாக்கும் என்பதைக் கண்ணதாசன் சிரித்துச் சிரித்து என்னைச சிறையிலிட்டாள்” என்பதனால் உணர்த்தினர்.

நகைக்கு நகை என்று பெயர் வந்தது ஏன்?

திருவள்ளுவர் நகையைக் கொல்லுவது சினம் (304) என்று நகைக்கு எதிராக்கியதை மீனாட்சி ‘வெகுளிக்கு எதிரானது நகை’ என அளவையியல் நுட்பத்துடன் பதிவு செய்கிறார். எபப்டி? நகைக்கு வெகுளி பகையானால் வெகுளிக்கு நகை பகைதானே? இந்தச் சிந்தனையை இந்தக் கவிதையில் காணலாம். இது ஒரு உத்தி. ஆனால் சிந்தனையின் படிநிலை வளர்ச்சி. உரைநடையில் இது எடுபடாது. ஆனால் கவிதையில் சிறக்கும். எதுபோல? ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு’ எனறால் எல்லாரும் சரிப்பார்கள். ஆனால் ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு’ என்றால் எல்லாரும் ரசிப்பார்கள். அது போன்றது இது.

தற்குறிப்பேற்ற அணிக்காகவே மதுரையில் இல்லாத மதிலில் இன்னும் அந்த சாயம் போன மீன் கொடி பறந்து கொண்டிருப்பதாகத் தமிழாசிரியர்கள் நம்புகிறார்கள்.  செல்வமோ தொல்காப்பியர் நகையைத் தலைமை மெய்ப்பாடாக வைத்த காரணத்தைக் கவிதையில் சிந்திக்கிறார். நகைக்கான வேர்ச்சொல் ‘நகு’ இந்த வேர் நகுதல் அல்லது நகைத்தல் என்பதற்கானது.நகைக்கு அது வேர்ச்சொல்லாகுமா என்பதுபற்றிச் சொல்ல வேண்டியவர் மொழியாராய்ச்சி வித்தகர்களே. அணிகலன் என்பதே தமிழ். செய்யுளணி என்பதே வழக்கு. இருந்தாலும் நம்முடைய செல்வமீனாட்சி

“கவர்ந்திடும் எழிலாள் கனிச்சுவைத் திரளாள்
கனிந்திடும் சினநதனின் எதிராள்!
உவப்பதின் மகளாள்! உருகிடும் மெழுகாய்
உணர்வினில் விழுந்திடும் மழையாய்
தவழ்ந்திட இதழில் பொலிவுறும் முகமும்
தண்மதி வந்ததோ எனவாய்
தவறுதல் இன்றி அணிந்திட வேண்டித்
தமிழரும் நகையெனச் சொன்னார்!”

என்று பாடுகிறார் பொறுமையென்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள் என்பது அந்தக் காலத்தில் கொடுமுடி கோகிலம் அன்னை கே.பி.சுந்தாராம்பாள் பாடிய பாட்டு. பொறுமையை நகையாச் சொன்னார் அவர். நம் செல்வமீனாட்சியார் நகையை நகையாக அணிந்து கொள்ளுங்கள் என்கிறார். இது ஒரு மரபுவழிச் சிந்தனை என்றால் பலருக்கும வியப்பாக இருக்கும். பணக்காரனுக்குப் புத்தி சொல்கிறபோது பணத்தைத் தொடர்புபடுத்தவேண்டும் என்பது திருவள்ளுவருக்குத் தெரியும். அதனால்தான்

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து”

என்று பணிவை ஓர் செல்வமாக்கினார். தற்காலத்தில் நடமாடும் நகைக்கடைகளாக ஆண்கள் சிலரும் வலம்வருவதை வலைத்தளங்களால் அறிய முடிகிறது. நகையை விரும்பும் அத்தகைய ஆண் பெண் இருபாலாருக்கும் சிரிப்பின் சிறப்பை ‘நகை’ என்ற சொல்லால் புலப்படுத்துகிறார். என்ன ஒரு சங்கடம்?  இந்த நகைகக்கு வங்கிகள் கடன் தராதே என நினைக்கலாம்! வங்கிகளால் இதனை மதிப்பிட இயலாது என்பதே உண்மை!  சிரிக்கத் தெரிந்தவனுக்கு கடன் வராது. அது மட்டுமன்று ஒரு நல்ல ஆண்மகனுக்கு மற்ற திறன்களைவிட புன்னகைதான் நற்றிறன் ஆகும்.  இந்த விஷயத்தில் கம்பன் ஒரு புரட்சி செய்திருக்கிறான் ஆணின் விரிமார்பும், மலைத்தோளும் தாழ்ந்த தடக்கையுமே ஒரு பெண்ணைக் கவரும். ஆனால் இத்தனையும் இருந்தாலும் இராமனுடைய புன்னகைதான் சீதையைத் தடுமாறச் செய்தது என்று பாடுகிறான்

“இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே “!

