சேக்கிழார் பாடல் நயம் – 151 (பரிவுறு)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.
வரலாறு
சாய்க்கடையில் அமுது வீழ்ந்தது கண்ட தாயனார், என்னை ஆட்கொள்ளும் பிரான் அமுது செய்யக் காணும் பேற்றைப் பெற்றிலேன் என்றெண்ணி அரிவாளைக் கழுத்தில் பூட்டி, ஊட்டியையும் அரிந்து கொண்டார். அப்போது இறைவன் திருக்கரம்,‘’ சாய்க்கடையில் விடாதே’’ என்றபடி அவரளித்த மாவடுவைக் கடிக்கும் ஒலியுடன் அடியாரின் கையைத் தடுத்து எழுந்தது! உடனே அடியாரின் கை ஆண்டவன் திருக்கரத்தின் தொடர்பால் அவரது உடலின் காயம் நீங்கி, வணங்கிய கரமாயிற்று.
‘’அடியேனின் அறியாமை கண்ட பின்னும் என் அடிமைத்திறம் விரும்பி இந்தச் சாய்க்கடையிலும் தோன்றி அடியேன் அளித்த உணவை அமுது செய்த , பரனே போற்றுகின்றேன்! என்னைத் தடுத்த இடக்கரத்தை யுடைய அம்பிகை பாகனே, போற்றுகின்றேன்! நீறணி மேனியனே போற்றுகின்றேன்’’
என்று வணங்கினார். அப்போது , தம் இடப வாகனத்தில் எழுந்தருளி, ‘’நீ புரிந்த தொண்டு நன்று! உன் மனைவியுடன் இப்போதே நம் திருக்கயிலாயம் அடைந்து வாழ்வாய்!’’ என்று கூறி விடையேறி மறைந்தார். இதனைச் சேக்கிழார்,
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.
என்று பாடினார்.
பாடல்
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.
பொருள்
அன்பு பொருந்திய சிந்தையினையுடைய அன்பராகிய தாயனார், “பரம்பொருளாகியுள்ள பெரியவராகிய சிவபெருமான் இங்கு அமுது செய்யும் பேறு பெற்றிலேன்” என்று கொண்டு வரியினையுடைய மாவடுவினது “விடேல்” என்ற ஓசையினை அவர் கேட்பிக்கு முன்பு, தம் வன் கழுத்தினை அரிவாளினைப் பூட்டி அரிதலினாலே அரிவாட்டாயர் என்ற தூய பெயரினை உடையர் ஆயினர்.
விளக்கம்
இப்பாட்டுக் கவிக்கூற்று. பரிவுறு சிந்தை என்ற தொடர் பரிவு – அன்பு. மாசறு சிந்தை உடைய அன்பர் என்பதைகள் குறித்தது. பரம்பொருளாகியுள்ளபெரியவர் என்ற தொடர், எல்லாப் பொருள்களுக்கும்
அப்பாற்பட்ட – கடந்த – எல்லையாயுள்ள பரம்பொருளைக் குறித்தது.
அமுது செய்யப்பெற்றிலேன் என்பது உண்ணுதலைக் காணும் பேறு பெற்றிலேன் என்று பொருள் படும்.
வரிவடு என்பது நிறமுடைய மாவடுவைக் குறித்தது.
வன்கழுத்து என்பது, அரிந்தும் அரியுண்ணாமலும், பின்னர் அருளால் ஊறுநீங்கியும், இறைவனதுகழுத்துப்போல என்று நிலைத்த வாழ்வுபெற்றும் விளங்கிய தன்மை குறிக்க வன்மை என்ற அடைமொழி தந்து கூறியதைக் காட்டும்.
நாமம் – தாயன் என்பது அவரது பெயர். அவருடைய தாயன்பைக் காட்டியது. அர் – உயர்வு குறித்த பன்மை விகுதி. தாயனார் .
தூய நாமம் அரிவாட்டாயர் ஆயினார் என்க. தூய – தூய்மையைத் தரத்தக்க. திருத் தொண்டத்தொகையுள் ஆளுடைய நம்பிகள் இக்கருத்துப்பற்றியே
“எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்” என்று துதிக்க நின்றமையும், அதனைத் துதித்து உலகம் தீமை நீங்கித் தூய்மை பெற்று உய்கின்றமையும் குறிக்கத் தூய என்றார். அடியார் திருநாமங்கள் தூய்மை செய்வனவாம் என,
“அடியிணைகள்,
சிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவையினை,
மந்திரமாக் கொண்டு மயிர் சிலிர்த்து – நைந்துருகி,
மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்,
கைதவமும் புல்லறிவுங் கற்பனையும் – மையலுந் தீர்ந்,
தத்துவிதா னந்த வகண்டபரி்பூரணத்தில்,
நித்தியமாய் வாழ்வார் நிசம்”
என்று திருத்தொண்டர் திருநாமக் கோவையினுள் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் போற்றி அருளியிருப்பது காண்க.
“திருஞான சம்பந்தர்” என்ற நாமமந்திரம் சொல்லக் கேட்டலும் பாண்டியர் அயர்ச்சியை நீங்கினார் என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்க.
இப்பாடலில் தாய் அன்னாராகிய தாயனார், தம் அன்புத்தொண்டு பழுதாகக் கண்டு தாமே தண்டித்துக் கொள்ள முயன்ற செயலும், இறைவன் அந்த இடத்தில் தாமே தோன்றி தாயானார் ஊறு நீக்கியதும், கமரில் சிந்திய உணவை நிவேதனமாக அங்கேயே மாவடு கடிக்கும் ஓசையுடன் இறைவன் அமுதுசெய்த கருணைத் திறத்தையும், அரிவாளை எடுத்து ஊட்டியை அரிந்து கொண்ட அடியாரின் செயற்கரிய செயலையும் உணர்த்தி, நாயனாரின் திருப்பெயர் ‘அரிவாள் தாயனார்‘ என்று அழைக்கப் பெற்ற சிறப்பும் விளங்குகிறது! அதற்கும் மேலாக அரிவாள் ஏந்திய தாய்அன்னார் என்ற பொருள்படும் அரிவாட்டாயனார் என்ற முரண்பட்ட தொடர், புதிய நகை முரண் கொண்டு விளங்குவதையும் குறிப்பாக அறிந்து கொள்கிறோம்!