Blog

  • பள்ளிகளுக்கருகே மதுக்கடைகள் கூடாது, மாநகராட்சிகளின் நடவடிக்கை

    தேமொழி

    தமிழ் நாட்டில் பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் சென்று கோரிக்கை மனு கொடுத்து முறையிடுவதாகவும், போராட்டங்கள் நடத்துவதாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தினசரிகளில் வரும் செய்திகளைப் படித்து நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை எழுவது இயற்கை.

    ஈரோடு அருகே பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவிகள் டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாகக் கிடைத்த செய்தியினால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடைவதாக ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ சென்ற மாதம் (டிசம்பர் 5, 2003) ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது போன்ற செய்திகளால் வருத்தமடைந்தவர்கள் இக்கட்டுரையின் தலைப்பினைப் படித்து இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று ஆனந்தப் பள்ளு பாடவேண்டாம். இங்கு குறிப்பிடப் போகும் செய்திகள் நம் தமிழக மாநகராட்சிகளின் நடவடிக்கைகளைக் குறித்தல்ல.

     

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்டா ஃபே மாநகராட்சி தங்கள் நகரில் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடையை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. முதலில் மாநகராட்சியின் அனுமதியையும் மீறி அங்கு மதுக்கடை அமைந்ததே சட்டக் குளறுபடிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல கடைகள் வைத்திருக்கும் பலசரக்கு விற்பனை நிறுவனம் ஒன்று, தனது ஒரு கடையின் மது விற்கும் உரிமத்தை மற்றொரு கடைக்கு மாற்றிக் கொடுத்தது. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. ஆனால் புது உரிமம் பெற்ற மதுக்கடைக்கருகே பள்ளி இருப்பதால் அந்த மாநகராட்சி சட்டப்படி தங்களிடம் அனுமதி இல்லாமல் பள்ளிக்கருகில் மது விற்பனை கூடாது என்று அதனை எதிர்த்தது. விற்பனையாளர் இது தவறு என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். விற்பனை உரிமம் வழங்கும் மாநில அரசும் மது விற்பனைக்கு அனுமதி அளித்ததில் சட்டமீறல் இல்லை என்றது. எனினும் நீதிமன்றம் மாநகராட்சிக்கு ஆதரவாக மது விற்பனையை நிறுத்த ஆணையிட்டது.

    மதுவிற்பனையாளர் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். மாநகராட்சியோ பள்ளிக்கு 300 அடிகளுக்குள் மதுக்கடை இருக்கிறது, சட்டப்படித் இது தவறு என்று வாதிட்டது. நீதிமன்றம் பள்ளிக்கும் கடைக்கும் இடையே உள்ள தொலைவை அளந்ததில்தான் தவறு. பள்ளியிலிருந்து 300 அடிகளுக்குள் கடையின் வண்டிகள் நிறுத்தும் இடம்தான் இருக்கிறது. விற்பனை செய்யும் கடை 300 அடிகளுக்குள் இல்லை. வழக்கமாக அளவிடும் முறையில் கட்டிடங்களுக்கிடையேயான தொலைவை அளந்தால் மாநகராட்சியின் வாதம் சரியல்ல என்று கூறி மது விற்பனைக்கு அனுமதி அளித்துவிட்டது.

    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் “எண்ணிக்கை தெரியாத குற்றம்” என்ற வசனம் போன்று “உனக்கு அளக்கத் தெரியவில்லை” என்று உயர்நீதி மன்றம் சொல்லி அவர்கள் வழக்கைத் தள்ளுபடி செய்த பின்னர், இப்பொழுது மாநகராட்சி உறுப்பினர்கள் உச்ச நீதி மன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்ல ஆயத்தமாகிறார்கள். இனியாவது மாநகராட்சியின் நல்லெண்ணத்திற்கு வெற்றி கிட்டட்டும்.

     

    மற்றொரு நிகழ்ச்சியில், நியூ யார்க் மாநிலத்தின் குயின்ஸ் மாநகராட்சி உறுப்பினரான டானவான் ரிச்சர்ட்ஸ் (Donovan Richards) என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையினால் பள்ளிக்கருகே மது விற்பனை நிகழாமல் போனது. பள்ளிகருகில் மது விற்பனை செய்ய வணிகர் ஒருவர் மாநகராட்சிக்கு விண்ணப்பம் அளித்தார். டானவான் ரிச்சர்ட்ஸ் அதற்கு உடன்பட்டு அனுமதி அளிக்கவில்லை. விண்ணப்பித்த வணிகரும் அவரது தோழர்களும் டானவான் ரிச்சர்ட்ஸ்க்கு கையூட்டு அளித்து அனுமதி பெற முயற்சித்தனர்.

    எச்சரிக்கை அடைந்த டானவான் ரிச்சர்ட்ஸ் உடனே அவர்களைப்பற்றி காவல்துறையின் துப்பறியும் பிரிவினரிடம் புகார் அளித்தார். அவர்களைக் கைது செய்ய டானவான் ரிச்சர்ட்ஸ் காவலருடன் ஒத்துழைக்க முன்வந்தார். துப்பறியும் பிரிவினர் டானவான் ரிச்சர்ட்ஸ்ஸின் பிரதிநிதி என்று ஒருவரை நியமித்து, வணிகருடன் உணவுவிடுதி ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அங்கு வந்த வணிகரும் அவரது நண்பர்களும் அந்த நபரிடம் கையூட்டு கொடுக்க முயன்றபொழுது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டனர்.

     

    பள்ளி அருகில் மதுக்கடை வைக்க விரும்பி கையூட்டு வழங்க முயன்ற வணிகர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்கள் டார்செம் சிங், தேவேந்தர் சிங் மற்றும் ராஜேந்தர் சிங். இவை நம்நாட்டு மக்களின் பெயராக இருப்பதால் பாரதத்தின் ஊழல் பண்பாட்டை மற்ற நாடுகளுக்கும் பரப்ப எத்தனிக்கிறார்கள் நம் இந்தியர்கள் என எண்ணத் தோன்றுகிறது. இந்தியாவில் பள்ளிக்கருகில் மது விற்பனை என்னும் முயற்சிகள், மதுவை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதும் மேலை நாட்டினரைவிடவும்  மோசமாக இருப்பது இந்த நிகழ்சிகளால் தெரிய வருகிறது.

     

     

     

    சான்றுகள்:
    மதுக்கடையில் மாணவிகள்: வைகோ கவலை..! டிசம்பர் 05,2013, தினமலர்

    மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். டிசம்பர் 06,2013, தினமணி‎

    Plea to relocate TASMAC shops away from schools. August 6, 2013, The Hindu
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-to-relocate-tasmac-shops-away-from-schools/article4994582.ece

    Waves of protests over location of Tasmac shops. November 17, 2013, The Hindu
    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/waves-of-protests-over-location-of-tasmac-shops/article5359727.ece

    Court upholds decision to allow liquor sales near school, December 3, 2013, The Santa Fe New Mexican
    http://www.santafenewmexican.com/news/local_news/court-upholds-decision-to-allow-liquor-sales-near-school/article_d0248c07-da5e-5b89-ae22-14a1e3cbdb73.html

    Queens Councilman Refuses Bribes To Put Liquor Store Near School. Sep 14, 2013, Gothamist
    http://gothamist.com/2013/09/14/queens_councilman_refuses_bribes_to.php

    DOI FINDS THREE QUEENS BUSINESSMEN UNSUCCESSFULLY OFFERED CASH PAYOFFS TO CITY COUNCILMAN TO SUPPORT LIQUOR STORE LICENSE, ROSE GILL HEARN, COMMISSIONER , FRIDAY, SEPTEMBER 13, 2013
    http://www.nyc.gov/html/doi/downloads/pdf/2013/sept13/29bribe09-13-2013.pdf

     

     

     

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (4)

    ராமஸ்வாமி ஸம்பத்

    சித்திரகூடத்தில் இருக்கும்வரை அயோத்தி மக்களின் அன்புத் தொல்லை தொடரும் எனக்கருதி ராமன் ஸீதையுடனும் லக்ஷ்மணனுடனும் அங்கிருந்து தெற்கு நோக்கி நடந்து தண்டகாரண்யம் சேர்ந்தனர். வழியில் எதிர்ப்பட்டு ஸீதையைக் கவர முயன்ற விராதன் எனும் அரக்கனைக் (குபேரன் சாபத்தால் அரக்கனாகி ராமன் வருகையால் அச்சாபம் நீங்கும் என குபேரனால் சொல்லப்பட்டு ராமன் வரும் வரை காத்திருக்கும் ஒரு கந்தர்வன்) கொன்றபின், சரபங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவர்தம் ஆசிகளைப் பெறவேண்டி அவர் குடிலுக்குச் சென்றனர். ஸீதா ராம லக்ஷ்மணர்களைக் கண்ட அம்முனிவர், “ராமா, உன் வருகையால் என் மனம் உவகை அடைகிறது. இந்த ஆசிரமும் பாவனமாகி உள்ளது. புவியில் என் கடமை முடிந்து இறைவனடி சேர விழையும் என்னை உள்மனம்  ‘’ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆணையிட்டவாறு இருக்கிறது. ஆகவே உன்னைப் பார்ப்பதற்காகவே இந்த சரீரத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன்”  என்றார்.

    மூவரும் முனிவரடி பணிந்து ஆசிபெற்றனர். “ஐயனே, தாங்கள்தான் இந்த தண்டக வனத்தில் எங்களுக்கு வழிகாட்டவேண்டும்” என்ற ராமனை நோக்கி ”என் சக முனிவர் சுதீக்‌ஷணர் என்னைப் போலவே உனக்காகக் காத்திருக்கிறார். அவர்தான் உனக்கு சரியான வழிகாட்டி; ஏனெனில் என்னைவிட இந்த அரண்யத்தின் நெளிவுசுளிவுகளை நன்கு அறிவார். அவரிடம் ஆசிபெற்று அவர் காட்டும் இடத்தில் உன் குடிலை அமைத்துக்கொள்.  என் கோரிக்கை நிறைவேறிவிட்டது. எனக்கு விடை கொடு. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று கூறி தன் முன்னிருந்த ஹோமகுண்டத்தில் விழ்ந்து ஆவி நீங்கி உயர்நிலை எய்தினார் சரபங்க முனிவர்.