என்பது கம்பன் பாட்டு. இராமபிரானின் கருத்த முடியோ, சந்திரமுகமோ, தாழ்ந்த தடக்கையோ மாணிக்கத்தோளோ சீதையைக் கவரவில்லயாம். இவற்றையெல்லாம் தான் காண்பதற்கு முன்பே தன்னுயிரை இராமபிரானின் புன்னகை கொள்ளை கொண்டதாம். கம்பன் அப்படிப் பாடியதைச் செல்வ மீனாட்சி இப்படிப் பாடியிருக்கிறார். எழில்நங்கையாக உருவகத்திருக்கிறார். ‘இந்தப் புன்னகை என்ன விலை?’ எனச் சந்தைப் படுத்தியவர்களும் உண்டு.

கோடுகளும் குடைக்கம்பிகளும்

ஒன்றைப் பிறிதொன்றாக நோக்கி மயங்குதல் இலக்கியத்தில் இயல்பு. இராமனிடம் மயங்கியவள் சூர்ப்பனகை சீதையிடம் மயங்கியவன் இராவணன். எனவே இராவணன் சூர்ப்பனகையின் கண்களுக்கு இராமனாகத் தெரிகிறான். இராவணன் கண்களுக்குச் சூர்பபநகை சீதையாகத் தெரிகிறாள். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய கவிஞர்கள் இது போன்ற வெறும் கற்பனைகளுக்கு இடம் தராமல் தங்கள் உள்ளத்துக் கவலையை, தங்கள் பக்குவத்தைக் கவிதைப் பதிவில் காட்டிவிடுவார்கள். மகாகவி ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்று பாடியவன். உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்று பாடியவன். பாட்டுக்காகப் பாடாமல் தான் பாவீத்ததைப் பாடியவன். பிறரெல்லாம் பூனையையும் அதன் குட்டியையைபும் பார்த்தார்கள். மகாகவி பாரதி இயல்பிலேயே உயிர்களை நேசித்தவராதலின் வெள்ளை நிறத்தொரு பூனை ஏங்கள் வீட்டில் வளருது கண்டீர்! பிள்ளைகள் பெற்றதப்பூனை’ என்று குட்டிகளைப் பிள்ளையாகத்தான அவரால் நோக்க முடிந்திருக்கிறது. தேசப்பற்றுடைய கவிஞர் மேத்தா இந்திய வரைபடத்தைப பார்ககிறார்.  அதிலே நெளியும் மாநிலங்களின் எல்லைக் கோடுகள்,ள நதிகளைக் குறிக்கும் கோடுகள் முதலியவற்றைக் கோடுகளாகக் கொள்ள அவரால முடியவில்லை. அவர் எழுதுகிறார

“தேசப்படத்திலுள்ள கோடுகள்
விடுதலப் போராடிய வீரித் தியாகிகளின்
விலா எலும்புக்கூடுகள்” மு.மேத்தா

மேத்தாவினால்தான் இப்படி நோக்கமுடியும். அதுபோல செல்வமீனாட்சி சுந்தரனார் குடை தன் வரலாற்றைக் கூற செய்திருக்கிறார். எப்படி? கம்பிகளுக்கு மேல் பின்னப்பட்டிருக்கும் கறுப்புத் துணியைத் தோல் என்கிறார். எனவே கம்பிகள் எலும்பாம்.

“எலும்பும் தோலும் மட்டும்
இணைத்தே கொண்டேன் என்னுடம்பை
அழுகும் தசையைக் கொள்ளேன்
அழகாய் மெலிந்த எழில்கொண்டேன்
நழுவும் உடைகொள் கைபோல்
நட்பில் இணைந்தோர் நலங்காத்தேன்
தழுவிக் கக்கம் கொள்வார்
தவமாய்ப் பெற்ற பிள்ளையென!

எலும்பும் தோலுமாய் என்னும் உலக வழக்கைக் கவிதைக்குள் கொண்டு வருகிற உத்தி இது. இந்த உத்தி இன்னும் சிறக்க இன்னொரு படிமத்தையும் காடசிப்படுத்துகிறார். நாமெல்லாம் கைத்தடியைத்தான் மூன்றாவது காலாகச் சொல்லுவோம். ஐயா பெரியார் கைத்தடிக்கும் இது பொருந்தும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை மடக்கி ஊன்றி அதனைத் தாங்கிய குடையை  மூனறாங்கால் என்று பாடியவர் நமது செல்வமாகத்தான் இருக்க முடியும்.

“நிலத்தில் என்னை ஊன்றி நிமிர்ந்தோர் கொண்ட மூன்றாங்கால்”

வெயிலுக்கு நிழல்தரும் குடையை ஒற்கத்தின் ஊன்றுகோலாகப் பார்த்ததும் சிறப்பு! பாடியதும் சிறப்பு! கருப்பு களங்கம் என்பாரும் கூட கருப்புச் சேலைபோர்த்திய குடையைத்தாங்கி நடக்கிறாராம்!,

‘கட்டிக் கொள்ள முன்னம் கருப்புச் சேலை கொண்டோனே’

என்று பாடி தமது கொள்கையை மிக இலாவகமாகப் பதிவு செய்திருக்கிறார் செல்வம்.

கைக்கிளையில் தொடங்குவதுதான் காதல்

ஆடியைத் தவிர வேறு எந்தப் பொருளும் ஒரே நேரத்தில் செயல்படாது. தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை’ என்பது குறுந்தொகை. கைக்கிளை என்பதை ஒருதலைக் காதல் என்பது பிழைநோக்கு. அது காதலின் தொடக்கம். தலைவன்தான் முதலில் நோக்குவான். அந்த நோக்குதான் கைக்கிளை எனப்படும். ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை’ என்பது தொல்காப்பியம். எனவே கைக்கிளையே காதலின் தொடக்கம். இந்தத் தொடக்கத்தை நிகழத்த வேண்டியவன் ஆண். இது மரபு.  ஒரு பெண் தன் உள்ளத்துக் காதலையும் செயலையும் முனனெடுப்பது கருத்தியல் வளர்ச்சி. இலக்கியப் புரட்சி. இந்தப் புரடசியை நிகழ்த்திக்காட்டியவர் பாவேந்தர்.

“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலை கிழததிக்கு இலலை”

எனத் தன் உள்ளத்துக் காதலை வாய்விட்டுச் சொல்லவே முடியாத இலக்கியத் தலைவியை முதலில் சமுதாயத் தலைவியாக்கினார் பாவேந்தர். சொல்வதென்ன?  செயலையும் நீயே தொடங்கு என்று வினைப்புரட்சி செய்தவர் பாவேநதர்.

“…………………………………………………..அடி
கோதை தொடங்கடி என்று சொன்னான் இன்பம்
கொள்ளை கொள்ளை அந்த மாந்தோப்பில்”

என்று தலைவியை வினைத்தொடக்கம் செயய்ச் சொனனார் பாவேந்தர் இல்லற வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை என்பது பாவேந்தர் கருத்து. வினையைத் தொடங்கி முடித்த தலைவிகளின் பட்டியலை நீளச் செய்கிறார் செல்வம். பாவேந்தரை வழிமொழிகிறார். ஆனால் அஞ்சுகிறார். பாவேந்தர் செயல் தொடக்கத்திற்கே அனுமதியளித்த பின் ‘காதலை மங்கை சொன்னால்’ என்ற நிலையிலேயே சிந்தனை வளர்ச்சியைக் காட்டுமா?

“ஊதலால் நடுங்கும் தேகம்
உலர்த்திடும் வெம்மை தேடி
காதலாள் பக்கம் நின்று
கனிவுடன் கொஞ்ச ஏங்கும்!
மீதமாய் வைத்த லின்றி
மேகமாய் பொழியும் அன்பால்
காதலை மங்கை சொன்னால்
கோதெலாம் கன்னல் சாறே!