    அங்கிருந்து புறப்பட்ட ராமன் சுதீக்‌ஷணர் ஆசிரமம் செல்லும் வழியில் கண்பட்ட தவசீலர் பலர், “ராமா, நீயே எங்களுக்குப் புகலிடம். அரக்கர்களால் நாங்கள் மிக்க அவதியடைகிறோம். ஜனஸ்தானம் என்னும் இந்தப் பகுதியில் கரன், தூஷணன் என்கிற அரக்கர் கோமான்கள் எங்கள் தவத்திற்கு இடையூறு செய்கின்றனர். அதோ பார். அந்த எலும்பு குவியல்கள் எல்லாம் எம்போன்ற தவத்தோரைச் சேர்ந்தவை. தண்டகாரண்யத்தில் நீ வந்திருப்பது எங்களுக்கு யானை பலம் போன்றது” என்றனர்.

    ராமன் அவர்களை வணங்கி, ‘உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதே இனி என் கடமை” என்று அடைக்கலம் அளித்து அவர்கள் மூலமாக சுதீக்‌ஷணரின் ஆசிரமத்திற்கு வழி தெரிந்து கொண்டான். அவர் குடிலை அடைந்ததும், அம்முனிவர் பரிவோடு ராமனை நோக்கி, “நீ சித்திரகூடம் வந்தது தெரிந்ததும் இங்கு கட்டாயம் வருவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சரபங்கரைப்போலவே நானும் உனக்காகவே காத்திருக்கிறேன். இனி இப்பகுதிவாழ் முனிவர்களுக்கு நீயே காப்பு. இந்த ரம்யமான வனத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாசம் செய்யலாம்” என்று கூறி விடை கொடுத்தார்.

    அதன்பின் பத்து ஆண்டுகள் தண்டகாரண்ய ரிஷிகளுக்குக் காப்பாக இருந்து ஆனந்தமாகக் காலத்தை கடத்தினர் ஸீதா ராம லக்ஷ்மணர்கள். ஒரு நாள்  தென்னாடுடைய சிவபெருமானிடமிருந்து தமிழ் யாப்பிலக்கணத்தைக் கற்று அந்த செம்மொழியைப் பேணி வளர்க்கும் குறுமுனி அகஸ்தியரைக் காண ராமன்  விருப்பம் கொள்ள, மூவரும் அவர் ஆசிரமத்தை அடைந்தார்கள். மிக்க மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்ற அகஸ்தியர், ”நீங்கள் மூவரும் இவ்வாசிரமத்திலேயே எஞ்சியுள்ள வனவாச நாட்களைக் கழிக்கலாம். ஏனெனில் இங்கு அரக்கர் தொல்லையே இருக்காது”  என்றார்.

    மிக்க பணிவுடன் ராமன், “ஆதிசிவன் அருள் பெற்ற அகஸ்தியரே! தண்டகாரண்ய முனிவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு நான் ஒரு காப்பாக இருக்கிறேன். ஆகவே தங்கள் ஆசியோடு திரும்பிச் செல்லவே விரும்புகிறேன்” என்றான்.

    முனிவர்கள் மேலுள்ள ராமனின் அன்பைப் போற்றி, அகஸ்தியர் அவனுக்கு தன்னிடம் உள்ள ஒரு வில்லினையும் மற்றும் சில அஸ்திரங்களையும் அளித்து பஞ்சவடியில் வாசம் செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.

    கோதாவரி நதி உற்பத்தியாகும் திரியம்பக க்ஷேத்திரத்தின் அருகே உள்ள பஞ்சவடி நோக்கிச் சென்ற வழியில் மூவரும் ஜடாயு எனும் மாபெரும் பருந்தினைக் கண்டனர். அப்பட்சிராஜன் அருகே வந்து தன்னை அருணன் புத்திரன் என்றும் மற்றொரு பருந்தான ஸம்பாதியின் இளவல் என்றும் அறிமுகம் செய்துகொண்டு, அவர்கள் யார், எங்கிருந்து வருகின்றனர் என்று விசாரித்தான். அவர்கள் தசரதன் புத்திரர்கள், அவள் ஜனக குமாரி என்பதை அறிந்ததும் பேருவகை கொண்டு “என் இனிய நண்பன் தசரதன் நலமா?” என்று ஜடாயு வினவினான். (சம்பராசுரனுடன் நடந்த போரில் ஜடாயு பல்வகையிலும் தசரதனுக்கு உதவி செய்து அவன் நண்பனாகினான்). ராமன் தசரதன் காலமான செய்தியையும் தாங்கள் காட்டுக்கு வரவேண்டிய காரணத்தையும் விவரித்தபின், ஜடாயு பெருந்துயரோடு கண்ணீர் சிந்தினான். பின்னர், “வருந்தற்க, விதியை யாரால் வெல்ல முடியும்? இந்த பஞ்சவடி பிரதேசம் மிகபாதுகாப்பானது. நானும் உங்களுக்கு ஒரு காவலனாக இருக்கிறேன்” என்று உறுதியளித்தான்.

    பஞ்சவடியில் லக்ஷ்மணன் சிறப்பாக அமைத்துக் கொடுத்த கவின்மிகு குடிலில் கம்பர் வர்ணிப்பதுபோல் ‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும்’ ஆனந்தமாகக் குடியேறினர். இளவல் அவர்களுக்குப் பலவிதமான சேவைகளைப் புரிந்து, ’வில்லை ஊன்றிய கையோடும் வெய்த உயிர்ப்போடும்’ ஒரு திறன்மிகு காப்பாளனாகத் திகழ்ந்தான்.

    இந்நிலையில் ஒரு நாள் இலங்கை அரசனும் அரக்கர் கோமானுமான ராவணனின் தங்கை சூர்ப்பணகை பஞ்சவடியில் திரிந்துவாறு ராமனின் திருமேனி செளந்தர்யத்தைக் கண்டு அவன்மீது மையல் கொண்டாள். தன் அரக்கி உருவினை நீக்கி பேரழகியாகத் தன்னை மாற்றிக்கொண்டு, கம்பர் வாக்கில் காணப்படுவதுபோல்

    பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க

    செஞ்செவிய கஞ்ச நிகர் சீறடியள் ஆகி

    அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்

    வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.

    [ஒளி மிகுந்த செம்பஞ்சு தனது செம்மைக்கு ஓப்பாகாமல் வருந்த, குளிர்ச்சி மிகுந்த தளிர்கள் தனது மென்மைக்கு ஒப்பாகாமல் வருந்த, சிறந்த அழகு அமைந்த தாமரை மலரைப் போலத் தோன்றும் சிறிய அடிகளை உடையவளாகி, அழகிய சொற்களைப் பேசும் இளைய மயில் போலவும், பெண் அன்னம் போலவும்,  நஞ்சு போலவும், அந்த வஞ்சனை உடையவளான சூர்ப்பணகை வந்தாள்]

    பின்னர் ராமனிடம் தன்னை காமவல்லி என்றும் இலங்கை மன்னன் ராவணனின் தங்கையென்றும் கூறியபின், தான் அவன்மீது கொண்ட காதலை வெளிப்படுத்தி தன்னை காந்தர்வ விவாகம் செய்யுமாறு வேண்டி நின்றாள்.

    ராமன் தனது ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’  கோட்பாட்டினை அவளிடம் கூறி மறுதளிக்க, சூர்ப்பணகை கோபாவேசத்துடன் ’இந்த இடையே காணப்படாத மானுடப்புழு உடன் இருப்பதால் தானே என் கோரிக்கையை இவன் நிராகரிக்கிறான்’ எனக்கருதி தனது அரக்க உருவுடன் ஸீதையை விழுங்க முயன்றபோது, அப்பொழுதே அங்கு வந்த லக்ஷ்மணன் அவ்வரக்கியின் மூக்கை அறுத்தெரிந்தான். (அந்த அறுந்த நாசி வீழ்ந்த இடமே ’நாசிக்’ என வழங்கப்படுகிறது).

    அவமதிக்கப்பட்ட சூர்ப்பணகை வெகுண்டெழுந்து, ”என்னை காயப்படுத்தி அவமானம் செய்த இந்த மனித பூச்சிகளை அழிக்க அரக்கர் குலத்தில் யாரும் இல்லையா?” என்று உரக்கக் கதறினாள். அவளது பிரலாபத்தைக் கேட்ட ஜனஸ்தானத்தில் கோலோச்சும் கரன் எனும் ராவணனின் சகோதரன் தன் இளவல்களான தூஷணனையும் திரிசிரஸையும் பெரிய அரக்கப் படையோடு பஞ்சவடிக்கு அனுப்பினான். ராமன் சிறிதும் கலங்காமல் “தம்பி, நீ ஸீதையை பத்திரமாகப் பார்த்துக்கொள். நான் இவர்களை யமனிடம் அனுப்பிவிட்டு வருகிறேன்” என்றான். ஸீதையும் லக்ஷ்மணனும் சென்றபின், அவ்வரக்கப் படை மொத்தத்தையும் தன் அம்புகளுக்கு ராமன் விருந்தாக்கினான். இந்த ஒரு-மனித படையின் வெற்றி கரனுக்கு ஒரு அதிசயமாக இருந்தது. மற்றொரு பெரும் படையுடன் அவன் வந்து ராமனோடு மோதினான். அந்த உக்கிரமான போர் முடிவில் கரனும் அவனுடைய படைவீர்ர்களும் சின்னாபின்னமாகி காலனிடம் சேர்ந்தனர்.

    இந்த கண்கொள்ளாக் காட்சியை எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜனகபுத்திரி ஓடிவந்து ராமனை அணைத்துக் கொண்டாள். “இப்போதாவது என் வலிமை உனக்குப் புரிந்ததா? அன்று அயோத்தியில் உன்னை காட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னபோது நீ என்னை ‘ஒரு ஆண் போர்வையில் இருக்கும் பெண்’ என்று பழித்தாயல்லவா?”என்று செல்லமாக ராமன் அவளைக் கடிந்து கொண்டான்.