பழம் என்றாலே கனிந்ததுதான். கனிந்த பழம் என்றால்? மழலை என்றாலே கனிந்த சொல்தான். மழலையே கனீந்தால் எப்படி இருக்கும்? இப்படிச் சிந்தித்தவர் கண்ணதாசன். ‘கனியக் கனிய மழலை பேசும் கண்மணி’ என்பது அவர் சுவைத்த காதல். அப்புறம் இங்கே மீனாட்சி சுவைப்பதைப் பார்க்கிறோம். இவர் என்ன சொல்கிறார்? ‘கனிவுடன் கொஞ்ச’ என்கிறார். கொஞ்சுதல் என்றாலே கனிவுடன்தான் கொஞ்ச முடியும். கோபமாகவா கொஞ்சுவார்கள்? பி.எஸ். வீரப்பாவும் சி.டி.ராஜகாந்தமும் காதல் பாட்டில் வந்தால் என்ன ;ஆகும்? இவர் சொல்கிறார் கனிவுடன் கொஞ்ச வேண்டுமாம். அவர் அனுபவம். அவர் கொடுத்து வைத்தவர். கொஞ்சப்பட்டவர். தான் பெற்ற இன்பத்தை வையகமும் பெற வெண்டும் என்று விரும்புகிறவர். எல்லாரும் செல்வம் ஆக இயலுமா என்ன? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ‘தேன்வந்து பாயுது என்கிறார் பாரதியார். இவருக்குத் தன் காதலி தனது காதலைத்தனது மொழியில் தானே சொன்னால் காதெல்லாம் கன்னல் சாறாம். பாரதியாவது ‘வந்து பாயுது’ என்றார். இவருக்கு வந்து  பாய்ந்ததா? வராமல் பாயந்ததா என்பது தெரியவில்லை.

நல்லினமா? புல்லினமா?

தன்னுடைய குறிப்பை ஏற்றி உரைப்பதற்குத் தற்குறிப்பேற்றம் என்பது அணியிலக்கணப் புலவர்கள் அடிக்கடிச் சொல்லும் தனி மந்திரமான அணிமந்திரம். ஆனால் அந்தத் தற்குறிப்பேற்றத்தை வெளிப்படுத்துவதில் பல முறைகள் இருக்கின்றன என்பதைச சில கவிதைகளால் அறிந்து கொள்ள முடியும். அதாவது தற்குறிப்பேற்றத்தை  வினாவடிவிலும் அமைத்துக் காடட இயலும். அது ஒரு வகையான படைபபாளுமை.

“பசுமையாம் புல்லைத் தின்றே
பசுவதும் பால் கொடுக்கும்!
பசுவது பொழியும் பாலைப்
பச்சிளங்குழந்தை உண்ணும்!
சிசுவதன் தாய்ப்பால் என்றே
செப்பினால் தவறு முண்டோ?
பசுமையாம் புல்லினந்தான்
பார் இதின் உணவுக்கூடம்!

அருகெனும் புல்ல ரைத்து
அதில்வரும் சாற்றைக் அள்ளிப்
பருகிட வாதம் பித்தம்
பறக்குமே உடலை விட்டு!
மருந்துடன் உணவும ஈந்து
மனிதரின உயிரைக் காக்கும்
இருந்தும் ஏன் புல்லினத்தை
இழிகுலம் என்றே சொன்னார்?”

‘விசும்பின் துளிவீழின்அல்லால் பசும்புல் தலைகாண்பதும் அரிது என்பார் திருவள்ளுவர்.’ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்’ என்று உரைகாண்பார் பரிமேலழகர். ‘புல்’ என்பது தமிழறிஞர் இளங்குமரனார் எழுதிய தன் வரலாற்று நூலுக்குப் பெயர். அவர் தன்னைப் புல்லாக்கிக் கொண்டவர். கவிஞர் காமராசன் பனித்துளியின படுக்கையறையாகவும் குசேலரின் உணவுக் களஞ்சியமாகவும் புல்லை நோக்கியதைக் கறுப்புமலர்களில் காணலாம். காலனைத் தன் காலடியில் வரச்சொல்லி அவனைப் புல்லெனவே மிதிப்பதற்கு எத்தனித்தவர் மகாகவி. ‘நெல்லுக்கு இரைதத நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும பொசியுமாம்’ என்று நெல்லை உயர்த்தியும் புல்லையும் தாழ்த்திப் பாடியவர் ஔவையார். ‘புல்லாகிப் பூடாகிப் புழுவாய மரமாகி’ என மணிவாசகப் பெருமானும தன் பிறவிகளைப் புல்லென்னும் கீழ் நிலையிலிருநதே தொடங்கிப் பாடுகிறார். இப்படி புலலைத் தாழ்த்தியே பாடி வந்த கவிஞர்கள் நடுவில் புல்லை உயர்த்திப் பாடிய கவிஞர் நம்முடைய செல்வம்!