    இதே காட்சியைக் கண்ட சூர்ப்பணகை இலங்கேசனிடம் ஓடினாள். ”தன் அவமானத்தைப் பழிவாங்க ராம லக்ஷ்மணரைக் கொன்று அந்த எழில்மிகு ஸீதையை நீ மணந்து கொள்ள வேண்டும்” என்று கூறி ராவணின் மனதில் ஒரு விஷ விதையை ஊன்றினாள். சூர்ப்பணகை ஸீதையின் எழிலை வெகுவாக விவரித்தது ராவணனின் காமவெறியைத் தூண்டிவிட்டது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

    தொடரும்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…90

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    ஆண்டொன்று ஓடி மறைந்தது புதிதாய் ஒரு வருடம் மெதுவாக உள்ளே புகுந்தது. யாரைப் பார்த்தாலும் ஓரே கேள்வி? எப்படி ஒரு வருடம் ஓடி மறைந்தது என்று ஒரு கேள்வி அனைத்து உதடுகளிலும் இருந்து அரும்புகிறது. விடை தெரிந்தால் பின் ஏன் இத்தனை வியப்பு?

    எத்தனையோ நிகழ்வுகள், எப்படி, எப்படியோ எத்தனையோ விதமாக நிகழ்ந்து முடிந்தன . சில மகிழ்வைத் தந்தன, சில சோகத்தைத் தந்தன, சில வியப்பைத் தந்தன, சில சந்தேகத்தைக் கிளப்பின ஆனால் அனைத்திலும் ஒரேயொரு ஒற்றுமை அவற்றின் நிகழ்வுகள் அனைத்தும் எமது கட்டுப்பாடுகளிலில்லை.

    பார்வையாளர்களாகவும், மெளனமான பங்காளிகளாகவும் அந்நிகழ்வினுள் நாம் உருட்டப்படுவது ஒன்றே யதார்த்தமாகிறது.

    காலம் எனும் பகடைக்காயை யாரோ உருட்டுகிறார்க:ள் காய்களாக நாம் நகர்த்தப்படுத்துகிறோம் அது ஒன்றுதான் நிஜமான நடைமுறையாகிறது.

    ஆனால் அகிலத்தில் அதிகாரத்திலிருப்போர் ஏதோ வழ்க்கை நிலையென நினைத்து மக்களின் வாழ்வோடு விளையாடுவது போன்ற நிகழ்வுகள் பல கண்ணுக்குப் புலப்படுகிறது.

    மொழி, இனம், நிறம், மதம் எனும் பலதரப்பட்ட பாகுபாடுகளுக்காக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் பல யுத்தங்கள் உரிமைப்போர் எனும் பெயரில் ஆங்காங்கே நிகழாமலில்லை.

    இவையெல்லாம் சரியோ அன்றிப் பிழையோ எனும் கேள்வியை விட இவற்றின் நிகழ்வுகள் தான் அகிலத்தின் அன்றாட வாழ்க்கையையும் அந்தந்த நாடுகளின் பொருளாதார ஸ்தரங்களையும் நிர்ணயிக்கின்றன என்பதுவே கசப்பான உண்மை.

    2008ம் ஆண்டு தொடங்கிய சர்வதேசப் பொருளாதாரச் சிக்கல் கொஞ்சம் கொஞ்சமாகக் அதிகரித்து 2010,11,12களில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் குறிப்பாக இங்கிலாந்தில் படு மோசமாகத் தாக்கியிருந்தது.

    இப்பொருளாதாரச் சிக்கல்களினால் எடுக்கப்பட்ட கடுமையான நிதிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கம் 2013 வரை நீடித்து இன்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்த வண்ணம் இருக்கிறது.

    ஆனால் 2013ம் ஆண்டில் நாட்டின் பொருளாரச்சீர்கேடு கொஞ்சம் தேற்றமடைந்து முன்னேற்றப்பாதையில் அடிப்போடத் தொடங்கியுள்ளது எனச் சில பொருளாதார நிபுணர்களும் அரசாங்க அமைச்சர்களும் சத்தமாக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இது எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பதைப் புலர்ந்திருக்கும் இந்த 2014ம் ஆண்டுதான் புரியவைக்கும் என்பதுவே உண்மை.

    ஆவ்கானிஸ்தான் போர் எனும் சகதிக்குள் காலை வைத்துச் சிக்குப்பட்டிருந்த இங்கிலாந்து இராணுவம் ஒருவாரு தமது காலை அச்சேற்றினுள் இருந்து வெளியெடுத்து திரும்ப்பிவது 2014 என்பது அவ்விராணுவ வீரர்கள் பலரது குடும்பத்திற்கு ஒரு நல் எதிர்[பார்ப்பாக இருப்பதுவும் குறிப்பிடக்கூடியதாக உள்ளது.

    ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அவ்வருடம் ஒவ்வொருவரது மனதிலும் பலவிதமான எதிர்பார்புகளைத் தாங்கிக்கொண்டே பிறக்கிறது.ஆனால் இவ்வெதிர்பார்ப்புகளில் எத்தனை ஒரு நிஜமான நிகழ்வாகிறது என்பது கேள்விக்குறியே?

    லாட்டரிச் சீட்டில் லட்சரூபாய் விழ வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர், மூன்றுவேளை உணவு வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர் இப்படி எதிர்பார்ப்புகளின் விகிதாசாரம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பதுவே உண்மை.

    ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் பலர் தமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பல புதிய தீர்மானங்களை எடுப்பது வழக்கம். இத்தீர்மானங்களை இறுதிவரை கடைப்பிடிப்போர் எண்ணிக்கை மிகக்குறைவானதுவே!

    இவ்வாழ்க்கை எத்தனை நிலையானது என்பது ஒருபுறமிருக்க அமைதியான வாழ்வை நோக்கி நடைபயில எத்தகைய தேவை மனிதர்களுக்குத் தேவை என்பது மிகவும் ஆழமன ஒரு கேள்வி.

    வருடம் முடியும் போது இத்தோடு இவ்வருடம் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து போய்விடும் என்பதுவும், இதோ புலர்ந்திருக்கும் இப்புதுவருடம் பல இன்பநிகழ்வுகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது நம் வாழ்வும் மலர்ந்து விடும் என்பதுவும் பொதுவாக மனிதராகப் பிறந்தோரில் பெரும்பான்மையோர் மனங்களில் ஊஞ்சலாடும் உணர்வுகள்.

    ஆக மொத்தம் இந்த மடலில் இவன் சொல்ல வருவது என்ன? எனும் எண்ணம் உங்கள் உள்ளங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.

    எனது இனிய வாசக உள்ளங்களே! நாம் நாமாக, நாம் மனிதராக, மனிதாபிமானம் மிக்கவர்களாக வாழ்வது ஒன்றே எப்போதும், எவ்வருடத்திலும் நிலையான் தீர்மானமாக இருப்பதுவே அனைவருக்கும் பயன் தரக்கூடிய செய்கை.

    மலர்ந்து விட்ட இந்த 2014ம் ஆண்டு அனைவரது வாழ்வினிலும் மகிழ்வான மாற்றங்களைக் கொண்டு வர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • வாழ்க்கை நலம் – 42

    குன்றக்குடி அடிகள்

    42. இரத்தல் தீது

    நமது வாழ்க்கையில் நாம் ஒன்றைச் செய்யும்போது அச்செயலைச் சார்ந்து சில பண்புகளும் திறன்களும் வளர்கின்றன. அதுபோலவே செய்யத்தகாதனவற்றைச் செய்யும் பொழுதும் திறமைக் குறைவுகளும் தீய குணங்களும் வந்தடைகின்றன. சான்றாக நமது வாழ்வு நுகர் பொருள்களைச் சார்ந்து அமைகின்றது. அப்பொருள்களை வழங்கும் பண வசதி அடிப்படை இன்றியமையாதது ஆகிறது.

    நாம் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருளீட்டி நுகர்ந்து வாழ்தலே முறையான வாழ்க்கை. உழைத்துப் பொருளீட்டி வாழும் வாழ்வியலில் சார்பின்றித் தனித்து வாழும் பேறு கிடைக்கும். நாமே பொருளீட்டி வாழும் வளமான வாழ்வு தொடர் வரலாறாக நீடிக்கும்.

    உழைப்பின் வழி அறிவறிந்த ஆள்வினை செயல் திறன் கைகூடும்! அறிவு வளரும்; ஆற்றல் பெருகி வளரும். ஆதலால், உழைத்துப் பொருளீட்டி உண்டு வாழ்தலே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

    அங்ஙனமின்றி நமக்குத் தேவையானவைகளை மற்றவர்களிடம் வங்கி வாழும் இரத்தல் வாழ்வு வளராது. தன்னம்பிகையுடையதாக விளங்காது. உழைப்பாற்றல் வற்றி, சோம்பலில் வாழும் வாழ்க்கை அறிமுகமாகும்! அறிவும் வளராது. ஆதலால், இரத்தலும் நல்லதே என்றால் வாழ்வு வளராது; பயனுடையதாக அமையாது.

    “நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று”

    (திருக்குறள் – 222)

     

     
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share
  • திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்

    கவிஞர் பூவை செங்குட்டுவன்

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..

    திரையுலகம் எத்தனையோ கவிஞர்களைக் கண்டிருக்கிறது. கண்டுகொண்டிருக்கிறது.  காணப்போகிறது.  இந்த வரிசையில் நாத்திகக் கருத்துக்களில் நாட்டமும் அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களில் ஈடுபாடும் கொண்ட ஒரு கவிஞர் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றதெல்லாம் பக்திப் பாடல்களில்தான் என்கிற செய்தி புருவங்களை விரியவைக்கும்!

    வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் –

    வேல் போல் இருக்குதடி என்கிற சிந்தனையைப் பதித்தவர்!

    பக்தியில் உருகிநிற்கும் உள்ளத்திலும்கூட தோன்றாத சிந்தனைகள் இவர் உள்ளத்தில் உற்பத்தியானதை என்னவென்று சொல்வது?

    காலத்தின் கருணை என்று சொல்வதா?  கந்தனின் கருணை என்று சொல்வதா?

    ஆம்!  கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலும் அதன் பின்னணியும் இவரை முன்னுக்கு கொண்டுவந்தன என்றே சொல்லலாம்!

    கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் கந்தன் கருணை திரைப்பாடல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது..குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக் காட்சிக்கு கவிஞர் பாடல் எழுத முற்பட்டபோது,  பக்திப் பாடல்கள் வரிசையில் வெளியாகியிருந்த ஒலிநாடாவில் தான் கேட்ட ஒரு பாடல் இந்தக் காட்சிக்கு முற்றிலும் பொருத்தமாய் இருக்கும் என்று கண்ணதாசன் எண்ணம் கொள்ள, அதை இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல.. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் உருவாகியிருந்த அப்பாடலை.. எழுதிய இளைஞர் பூவை செங்குட்டுவன் என்றறிந்து அவருக்கு வாகனம் அனுப்பி வரவழைக்க.. அவரின் பாடலை இப்படத்தில் இடம்பெறச் செய்தார் கண்ணதாசன்!

    திருப்பரங்குன்றத்தில்நீசிரித்தால்முருகா

    திருத்தணிமலைமீதுஎதிரொலிக்கும்
    திருச்செந்தூரிலேவேலாடும்
    திருப்புகழ்பாடியேகடலாடும்

    (திருப்பரங்குன்றத்தில்)

    பழநியிலேஇருக்கும்கந்தப்பழம் – நீ
    பார்வையிலேகொடுக்கும்அன்புப்பழம்
    பழமுதிர்ச்சோலையில்முதிர்ந்தபழம் –
    பக்திப்பசியோடுவருவோர்க்குஞானப்பழம்

    (திருப்பரங்குன்றத்தில்)

    சென்னையிலும்கந்தகோட்டம்உண்டு – உன்
    சிங்காரமயிலாடத்தோட்டம்உண்டு
    உனக்கானமனக்கோயில்கொஞ்சமில்லை – அங்கு
    உருவாகும்அன்புக்கோர்பஞ்சமில்லை!

    (திருப்பரங்குன்றத்தில்)

    இளம்கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியூட்டிய இந்நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமானது.  மேலும் பாடலில் ஒரே ஒரு வார்த்தையை கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொள்ளலாமா என்று பூவை செங்குட்டுவனிடம் அனுமதி கேட்டார்.  என்ன தெரியுமா? சென்னையிலே கந்த கோட்டமுண்டு .. என்கிற வரியை சிறப்புடனே கந்த கோட்டமுண்டு என்று மாற்றியமைத்தார்.  கவிஞர் பூவை செங்குட்டுவன் இதுபற்றி நினைவுகூரும்போதெல்லாம் கவியரசர் தனது பாடலுக்கு சிறப்பு சேர்த்தார் என்பார்.

    சிறப்புடனேகந்தகோட்டம்உண்டு – உன்

    சிங்காரமயிலாடத்தோட்டம் உண்டு

    ஒரு கவிஞர் தான் எழுதவேண்டிய பாடலை மற்றொரு கவிஞருக்கு தந்திட எத்தகைய பெருந்தன்மை வேண்டும்?  அதனால் தான்

    இன்றைய கவிஞர்களுக்கெல்லாம் அரசராக – கவியரசாக.. இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
    http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

    http://www.youtube.com/watch?v=d9mhH4naphg

    Thiruparamkundrathil Nee Sirithal – Kandhan Karunai – Jayalalitha & K.R. Vijaya
    Share
  • சூரிய மண்டலத்தில் விண்கோள்களின் சுற்றுவீதிகள் விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்

     

    Cover Image

    (1571-1630)

    சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா

     

    “எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

    ஜொஹானஸ் கெப்ளர்

     

    விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க விஞ்ஞானிகள் 

    2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்!

    கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்! பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்! அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு!

    கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.

    Planetary Motions

    கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார்.

    கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வானவெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்பு களைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார்.

    கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை! அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!

    Fig 2 Geo-Centric System

    பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி

    கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் வானியல் கணிப்பு மூலம் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம்.

    முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி

    1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

    2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

    3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

    4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

    கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.   ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார்.

    Fig 3 Geocentric System

    அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை !

    யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புத் தூரங்களைக் அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.   இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

    பரிதி மையமானதா ? அல்லது பூமி மையமானதா ?

    கி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்! அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார்! விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்! ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்!

    கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்கமாகக் கூறினார்! அரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர்! பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம்! காபர்னிகஸ் கிறித்துவ மதாதி பதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘ விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை!

    Fig 4 Heliocentric System

    டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார்! பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார்! 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார்! டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.

    கெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்

    அண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர்! பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும்! நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே! தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே! அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்! கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது!

    கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது! ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார்!

    Fig 6 Geo-centric & Helio-centric Systems

    1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்! அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக் கோள்களின் காந்த விசைகளையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்!

    ஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

    1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார்! எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம்! ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை! தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான்! சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது! விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.

    Fig 7 Geocentric & Heliocentric Systems

    பல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும்! அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார்! அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது!

    1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார்.

    ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது! இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா ? என்று கெப்ளர் ஐயுற்றார்! அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது! அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு! அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது!

    Fig 8 Kepler's Three Laws

    பிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு!

    ஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை! கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார்! மேலும், ‘பிரபஞ்சத்தைக் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து! அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம்! தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்!

    அவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது! இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது! அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும்! பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது!

    Planetary Laws of Motion

    கெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்

    பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler ‘s Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின! அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது!

    முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி!

    இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமையமாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது! பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது!

    Fig 10 The Present System

    மூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant].

    கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws]! கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல! அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா! அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம்!

    1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர்

    வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்! கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது!

    Copernicus Tycho Brahe & Galileo

    கெப்ளரின் குரு டென்மார்க் மேதை டைசோ பிராஹே

    டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Astronomer Tycho Brahe (1546-1601)] சூரிய மண்டலத்தின் அண்ட கோளங்களையும், 700 மேற்பட்ட விண்மீன்களையும் பல்லாண்டுகள் நோக்கி விளக்கமாக, துல்லியமாக அளந்து எழுதி வைத்தவர். 17 ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கிகள் கண்டு பிடிப்பதற்கு முன்னே, அவர் சேகரித்த துல்லிய வானியல் விளக்கங்கள் மிகையானவை! ஒரு கோளம், இரு திசைகாட்டி மானிக் கருவிகளை [One Globe & Two Compasses] மட்டும் பயன்படுத்திப் பண்டைய வானியல் அட்டவணையில் [Astronomical Tables] இருந்த பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தினார்! 1572 இல் அவர் ஓர் உன்னத நோவாவைக் [Supernova] கண்டு பிடித்தார். டென்மார், நார்வே மன்னரிடம் உதவி நிதி பெற்று, 1576 இல் ஓர் வானியல் நோக்ககத்தைக் [Observatory] கட்டி, அதில் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வந்தார். பிராஹே காபர்னிகஸின் பரிதி மையக் கோட்பாடு முழுவதையும் ஒப்புக் கொள்ள வில்லை! அவர் டாலமியின் பூமைய அமைப்பையும் [Earthentered System], காபர்னிகஸின் பரிதி மைய அமைப்பையும் [Sun-centered System] ஒன்றாக இணைத்து, புதிதாக ‘பிராஹே ஏற்பாடை ‘ [Brahe System] உண்டாக்கினார்!

    பிராஹே அமைப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் மட்டும் சூரியனைச் சுற்றுவதாகவும், பிறகு அந்தச் சூரிய குடும்பம் சந்திரனைப் போல் பூமியைச் சுற்றி வருவதாகவும் யூகித்தார்! அதைப் போன்று விண்மீன்களும் ஒரு நாளில் பூமியைச் சுற்றி வருவதாய்க் கருதினார். அவரது பிரபஞ்சக் கோள்களின் கோட்பாடு பிழையானாலும், அவரது துல்லிய கோள் அட்டவணைப் பலருக்குப் பயன்பட்டது! 1600 இல் பிராஹேக்கு துணையாளியாகச் சேர்ந்த ஜொஹான் கெப்ளர், அவரது ஆராய்ச்சி களையும், அட்டவணையும் உபயோகித்து, முப்பெரும் அண்ட விதிகளைப் படைத்தார்! 1601 இல் பிராஹே காலமானதும், கெப்ளர் அவரது ஆய்வுக் கூடத்தின் அதிபதியாகி, வானியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். பேரரசர் ரூடால்ஃப் [Emperor Rudolf II] அரசவையில் பிராஹே வகித்த, அரசவை வானியல் நிபுணர் பதவியை, அடுத்து கெப்ளர் ஏற்றுக் கொண்டு அரசருக்கு ஆலோசனை கூறும் ஜோதிடராகவும் பணி செய்தார்!

    Fig 11 Ptolemy Geo-Centric System

    கெப்ளர் வானியல் சாதனைகளைக் கூறும் நூல்கள்

    கெப்ளர் எழுதிய அரிய வானியல் நூல்கள்: பிரபஞ்ச வரைவமைப்பு மர்மம் [Cosmographic Mystery (1596)], புதிய வானியல் [New Astronomy (1609)], பரிதியைச் சுற்றும் தூதன் [The Sidereal Messenger (1610)], ஒளியியல் [Optics (1611)], வியாழத் துணைக்கோள் பற்றி விரிவுரை [Narration Concerning the Jovian Satellites (1611)], பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு [Harmony of the World (1619)], காபர்னிக்கன் வானியல் உன்னதம் [Epitome on Copernican Astronomy (1621)], ரூடால்ஃப் கோள் அட்டவணை [Rudolfine Planetary Tables (1628)].

    ஜொஹான் கெப்ளர் வானியல் மற்றும் பயிலாது, அத்துடன் ஜோதிடமும் கற்றார்! கெப்ளர் ஜோதிடத்தை நம்பினார்! சூரியன் பூமியில் கால நிலைகளை மாற்றுவது போல், சந்திரன் கடலில் அலை உயர்ச்சி, அலைத் தாழ்ச்சி [High & Low Tides] உண்டாக்குவது போல், கிரகங்கள் மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று விளக்கம் தந்தார்! டால்மியின் பூமையக் கொள்கையை நம்பாத கெப்ளர், கிறிஸ்துவ மதப் பலியீட்டுக்குப் பயந்து அடிக்கடித் தன் வேலையை மாற்றிக் கொண்டே இருந்தார்!