மருந்துடன் உணவும ஈந்து
மனிதரின உயிரைக் காக்கும்
இருந்தும் ஏன் புல்லினத்தை
இழிகுலம் என்றே சொன்னார்?”

மழலையிலிருந்து மண்ணுக்குப் போகிறவரை உதவுகிற ஒரு தாவரத்தை இழிவாக நோக்குவதும் பாடுவதும் இயற்கைக்கு முரண் என்பது கவிஞர் கருத்து. இது பாடுபொருளை வேறுபட்ட கோணத்தில் பார்க்கத் துணியும் கவித்துவத்தின் மாற்றுநிலை எனக் கருதலாம்.

செருப்புக்குள் பிரிவுண்டா? பேதமுண்டா?

செருப்போடு ஒரு நேர்காணல் நிகழ்த்தியவர மேத்தா. காலுக்கொரு செருப்புமில்லை கால்வயிற்றுக் கூழுமிலலை என்று ஏழைகளுக்காகப் பாடியவர ஜீவா.

“திங்களின்மேல் முதன்முதலாய்த் தடம்பதித்தேன் என்னுருவை
செருப்பே நானே!
உங்களைநான் ஆண்டேனே! உயிரிருக்கை மேலமர்ந்தே
உலகின் வேந்தாய்!
எங்கனுமே துணையுடனே வாழ்ந்தோமே பெருமிதமாய்
இருந்தோம் ஒன்றாய்
பங்கமதே இணைபிரிதல் எமைப்போலே இணைபிரியாப்
பாடம் கற்றே!

கவிதையைப் பற்றிய என்னுடைய திறனாய்வுக் கட்டுரைகளில் ஒரு கருத்தினைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். ஒரு கவிஞனின் அத்தனைப் படைப்புக்களும் கவிதைகளாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது கவிதை பாடல்களின் எண்ணிக்கையையோ வெளியிடப்படும் நூல்களையோ பொருத்தது அன்று. ஒரே கவிதையாக இருந்தாலும அக்கவிதையின் எல்லா வரிகளும் அடிகளும் கவிதையாக இருக்க வேண்டும் என்ற தேவையும் கிடையாது. கவிதை முழுமையான சீர்களிலோ அடிகளிலோதான் அமைதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் வரையறுக்கவில்லை. ஓரசையே போதும்! இரண்டசையே போதும்! பொருளற்ற அசைச்சொற்களே கவிதையாக மாறும் ஒரு வியப்பிடைச் சொல் கவிதையாக மாறும்.  ‘ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியாக அழகுடையான்’ என்னும் கம்பன் அடியில் ‘ஐயோ’ என்னும் ஒரு வியப்பிடைச் சொல் கவிதையானது காண்க. ஒண்ணுதற் ‘கோஒ’ என்ற தொடரில் ‘ஓஒ’ என்னும் நேரசையிரண்டு மட்டும் நின்று கவிதையானது காண்க.  அவைபோல இந்தப் பாட்டில் நிலவின் மீது நீல் ஆம்ஸ்ட்ராங்கின் காலணியே முதலில் பட்டதும் அயோத்தியை  அது ஆண்டதும் தெரிந்த சேதிகளே. ஆனால் உங்களால் ஒதுக்கப்படுகிற நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நீங்கள் எங்களைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளக் கூடாதா? என்று இணைச்செருப்பு ஏங்குவது செல்வ மீனாட்சியாரின் சமுதாயப் பார்வை. பாடுபொருள் புதுமை! பொருண்மை ஆழம்! செருப்புக்கள் பிரிவதில்லை அவற்றுள் பேதமில்லை. ஆனால் மனிதர்க்குள்? அதுவும கணவன் மனைவிக்குள்?  அச்சாணியை வைத்து நீதிசொல்வார் வள்ளுவர். அடிச்செருப்பை வைத்து நீதி சொல்கிறார் செல்வம்!. இநத ஒரு சேதி போதும் இது கவிதை என்பதற்கு! சரியா