    கெப்ளர் கால்குலஸ் [Calculus] கணிதத்திற்கு வழி வகுத்த முன்னோடி நிபுணர். தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதையிட்ட வல்லுநர். பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், கோட்பாடுகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தன் உன்னத ‘ஈர்ப்பு விசை நியதியைப் ‘ [Theory of Gravitational Force] உருவாக்கினார்!

    Fig 12 Tycho Brahe

    ஒப்பற்ற வானியல் மேதை கெப்ளரின் மறைவு

    கிறிஸ்துவ மத வேதாந்தியான கெப்ளர், ‘பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிவ தென்றால், அதைப் படைத்த கடவுளின் மகிமையைப் புரிந்து கொள்வதும் அத்துடன் சேரும் ‘ என்று கூறுகிறார்! கெப்ளர் காலத்தில் இத்தாலியில் வாழ்ந்த வானியல் மேதை காலிலியோவிடம் அவர் தொடர்பு கொண்டிருந்தார். காலிலியோ தான் அமைத்த தொலை நோக்கியில் வியாழனைச் சுற்றிடும் சந்திரன்களைக் கண்டு பிடித்ததும், கெப்ளர் மகிழ்ச்சி அடைந்து மூன்று கடிதங்கள், அவருக்கு எழுதினார். வியாழனின் அந்தச் சந்திரன்களுக்குத் ‘துணைக்கோள்கள் ‘ [Satellites] என்னும் ஓர் புதிய பெயரைக் கடிதத்தில் எழுதி அனுப்பி யிருந்தார்! நேபியர் [Napier] 1614 இல் ஆக்கிய லாகிரித அட்டவணையை [Logarithm Tables] வெளியிட்டதும், கெப்ளர் அவற்றைப் பயன் படுத்தித் தன் ரூடால்ஃபைன் கோள் அட்டவணையை [Rudolphine Planetary Tables] 1628 இல் பல தசமத் துல்லியத்தில் தயாரித்தார்!

    வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் தனது 59 ஆம் வயதில், சில நாட்கள் நோயுற்று 1630 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் காலமானார். பரிதி மையக் கோட்பாடை ஊன்றிய காபர்னிகஸின் சீடரான, வானியல் மேதை கலிலியோவின் தோழரான, ஐஸக் நியூட்டனின் ஈர்ப்பியல் படைப்புக்கு முன்னோடியான ஜொஹான் கெப்ளர், பதினேழாம் நூற்றாண்டு வானியல் வளர்ச்சியில் ஓர் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்திருக்கிறார்! 1604 ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு ‘கெப்ளர் சூபர்நோவா ‘ [Kepler ‘s Supernova] என்று இப்போது பெயரிட்டுள்ளார்கள்!

    Fig 14 Kepler Telescope in Solar Orbit

    புதிய பூமிகளைத் தேடி நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி

    2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆணையகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலை நோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.

    ***********************

    தகவல் :

    1. A Biography of Johannes Kepler (The Watershed)  By : Arthur Koestler (1960)

    2. Kepler By : John Banville (1999)

    3. Indian Astronomy (Internet Collections)

    4. Wikipedia : Delelopment of Helio-centrism

    5.  The Wonder That Was India By : A.L. Basham (1959)

    +++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com)  September 24, 2009

     

    Share
  • வாழ்த்துவோம் புத்தாண்டில்…

    செண்பக ஜெகதீசன் english images

    சென்ற ஆண்டின் சேதாரங்கள்

    சேர வேண்டாம் மனதினிலே,

    வென்ற நல்ல வேளையையே

    வைத்திடு மனதில் நிலையாக,

    இன்று புதிதாய்ப் பிறந்தோமெனும்

    இளசைப் பாரதி வாக்கினைப்போல்

    என்றும் வாழ்ந்தே வென்றிடுவோம்

    என்றே வாழ்த்திடு புத்தாண்டிலே…!

    படத்துக்கு நன்றி

    http://spoonful.com/printables/mickey-minnies-new-year-celebration-banner

     

    Share
  • புத்தாண்டு பிறந்த​து !

     

    image

    புத்தாண்டு பிறந்த​து !

    சி. ஜெயபாரதன், கனடா

     

    புத்தாண்டு பிறந்தது ! நமக்கு

    புத்தாண்டு பிறந்தது​ ​!

    கடந்த ஆண்டு மறையுது, ஆயினும்

    ​தடம்​ இன்னும் ​தெரியுது !

    வித்தைகள் சிறந்து ஓங்கணும் !

    விஞ்ஞானம் தழைக்கணும் !​

    வேலைகள் பெருகணும் !

    வீணர்கள் தேறணும் !

    சித்தர்கள் ​புதிதாய்ப் ​பிறக்கணும் !

    பித்தர்கள் தெளிவாகணும் !

    ​புத்திகள் கூர்மை ஆகணும் !

    யுக்திகள்​ புதிதாய்த் தோன்றணும்.

    சண்டைகள் ​குறையணும் !

    ​ஜாதிகள் சேர்ந்து வாழணும் ! ​

    சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !

    பொரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் !

    திறமைகள் ஒன்றாகி​ வலுக்கணும்

    வறுமை குன்றி வருவாய் பெருகணும்.

    மின்சக்தி பெருகி யந்திரங்கள்​ ஓடணும்.

    வேளாண்மை விருத்தி ஆகணும் !

    பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !

    லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !

    நீர்வளம், நிலவளம், சூழ்வெளி

    துப்புரவு செய்யணும் !​

    விடுதலை நாடு சீராய்த் தழைக்க,

    கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்

    பொறுப்புகள் ஏற்கணும் !

    தேசப் பற்று நமக்குள் ஊறணும் !

    தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !

    தேச மக்கள் நேசம் பெருகணும் !

     

    ++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] December 31, 2013

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

     

    2014 Tamil New Year Kavithai - 01 - QuotesAdda.com

    வருடமொன்று ஓடி மறைந்ததும்
    விரைவாய் ஒன்று வந்து புகுந்ததும்
    விளைவாய் வாழ்வின் வேகத்தை
    விந்தையாய் எமக்கு காட்டிடுதே !

    சிந்திய கண்ணீர்த் துளிகள் எல்லாம்
    முந்திய வினைகள் என்றிட்டே நாம்
    பிந்திய காலங்கள் தம்மையே வென்று
    படைத்திடுவோம் சரித்திரம் தனை

    அவசரம் அவசரமாய் ஓடிடும் இவ்
    அகவைகள் தம்மின் கோலங்க|ள்
    அகிலத்தில் இயற்கையின் நியதி
    அனைவர்க்கும் பொதுவான நீதி

    இல்லையென்றிருப்போர் காலத்தால்
    இருப்போர் என்றே ஆகிடும் கோலம்
    இருப்பதைப் பகிர்ந்திடும் எண்ணம்
    இல்லை என்றாகிடும் வேஷம்

    நினைத்ததை மறப்பவர் எத்தனையோ
    மறந்ததை நினைப்பவரும் அத்தனையே
    நினைப்பதும் மறப்பதும் நித்திய நிகழ்வு
    நிஜத்தினை மறைப்பது எத்தகை உணர்வு ?

    தந்தையை இழந்தேன் அன்னையை இழந்தேன்
    தரணியில் பெருந்தகை செல்வத்தை இழந்தேன்
    தவழ்ந்திடும் காலத்தின் திரைகள் வாழ்வில்
    தாமாக விழுந்திடும் வேளைகளோ ?

    காலத்தால் விளைந்திடும் நிகழ்வுகளை
    கவிதையாய் நானிங்கு கோர்த்தது
    ஞாலத்தில் என் அன்பு நெஞ்சங்கள்
    ஞாபகம் கொண்டிட வேண்டியதாலே

    மறைந்த ஆண்டோடு மறையட்டும்
    மனதில் வாழும் வேதனைகள் – தோழரே
    பிறக்கும் ஆண்டோடு பூக்கட்டும் புதிதாய்
    பொற்காலம் அனைவரின் வாழ்விலும்

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இனிய என் சொந்தங்கள் அனைத்திற்கும்
    தமிழன்னை ஈந்திடுவாள் நல்வாழ்வை
    தவறாமல் பெற்றிடுக திருப்தியான வாழ்க்கை

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • சிங்களத்துக்குத் திருவாசகம்

    1a

    1 m jpg

    2m

    திருவாசகம் அருளியவர் மாணிக்கவாசகர்.

    சிங்கள மன்னன் தலைமையில்
    சிதம்பரத்துக்கு வந்த புத்த சமயத்தவருடன் சந்திப்பு.
    கருத்துப் பரிமாற்றம்.
    சைவ சமயக் கொள்கை விளக்கம்.
    புத்த சமய மன்னன்,
    அதுவும் சிங்கள மன்னன்
    சைவ சமயத்தைத் தழுவுகிறான்.

    ஆனாலும் திருவாசகம் சிங்களத்தில் இதுவரை இல்லை.
    இதோ இந்தத் தலைமுறையில் சிங்களத்தில் திருவாசகம்.
    1200 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் இருந்து சிங்களத்துக்கு.

    நேற்று 31.12.2013 முழுவதும் கல்முனையில் இருந்தேன்.
    மொழிபெயர்ப்பாளர் வடிவேலு
    பதிப்பாசிரியர் முகில்வண்ணண்
    தட்டச்சாளர் தம்பி
    யாவரும் திருவாசகம் சிங்கள மொழிபெயர்ப்புக்கு
    இறுதி வடிவம் கொடுத்தோம்.

    அச்சுக்குப் போகும் நிலை எய்தினோம்.
    விரைவில் அச்சாகும்.

    Share
  • கோயில் எனும் சொல்!…

    நூ.த. லோகசுந்தரம்

     

    “கோயில்” & “கோவில்”

     

    கோ + இல் = கோயில்

    கோ = இறைவன் = கடவுள்

    கோ = இறை = நாடாளும் மன்னன்

    என ‘கோ’ விற்கு இரு பொருள்கள் உள்ளன அறிவோம்

    இல்= வாழும் இடம் = இல்லம்

    கோவில்: இச்சொல் இறைவனை வழிபடும் இடம் என்னும் பொருளில் வழங்குதல் ஏனோ இந்நாள் நன்கே பரந்துள்ளது.

    எனினும் மேற்காட்டிய இருவித பயன்பாடுகளில் கோயில் என யகர இகரம் (யி) இட்டு எழுதுதலே பிழை அற்றதாகும்.

    இச்சொல் நிலைமொழி யின் ‘ஓகார’ த்துடன் வருமொழியின் இல் லின் ‘இகரம்’ சேரும் புணர்வில் ‘இ’ யின் இணைஒலியான (அணித்ததான) ‘’யி’’ கரம்தன் இயல்பாக வரமுடியுமே அன்றி ‘வி’ என இதழ் குவியும் சேய்மை ஒலியாக வருவது இயைபு உடையது ஆகாதது காணலாம்

    மேலும்……..

    கோயில் எனும் சொல்தான் நம் இலக்கிய நூல்களில் யாங்கணும் காண்கின்றோம் சங்க நூல்களிலும் சிலம்பு மணிமேகலை முதல் பிற்கால நூல்கள் வரை யாவற்றிலும், கோவில் என எவ்விடத்திலும் காணாது, கோயில் எனும் சொல்தான் தெள்ளத் தெளிவாக நூறு சதம் பயனில் உள்ளமை காணமுடிகின்றது. இணைப்பில் உள்ள இரு கோப்பினைக் காண்க. அதனில் வைத்துள்ள 90 எடுதுக்காட்டுகள் அல்லாமல் இறைவழிபாட்டு திரு மறை நூல்களாம் 12 சைவத் திருமுறைகள் ஆழ்வார்களின் 4000 திவ்யப் பிரபந்த பாசுரங்களை நோக்க ஆங்கெல்லாம் கோயில் எனும் சொல்லே பயன் கொள்ளப்படவும் அந்த 1150 இடங்களில் யாங்கணும் கோவில் என காணவே இல்லை என்பதும் உணரப்பட்டது. சைவம் வைணவம் எனும் இரு மரபுகளின் தலையாய தலங்களாம் தில்லை திருவரங்கம் இரண்டும் கோயில் எனத்தான் குறிக்கப் படுகின்றனதும் அறிவோம் அல்லவா?

     

    எனவே நாம் இனி கோயில் எனவே வழுவின்றியே எழுதுவோமே “கோவில்” எனும் சொல் பயன்பாட்டினைத் முற்றிலும் தவிர்ப்போம்

    Share
  • நான் மலரோடு தனியாக

    காதல் கீதங்களின் உச்சத்தை எட்டிப்பார்க்க எண்ணுபவர்கள் கண்ணதாசன் பாடல்களை நுகரலாம். இலக்கிய ரசனையைத் திரைப்பாடல்கள் வாயிலாகவும் தரமுடியும் என்று நிருபித்தவர் கவிஞராவார். 1998ல் துபாயில் முதன் முறையாக அயலகப் பணி மேற்கொண்டிருந்தபோது காலையும் மாலையும் வாகனப் பயணங்களின்போது தமிழ்த்திரையிசைப் பாடல்களோடு சங்கமித்து சென்ற நாட்கள் வசந்தகாலங்கள் என்பது மிகையில்லை.. அப்படியொரு நாள் மலையாள மொழிபேசும் ஒரு அதிகாரி என்னிடம் விவாதித்த பாடலிது. அவர் தமிழ் மொழியை முழுமையாக அறிந்தவரில்லை.. எனினும் இந்தப் பாடலின் வரிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்தவை என்றார்.

    என் கருங்கூந்தல் மேகங்கள் கலைந்தோடியாட..

    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..

    அடடா.. பாடல் வரிகளில் உள்ள சுகம்.. இசை நயம்.. குரல் வளம் என்று பாராட்டி மகிழ்ந்தார்.. திரு.ஜார்ஜ் என்னும் அந்த இனிய நண்பர்.

    பிறகு இலக்கிய வட்டத்தில் எனது தோழர்களோடு இதைப்பற்றிக் கூறியபோது.. இன்னும் சில செய்திகள் இப்பாடல் பற்றி கிடைத்தன. அதையும் கேளுங்களேன்..

    பொதுவாக.. இந்திப் படங்களில் வெற்றி பெறும் பாடல் மெட்டுக்களைத் தமிழில் அப்படியே தன் பாணியில் தருவதில் வல்லவர் இசையமைப்பாளர் திரு.வேதா அவர்கள்.. அப்படியொரு பாடல் பிறந்த விதம் பாருங்கள்.. இசையின் வடிவம் இந்திப்பாடலில்.. கேட்டுக் கொண்டார் கண்ணதாசன்!

    பொதுவாக திருமணமானபின்னரே.. கணவன் மனைவியிடம் உரிமையோடு அங்கே பார்க்காதே.. அங்கே செல்லாதே.. என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால்.. இப்பாடலில்.. காதலி.. காலம் கடந்து வந்தமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தானே கேட்கும் காதலனுக்கு காதலி தருகின்ற பதில் என்கிற வகையில் பாடல் பிறக்கிறது.. நிறைகிறது..

    நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    பெண் தரும் பதிலில்..

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

    எத்தனை நயங்கள்? எத்தனை இலக்கிய அழகு? எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத காதல் பாடல் அல்லவா? இசையின் கோர்வையும் கவிதையோடு கைகோர்த்தல்லவா பவனி வருகிறது? இரவின் மடியில் இளமை மழையில் நனைகின்ற போதெல்லாம்.. இதமான தென்றலாய்.. இப்பாடல் ஒலிக்கட்டுமே! கவியரசரின் கற்பனைத் திறனை, இலக்கிய நயத்தை எண்ணியெண்ணி என்றென்றும் மகிழலாமே!!

    பாடல்: நான் மலரோடு தனியாக
    திரைப்படம்: இரு வல்லவர்கள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: வேதா ஆண்டு: 1966
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

    http://www.youtube.com/watch?v=Jd2y-eHo7B8

    http://www.youtube.com/watch?v=Jd2y-eHo7B8

    Share
  • கதை கதையாம்! காரணமில்லையாம்! [1]

    இன்னம்பூரான்
    01 01 2014

    download-8

    புத்தாண்டு மலர்களில் கதைகள் பல வரும், கட்டுரைகளும், கவிதைகளும் கட்டியம் கூற. ஓவியங்களும், நிழற்படங்களும் அழகு சேர்க்கும். இவ்வருடமும் இவை வல்லமை இதழிலும், மற்ற இதழ்களிலும் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவற்றில் எல்லாவற்றிற்கும் ஒரு பின்னணி இருக்கும். கதை அறம் பேசலாம். அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். கற்பனையின் விரிவுரையாக அமையலாம். கட்டுரைகள் கட்டி உரைக்க வேண்டும் என்பதெல்லாம் பழங்கதை ஆகி விட்டது. தற்கால கட்டுரைகள் கட்டில் அடங்கா. யாப்பில்லா கவிதைகள் தான் நடனமாடுகின்றன, தற்காலம். பேசும் சித்திரங்களும், பேசாமல் உரைக்கும் நிழற்படங்களும் நல்வரவு தான். புதிய படைப்புகளில் சுவை இருப்பதும் கண்கூடு. இது நிற்க.

    சில கதைகளை மேலோட்டமாக பார்ப்போம். ராமாயணமும், மகாபாரதமும் எத்தனை உபகதைகளை உள்ளடக்கி வைத்துள்ளன? நற்றிணையிலும், கலித்தொகையிலும், சங்கப்பாடல்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு பாடல்களும் கதை சொல்லவில்லையா? சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அருமையான தொடர்கதைகள் அல்லவா? வாசகர்கள் இனி எழுப்பப்போகும் எதிரொலிகளை நான் அறிவேன். சிறுகதைக்கு வா என்கிறீர்கள். வந்தாப்போச்சு. ஆனால் என் போக்கில் தான் போவேன். பேச்சுரிமையை போல் எழுத்து சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறதே. யாரும் படித்ததாகத் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சர்வார்த்த சாதகம்: மவுனம்!

    பஞ்சதந்திரம் ஒரு அருமையான கதைத்திரட்டு என்பது மட்டுமல்ல. பட்டுப்போல் மிளிரும் பழமை; நைலான் போன்ற புதுமை. நான் மற்றொரு கட்டுரையில் கூறியபடி இதன் செவி வாய் மரபு தொன்மையானது. புதுமை யாதெனில், கலிஃபோர்னியாவில் இந்த கதைகளை என்னிடம் கேட்க வந்த சிறார்கள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். கதை சொல்லிக்கு நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று அபாரமாக தினந்தோறும் நடித்துக்காட்டினார்கள். ஒரு நாள் தெனாலிராமனும் வந்தார், தன் குதிரையோடு. கும்மாளம் போட்டார்கள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வந்த போது, அடுத்த வீடு கிடுகிடுத்தது. குழலூதி முதலில் எலிகளை அகற்றிய மாயாவி குழந்தைகளையும் மயக்கிய ஜெர்மானிய கதை சொல்லும் போதே, ஒரு மூன்று வயது சிறுவன் கடுதாசியை சுருட்டிக் குழலூத, ஆசிரியக்குழுவும் நானும் வழி நடந்தோம். இப்படியெல்லாம் இருக்கும் போது கதைக்கு என்ன காரணம் வேண்டுமையா, வாசகரையா? அதனால் தான்: கதை கதையாம்! காரணமில்லையாம்!

    புரிகிறதா? படி தாண்டி எங்கேயோ போய்விட்டேன்! திரும்பி வந்தனனே!

    ஜூலை 21, 2013 அன்று நண்பர்கள் பலர் கூடினோம், சென்னையில். அத்தருணம் பிரபல தமிழ் எழுத்தாளர் கிருஷாங்கினியும், அவரது கணவராகிய பிரபல ஓவியர் அரவக்கோனும் வந்து எம்மைச் சிறப்பித்து ஒரு மூட்டைத்தூக்கி ஆக்கினர். அத்தனைப் புத்தகங்கள் பரிசுகளாக. அவற்றில் ஒன்று: விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம்: தமிழில் அன்னபூர்ணா ஈஸ்வரன் (1958): மறுபதிப்பாளர்: கிருஷாங்கினி. காப்புரிமை கேட்காத நூல். தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூலம். அதற்கு உகந்த காரணங்கள் உண்டு. அது பெரிய கதை.