நிறைவுரை

“ஒரு சிறந்த எழுத்தாளருக்கு ஓரளவு சக்தி வாய்ந்த உள்ள இயல்பும் உணர்ச்சி நிறைந்த வளமும் இன்றியமையாதனவாகும்” மேற்கண்ட கருத்துரையில் அமைந்துள்ள ‘சக்திவாய்ந்த உள்ளம்’ உணர்ச்சி நிறைந்த வளம்’ ஆகிய இரண்டும் கற்பனைக்கும் பொருந்தும். அதனால்தான் பிறரால் நோக்கப்படாத பொருட்கள் செல்வம் மீனாட்சி சுந்தரனாரால் நோக்கப் பட்டிருக்கின்றன.  நாய்,, குடை, விளக்குமாறு, புல், கைக்கிளை, சிரிப்பு,  எனப் புதுமையாகப் பாடுபொருள்களைத் தெரிவு செய்து, அவற்றைக் கற்பனை கலந்து கவிதையாக்குவதற்குரிய இதயத்தைச் செல்வ மீனாட்சியார்  பெற்றிருக்கிறார். “பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தைக் கண்டறிவதுபோல சொற்களைக் கொண்டு” அஃறிணையை கவிதைகளால் உயர்திணையாக்கிருக்கிறார். பட்டறிவும், பாசமும் நேசமும் கற்பனையும் கவித்துவமும் இழையோடும் இந்தக் கவிதைகளைப் பயிற்சிக்கவிதைகள் என்று அவர் சொல்கிறார்!  நம்ப முடியவில்லை!)

நூலாசிரியர் திரு செல்வ மீனாட்சி அவர்களைப் பற்றி

வணிகவியல் முதுகலைப் பட்டதாரியாகி, வங்கியின் எழுத்தர் பணியில் தொடங்கிய இவரது பணிக்காலம பொதுமேலாளராக நிறைவடைந்தது. கொங்கு மண்டலத்தில் தொடங்கிய தன் வங்கிப் பயணததைக் கர்நாடக மாநிலம் மங்களூரில் தானாகவே நிறைவு செய்து கொண்டார். தற்போது சென்னை வேளச்சேரி இராமநகரில் வாழ்ந்து வரும் இவர் பிறந்தது மதுரை அனுப்பானடியில். அனுப்பானடியில் பிறந்ததால்  இவருக்கு குறளடி உள்ளிட்ட அத்தனை அடிகளும் அறிமுகம். வாய்பாடுகளை முன்னெழுதி அதற்கான கவிதைகளைத் தொடுப்பது இவரது தனிப்பாணி முகநூலில் இந்தக் குயிலின குரல் கேட்டதனால் இவருடைய முழுக் கச்சேரியையும் கேட்க விரும்பி நான் இவரிடம் கேட்டுப் பெற்ற நூல்தான் எண்ணம் பிறந்த மின்னல்’ ஐந்நூறு கவிதைகளில் உள்ள பாடுபொருள்களில் சிலவற்றைப் பற்றியே இந்தக் கடடுரை பேசுகிறது.  இவர்தம் கவித்துவம் பின்னர் பிறிதொருவரால் பேசப்படலாம். பேசப்படும்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 7

  1. அதனைத் திருத்தாதீர்! அப்படியே இருக்கட்டும்!

    வல்லமைக்கு வாழ்த்துக்கள்!

    கட்டுரையின் இறுதியில் நூலாசிரியர் குறிப்பில் (இறுதியிலிருந்து மூன்றாவது சொல்) ‘பிறிதொருவரால்’ என்றிருப்பது தவறு! பெரும்பிழை!

    ‘பிறிது’ என்பது அறிஃறிணை! ‘ஒருவர்’ என்பது உயர்திணை! எனவே ‘பிறர் ஒருவரால்’ என்றிருந்திருக்க வேண்டும்! அதுவே நெறி!.

    முனைவர்ப்பட்டம் பெற்றுவிட்டதாலேயே மொழியின் கட்டமைப்பைச் சிதைப்பது உரிமையாகாது.

    பிறிதொன்றனால் என்றிருக்கலாம் பிறர் ஒருவரால் என்று இருக்கலாம்.

    இதனால் ஏற்பட்டிருக்கும் வழு திணை (தினை) திணைவழு அன்று. ‘பனை’ வழு!

    தட்டச்சுப் பிழை என்றெல்லாம் என்னால் பாசாங்கு செய்ய இயலாது. என் அறிவே அவ்வளவுதான்! அதற்காக வருந்துகிறேன்.!
    திருத்திக் கொள்வேன்!

    அந்தத் தவறுஅப்படியே இருக்கட்டும்! அருள்கூர்ந்து இந்தப் பின்னூட்டத்தைத் தணிக்கை செய்யாமல் அனுமதிக்கப் ;பணிவுடன் வேண்டுகிறேன்.
    மொழித்தொண்டு என்பது இதுதான்!
    நன்றியுடன்
    ச.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.