    ஒரு கதை எடுத்து விட்றேன், இப்போதைக்கு. அது மட்டும் முன்னாலே கிடைத்திருந்தால், கலிஃபோர்னியாவில் கதை சொல்லி வரலாறு படைத்திருக்கலாம், தடபுடலாக. கொடுப்பினை அவ்வளவு தான். என்ன சொல்றேள்? அதையும், அடுத்து வரக்கூடியதெல்லாம், இவற்றை தழுவியும் இருக்கலாம்; தழுவாமல் இருக்கலாம். அல்லது பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையிலிருந்தும் வரலாம். அமெரிக்க பழங்குடிகள் கதைகளாகவும் இருக்கலாம். எங்கெங்கிருந்தோ வரலாம். நானே கதை விடலாம். கில்ஜாய் கோமளா மாமி டேக் ஓவர் பண்ணிக்கலாம்! என்ன சொல்றேள்?

    கதை கதையாம்! காரணமில்லையாம்! [1]
    ஊசித்தட்டான்

    “கதை கதையாம் அது ஒரு காரணமாம். காரணவீட்டில் ஒரு தோரணமாம். தோரணம் கட்டி கல்யாணமாம். கல்யாண வீட்டுக்கு சாப்பிடப்போனானாம். எலைக்கடியிலே பாம்பு இருந்ததாம். அந்த பாம்பை அடிக்க நெனச்சு தடி தேடினானாம். தடி சாக்கடை குத்தியதால சேறு பூசி இருந்ததாம். அந்த சேறை கழுவறதுக்காக தண்ணீர் தேடிப் போனானாம். தண்ணீர் நிறைய மீனாக ஓடியதாம். மீனை பிடிக்கலாம் என்று யோசிச்சு வலையெடுத்தானாம். வலையெல்லாம் கிழிந்து பொத்தலாக இருந்ததாம். பொத்தல் தைக்க ஒரு ஊசி எடுத்தானாம். ஊசி கை நழுவி கீழே விழுந்ததாம். அது உடனே ஒரு ஊசிதட்டாம்பூச்சியாக உருமாறி உருண்டு புரண்டு பறந்தே போய் விட்டதாம். பசி ஜாஸ்தியாகி கல்யாண வீட்டுக்கு வந்தானாம். கல்யாணம் முடிஞ்சு கதவை சாத்திக்கொண்டு எல்லாரும் போய் விட்டார்களாம். அவன் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டானாம். ஒப்பாரி வைத்து அழுதானாம்.”
    பூரணி (2009): செவிவழிக்கதைகள்.சென்னை: சொர்ணவள்ளி பிரசுரம்: பக்கம் 40,41)

    வாசகர்களே!

    நூறாண்டுகள் வாழ்ந்து அண்மையில் விண்ணுலகம் எய்திய பூரணி அவர்களுக்கு இந்தத்தொடர் சமர்ப்பணம். இந்த சமர்ப்பணம், நாகராஜனுக்கும், கிருஷாங்கினிக்கும் பூரண சம்மதம்.

    தொடரும்

    Share
  • “யார் குழந்தை”

    தமிழ்த்தேனீ

     

    2014ம் ஆண்டு பிறக்கிறது, இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அவருக்கு 63 வயது முடிந்து 64 ம் வயது ஆரம்பமாகிறது. புது வருட வாழ்த்துக்கள் அவருடைய தொலைபேசியிலும் இணையதள  மடல்களிலும் நிரம்பி வழிகின்றன  அத்துடன் சேர்த்து  அவருடைய பிறந்த நாளுக்கும்  சேர்த்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும்  வேலையிலிருந்து ஓய்வு பெற முடியவில்லை, அவர்   வியாபாரம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய்  விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு ஒரே போடாகப் போட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

    பேரக் குழந்தை பிறந்தவுடன் பார்த்தது. இப்போது அதற்கு மூன்று வயதாகிறது. பிறந்த  குழந்தையை இன்னும் வந்து பார்க்கவில்லை என்கிற குறை மகனுக்கும் மருமகளுக்கும்.

    இந்த முறையும் ஒரே நாள்தான் குழந்தையுடன் இருக்க முடியும். என்ன செய்யறது  அவர் வேலை அப்படி. மாதக் கணக்காய் வெளிநாடுகளில் சுற்றி சுற்றி இந்தியாவுக்கு வருவதே  அபூர்வமாகி இருக்கிறது.

    அவருக்கே வெறுப்பாய் இருந்தது, என்ன வாழ்க்கை இது நாமபாட்டுக்கு பேரப் பிள்ளைகளுடன் விளையாடினோமா, ராத்திரி பேரனின் பக்கத்திலே படுத்து அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டே கதை சொல்லி குழந்தை தூங்கியவுடன் நன்றாகப் போர்த்திவிட்டு,

    ஹூம்ம் இதெல்லாம் நமக்கு கிடைக்காத சொர்கங்கள், நினைத்துப் பெருமூச்சு விடத்தான் முடியும்   என்று நினைத்துக் கொண்டார். மனிதர்களுக்கு எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதானே

    ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றிற்கு அதுவும் கிடைக்காத மறு பக்கத்துக்கு ஏங்கிக் கொண்டேதான் வாழுகின்றனர்  என்று நினைத்தவருக்கு சிரிப்பு வந்தது.  ஏதோ இப்போதாவது பேரனைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே. இதோ ஆயிற்று இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவில் தரையிறங்கி விடுவோம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம்.

    இமிக்ரேஷன் முடிந்தவுடன் லக்கேஜை எடுத்துக் கொண்டு  வெளியே போக வேண்டும் . அடிக்கடி பயணம் செய்யும் அவரை அடையாளம் கண்டு ஹலொ சார் நலமா என்று விசாரிக்கும் இமிக்ரேஷன் அதிகாரியிடம் நாங்கள் நலமே நீங்க நல்லா இருக்கீங்களா என்று விசாரித்துவிட்டு

    வெளியே வந்தார் , தூரத்தில் மகனும் மருமகளும் பேரனும் நின்று கையை ஆட்டுவது தெரிந்ததும் உற்சாகமானார்.   வாங்கப்பா ப்ரயாணமெல்லாம் சௌகர்யமா இருந்துதா என்றாள் மருமகள்

    நல்லா இருந்துதும்மா, குட்  எப்பிடி இருக்கேம்மா , எப்பிடிப்பா இருக்கே டேய் குட்டிப் பையா  எப்பிடி இருக்கே என்றார். பதிலே சொல்லாமல் அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை.

    என்னடா அப்பிடிப் பாக்கறே  நான் உன்னோட தாத்தாடா, என்கிட்ட வா  என்று அழைத்தார் வாஞ்சையுடன்  வத மாட்டேன்  எனக்கு உன்னைப் பிதிக்கலே   என்றது குழந்தை.

    அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தாவை என்றான் மகன்

    அது குழந்தைடா  அதுக்கு என்ன தெரியும்   ஏதோ சொல்லுது அதைப் போயி பெரிசா எடுத்துக்க முடியுமா என்று வாய் கூறினாலும்  மனம் துணுக்கென்றது.

    என்னது இந்தக் குழந்தை இப்பிடிப் பேசுகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் உட்கார்ந்தவர்.  சரிப்பா   எப்பிடிப் போகுது உங்க ஆபீசெல்லாம்  என்றார்.  நல்லாப் போகுதுப்பா, ஆனா ரெஸ்டே இல்லே  எப்போ பாத்தாலும்   வேலை வேலைன்னு ஓடவேண்டி இருக்கு .  ஓ அப்பிடியா  என்னம்மா   உனக்கு எப்பிடிப் போகுது வேலை  டீச்சர் வேலை போரடிக்குதா     என்றார்

    இல்லேப்பா  நல்லா போகுது    நாங்க ரெண்டு பேரும் சேந்து எங்கேயும் வெளியே போக முடியலே.  சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை கூட  டியூஷன் வெச்சிருக்கேன் நாற்பது பசங்க படிக்கறாங்க.

    இப்போ இருக்கற காலத்திலே ரெண்டு பேரும் வேலை செஞ்சு சம்பாதிச்சாதானேப்பா முடியுது  இருந்தாலும் எனக்கு  நல்லாத்தான் பொழுது போகுது  என்றாள்.

    பின்னாடி இருக்கையிலிருந்து இவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரன்  நீங்க எப்போ ஊருக்குப் போகப் போறீங்க  என்றான்

    மீண்டும் துணுக்கென்றது அவருக்கு  சமாளித்து இதோ பாரு தாத்தா  உனக்கு  ரொம்பப் பிடிக்குமே   ஸ்பைடர் மேன் பொம்மை அது வாங்கிண்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போனதும் பெட்டிலேருந்து எடுத்து தரேன்  என்றார்

    சரி  என்று ஒற்றைச் சொல்லோடு  நிறுத்திக்கொண்டு  அவரையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை எப்படி சமாளிக்கப் போகிறோம்  என்கிற கவலை அவருக்குள் புகை வளையமாய்ச் சுழன்றது.   வரும்போதே   எப்போ போகப் போறேன்னு கேக்குதே  இது .

    நினைத்துக் கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவருடைய முடியைப் பிடித்து வேகமாய் இழுத்தது. வலி தாங்க முடியாமல் அப்பிடியெல்லாம் செய்யக் கூடாது  கையை எடு என்றார்.  அவருடைய பிள்ளை  காரோட்டிக் கொண்டே  அனிருத் கையை எடு என்றான்

    பின்னாலிருந்து மருமகள் ஏன் அனிருத் இப்பிடி செய்யறே  தப்பும்மா  என்றபடி  அவருடைய  முடியிலிருந்து குழந்தையின் விரலைப் பிரித்து எடுத்தாள்.

    தாத்தாக்கு வலிக்கும்   தாத்தா கிட்டே சாரி சொல்லு என்றாள் , வலிக்கட்டும்  நன்னா வலிக்கட்டும்  சாரி சொல்லமாத்தேன்  என்றான் அனிருத்.

    சரி விடும்மா  அது குழந்தை அதுக்கு என்னா தெரியும் குழந்தையை திட்டாதே  என்றாலும்  அவருக்குள் ஒரு பயமே வந்தது.இந்தக் குழந்தையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று

    ஆயிற்று வீட்டுக்குப் போய் மருமகள் கையால் சமைத்த வீட்டுச் சாப்பாட்டை ஒரு கைபார்த்துவிட்டு முதலில்  பெட்டியிலிருந்து  ஸ்பைடர் மேன் பொம்மையை எடுத்து  குழந்தை அனிருத்திடம் கொடுத்துவிட்டு , தூக்கம் கண்களைச் சுழற்றவே அப்படியே  தூங்கிப் போனார்

    திடீரென்று இரண்டு மணிக்கு சந்திரகாந்தை  தொடர்பு கொள்கிறேன் என்று கூறியது நினைவுக்கு வரவே   திடுக்கிட்டு எழுந்து  செல் போனைத் தேடினார் கிடைக்கவில்லை.  எங்கே வைத்தோம் தூங்கும் போது தலைமாட்டிலேதானே வைத்துக் கொண்டு தூங்கினோம் என்று எல்லா இடத்திலேயும் தேட கிடைக்கவே இல்லை.

    சந்திர காந்தின் எண்ணும் நினைவில்லை  வர வர  மூளையில் ஒன்றுமே இல்லை   சொந்த மூளையை   தொலைபேசிக்குள்ளும்  கணிணிக்குள்ளும் அடமானம் வைத்தாயிற்று.  இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.

    டைரியை   கணிணியை உயிர்ப்பித்து அதில் சந்திரகாந்த் என்று தேட  அட நல்ல வேளை  இதில் பதிந்திருக்கிறோம் . எண்களைக் குறித்துக்கொண்டு  மகனின் தொலைபேசியில்  சந்திர காந்தை தொடர்பு கொண்டார்

    ஆமாம் சந்திரா  நான் மூணு மணிக்கு அங்கே வந்துடறேன்.  நம்ம சந்திப்பு அரைமணி நேரம்தான்.  எனக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடியும் ஃப்ளைட்   சரி நான் தாஜ் கோரமண்டலுக்கு  வந்துடறேன் என்றபடி  தொலைபேசியை  மகனிடம் கொடுத்தார்

    இப்போ என்னா செய்யறது என்னோட தொலைபேசியிலேதான் எல்லா எண்ணும் இருக்கு  என்று மறுபடியும் தேடிப் பார்க்கலாம் என்று மகன் மருமகள்  ஆளுக்கொரு மூலையில்  தேடி  ஒரு வழியாக  அவர் படுத்துக் கொண்டிருந்த  சோபாவின் அடியிலே விழுந்து கிடந்த போனைக் கண்டு பிடித்தவுடன் அப்பாடா என்று இருந்தது  அவருக்கு.

    சரிப்பா நான் கிளம்பறேன்  நல்ல சாப்பாடும்மா   எல்லா நாட்டுக்கும் போயி உயர்தரமான எல்லா உணவகத்திலேயும் சாப்டுட்டேன்

    ஆனாலும் உன் கையாலே சமைச்சு போடற இந்த உணவுஓட ருசி அதிலெல்லாம் இல்லேம்மா  என்று கூறிவிட்டு

    சரி நான் கிளம்பறேன்  என்றர்

    தாத்தாவுக்கு ஒரு முத்தம் குடுடா  என்றார் பேரனிடம்

    மாத்டேன் போ என்றது அனிருத்

    டேய் அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது  தாத்தா இப்போ கிளம்பறாரு  ஒரு முத்தா குடுத்டுட்டு  பை பை சொல்லு  என்றாள் மருமகள்

    மாத்தேன் போ என்று சொல்லிவிட்டு  அறைக்குள் சென்று சோபாவில் படுத்துக்கொண்டு இவரையே பார்ட்டுக் கொண்டிருந்தது  அனிருத்

    சரிம்மா குழந்தையை  தொந்தரவு செய்யாதே  நான் கிளம்பறேன் என்று ஏமாற்றத்துடன்  கிளம்பினார்

    மகனும் மருமகனும் சரிப்பா ஜாக்கிறதையா போயிட்டு வாங்க

    என்றபை வழியனுப்பினர்

    இரண்டு அடி எடுத்து வைத்து காரிடம் சென்றவர்   உள்ளதனிருத் பயங்கரமாக   அலறி அழும் குரல் கேட்டு அப்படியே நின்றார்.

    தாத்தாவைப் போக வேணாம்னு   சொல்லு, இங்கேயே இருக்க சொல்லு அவரை எங்கூடவே இருக்கச் சொல்லு என்று உரத்த குரலில் அனிருத் அலறி அழுது கொண்டிருப்பது காதில் விழுந்தது

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.  ஓ நீ எப்போ போகப் போறேன்னு வந்த வுடனே கேட்டதுக்கு இதுதான் அர்த்தமா?..

    என் தலை முடியைப் பிடிச்சு இழுத்ததுக்கு இதான்     அர்த்தமா?..

    என்கிட்ட பேசாம இருந்ததுக்கு இதான் அர்த்தமா?..

    அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்து ப்ரவாகமாப் பெருகி வெள்ளமாய் சீறி வெடித்துக் கொண்டு கிளம்பியது

    உள்ளே ஓடிப்போய் இல்லேடா கண்ணா  நான் உன்னை விட்டுட்டுப் போகலே, இங்கேயே இருக்கேன்  என்றபடி  அனிருத்தை அணைத்துக் கொண்டார்

    எனக்கு உன்னை ரொம்ப்ப் பிதிக்கும் தாத்தா  என்ற மழலையில்  உருகிப் போய்க் கரைந்தார் அவர்

    குழந்தையின் மழலையை மனதைப் புரிந்து கொள்ள இன்னும் எந்த நவீனக் கருவியும் வரவில்லை  என்கிற உண்மை உரைத்தது  அவருக்கு

    அவர் அனிருத்தின் அணைப்பில் கரைந்து போனார்

    Share
  • ஊழல் நாற்பது

    இல்லறத்தில்

    1. கொட்டுகிற குழாய்களை நிறுத்த வேண்டாம்
    2. குடியிருப்பில் குப்பைகளை அகற்ற வேண்டாம்
    3. மின்சாரம் வீணடிக்க வருந்த வேண்டாம்
    4. அண்டை வீட்டு சண்டைகளை நிறுத்த வேண்டாம்
    5. அறிவுரைகள் என்று குட்டை குறைக்க வேண்டாம்

    கல்லூரியில்

    1. சிகப்பு சிக்னல் விளக்குகளை மதிக்க வேண்டாம்
    2. சீக்கிரத்தின் த்ரில் ஸ்பீடு குறைக்க வேண்டாம்
    3. கட் அடித்து வகுப்பறைக்கு செல்ல வேண்டாம்
    4. பிட் அடித்து மாட்டும் வரை அசர வேண்டாம்

    வாலிபத்தில்

    1. சீக்கிரத்தில் பணம் சேர்க்க நேர்மை வேண்டாம்
    2. பெட் அடித்து  சூதாட தயங்க வேண்டாம்
    3. அடிதடியில் இறங்காமல் தடுக்க வேண்டாம்
    4. சகிப்புத்தனம் சலிப்பு தரும் சேர்க்க வேண்டாம்
    5. நல்லவரின் அறிவுறையை நினைக்க வேண்டாம்
    6. வல்லவரின் கால்பிடிக்க தயங்க வேண்டாம்
    7. படித்தால் தான் பட்டம்யென அஞ்ச வேண்டாம்

    வேலை கிடைத்த பின்

    1. நம்மைவிட முன்னேற்றம் யெவர்க்கும் வேண்டாம்
    2. நட்புதனில் இலாபமின்றி சேர்க்க வேண்டாம்
    3. கொடுக்கும் குணம் எடுக்கும் வரை குறைய வேண்டாம்
    4. கெடுக்கும் மனம் இருக்கும் வரை மறைய வேண்டாம்
    5. எடுக்கும் தனம் திருட்டுஅல்ல விடவும் வேண்டாம்
    6. அலுவலக தூக்கத்தை நிறுத்த‌ வேண்டாம்
    7. தொலைபேசி அரட்டைகளை குறைக்க வேண்டாம்

    ஆட்சிக்கு வந்தபின்

    1. எதிரிகூட கூட்டுசேர வெட்கம் வேண்டாம்
    2. வாக்குறுதி தொகுதி பற்றி நினைக்க வேண்டாம்
    3. அன்பளிப்பாய் தருவதைநீ மறுக்க வேண்டாம்
    4. அரசியலில் இதுசகஜம் மறக்க வேண்டாம்
    5. பொய் சொல்வார் முன் மெய்யை பேச வேண்டாம்
    6. புறம் கூறி களிப்பாற்று கலைக்க வேண்டாம்
    7. விதிகளை மீறிடவே தயங்க வேண்டாம்
    8. விளயாட்டு கலவரங்கள் அழிக்க வேண்டாம்
    9. பதவி தரும் உரிமைகளை அறுக்க வேண்டாம்

    வியாபார யுக்தி

    1. தொலைகாட்சி நாடகங்கள் தவிர்க்க வேணடாம்
    2. விளம்பரங்கள் கண்டு மனம் வெம்ப வேண்டாம்
    3. ஆபாச ஆடைகளை தடுக்க வேண்டாம்
    4. கலப்படத்தில் கஞ்சத்தனம் பிடிக்க வேண்டாம்
    5. பணம் கொடுத்து காரியங்கள் இழிவு வேண்டாம்
    6. பிறர் செய்யும் பிழைகளை மறக்க வேண்டாம்
    7. தன்னிச்சை செயல்படுத்த தயங்க வேண்டாம்
    8. சுதந்திரமாய் தப்பு செய திகைக்க‌ வேண்டாம்

    சாரம்

    குடிகளின் செயல்பாட்டில்  இத்தனை ஊழல்

    கோனென்ன மந்திரியும் அத்தனை ஊழல்

    நடப்பதுதான் நடக்கும்மென அறிந்த பின்னும்

    கிடைப்பதுதான்கிடைக்கும் என புரிய வேண்டும்

    கண்மூடி கொண்டாலும் இத்தனையும் நடக்கும்

    கண்திறந்து கண்டாலும் இத்தனயும் நிகழும்

    ஊழலில் உலகமெல்லாம் ஊறிஊறி போனதனால்

    நீயும் நானுமென விதிவிலக்கா! சொல்லுங்கள்

    Share